Saturday, February 7, 2015

சுட்டும் விழிச்சுடர்!





திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பலவிதமான திருப்பங்களை ஏற்படுத்தக்கூடியது. எத்தனையோ கனவுகள், கற்பனைகள், பருவம் ஏற்படுத்தும் எதிர்பார்ப்புகள் என்று மண நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்
இந்தியப் பெண்கள் பொதுவாகவே தங்கள் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் போன்ற அனைத்தையும் தங்கள் மதம் சார்ந்தே கடைபிடிக்கிறார்கள். தங்கள் அன்றாட கடமைகள் அனைத்தையும் தங்கள் மதச் சடங்குகளைப் போலவே ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்பவர்கள். சென்ற தலைமுறையின் பெண்கள் கூட, வீட்டில் கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார் என்று அனைவரின் தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு, அமைதியாக பூசை, வழிபாடுகள், துளசிச் செடியை வலம் வருதல், ஓரளவிற்குப் படித்தவர்கள் என்றால் வீட்டுக் கணக்குகள், கணவனுக்குச் சின்ன உதவிகள் செய்வது போன்றவற்றில் மட்டும் பங்கெடுத்துக்கொண்டு மிக அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பழமைவாதத்தில் பாங்காக குடும்பத்திற்கு அடங்கிய மருமகளாக, குழந்தைகளின் பாசமிகு தாயாக, நல்ல கடவுள் பக்தையாக இப்படி ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையில் சுகம் கண்டவர்கள். ஆனால் உலகம் முழுவதும் இன்று கால மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. சென்ற தலைமுறையில் வாழ்ந்த நம் பெற்றோர் அனுபவித்த ஒரு அமைதியான வாழ்க்கை இன்று உள்ளதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவர்களிடம் பெரிய சொத்து வசதிகளோ, அதிக செல்வமோ இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய இயந்திர வாழ்க்கை அன்று இல்லை. இன்றுபோல் பொருளாதார பற்றாக்குறையும், சிக்கலும் அதனால் மனநிம்மதி கெட்டு, உடல் நலக் குறைவும் ஏற்படும் அவல நிலை அன்று இல்லை. உள்ளதைக்கொண்டு மகிழ்ச்சியாக வாழக் கற்றிருந்தார்கள் அவர்கள். நாகரீகம் வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில் உணவு முறைகள், வாழும் முறைகள் என அனைத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் விதவிதமான புதிய நோய்களையும் இலவச இணைப்புகளாக்கியுள்ளன. இதில் மிக முக்கியமானது ஆண்களைப் பாதிக்கும் ஆண்மைக் குறைவு. சுரப்பிகளின் குறைபாடு போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இன்றைய பெரும்பாலான விவாகரத்திற்கான காரணம் ஆண்மைக் குறைவு என்று கூறப்படுகின்றன. சமூகப் பிரச்சனைகளில் மிக முக்கியமான ஒன்றான இந்த மணமுறிவு இன்று குறிப்பிடும் அளவிற்கு கனிசமாக அதிகரித்துள்ளது.

பொன் மொழிகள்!


பவள சங்கரி