பவள சங்கரி
’தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது பழமொழி. பலவிதமான ஆன்மீகச் சிறப்புகளைக் கொண்டது தை மாதம். தை மாதத்தில், பூச நட்சத்திரத்தில் வரும் தினம் புண்ணிய தினமாக நம் முன்னோர்களால் வழிபடப்பட்டு வருகிறது. குறிப்பாக பௌர்ணமியும் சேர்ந்து வரும் தைப்பூசத் திருநாள் மிகவும் விசேடமானது. பதஞ்சலி முனிவருக்கும், வியாக்கிரபாதர் முனிவருக்கும், சிவசக்தியின் ஆனந்தத் தாண்டவக் காட்சி கிடைத்த அற்புத நாளாம்.
2013ம் ஆண்டு 27ம் நாள் பௌர்ணமி தினத்தில், சிவாம்சம் பொருந்திய சூரிய பகவான் மகர இராசியிலும், சக்தி அம்சம் பொருந்திய சந்திர பகவான் கடக ராசியில், பூச நட்சத்திரத்திலும் ஆட்சி பெற்று, சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் இருப்பது பௌர்ணமி தினத்தில் வரும் தைப்பூசத் திருநாளில் மிகச் சிறப்பாம். இந்நாளில் துவங்கப்படும் எக்காரியமாயினும் நிறைந்த பலனை அளிக்கக் கூடியதாகுமாம். அறிவின் தேவதையாக போற்றப்படும் குரு பகவான் பூச நட்சத்திரத்தின் நாயகனாகப் போற்றப்படுகிறார்.
சிவசக்தியின் ஆனந்தத் தாண்டவத்தில் இவ்வுலகம் தோன்றியதாகவும், முதன் முதலில் நீர் பின்பு நிலம், நெருப்பு, ஆகாயம் என அனைத்து பஞ்ச பூதங்களும் தோன்றியதாகக் கூறுவார்கள்.
சிவபெருமானாரின் அருளால் தோன்றிய முருகப் பெருமானுக்கு அன்னை பராசக்தி சகல சக்திகளையும் வழங்கியத் திருநாளும் இத்தைப்பூசத் திருநாள் என்பதாலேயே, முருகன் வாழும் குன்றுதோறும் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் இந்த விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக பழனி மலை முருகன் கோவிலுக்குப் பாத யாத்திரையாகவும், விரதமிருந்து மாலையணிந்து பெரும் பக்தர் கூட்டம் வருவதைக் காண முடிகிறது. புனித நதிகளில் நன்னீராடி வழிபடுதலும் சிறப்பாம். கொங்கு நாட்டில், தைப்பூசத் திருநாளில் குலதெய்வ வழிபாடு மிகச் சிறப்பாகச் செய்வதையும் வழமையாகக் கொண்டிருக்கிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் உலகப்பம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள எங்களுடைய குலதெய்வமான அருள்மிகு பெரியாண்டவர் எல்லம்மாதாய் திருக்கோயிலில் 14ம் ஆண்டு குடமுழுக்கு மற்றும் 36ம் ஆண்டு தைப்பூச விழா மிகச் சிறப்பாக நடந்தேறியது. வெளி நாடுகள் மற்றும் வெளியூர்களில் வாழுபவர்களும், இயன்றவரை வந்து கலந்து கொள்கிறார்கள். கிட்டத்தட்ட 4000 மக்கள் கலந்துகொண்ட இவ்விழா மிகச் சிறப்பாக அன்னதானத்துடன் நடந்தேறியது.
