Friday, February 16, 2018

தமிழ் இயக்கம் அமைப்பு உருவாக்க கலந்துரையாடல் கூட்டம் - புத்தக வெளியீடு








தமிழ் இயக்கம் அமைப்பு உருவாக்க கலந்துரையாடல் கூட்டம் 14-02-2018 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விஐடி பல்கலைக்கழக வேந்தர் கல்விக்கோ.முனைவர்.கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. தலைமை உரை ஆற்றிய வேந்தர் அவர்கள் நமது தமிழ் மொழியை சீரும் சிறப்புமாக எடுத்துச் செல்லும் வகையில் பல கருத்துகளைக் கூறினார். இது போன்ற இயக்கங்களில் இளைய தலைமுறையினரும், குறிப்பாகப் பெண்களும் பங்கேற்கும் வகையில் செயல்படவேண்டும் என்று வலியுறுத்தினார். குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில், இந்தக் காலத்தில் பெண்கள் சோதிடம் பார்த்து பெயர் வைப்பதாகக்கூறி பெரும்பாலும் வாயில் நுழையாத வடமொழி எழுத்துகளைக்கொண்ட பெயர்களையேச் சூட்டுகிறார்கள். நம் தமிழ் மொழியின் தொன்மையையும், பெருமையையும்  அவர்கள் உணரும் வண்ணம் இந்தத் தமிழ் இயக்கம் முன்னெடுக்கப்படும். இது குறித்த தங்கள் ஆக்கப்பூர்வமானக் கருத்துகளையும் அனைவரும் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. புலவர் பதுமனார், கவிஞர் அப்துல்காதர், திரு.சுகுமாரன் திருப்பூர் முத்தமிழ் சங்கத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ், திரு ஸ்டாலின் குணசேகரன், திரு.முத்துக்குமாரசாமி, ஈரோடு தங்க. விசுவநாதன் மற்றும் திரு செ.ரா. சுப்பிரமணியம் ஆகியோரும் கலந்துகொண்டு சிறந்த கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.











தொடர்ந்து நடைபெற்ற எழுத்தாளர் பவள சங்கரி அவர்களின் “கந்திற்பாவை” என்ற கவிதை நூலும், “கொரிய வளமும் தமிழ் உறவும்” என்ற ஆய்வு நூலையும்” வெளியிட்டுப் பேசிய வேந்தர் அவர்கள் கந்திற்பாவை கவிதை நூலிற்கு தாம் அணிந்துரை வழங்கியிருப்பதைக் குறிப்பிட்டார். ஆய்வு நூலைப்பற்றிக் கூறும்போது கொங்கு நாட்டிலிருந்து ஒரு பெண் சென்று கொரிய நாட்டையே உருவாக்கியிருப்பதை நூல் தெளிவாக விளக்குவதாகக் கூறினார். தொடர்ந்து ஆசிரியர் கொரிய நாட்டிற்குச் சென்று அங்கு தங்கி மேற்கொண்டு ஆய்வினை முழுமைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இவரைத் தொடர்ந்து ஆய்வு நூலை திறனாய்வு செய்து பேசிய எழுத்துச்சிற்பி சிதம்பரபாரதி அவர்கள் கொரிய மொழியில் ஆயிரக்கணக்கான தமிழ் வார்த்தைகள் இருப்பதையும், கொரிய மக்களும் தங்கள் பெற்றோரை அம்மா, அப்பா என்றே அழைப்பதையும்  ஆசிரியர் கூறுவதையும் எடுத்துரைத்து, வடகொரியா, தென்கொரியா என இரு நாடுகளும் இணைந்து ஒரே நாடாக ஆவதற்கு இந்த நூலை சமர்ப்பிப்பதாக ஆசிரியர் குறிப்பிட்டதை சிறப்பாக எடுத்துரைத்தார்.