Tuesday, November 9, 2010

தாயிற்சிறந்த கோயில் இல்லை......

நன்றி - தினமலர்.



* பெற்ற தாயை மறந்த பிள்ளைகள்: பிச்சை எடுத்து வாழும் மூதாட்டி.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில், ஆதரவற்ற நோயாளிகள் அதிகளவில் தஞ்சம் புகுந்துள்ளனர். நீலாங்கரையைச் சேர்ந்த இந்திரா எஸ்தர் [60] இரண்டு மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கிய இவர், சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிகப்பட்ட இவர், சிகிச்சைக்குப் பிறகும் டிஸ்சார்ஜ் செய்து கூட்டிச் செல்ல உறவினர்கள் வராத நிலையில் இன்று, தற்போது மருத்துவமனையில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மழையிலும், குளிரிலும், தவித்துக் கொண்டிருக்கிறார். பத்மாவதி, சீனிவாசன், கோடிஸ்வரன் என்ற மூன்று பிள்ளைகள் இருந்தும் தனக்கு இப்படிப்பட்ட நிலை என்று நொந்துப் போய் கூறுகிறார், எஸ்தர். இது போன்ற பிள்ளைகளை முதியோர் பராமரிப்புச் சட்டத்தில் தண்டிப்பதுதான் இந்திரா எஸ்தர் போன்றோரை காப்பாற்ற சிறந்த வழி

Sunday, November 7, 2010

இந்திய திருநாட்டின் மறுமலர்ச்சியில் பெண்கள் - பாகம் -7


அன்னி பெசண்ட் அம்மையார் [1847 - 1933].


நம் இந்திய தேசத்தின் மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் அன்னி பெசண்ட் அம்மையாரும் ஒருவராவார். இங்கிலாந்து நாட்டில் பிறந்து வளர்ந்தாலும் இவர்தம் உழைப்பு முழுவதையும் இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காகவே அர்ப்பணித்தவர். எண்ணற்ற இந்திய மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பெற்றவர்.

அன்னி பெசண்ட் அம்மையார், அயர்லாந்து நாட்டில் பிறந்த ஓர் அன்னியராக இருப்பினும் நம் இந்திய மக்களுக்காகப் போர் கொடி தூக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1893 ஆம் ஆண்டு முதன் முதலில் தூத்துக்குடி வந்து இறங்கினார் அன்னி பெசண்ட். இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்த அந்த நொடியிலிருந்து, சென்னையில் கூவம் நதிக்கரையில் நிரந்தர அமைதி அடைந்த [சமாதி] அந்நொடி வரை ஓயாத உழப்பையேத் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தார் அம்மையார். அவர் தம் வாழ்க்கை முழுவதையும் பிரம்மஞான தத்துவத்தின் விளக்கமாக வாழ்வே முயற்சித்தார். இந்திய தேசக்கலாச்சார நோக்கின் அடிப்படையில், அம்மையாரின் தொடர்பணிகள் எண்ணிலடங்காதவை.

பகவத் கீதையின் உயர் தத்துவ ஞானம் அனைவரையும் சென்று அடையும் வகையில் எளிய ஆங்கில மொழியில் மொழியாக்கம் செய்தார் அன்னி. இந்தியக் கலாச்சாரம் மற்றும் இலக்கியங்களை ஊக்குவிக்கும் பொருட்டும், அதனைக் கற்பிக்கும் வண்ணம், வாரணாசி மற்றும் சென்னையில் 1898 ஆம் ஆண்டு, ‘சென்ட்ரல் இந்து காலேஜ் ‘ என்ற கல்லூரியை நிறுவினார். அங்கு இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கட்டாயப்பாடமாக வைத்து இந்திய இளைஞர்களை கற்கச் செய்தார். இக்கல்லூரியே, பிற்காலங்களில் மதன் மோகன் மாளவியா, நிறுவிய இந்து பல்கலைக்கழகத்திற்கு அஸ்திவாரமாக அமைந்தது. இன்று பகவத் கீதையை கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளில் லட்சக்கானோர் அறிந்திருக்கிறார்கள் என்றால் அதன் பெருமை அம்மையாரையேச் சாரும். திலகரின் ‘கீதா ரகசியம்’ என்ற நூலும் பிரசித்தி பெற்றிருந்தது.

அம்மையார் 1847 ஆம் ஆண்டு, அயர்லாந்து நாட்டில் பிறந்தார். இவர் பிறந்த குடும்பம் பாரம்பரியப் பெருமை வாய்ந்த குடும்பமாகும்.தனிப்பள்ளியில் கல்வி பயின்று, இளம் வயதிலேயே ஃராங்க் பெசண்ட் என்பவருக்கு மணம் முடிக்கப்பெற்றார். ஃராங்க், தீவிர மத நம்பிக்கைக் கொண்ட ஒரு பாதிரியாராக இருந்தார். இவருடைய ஆழ்ந்த மத நம்பிக்கை, அன்னியின் குணத்திற்கு பொருந்தாத ஒன்றாக இருந்த காரணத்தினால், இருவரும் இரு துருவங்களாகவே வாழ்ந்ததினால், சட்டரீதியானப் பிரிவு இவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பெண்களுக்கு எதிராக அநீதி இழைக்கும் நாடுகள் பரவலாக இருந்த காலம் அது. பிரிட்டானியப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காலம் அது. வாக்குரிமைக்கான அவர்களின் போராட்டம் தலைப்புச் செய்தியானது. இதற்காக சிறைவாசம், காவலர்களின் அச்சுறுத்தல் என்று பல பிரச்சனைகளுக்கு ஆட்பட்டிருந்தார்கள். அப்பெண்கள் இதற்காக மேற்கொண்ட தியாகங்களும், பொறுமைகளும் ஆச்சரியப்படத்தக்க செய்திகளாகும்.

முதல் உலகப்போரில் இந்தப் போராட்டம் ஓய்ந்தது. வேண்டாதவர்களாக ஒதுக்கப்பட்ட பெண்கள், நாட்டுப்பற்று கொண்ட காரணத்தினால், தங்களின் நேர்மையான, உயர்ந்த சேவைகள் மூலம் தங்களுக்கான அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டனர். ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்குப் பிறகு 1832 ஆம் ஆண்டு, முதல் மறுமலர்ச்சி சட்டம் வெளியான பிறகு, வாக்குரிமையைப் பெற்றார்கள். இந்தப் போராட்டத்தின் பின்னனியில் பல்லாண்டுக்கால உழைப்பும், தியாகமும் இருந்ததென்பதை எவரும் மறுக்க இயலாது. பிரிட்டானிய அரசாங்கத்திற்கும், பொது மக்களுக்கும், பெண்களும் ஆண்களுக்கு நிகரானவர்கள்தான் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த, எத்தனையோ, சிறைவாசங்களையும், தண்டனைகளையும் பெற்றார்கள் என்பதும் நிதர்சனம். அன்னி பெசண்ட் அம்மையாரும் இந்த பெண்கள் இயக்கத்தில் ஒரு முக்கிய நபராக இருந்தவர். இவருடைய முதல் பொதுக்கூட்ட சொற்பொழிவே, பெண்களின் நிலை குறித்ததாகவே இருந்தது.

மனித உரிமைகளுக்கான மசோதா, அனைத்து குடிமக்களுக்கும் சமமான உரிமைகளை உறுதியளித்திருந்தாலும் பெண்களுக்கு அதனை அளிப்பதற்கு அரசாங்கம் இருமுறை யோசித்தது. ஆனால் சமுதாயமோ, நூறு முறை யோசித்தது. ஆக்ஃபோர்ட் பல்கலைக்கழகம்கூட அந்நாளில் மாணவிகளுக்கு பட்டம் கொடுப்பதற்கு மட்டும் மறுத்திருக்கிறது.

அன்னி அச்சூழலில்தான் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் குறித்து எழுத ஆரம்பித்திருந்தார். மணமான பெண்கள் தங்கள் வருமானம், சொத்து அனைத்தையும் கணவனிடம் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்த காலமது. அன்னியின் அது குறித்த முயற்சிகள் மற்றும் எழுத்துக்களில் பின்னடைவு ஏற்பட்டன. ஆயினும் அவர் தடைகளை புறக்கணித்து விட்டு திரும்பவும் எழுத ஆரம்பித்தார். பிற்காலத்தில் பெருமளவில் எழுதவும், பத்திரிக்கைகளுக்குப் பதிப்பாசிரியராகவும், இதழாசிரியராகவும் செயல்பட்டார்.

கணவரைச் சட்டப்படி பிர்ந்தாலும், தன் இரு பெண் குழந்தைகளையும் தன் பொறுப்பில் வளர்க்கவே முடிவெடுத்தார். ஒரு கட்டத்தில் தன் மகள் நோய்வாய்ப்பட்ட தருணத்தில், கடவுள் மீது கொண்ட நம்பிக்கையை இழக்க ஆரம்பித்தார். நாத்திக எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. தன் பேச்சுத் திறமையை வளர்த்துக் கொண்டிருந்தார். 1872 ஆம் ஆண்டு, தன்னுடைய 40 ஆவது வயதில் அன்னிக்கு சமூக சேவையில் முழு நாட்டம் உறுவானது. எதனையும் எதிர் கொள்ளும் போராட்டக் குணமும் கொண்டவராக இருந்தார்.

பிரிட்டிஷ் மியூசியம் என்ற நூல் நிலையத்திலுள்ள புத்தகங்களைப் படித்து தன் அறிவை விரிவடையச் செய்திருந்தார். இச்சமயத்தில்தான், சார்லஸ் பிராட்லா என்ற சீர்திருத்த வாதியைச் சந்திக்க நேர்ந்தது. தொழிலாளர்கள் நலனில் அக்கரை கொண்ட அன்னி, அவர்களுக்காகத் தொண்டாற்றியதோடு, சமுதாயச் சீர்திருத்தங்களுக்காக சொற்பொழிவாற்றுதலும், கட்டுரைகள் எழுதும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். சார்லஸின், அறிவாற்றலாலும், சுதந்திரக் கருத்துக்களாலும், தனிப்பட்ட திறன்களினாலும், பொறுமை மற்றும் தொழிலாளர்கள் நலனில் அக்கரையினாலும், பெரிதும் கவரப்பட்டார் அன்னி. ‘அஜக்ஸ்’ என்ற புனைப்பெயருடன் பிராட்லியின், ‘ நேஷனல் ரெஜிஸ்டர் ‘ எனும் பத்திரிக்கையின் முக்கியமான பங்களிப்பாளராக ஆனார்.இவருடைய முதல் மேடைப்பேச்சு, 1874 ஆம் ஆண்டு, ஒரு கூட்டுறவு நிறுவனத்தில் ஆரம்பித்தது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சார்லஸ்க்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அன்னி. சமூக நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியதன் மூலம், பல எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. எடின்பர்கில், சேரிப்பகுதியில் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தபோது, அம்மக்களின் துன்பங்களைக் கண்டபிறகு சமூகச் சேவை குறித்த அவரின் பார்வையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. தொழிற்சங்கத் தலைவர் பதவியேற்றார்.

பல்வேறு விதமான இன்னல்களுக்கிடையேயும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம்,மிக உயர்ந்த மதிப்பெண்களுடன், பெற்றது குறிப்பிடத்தக்கது. ஃபேபியன் கூட்டமைப்பில் சேர்ந்து, ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, மற்றும் மாரிஸ், ஹிண்ட்மன் போன்ற பிரபலமானவர்களின் நட்பும் பெற்றார்.இந்நேரத்தில் இவருக்கு முழுநேரத் தொழிலாளர் முன்னேற்றப் பணியாளராக வேண்டிய நிப்பந்தம் ஏற்பட்டது. லண்டனில் தீக்குச்சித் தொழிற்சாலைப் பெண்களின் மேம்பாட்டிற்காக, தீக்குச்சித் தொழிலாளர் சங்கம் ஒன்றை நிரந்தரமாக ஏற்படுத்தி அதன் மூலம் போராடி வெற்றி பெற்றார்.

அன்னி பெசண்ட் அம்மையார் இஸ்லாம், புத்தமதம், இந்துமதம் ஆகிய சமயக்கொள்கைகளை ஆழ்ந்து படித்ததோடு, கிறித்துவ மதக்கொள்கைகளோடு அதனை ஒப்பு நோக்கியதன் விளைவு ஒரு புது கொள்கை உருவானது பிரம்மஞான சபையை நிறுவிய பிளாவட்ஸ்கி அம்மையார் எழுதிய ‘இரகசிய தத்துவம்’, என்ற நூலை ஆழ்ந்து படித்து அழகான விமரிசனம் ஒன்றை பிரபலமான பத்திரிக்கை ஆசிரியர் வில்லியம் ஸ்டெட் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அப்பத்திரிக்கைக்கு அனுப்பினார். பிரம்மஞான சபையை பிளாவட்ஸ்கியும், ஹென்றி ஆல்காட்டும் சேர்ந்து தோற்றுவித்தார்கள்.

ஒன்றே குலம்....ஒருவனே தேவன்,

உண்மையே உயர்ந்த மதம்,

என்பது இச்சங்கத்தின் கொள்கைகளாகும். இவர்களின் சிலைகள் இன்றும் சென்னை அடையாறு பிரம்மஞான சபை மண்டபத்தில் இருக்கின்றன.

1891 இல் பிளாவட்ஸ்கி அம்மையார் காலமானதும் அன்னி அம்மையார் பிரம்மஞான சபையில் இணைந்தார். இதன் கொள்கைகளை தீவிரமாக ஐரோப்பிய நாடுகளிலும் பிரச்சாரம் செய்தார். அச்சமயத்தில் இந்துமத அரிய நூல்களைப் பயின்று அதன் உயர்ந்த கொள்கைகளால் பெரிதும் கவரப்பட்டார். இந்து மதத்தின் மீது மிகுந்த பற்றும் மரியாதையும் ஏற்பட்டது. பிரம்மஞான சபையை பரப்புவதற்கு இந்தியாவே சிறந்த இடம் எனக்கருதி இந்தியாவிற்கு 1893 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வந்து சேர்ந்தார். சென்னையில் உள்ள அடையாறு இச்சபையின் தலைமை இடமாகச் செயல்பட்டது. பல்லாண்டுக்கால பொதுச்சேவையை விட்டு பிரம்மஞான சபையில் இணைவதற்கு சில காரணங்களும் அவருக்கு இருந்தது.

* சாதிமத பேதமற்ற சமத்துவமான, சகோதரத்துவம் உலகில் மலர வேண்டும்.

* இந்து சமயத் தத்துவங்கள் வெளிவர வேண்டும்.

* மனிதர்களுக்குள் மறைந்து கிடக்கும் இயற்கை சக்திகளையும், விளங்காத இயற்கை நியதிகளின் விழிப்புணர்வும் கொள்ள வேண்டும்.

மேற்கண்டவைகள் அனைத்தும் சாத்தியமாக வேண்டுமெனில் பிரம்மஞான சங்கத்தில் அனைவரும் இணைய வேண்டும் என முழங்கினார். இவரது ஆத்மார்த்தமான சொற்பொழிவைக் கேட்டு மனம் உருகி ஆயிரக்கணக்கானோர் இச்சங்கத்தின் கொள்கைகளை பின்பற்றினர். உலகின் பல நாடுகளில் பிரம்மஞான சபையின் கிளைகள் தோன்றலாயின.

1907 இல் இச்சங்கத்தின் முதல் தலைவர் ஆல்காட் மறைவிற்குப்பின், அன்னி பெசண்ட் அம்மையார் அச்சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்று அதன் வளர்ச்சிக்காக எண்ணற்ற பணிகள் ஆற்றினார். 1912 இல் ‘சேவை செய்யும் சகோதரர்கள்’ [ THE BROTHERS OF SERVICE ] என்ற அமைப்பை தோற்றுவித்தார். அதன் மூலம் இளைஞர்களுக்கு ஆன்மீகமும், அரசியலும் பயிற்றுவித்தார். பிரம்மஞானத் தத்துவத்தை பரப்பும் பணியில் இவருடன் டாக்டர் அருண்டேல், ஜீனராஜதாசர், ருக்மணிதேவி ஆகியோர் இணைந்து கொண்டனர்.

அன்னி பெசண்ட் அம்மையாரின் தோற்றப்பொலிவும், பழகும் வள்ளலும், எவரையும் எளிதில் கவர்ந்து விடும். அவர் இந்தியாவில் வாழ்ந்த மொத்த காலங்களிலும் மெல்லிய தங்கநிற நீண்டக் கோடுகள் இழைத்த வெண்ணிற சேலையையே அணிந்து கொண்டார். அவருடைய வெள்ளி நிற தலை முடிக்கு அது மிகப் பொருத்தமானதாகவே இருந்தது. அவருடைய குரலோ, கேட்பவரை வசீகரிக்கும், ஒரு அழகான ஆன்மாவின் குரலாகவே ஒலித்தது. இக்குரல் வளமே பல்லாயிரக்கணக்கோரை தம்பால் கவர்ந்திழுக்கச் செய்து, பேச்சின் மீது முழுகவனம் செலுத்தவும், ஆழ்ந்த அமைதி காக்கவும் செய்தது.

இந்து மதத்திற்கு அம்மையார் ஆற்றிய தொண்டு அளப்பரியது. இந்து சமய நூல்களையும், கலாச்சாரங்களையும் பரப்பும் பொருட்டு அவர் பகவத் கீதையை எளிமையான ஆங்கிலத்தில், சிறுவர்களும், இளைஞர்களும் பயிலும் வகையில் மொழி மாற்றம் செய்தார். அதுமட்டுமன்றி, இந்து மத தர்மங்களைப் பற்றி பல புத்தகங்களையும் எழுதி வெளியிட்டார். இந்திய இளைஞர்களின் எண்ணத்தில் தம் நாடு, தம் கலாச்சாரம் பண்பாடு போன்ற அனைத்தையும் பதியச் செய்யும் பொருட்டு, 1898 இல் ‘சென்ட்ரல் இந்து காலேஜ்’ என்ற கல்லூரியை நிறுவினார். அங்கு இந்து மதத்தின் அடிப்படையான கொள்கைகளை கட்டாயப் பாடமாக வைத்து இந்து இளைஞர்களை கற்கச் செய்தார். இக்கல்லூரிதான் பிற்காலத்தில் மதன் மோகன் மாளவியா நிறுவிய ‘இந்து பல்கலைக்கழகத்திற்கு’, அஸ்திவாரமாக அமைந்தது. இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டோர் என்றொரு பிரிவு , சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்காக இருந்ததைக் கண்டு, வருந்தியவர், அவர்களுக்கென்று தனிப்பட்ட பள்ளிகளையும் அவர்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல சங்கங்களையும் நிறுவினார்.

1916 ஆம் ஆண்டு இவர் ‘ஹோம் ரூல் இயக்கம்’, என்ற சுய ஆட்சி இயக்கத்தை ஆங்கிலேயர்களின், கடுமையான எதிர்ப்புக்கிடையில், மனம் தளராமல் நடத்தி வந்தார். இந்தியர்களுக்கு உரிமை வழங்கும்படி ஆங்கிலேயர்களுடன் போராடிக் கொண்டிருந்தார். பல தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இந்த இயக்கத்தில் இணைந்தனர். மேலும் அவர் காமன்வெல்த் மசோதாவை நகலாக்கினாலும் அதனை பிரபலப்படுத்தும் முயற்சியை எடுக்கவில்லை.

இந்திய இளைஞர் சங்கத்தை [ Y.M.I.A.] சென்னையில் ஏற்படுத்தி அதில் பார்லிமெண்ட் விவாத சபையும் நிறுவினார். பெரிய நூல்நிலையம் ஒன்றையும் நிறுவினார். இந்தியச் சிறார்களை சாரணர் இயக்கத்தில் பங்குபெறச் செய்தார். இந்திய சாரண இயக்கத்தினர் அன்னி அம்மையாரை சாரண இயக்கத்தின் கௌரவ பொறுப்பாணைக்குழு அங்கத்தினராக அறிவித்தது அவருடைய உயர்ந்த சேவைக்குக் கிடைத்த பரிசாகும். சாரண இயக்கத்தின் நிறுவனர் பேடன் பவல் பிரபு அம்மையாரை கௌரவிப்பதற்காகவே இங்கிலாந்திலிருந்து வந்தார். சாரண இயக்கத்திற்கு ஒப்பற்ற சேவை செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் வெள்ளி ஓநாய் என்ற பதக்கத்தை மாபெரும் மக்கள் கூட்டத்தில் பேடன் பவல் பிரபு அன்னி பெசண்ட் அம்மையாருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

1917 ஆம் ஆண்டு கல்கத்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரசின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அழைக்கப்பட்டார். அந்த பிரம்மாண்ட கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை, இந்திய மக்களின் மீது அவர் கொண்ட ஆழ்ந்த அக்கரையையும், அன்பையையும் வெளிப்படுத்தியது. இதற்குப் பிறகு இவருடைய செயல்பாடுகள் கலாச்சரம் மற்றும் அரசியல் தொடர்புடையதாகவே இருந்தது. இந்த காலகட்டத்தில்தான் அவர் கையெழுத்துப்பிரதிகளுக்கான நூலகக் கட்டிடத்தை அடையாறில் கட்டினார். இந்தியக் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமான பரத நாட்டியம், கோயில் நடனக் கலைஞர்கள் மற்றும் தேவதாசிகளிடம் அடைபட்டுக் கிடந்ததை ருக்மணி தேவிக்கு உதவித்தொகை அளித்ததன் மூலம் பரதநாட்டியக் கலாச்சாரத்திற்கே ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். நாட்டுப்பற்று கொண்ட பல்வேறு இனப் பெண்களையும் ஒன்றிணைத்து சகோதரத்துடன் நாட்டு நலனில் பங்கெடுக்கும்படி செய்தார். மார்கரெட் கசின்ஸ் உடன் இணைந்து அம்மையார் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். மக்கள் அவரைத் தங்கள் எதிர்காலத் தலைவராகவே அடையாளம் கொண்டனர்.

1927 ஆம் ஆண்டு, சுதந்திரமான எண்ணம் கொண்ட மகாராணி சின்னாபாய் கெய்க்வாட் தலைமையிலான அகில இந்திய பெண்கள் மகாநாடு, பூனாவில் நடத்தப்பட்டது. ஆனால்,படித்த, சொற்பமான பெண்கள் மட்டுமே உறுப்பினராக முன்வந்த போது இதன் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மையே ஏற்பட்டது. ஆனால் அம்மையாரின் தொலைநோக்குப்பார்வை அதன் நம்பிக்கையை வலுப்படுத்தியது. இம்மகாநாடு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்று விரிவடைய ஆரம்பித்ததோடு இந்திய அரசாங்கத்திலேயே பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. அன்னி பெசண்ட்டின் வழிகாட்டுதல் மற்றும் மார்கரெட் கசின்ஸ் அவர்களின் சேவையாலும் அந்த மகாநாடு வைர விழா கொண்டாடியது.

அன்னி பெசண்ட் அம்மையார் எழுதி வெளியிட்ட நூல்கள் பல. ‘நியூ இந்தியா’, ’காமன்வெல்த்’ ஆகிய செய்தித் தாள்களை நடத்தி வந்தார். ‘தேசிய கல்வி அறக்கட்டளை’, என்ற அமைப்பை உருவாக்கி இந்திய மாணவர்களின் வளர்ச்சிக்காக, பத்திரிக்கைத் துறை கல்வித்திட்டத்தை அடையாறு தேசிய பல்கலைக்கழகத்தில் தொடங்கினார். இவருடைய கல்விச் சேவையைப் பாராட்டி பெனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

1933 இல் செப்டம்பர் மாதம் 20ஆம் நாள் தனது 86 ஆவது வயதில் உயிர் நீத்தார். அவருடைய அஸ்தியின் ஒரு பகுதி காசியில் பெரிய ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு டாக்டர் பகவன் தாஸ் அவர்களால் கங்கையில் கரைக்கப்பட்டது. அடையாறில் அம்மையாரின் சமாதி உள்ளது.

“ இவள் உண்மை நெறி சொல்ல முயன்றாள் “, என்று தம் கல்லறையில் பொறிக்க வேண்டும் என்று அம்மையார் விரும்பிய காரணத்தினால் அதனை நிறைவேற்றினர். இவருடைய தன்னலமற்ற சேவையால் இந்திய வரலாற்றில் தன் பெயரை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பெற்றார்!

Wednesday, November 3, 2010

தீபாவளி கொண்டாட்டம் !

தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த முறை தீபாவளியை முன்னிட்டு
அதிக கலோரி வகையான இனிப்புகள் மற்றும் ஒரு கிரேவி ஸ்பெஷலாக செய்யலாம்.


* கடலை மாவு பர்ஃபி.

தேவையான பொருட்கள் :
கடலை மாவு - 100 கி.
நெய் - 100 கி
சக்கரை - 1 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் - 5 கி
பால் - 1/2 கப் [அ] 120 மி.லி.
குங்குமப்பூ - சிறிதளவு.

செய்முறை :- 10 கி.நெய், 1/4 கப் பால், இரண்டையும் கடலை மாவில் கலந்து கொள்ளவும்.மிருதுவாக பிசைந்து, சிறிது நேரம் வைத்து விடவும். மீதமுள்ள நெய்யை சூடு செய்து அதில் கலந்து வைத்திருக்கும் மாவை பூந்தி கரண்டியில் போட்டு தேய்த்து விட்டு,குறைந்த தீயில் சிறிது நேரம் கிளறி கீழே இறக்கி குளிரச் செய்யவும்.
சக்கரை 100 கிராம் எடுத்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு, கெட்டியான பாகாக காய்ச்சிக் கொள்ளவும். மீதமுள்ள பாலையும், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ அனைத்தும் போட்டு, நன்கு கிளறி கீழே இறக்கவும்.

ஆறிய பின்பு, கடலை மாவு கலவையை எடுத்து அந்த பாகில் கலக்கவும். நன்கு கலந்த பின்பு ஒரு தட்டில் கொட்டி, செட்டாகச் செய்யவும். சிறிது நேரம் கழித்து விரும்பும் வடிவத்தில் துண்டுகள் போட்டுக் கொள்ளலாம்.

ஒரு துண்டு 450 கலோரிகள் வரை இருக்கும்.


சீதாப்பழ பாசந்தி :

தேவையான பொருட்கள் :

பால் - 1 லிட்டர்.
கல்கண்டு - 100 கி.
ஏலக்காய்த்தூள் - 5கி.
பாதாம் பருப்பு - 5கி
பிஸ்தா பருப்பு - 5கி
வெள்ளரி விதை - 5கி
சீதாப்பழம் - 2.

செய்முறை :- பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி நன்கு கிளறிக் கொண்டே காய்ச்சவும். தீயை குறைத்து வைக்கவும். பால் பாதியளவிற்கு சுண்டியவுடன் அதில் கல்கண்டு சேர்த்து கிளறவும். சக்கரை கரைந்தவுடன் கீழே இறக்கி வைத்து ஆற விடவும். பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை அனைத்தையும் சன்னமாக சீவி அதில் சேர்க்கவும். ஏலக்காய் பொடியும் சேர்க்கவும். சீதாப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு பழக்கூழை மட்டும் பாசந்தியுடன் சேர்த்து கலக்கவும்.சில்லென்று பரிமாறவும்.

இதன் கலோரி அளவு 460.


சில்லி பன்னீர் : சைனீஸ் ஸ்டைல்!

தேவையான பொருட்கள் :

பன்னீர் - 200 கி
சோள மாவு [ corn flour] - 1/2 கப்.
மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்.
உப்பு - 1/2 டீஸ்பூன்
அஜினோமோட்டோ - 1/4 ஸ்பூன் [தேவையென்றால்]
மிளகாய் தூள் - 1 1/2 டீ.ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டே.ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
பால் - 4 டே.ஸ்பூன்.

கிரேவிக்குத் தேவையானவை :

எண்ணெய் - 80 மி.லி.
வெங்காயம் பொடியாக நறுக்கியது -25கி
சிகப்பு மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
இஞ்சி விழுது - 1/2 டீ.ஸ்பூன்
பூண்டு விழுது _ 2டீ.ஸ்பூன்
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது -2
கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது -2 டே.ஸ்பூன்.
1/4 ஸ்பூன் அஜினோமோட்டோ.
தண்ணீர் - 1 கப்.
சோள மாவு - 1 டே.ஸ்பூன்.
வினிகர் - 2 டீ.ஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
சக்கரை - 1டீஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது -3.

செய்முறை :- சோள மாவு, மைதா, உப்பு அஜினோமோட்டோ, மிளகாய் தூள், மிளகு தூள், பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான பால் கலந்து கெட்டியான பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

பன்னீர் துண்டுகளை அந்த மாவில் போட்டு 5 நிமிடம் ஊறவிடவும். அதை எண்ணெயில் மொறு மொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.

கிரேவி தயாரிக்க :-

சோள மாவை தண்ணீரில் கரைத்து, அதனுடன் தக்காளி சாஸ் வினிகர், சோயா சாஸ், உப்பு, சக்கரை மற்றும் மிளகு தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கவும். சிகப்பி மிளகாய் விழுது [ மிளகாயை வேகவைத்து அரைத்துக் கொள்ளவும்]இஞ்சி விழுது, பூண்டு விழுது, பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். அஜினோமோட்டோ சேர்த்து கலக்கவும்.

அடுத்து சோளமாவு கலவையை எடுத்து அதி ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அதை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பரிமாறும் பொழுது கிரேவியை திரும்ப சூடாக்கி, பன்னீர் பக்கோடாவை அதில் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிட்டு பாதி அளவிற்கு கெட்டியானவுடன் கீழே இறக்கி வைத்து விடவும். பரிமாறும் கின்னத்தில் போட்டு , பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை தூவி அலங்கரிக்கவும்.

Tuesday, November 2, 2010

கடல் கால் அளவே............



வாழ்க்கை தெளிந்த நீரோடையாக ஓடிக் கொண்டிருக்கும் போது தம்முள் இருக்கும் திறமை எளிதில் வெளிப்படுவதில்லை. காரணம் அதற்கான தேவையே ஏற்படுவதில்லை. ஆனால் திடீரென சுனாமியாக பிரச்சனை வந்து புரட்டிப் போடும் போதுதான் சம்பந்தப்பட்ட அந்த நபரின் தகுதி தெரிய வரும். அதாவது பிரச்சனையை எதிர்த்து நின்று போராடக்கூடியவரா அல்லது தலைதெறிக்க ஓடுபவரா, இன்னுமொரு படி மேலே போய் கோழைத்தனமாக தன்னையே அழித்துக் கொள்பவரா என்பது.. ஒரு சிலரின் வாழ்க்கையில், பிறப்பு முதல் இறப்பு வரை, சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், பெரும் பிரச்சனைகள் வராமல் ஓடிவிடுகிறது. சிலரின் வாழ்க்கை தன்னுடைய நம்பிக்கையையும், திறமையையும் நிரூபித்துக் காட்டும் வகையில் விதி பிரச்சனைகளைக் காட்டி இழுத்துச் செல்லும்.அப்படி ஒரு உண்மைச் சம்பவம்தான் இது.

செல்வி, மத்தியவர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ,அமைதியான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். கணவர் கனகராஜ், ஈரோட்டில் நூல் விற்பனை முகவர் தொழில் பார்த்துக் கொண்டிருந்தார். ஆண் ஒன்றும்,பெண் என்று என்று இரு குழந்தைகள் சலனமில்லாத அமைதியான வாழ்க்கை. மூத்த பெண் பள்ளியிறுதியாண்டு முடித்து நல்ல மதிப்பெண்களுடன் பொறியியல் கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் ஆவலில் காத்திருக்கிறாள். இளைய மகன் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன். இந்த நிலையில் தான் கணவர் கனகராஜீவிற்கு திடீரென கால்வலி ஏற்பட்டது. அதிகம் நடக்க முடியாமல் சிரமம் கொடுத்த போதுதான் மருத்துவரை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்குள் மகளை பொறியியல் கல்லூரியில் சேர்க்க வேண்டிய வேளை நெருங்கியதால் ஈரோட்டில் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டு மருத்துவ மனைக்குச் சென்றவர், அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் ஒரு சம்பவமாகிப் போனது..........

‘காயமே இது பொய்யடா.....காற்றடைத்த பையடா.....என்பார்கள், மேல் தோற்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு உடல்நிலையைக் கணிக்க முடியாது என்பதற்கு கனகராஜ் ஒரு உதாரணமாகிப் போனார். கால்வலிதானே ஏதாவது வலி நிவாரணி கொடுப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு மருத்துவரை அணுகிய போது பரிசோதித்த மருத்துவர் சி..டி. ஸ்கேன், எக்ஸ்ரே என்று ஏதேதோ எடுக்கச் சொல்ல அப்பொழுதே ஏதோ பெரிய பிரச்சனைக்கு அறிகுறியாக தெரிந்தாலும், இறுதியில் மருத்துவர், இதயத்திலிருந்து வரும் ரத்தக் குழாயில், காலில், அடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதைக் கேட்டு பேரதிர்ச்சி ஆனது.

மன உளைச்சல் ஒருபுறம் இருந்தாலும், பொருளாதார நிலை அடுத்த பிரச்சனை. செலவுகள் லட்சத்தை தாண்டிக் கொண்டிருக்கின்றன..... கையிருப்பும் கரைந்து கடன் வாங்கும் நிலையும் வந்தது. வீட்டுப் புறாவாக அதுவரை, கணவனையும் குழந்தைகளையும் பராமரிக்கும் கடமையை மட்டுமே சிரமேற்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் செல்விக்கு, திடீரென்று எல்லா பொறுப்பும் ஒரு சேர வந்து அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டது. படித்தது என்னவோ 9 ஆம் வகுப்பு வரைதான். சொந்தபந்தங்களிடம் சென்று உதவிக்காக நிற்பதற்கு தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அது மட்டுமல்லாமல் இது நிரந்தரத் தீர்வாகவும் இருக்க முடியாதே.

இதற்கிடையில் கணவனின் அறுவை சிகிச்சைக்காக ஈரோட்டிலிருந்து, கோவையில் ஒரு பிரபல மருத்துவமனையில் சேர்த்து பெரிய நோட்டுக்களாகச் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கணவனின் தொழில் மீது கவனம் செலுத்த வேண்டிய சூழல் உருவானது.

சாதம் படைக்கவும் செய்திடுவோம் : தெய்வச்

சாதி படைக்கவும் செய்திடுவோம்

காதலொருவனைக் கைப்பிடித்தே, அவன்

காரியம் யாவினும் கைகொடுத்து

மாதரறங்கள் பழமையைக் காட்டிலும்

மாட்சி பெறச் செய்து வாழ்வமடி !






.

என்று பாரதி அன்றே பாடி வைத்துச் சென்றான்.

பெண்களுக்கான சில பொதுவான தொழிகள் உள்ளன. அப்படி ஒன்றாக இருக்கும் பட்சத்தில் ஓரளவிற்கு சமாளிக்க வாய்ப்பு இருக்கும். ஆனால் செல்வியின் நிலையோ,தன் கணவனின் தொழிலைப் பின்பற்றுவதைத் தவிர வேறு உபாயம் இல்லை. கணவர் செய்யக்கூடிய நூல் விற்பனை முகவர் தொழில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே செய்யக்கூடிய ஒரு தொழில். காரணம், பலரை, பல நேரங்களில், சந்திக்க வேண்டும். பணிக்கான குறிப்பிட்ட கால நேரங்கள் கிடையாது. அதிகமான சுற்றுப் பயணம், பெரும் தொகைகளை வசூல் செய்து பட்டுவாடா செய்ய வேண்டும். இது போன்று ஆண்கள் மட்டுமே செய்யக்கூடிய பணியை, 9 ஆம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்று, கணவன் தொலைபேசியில் உரையாடும் நிகழ்வுகள் மட்டுமே அனுபவமாகக் கொண்ட நாற்பது வயதைக் கடந்த நிலையில் ஒரு பெண் தனியாக நின்று சமாளிக்க வேண்டிய கட்டாயம், கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒன்று.

அடுத்த வேளை உணவு, குழந்தைகளின் கல்வி, வீட்டு வாடகை , அனைத்திற்கும் மேலாக கணவனின் மருத்துவச் செலவு. இப்படி ஒரு இறுக்கமான சூழலில்தான், கணவரிடம் ஆலோசனை பெற்று, அவர் வியாபாரம் செய்த நூற்பாலை முதலாளிகள் மற்றும் கொள்முதல் செய்யும் வியாபாரிகள்போன்றோரின் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டார். கனகராஜின் நேர்மையான தொழில் வழமை அவருக்கு நல்ல நட்புக்களை தொழில்ரீதியாக உருவாக்கி வைத்திருந்தது.

கணவனின் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்த திருப்தியில், கணவனின் உதவியுடன் தொழிலைக் கவனிக்க ஆரம்பித்த வேளையில், விதி தன் குரூரமான மறுபக்கத்தை காட்ட ஆரம்பித்துவிட்டது. அறுவை சிகிச்சை முடிந்தும் இரத்தக் குழாயில் இருந்த அடைப்பு நீங்கியும், இரத்தம் வேகமாக பாய்ந்த காரணத்தினால் மூளை நரம்பு வெடித்து, அதி விரைவில் உயிரும் பிரிந்து விட்டது. அதிர்ச்சியில் உறைந்து போன செல்விக்கு உலகமே இருண்டு போனது போல் தோன்றியது. இனி தன் குழந்தைகளின் எதிர்காலம் அவ்வளவுதான் என்று முடிவு செய்த வேளையில்தான், கணவனின் நல்ல நண்பர்கள் மற்றும் நல்லெண்ணம் கொண்ட நூற்பாலை முதலாளிகள் சிலர் கொடுத்த நல்லறிவுரைகள் மற்றும் ஊக்கம் கொண்டு, கணவன் மறைந்த எட்டாவது நாளே தொழிலை கவனிக்க வந்துவிட்டார், செல்வி.

கல்வியும் குறைவு, விசேச தகுதிகள் என்று ஏதும் இல்லை. ஆனால் சமாளித்து விடுவோம் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் மட்டும் கைகொடுக்க 45 வயதில், இரு சக்கர வாகனம் ஓட்டிப் பழகினார். சிறு வயதில் சைக்கிள் ஓட்டிய நினைவு மட்டுமே துணை இருந்தது அதற்கு. 20 நாட்களில் மொபெட் ஓட்டி பழகினார். பக்கத்தில் இருக்கும் கிராமங்கள் , சிற்றூர்கள் என்று நேரம் காலம் இல்லாமல் அலைய வேண்டிய அவஸ்தை........ நூற்பாலையிலிருந்து நூல் பைகளை சரக்கு வண்டியில் ஏற்றிக் கொண்டு, இரவு வேளைகளில் கூட சரக்கு வண்டியிலேயே பயணித்து வந்த அனுபவம் இப்படி எத்தனையோ........... ஆனால் அதைப்பற்றியெல்லாம் எண்ணி மாய்ந்து போகாமல், துணிச்சலைத் துணைக் கொண்டு, தன்னை விரட்டிய விதியை திரும்பி நின்று தான் விரட்ட ஆரம்பித்தார். விதியும் பயந்து ஒதுங்க, இன்று மகளை ஒரு ECE பொறியாளராக, ஒரு பிரபல கம்பெனியில் அமர்த்தி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார். மகனையும் பொறியியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இன்று தான் கடந்து வந்த பாதையைப் பற்றிக் கேட்ட போது, பல கசப்பான அனுபவங்கள் ஆரம்பத்தில் பெற்றிருந்தாலும், இன்று தலை நிமிர்ந்து நிற்பதை எண்ணி பூரிப்படைகிறார். பொதுவாக பெண்களின் முன்னேற்றத்திற்கு பெண்களேதான் முதல் எதிரி என்பார்கள். செல்வியின் வாழ்விலும் அது உண்மையாகிப் போனதும் மறுக்க இயலாது. சொந்த, பந்தங்களின் ஏளனப் பேச்சு பல நேரங்களில் வாட்டி எடுத்தாலும், அதனையெல்லாம் துச்சமாகத் தூரத்தள்ளி, நேர்மையும், நம்பிக்கையும், நல்லொழுக்கமும், துணிச்சலும் கொண்டு பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் செல்வி, தன் கணவரின் நினைவுகளைச் சுமந்து கொண்டு..............,


Saturday, October 30, 2010

எழுத்தறிவிப்பவன்.................


மாதா, பிதா, குரு, தெய்வம் என குருவிற்கு, மாதா, பிதாவிற்கு அடுத்த இடமும், தெய்வத்திற்கு மேலான இடமும் கொடுத்து வைத்துள்ளது நம் கலாச்சாரம். முன் காலங்களில் 'குருகுலம் ', என்று குழந்தைகளை சேர்த்து விட்டால், அங்கு குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்கள் முதல் கல்வியுடன், சகல கலைகளையும் கற்றுத் தருவார்கள். அரசனின் குழந்தையாக இருந்தாலும், ஆண்டியின் குழந்தையாக இருந்தாலும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்துதான் கல்வி பயிலுவார்கள். குரு சொல்லும் வாக்கை தெய்வ வாக்காகக் கொண்டு மாணவர்கள் அடி பணிந்து நடப்பார்கள்.

காலப் போக்கில் அந்த முறை மாறி, மறைந்தே விட்டது. பிறகு வந்த காலங்களில் குருவிற்கு, ஆசிரியர் என்று ஓரளவிற்கு மதிப்பு இருந்து கொண்டிருந்தது. ஆனால் சமீப காலங்களில் ஆசிரியர்களில் ஒரு சிலர் நடந்து கொள்ளும் முறை அந்த தெய்வீகப் பணியின் மீது ஒரு வெறுப்பையே மக்களுக்கு ஏற்படுத்துகிறது. மாணவர்களின் சேட்டைகள் அதிகரித்திருப்பது போல ஆசிரியர்களின் அடக்கு முறையிலும் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப் படுத்துகிறார்கள்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஒரு பள்ளியில் அப்படி ஒரு தண்டனை தவறு செய்யும் குழந்தைகளுக்குக் கொடுப்பதாக நாளிதழில் படித்த போது, அதிர்ச்சியில் உரைந்தே போனேன். ஆம் அந்நியன் டெக்னிக்கில் 'கும்பிபாகம்' தண்டனை!

அதாவது தவறு செய்யும் குழந்தைகளை மரத்தில் கட்டி வைத்து, அந்த மரத்தின் அடிபாகத்தில் இருக்கும் செவ்வெறும்புகளை கடிக்க விடுவது. அந்தக் குழந்தைகள் இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி எறும்பு கடி தாங்காமல் உதைக்கும் காட்சியைக் கண்டுகூட மனம் இரங்காமல் குறிப்பிட்ட நேரம் வரை அவ் வேதனையை அக் குழந்தை தாங்கியே ஆக வேண்டுமாம். பெற்றவர்கள் இக்காட்சியைக் காண நேர்ந்தால் என்ன ஆகும்? ஆனால் இந்த விவரமான ஆசிரியர்கள், அத்தகைய தண்டனையைப் பற்றி வீட்டிலோ, வெளியே யாரிடமோ சொன்னால் 'டிசி' கொடுத்து பள்ளியை விட்டே வெளியே அனுப்பி விடுவோம் என்ற மிரட்டல் வேறு விடுவார்களாம். குழந்தைகள் பயந்து போய் வெளியிலும் சொல்வதில்லையாம். இப்போது எப்படியோ செய்தி வெளியே பரவி, சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இப்பொழுதெல்லாம் தனியார் பள்ளிகள் பல, வருமானங்களை மட்டுமே குறிவைத்து, சேவை மனப்பான்மை என்பதே துளியும் இல்லாமல், ஆசிரியப் பயிற்சி கூட எடுக்காத வெறும் பட்டம் மட்டுமே பெற்ற ஆசிரியர்களைக் கொண்டே பள்ளியை நடத்துவதுதான் இது போன்ற குற்றங்கள் நடப்பதற்கு காரணமாகின்றன, என்பதே பெற்றோரின் வாதமாக உள்ளது. ஆசிரியர் பயிற்சியில், குழந்தைகள் மனோத்தத்துவம் [child psychology] பயிற்றுவிக்கிறார்கள். அதன் மூலம் குழந்தைகளின் மனநிலையை உணர்ந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல கல்வி புகட்ட முடியும். ஆனால் இது போன்று பயிற்சி பெறாத ஆசிரியர்களே, பெரும்பாலும் குழந்தைகளை இவ்வாறு மனிதாபிமானமில்லாமல் நடத்துகிறார்கள். இச் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

Wednesday, October 27, 2010

ஸ்ரீலங்கா அதிபருக்கு நல்லிணக்க அறிவுரை - வழக்குரைஞர் ஜார்ஜ் வில்லி

மேதகு அய்யா அவர்களே, மதிப்பிற்குரிய காங்கிரஸ் பெண்மணி, திருமதி ராஜபக்ச, ஷீலா ஜேக்சன் லீ அவர்களே! இந்த அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு ஷீலா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். தூதரக தலைமை அதிகாரி அரோரா அவர்களுக்கும் நன்றி உரித்தாகுக.

மேன்மை தங்கிய விருந்தாளிகளே, லேடிஸ் & ஜென்டில் மென், மேன்மை பொருந்திய தங்களை இந்த பெருமை வாய்ந்த நகருக்கு வரவேற்கிறோம். ஓக் மரங்களையும் பாசாங்குப் பறவைகளையும் பொருட்படுத்தாவிட்டால், தாங்கள் இந்நகரத்தை சிறிலங்கா என்றே தவறாக எண்ணலாம்.

நான் பிறந்தது சிறிலங்காவில் தான். என் தாய், மனைவி சாந்தியின் பெற்றோர், மற்றும் என் தாத்தா, பாட்டி என அனைவரும் என் தாய்த்திருநாட்டின் புனிதமான பூமிக்கடியில்தான் சாமாதியாகியுள்ளனர். மேதகு அய்யா அவர்களே, நான் என்னுடைய 10 வது வயது வரை ஜாஃனாவில் வளர்ந்து, பிறகு கொழும்புவிற்கு இடம் பெயர்ந்தோம். என் மனைவி பதுளாவைச் சேர்ந்தவர். பெரு மதிப்பு வாய்ந்த ராணுவத் தளபதியாக இருந்த இவர் தந்தையுடன், தியாதலவாவில் வளர்ந்தவர். நான் ஜாஃனாவின் மகோசா மரங்களின் நறுமணம் நுகர்ந்தவன். கொழும்புவில் என் பால்யப் பருவத்தில் பள்ளிக்குச் செல்லும் போது, செந்நிற நாவற்கனிகளை அதன் செங்கறைகள் என் வெண்மையான மேல் சட்டையில் படும்படி அதனைச் சுவைத்தவன். மனம் கவரும் மணத்தினால், பலா மரங்களில், பழுத்த பழங்களை காக்கைகள் கொத்தித் திறக்க முனைவதையும் கண்டிருக்கிறேன்.

வெசாக், திருவிழாக்கால வண்ணமயமான பந்தல்களைக் கண்டிருக்கிறேன். ஏழை மக்களுக்கான தர்ம சாலைகளின் உணவையும் வெட்கமின்றி உண்டிருக்கிறேன். கோவில்களின் மணியோசையையும் கேட்டிருக்கிறேன். மல்லிகை மற்றும் ஜாஸ் குச்சிகளின் நறுமணத்தையும் நுகர்ந்திருக்கிறேன். பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்குத் தந்தை ஹேர்த்துக்கு பணிவிடைகள் புரியும் போது, ஆல் செயிண்ட்ஸ் சர்ச் மணியோசையையும் கேட்டிருக்கிறேன்.

ஆனால் 1975 இல் நான் சிறிலங்காவை விட்டு வெளியேறியதிலிருந்து, சொல்லொனாத் துயரமும், கவலையும், வேதனைகளும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. தன்னுடைய புனித நீரை மட்டுமே நெல் வயலுக்குக் கொண்டு வருவதையே வழமையாகக் கொண்ட சக்தி, மஹாவேலி கங்கை, இரத்த வெள்ளத்தைப் பாய்ச்சிவிட்டாள். சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் இருவரும் இங்கு அமெரிக்காவில் இருந்து கொண்டு, என் முன்னோர்கள் வாழ்ந்த சொர்க்க பூமி, நரகத்தின் அதள பாதாளத்திற்குச் செல்வதைக் காணும் அவலத்திற்கு ஆளாகியுள்ளோம். எவைக் குற்றம் சொல்வது என்று ஒருவரும் அறிந்திலர். அதற்கான காலமும் கடந்து விட்டது.

மேதகு அய்யா, தங்களின் சக்தி துட்டகாமுனு மற்றும் எள்ளாளரின் எம் மக்களின் வழியாகவும் பெற்றிருக்கலாம். துட்டகாமுனு, தன்னுடைய காண்டுலா யானையின் மீதிருந்து, எள்ளாளரிடம் சண்டையிட்டு, எள்ளாளரைக் கொறதை நினைவில் கொள்ளுங்கள். சிறிலங்காவை முதன் முறையாக இணைத்ததற்காக இன்றும் துட்டகாமுனு நினைவில் கொள்ளப்படுகிறார். எள்ளாளரை தோற்கடித்து கொன்ற பிறகு அவர் எள்ளாளருக்கு, அவர் மீது கொண்ட மரியாதை காரணமாக, தன் மதிப்பிற்குரிய எதிரிக்காக ஒரு நினைவுச் சின்னம் எழுப்பினார். அது மட்டுமல்லாமல், தன் குடிமக்களை, அந்த இடத்தில் நின்று எள்ளாளருக்கு மரியாதை செலுத்தி வணங்கிச் செல்ல கட்டளையிட்டார்.

இவ்வாறு செய்ததன் மூலமாக தன் உயர்ந்த குணத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை. அத்தோடு தான் ஒரு திறமையான அரசியல்வாதி என்பதையும் நிரூபித்துள்ளார். எள்ளாளரின் தோல்விக்குப் பின்னரும் அவர் தமிழ் மக்களையும் ஆட்சி செய்ய வேண்டியதையும் உணர்ந்திருந்தார்.

மேதகு அய்யா அவர்களே, நம்பிக்கை, நற்பேறு மற்றும் நுண்ணிய அரசியல் திறன் அனைத்தும், தங்களைச் சரித்திரத்தின் ஒரு தனிப்பட்ட இடத்தில் நிலை பெறச் செய்துள்ளது.

இனி வரும் இளம் சந்ததியினர், தங்களுடைய சரித்திரப் புத்தகங்களில், பலரும் தோற்கடிக்க முயன்று தோல்வியடைந்த புரட்சியாளர்களை, ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி கொண்டவர், ஒரு உயர்ந்த தலைவர், சிறந்த வீரர், மகிந்த ராஜபக்ச என்று பயிலுவார்கள். அவர்கள், தங்களை 21 ஆம் நூற்றாண்டின் துட்டகாமுனு என்று கூட சொல்லலாம். ஆனால் தாங்கள் ஜெமுனுவின் அங்கியை அணிய விரும்பினால், மேதகு அய்யா அவர்களே, ஒரு நினைவுச் சின்னத்தையும் தாங்கள் கட்டமைக்க வேண்டிவரும். அந்த நினைவுச் சின்னம் வெறும் கட்டிடமாக இல்லாமல், அது, ஒரு கட்டுப்பாடான, சட்டதிட்டங்களுக்குட்பட்ட, புதிய செயல் முறைத் திட்டங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

58 கலகங்கள் ஆரம்பிக்கக்கூடியத் தவறைச் செய்யாதீர்கள். பல்கலைகழகத்தினுள் நுழைய விரும்பும் தமிழர்களைத் தடுத்து நிறுத்தாதீர்கள். தமிழர்கள் தங்களை இரண்டாந்தர குடிமக்களைப் போல் உணரும் நிலையை ஏற்படுத்தாதீர்கள். அவர்களின் மதத்திற்கும் மற்றும் மொழிக்கும் மரியாதை செலுத்துங்கள். மேதகு அய்யா அவர்கள் தமிழர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது உள்ளது. தங்கள் மொழியையேக் கடவுளாகக் கொண்டவர்கள். உலகத்திலேயே, இந்த அளவு மொழி பக்தி கொண்ட மிகச் சில கலாச்சாரங்களே உள்ளது.

தாங்கள் ஒரு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளீர்கள். மனித உரிமைகளுக்காகப் போராடும் மாமனிதராகவும் இருந்திருக்கிறீர்கள். இப்பொழுது பிரபலமான நிலையிலும் இருக்கிறீர்கள். வெற்றி வாகை சூடி ரோமாபுரிக்குத் திரும்பியிருக்கும் ஜூலியஸ் சீசருக்கு நிகரான சக்தி படைத்தவர் தாங்கள். தாங்கள் கேட்பதை எவரும் மறுக்க இயலாது. நாம் இருவரும் சட்டப் பள்ளியில் பயின்ற சில உன்னதமான சட்டப் பிரிவுகளை சட்டமன்றத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யுங்கள். பிறகு நாம் ஆத்மசாந்தி அரசியலமைப்பைக் கற்றிருக்க வேண்டும். என் உதவி தங்களுக்குத் தேவைப்படுமானால், இந்த உலகத்தின் பார்வையாளர்கள் போல் நானும் அளிக்கத் தயாராக உள்ளேன். தமிழர்கள் தங்களுக்கும் ஒரு இடம் இருக்கிறது என்று தாங்கள் அளிக்கப் போகும் உறுதியை எதிர்நோக்கி நிர்வாணமாகவும், பசியுடனும் கிடக்கிறார்கள்.

அப்படி ஒன்று அவர்களுக்கு இருப்பதை உறுதிபடுத்துங்கள். தாங்கள் ஒரு பிரபாகரனை கொன்று விட்டீர்கள். ஆனால் இன்னொரு பிரபாகரனை வளர விடாதீர்கள். ஆயுதங்களுடனும், துப்பாக்கியுடனும் இன்னொருவர் வளருவதைத் தங்களால் தடுக்க இயலாது. தாங்கள் அதை தங்களுடைய பரந்த மனப்பான்மையால் மட்டுமே செய்ய முடியும். புத்த பகவானிடமிருந்து கற்ற இரக்கம், உண்மை, நீதி ஆகியவைகள் மட்டுமே தங்களுக்குத் தேவையான ஆயுதங்கள். 'தம்மா படா'வின் படி புத்தர் எந்த நேரத்திலும் வெறுப்பை, வெறுப்பால் கைப்பற்ற முடியாது. வெறுப்பை அன்பினால் மட்டுமே கைப்பற்ற இயலும். இது ஒரு பழமையான நியதி. இதுதான் புத்தபிரான் அருளியது.

மேதகு அய்யா அவர்களே, தாங்கள் இந்த நல்ல நகரத்தை விட்டு சிறிலங்கா செல்லும் போது, ஒரு 10 வயது பாலகன் நாளை பள்ளிக்கு தன் வெள்ளைச் சட்டையுடன் செல்லும் போது, அதில் நாவற்பழக் கறை தவிர வேறு எவ்விதமான சிகப்புக் கறையும் ஆகாது என்றொரு வாக்களிக்க வேண்டும். காலை நேரக் காகம் பலாப்பழத்தைத் தவிர வேறு எதையும் கொத்திக் கொண்டிருக்கக் கூடாது. நான் நறுமணம் நுகர்ந்த மகோசா மரங்களில் வேறெதுவும் தொங்கக் கூடாது.

மேதகு அய்யா, எங்களை சுவர்கத்திற்கு திருப்பியனுப்புங்கள். எங்களை சுவர்கத்திற்கு திருப்பியனுப்புங்கள். நன்றி

Sunday, October 24, 2010

அகக் கண்கள் ...........



அகக் கண்கள் திறந்து...........
காட்சிகள் விரிகின்றன.
அழகான நீர் நிலையைக் காண்கிறேன்!
இரு புறமும் கொத்துக் கொத்தாக
மலர்கள் தாங்கிய குறுஞ்செடிகள்....

நீலமேகக் கூரையில்
வெண்பஞ்சுப் பொதிகள்....
வெளிர்நீல மலைக் குன்றுகளில்
பனிபடர்ந்த மரக் கன்றுகள்!

அந்தி மயங்கும் நேரம்.....
கூட்டில் அடையப் போகும்
பறவைகளின் மெல்லிய கீதம்.
மனம் அமைதியில் திளைத்த இன்பம்.

அந்த ஓடைக்கரையில் ஒரு
ஒரு குச்சு வீடு......
சின்ன அறையில் நிறைமனதுடன் நான்!
குச்சு வீட்டின் கொல்லைப்புறத்து
பசுமையான வயல் வெளி......
வளமையான பயிர்களின் நாணம்.....

கரையோரத்து மலர்களின் நறுமணம்
குடில்........அழகான குடில்......
எளிமையான மனிதரும்...
அழகான பறவைகளும்....
பகிர்ந்து வாழும் அழகிய குடில்....

குடிலின் அருகில் என் சொந்தங்கள் இல்லை.....
என் சாதி இல்லை......என் மதம் இல்லை....
என் இனம் கூட இல்லை.......
ஆனால் பெயர் மட்டுமே அடையாளமாக.....
அந்த இனம் அன்பை மட்டுமே ஆதாரமாக....

இயற்கையின் இனிமையைக்
கொண்டாடும் இனமாக........
அந்த அழகைப் பகிர்ந்து
பருகும் இனமாக......
திறந்த இதயத்துடன், பரந்த
மனதுடன் வாழும் இனம்....
அங்கு என் அமைதியான.......
ஆனந்தமான வாழ்க்கை...........

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...