Saturday, April 4, 2020

கொரோனா கொடுமை - 1



படித்த அரசு அதிகாரிகளும் இப்படி இருந்தால் என்ன செய்வது?
சமீபத்தில் கொல்கத்தா, இங்கிலாந்திலிருந்து திரும்பிய, தனது முதல் கொரோனா தொற்று நோயாளியை உறுதிப்படுத்தியது. அவர் ஒரு உயர் அதிகாரியின் மகன்.
18 வயதான இந்த ஆக்சுபோர்டு பல்கலைக்கழக மாணவர் மார்ச் 15 அன்று இலண்டனில் இருந்து கொல்கத்தாவில் இருக்கும் தன் வீட்டிற்குத் திரும்பினார். சொந்த ஊருக்கு வருவதற்கு முந்தைய நாள் இரவு, தீன் என்ற இந்த இளைஞர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தனது இலண்டன் தோழர்களுடன் பார்ட்டியில் இருந்துள்ளார். இதனை உறுதி செய்துகொண்ட விமான நிலைய அதிகாரிகள் அவரை மருத்துவமனையில் சென்று சோதனை செய்யச் சொன்னார்கள். ஆனால் கவலை ஏதுமின்றி அவன் விதிமுறைகளையும் மீறியதோடு மேற்கு வங்காளத்தின் உயர்மட்ட அதிகாரியான அவரது தாயார் அருணிமா தேவிடம் சென்று சேர்ந்திருக்கிறார்.
இப்படியெல்லாம் அவர் சமூகத்துடன் கலந்து வாழ்க்கையைத் தொடர்ந்தார். அவர் 7 க்கும் மேற்பட்ட கேளிக்கை விருந்துகளில் பங்கேற்றார் என்றும் சிலர் கூறுகிறார்கள். அவர் தனது தாயை மேற்கு வங்க முதல்வர் அலுவலகத்திலும் சென்று சந்தித்திருக்கிறார்.
ஆனால் இதன்பின் கொரோனா தொற்றின் அறிகுறிகள் மோசமாகி, மார்ச் 16 அன்று தனது மகனை எம்.ஆர்.பங்கூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் அம்மா.
ஆனால் மீண்டும் மகனை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்து, அவரது தாயார் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அதை விட்டு வெளியேறினார்.
இறுதியாக, மாநில சுகாதார நலத் துறை தலையிட்டு அவரை பெலகாட்டா ஐ டி மருத்துவமனையில் அனுமதிக்கும்படி கட்டாயப்படுத்தியது, அங்கு அவர் மார்ச் 17 அன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்ததை உறுதி செய்யப்படுகிறார்.
இரண்டு நாட்களுக்குள் அவர் எத்தனை பேருக்கு தொற்றை பரவச் செய்திருக்கலாம் என்று கற்பனை செய்து பாருங்கள். இப்போது அவரது குடும்பம் அவர்களின் ஆடம்பரமான தெற்கு கொல்கத்தா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவரது ஏழை வாகன ஓட்டுனர்களும் அடக்கம் என்பது வேதனையான செய்தி. அதிகாரியான அருணிமா இந்த இடைப்பட்ட நேரத்தில் பல அரசாங்க கூட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளார்.
இந்த செய்தி வெளிச்சத்திற்கு வந்த பின்னர் மேற்கு வங்க செயலகத்தையே கிருமி நாசினியால் தூய்மை செய்ய வேண்டியிருந்துள்ளது.

Annu Kaushik
Journalist at WION (World Is One News) -

Monday, March 30, 2020

பிறந்தநாள் வாழ்த்துகள்!




அன்பு மகன் செந்தில் குமாரின் இனிய பிறந்தநாள் இன்று. குழந்தைகள் எல்லாம் அக்கரையில் இருக்க, இக்கரையில் நாங்கள் நினைவுகளைச் சுமந்துகொண்டு இறையருளால் அனைத்து துன்பங்களும் தீர்ந்து அனைவரும் புத்துயிர் பெற்று இணைவோம் என்ற நம்பிக்கையுடன் அன்பு மகனை வாழ்த்துகிறோம். தங்களின் உளமார்ந்த வாழ்த்துகளும் அவர்களை நலமாக வாழவைக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துங்கள் நண்பர்களே!  நன்றி.






வெற்றிவாகை சூடிவா  மகனே!
நம்பிக்கையோடு எதிர்கொள் சவால்களை
உலகின்  உன்னதங்கள் யாவையும் அதனூடே
மறையாய் மகோன்னதமாய் மலர்ந்திருக்கும்
சாகசங்களை மகிழ்வாய் கொண்டாடிவிடு சகோதரத்துடன்
பம்பரமாகச் சுழன்று வென்றுவிடு நல்மனங்களை

புன்னகை சூடியே புவியை ஆளலாம் 
இன்னல் விலக்கலாம் இதமான சொல்லால்
வள்ளல் ஆகலாம் வளமான செய்கையால்
இதயம் மலரலாம் மதியூகச் சிந்தையால்

கள்ளம் இல்லா உள்ளத்தோடு வலம்வரும்
கருணை பொங்கும் இதயத்தோடு நலம்நாடும்
என்றும் மானம் பெரிதெனும் தவத்தோடும்
உண்மை நெறியோடு வாழும் உறுதியுடனும்

நேயமெனும் சுடரேற்றி தூய்மையெனும் சுவாசமுடன்
நட்பெனும் கவசமுடன் பாசமெனும் பரவசத்துடன்
நித்தமும் நினைவோடு கனவிலும் நித்தியனை
பணிந்தேற்றி கடந்திடு இன்றைய சோதனையை.

நன்றே செய்கினும் நமச்சிவாயனின் பதம்பற்றி
தீதே விளையாதெனும் நம்பிக்கை ஒளியுடன்
பாரே போற்றும் நற்காரியங்களை நாளும்
நயந்து சிரமேற்கொளும் பண்புடனே வாழ்க!

உனதன்பெனும் தீராக்கடனை சுமப்பவள் நானடா!
துன்பம் யாவும் கதிரோனைக்கண்ட பனிபோல் விலக
வளமும் நலமும் பெற்று வாழ்க வாழ்க
தரணி போற்றும் தமிழும் அமிழ்தும் போல 
மங்கலமாய் மனைவி மக்களுடன் மங்காப்
புகழுடன் மாமனிதமாய் வாழ்க நீ பல்லாண்டு!!