Saturday, May 28, 2016

எச்சரிக்கை!



நீண்ட நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் என் தோழி ஒருவரை சந்திக்க நேரிட்டது. இயல்பாகவே கலகலப்பான சுபாவமுடைய அவள் முகத்தில் ஏனோ ஒரு சோகம், அவள் சொன்ன காரணம் அதிர்ச்சியாக இருந்தது. இணையம் குழந்தைகளுக்கு இன்று பரந்துபட்ட ஞானத்தை, நன்றும், தீதும் என அனைத்தையும் குறைவின்றி வழங்குகிறது. பல பெற்றோர் அவர்களின் படிப்பை மட்டும் குறியாகக் கொண்டு, பல நேரங்களில் ஒழுக்கம் போன்ற விசயங்களைக் கவனிக்காமல் கோட்டைவிடும்போது அது பெரிய ஆபத்தில் கொண்டு விட்டுவிடுகிறது.


எட்டு வருடங்கள் தவமிருந்து பெற்ற ஒரே பிள்ளை. அதனால் இயல்பாகவே அதிக செல்லம் கொடுத்து வளர்த்து விட்டார்கள்.ராஜா வீட்டு கன்றுக் குட்டி போல வளர்ந்து வந்தான். ஒரு பெரிய ஆங்கிலப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். இயல்பாகவே நல்ல புத்திசாலியான அவன் படிப்பில் திடீரென தொய்வு ஏற்பட்டதோடு அவன் நடவடிக்கைகளிலும் சிறிது, சிறிதாக மாற்றம் தெரிய ஆரம்பித்தவுடன்தான், பெற்றோருக்கு சந்தேகம் வர, அவனை கவனித்துப் பார்த்திருக்கிறார்கள். அந்த இளம் வயதில் போதைப் பழக்கம் இருப்பது தெரியவர, பேரதிர்ச்சிக்குள்ளானார்கள். அவனுடைய போக்கினால் ஒரு கட்டத்தில், சே, இபபடி ஒரு பிள்ளை நமக்குத் தேவைதான என்று வெம்பி , வேதனைப்பட வேண்டியதாகியது. இது யாருடைய தவறு. ஏன் இப்படி நடந்தது ?

சில பெற்றோர்கள், போதைப் பழக்கங்கள் பற்றி குழந்தைகளிடம் விவாதிப்பது தவறு என்று எண்ணுகிறார்கள். பள்ளிக்கூடங்களில், அறிவுறுத்துவது மட்டுமே போதும் என்று எண்ணிவிடுகிறார்கள். இது தவறு. குழந்தைகள் நலனில் பெற்றோரை விட அதிக அக்கரை யார்தான் எடுத்துக் கொள்ள முடியும்? குழந்தைகளுக்கு அறிவுறுத்தும் முன் எந்தெந்த விதமாக குழந்தைகள் தவறு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை முதலில் நாம் உணர வேண்டும். இன்று பலவிதமான போதைப் பொருட்கள் புழங்க ஆரம்பித்துவிட்டன. தாங்கள் வாழக்கூடியப் பகுதியில் எது போன்ற புழக்கம் அதிகமாக உள்ளது என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு அது குறித்த விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு அறிவுறுத்தும் போது திறமையான, மனதில் ஆழப்பதியும் படியான சொற்களைப் பயன்படுத்த வேண்டும். தன் மனம் போன போக்கில் வாழும் பெற்றோர்கள், குழந்தைகள் மட்டும் எந்த தவறும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை. பெரும்பாலான சிறுவர்கள் முதலில் முயற்சிப்பது புகைபிடிக்கும் பழக்கம்தான்.

போதைப் பழக்கத்திற்கு அடிமையான விடலைப் பருவத்தினருக்கு பெரும்பாலும் பெற்றோர்களே முன்னோடிகளாக இருப்பதாக, ஐக்கிய நாடுகளின் நேஷனல் கவுன்சிலின் போதைத்தடுப்பு பற்றிய விவாதத்தின் போது அறுதியிட்டுக் கூறியுள்ளது.

பெரும்பாலான நேரங்களில், மதுப்பழக்கம் உடையவர்கள் அதிக வேலை காரணமாக அசதி தெரியாமல் இருப்பதற்காகவும், மனச்சஞ்சலம் அதிகமானதால் குடிப்பதாகவும் கூறுகின்றனர். இதை கவனிக்கின்ற குழந்தைகள் மனநிலையில் அது எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சிந்திக்க வேண்டும்.

குழந்தை, அப்பா ஏன் குடிக்கிறார் என்று கேட்கும்போது, அப்பா பெரியவர், அந்த சுவை அவருக்குப் பிடித்திருக்கிறது , அதனால் ஏதோ சில நேரங்களில் குடிக்கிறார், என்றுதான் சொல்ல வேண்டும். அப்பாவிற்குத் தேவையாக இருப்பதால் குடிக்கிறார் என்ற வார்த்தையை கண்டிப்பாக நீக்கிவிட வேண்டும்.

குழந்தை, ஏன் நான் குடிக்கக் கூடாது என்று கேட்டால், நீ இன்னும் பெரியவனாகவில்லை, சிறுவயதில் குடிப்பது சட்டப்படி குற்றம், அதோடு உன் உடல் நிலையையும் இது பாதிக்கும், நீ வளர்ந்து பெரியவனாகும் போது நீயே முடிவு செய்து கொள்ளலாம் என்று தெளிவாகக் கூற வேண்டும்.

போதைத் தடுப்பு முறைகள் பற்றி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அதாவது 5 வயது முதலே அறிவுறுத்த ஆரம்பித்து விட வேண்டும். நெருப்பைத் தொட்டால் சுடும் என்று யதார்த்தமாக குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பதுபோல போதை மருந்துகளின் அபாயங்களையும் புரிய வைத்துவிட வேண்டும். குழந்தைகள் வளர்ந்து பெரியவனாகும் போது சொல்லிக் கொள்ளலாம் என்று காத்திருந்தால் சில நேரங்களில் அது பயனற்றுப் போகும். வருமுன் காப்பதே புத்திசாலித்தனம்.

குழந்தைகளை பள்ளிக் காலங்களிலிருந்தே அவர்கள் நடவடிக்கைகளில் பெற்றோர் தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஆரம்பக் காலங்களில் கண்டுபிடித்து விட்டால் மாற்றுவதும் எளிது. மேலை நாடுகள் போல, நம் நாடுகளில் இது போன்ற கணக்கெடுப்புகள் அதிகமாக இல்லை. நம் கலாச்சாரம் பண்பாடு கருதி இதைத் தவிர்த்து விடுகிறார்கள்.கலிபோர்னியாவில் சமீபத்தில் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி பெரும்பகுதி பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் உள்ள போதைப்பழக்கம் தெரிந்தும் கண்டும் காணாமல் இருப்பதாகக் கூறுகிறார்கள். இன்று இது உலகளாவிய பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. போதைப் பழக்கத்திற்கு அடிமையானபின் சமூகம், குடும்பம் என்ற நினைவுகளோ அதனால் வரும் எதிர்வினைகளோ மனதில் எழாதபடி அந்த போதை விருப்பம் மூளையை முற்றிலுமாக ஆக்கிரமித்துக்கொண்டு விடுகிறது. அறிவியலில் இதனை டோ போமைன் விளைவு என்கிறார்கள். ஹெராயின் என்ற போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை உலகில் இரண்டு கோடிப்பேர் இருப்பதாக உலக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் மட்டும் சுமார் ஏழு கோடி பேர் போதைக்கு அடிமையாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மும்பையில் மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் எனும் விகிதத்தில் போதைக்கு அடிமையாகும் நிலை உள்ளது. பன்னிரண்டு வயதுக்கும் பதினெட்டு வயதுக்கும் இடைப்பட்ட 28.7 விழுக்காடு பதின்மப் பருவத்தினர் ஏதோ ஒரு போதைப் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவலளிக்கிறது அந்த ஆய்வு. கவனிப்பாரற்று தெருவில் அலையும் சிறுவர்கள் பெரும்பாலும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

போதைப் பொருட்கள் ஞாபக சக்தியை அழித்துவிடுகின்றன. நரம்பு மண்டலத்தை வலுவிழக்கச் செய்வதோடு இரத்த அழுத்தத்தை அதிகரித்து சீரான இதயத் துடிப்பையும் பாதிக்கின்றன. கவனத்தைச் சிதைத்து ஒரு குழப்பமான மனநிலைக்குள்ளும், குற்ற உணர்ச்சிக்குள்ளும் ஆழ்த்திவிடுகின்றன. சோர்வும் உடல் பலகீனமும் வந்து சேர்ந்துவிடும்.

பெற்றோரோ, குடும்பத்தில் உள்ள மற்றவர்களோ போதைப் பழக்கம் உடையவர்களாக இருந்தால் குழந்தைகளுக்கும் அந்த மனநிலையும், பழக்கமும் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

குழந்தைகளின் உடல் நிலையில் ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா என்பதைக் கவனிப்பதோடு அவர்களின் செயல்பாடுகளிலோ அல்லது உரையாடல்களிலோ ஏதேனும் மாற்றம் தென்படுகிறதா என்பதையும் பெற்றோர் கவனம் கொள்ளவேண்டும் . அவர்களுடைய தனிமை அறையில் பெற்றோர் நுழைவதைக்கூடத் தடுக்கிறார்களா என்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
படிக்கும் காலத்தில் அளவிற்கு அதிகமாக பணம் கேட்கிறார்களெனில் ஏதோ பிழையிருக்கலாம் என்பதை எளிதாகக் கணிக்கலாம். இத்தகைய செயல்கள் குழந்தைகளிடம் இருந்தால் அவர்களை கவனித்து போதைக்கு அடிமையாவதிலிருந்து உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும்.

குழந்தைகளிடம் இதன் அபாயம் குறித்து பேசும் போது, அதை ஒரு தனி வகுப்புப் பாடம் போல நடத்தக் கூடாது. டிவி பார்க்கும் போதோ, அல்லது காரில் பயணம் செய்யும் போதோ, அறிவுரை கூறுவதுபோல் இல்லாமல் யதார்த்தமாகக் கூற வேண்டும். ஏதாவது சம்பவங்களையோ அல்லது உதாரணங்களையோக்கொண்டு அழுத்தமாக, அதே சமயம் யதார்த்தமாகச் சொல்ல வேண்டும். போதைப் பழக்கம், உடல் உறுப்புக்களை அப்படியே கறையான் போன்று அரித்து விடும், என்பதனையும் உணரச் செய்தல் வேண்டும்.

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான உறவு முறை சுமுகமானதாக இருக்க வேண்டும் என்பதோடு. பிள்ளைகள் சொல்கிற விசயங்களுக்கு பெற்றோர் முழுமையாக செவிசாய்க்க வேண்டும். பிள்ளைகளின் பிரச்சனைகளைக் கண்டறிந்து அதனைத் தீர்ப்பதில் பெற்றோரின் ஆதரவும் உதவியும் மிகவும் முக்கியம். குடும்ப ஒழுக்கமும் குடும்ப விதிமுறைகளும் வலியுறுத்தப்பட வேண்டும். அதற்கு பிள்ளைகளின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு மனமகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஆரோக்கியமான மற்ற கேளிக்கைகள் பற்றி புரிய வைக்க வேண்டும்.உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை சிறுவயது முதலே ஊக்குவிக்க வேண்டும்.

பெரும்பாலும் சற்றே வளர்ந்த குழந்தைகள் ,நண்பர்கள் மூலமாகத் தான் இது போன்ற தீய பழக்கங்களை தொற்றிக் கொள்கின்றனர். நண்பர்கள் கட்டாயப்படுத்தினால் கூட மறுக்க வேண்டும் என்பதன் அவசியத்தைப் புரிய வைக்க வேண்டும். பெற்றோருக்கு இது போன்ற தீயப் பழக்கங்கள் அறவே பிடிக்காது என்று உணர்ந்த குழந்தைகள், நண்பர்கள் மத்தியிலும் கண்டிப்பாக ‘ஐய ….. இதெல்லாம் வேண்டாம், எனக்குப் பிடிக்காது, உனக்குக்கூட இது தேவையில்லை என்றுதான் கூறுவார்கள்.

குழந்தைகளாக இருக்கும் பொழுதே இது போன்ற ஆரோக்கியமான எண்ணங்களை வளர்த்து விட்டோமானால், அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் போது, படிப்பு, தொழில் சம்பந்தமாக நம் கண் பார்வையில் இல்லாமல், வெளியூர்களுக்கோ, வெளி நாடுகளுக்கோ செல்லும் நேரங்களில் கூட பெற்றோர்கள் கவலையில்லாமல், அவர்கள் முன்னேற்றத்திற்கு அணையும் போடாமல், ஊக்குவிக்கும் வண்ணம் செயல்படலாம்.

http://www.vallamai.com/chellam/pavala/880

No comments:

Post a Comment