Saturday, January 25, 2014

குடியரசு தின வாழ்த்துகள்!


பவள சங்கரி


தலையங்கம் (வல்லமை இணைய இதழ்)


republic
நம் நாடு முழுவதும் இன்று 65 வது குடியரசு தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கில ஆதிக்கத்தில் கட்டுண்டு இருந்த நம் இந்தியாவை தம் குருதி மட்டுமல்லாமல் இன்னுயிரையும் ஈந்து, நம்மையெல்லாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்த தன்னலமற்ற தலைவர்களை நினைவுகூர்ந்து வணங்க வேண்டிய நாள் இது. வியாபாரம் செய்ய உள்ளே வந்து நம் நாட்டையே பிடித்துக் கொண்டவர்களிடமிருந்து அகிம்சை முறையில் போராடி 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றுத் தந்தனர் நம் தேசத் தலைவர்கள். விடுதலைக்குப் பிறகு, நம் நாட்டின் சிறப்பான வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, மக்களாட்சியை மலரச் செய்ய முயன்றனர். டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், நம் இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, குடியரசு தின, கொண்டாட்டத்தைத் துவக்கி வைத்தார்கள்.  இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்தவர் திரு இராஜேந்திரப் பிரசாத் அவர்கள். இவர் 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் இவர்தான். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரித் திங்கள் 26 ஆம் நாள் தம் தாய்த் திருநாட்டைக் காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் அரசு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

Friday, January 24, 2014

கோவையில் கோலாகலத் தமிழ்த் திருவிழா!


பவள சங்கரி 
DSC09929
ஜனவரி 20, 2014 திங்கட்கிழமை மாலை தொடங்கி, கடந்த மூன்று நாட்களாக கோவை மெடிகல் சென்டர், மருத்துவ மையத்தில் ’தாயகம் கடந்த தமிழ் ’ என்ற உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம், 19ம் நாள், கோவை மெடிக்கல் சென்டர் – மருத்துவ மையத்தின் தலைவரும், டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் தலைவருமான,மருத்துவர். நல்ல பழனிசாமி அவர்களின் முயற்சியால், ”தமிழின் வளம் தமிழர் நலம்” என்னும் இலக்கோடு உருவாக்கப்பட்டுள்ளது தமிழ் பண்பாட்டு மையம். ‘எங்கெங்கு காணினும் தமிழனடா’ என்று சொல்லும் அளவிற்கு, உலகம் முழுவதும் பரவி வாழும் நம் தமிழர்களின் ஆழ்ந்த மொழிப்பற்று, எத்தகையச் சூழலிலும், எதுவிதமான நெருக்கடியிலும் உயிர்ப்போடு வாழ்ந்து வரும் நம் தமிழ் மொழிக்கு மேலும் வளம் சேர்க்கும் வகையில் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற உயிர்த் துடிப்பில் உருவானதுதான் இம்மையம். நம் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் வளமை குறித்து அளவற்ற பெருமிதம் கொள்ளும் அளவிற்கு, நாம் எதிர்காலத்தில் வரும் தலைமுறைகளுக்கு ஒரு செல்வமாக இதனை அளித்துவிட்டுப் போகும் பொறுப்பு எனும் நோக்கம் நிறைவேற வேண்டும் என்ற கருத்தின் ஆணி வேருக்கு உரம் இடும் வகையில், தமிழ் மக்களிடம், தமிழ் ஓர் உலகளாவிய மொழி உலகின் பல பகுதிகளிலிருந்தும் அது கொடைகள் பெறுகிறது என்ற உண்மை உணர்த்தப்பட வேண்டும் . அப்படிச் செய்வதால் இயல்பாக தமிழர் மனதில் எழும் பெருமித உணர்வு, தமிழ் மொழியைத் தொடர்ந்து மேன்மைப்படுத்தி காப்பாற்றி வரக்கூடும் என்ற சீரிய ஆக்கப்பூர்வமான, உளவியல் அணுகுமுறையிலான சிந்தனையுடன் 12 நாடுகளிலிருந்து, 35 எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் வல்லுநர்களைக் கொண்டு, அரசு அல்லது அரசியல் அமைப்புகளைச் சாராத எழுத்தாளர்களால் இந்த கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கவிஞர் முனைவர், மொழிபெயர்ப்புக்காகவும், படைப்பிலக்கியத்துக்க்காகவும் இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்றவர், தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் சிற்பி அறக்கட்டளை மூலம் விருதுகள் அளித்து வருபவருமான திரு சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் முனைவர் ப.க. பொன்னுசாமி ஆகியோர் அறங்காவலர்களாகவும் இப்பணியை முன்னெடுத்துள்ளனர். மாண்பமை நீதியரசர் திரு வி. ராமசுப்ரமணியன் அவர்கள் (சென்னை உயர்நீதி மன்றம்) கருத்தரங்கைத் தொடங்கி வைத்து முதன்மை உரை நிகழ்த்தி சிறப்பித்தார்கள்.  முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன்  அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

Tuesday, January 21, 2014

சிறுவர்களுக்கான நூல் - கதை கதையாம் காரணமாம்!



வணக்கம் நண்பர்களே!

பழனியப்பா பதிப்பகத்தார் மூலம் வெளியிடப்பட்டுள்ள என்னுடைய மற்றுமொரு சிறார்களுக்கான நூல் இது. சென்னை புத்தகத் திருவிழாவில் கிடைக்கிறது. வாய்ப்பிருந்தால் வாங்கிப் பார்த்துச் சொல்லுங்கள். நன்றி.



    


கதைகள் என்பது நம்மைச் சுற்றி நடப்பவற்றிற்கு ஒரு சாளரமாக இருப்பது. குழந்தைகளுக்காக எழுதுவது என்பது நாமும் குழந்தையாக மாறி, அவர்கள் இடத்தில் இருந்து சிந்தித்து, அவர்களுக்காகப் பேசி, அவர்கள் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் எழுதுவது. அந்தக் கதையின் நாயகர்கள், கடவுளாகவோ, மனிதராகவோ, தேவராகவோ, முனிவராகவோ, பறவைகளாகவோ, மிருகங்களாகவோ அல்லது உயிரில்லாத சடப் பொருளாகவோ கூட இருக்கலாம்.

Sunday, January 19, 2014

நோ செண்டிமெண்ட்ஸ் மம்மி!




பவள சங்கரி

ஸ்ரீநிதி.. ஸ்ரீநிதி...  என்ன காரியம் செய்திருக்கிறாய் நீஎத்தனை தடவை சொன்னாலும் உனக்கு புத்தியில் உறைக்கிறதே இல்லைநான் பாட்டுக்கு பயித்தியம் மாதிரி கத்திட்டிருக்கேன். நீ கொஞ்சமாவது  சட்டை பண்றயாஇன்னும் என்ன சொல்லி உன்னை திருத்தறதுன்னு தெரியல.. கடவுளே

எதுக்கும்மா இப்படி தேவையில்லாம கூப்பாடு போடற நீ? இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி சீன் போடற. போம்மா, போய் வேற ஏதாவது வேலை இருந்தா போய்ப்பாரு

அடிப்பாவி. நான் இவ்ளோ சொல்லியும் நீ சர்வ சாதாரணமா கூப்பாடு போட்றேன்னு சொல்ற.. உன் மாமியார் வந்திருக்காங்க நினைப்பிருக்கா. இப்பகூட திருந்த மாட்டியா? அவிங்க கிராமத்துக்காரவிங்க. பாவம் நம்மளோட அதிநாகரீகமெல்லாம் அவிங்களுக்கு புரியாது. அதனால் அவிங்க ஊருக்குப் போற வரைக்குமாவது கொஞ்சம் நான் சொல்றத கேளும்மா ப்ளீஸ். அவிங்களுக்குத் தெரிஞ்சா தாங்க மாட்டாங்க. பிரச்சனையாயிடப் போவுது. கல்யாணம் ஆகி இன்னும் முழுசா மூனு மாசந்தான் ஆவுது. அதுக்குள்ள இப்படின்னா, அப்பறம் அவிங்க என்ன முடிவு எடுப்பாங்கன்னு சொல்லவே முடியாது