Saturday, May 28, 2016

பொது நலம்!




பௌதீக உலகின் முடிசூடா மன்னன் சர்.சி.வி.இராமன் தமது அரிய ஆய்வுகளுக்காக நோபல் பரிசு பெற்று உலக அரங்கில் நம் பாரதத்தின் பெருமையை உயரச்செய்தவர். முதலில் வங்காள மாநிலத்தின் உதவி கணக்காய்வுத் தலைவராக [Accontant General] ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்  மாநிலத்தின் உயர் பதவியில் இருந்தவர். பகல் நேரங்களில் அலுவலகப் பணியை கவனித்துவிட்டு  ஓய்வு நேரத்தில், பௌதிகத்தின் மீது தான் கொண்ட அதிக ஈடுபாடு காரணமாக,  கல்கத்தா பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடத்துக்குத் தினமும் அதிகாலையிலும், மாலையிலும் சென்று தமது பௌதிக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருந்தார். இவருடைய நேர்மையான பணித்திறத்தினால் அலுவலகத்தில் இவருக்கு மேலும் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பும் அதிகமாக இருந்தது. 


இந்த நேரத்தில்தான் கல்கத்தா பல்கலைக்கழக துணை வேந்தர்  சர்.சி.வி. இராமனிடம் தம் அலுவலக, கணக்காய்வுத் தலைவர் பதவியை விட்டுவிட்டு முழு நேர பௌதிக ஆராய்ச்சியில் ஈடுபட்டால் நாட்டிற்கும், மக்களுக்கும் பெரும் சேவையாக இருக்குமே என்ற தம் கருத்தை எடுத்துரைத்தார். அக்கருத்தை மிக மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட இராமன் மிகப்பெரும் வருமானமும், கௌரவமும் கொடுத்த அப்பெரும் பதவியைவிட்டு விலகி அதைவிட மிகவும் குறைந்த வருமானமே தரக்கூடிய  பௌதிக ஆராய்ச்சிப் பணியை மிக மகிழ்வுடன் தம் முழுநேரப் பணியாக ஏற்றுக்கொண்டார். அதன்பின் மீப்பெரும் சாதனைகள் பல செய்து நோபல் பரிசும் வென்றார்.

நன்றி  - வல்லமை

No comments:

Post a Comment