Saturday, April 14, 2012

தியாக தீபம் - அன்னை இந்திரா (1917 - 1984)


"If I die a violent death as some fear and a few are plotting, I know the violence will be in the thought and the action of the assassin, not in my dying......!" Indira Gandhi.

”பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்!” - மகாகவி பாரதி.

Inline image 1

நெஞ்சுரமும், நேர்மைத்திறமும், நேர் கொண்ட பார்வையும் அஞ்சா நெஞ்சமும் கொண்ட மாதர் குல திலகம் , 'இரும்பு பெண்மணி’, இந்திரா பிரியதர்சினி, அவதரித்தது, ஜவஹர்லால் நேரு மற்றும் கமலா நேரு என்ற புகழ்பெற்ற பெற்றோரின் கருவில். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய முப்பெரும் நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் அலகாபாத் நகரில். மற்ற குழந்தைகளைப் போன்று பெற்றோரின் முழுமையான அரவணைப்பில் கடந்ததல்ல அவருடைய இளம் பிராயம். ஆம், நவம்பர் 19, 1917இல் பிறந்தார் இவர். பிறந்த இரண்டாண்டுகளில், 1919 ஆம் ஆண்டு நம் தேசத் தந்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பியவுடன், நேரு குடும்பத்தின் அடிக்கடி தொடர் சந்திப்பின் மூலமாக இந்திய சுதந்திர தாகத்தை எழுச்சியூட்டி, அவர்களை முழுமையாக ஈடுபடச் செய்தார். அவருடைய நான்காம் வயதில், தந்தை ஜவஹர்லால் நேருவும், தாத்தா மோத்திலால் நேருவும் முதல் முறையாக சிறை சென்ற போது. பின்பு தாயும் இணைந்து கொள்ள, போகப்போக அதுவே வாடிக்கையாகிவிட்டிருக்கிறது. பிற்காலங்களில் தம் இளம் பிராயத்தை நினைவு கூர்கையில் இளம் வயதில் ஒரு பாதுகாப்பற்ற உணர்வு தனக்கு இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். தாயின் மெல்லிய உடல் வாகையையும், தந்தையின் கூரிய நாசியும், துணிவும் கொண்டவர்.

அவர் பிறந்த நேரம் முதல் உலகப் போர் முடிந்த நேரம். தந்தையும், தாத்தாவும் சிறையில் அடைபட,, குடும்பத்தின் மற்ற பெண்களுடன் குழந்தை இந்திராவும் காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் தங்க வேண்டிய கட்டாயம். ஆசிரம வாழ்க்கை புதிய அனுபவத்தையும், சுதந்திரப் போராட்ட வித்தையும் விதைத்தது. அதன் காரணமாக பால்யகால விளையாட்டே மேடைப்பேச்சு, கைது, கூட்டம் ஆங்கிலப் போர் வீரர்களை போரிட்டு முறியடிப்பது என்பது போல் அமைந்தது, அவருடைய பிற்கால வாழ்க்கை முறைமைகளுக்கு அடித்தளமாக அமைந்தது. இதுவே அவர் ஒரு சுதந்திர உணர்வுள்ள , உறுதியான இதயம் கொண்ட ஒரு பெண்ணாக வளர வழி வகுத்தது.

அவருடைய குழந்தைப்பள்ளி தில்லியிலும், பள்ளிப்படிப்பு முதலில் அலகாபாத் நகரில் ஒரு கான்வெண்ட் பள்ளியிலும் பின்பு ஒரு தங்கும் பள்ளியிலும் தொடர்ந்தது. புத்தகம் படிப்பதில் ஆழ்ந்த விருப்பம் கொண்டவராக வளர்ந்தார். தந்தை வாங்கி வைத்திருந்த பெரும்பாலான புத்தகங்களை வாசித்திருக்கிறார். கவிஞர், எழுத்தாளர், ஓவியர் என பல்வேறு முகங்கள் கொண்ட ரவீந்திரநாத் தாகூரின், சாந்தி நிகேதன் பள்ளியில் , சேர்க்கப்பட்டார். இதைப்பற்றிக் கூறும் போது அவர், “ தந்தையின் முயற்சியால் ஏற்கனவே எனக்கு இலக்கியத் தொடர்பு இருப்பினும், சாந்தி நிகேதனுக்குச் சென்றவுடன் தாகூர் மூலமாக கலையுலகின் கதவு தானாகத் திறந்தது” என்றார். தன்னுடைய 11வது வயதில் இராமாயணக் காப்பியத்தில் வருவது போன்று, வானரப் படையை நிறுவ முயன்றார். தன் வயதொத்த சிறுவர் சிறுமியரை இணைத்து, வானரசேனை என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்து வைத்தார்.

Inline image 2
வானரசேனை என்ற இந்த அமைப்பு பல அரும் பணிகளைச் செய்தன. அதாவது, சுதந்திரப் போராட்ட வீரார்களுக்கு உணவு, குடிநீர் விநியோகம் செய்வது, கொடிகள் தைத்துக் கொடுப்பது, கல்வியறிவற்றவர்களுக்கு தேவையான மடல்கள் எழுதிக் கொடுப்பது, விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டு தலைமறைவாக வாழ்பவர்களுக்கு மடல் கொண்டு சேர்க்கும் சேவையைச் செய்தல், சமையல் செய்து கொடுத்தல் போன்ற எண்ணற்றப் பணிகள் செய்து வந்தனர். இவையனைத்தும் அண்ணல் காந்தியடிகளின் கொள்கைகளின் தாக்கம்தான் என்பதை அவரே, 1930 இல் பூனாவில் ஒரு பள்ளியில் படிக்கும் போது, ” காந்தியடிகள் என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருந்தார். என் ஒவ்வொரு செயல்களிலும் முன்னேற்றங்களிலும் அவருக்கு பெரும் பங்கு உண்டு” என்ற சொற்கள் மூலம் அதை உறுதிபடுத்தினார்.

”பாலசர்க்கா சங்கம்” என்ற நிறுவனத்தை , காந்தியடிகளின் அறிவுரைப்படி நிறுவி, சிறுவர், சிறுமியுடன், நூற்பு வேள்வியை மேற்கொண்டார். ஆனந்த பவனம் என்ற தம்முடைய மாளிகையின் மூத்த பணியாளர் ஒருவருக்கு தம் இளம் வயதிலேயே கல்வி கற்பிக்கும் பணியும் மேற்கொண்டார். தம் இல்லத்திற்கு சற்று அருகாமையில் இருந்த ஒரு தொழுநோய் இல்லத்திற்கு அடிக்கடி சென்று தன்னால் ஆன சேவைகளைச் செய்ய முற்பட்டிருக்கிறார்.

இந்திரா தம்முடைய 17 வது வயதில் தன் தாய் கமலா நேருவிற்கு காசநோயினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட காரணத்தினால், அவருடைய மருத்துவத்திற்காக அவருடன் சுவிட்சர்லாந்து செல்லவேண்டி வந்தது. அந்த நேரத்தில் தந்தையும் சிறைச்சாலையில், ஆனால் 1936 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 28ஆம் நாள் தாய் கமலா நேரு இறந்தபோது தந்தை விடுதலை செய்யப்பட்டு, உடனிருந்தார். இந்தியாவிற்கு திரும்பியபோது, மிக அழுத்தமான ஒரு சூழலில் சிக்குண்டு இருந்தார். வேதனை, கவலை, அனைத்திற்கும் மேலாக தனிமை! இந்த நேரத்தில் தம் பால்ய கால நண்பரான பிரோஸ்காந்திதான் இவருக்கு உடனிருந்து ஆறுதலளித்து வந்தார். நேரு குடும்பத்தின் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர் இவர். இரண்டாம் உலகப் போர் தொடங்கப் போகும் சில காலம் முன்னர்தான் அவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் சேர்ந்தார்.

மோதிலால் நேரு தம் பெருஞ்செல்வத்தை தேசத்திற்காக அளித்துவிட்டார். நேரு தாம் எழுதிய புத்தகத்தின் மூலமாகக் கிடைத்த வருமானத்தைக் கொண்டுதான் தம் மகளைப் படிக்க வைத்தார்.

ஒரு ஆண்டிற்குள்ளாக அங்கு அவருடைய உடல் நிலை பாதிக்கப்பட்டு, சுவிட்சர்லாந்து சென்று மருத்துவம் பார்க்க வேண்டி வந்தது. நோயின் கொடுமையும், தனிமையும் ஒரு சேர வாட்ட, அந்த நேரத்தில் பிரோஸ்காந்தி அவருக்குத் துணையாகவும், ஆதரவாகவும் இருந்துள்ளார். 1939 இல் இரண்டாம் உலகப்போர் ஆரம்பமானவுடன், இந்திரா, கப்பல் மூலமாக, பிரோஸ்காந்தியுடன் இந்தியா வந்து சேர்ந்தார். தன் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக பிரோஸ்காந்தியை 1941 ஆம் ஆண்டு,மார்ச் மாதம் அலகாபாத்தில் அவரை மணந்து கொண்டு, லக்னோவில் தம் திருமண வாழ்க்கையைத் துவங்கினார். நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கையில் மேலாளராக பணி புரிந்தார் பிரோஸ்காந்தி. அப்பத்திரிக்கையின் பெண்கள் பகுதியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் இந்திராவிற்குக் கிடைத்தது. 1944 ஆகஸ்ட் 20 ஆம் தேதி மும்பையில் ராஜீவ் காந்தியைப் பெற்றெடுத்தார் இந்திரா.

பிரோகம் மும்பையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரசு கமிட்டி கூட்டத்திற்கு இந்திராவும் சென்றார். ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற இயக்கமும் இங்குதான் துவக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில், நேருஜி, இந்திரா காந்தி மற்றும் பிரோஸ்காந்தி மூவரும் கைது செய்யப்பட்டு , சிறை வைக்கப்பட்டனர்.

நம் இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திருநாளும், ஆகஸ்ட் 15 ஆம் நாள் 1947 ஆம் ஆண்டு வந்தது. ஆனாலும் இந்திய - பாகிஸ்தான் பிரிவினையும் உடன் வந்தது, மகாத்மாவை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. மத வெறியும், வகுப்புக் கலவரங்களும் நாட்டில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தின. மக்கள் பாகிஸ்தானிலிருந்து கூட்டம் கூட்டமாக அகதிகளாக வந்தனர். இந்த அகதிகள் முகாமிற்கு அன்னை இந்திரா நேரிடையாகச் சென்று, அவர்களுக்கு உணவு, உடை என எந்த குறைவும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். இஸ்லாமியர்கள் வாழ்ந்த பகுதிக்கும் எந்த அச்சமுமின்றி சென்று வந்தார்.

சுதந்திர இந்தியாவின் பிரதம மந்திரியாக பதவியேற்ற ஜவஹர்லால் நேரு, தம் இறுதிக் காலமான 1967 வரை பதவியில் இருந்தார். அந்த காலகட்டத்தில், தாய் உயிருடன் இல்லாத காரணத்தினால் , குடும்பப் பராமரிப்பிற்காக இந்திராவும் , தம் கணவர், குழந்தைகளுடன் மும்மூர்த்தி இல்லத்தில் (Teen Murthi House) தங்க வேண்டி வந்தது. உலக நாடுகளின் அழைப்பை ஏற்ற தந்தையுடன் பல நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கும், பல அரசியல் பிரபலங்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது அவருக்கு. 18 ஆண்டு காலம் தந்தையுடன் கற்ற அரசியல் நெளிவு சுளிவுகள், இந்திராவை ஒரு பெரும் ராஜதந்திரியாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும் பண்படுத்தியது. பாரிசில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திற்கும், காமன்வெல்த் மாநாட்டிற்கும், மற்றும் அமெரிக்காவிற்கும் தன் தந்தையுடன் சென்று வந்தது பல அனுபவங்களைக் கொடுத்தது. எலிசபெத் மகாராணியின் மகுடாபிஷேகதிற்கான அழைப்பை ஏற்று அங்கு சென்றபோது, வின்ஸ்டன் சர்ச்சிலையும் சந்தித்தார். 1952 இல் தீன் மூர்த்தி பவனுக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி திருமதி ரூஸ்வெல்ட்டைச் சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

1959 இல், பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி இந்திராகாந்தி அம்மையாரை செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக நியமித்தார். குறைந்த விலையில் வானொலி தயாரிப்பதையும், குடும்ப நலத்திட்டத்தையும் துவக்கி வைத்தார். பிரோஸ்காந்தி பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956 முதல் 1960 வரை அகில இந்திய காங்கிரசின் இளைஞர் அணித்தலைவராக இருந்தார் இந்திரா காந்தி. 1960 ஆம் ஆண்டு பிரோஸ்காந்தியின் திடீர் மறைவு இந்திராவை மிகவும் பாதித்தது. 1964 ஆம் ஆண்டு, புவனேசுவரம் காங்கிரசு மாநாட்டில் மயக்கமுற்று விழுந்த தந்தை நேருஜியை கண்ணும் கருத்துமாக மகள் கவனித்துக் கொண்டாலும், காலன் அவரையும் விட்டு வைக்காமல் மே மாதம் 27ஆம் நாள் அதே வருடத்தில் அழைத்துக் கொண்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் , வலுவடைந்திருந்த நேரம், தமிழ் நாட்டிற்கு வந்திருந்த அன்னை இந்திரா மக்களின் நல்லாதரவையும் பெற்றிருந்தார். தேசிய ஒருமைப்பாட்டை மிகவும் நேசித்த அன்னையின் சேவையைப் பாராட்டும் விதமாக அவர்தம் பிறந்த நாளை தேசிய ஒருமைப்பாட்டு தினமாகக் கொண்டாடுவதும் சிறப்பு

பாகிஸ்தான் படை வீரர்களின் காஷ்மீர் ஊடுறுவல் கலவரத்தை ஏற்படுத்தியது. இந்திராகாந்தி ஸ்ரீநகர் சென்று பல பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார். போர் உருவாகி, நிறுத்தமும் ஏற்பட்டது. சிப்பாய்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஊக்கமளித்தார். பாகிஸ்தானுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக லால் பகதூர் சாஸ்திரி ரஷ்யாவிலுள்ள தாஷ்கண்டிற்கு சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்பு அங்கேயே லால் பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் காலமானார். அவர் மறைவிற்குப் பிறகு 1966 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 25ம் நாள் இந்தியாவின் பிரதமர் ஆனார். காமராசரின் உறுதுணை பெரும் பலமானது இவருக்கு. பிரதமராக இவர் ஆற்றிய தொண்டு பாரே புகழும் வண்ணம் இருந்தது!

Inline image 3

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து இலட்சக்கணக்கான அகதிகள் சாரிசாரியாக இந்தியா நோக்கி வர ஆரம்பித்தார்கள். இது பெரும் பிரச்சனையாக உருவெடுக்க ஆரம்பித்த நேரம், இந்திராவின் நண்பர் ஒருவர், தான் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாட்டிற்கும், அந்தக் கோடை விடுமுறையில் செல்லப் போவதாக சொன்னபோது, அன்னை சற்றும் தயங்காது, “ பலர் உங்களிடம் வந்து இந்தியாவில் என்ன நடக்கிறது என்று கேட்பார்கள். அப்போது நீங்கள், இன்னும் ஓர் ஆண்டு காலத்தில் மேற்கு வங்காளத்திலிருந்து இந்திய மண்ணிற்கு வரும் அகதிகளே இருக்க மாட்டார்கள் என்று இந்தியப் பிரதமர் ,அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாகச் சொல்லுங்கள்”என்றார். மேற்கு வங்க இடதுசாரிகளின் கிளர்ச்சியைத் துணிவுடன் எதிர்கொண்டு ஜனநாயக முறையில் சமாளித்தார். கேரளாவில் உணவுப் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் தலை தூக்கிய நேரம் அது. வாஷ்ங்டன் சென்று ஜனாதிபதியுடன் பேசிக் கொண்டிருந்த போது, “ என் நாட்டு மக்களுக்காக விடம் அருந்தச் சொன்னாலும், தயங்காமல் அருந்துவேன்” என்று சொன்னது அவர் நாட்டின் மீது கொண்டிருந்த அபரிமிதமான பற்றைக் காட்டியது. அவருடைய துணிச்சலான போக்கு பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டது.

“ இந்து மதத்தின் வேதாந்தத் தத்துவங்களில் எனக்கு நல்ல நம்பிக்கை இருந்தாலும், மனித குலத்தைப் பிரிக்கும் அந்த மதவெறியைத் தீவிரமாக எதிர்க்கிறேன்” என்ற தெளிவான சிந்தனை கொண்டிருந்தார். உலகளவில், பொதுவுடைமை அல்லாத 70 நாடுகள் பங்கு கொண்ட, வாக்கெடுப்பில், உலகப்புகழ் பெற்ற தலைவராக இந்திரா காந்தி அம்மையாரே தேர்ந்தெடுக்கப்படது குறிப்பிடத்தக்கது. இவர் செய்த பல அரிய சாதனைகளே இதற்குக் காரணம்.தன் ஆட்சிக் காலத்தில் நாணயத்தின் மதிப்பைக் குறைத்தார். உச்சநீதி மன்ற தலைமைப் பதவி நியமனத்தை மூப்புரிமை அடிப்படையில் செய்யும் மரபை மாற்றியமைத்தார்.

பஞ்சாப் கலவரம் தீவிரமான வேளையில் அவர்களை ஒடுக்க பொற்கோவிலுக்குள் இராணுவத்தை அனுப்பினார். 1984 ஆம் ஆண்டில், ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்” தீவிரவாதிகளை ஒடுக்க வைத்ததோடு பிந்த்ரன்வாலே கொல்லப்பட்டார். இந்த நேரத்தில்தான் சீக்கிய மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி வந்தது அவருக்கு. ஜனநாயகத்தைப் பாதுகாக்க நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த வேண்டி வந்தது. 1969 இல் பதினான்கு மிகப்பெரிய வங்கிகள் தேசிய உடமையாக்கப்பட்டது. பத்திரிக்கை தணிக்கை முறை ஒழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மன்னர்களுக்கு அளிக்கப்பட்ட மானியங்கள் நிறுத்தப்பட்டது. பஞ்சாப் மட்டுமன்றி, காஷ்மீர், மணிப்பூர், அஸ்ஸாம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட பிரிவினை வாதமும் முடக்கப்பட்டது. இப்படி பல்வேறு சோதனைகளைக் களைந்து சாதனைகளாக மாற்றிய பெருமை அம்மையாரையேச் சேரும்.

அவருடைய பல்வேறு நாட்டு நலப்பணித்திட்டங்கள் ,மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் முக்கியமானது இருபது அம்சத் திட்டம். இத்திட்டத்தின் மூலம், மலை சாதி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், கிராமப்புற, வறுமைக் கோட்டின் கீழே உள்ள மகளிர், ஆகியோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அறிவியல் துறையும், வான் ஆய்வு மையங்களும் பெரும் வளர்ச்சி கண்டது அம்மையாரின் ஆட்சிக்காலத்தில். பொருளாதாரமும் நல்ல வளர்ச்சியடைந்தது. நம் இந்திய நாட்டு விஞ்ஞானிகளின் தனிப்பட்ட முயற்சியால் அணு ஆய்வு சோதனையிலும் வெற்றி கண்டதும் குறிப்பிடத்தக்கது. பல ஏவுகணைகள் விண்ணில் செலுத்தப்பட்டன. தொலைத்தொடர்பிற்கென பல கோள்கள் செலுத்தப்பட்டன. இன்சாட் A, B விண் வெளிக்கலங்கள், அணுமின் நிலையங்கள், பெரிய தொழிற்சாலைகள் என அனைத்தும் வெற்றிகரமாக செயல்பட்டன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளை சீரிய முறையில் நடத்தியமைக்காக 1982 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் கழகத்தின் விருது இவருக்கு வழங்கப்பட்டது. தொள்ளாயிரத்தைம்பது நாடுகள் இணைந்த கூட்டுச் சேரா இயக்கத்தின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னுடைய அன்பான போக்கினாலும், சாமர்த்தியமான செயல்களினாலும், நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களைத் தீர்த்து வைத்தார். ஓயாத உழைப்பும், உன்னத முயற்சியும், நாட்டை உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கும் அவரை உச்சாணியில் ஏற்றி வைத்த வேளையில், துரதிருஷ்டவசமாக, அக்டோபர் 31ந்தேதி, 1984 ஆம் ஆண்டு, அவருடைய இரண்டு சீக்கிய மெய்க்காப்பாளர்களான பியாந்த்சிங் மற்றும் சத்வந்த்சிங் என்பவர்களால் ஈவு இரக்கமின்றி, சுட்டுக் கொல்லப்பட்டார். தன்னிகரில்லா அந்தத் தியாகச்சுடரின் அஸ்தி நாற்பது கலசங்களில் சேகரிக்கப்பட்டு, மக்களின் அஞ்சலிக்காக நாட்டின் பல முக்கிய தலைநகரங்களில் வைக்கப்பட்டிருந்தது. யமுனை ஆற்றங்கரையில் அவர்தம் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.

Inline image 4

நல்ல பல குறிக்கோள்களை , பல்வேறு சோதனைகளுக்கிடையேயும் நிறைவேற்றிக் காட்டிய சாதனைப் பெண்மணி அன்னை இந்திரா. மனிதாபிமானம், சகோதரத்துவம், அநியாயத்தைத் தட்டிக்கேட்கும் துணிச்சல், சகமனிதர்களிடம் அன்பு, நாட்டுப்பற்று, விடாமுயற்சி இப்படி ஆக்கப்பூர்வமான நல்லெண்ணங்கள் மூலமாகவே நாட்டில் பல அரிய நற்பணிகள் செய்து தம் இன்னுயிரையும் ஈந்தார். அவருடைய சாதனை வாழ்க்கை பல்லோருக்கும் முன்னுதாரணமாக இருப்பதில் அதிசயமில்லை. பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வாழ்ந்து காட்டியவர் அன்னை இந்திரா காந்தி!

Thursday, April 12, 2012

காற்றில் ஆடும் தீபங்கள்


இனிய நந்தன புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே!


வாழ்வியல் வண்ணங்கள் (1)

பெண்களை, குத்துவிளக்கு, குலவிளக்கு என்று கொண்டாடுவது பெரும்பாலும் நம் தமிழர் மரபு. அம்மரபு வழி பண்பாடு பெண்களுக்கென்று ஒரு எல்லைக்கோட்டையும் நிர்ணயித்து வைத்துள்ளது. அந்த எல்லைக்கோட்டினுள் வாழ்த் தெரிந்த பெண்மகள், தம் சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடாமல் ஒரு தவ வாழ்க்கையை மேற்கொண்டு காலத்தை கடத்தி வந்த காலங்கள், பெண்களின் வாழ்க்கைக்குப் பாதுகாப்பு என்பது உறுதியான ஒன்றாக இருந்தது. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம், கல்வியறிவு, என முன்னேற்றமடைய ஆரம்பித்தவுடன், இந்த பாதுகாப்பு பண்பாட்டு எல்லை சுருங்கி, சுதந்திரம் என்ற ஒன்று கட்டவிழ்த்து விட்டது போன்ற நிலையை ஏற்படுத்துவதன் விளைவாக பல பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறார்கள். சில நேரங்களில் காற்றில் ஆடும் தீபமாக வாழ்க்கை அச்சமூட்டுகிறது. சில காலங்களில் அது நிலைபெற்று நின்றுவிடும் என்ற நம்பிக்கை இருந்தாலும், இந்த இடைப்பட்ட கால ஊசலாட்டம் ஏற்படுத்தும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு வேண்டும்.

நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், தன்னம்பிக்கையும், சலியாத உழைப்பும் கொண்டு சமுதாயத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்து கொண்டு, பலவேறு துறைகளிலும், பலருக்கும் முன்னோடியாகவும், இருக்கக் கூடியவராகவும் உள்ள இக்காலகட்டத்திலும், சுயவிழிப்புணர்வு இன்மையாலும், தேவையில்லாத அச்சம், அசாத்திய துணிச்சல், தவறான முடிவெடுத்தல், அளவிற்கதிகமான தன்னம்பிக்கை, கோழைத்தனமான முடிவு என இப்படி பல்வேறு வழிகளில் தங்கள் வாழ்க்கைக்கு தாங்களே பகையாளி ஆனவர்களும் உண்டு. அந்த வகையில் இக்கட்டுரைத்தொடர் பல உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு, இன்றைய பெண்களின் நிலையை அலசப்போகிற ஒரு நிதர்சனம். இதில் சுழலப் போகும் தீபங்கள் நீங்கள் அறிந்தவர்களாகவோ, உங்களுக்கு மிகவும் நெருங்கியவர்களாகவோ இருக்கலாம்….. தத்தளிக்கும் தீபங்கள் சில அணைந்து விட்டாலும், எப்படி வாழக்கூடாது என்பதற்கு முன்னுதாரணமாக இருப்பதன் முகமாக வாழப்போகிறவர்கள். இக்கட்டுரைகளில் ஊரும், பெயரும் மாற்றப்பட்டுள்ளது. யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதும் அல்ல. சில நிதர்சனங்கள் சரியான முறையில் புரிந்து கொள்ளப்படல் வேண்டும் என்ற ஆதங்கத்தில் மட்டுமே எழுதப்படுகிறது.

தீபம் (1)

தணலில் வெந்த தாய்மை…..

பெரும்பாலான குடும்பங்களில் நம் குழந்தைகளின் திருமண வாழ்க்கையையும், மற்ற முக்கியமான எதிர்கால முடிவுகளை எடுப்பதிலும் ஜோசியம், ஜாதகம் என்பது பெரும்பங்கு வகிக்கிறது. பல நேரங்களில் தலையெழுத்தையே மாற்றக்கூடிய வல்லமை பெற்றது. அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் அல்லவா….?

சந்திரிகா, நல்ல பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்து, தெய்வ நம்பிக்கையும், பெரியோரிடம் பயபக்தியும் கொண்டு, அவ்ர்தம் சொற்களை வேதவாக்காக எண்ணி வாழக்கூடிய சராசரி இந்தியப்பெண். சுயவிருப்பு, வெறுப்பு என்பதற்கெல்லாம் இடம் இருந்ததில்லை இது போன்ற சூழலில் வளரும் பெண்களுக்கு. பெரியவர்கள் சொல்வதை கண்மூடி கேட்டுக் கொண்டு போக வேண்டியதுதான் ஒரேவழி. மாற்றுவழி என்ற உபாயமே வழங்கப்படுவதில்லை. படிப்பில் நல்ல சூட்டிப்பான பெண் அவள். பள்ளியிறுதித் தேர்வில் பள்ளியிலேயே இரண்டாவது மாணவியாக தேர்ச்சி பெற்றவள். மேற்படிப்பு படித்து மருத்துவராக வேண்டும் என்று பல கற்பனைகள் கொண்டிருந்தவள். தன் விருப்பம் எப்படியும் நிறைவேறும் என்ற கனவும் கொண்டு வாழ்பவள்.

ஆனால் நடந்ததோ வேறு. உறவு வகையில் நல்ல வரன் வரவும், ஜாதகத்தில் சில தோஷங்கள் பெயரைச் சொல்லி, அதற்குத் தோதான வரன் அமைவது சிரமம், அதனால் எல்லாம் கூடிவந்து இப்படி ஒரு வரன் வரும்போது தவிர்க்கக் கூடாது என்ற மூத்தோரின் சொல்கேட்டு வேறு வழியின்றி, கனவுகளைப் புதைத்துவிட்டு மங்கல நாணை மனமுவந்து ஏற்றுக் கொண்டவள். அதற்குப் பிறகு வாழ்க்கை தெளிந்த நீரோடையாகத்தான் போய்க்கொண்டிருந்தது, இரண்டாவது குழந்தை பிறக்கும் வரை. நல்ல வசதியான குடும்பம். பரம்பரையாக நெசவுத் தொழில் செய்பவர்கள். தற்காலமுறையில் நவீனப்படுத்த்ப்பட்ட இயந்திரங்களுடன், கடின உழைப்பும் சேர நன்கு கொடிகட்டி பறந்து கொண்டிருந்தனர்.

காலச்சக்கரம் எப்போதும் ஒரே மாதிரி சுழலுவதில்லையே. நூல் விலை ஏற்றம் பணியாட்கள் பிரச்சனை என வியாபாரத்தில் புயல் அடிக்க ஆரம்பிக்க, காரணங்கள் அலசப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஜோசியம், ஜாதகம் என்று பார்க்க ஆரம்பித்தார்கள். அப்போதுதான், சந்திரிகா இரண்டாவது குழந்தை உண்டாகியிருந்தாள். வீட்டு நிலை அவள் உடல்நிலையையும் பாதித்தது. மிகப் பொறுமையான குணமும், அமைதியான சுபாவமும் கொண்டவளான அவள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் அந்தப் பொறுமையின் எல்லையைச் சோதிப்பதாகவே சம்பவங்கள் நடந்தது.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில், அனைத்து விதமான பரிகாரங்களும் செய்யத் தயாராகிவிட்டனர். அந்த இடத்தில்தான் சந்திரிகாவின் விதி விளையாட ஆரம்பித்தது. குடும்ப ஜோசியர் குலதெயவ வழிபாடு, அன்னதானம் என ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைத்துப் பரிகாரங்களையும் சொன்னவர், இறுதியாக ஒரு குண்டை தூக்கிப் போட்டுவிட்டார். ஆம், சந்திரிகாவின் வயிற்றில் கரு உருவான நேரம் சரியில்லையாம்.! அதுவும் ஒரு காரணமாம் வியாபாரம் நொடித்துப்போவதற்கு. அவ்வளவுதான் குடும்பமே சேர்ந்து முட்டாள்தனமாக ஒரு முடிவெடுத்துள்ளார்கள். சந்திரிகாவின் வயிற்றில் வளரும் கருவை அழித்துவிடுவது என்று. அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்தும் கணவனின் கட்டாயத்தால், வேறு வழியின்றி மருத்துவமனை சென்றவள், அங்கு மருத்துவர், குழந்தை நன்கு வளர்ந்துவிட்டதால் கருவை அழிக்க முடியாது என்று சொல்லி, வயிற்றில் பாலை வார்த்ததால், வேறு வழியின்றி, வீடு திரும்பினர்.

நாட்கள் பிரச்சனைகளுடன் சேர்ந்தே நகர்ந்து கொண்டிருந்தது. வியாபாரத்தில் ஒரு பிரச்சனை முளைவிட ஆரம்பிக்கும்போதே அதன் வேரை சரியாக அறிந்து அதனைக் களையாவிட்டால், அது விடவிருட்சமாக வளரத்தானே செய்யும்? அதனைக் களையும் முயற்சியை சரியாகக் கடைப்பிடிக்காமல், தேவையற்ற மற்ற விசயங்களில் கவனம் செலுத்தி, மேலும் பிரச்சனையை வளர்த்துக்கொண்டவர்கள், சந்திரிகாவின் வயிற்றில் வளரும் குழந்தையின் மீதே அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்ததால் அவள் மனதிலும், உளைச்சல் அதிகமாக ஆரம்பித்தது. விளைவு அவள் உடல் நலமும் பாதிக்கப்பட்டது. பிரசவ நேரம் நெருங்க, நெருங்க, குடும்பத்தில், குழந்தை பிறந்தவுடன் அதை என்ன செய்வது என்று யோசிக்கும் அளவிற்கு போனது, தாயினால் தாங்க முடியாத வேதனையாகிப் போனது.

பிரசவ வேதனையை பல்லைக் கடித்துக்கொண்டு தாங்கிக் கொண்ட அந்தத் தாய்க்கு, பெற்ற குழந்தையை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடலாம் என்று இறுதியாக எடுத்த முடிவில் உடன்பட முடியாத வேதனையில் கதிகலங்கிப் போனாள். எவ்வளவோ வாதாடிப் பார்த்தும் குடும்பத்தில் அனைவரும் ஒன்றுபோல குழந்தையை இழப்பதிலேயே குறியாய் இருக்க, செய்வதறியாது, மன வேதனையில் புழுவாய்த் துடித்தவள், பிறந்தவீடே அடைக்க்லம் என்று அடிக்கடி அங்கு சென்று தங்கவும் ஆரம்பித்திருக்கிறாள். அங்கேயும் அவளுக்குப் பிரச்சனை உறவினர் வழியாக வந்துள்ளது. பெண் கணவன் வீட்டில் ஒழுங்காகப் பிழைக்காமல் தாய் வீட்டில் வந்து அடிக்கடி தங்க ஆரம்பித்தால் சில பெற்றவர்கள் வழக்கமாகச் செய்யும் தவறு, அப்பெண்ணின் மனநிலையைப் பற்றிக்கூட அறிந்து கொள்ள முயலாமல், எப்படியும் அவளை சமாதானப்படுத்தி கணவன் வீட்டில் கொண்டு விட்டுவிடுவது….. அதற்கு, திருமணம் ஆகாத அடுத்த பெண்ணைக் காரணம் காட்டி அவள் வாழ்க்கை கெட்டுவிடும் என்று பயமுறுத்தி கட்டாயப்படுத்தி அனுப்பி விட்டார்கள்.

பிரச்சனை அதிகமாக, புகுந்த வீட்டிலோ குழந்தையை எங்காவது தொலைத்துவிட்டு வந்தால்தான் ஆச்சு என்று கட்டாயப்படுத்தவும், பிறந்த வீட்டிலோ, கணவனும், மாமனார், மாமியாரும் என்ன சொல்கிறார்களோ அதன்படி கேட்டுத்தான் நடக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்லி அனுப்பிவிட்டதாலோ, இருதலைக்கொள்ளி எறும்பாக போக்கிடம் தெரியாமல், ஒரு வயதே ஆன, பெண் குழந்தையை, இழக்கவும் முடியாமல் அத்தாய் பட்டவேதனை சொல்லில் அடங்காது. பொருளாதாரச் சுதந்திரமும் இல்லாமல், தனியாக வெளியே சென்று குழந்தைகளைக் காப்பாற்றும் துணிச்சலும் இல்லாமல், பெற்றக் குழந்தையை பிரித்து வைக்கக் கட்டாயப்படுத்தும் கொடுமையைச் செய்யும் புகுந்த வீட்டாரைத் தட்டிக் கேட்கும் தைரியமும் இல்லாமல், ஒரு பெண் எடுக்கக் கூடிய அடுத்த முடிவு என்னவாக இருக்க முடியும்?

ஆம், அதேதான், தன் இறப்பு மட்டுமே இதற்கான ஒரே தீர்வு என்று முடிவெடுத்தவள், தன் குழந்தைகளும் இவர்களிடம் சிக்கித் தவிக்கக் கூடாது என்ற கோழைத்தனமான முடிவையும் சேர்ந்தே எடுத்து விட்டாள். மூன்று வயதான மூத்த மகனையும், ஒரு வயதான இளைய மகளையும் தம் படுக்கையறையினுள் கூட்டிச்சென்று, எண்ணவும் அச்சம் ஏற்படுத்தும் செயலைச் செய்துவிட்டாள். மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்தி விட்டாள். மூன்று உயிர்களும் கருகி சாம்பலாகிவிட்டன. இதற்கு யார் காரணம், மூடநம்பிக்கைகள் என்றாலும்,

பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
திடங்கொண்டு போராடு பாப்பா!

என்று முழங்கினானே பாரதி, அத்துணிச்சலை ஊட்டி வளர்க்காத பெற்றோரின் குற்றமா அன்றி,

துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென் றும் போற்றுவோம்.
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோர்த்துக் களிப்பதுநின் றாடுவோம்.!

என்று கணவனை வழிநடத்திச் செல்லும் வனமையையும் வளர்த்திக் கொள்ளாதது அவளுடைய குற்றமா? சிந்திக்க வேண்டும் நண்பர்களே. பெண் குழந்தைகளை கட்டுப்பாடுகள் வைத்து வளர்க்க வேண்டியது அவர்களுடைய பாதுகாப்பிற்காக மட்டுமே என்று வாதிடும் பெற்றோராக இருந்தாலும், அவளுக்கு தற்காப்பு என்ற தாரக மந்திரத்தையும், வாழ்க்கையில் எத்தகைய பிரச்சனைகள் வந்தாலும், கோழைத்தனமான முடிவு எடுக்காமல், எதிர்த்து நின்று சமாளிக்கும் வல்லமையையும் ஊட்டி வளர்க்க வேண்டாமா?

ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன், பெற்றோரின் பொறுப்புகள் அதிகமாவதை உணரும் நாம், தங்கத்தையும், வெள்ளியையும் சேர்க்க ஆரம்பிக்கிறோம். அவளுடைய சுயவலிமையை மேம்படுத்திக் கொள்ளும் கலையைக் கற்பிக்கத் தவறுகிறோம். திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே. அதற்கு அவள் தன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு அவளுக்குத் தேவையான கல்வியறிவை ஊட்டவேண்டும். சுயவிழிப்புணர்வை ஏற்படுத்தி வாழ்க்கையில் நேர்படும் பிரச்சனைகளை எதிர்த்து நின்று சமாளிக்கும் சக்தி கொடுப்பதும் அக்கல்வியறிவு மட்டுமாகத்தானே இருக்க முடியும். அக்கல்வியறிவை எப்பாடுபட்டேனும் அளிக்க வேண்டும் என்பதில் உறுதி கொள்ள வேண்டும். அது மட்டுமே இது போன்றதொரு பிரச்சனைகள் வராமல் தடுக்கக்கூடிய காப்பாக அமைய முடியும் அல்லவா.

”தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.”
என்னும் ஐயனின் வாக்கைக் காக்கும் பெண்மகளாக வாழும் வாய்ப்பை வளப்படுத்துவோம்!

தயவுசெய்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொடரும்.

படங்களுக்கு நன்றி:

http://ssubbanna.sulekha.com/albums/bydate/2009-09-20/slideshow/281605.htm

http://trade.indiamart.com/details.mp?offer=2095133988

Tuesday, April 10, 2012

சோபனம்


எங்கெல்லாம் தேடுவீர் நீவிர் கவினை,
அம்மங்கையே உம் பாதையாகவும்
உம் வழிகாட்டியாகவும் இல்லாதபோழ்து
எங்கனம் அவளை கண்டுகொள்ளப் போகிறீர்?
உம் பேச்சுக்களின் நெசவாளியாக அவளே
இருந்தாலொழிய, எங்கனம் அவளைப்பற்றி
பேச இயலும்?
“கவின் என்பது அன்பும், சாந்தமுமானது” என்பான், நொந்தவனும், காயப்பட்டவனும்.
“தம் சாதனை குறித்த பெருமையுடன்
மெல்லிய நாணங்கொண்டு நம்மிடையே நடமாடும் இளம் தாயைப் போல”
உணர்வுவயப்பட்டவனோ, “அழகென்பது வல்லமையானதும், அபாயமானதுமான ஓர் பொருள்” என்பான்.
”கொந்தளிப்பைப்போன்று அவள் பூமியையே
நமக்குக் கீழும், வானமதை நமக்கு மேலும்
புரட்டிப் போடுபவளாயிற்றே”
களைப்பும், சோர்வும் கொண்டவனோ, ”அழகென்பது மெல்லிய முனகல்காளாலானது. அவள் நம் ஆன்மாவினூடே உரையாடுபவளன்றோ”.
நம் மோனத்தினூடே, நிழலின் அச்சத்தினால் நடுக்கம் கொள்ளும் மெல்லொளி போன்றதொரு விளைவை ஏற்படுத்தும் அவள்தம் குரல்வளம்.
ஆயினும் அமைதியற்ற ஒருவனோ, “மலைகளினூடே அவள்தம் அலறலைச் செவியுற்றோம்” என்பான்.
அவளுடைய கதறலுடன், குளம்பொலியும், அத்தோடு சிறகுகளின் படபடப்பும், சிம்மமதின்
கர்சனையும் சேர்ந்தே வந்ததாம்”.
இரவு நேரங்களில், நகரத்துக் காவலாளிகளோ, “கிழக்குப்புற சூர்யோதயத்திலிருந்து மேலெழலாம்” என்பார்கள்.
உச்சிவேளை உறைப்பில் உழலும் உழைப்பாளியும்,
நடைப்பயணியும்,”நாங்கள் அந்தி சாயும் பொழுதில், சாளரத்திலிருந்து அவள் பூமியின் மீது ஒய்யாரமாக சாய்ந்து கிடக்கக் கண்டோம்” என்றனர்.
குளிர்காலப் பனியில் கட்டுண்டு கிடப்பவனோ,”அவள் இள்வேனிற்பருவத்துடன் இதமாக குன்றுகளின் மீதோடு இணைந்தும் வரலாம்” என்பான்.
கோடையின் தகிப்பில் வாடும் அறுவடைக்காரனோ, ”இலையுதிர்காலத்தின் துவண்ட இலைகளுடன், இணைந்தே நடனமாடும் அவள் கேசத்தில் பனித்துளியும் கண்டோம்” என்கின்றனர்.
அழகு குறித்து அளவற்றவற்றை சொல்கிறீர் நீவிர்,
ஆயினும் உண்மையில் நீவிர் அவளைப்பற்றிப் பேசவில்லை. மாறாக நிறைவேறாத் தேவைகள் குறித்தே இயம்புகின்றீர்.
சோபனம் என்பது அவசியத்தேவையல்ல, ஆயின் அது ஓர் பேரானந்த நிலை.
அது நீர்வேட்கையுமன்று, முன்விரிந்த வெற்றுக்கரமுமன்று,
ஆயினும், ஓர் அழற்சியுற்ற இருதயமும், பரவசமான ஆன்மாவுமேயாம்.
அது உம் காட்சிக்குரிய பிம்பமுமன்று, செவிமடுக்கும் இசையுமன்று.
ஆயினும், அது உம்முடைய மூடிய விழிகளும் காணக்கூடியதுமான பிம்பம் மற்றும் உம் காதுகள் அடைபடும் போதும் நீவிர் கேட்கக்கூடிய இன்னிசை.
அது குடையப்பட்ட மரத்தின் பலமற்ற பகுதியும் அன்று, வளைநகத்தில் சிக்குண்ட சிறகும் அன்று,
ஆயினும் அது நித்தியம் மலர்ந்திருக்கும் சோலை மற்றும் அலையெனப் பறந்து திரியும் தேவதைகளின் கூட்டம்.
ஆர்பலீசு மக்களே, வாழ்க்கைத் தம் புனிதமான முகத்தை வெளிப்படுத்தும் வேளை அவ்வாழ்க்கையே கவின்மயம் அன்றோ.
ஆயின் நீவிரே வாழ்க்கையும் ஆகிறீர், மற்றும் அதன் திரையும் நீவிரே ஆவீர்.
அழகென்பது கண்ணாடியினூடே தம்மையே வியப்புற நோக்கும், ஆதியும், அந்தமுமில்லாதொன்று.
ஆயினும் நீவிரே நித்தியமானவரும், மற்றும் கண்ணாடியும் ஆவீர்காள்.
On Beauty – Khalil gibran
And a poet said, “Speak to us of Beauty.”
Where shall you seek beauty, and how shall you find her unless she herself be your way and your guide?
And how shall you speak of her except she be the weaver of your speech?
The aggrieved and the injured say, “Beauty is kind and gentle.
Like a young mother half-shy of her own glory she walks among us.”
And the passionate say, “Nay, beauty is a thing of might and dread.
Like the tempest she shakes the earth beneath us and the sky above us.”
The tired and the weary say, “beauty is of soft whisperings. She speaks in our spirit.
Her voice yields to our silences like a faint light that quivers in fear of the shadow.”
But the restless say, “We have heard her shouting among the mountains,
And with her cries came the sound of hoofs, and the beating of wings and the roaring of lions.”
At night the watchmen of the city say, “Beauty shall rise with the dawn from the east.”
And at noontide the toilers and the wayfarers say, “we have seen her leaning over the earth from the windows of the sunset.”
In winter say the snow-bound, “She shall come with the spring leaping upon the hills.”
And in the summer heat the reapers say, “We have seen her dancing with the autumn leaves, and we saw a drift of snow in her hair.”
All these things have you said of beauty.
Yet in truth you spoke not of her but of needs unsatisfied,
And beauty is not a need but an ecstasy.
It is not a mouth thirsting nor an empty hand stretched forth,
But rather a heart enflamed and a soul enchanted.
It is not the image you would see nor the song you would hear,
But rather an image you see though you close your eyes and a song you hear though you shut your ears.
It is not the sap within the furrowed bark, nor a wing attached to a claw,
But rather a garden for ever in bloom and a flock of angels for ever in flight.
People of Orphalese, beauty is life when life unveils her holy face.
But you are life and you are the veil.
Beauty is eternity gazing at itself in a mirror.
But you are eternity and your are the mirror.