Thursday, April 3, 2014

பாம்பைக் கண்டால்.... 1


பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்!

ஆமாம் எனக்கும்தான். பாம்பு பற்றிய பல கட்டுக் கதைகள் கூட சுவையாகத்தான் இருக்கும். எத்தனை திரைப்படம் பாம்பு பற்றி எடுத்தாலும் ஓடத்தான் செய்கிறது. அதென்னமோ பாம்பு என்று சொன்னாலே எல்லோருக்கும் கண்ணில் பளிச்சென்று ஒரு மின்னல் வந்து போகும் இல்லையா? 

சமீபத்தில்  தினமணியில் கண்ட ஒரு செய்தி:

பாம்புக்கு காது கேட்குமா? தொடர்ந்து குறிவைத்து தாக்குமா? பாம்புக்கு வார்க்கப்படும் முட்டையும், பாலையும் அது குடித்து விடுகிறதா? கொம்பேறிமூக்கன் தன்னால் கடித்து இறந்தவரை எரிக்கும் வரை மரத்தில் மறைந்திருந்து பார்க்குமா? இவையெல்லாம் உதகையில் நடைபெற்ற பாம்புகள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற பார்வையாளர்களிடமிருந்து கேட்கப்பட்ட கேள்விகள்.

 புவி வெப்பமடைதல் அபாய அளவுகளைக் கடக்கத் தொடங்கியதிலிருந்து அனைத்து பகுதிகளிலுமே தட்பவெப்பநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பாம்புகளே இல்லையெனவும், அப்படியே இருந்தாலும் அவை விஷத்தன்மை அற்றவையே என்ற நிலைதான் மலை மாவட்டமான நீலகிரியில் இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், சாலையோரங்களிலும் பாம்புகள் காணப்படுகின்றன.

Monday, March 31, 2014

தென்றல் இதழில் நூல் அறிமுகம்


அன்பு நண்பர்களே,



தென்றல் இதழில், திருமதி. ராமலஷ்மி அவர்களின் இரண்டு நூல்களுக்கு என்னுடைய  அறிமுகம் ஏப்ரல் இதழில் வெளியாகியுள்ளது, இங்கே காணக்கிடைக்கிறது: http://www.tamilonline.com/thendral/Contentnew.aspx?id=161&cid=31

நன்றி.

Monday, March 24, 2014

மொட்டைத் தெங்கு



பவள சங்கரி



முன் குறிப்பு :  காட்டை அழித்து நாட்டை விரிவு படுத்தும் கூட்டம் ஒரு புறமும், வாய்க்கால் வரப்பு தகராறு என்ற பெயரால் தோட்டத்தையே அழிக்கத் துணியும் கூட்டம் இன்னொரு புறமும், இவையெல்லாம் போக மரத்தை வெட்டி பணம் சம்பாதிக்கும் கூட்டம் ஒரு புறமும் இப்படி ஆளாளுக்குப் பங்கு போட்டுக்கொண்டு நம் வாழ்வாதாரமான இயற்கை வளங்களை அழித்துக்கொண்டிருப்பது வேதனைக்குரியது. எத்தனை வேளான் விஞ்ஞானிகளும், நம்மாழ்வார்களும் உயிரைக் கொடுத்துப் புலம்பினாலும் கேட்பார் இல்லை. நாட்டில் நீர்வளம் மிக மோசமாகக் குறைந்து கொண்டு வருகிறது. இந்த ஆதங்கத்தில், அந்த இயற்கையே நம்மை எதிர்த்து நிற்கத் துணிந்தால் என்ன ஆகும் என்ற ஒரு சிறு கற்பனைதான்.  செய்தித்தாள் செய்திகளுக்கும், படங்களுக்கும் நன்றி.
பரட்டையாய்ப் படர்ந்துக் கிடந்த, காயும் பிஞ்சுமாக செழுமையாகக் குலை தள்ளிக் கொண்டு உயர்ந்து நின்றவைகளை, ஈவு இரக்கமில்லாமல்  குரல் வளையுடன் மொத்தமாய் வெட்டப்பட்டு முண்டமாய், வெதும்பி வேதனையில் துடித்துக்கொண்டிருப்பது இன்று நேற்று அல்ல. கடந்த சில மாதங்களாகவே இப்படித்தான்.  ஒரு குடும்பமாக ஒன்றாகக் கூடிக் குலவிக் கொண்டிருந்த அந்தத் தென்னை மரங்கள் இன்று அழுது அரற்றிக்கொண்டிருக்கின்றன.
ஏன் இப்படி ஒரு நிலை இவைகளுக்கு? பெரிய சர்வதேச பிரச்சனை இல்லை என்றாலும் அதை அந்த அளவிற்கு உயர்த்திவிட்ட மன விகாரங்கள்! காக்கப்பட வேண்டிய பெரிய அரச இரகசியமோ என்றால் அதுவும் இல்லை.  ஏதோ நாட்டையும், தம் இனத்தையும் காக்க வேண்டிப் போராட்டமா என்றால் அதுவும் இல்லை. எல்லாம் வழக்கமாக நடக்கும் பங்காளிச் சண்டை, வரப்புத் தகராறுதான் என்றாலும் இது ஒரு வம்சத்தையே வேரறுத்துவிட்டதே.  நம் வாழ்வாதாரத்தை முடித்துக்கட்டி விட்டு  இன்னும் நம் மூலம் கிடைக்கும் பலாபலன்களை அன்றாடம் சாப்பாட்டு மேசையில் அனுபவித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள் வெட்கங்கெட்டவர்கள்.

Thursday, March 13, 2014

’இப்படிக்கு நான்’ நூல் வெளியீடு


விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடமைப் போராளி, அமரர் எஸ்.பி.வெங்கடாசலம் அவர்களின் நினைவு நாளான நேற்று ஐயா அவர்களால் வாய் மொழியாகப் பதிவு செய்யப்பட்ட தகவல்களைக் கொண்டு நான் எழுத்து வடிவாகப் படைத்துள்ள நூல் ஈரோட்டில் முன்னாள் தமிழக அமைச்சர் உயர்திரு சு.முத்துசாமி அவர்களால் வெளியிடப்பட்டது.






நூல் அழகாக வடிவமைக்கப்பட்டு வெளிவந்திருப்பதில் மகிழ்ச்சி. புகைப்படங்கள் வந்து சேர்ந்தவுடன் பகிர்ந்துகொள்கிறேன் . நன்றி.

அன்புடன்
பவள சங்கரி

Friday, March 7, 2014

சுவடுகள் பதித்த சுடரொளிகள்!


பவள சங்கரி

தலையங்கம்

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஆண்கள், பெண்கள் என பாகுபாடின்றி  அனைவருக்கும், பேச்சுரிமை, தனி மனித சுதந்திரம், பாதுகாப்பான வாழ்க்கை என அனைத்தும் அனைவரும் பெறும்  உரிமை உள்ளது. ஆனால் இவையனைத்திற்குமாக நாம் நிர்ணயிக்கும் அளவுகோல் மட்டுமே நம் இந்தியப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கிறது.

பண்டைக்கால மகளிரின் ஒழுக்க நெறியினை நம் வேதங்கள் அழகாக எடுத்துரைக்கின்றன. வேத காலத்தில்  ஒரு ஆண் மட்டுமே குடும்பத் தலைவனாக இருந்திருக்கிறார். ஒரு குடும்பத்தில் ஆண் மகவு பிறப்பதையே பெரிதும் மகிழ்ந்து கொண்டாடியதோடு, அதற்கான பிரார்த்தனைகளையும் மேற்கொண்டனர். வேத காலத்தில் கல்வி என்று எடுத்துக்கொண்டால் பெண்களைப் பொறுத்த வரையில் ஆணுக்கு நிகரான கல்வி வழங்கப்படவில்லை. ஆனாலும் சமூக வாழ்க்கையில் ஆண், பெண் என இரு பாலரும் சம நிலையிலேயே இருந்திருக்கின்றனர். அதாவது ஆண்களைப் போன்றே பெண்களும் அனைத்து விதமான சுதந்திரமும் பெற்றிருக்கின்றனர். மெல்ல மெல்ல அவளே தெய்வ நிலைக்கும் உயர்த்தப்பட்டிருக்கிறாள்.  ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று அந்தக் காலத்தில் பெண்களின் திருமண வாழ்க்கையில் கட்டுப்பாடும், ஒழுக்க நெறியும் கடைபிடிக்கப்பட்டு வந்ததோடு, விவாகரத்து என்ற ஒரு கோட்பாடே இல்லாமலிருந்திருக்கிறது. 

Monday, March 3, 2014

பாரதியின் , THE FOX WITH THE GOLDEN TAIL சிறுகதை! (தொடர்ச்சி - 3)


பவள சங்கரி


”பொன் வால் நரி”யில் இந்தக் காலகட்டத்தில் மிகப் பிரும்மாண்டமான ஆன்மீக மோசடி என மிகச் சரியாகவே கணிக்கப்பட்ட ஒன்றை” என பாரதி குறிப்பிட்டிருப்பது ஜே. கிருஷ்ணமூர்த்தியை உலக குருவாக ஆக்குவதில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைக் குறிப்பதாகும். இந்த நடவடிக்கைகள் முற்கூறப்பட்ட ‘மஹாத்மாக்களின்’ வழிகாட்டுதலின் பேரிலேயே நிகழ்ந்தன. இந்து பத்திரிக்கையில் 1911 ஜனவரி 24-ல் டாக்டர் நஞ்சுண்டராவ் இந்த ‘மகாத்மாக்கள்’ பற்றிய பெசண்டின் பிரசாரத்தை வன்மையாக மறுத்து எழுதிய கடிதம் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து ஆதரவாகவும், எதிராகவும் பல மாதங்கள் ‘இந்து’வில் கடிதப்போர் நிகழ்ந்தது. 

‘பொன் வால் நரி’யின் உள்ளடக்கத்தோடு மிக நெருங்கியத் தொடர்புகொண்டது, தியாசபி மகாத்மாக்கள் பற்றிய விமர்சனமாகும். 

குதுமி, மோர்யா எனும் ‘மகாத்மாக்களைப்’ பற்றிய விவரங்கள் சார்லஸ் வெப்ஸ்டர் லெட்பீட்டரின், 'Tha masters and the paul' எனும் நூலில் உள்ளன. 

குதுமி, மோர்யா வீடுகள் திபேத்தில் ஒருமலைக் கண்வாயில் எதிரெதிரே உள்ளனவாம். இவர்களது தோற்றங்கள் லெட்பீட்டர் நூலில் பின்வருமாறு வருணிக்கப்பட்டுள்ளன.

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...