Saturday, November 5, 2011

முதிதை!

சுவாமி விவேகானந்தரின் முதிதை! [மொழி பெயர்ப்பு]

பவள சங்கரி

’முதிதை’ , என்பது நம்முடைய ஆழ்மனப்பதிவுகளை முற்றிலும் அழிக்கக் கூடிய விஞ்ஞானப்பூர்வமான மற்றும் திட்டவட்டமான ஒழுங்குமுறை! எதிர்மறை சக்திகளுக்கு நம்மை வெளிப்படுத்திக் கொள்வதன் மூலம் விரும்பத்தகாத எண்ணப்பதிவுகளை திரட்டுவது வெகு எளிது. ஆயினும் அதனை அழிப்பது எளிதான காரியம் அன்று. முதிதை – தியானம் என்பது தீய எண்ணப்பதிவுகளை களைந்தெடுத்து நல்ல எண்ணப்பதிவுகளை மட்டும் பதியச் செய்யும் முறைமை. அன்றாடம் முறையாக தியானப் பயிற்சி மேற்கொள்பவர்கள் அவ்வளவு எளிதாக எதிர்மறை உணர்வுகளால் ஆட்கொள்ளப்படுத்தப்பட மாட்டார்கள். அவர்களால் , தீமை விளைவிக்கக்கூடிய உணர்வுகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளும் பிரமாதமான மனோவலிமையை வளர்த்துக் கொள்ள இயலும்!

படத்திற்கு நன்றி

Friday, November 4, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(25)

பவள சங்கரி
” என்றும் மறவாதே……. நீண்ட காலம் நாம் பிரிந்திருக்க நேர்ந்தாலும் என்றும் மறவாதே…!” [ Chang mu sang yu ] – தலைவர் தேஜூன் பார்க் மற்றும் யாசௌகா” என்ற கட்டுரையில் தங்கள் இருவரின் உண்மையான நட்பைப் பற்றி தேஜூன் பார்க் சுவைபட எழுதியதை வாசித்துக் கொண்டிருந்தாள் அவந்திகா இரவு வெகு நேரம் உறக்கம் வராமல். “மாற்றம் என்ற நூலில், உண்மையான சிறந்த நட்பு பொன்னினும் உறுதியானதும் மற்றும் ஆர்க்கிட்டை விட அதிக மணம் பரப்பக் கூடியதுமாகும் என்பதாலேயே, அரிய அந்த உண்மையான நட்பை பொன்னும், ஆர்கிட்டும் [kumnan] போன்றதொரு நட்பு என்று வர்ணிக்கப்பட்டுள்ளது” என்ற அந்த வாசகத்தை படித்துக் கொண்டிருந்தவளுக்கு திடீரென மாறனின் நினைவு வந்தது. நல்ல நட்பின் இலக்கணமாக அவனுடைய பழக்க வழக்கங்கள் இருந்ததால்கூட இருக்கலாம், அவனைப் பற்றிய நினைவு வந்ததற்கு.
நல்ல நட்பைப் பற்றி எண்ணும் போது நல்ல நண்பர்களின் பிம்பங்கள் விழித்திரையில் தோன்றுவது இயல்புதானே. அந்த வகையில் மாறனைவிட நட்பிற்கு இலக்கணமாக இருக்கும் வேறொருவரைக் காண்பதும் அரிது என்று நினைத்த பொழுது, நல்ல நண்பரே வாழ்க்கைத் துணையாக தொடர்ந்து வருவதின் மன நிறைவையும் உள்ளம் நாடத்தான் செய்தது அவந்திகாவிற்கு. எப்படியும் விரைவில் இதுபற்றி மாறனிடம் பேச வேண்டும் என்றும் எண்ணியிருந்தாள்.
அன்று காலை தன்னை அலுவலகத்தில் இறக்கிவிட வந்தவன் வழக்கம்போல மெல்லிய புன்னகையுடன் நிறுத்திக் கொண்டான். ஏனோ இவனுக்கு மட்டும், அதுவும் தன்னிடம் மட்டும் இத்தனை வார்த்தை பஞ்சம் என்று எண்ணிக் கொண்டவள் இனியும் தாமதியாமல் தானே பேச்சை ஆரம்பித்து விடுவது என்றும் முடிவெடுத்தாள்.
” மாறன், மாலை வீட்டிற்குப் போனதும், என்ன செய்வீர்கள்”? [ தேவையில்லாமல் ஏதோ கேட்கிறேனோ?] என்ற குழப்பம் வார்த்தைகளில் தெரிய…….
ஏன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறாள், என்ற ஐயத்துடனே, “ ஏன், ஒன்றும் பெரிதாக இல்லை, சிலநாட்கள் ஜிம்மிற்கு செல்வேன். சில நாட்கள் மாலுக்கும், காய்கறி வாங்குவதற்கும் இந்தியன் ஸ்டோர்ஸ் செல்ல வேண்டியதும் இருக்கும்”…. இதெல்லாம் எதற்கு கேட்கிறாய் என்பது போன்ற பார்வையுடன், நெற்றியில் முடிச்சுவிழ உற்று நோக்கினான்.
“ இல்லை… சும்மாதான் கேட்டேன். … நேற்று என் அப்பா போன் செய்தார். ” என்று கூறி சற்றே நிறுத்தினாள். அவனிடம் ஏதும் பதில் கேள்வி வருமோ என்ற ஆவல் அவள் பார்வையில் தெரிந்தது. இதற்கு மேல் எப்படி வார்த்தைகளை வளர்த்துவது என்று புரியாத குழப்பமும் முகத்தில் தெரிந்தது. இருந்தாலும் இன்று எப்படியும் பேசிவிட வேண்டும் என்ற உறுதி மட்டும் இருந்தது.
மாறனோ எதையும் தெரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டாலும், அதன் காரணம் தெரியாமல் தலையே வெடித்து விடும் போன்ற நிலைமையில், நல்ல முடிவை நாடி அன்று பேச்சை ஆரம்பிக்கவும் செய்தாள்.
“ அப்பா என் திருமணம் பற்றி பேச்செடுத்தார். வழ்க்கம் போல மாப்பிள்ளைகளின் போட்டோக்கள் அனுப்புவதாகக் கூறினார்……… விரைவில் முடிவெடுக்க வேண்டுமாம்”
’இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறாய்’ என்பது போல ஒரு பார்வையை வீசினான்.
“ அப்பாவிடம் உங்களைப்பற்றி சொல்லலாம் என்று நினைத்திருக்கிறேன். கட்டாயம் அவர் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்” என்றாள்.
‘ என்னைப்பற்றியா…? என்னைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது. புரியும்படி பேசினால் பரவாயில்லை அவந்திகா” என்றான்.
இவன் உண்மையிலேயே புரியாமல் கேட்கிறானா அல்லது வேண்டுமென்றெ தன்னை பழி எடுக்கிறானோ என்பது புரியாமல் விழித்தாலும், எப்படியும் இன்று இவனிடம் பேச்சை ஆரம்பித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள். தூங்குவது போன்று நடிப்பவனை எழுப்புவது சற்று சிரமமான காரியம் தான் என்பதும் புரியாமல் இல்லை அவளுக்கு.
“ மாறன்….. நான் ஆரம்பத்தில் தங்களிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டேனோ… அந்த கோபம்தான் இன்று இப்படி கண்டும் காணாமல் இருப்பதற்கான காரணமோ…?”
“ என்ன ஆச்சு அவந்திகா இன்று உங்களுக்கு? என்னென்னவோ பேசுகிறீர்கள். ஒன்றுமே விளங்கவில்லையே….? “
“ம்ம்ம்…. மாறன் இன்னுமா புரியவில்லை. இதற்கு மேல் எப்படி சொல்லி விளங்க வைப்பது என்று தான் எனக்கும் புரியவில்லை. சரி நேரிடையாக மேட்டருக்கு வருகிறேன். அப்பாவிடம் உங்களைப்பற்றி எடுத்துச் சொல்லலாம் என்று இருக்கிறேன். நான் சொல்வதை அப்பா கட்டாயம் கன்சிடர் பண்ணுவார். நான் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டேன் என்பதிலும் நம்பிக்கை உண்டு அவருக்கு” என்று படபடவென தெளிவாக பேசி முடித்து அவன் பதிலுக்காகக் காத்திருப்பவள் போல அவன் முகத்தையும் அவன் வாயிலிருந்து வரப்போகும் வார்த்தைகளுக்காகவும் ஆவலாகக் காத்திருந்தாள்.
“ என்ன முடிவு? தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. என்ன சொல்ல வறீங்க….? கொஞ்சம் தெளிவாகச் சொன்னால் பரவாயில்லை” என்றான் நிதானமாக.
அடக்கடவுளே, இதைவிட ஒரு பெண் எப்படி தெளிவாக, தம் மனதில் அவன் மட்டும் இருக்கிறான் என்பதைக் கூற முடியும் என்பது விளங்காமல், விழிக்க ஆரம்பித்தாள். ஒரு வேளை காலம் கடந்து விட்டதோ என்றுகூட அச்சம் கொள்ள ஆரம்பித்தாள். முதல் முறையாக தான் உதாசீனப்படுத்தப்பட்டது போன்று உணர ஆரம்பித்தாள்.
மாறனுக்கும் இலை மறைவு காய் மறைவாக விசயம் புரிந்தாலும், தற்போது ஏதும் செய்ய இயலாத நிலையில் புரிந்து கொள்ளாதது போல இருப்பதே பாதுகாப்பாக இருப்பது போல உணர வாய் மூடி மௌனமானான். ஆனாலும் அவள் விடுவதாக இல்லை. அப்படி என்னதான் குழப்பம் அவன் மனதில் என்று அறிந்து கொள்ளும் ஆவலில் இருந்தாள் அவள்
அவந்திகாவிடம் இது பற்றி மேற்கொண்டு பேசும் எண்ணம் தனக்கு இல்லை என்பதை தன்னுடைய பொதுவான தட்பவெப்ப நிலை குறித்த பேச்சின் மூலம் விளங்க வைக்க முயற்சித்தான் அவன். குழப்பமும் , லேசான மன அதிர்வும் அவளை பாடாய்ப்படுத்த செய்வதறியாது வாய்மூடி மௌனமாக சிற்றுந்தை விட்டு இறங்கி தலை கவிழ்ந்து கண்கள் கலங்க, அனைத்தையும் மென்று முழுங்கி, அலுவலகம் நோக்கி நடந்தாள் ……. மனபாரம் தாங்காதவளாக……….
அனுவிற்கு பலவிதமான கற்பனைகள் அலைமோதின. ரம்யா பேச வேண்டும் என்று சொன்னதில் ஒரு அழுத்தம் இருந்தது புரிந்தது. அவளைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள். என்ன விசயமாக இருக்கும்…. மாறன் ஏதும் சொல்லி அனுப்பியிருக்கலாமோ அல்லது அவருக்கு ஏதும் பிரச்சனையாக இருக்குமோ என்று குழப்பமாகவும் இருந்தது. விசயம் முழுமையாகத் தெரியாமல் பெற்றோரையும் குழப்ப வேண்டாம் என்று முகத்திரை போட்டுக் கொண்டு பணிக்குச் செல்லத் தயாரானாள்.
செல்பேசி கிளிப்பேச்சுப் பேசி அழைக்க, இந்த நேரத்தில் யாராக இருக்கும், ஏற்கனவே நேரமாகிவிட்டதே என்று நினைத்துக் கொண்டே அதன் வாயைப் பொத்த, எதிர் முனையில், இனிய குரலில் காலை வணக்கம் கூறி பொழுது இனிமையாக மலர வாழ்த்தையும் தெரிவித்த ரம்யாவின் குரலை எளிதாகவே அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.
“ ஹலோ, அனு, உங்களை சந்திக்க வேண்டுமே. ஆபீஸ் கிளம்பிவிட்டீர்களா?”
“ ஆமா… சொல்லுங்க ரம்யா. எப்படி இருக்கீங்க ?”
“ ம்ம்…. நல்லா இருக்கேன். ஆபீஸ் கிளம்பும் நேரம் தொந்திரவு கொடுக்கிறேனோ?”
“ அதெல்லாம் இல்ல.. சொல்லுங்க. ஏதும் அவசரமா ரம்யா”
“ இல்ல உங்ககிட்ட கொஞ்சம் பேசனும். அதான் எங்கே,எப்போ சந்திக்கலாம்னு கேக்கத்தான் கூப்பிட்டே.ன்.’
“ ஓ அப்படியா. சரி. இன்று மதியம் நாம் லஞ்ச்சிற்கு ஆபீஸ் பக்கத்தில் இருக்கிற ரெஸ்டாரெண்ட் போகலாம் வாங்க ரம்யா…”
“ அதுவும் சரிதான். மதியம் நான் ஆபீஸிற்கு வரேன். சந்திக்கலாம். நீங்க இப்ப கிளம்புங்க அனு”
“ சரி. கட்டாயம், சந்திக்கலாம். பை ரம்யா”
ரம்யா அப்படி என்னதான் சொல்லப்போகிறாளோ என்று சற்று சிந்திக்கவும் தோன்றியது அவளுக்கு. எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தயாராகத்தான் இருந்தாள் அவள் மன உறுதியுடன்!

Sunday, October 30, 2011

வாழ்க்கை வாழ்வதற்கே!

மனித வாழ்க்கை கிடைத்தற்கரிய அரியதோர் வரம். இதனை எந்த அளவிற்கு நாம் உணர்ந்துள்ளோம் என்பது ஐயமாகவே உள்ளது. உலக பக்கவாத தினமான இன்று, பக்கவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான விழிப்புணர்வு பெறுவதற்கான அவசர தேவை ஏற்பட்டுள்ள தருணம் இது என்பதை உலக பக்கவாத அமைப்பு (WSO) தெரிவித்துள்ளது.

குடும்பம்,குழந்தைகள் எதிர்காலம், தொழில் என்று விரைவாக சுழன்று கொண்டிருக்கிற காலச்சக்கரம், இந்த 50 வயதில் தன் உடன் பிறப்புகளை அடிக்கடி சந்தித்து அளவளாவும் வாய்ப்பை வெகுவாகக் குறைத்து விட்டிருந்தது வையாபுரிக்கு. ஆம், தான் பிறந்து வளர்ந்த பசுமையான கிராமத்தை விட்டு, பிழைப்பைத் தேடி பட்டணம் வந்து சேர்ந்து கிட்டத்தட்ட இந்த 27 ஆண்டுகளில் தன்னுடைய வாழ்க்கைத்தரம் ஓரளவிற்கு உயர்ந்திருந்தாலும், நகர, நாகரீக வாழ்க்கை கற்றுக் கொடுத்த தீய பழக்கங்களான மதுவும், புகைப்பழக்கமும், தவிர்க்க முடியாமல் தொற்றிக் கொண்டதும் நிதர்சனமாகிப்போனது அவருக்கு. உடன் பிறந்த ஒரே தங்கையையும் அதே கிராம வாழ்க்கையில் இணைந்திருக்க, ஏதோ ஆடிக்கொரு முறை, அம்மாவாசைக்கொரு முறையே தன் தங்கையை காணக்கூடிய வாய்ப்பு அமைவதும் வாடிக்கையாகி விட்டது.

அன்றும் அப்படித்தான், ஒரு ஆண்டிற்குப் பிறகு தங்கையைக் காண வருவதாகத் தகவல் கொடுத்து விட்டு சென்ற மனிதர், பேருந்தை விட்டு இறங்கி புகை வண்டி, தண்டவாளப் பாதையைத் தாண்டிச் சென்றால் வெகு அருகிலேயே தங்கையின் இல்லம் இருப்பதால் நடந்து சென்றவர், அன்புத் தங்கை தனக்காக வழி மேல் விழிவைத்து தண்டவாளத்தின் மறுபுறம் காத்திருந்தவர் , சகோதரரைக் கண்ட ஆர்வத்தில், புகை வண்டி வருவதைக்கூட கவனியாமல், வேகமாக தண்டவாளத்தைக் கடக்க முயல….. அந்தோ… பரிதாபம். வெகு விரைவாக வந்த புகை வண்டியில் அடிபட்டு உடல் இரண்டாக சிதறியதைக் கண் முன்னால் கண்ட சகோதரர் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனவர், மயங்கிச் சரிந்தார். மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டவருக்கு பக்கவாதம் வந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்தனர். உடலின் வலது புறம் முழுவதுமாக செயலிழந்த நிலையில் வாய் பேச்சும் தடைபட்டு, தொழிலும் முடங்க…. பல மாதங்கள் வரை படுக்கையில் இருக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

ஒவ்வொரு ஆறு வினாடிக்கும் ஒருவர் இந்த பக்கவாத நோயினால் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மற்றெந்த நோயைவிடவும் இந்த பக்கவாத நோய் அதிகளவிலான உயிர் இழப்பை ஏற்படுத்துகிறது. வருடத்திற்கு சுமார் ஆறு மில்லியன் மக்கள் இந்த பக்கவாதத்தினால் உயிரிழக்கின்றனர். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, புகைப்பழக்கம் உள்ளிட்ட காரணங்களே பக்கவாத நோய் ஏற்பட வழிவகுக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அக்டோபர் 29 ஆம் தேதி உலக பக்கவாத தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருமுன் காப்பதே புத்திசாலித்தனம் அல்லவா. அந்த வகையில் மருத்துவர்கள் கூறும் பக்கவாதத்திற்கு எதிரான ஆறு முக்கிய சவால்கள் :

1) விழிப்புணர்வு கொள்ள வேண்டிய சில முக்கிய விசயங்கள் : உயர் இரத்த அழுத்தம், சக்கரை மற்றும் இரத்தத்தின் கொழுப்புச் சத்தின் அதிகளவு ஆகியன.

2) எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும், அன்றாட உடற்பயிற்சி பழக்கம்

3) உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு கொள்வதன் மூலம், உடல் எடை அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

4) கட்டுப்பாடான மதுப்பழக்கம்.

5) புகைப்பிடிக்கும் வழக்கத்தை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.

6) பக்கவாத நோயின் அறிகுறிகள் குறித்த முன்னெச்சரிக்கையின் விழிப்புணர்வு மிக அவசியமானதாகும்.

இந்தியாவில் இந்நோய் அண்மைகாலமாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே தாக்கி வந்த இந்த பக்கவாத நோய் . அண்மைக்காலமாக 20 லிருந்து 30 வயதிற்குட்பட்டவர்களை அதிகமாக தாக்கத்தொடங்கியுள்ளது. இந்நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில், ஒரு லட்சம் பேரில், தோராயமாக 130 முதல் 225 பேருக்கு இந்நோய் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இந்தியாவில் மட்டுமே ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனித மூளையின் ஒரு பகுதி செயலிழப்பதால், பக்கவாதம் ஏற்படுகிறது. இதனால், உடலின் ஒரு பகுதி செயல் இழந்து, உடல் உறுப்புகள் இயங்காமல் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பேச முடியாமலும் போகிறது. இதற்கு உரிய சிகிச்சை முறைகள் இருக்கின்றன. அதனை குறித்த நேரத்தில் சரியாக மேற்கொண்டால் விரைவாக இதிலிருந்து மீண்டு வரவும் வாய்ப்புள்ளது.

தினசரி மூன்று கதலி வாழைப்பழங்களை சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம் ஏற்படுவதைத் தவிர்‌‌க்க முடியும் என்று ஆய்வுகள் மூலம் பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. காலை உணவுக்குப் பின் ஒன்றும், பகல் உணவுக்குப் பின் ஒன்றும் பின்னர் மாலை வேளையில் ஒன்றுமாகச் சாப்படுவது மூலம் உடலுக்குத் தேவையான பொட்டாசியத்தை பெற முடிகின்றது என்கின்றனர். அதன்மூலம் மூளையில் இரத்தக் கட்டுக்கள் ஏற்படுவது 21 ‌விழு‌க்காடு தடுக்கப்படுகின்றதாம்.

பசளிக் கீரை, விதைவகைகள், பால், மீன், பருப்பு வகைகள் போன்ற பொட்டாசிய உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமும் பக்கவாதம் நோயைத் தடுக்க இயலும் என்றும் கூறப்படுகிறது.

தினசரி உணவில் 1600 மில்லி கிராம் பொட்டாசியத்தைச் சேர்த்துக் கொண்டாலே போதுமானது என்றும் அமெரிக்க இதய நோய்கள் பற்றிய குறிப்பேடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. வாழைப்பழத்தில் சராசரியாக 500 மில்லி கிராம் பொட்டாசியம் அடங்கியுள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீர்படுத்தி உடலின் நீர்த்தன்மை சமநிலையையும் பேணுகின்றது எ‌ன்றும் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

நல்ல ஆரோக்கியமான பழக்க, வழக்கமும் , நோய் குறித்த முழுமையான விழிப்புணர்வு இவைகளே இந்த உயிர்க்கொல்லி நோயிலிருந்து நம்மைக் காக்கவல்லது என்பதே நிதர்சனம்.

படத்திற்கு நன்றி

Saturday, October 22, 2011

மரப்பாவை

பவள சங்கரி

காலையிலிருந்து என்ன ஆயிற்று இன்று மரகதவல்லிக்கு ? நிற்காத விக்கல். தண்ணீர் குடித்தும் அடங்காத தொடர் விக்கல். யாராவது விடாமல் நினைத்துக் கொண்டிருந்தால் அப்படி நிற்காமல் விக்கல் வருமாமே? யார் நினைப்பார்கள் இந்த நேரத்தில். மகள் அலுவலகத்தில் முழு முனைப்பாக பணியில் இருப்பாள், அதனால் நினைக்கும் வாய்ப்பு குறைவு. கணவர் சொல்லவே வேண்டாம், டென்சன் பார்ட்டி. அலுவலகம் சென்றால் அதிலேயே மூழ்கிவிடும் ஒழுக்கமான பணிக்காரர். தோழி ரமாவாக இருக்குமோ…… இல்லை அவள் மகன் வீட்டிற்கு அமெரிக்கா சென்றிருக்கிறாள். இப்போது ஆனந்தமாக உறங்கும் நேரம்! அருமை அம்மாவிடமும் மணிக்கணக்காக ஊர் நியாயம் அனைத்தும் பேசி முடித்து விட்டதால் அதற்கும் வாய்ப்பு இல்லை… வாடிக்கையாக வருகிற கீரைக்காரம்மாவாக இருக்குமோ, நேரமாகிவிட்டதென்று சென்று விட்டு வீட்டில் சென்று நாளை வந்தால் பேச்சு வாங்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டிருக்கிறதோ?

விக்கலினூடே, விருந்தும், விருப்பமான தொலைக்காட்சித் தொடரும் என பொழுது கழிந்து கொண்டிருந்தாலும், இன்னவென்று சொல்ல முடியாத ஒரு உறுத்தல் உள்ளத்தில்….. திடீரென ஏதோ ஒரு வித்தியாசமான மணம் தன்னைச் சூழ்ந்துள்ளது போன்ற உணர்வு. ரோசா மலரில் பன்னீர் தெளித்தது போன்று ஒரு வித்தியாசமான மணம். ரோசாவிற்கேயுரிய அந்த இதமான நறுமணமாக இல்லாமல் நாசியை உறுத்துகிற ஒரு வித்தியாசமான மணம்.

தொலைக்காட்சித் தொடரில் நாயகியின் பால்யகால நினைவலைகளைக் காட்டும் நிகழ்வுகளில் திடீரென ஏனோ பொறிதட்டியது போல ஒரு மின்னல் வந்து மறைந்தது. பள்ளி இறுதி வகுப்பு படித்துக் கொண்டிருந்த பருவம். பட்டாம்பூச்சியாய் சிறகடித்துப் பறந்த காலம். தில்லியில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். கோடை விடுமுறையில் கிராமத்து அத்தை வீட்டிற்குச் செல்லும் வழமை பல ஆண்டுகளாக இருந்தது. சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து உத்திரமேரூர் செல்வது வழக்கம்.

இயந்திரத்தனமான நகர வாழ்க்கையை விட்டு சுகமான சுவாசத்திற்கு இதமான தென்றலும், பசுமையான வயலும், ஏரிக்கரையின் குளிர்ந்த காற்றும், சுவர்க்க பூமியாக இருக்கும் அனைவருக்கும். கபடம் இல்லாத நல்ல மனிதர்களின் அன்பும், பண்பும் மேலும் இன்பம் சேர்க்கும் இனிய பொழுதுகள் அவை. இன்று நினைத்தாலும் உள்ளம் பரவசம் ஆகும். இன்றைய குழந்தைகள் பாவம் இழப்பது எத்தனை எத்தனை இன்பங்கள் என்று எண்ணி ஏக்கமாகவும் இருக்கும். அத்தையின் பாரம்பரிய திண்ணை வீட்டில், ஒவ்வொரு நேரமும் ஒரு விடுதி நடத்துவது போல உணவு பரிமாற வேண்டும், நாங்கள் அனைவரும் ஒருசேரச் செல்லும் அந்த கோடை விடுமுறைக்காலங்களில். பெரும்பாலும் இரவு நேரங்களில் அன்றாடம் பின் முற்றத்துப் பரந்த வாசலில்

அனைவரையும் ஒன்றாக உட்கார வைத்து நிலாச்சோறு போடுவார்கள் நெஞ்சை விட்டு என்றென்றும் அகலாத இன்பச் சுவை அது! ஒரு பெரிய அகன்ற பாத்திரத்தில் சாதம் போட்டு அதில் சாம்பார் விட்டு, மணக்க, மணக்க புத்தம் புதிதாக காய்ச்சிய நெய்யும் விட்டு, தோட்டத்தில் புதிதாக பறித்துக் கொண்டு வந்த பிஞ்சுக் கத்ததிக்காய் வதக்கலோ அல்லது மொட்டுக் காளான் மசாலோ ஏதோ ஒன்று இருக்கும்! அத்தை கையில் உண்ட அந்த அமிர்தத்திற்கு இணையாக இன்று எந்த நட்சத்திர விடுதியோ, தட்டி விலாசோ எதுவும் நிற்க முடியாது. பெரிய உருண்டைகளாக உருட்டி,கைகளில் போடுவார். உடன் செவிக்குணவாக புராணக் கதைகளும் இருக்கும். அத்தை கம்பராமாயணம் சொல்வதில் வல்லவர்.

‘அண்ணலும் நோக்கினாள்……… அவளும் நோக்கினாள்’ என்று அழகாக ஏற்ற, இறக்கத்துடன் அத்தை கதை சொல்வதைக் கேட்கும் போது இன்னும் இரண்டு கவளம் அன்னம் சேர்ந்து உள்ளே போகும். பகல் பொழுதுகளில் தோட்டத்தில் சென்று புளிய மரத்தின் இடையே, ஊஞ்சல் கட்டி சலிக்க,சலிக்க ஆடுவது, வரப்பு நீரில் ஆன மட்டும் குதிப்பது, தோட்டத்தைத் சுற்றி கண்ணாமூச்சி ஆட்டம் என்று இப்படி எத்தனையோ பொழுது போக்குகள். அதிலும் அத்தனைப் பேரிலும் மரகதவல்லிக்கு மட்டும் தனி செல்லம் எல்லோரிடமும். அது அவளுடைய நகர வாழ்க்கை கொடுத்த நுனி நாக்கு ஆங்கிலமும், பகட்டாக, நாகரீகமாக உடை உடுத்தும் பாங்கோ அன்றி, அவளுடைய கலகலப்பாகப் பழகும் தன்மையோ, ஒடிசலான, எலுமிச்சை நிற தேகமோ, எதுவோ ஒன்று அனைவரையும் எளிதில் அவள்பால் கவர்ந்து விடுவதும் நிதர்சனம்.

தெருவில் இறங்கி நடந்தாளானால் அத்துனை கண்களும் அவள் மீதுதான் இருக்கும். தனக்கும் மரகதவல்லி தெரிந்தவள்தான் என்று காண்பித்துக் கொள்வதில் அத்துனை பேருக்கும் அவ்வளவு பெருமையாக இருக்கும்.தெருவில் பார்க்கும் அத்தனை பேருடனும் புன்னகையுடனும், நட்புடனும் பழகுவதில் அவளுக்கு நிகர் அவள் மட்டுமாகத்தான் இருக்க முடியும். எல்லோரையும் சொந்தமாக நினைக்கும் குணம். அத்தை மகன், வண்ணநிலவனுக்கும் மரகதவல்லி மீது ஒரு கண் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். வார்த்தைக்கு வார்த்தை ‘சிட்டு’ என்று செல்லமாக கூப்பிட்டுக் கொண்டேயிருப்பான். தெருவில் விடலைகள் பார்வை பட்டால் கூட கொதித்தெழும் நாயக பாவம் அதிகம் காட்டுபவன், எல்லோரிடமும் ஆண்,பெண் என்ற பாகுபாடில்லாமல் சகஜமாகப்பழகும் மரகதவல்லியை உரிமையுடன் கோபித்துக் கொள்ளவும் தயங்க மாட்டான்.

பெரியப்பாவின் மகள் பூவிழிக்கு மாமன் மீது ஒரு கண் என்பது எல்லோருக்கும் தெரியும். தின்பண்டங்களின் தனக்கான பங்கின் ஒரு பகுதியையும் தாராளமாகத் தன் மாமனுக்குக் கொடுத்து விடுவாள். மாமனின் ஒரு பார்வைக்காகத் தவம் இருப்பவள். இதையெல்லாம் மற்ற வாண்டுகளும் ஓரளவிற்கு புரிந்து கொண்டாலும் கண்டும் காணாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் மரகதவல்லி மட்டும் அடிக்கடி அவர்கள் இருவரையும் சீண்டிக் கொண்டே இருப்பாள். ஆனால் வண்ணநிலவனோ எதையும் மனம்விட்டு சட்டென்று பேசும் வழக்கமற்றவன். அதனாலேயே பல நேரங்களில் தந்தையிடம் வசவு வாங்கிக் கட்டிக் கொள்வான்.

காலங்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன. பள்ளி முடித்து கல்லூரி வந்தவுடன் அனைத்தும் மாறிவிட ஆரம்பித்திருந்தன. அரசல் புரசலாக வீட்டில் ஏதோ அடிக்கடி அம்மாவிற்கும் அப்பாவிற்கும் தன்னைப்பற்றி வாக்குவாதங்கள் நடந்து கொண்டிருந்தது மட்டும் உணர முடிந்தாலும் அதில் அதிகமாக தலையிட்டு அறிந்து கொள்ளும் ஆர்வமெல்லாம் இருந்ததில்லை அவளுக்கு. தன் கல்வியில் முழு கவனம் செலுத்த வேண்டுமென்பது மட்டும் தந்தையின் கட்டாய ஆர்வமாக இருந்தது. அவளுக்கும் கல்லூரி வாழ்க்கை என்ற மாய உலகினுள் நுழைந்தவுடன், பழைய நினைவுகள் மாறி புதிய நண்பர்கள், புதிய வழக்கங்கள் என்று நிறைய மாறியிருந்தன. பூவிழியை வண்ணநிலவன் திருமணம் செய்து கொள்ளும் நாள் மட்டும் விரைவில் வரும் என்று எதிர்பார்த்தவள் , ஓரிரு ஆண்டுகளில் பூவிழிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம்செய்த காரணமும் புரியவில்லை. அதை நேரிடையாக எவரிடமும் கேட்கும் தைரியமும் வரவில்லை அவளுக்கு!

ஆனால் அந்தத் திருமணத்தில் அவ்வளவாக நிறைவிருந்ததாகத் தெரியவில்லை பூவிழிக்கு. கடனே என்று எந்த மகிழ்ச்சியுமின்றி இயந்திரமாக இயங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. ஏனோ தன்னிடமும் அவள் சரியாக முகம் கொடுத்துப் பேசாததும் ஆச்சரியமாகவே இருந்தது. அதற்குப் பிறகு குடும்பத்தில் நடந்த பல நல்ல காரியங்களுக்குத் தன்னால் கலந்து கொள்ள இயலாமல் போனது மரகதவல்லியின் குடும்ப உறவுகளின் நெருக்கத்தில் சிறு தொய்வும் ஏற்பட்டுப் போனது. படிப்பு முடிந்து, தந்தை காட்டிய மணமகனுக்குக் கழுத்தை நீட்டியது, திரும்பவும் அதே தில்லியில் பெற்றோரின் அருகண்மையிலேயே குடித்தனம் அமைந்தது அனைத்துமே தானாக நடந்து கொண்டிருந்தது. ஒரு பெண் குழந்தை பெற்று, அதனைக் கண்ணுங்கருத்துமாக வளர்ப்பது , மாமனார், மாமியார், மற்ற குடும்ப உறவுகள் என்று வாழ்க்கையின் பலவிதமான பொறுப்புகளின் அழுத்தம் தன் தாய் வீட்டுச் சொந்தங்களின் நினைவுகளை மழுங்கடித்ததும் நிசம். அத்தை குடும்பமும் தங்களிடமிருந்து சற்று விலகியிருப்பதாகவேப்பட்டது அவளுக்கு. தன்னைக் கண்டவுடன் அள்ளி அணைத்துக் கொள்ளும் அத்தை ஒரேயடியாக விலகியது சற்று மன வருத்தமாக இருந்தாலும் காரணம் புரியாமலும்,தன் குடும்ப பொறுப்புகளின் அழுத்தத்தினாலும் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் மறக்க வேண்டிய சூழலுக்கும் வந்துவிட்டாள்.

ஆனால் இதெல்லாம் இன்று ஏன் தேவையில்லாமல் நினைவிற்கு வருகிறது என்று மட்டும் அவளுக்குப் புரியவே இல்லை. எந்த வேலை செய்தாலும் மனம் எதிலோ கட்டுண்டது போன்று ஒரு இறுக்கத்துடனே இருந்தது…… அத்தோடு வித்தியாசமான அந்த மணம் வேறு மிகவும் சங்கடப்படுத்தியது அவளை. எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக இரவில் நிம்மதியான உறக்கமும் இல்லாமல், ஏதோ அரை மயக்க நிலையில் இருக்கும் வேளையில் யாரோ தட்டி எழுப்பியது போல விலுக்கென்று விழிக்கவும், விருட்டென்று யாரோ நான் போகிறேன் என்று சொல்லிக் கொண்டே மின்னலாக மறைவதும் தெரிய……. அதிர்ச்சியில் வியர்த்துக் கொட்ட….. தொலைபேசி அழைப்பு மணி சிணுங்க, படபடவென இதயம் துடிக்க, மெல்ல எழுந்து மின் விளக்கை ஏற்றியவள், தொலை பேசியை எடுத்து ஹலோ என்பதற்குள் இதயம் பலவாறு படபடத்ததை தாங்க இயலவில்லைதான்! தொலைபேசியில் வந்த செய்தியோ மேலும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. ஆம் வண்ணநிலவனுக்கு மாரடைப்பாம், இரண்டு நாட்களாக கோமாவில் இருந்தவன், இன்று அதிகாலை இறந்து விட்டானாம்………

பொழுது விடியக் காத்திருந்தவள் கணவனுடன் கிளம்பி தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தது கூட தெரியாமல் ஏதோ விளங்காத மன நிலையுடனேயே வந்து கொண்டிருந்தாள். டாக்சியில் ஏறி உத்திரமேரூர் வந்து சேர்ந்த போது, பழைய நினைவுகள் மெல்ல வர ஆரம்பித்தாலும், அங்கு வந்தபோது தான் தெரிந்தது இரண்டு நாட்களாகத் தன்னுடனேயே இருந்த அந்த மணத்தின் நெடி வந்த வழியும் புரிந்தது.. ஆம் அதே நெடி, பன்னீர், ஊதுவத்தி, ரோசா அனைத்தும் இணைந்த ஒரு விதமான நெடி! தலை சுற்ற ஆரம்பித்தது அவளுக்கு. உள்ளே நுழைந்தவுடன் அத்தை , பாவி வந்துவிட்டாயா என்று தலையில் அடித்துக் கொண்டு ‘ஓ’வென்று கதறியது மேலும் சங்கடப்படுத்த, மரகதவல்லியின் அம்மாவும், அவளை இங்கு இவள் ஏன் வந்தாள் என்பது போல் பார்க்க, மேலும் குழப்பம் அதிகமானது.

சடங்குகள் , சம்பிரதாயங்கள் என்று நிறைய இருந்தாலும், திருமணமே ஆகாத ஒரு பிரம்மச்சாரிக்கு சடங்குகள் அதிகம் செய்வதில்லை. குழப்பம் மட்டும் தீராவிட்டாலும், என்னவோ தெளிவாக ஆரம்பித்தது. அம்மா வேறு அத்தையை நெருங்கக் கூட முடியாமல் ஒதுங்கியே இருந்ததும் புரிந்தது. இவையனைத்திற்கும் விடை சில நிமிடங்களில் வண்ணநிலவனின் உயிரற்ற உடலைக் குளிப்பாட்டி மேல் சட்டையை எடுத்து சந்தனம் பூச முயற்சித்த போது விளங்கிவிட்டது. ஆம், திரும்பி அந்தப் பக்கம் செல்லலாம் என்று நகரப்போனவளின் கண்களில் ‘சிட்டு’ என்று இதயத்தின் வெகு அருகில் பச்சைக் குத்தி வைத்திருப்பது பளிச்சென்று பட, நொடிப்பொழுதில் நடந்ததனைத்தும் விளங்கிப்போக, காலம் கடந்த ஞானம் பயனற்றுப் போக…….

தீடீரென மாமா’, என்று ஓவென அலறியதன் காரணம் புரியாமல் வந்திருந்த உறவினர்கள் விழிக்க, மரகதவல்லி பார்த்த ஒரு பார்வையில், கூனிக்குறுகிப்போய் தலையைக் குனிந்து கொண்டாள் மரகதவல்லியின் தாய். அத்தையின் மடியில் தலை வைத்து கவிழ்ந்து முட்டிக் கொள்ள மட்டுமே முடிந்தது அவளால். ’மகனைத் தின்னாச்சு…… தண்ணியைக் குடிச்சு முழுங்கு’, என்று யாரோ அத்தைக்குத் தண்ணீரைக் கொடுத்து குடிக்கச் சொன்னது காதில் விழ, மேலே விழுந்த தண்ணீர்த் துளி நிகழ்கால நினைவைத் திருப்பித்தர, மெல்ல எழுந்தாள்……

வண்ணநிலவனின் இறுதி யாத்திரை உறவுகளின் ஓலங்களினூடே அமைதியாகக் கிளம்பி விட்டது. மரத்துப்போன உணர்வுகளின் நீட்சியாய் துவண்டு போய் கணகள் பார்வையை மறைக்க செய்வதறியாது சுயநினைவின்றி கலங்கி நின்றிருந்தாள். பெண்ணுக்கென்று தனிப்பட்ட உணர்வோ, விருப்பமோ எதையுமே அனுமதிக்காத கட்டுப்பாட்டுக் கலாச்சாரத்தில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறாள். சமுதாய வரம்புகள் என்ற பெயரில் ,சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் பல பெண்களின் நியாயமான உணர்வுகளும் கூட சூறையாடப்படுவதும் இயல்பாகத்தானே நடந்து கொண்டிருக்கிறது இந்த சமுதாயத்தில்!

அந்த மட்டும் அவனுடைய ஆத்மா அமைதியான உலகில் , இனிமையாகப் பயணிக்கட்டும் என்று மனதார வேண்டிக் கொண்டாள் மரகதவல்லி தன் விருப்பக் கடவுளிடம்.

இதைப்பற்றிய எந்தச் சிந்தையுமே இல்லாத மரகதவல்லியின் கணவனோ, உடனடியாக ஊருக்குக் கிளம்ப வேண்டும் என்று சாடையில் பேசிக் கொண்டிருந்தான். உடனே திரும்பிப் போகவும் பயணச் சீட்டுடன் வந்ததால், விமானத்திற்கு நேரமாகி விட்டதை உணர்ந்தவள் மனக்குமுறலை வெளியே காட்டக்கூட திராணியற்றவளாக மனதில் அடக்கி வைத்துக் கொண்டு மரக்கட்டையாக புன்னகை முகமூடியையும் தரித்துக் கொண்டு கிளம்பத்தயாரானாள்!

படத்திற்கு நன்றி

Tuesday, October 18, 2011

வாழ்க்கை ஓடம்!

அலையினூடே உயர்ந்து தாழ்ந்து வாழ்க்கை ஓடமாய்
உயர்வை நோக்கி உன்னத கீதமாய் ஒலியூட்டி
தாழ்வின் நீட்சியிலும் நித்சலமான நீரோட்டமாய்.......
மால்வண்ணனின் அருள் பனித்துளியாய் பட்டொளி வீச
கார்முகில் களிநடம் புரியும் கனன்ற பொழுதுகளிலும்
பால்வண்ண நிலவொளியின் இலையுதிர் பருவமதில்
புள்ளினக் கூட்டமொன்று புதுமலர் காண மனம்நாடி
கருத்தாய் கதைப்பல பேசி நாடுவிட்டு காடுதேடி
வகையாய் வண்ணம் கண்டு குதூகலம் கொண்டு
இன்பமாய் இனிமையாய் இலக்கியமாய் இதமாய் ..............

வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (24)


பவள சங்கரி
பொதுவாக காதலில் ஏமாற்றப்பட்டவர்களைவிட, ஏமாற்றியவர்களுக்கே, வலியும், வேதனையும் அதிகம். காரணம் நியாமானதாக இருப்பினும், ஏமாற்றம் என்பதின் நிறம் ஒன்றுதானே. அந்த வகையில் நொந்து போன ஒரு ஆத்மாவிற்கு வாழ்வு கொடுப்பது தியாகம் என்றால், நம்பிக்கையும், உயிரும் ஒரு சேர வைத்திருக்கும் ஒரு உன்னதமான இதயத்தை நோகச் செய்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லையே. காலம் கடந்த யோசனையால், நிம்மதி குலைந்து போனதும் தவிர்க்க முடியாமல் மேலும் குழப்பத்தில் ஆழ்ந்தான் ரிஷி. ரம்யாவை சந்திக்காமலே இருந்தால் தேவலாம் போல் இருந்தது அவனுக்கு. குற்ற உணர்ச்சியில் குமைந்து கொண்டிருந்தான் அவன். வந்தனாவின் நினைவு வர மருத்துவமனைக்குக் கிளம்பத் தயாரானான். வந்தனாவின் துவண்ட முகம் நினைவில் ஆட, பரபரவென பழைய எண்ணங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு கிளம்பத் தயாரானான். வந்தனா மருத்துவமனையில் இருப்பதை ரம்யாவிடம் சொல்லி அவளையும் வேதனைப்படச் செய்ய வேண்டாமே என்ற எண்ணத்தில் அவளிடம் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் அதிக நாட்கள் அதை மறைக்கவும் முடியாது என்பதும் தெரிந்துதான் வைத்திருந்தான் ரிஷி.
அவந்திகா துலிப் மலர்களின் அழகில் தன்னையே பறி கொடுத்தாலும், அத்துனை அழகையும் தன் தூரிகையின் நாட்டியம் மூலம் வண்ண ஓவியமாக்கினாள். உள்ளத்தின் உற்சாகத் துள்ளல் அவளுடைய படைப்புகளிலும் பிரதிபலிப்பதும் இயற்கைதானே…. ஏனோ மாறனின் விட்டேத்தியான போக்கு அவளுடைய உற்சாகத்திற்கு அவ்வப்போது ஒரு சிறு தடைக்கல்லை உருட்டிவிட்டுக் கொண்டிருந்தது. அதையும் மீறி தன்னுடைய உற்சாகம், வேலியில்லாத காற்றைப் போன்று கரை புரண்டு உரசிக் கொண்டுதானிருந்தது. மாறனின் மீது செல்லக் கோபமும் அதிகமானது, என்ன ஆணவம் இந்த மனிதருக்கு என்று. துரத்தி,துரத்தி வந்த காலம் போய், இன்று வலிய செல்லும் போது விலகி, விலகி விருப்பமின்மையை வெளிப்படுத்தினாலும், காரணம் மட்டும் புரியவில்லை அவந்திகாவிற்கு. இந்த சமயம் பார்த்து ரம்யா இல்லையே என்று வருத்தமாக இருந்தது. யதார்த்தமாக பேசக்கூடியவளாதலால் அவளிடம் மாறனின் இந்தப் போக்கிற்கான காரணம் கேட்பதில் சிரமம் இருக்காது. எப்படியோ ரம்யா வருவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கிறதே. அதுவரை காத்திருக்க வேண்டுமே என்று மலைப்பாகவும் இருந்தது அவளுக்கு. இந்த இயந்திர வாழ்க்கை ஏனோ திடீரென சுமையாகத் தெரிந்தது.
ரம்யாவிற்கு வந்தனாவை நேரில் சென்று பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஊருக்குச் செல்வதற்கு முன் ஒரு முறை வந்தனாவை அவசியம் சந்திக்க வேண்டுமென நினைத்துக் கொண்டாள். உலகம் எவ்வளவு குறுகிய எல்லைக்குள் இருக்கிறது என்பது பல நேரங்களில் சில ஆச்சரியங்கள் மூலம் நிரூபணம் ஆகும்.
மகாபாரதப் போரின்போது பார்த்தனின் சாரதி வடிவில் அற்புதக் காட்சியளிப்பவர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி ஆலயத்தின் வேங்கடக் கிருட்டிணர். சென்னையில் மிகப்பழமை வாய்ந்ததும், மிக அழகான, புராதன வடிவான சிற்பங்களும், காண்போரின் கண்களையும்,அவர்தம் கருத்தையும் கவரக் கூடியதுமாகும் இந்த 1000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட திருக்கோவில். அரசன் தொண்டைமான் சுமத்திக்கு பார்த்தசாரதியாக காட்சியளிப்பதாக அளித்த வாக்கை நிறைவேற்றும் பொருட்டு, அவருக்கு திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதியாகவே காட்சியளித்த பெருமானை, அகத்திய மாமுனி சிலையாக நிறுவியதாகப் புராணங்கள் சொல்லும். இந்த ஆலயம் இன்னொரு தாய் வீடு எனலாம் அனுவிற்கு! சனிக்கிழமை தோறும் வேங்கடவனை தரிசனம் செய்வதைத் தம்முடைய பல்லாண்டுகால வழக்கமாகக் கொண்டிருப்பவள்.மிக வித்தியாசமான மீசை உள்ள வேங்கடவனை தரிசிப்பதில் அத்துனை இன்பம் அவளுக்கு. அன்று சனிக்கிழமையாதலால் , தரிசனம் பெற வேண்டி மாலை அந்திக்கால பூசையைக் காண வந்திருந்தாள் .
இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் நற்புவி தனக்கு இறைவன்
தன்துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றையோர்க் கெல்லாம்
வன்துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று இயங்கும்
என்துணை எந்தை தந்தை தம்மானை திருவல்லிக் கேணி கண்டேனே
என்ற திருமங்கையழ்வாரின், அழகிய பாசுரத்தை இனிமையாக இசைத்தபடி மெய்மறந்து கண்கள் மூடி நிற்பதில் அத்தனை சுகம் அவளுக்கு!
கோவிலைச் சுற்றியுள்ள தெப்பக் குளத்தில் அல்லி மலர்ந்து கண்களில் தண்ணொளி பரவச் செய்து கொண்டிருப்பதைப் ஆனந்தமாக ரசித்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான், முதுகில் யாரோ செல்லமாகத் தட்டுவது உணர்ந்து மெலிதான சிலிர்ப்புடன் சட்டெனத் திரும்பியவள், அங்கு, அறிந்த இரண்டு முகங்களுடன், அறியாத ஒரு புது முகமும் கண்டு ஆச்சரியமாக கண்கள் அகல பார்த்துக் கொண்டிருந்தாள். ரம்யாவின் அம்மா, அனுவைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தாலும், திரும்பவும் அனுவை முதன் முதலில் சந்தித்த அந்த இக்கட்டானச் சூழலை நினைத்துக் கொண்டவராக, திரும்பவும் அது பற்றி சொல்ல ஆரம்பித்த போது அனுவும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள் பதிலாக.
ஆனால் இவை எதுவும் காதுகளில் விழாதவளாக, இந்த முகத்தை எங்கோ வெகு அருகில் நெருக்கமாகச் சந்தித்திருக்கிறோமே என்ற குழப்பத்தில் மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தாள் ரம்யா…….
‘ ஆகா, கண்டுபிடித்து விட்டேன்…. இந்த முகத்தைக் கணினியில், மாறன் அனுப்பிய மடலில் வெகு அருகில் கண்டிருக்கிறேனே… அட அந்த அனுவா இவள்……என்ன ஆச்சரியம். யாரைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாளோ, கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்தது போன்று, வந்து நிற்கிறாளே! சரி ஏதோ நல்லதும் நடக்கப் போகிறது…’
மனதில் தோன்றிய பிரகாசம் மின்னலாக கண்களிலும் வெளிப்பட்டதோ என்னவோ, அதன் பளபளப்பைக் கண்டு தன் கண்களும் கூச, சட்டென்று பார்வையைத் தாழ்த்தியவள், எதிரில் நிற்பவள் யாராக இருக்கும், இப்படித் தன்னை உற்று நோக்குகிறாளே என்ற எண்ணத்துடன் ஒரு வித குறுகுறுப்புடன், திரும்பவும் தலையைத் தூக்கி ஏறிட்டாள். மௌனம் பல மொழிகள் பேசி விட்டன அந்த நொடிப் பொழுதுகளில்!
ஆம், அனுவிற்கும் ரம்யாவின் பார்வை மூலம் ஏதோ தன்னை நன்கு உணர்ந்தவள் எதிரில் நிற்பதாக உள்ளுணர்வு உணர்த்தினாலும், ‘ யார் இவள், தான் முன் பின், கண்டிராத இந்த நவீன மங்கை…… ஓ இந்த அம்மாவின் மகளாக இருப்பாளோ…. பெயர் கூட என்னவோ சொன்னாரே… அமெரிக்காவில் இருப்பதகாச் சொன்னாரே, அவளாக இருக்குமோ’?
“ ஹலோ, ஐயாம், ரம்யா. யூ ஆர் அனு… ரைட்?” என்று கையை நீட்டினாள்.
அனுவிற்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி இவளுக்குத் தன்னைத் தெரியும். தாய் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே மிகவும் பழகிய பாவனையில் கை கொடுக்கும் இவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தவளுக்கு தன் வாழ்க்கையின் பாதையே இவளால்தான் மாறப் போகிறதுஎன்பது அப்போது தெரிந்திருக்க நியாயமில்லையே.
” ஹலோ, ஆம், நான் அனுதான். நன்றி……. என்னை…… உங்களுக்கு முன்பே தெரியுமா…..?” என்று புருவம் சுருங்க அவள் தாயையும், சகோதரனையும் பார்த்துக் கொண்டே கேட்டாள்.
அதைச் சரியாகப் புரிந்து கொண்ட ரம்யா, “ ஆம், எனக்கு உங்களை நன்றாகத் தெரியுமே…. உங்களை நான் முன்பே பார்த்து விட்டேன். அதாவது அமெரிக்காவில் இருக்கும் போதே… எப்படி என்று கெஸ் பண்ணுங்கள் பார்க்கலாம்” என்றாள் குறும்பாக பார்த்துக் கொண்டு.
அனுவிற்கு சற்று குழப்பமாகத்தான் இருந்தது. ரம்யாவின் அம்மா தன்னை ஏதும் புகைப்படமெல்லாம் எடுக்கவில்லையே. தன் மீது இருக்கும் அபிமானத்தில் ஒரு வேளை தன்னைப் பற்றி அதிகமாகக் கூட பெருமையாகச் சொல்லியிருக்கலாம். ஆனாலும் தன் புகைப்படம் போனது என்றால்……. ஏனோ சட்டென்று மாறனின் நினைவோ, அவனும் அமெரிக்காவில் தானே இருக்கிறான் … என்ற நினைவோ தோன்றவில்லை. அதற்குக் காரணம் மாறன் தன்னிடம் நெருங்கிப் பழகாததாகவும் இருக்கலாம்.
“ ஓகே… ஓகே. நானே சொல்லிவிடுகிறேன். குழப்பம் வேண்டாம். மாறனும், நானும் ஒன்றாக ஒரே அலுவலகத்தில், அடுத்தடுத்த கேபினில் வேலை பார்க்கிறோம்… இப்போது குழப்பம் தீர்ந்ததா?”
“ஓ, அப்படியா, …. “ என்றாள் நம்ப முடியாத ஆச்சரியத்துடன்.
“ ரொம்ப தேங்க்ஸ் அனு. அம்மா உங்களைப் பற்றி அடிக்கடி பேசுவார்கள். நீங்கள் அன்று செய்த உதவி மிகப் பெரியது..” என்றாள் கண்கள் கலங்க, கள்ளமற்று சிரித்துக் கொண்டிருக்கும் தன் தம்பியை பார்த்துக் கொண்டே……..
“அதெல்லாம் ஒன்னுமில்லை. விடுங்க ரம்யா” என்றாள் தர்ம சங்கடத்துடன்.
“ சரி, இந்த கோவிலுக்கு அடிக்கடி வருவீர்களாமே. அம்மா சொன்னார்கள். இன்று நீங்கள் சொன்னதால்தான் கட்டாயப்படுத்தி என்னையும் கூட்டி வந்தார்கள். எனக்கும் சீக்கிரம் திருமணம் ஆக வேண்டுமாம்”… என்றாள் கண்கள் சிமிட்டியபடி.
“ ம்ம்ம்.. இந்தக் கோவில் திருவேங்கடநாதர் மிகுந்த சக்தி உள்ளவர். அவரை வழிபட்டால் திருமண பாக்கியம் மட்டுமல்ல,குடும்பத்தில் அமைதியும் சுபிட்சமும் நிலவும். இங்குள்ள நரசிம்மர் அஞ்ஞானத்தை ஒழித்து ஞான தீபம் ஏற்ற வழி வகுப்பதில் வல்லவர். ஆம். இந்த நரசிம்மர் புத்தியை தெளிய வைத்து நன்கு கல்வி கற்கும் ஆற்றலை வளர்க்கக் கூடியவர். அதனால்தான் தம்பியை இங்கு அழைத்து வரும்படி சொல்லியிருந்தேன்” என்றாள் நாணத்துடன்.
“ தேங்க்ஸ் அனு. நீங்கள் நல்ல சமூக சேவகியாமே… அம்மா சொன்னார்கள்”
“ அப்படியெல்லாம் இல்லை. ஏதோ என்னால் ஆனதை அவ்வப்போது இயலாதவருக்கு உதவுவேன். அம்மாவிற்கு என் மீது அன்பு மிகுதியால் அதிகம் சொல்கிறார்கள், அவ்வளவுதான்”.
“ சரி, அவசியம் வீட்டிற்கு வாருங்கள் அனு. நான் இன்னும் மூன்று வாரங்கள் இங்கு இருப்பேன். அதற்குள் முடிந்த வரை சந்திப்போம். நானும் உங்களுடன் பல விசயங்கள் பேச வேண்டும்” என்றாள் பீடிகையாக.
அனுவிற்கு தன்னிடம் பல விசயம் பேச என்ன இருக்கிறது என்று ஏதோ நெருடியது. ஒரு வேளை மாறன் ஏதும் சொல்லியிருப்பாரோ என்ற சந்தேகமும் எழத்தான் செய்தது அவளுக்கு.
பொழுது போய்க் கொண்டிருந்தது. இரவும் நெருங்கிக் கொண்டிருந்ததால், அனைவரும் கிளம்பத் தயாரானார்கள். அனுவிற்கு வழக்கத்தைவிட அன்று சற்று கூடுதலாகவே நேரம் ஆகிவிட்டதால் அம்மா தேட ஆரம்பித்து விடுவார்களே என்ற நினைவில் மற்ற எண்ணங்களுக்கு விடை கொடுத்து விட்டு கிளம்பத் தயாரானாள். தன் வீட்டு விலாசத்தை தெளிவாகக் கூறி அவளை அவசியம் வருமாறு அழைத்தாள். ரம்யாவும் மறக்காமல், அனுவின் செல்பேசியின் எண்ணையும் வாங்கிக் குறித்துக் கொண்டு தன் எண்ணையும் கொடுத்து விட்டு விரைவில் சந்திப்பதாகக் கூறிவிட்டு கிளம்பினார்கள். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி அனைத்திற்கும் சாட்சியாக, நடக்கப் போவதற்கு காரணகர்த்தாவாக, அமைதியான புன்னகையுடன் அனைவரையும் வழி அனுப்பி வைத்தார்.
தொடரும்.

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...