Saturday, December 10, 2011

கெப்ளர் விண்கலத்தின் வெற்றி!

நறுக்.. துணுக்…

பவள சங்கரி

நாசா உறுதிப்படுத்திய பூமியைப் போன்ற மற்றொரு கிரகம்!


அண்டவெளியில் , பூமியைப் போன்று உயிரினங்கள் சுகமாக வாழ்வதற்கு ஏற்புடையதாக வேறு ஏதும் கிரகங்கள் உள்ளதா என்பதனை அறியும் விதமாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் கெப்ளர் விண்கலம் ஆய்வு செய்து கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பிரெஞ்சு விஞ்ஞானிகளால் பூமியைப் போன்ற கிரகம் ஒன்று வெகு தொலைவில் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கெப்ளர் விண்கலம் மூலம் அந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதில் அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் தற்போது உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது .கெப்ளர் விண்கலத்தில் உள்ள அதி நவீன புகைப்படக்கருவிகள் சுமார் 600 இலட்சம் கோடி கி.மீ தூரத்தில் பூமி போன்றதொரு கிரகம் இருப்பதை உறுதி செய்துள்ளதாக விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். பூமிக்குக் கிடைப்பதைவிட 25 சதவீதம் சூரியஒளி குறைவாகவே அதற்கு கிடைப்பதால் அங்கு மென்மையான வெப்பநிலை நிலவுகிறதாம்.இதனால் திரவ நிலையில் தண்ணீர் காணப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கெப்ளர் 22பி என்று பெயரிடப்பட்ட அந்த கிரகம் பூமியைவிட சுமார் 2.4 மடங்கு பெரியதாக இருக்கலாம் என்றும், அதன் வெப்ப நிலைகள் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. சூரியன் போன்ற நட்சத்திரம் ஒன்றை அந்த கிரகம் பாதுகாப்பானதொரு தொலைவிலிருந்து சுற்றி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டில் விண்வெளியில் ஏவப்பட்ட இந்த கெப்ளர் விண்கலம் சுமார் 155,000 நட்சத்திரங்களைக் கண்கானித்து வருகிறது. இத்தொலைக்காட்டி மூலம் இதுவரை கிரகங்கள் என்று அங்கீகாரம் பெறத்தக்கவைகள் என 2326 விண்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 207 கிரகங்கள் பூமி அளவிலானவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Tuesday, December 6, 2011

பெற்ற மனது

பவள சங்கரி
இன்று சனிக்கிழமை. மகள் மதிவதனி குழந்தைகளுடன் வருவதற்கு இன்னும் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஒரு வாரமாக பேரக்குழந்தைகளைப் பார்க்காமல் கண்ணில் கட்டியது போல் உள்ளது… மகளைஅடிக்கடி பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்றுதான் உள்ளூரிலேயே தேடிப்பிடித்து இந்த மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுத்தும் வாரம் ஒரு முறைதான் பேரக்குழந்தைகளையும்,மகளையும் பார்க்க முடியும்.
அப்படித்தான் மகள் மகிழ்ச்சியாகவா வருகிறாள்? வரும்போதெல்லாம், என் கணவர் இதை வாங்கிவரச் சொன்னார்… அதை வாங்கி வரச்சொன்னார் என்ற புலம்பல் வேறு. இவ்வளவு நாட்கள் மனைவி சமாளித்திருப்பாள் போல. ஒரு முறை கூடைதுபற்றி புகார் கொடுத்ததில்லை மகராசி…
மகள் வரும்போதே , “ அப்பா இந்த மாதம் இன்கம்டேக்ஸ்ல பணம் பிடிச்சிட்டான். செலவுக்குப் பணம் போதவில்லைப்பா.. கிரண்டர் ரிப்பேர் ஆயிடிச்சி, என்று இப்படி எதாவது ஒரு காரணம் சொல்லிக் கொண்டுதான் வருவாள். மகள் வரும்போதே இப்படி ஏதும் பிரச்சனையோடு வருவாள் என்று தெரிந்தே கையில் தயாராக ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்து வைத்துக்கொண்டு காத்திருப்பது வழமையாகிவிட்டது. இதில் மாப்பிள்ளைக்கு நேரில் வந்து கேட்பதற்கு கௌரவக் குறைச்சல் என்ற நினைப்பு வேறு…
மாப்பிள்ளையைப் பார்த்து எவ்வளவு நாட்களாகிவிட்டது. மகள் மட்டும் வந்து பார்த்துவிட்டுப் போவாளே தவிர மாப்பிள்ளை இந்தப் பக்கம் தலை வைத்துக் கூடப்படுப்பதில்லை! ஏன் என்றுதான் புரியவில்லை. மனைவியை இழந்து தன்னந்தனி மரமாக மனம் நொந்து நின்ற பொழுது, ஆதரவாக தோளை அணைத்துக் கொண்டு, நாங்கள் இருக்கிறோம் மாமா மனம் தளராதீர்கள் என்று சொன்ன சமயம் எவ்வளவு தெம்பாக இருந்தது மனதிற்கு. ஆனால் அதோடு சரி , இந்த முதுமைக் காலத்தில் தனிமைக் கோலத்தில் நரகமாய்ப் போன வாழ்க்கையில் ஞாயிற்றுக் கிழமை மட்டுமே புதிதாய்ப் பிறந்தது போன்று ஒரு உற்சாகம் வரும். அன்றுதானே மகளும் பேரக் குழந்தைகளும் தன்னைப் பார்க்க வருவார்கள். இப்படியே ஆறு மாதம் ஓடி விட்டதே… இன்னும் எவ்வளவு காலம் இப்படி ஓட்டமுடியும் தெரியவில்லை.மகள் வீட்டில் போய் அவளுடம் தங்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை. ஆனது ஆகட்டும் பார்ப்போம் என்று அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
ஏனோ அன்று ஒரே சூனியமாக இருந்தது மனதிற்கு. மகள் விட்டிற்குப் போய் குழந்தைகளுடன் சற்று நேரம் கழித்தால் தேவலாம் போல் இருந்ததோடு, மாப்பிள்ளையையும் பார்த்துவிட்டு, ஏன் தன்னைப்பார்க்க வருவதில்லை என்று கேட்டு விட்டும்வந்து விடலாம் என்று கிளம்பியாகிவிட்டது. உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்கும் நேரம் , பஸ் பிடித்து ஒரு வழியாக வந்து சேர்ந்தாகிவிட்டது. மகள் சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டாள். சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு, குழந்தைகளை அழைத்துக் கொண்டு கிளம்பி வந்துவிட வேண்டும் என்ற முடிவோடு கதவை நெருங்கி , அழைப்புமணியை அடிக்கப் போனவர், மாப்பிள்ளையின் குரல் உரக்கக் கேட்கவும், அதுவும் தன் பெயர் அடிபடவும், தூக்கிய கையை அப்படியே நிறுத்திவிட்டு, அமைதியாக நின்று கொண்டார்.
“ ஏய், மதி, நாளைக்காவது மாமாவைப் பார்க்க நானும் வறேனே.. அவரைப்பார்த்து மூன்று மாதம் ஆகிவிட்டதே. என்னை மட்டும் ஏன் வரவிடமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறாய்.. ஒன்னுமே புரியல எனக்கு. பாவம் மனிதர் தனியா இருந்துகிட்டு எவ்வளவு நொந்து போயிருப்பார். ஆதரவா போய் நாலு வார்த்தை பேசக்கூட விடமாட்டேங்கற.. அப்படி என்னதான் பிரச்சனை உனக்கு?”
இதைக்கேட்டவுடன் அப்படியே தூக்கி வாரிப்போட்டு விட்டது. என் மகளா இப்படி.. ஏன் இப்படி செய்கிறாள்?
“ ஏங்க , நீங்க கூடவா என்னைப் புரிஞ்சிக்கல..?” என்றாள் குரல்கம்ம.
“ அம்மா இறந்த பிறகு பல முறை நானும் அவரிடம் , நம்முடனேயே வந்து தங்கிவிடும்படி சொல்லியும் அவர், பெண் வீட்டில் வந்து தங்குவது தன் தன்மானத்திற்கு இடம் கொடுக்கவில்லை என்று மறுத்து விட்டது உங்களுக்கும் தெரியுமில்லையா? அவருக்கு உங்க மேல உள்ள அதிகமான பாசமும் எனக்குத் தெரியும். உங்களைப் பார்க்காமல் ரொம்ப நாளைக்கு அவரால இருக்க முடியாது.
அது மட்டுமில்லை, அவர்கிட்ட போய் எப்பப் பார்த்தாலும் அது வேணும், இது வேணுமின்னு தொந்திரவு செய்யிறதுக்கும் காரணம் இல்லாமல் இல்லை. வாழ்க்கையில் தனிமை மட்டும் ஒரு சோகமில்லை, அதைவிட சோகம் தன்னால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்பதுதான். அப்படி ஒரு நிலை வந்தால், வாழ்க்கையில் ஒரு பிடிப்பே இல்லாமல் போயிடும். இது அவருடைய ஆயுளைக்கூட குறைக்க வாய்ப்பிருக்கு இல்லையா. அதனால்தான் என் மனதை கல்லாக்கிக் கொண்டு நான் இப்படி நடந்துக்கறேன்” என்றாள் கண்ணீர்மல்க..
இதைக்கேட்ட தந்தையின் மனம் பாகாய் உறுகித்தான் போனது. உடனே ஓடிச்சென்று தன் மகளை அள்ளி அணைத்துக் கொள்ள இதயம் துடித்தாலும், மனதை கட்டுப்படுத்திக் கொண்டு, எதையும் கேட்காதது போன்று வந்த வழியே திரும்பிச் சென்றுவிட்டார் ஒரு முடிவோடு!
ஆம் , மறுநாள் மகள் மதிவதனி வந்து தன்னை உடன் வந்துவிடும்படி அழைக்கும் போது, தன்மானத்தையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு அவளுடன் சென்று கொஞ்ச நாட்களாவது தங்கி வர வேண்டும்…..
படத்திற்கு நன்றி :

Sunday, December 4, 2011

செவ்வி - கலீல் ஜிப்ரான்

செவ்வி


செவ்வியைப்பற்றித் தங்கள் கருத்தைக் கூற வேண்டும் என்று வேண்டிய ஒரு கவிஞனுக்கு கிப்ரானின் மறுமொழி:

எழிலை நீ எங்கே தேடுவாய், அவளே உன் பாதையாகவும், உன் வழிகாட்டியாகவும் இல்லாதவரை எவ்வாறு அவளை அடையாளம் காணப்போகிறாய்?

உம் பேச்சுக்களை நெய்பவளாக அவள் இல்லாதவரை எப்படி அவளைப்பற்றி பேசப்போகிறீர் நீவிர் ?

சஞ்சலம் கொண்டவரும், புண்பட்டவரும், “ அழகு அன்பானதும், சாந்தமானதும்” என்பார்கள்.

“ தம்பேழ் கண்டு அரை - நாணம் கொள்ளும் இளம் தாயைப் போன்று அவள் நடக்கிறாள் நம்மிடையே”

உணர்ச்சிவயப்பட்டவரோ, ”அழகு என்பது வல்லமையும், அசங்கியமுமான பொருள் என்பர்.
அவள் கொந்தளிப்போடு பூமியையே நமக்குக் கீழேயும், வானத்தை நமக்கு மேலேயும் புரட்டிப் போடுபவள்”

களைப்புற்றவரும், சோர்வுற்றவரும், ” செவ்வி என்பது அமைதியான முனகல்கள். அவள் நம் ஆன்மாவினுள் பேசுபவள், என்பர்.

நிழலின் அச்சத்தால் நடுக்கம் கொண்ட மெல்லொளி போன்று அவள் குரல் நம் மோனத்தை வளமாக்குகிறது.

ஆயினும், அமைதியற்ற ஒருவர் ,” மலைகளினூடே அவள் அலறிக் கொண்டிருப்பதை நாங்கள் கேட்டிருக்கிறோம்” என்பார்.
” அவளுடைய கதறலுடன், குளம்பொலியும், அத்தோடு சிறகுகளின் படபடப்பும், சிம்மத்தின் கர்சனையும் சேர்ந்தே வந்ததாம்”

இரவில் நகரத்துக் காவலாளியோ ,” செவ்வி கிழக்குப்புறத்திலிருந்து, உதயத்துடன் எழலாம் “ என்பார்.
உச்சிவேளை அலைக்கழிப்பில் உழைப்பாளிகளும், கால்நடைப்பயணிகளும், “ நாங்கள் அவளை ஆதவன் மயங்கும் சாளரத்திலிருந்து, தாரிணியின் மீது சாய்ந்து கொண்டிருப்பதைக் கண்டோம்” என்கின்றனர்.

குளிர்காலப்பனியில் கட்டுண்டு கிடந்தவரோ, “ அவள் குன்றுகளின் மீது குதியாட்டம் போடும் இளவேனிற்பருவத்துடன் சேர்ந்து வரலாம்,” என்பார்.

கோடையின் தகிப்பில் தவிக்கும் அறுவடைக்காரரோ, “ நாங்கள் , அவள் இலையுதிர் காலத்தின் இலைகளுடன் நர்த்தனம் ஆடிக்கொண்டிருப்பதையும் , அவள் கேசத்தில் பனித்துளியையும் கண்டோம்”, என்கிறார்.

இவையெல்லாம் எழிலைப்பற்றி நீங்கள் சொல்வது.

இருப்பினும் , உண்மையில் நீங்கள் அவளைப்பற்றிப் பேசவில்லை. மாறாக உங்கள் நிறைவேறாத தேவைகளைப் பற்றியே பேசியிருக்கிறீர்கள்.
செவ்வி என்பது ஒரு தேவை என்பதில்லை ஆனால் அது ஒரு பேரானந்தம். ( மெய்மறந்த தெய்வீக இன்பம்)
அது வாய் வேட்கையுமன்று , முன் விரிந்த வெற்றுக்கரமுமன்று,
ஆயினும் ஒரு அழற்சியுற்ற இதயமும் , பரவசமான ஆன்மாவுமாகுமது.
அது நீங்கள் காணக்கூடியதாக உள்ள பிம்பம் அன்று, மற்றும் கேட்கக்கூடிய இசையுமன்று,
ஆயினும் அது நீங்கள் கண்களை மூடிக்கொண்டு காணக்கூடிய பிம்பமாகவும் , காதுகளை மூடிக்கொண்டு கேட்கக்கூடிய இசையுமாகவும் இருக்கும்.
அது குடையப்பட்ட மரப்பட்டையின் பலமற்ற பகுதியுமன்று, வளைநகத்தில் இணைந்த சிறகுமன்று.
ஆயினும் அது நித்தியம் மலர்ந்திருக்கும் சோலை மற்றும் நிதமும் பறந்து கொண்டிருக்கும் தேவதைகளின் கூட்டம்.

ஆர்பலீசு மக்களே, வாழ்க்கை தன்னுடைய புனிதமான முகத்தை வெளிப்படுத்தும் போது அந்த வாழ்க்கைதான் அழகு.
ஆனால் நீங்களே வாழ்க்கை மற்றும் நீங்களே அந்த திரை
கண்ணாடியில் தன்னையே வியப்புடன் உற்று நோக்கும் அமரத்துவம்தான் அழகு.
ஆனால் நீங்கள்தான் அமரத்துவமானவர்கள் மற்றும் நீங்கள்தான் அந்தக் கண்ணாடி.




கதம் காத்து, கற்று, அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும், ஆற்றின் நுழைந்து. -குறள் (130)


திருமந்திரம்: 1987

உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்து
சொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லை
சொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு
உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே.

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. - தந்தை பெரியார்