Friday, August 30, 2013

அமைதிக்கான விடியல்!


பவள சங்கரி




மழலை உலகினுள் கபடமற்ற 
மலராய் நுழைந்து மாசற்ற
அன்பைப் பனியாய் பொழிந்து
நேசமெனும் தணலில் காய்ந்து
கதகதப்பாய் கவலையின்றி
கற்கண்டாய் மொழிகள் பலப்பேசி
செவ்விதழ் மலர செழுங்கரும்பாய்
வெள்ளைப்பூக்களின் தேனிசை முழங்க
கவின்மிகு கற்பனைத்தேரில்
கலந்தே கவிபாடி கசிந்து மனமுறுகி
செங்கதிரோனின் பாசக்கரங்கள்
பற்றற்று பற்றிக்கொள்ள பாந்தமாய்
பசுமையாய் பரவசமாய் மலர்ந்தது
எம்காலைப்பொழுது!




படத்திற்கு நன்றி:

Thursday, August 29, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (25)


பவள சங்கரி

முழுமையாக அந்த நொடியில் வாழுங்கள்!!
“அந்த நொடியில் மகிழ்ச்சியாக இருங்கள், அது போதும். நமக்குத் தேவையானதெல்லாம் அந்த ஒவ்வொரு நொடி மட்டும்தான், அதற்கு மேல் இல்லை”
அன்னை தெரசா
images 5முதல் முறையாக என் அமெரிக்கப் பயணம். நடு இரவில் வீடு வந்து சேருகிறோம். நடுங்கச் செய்யும் கடுமையான குளிர். கும்மிருட்டு. இலையுதிர் காலப்பருவம். கம்பளிக்குள் நுழைந்துகொண்டு சுருண்டு விட்டாலும், காலையில் எழுந்து வெளியே வந்து பார்த்தபோது என் கண்களையே நம்ப முடியாத அளவிற்கு திரும்பிய புறமெல்லாம் தரை முழுவதும் செவ்வாடை போர்த்தது போன்ற அழகிய வண்ண இலைகள். நிமிர்ந்து பார்த்தால் மரங்களிலும் அதே அழகுக் காட்சி. எதிர்பார்க்காத இந்த அழகின் உச்சத்தில் அசந்துபோய் நின்றிருந்தேன். நடைபாதை முழுவதும் பட்டுக்கம்பளம் விரித்தது போன்று மெத்தென்ற இலைகளின் குவிப்பு. ஏதோ புதியதோர் உலகில் நுழைந்துவிட்டது போன்றதொரு பரபரப்பு. உலகமே மொத்தமாக உயிருடன் விழித்துக்கொண்டது போல ஒரு தோற்றம். என் மன உணர்வுகள் அத்தனையும் ஒருசேர விழிப்புணர்வு பெற்றிருந்தது. சூழ்நிலைகளைப் பற்றிய தெளிவான விழிப்புடன் இருந்தது மனது – நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமாக பாதிக்கக்கூடிய நிகழ்வுகளை மன நிறைவுடன் எதிர்கொள்வதற்கான பயிற்சியும் இதனை ஒத்ததுதான். ஏதோ ஒரு வகையில் மறைந்திருக்கும் விரும்பத்தகாத எண்ணங்கள் அல்லது அச்சப்படக்கூடியதோ, வெட்கப்படக்கூடியதோ, சங்கடப்படச்செய்வதோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ, சமாளிக்கவோ முடியாமல் போகக்கூடியதோ போன்ற சந்தர்ப்பங்களில், முழுமையான விழிப்புணர்வுடன் செயல்படுவதால் அது நம்மை அதன் விளிம்பில் கொண்டு நிறுத்திவிடும் என்றாலும் அந்த மாற்றம் நம்மை பயமுறுத்தவோ, சிரமப்படுத்தவோ அல்லது வேதனைப்படுத்தக்கூடிய வகையிலோ இல்லாமல், அந்தச் சூழலின் நிதர்சனத்தை யதார்த்தமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இலகுவாக்கிவிடும். முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் மனம் சம்மதிக்கும். இதனால் அதற்கான தீர்வும் தெளிவாகிவிடும். சுருங்கச் சொன்னால் அது சுகமான அனுபவமோ அல்லது சுமையான அனுபவமோ இரண்டையும் ஒன்று போல உணரும் உன்னதமான ஞானம் பெறுவோம்!

Tuesday, August 27, 2013

கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!


பவள சங்கரி




தேவையற்ற கசதியில் உழன்று திரிவது
தேர்ந்த ஞானம் கொண்டோரின் செயலல்ல

முக்காலத்தும் இல்லாததொன்றின் இருப்பு 
எக்காலத்தும் இல்லை என்பதே சத்தியம்

புலன்களுக்கு அகப்படாத ஒன்று இல்லாததொன்றாகுமா?
நித்தியமான, நிரந்தரமானதொன்று ஆன்மா மட்டும்தானே!

அழிவதெல்லாம் இரத்தமும் சதையும் உள்ள உடல்தானே
 அழியாத நித்தியமாய் வாழும் ஞாதிருவை அழிக்க எவருளர்?

சுயதருமமும் உன் சுபாவமும் உரைப்பதில் குறைவிருந்தாலும்
கடமையில் தவறாமல் இருப்பதே தர்மம் இல்லையா?

பிறிதொருவருடைய கடமையை ஏற்று செம்மையாய்ச் செயலாற்றினாலும்
தம் கடமையில் தவறாது அதனைக் கண்ணெனப் போற்றுதல் வேண்டுமே

அக்கினி கக்கும் புகை போல எச்செய்கையிலும் ஏதேனுமொரு
குறையும், பகையும் இருக்கத்தானே செய்கிறது!

சுபாவத்தினால் விதிக்கப்பட்ட கடமையைச் சலியாமல்
சுவையாகக் கடைபிடிப்பவனே  பாவமறியாதவன்!

படத்திற்கு நன்றி:

http://www.google.co.in/imgres?imgurl=http://www.alaikal.com/news/wp-content/uploads/kuruna-geta.jpg&imgrefurl=http://www.alaikal.com/news/?p%3D59120&h=338&w=450&sz=99&tbnid=SCnPRmaj7hEO3M:&tbnh=90&tbnw=120&zoom=1&usg=__XOA-ztMbBMvfwSV75Xo1-aSI4iM=&docid=ZlUegG_G5yfxNM&sa=X&ei=GXUcUoqAPIX_rAenxoH4AQ&ved=0CEAQ9QEwAw&dur=129#imgdii=SCnPRmaj7hEO3M%3A%3BW5FPsmBJ6FOdOM%3BSCnPRmaj7hEO3M%3A