Friday, April 22, 2011

இரட்டை முகம்!

இரட்டை முகம்!

பனிக்காலம் முடிந்து கோடை தொடங்கி விட்டது. மழை விட்டும் தூவானம் விடவில்லை.கோடை மழை,வெப்பத்தைச் சற்று குறைத்ததனால் அசந்து தூங்கி விட்டாள் செல்வி. மேற்கூரையின் வேய்ந்த ஓடுகள், இரவு அடித்த பேய் மழையும், காற்றும் சேர்ந்து லேசான இடைவெளி விட்டிருந்தது. அதனூடே மெல்ல எட்டிப் பார்த்த கதிரோனின் வீச்சில் ஒரு வரி முன்னெற்றியிலும், இடது கண்ணிலும், ஒடுங்கிய கன்னத்திலும் பட்டு, ஆழ்ந்த நித்திரையிலிருந்தவளை முகச் சுளிப்போடு விழிக்கச் செய்தது.

அடடா, வெய்யில் வந்துவிட்டதா....நேரம் போனதே தெரியவில்லையே! வேலைக்குப் போகனுமே என்று வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தாள் செல்வி. வீடே நிசப்தமாக இருந்தது ஏன் என்று தெரியவிலை. அம்மாவும், அண்ணனும் வேலைக்குச் சென்றிருப்பார்களோ....

அண்ணன் பெயிண்டர் வேலைக்கும், அம்மா சித்தாள் வேலைக்கும் போவதனால், காலை 8 மணிக்குள் கிளம்பாவிட்டால் மேஸ்திரியிடம் சென்று வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும். இரண்டு பேருந்து மாறி செல்ல வேண்டும். ஆகவே நேரத்தோடு இருவரும் இளம்பி விட்டார்கள் போல

பணிக்குச் செல்ல நேரம் கடந்து விட்டது, விரைவில் கிளம்ப வேண்டும் என மனம் பணித்தாலும், உடல் அசைந்து கொடுக்கவில்லை..........
--
’என்னது... இது உடம்பு இவ்வளவு கனமாக இருக்கிறது. ஒரு இரவிற்குள் அப்படி என்னதான் ஆகியிருக்கும். அடித்துப் போட்டது போல அசதி வேறு...தலைப்பாரம். தன் மீதிருந்து தனக்கே அனல் வீசுவது போல..பிரம்மையோ?’

அப்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது, இரவு ப்டுக்கப் போகுமுன் அம்மா சொன்னது.

‘செல்விம்மா, உடம்பு அனலா கொதிக்குதும்மா. காய்ச்சல் நிறைய இருக்கும் போல, இந்த கஞ்சியை குடிச்சிப்பிட்டு மாத்திரையை போட்டுக்கிட்டு படுத்துக்க சாமி.. நாளைக்கு முடிஞ்சா வேலைக்குப் போ, இல்லாட்டி வயித்துக்கு கஞ்சியை குடிச்சிப்பிட்டு நல்லா தூங்கு. டாக்ட்ர் ஊட்டு அம்மாகிட்ட நான் சொல்லிப்புடறேன்...நீ வேலைக்குப் போகத் தேவல..’

‘இல்லம்மா. டாக்டர் வீட்டிற்கு ஒறம்பற [விருந்தாளிகள்] வந்திருக்காங்க...இன்னைக்கு லீவு எடுத்தா அந்தம்மா கண்டபடி கத்தும். நாளைக்கு மின்னைக்கு அந்தப் பக்கமே போவ முடியாது’

கஸ்தூரிக்கு பதில் பேச முடியவில்லை. அவளுக்கும் தான் அந்த டாக்டர் ஊட்டு அம்மாவைப் பத்தி தெரியுமே. ஒரு நாள் வேலைக்குப் போகாட்டாலும் ஆளு வந்துவிடும். வாட்ச்மேன் ஐயன் வந்திடுவாரே கையோடு கூட்டிச் செல்வதற்கு. அந்த டாக்டர் வீட்டு அம்மா பேசுகிற பேச்சு தெருவையே கலக்கும். அந்த அம்மாவின் கடுஞ் சொல்லிற்கு அஞ்சியே அவர்கள் வீட்டிற்கு வேலைக்கு வர பலரும் அஞ்சுவர். இத்தனைக்கும், சம்பளம் என்று பார்த்தால், மற்ற வீடுகளில் கொடுப்பதை விட ஒரு பங்கு அதிகமாகவே கிடைக்கும். ஆனால் அதற்குத் தகுந்த வேலையும் இருக்கும். அந்த அம்மாவிற்கு வீடு பளபளவென கண்ணாடி போல இருக்க வேண்டும். வீட்டைக் கூட்டி மெழுகி முடித்தவுடன், காலிலிருக்கும், காலணியை (வீட்டில் பயன் படுத்தும் பிரத்யேக காலணி) கழட்டி வைத்து விட்டு, தேய்த்து, தேய்த்து நடந்து பார்ப்பார்கள். ஒரு சிறு மண் துகள்களோ, குப்பையோ காலில் பட்டால் அவ்வளவுதான்.....வசவு ஆரம்பித்து விடும். ’என்னத்த வீடு கூட்டுற.....’ என்று பெரும் பாட்டாக வரும்.

அழகான அந்த கரும் பசசை வண்ண பளபளக்கும் கிரானைட் கல் எங்கேனும் ஒரு துளி அழுக்கு இருந்தாலும் போதும் அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்து விடும். இனி தாமதிக்க முடியாது என்ற ஞானோதயம் வர, சட்டென ஒரே மூச்சில் தம் கட்டி எழுந்திருக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றாள். மெதுவாக அப்படியே பொடக்களைப் பக்கம் சென்றவள் தட்டியின் கயிற்றுத் தாழ்ப்பாளை மெதுவே உறுவி, ஒடுங்கிப் போன ஹைதர் அலி காலத்திய அலுமினிய குவளையை எடுத்து தண்ணீர் மோந்து, கோபால் பல்பொடி போட்டு பல் துலக்கி, காலைக் கடன்களை முடித்து விட்டு தள்ளாடியவாறு வேளியே வந்தாள்.(வழக்க்ம் போல இன்றும் சம்பளம் வந்தவுடன் முதல் வேலையாக இந்த ஓட்டை குவளையை மாற்றி பிளாஸ்டிக் மக் வாங்க வேண்டும்) என்ற உறுதி மொழியோடு கழிவறையை விட்டு வெளியே வந்தாள்.

அம்மா கலையத்தில் வைத்துச் சென்ற கஞ்சி அவளைப் பார்த்து சிரித்தது......

‘நல்ல நாளிலேயே உனக்கு என்னைக் கண்டால் ஆகாது. இன்று காய்சல் அடித்த வாய் வேறு...கசப்பு கொடுக்கத்தானே செய்யும். என்னைச் சீந்தவா போகிறாய்’ என்பது போலப் பார்த்தது....

செல்வியோ, வெறும் வயிற்றில் மாத்திரை போட முடியாதே என்று பல்லைக் கடித்துக் கொண்டு நான்கு வாய் கஞ்சியைக் குடித்துவிட்டு மாத்திரையைப் போட்டுக் கொண்டாள். டாக்டர் வீட்டில் வேலை செய்வதில் இன்னொரு புண்ணியம், சகல வித வலிகளுக்கும் நிவாரணிகள் இலவசமாகக் கிடைக்கும்......எப்ப்டியோ டாக்டர் வீட்டிற்குப் போனால் சாப்பிட ஏதாவது மிஞ்சிப் போன காலைப் பலகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

மாத்திரை போடவும், காய்ச்சல் கொஞ்சம் குறைந்து வேர்த்து விட்டது. வேலைக்குக் கிளம்பத் தயரானாள். அப்போதுதான் அவர்கள் வீட்டின் விருந்தாளியாக வந்திருந்த அந்தப் பையனின் கழுகுப் பார்வை அவளுக்கு நினைவிற்கு வந்து சங்கடப்படுத்தியது..... பாழாய்ப்போன பதின்ம வயதின் பளபளப்பு....பன்னிக்குட்டிக் கூட அழகாய்த் தெரியும் பருவம்...

பதின்மம்.. ஒட்டிய கன்னமும், மாநிற்முமாக இருந்தாலும், பூசியவாறு சதையும், லேசான பளபளப்பும், உடல் முழுவதும் பெரும் மாற்றத்தின் துள்ளலும் பார்க்கின்ற வக்கிரமான கண்களுக்கு தீனிப் போடத்தான் செய்கிறது....எங்கு சென்று எதை மறைப்பது...எப்படி மறைப்பது. அந்தப் பார்வையின் வீச்சு தாங்காமல், ஆடையே நழுவி வீழ்ந்ததுபோல் கூனிக் குறுகி, இந்த வேதனை பாழாய்ப்போன அந்த கழுகுக் கண்களுக்குத் தெரியவா போகிறது.... குனிந்து வீடு பெருக்கக் கூட சங்கோஜம்....எங்கிருந்தோ இரண்டு புண்கள் [கண்கள்] தன்னையே நோட்டம் விடுவது போல ....சே,என்ன கொடுமை இது. இன்னும் எத்தனை நாள் இந்தக் கழுகு அங்கே இருக்கும் என்று தெரியவில்லையே,சென்று ஒழிந்தால் தேவலாம் போல இருந்தது அவளுக்கு..ஏழ்மையின் ரணத்தைவிட இந்தக் கொடுமை சற்று அதிகம்தான். அம்மாவிடம் சொன்னால் பாவம் ரொம்பவும் வருத்தப்படுவார்கள்.

அம்மாவிற்கு என்னமோ தன் செல்ல மகள் ஆபீஸ் உத்தியோகம் பார்ப்பது போல ஒரு நினைப்பு.. தன்னைப் போல வெய்யிலிலும், மழையிலும், கல் மண் சுமந்து சிரமப் படக்கூடாது என்றுதானே தன்னோடு வேலைக்கு வரக்கூடாது என்று பிடிவாதமாக டாக்டர் வீட்டில் வேலைக்குச் சேர்த்து விட்டார்கள்.

அங்கேயும் இப்படி ஒரு பிரச்சனை என்று சொன்னால், அம்மா பாவம் என்ன செய்ய முடியும்? வேலையை தூக்கி எறிந்துவிட்டு வா என்று சொன்னாலும்,இது போன்ற கழுகுகள் இல்லாத இடம்தான் ஏது? எவ்வளவு நாள் ஓடி ஒளிய முடியும். சரி இனியும் தாமதிப்பதில் அர்த்தமில்லை என்பது புரிய,பரபரவென புறப்பட ஆயத்தமானவள், அன்று ஏனோ முதல் முறையாக துப்பட்டாவைத் தேட ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. போகிற அவசரத்தில் பெரும்பாலும் துப்பட்டாவை மறந்து விடுபவள், புதிதாக இருந்த துப்பட்டாவை எடுத்து அழகாக போட்டு,மறக்காமல் பின் குத்தி வைத்தாள். வீட்டை பூட்ட மறந்தவள், நாலு எட்டு எடுத்து வைத்தவுடன் நினைவுவர, திரும்ப ஓடி வந்து சாவியை எடுத்து பூட்டிவிட்டு அதை எறவானத்தில் சொறுகி விட்டு, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே, இந்த பொக்கிச அறைக்கு ஒரு பூட்டு, அதற்கு ஒரு சாவி வேறு என்று நினைத்துக் கொண்டே, பரபரவென நடக்க ஆரம்பித்தாள். நாலு எட்டு வைத்தவுடன், வாட்சுமேனை பார்த்து விட்டாள்.

‘ என்னாச்சு, இவ்வளவு நேரமா, வேலைக்கு வர, அம்மா கோபமா இருக்காங்க...’

‘அண்ணே, நேத்தெல்லாம் ஒரே காய்ச்சல். இப்போதான் மாத்திரை போட்டுக்கிட்டு வரேன்’

‘சரி சரி, ஆனா விருந்தாளிக வந்திருக்கிற நேரத்தில இப்படி லேட்டா வந்தா திட்டுவாகல்ல’

‘ஆமாண்ணே, அதான் பயம்மா இருக்கு’

‘சத்தமில்லாம போய் வேலையைப் பாரு, விருந்தாளிங்க முன்னாடி ரொம்ப வைய மாட்டாக’

‘ சரிண்ணே......’

வீட்டிற்குள் காலடிவைக்கும் போதே கொல்லென்ற சத்தம். அனைவரும் பட்டாசாலையில் உட்கார்ந்து சினிமா படம் பார்த்துக் கொண்டு சத்தம் பண்ணிக் கொண்டிருந்தனர். நல்ல வேளை இந்த சத்தத்தில் அம்மா திட்டினால் கூட இவர்களுக்கு காது கேக்காது......சத்தம் நல்லதுதான் என்று எண்ணிக் கொண்டே மெதுவாக சமயலறைப் பக்கம் சென்றாள். எப்படியும் திட்டு விழும் என்ற பயத்துடனேயே மெதுவாக அடி மேல் அடி வைத்து சென்றாள். எந்த சாமி புண்ணியமோ, அம்மா திட்டுகின்ற மூடில் இல்லை. திரும்பி, ஒரு முறை மேலிருந்து கீழாக பார்த்துவிட்டு, முறைத்து விட்டு, திருப்பிக் கொண்டார்கள். என்ன நினைத்தார்களோ,

‘ ஏய் இங்க வா, என்ன குளிக்கலையா....நேத்து உடுத்தின துணியோட வந்திருக்க...அதுவும் புதுசா துப்பட்டாவெல்லாம் போட்டுகிட்டு., ஒரு மார்கமாத்தான் இருக்க.....பெரிய அழகு ராணியா நீங்க..... உங்க அழகை பாத்து இங்கே எல்லாம் கண்ணு வைக்க க்யூவுல நிக்கிறாங்களாக்கும்’இதுல ஒன்னியும் குறைச்சல் இல்ல. இந்த புத்தியெல்லாம் வந்தா நீ எங்கெ ஒழுங்கா வேலை செய்யப் போற... போ..போ...போய் பாத்திரத்தை சட்டுனு கழுவி எடுத்துட்டு வா..’

கொல்லைப்புறம் மலையாகக் குவிந்து கிடந்தது பாத்திரங்கள். மலைப்பாக இருந்தது....எப்பத்தான் கழுவி எடுக்கப் போறோமோ, கடவுளே.....வெய்யில் வேற.தலை வலிக்க ஆரம்பித்திருந்தது. இருந்தாலும்,அந்தக் கழுகுப் பார்வைக் கரடிக்கு இந்த சூரிய பகவானின் உஷ்ணமே தேவலாம் போல இருந்தது. மெதுவாக பாத்திரங்களைத் துலக்க ஆரம்பித்தாள்.

‘செல்வி....என்ன பண்றெ அங்கே.. சட்டுனு கழுவி எடுத்துட்டு வா பாத்திரத்த...வீடு கூட கூட்டாம கிடக்கு..’

அடக் கடவுளே, வீடு பெருக்கி துடைக்க வேண்டுமா.. அந்த நாய் போய் தொலைச்சப்புறம் கூட்டலாம் என்றால் இந்த அம்மா வேற.. இதுகிட்டசொன்னா புரிஞ்சிக்கவா போகுது.... என்னையே திட்டும் திருப்பி..

விதியை நொந்து கொண்டு சாமான்களை கழுவி திட்டுமேல் தண்ணீர் போக கவிழ்த்து வைத்து விட்டு அந்த இடத்தை சுத்தமாக அலம்பிவிட்டு, பாத்திரங்களை துடைத்து உள்ளே எடுத்துச் சென்றாள். நன்கு பளபளப்பாகத்தான் இருந்தது. ஆனாலும் அந்த அம்மா திருப்பி, திருப்பி எங்காவது அழுக்கு கண்டுபிடிக்க ஆலாய்ப் பறக்கும்.......

’செல்வி.....வந்துட்டியா, சரி எல்லாத்தையும் இங்கே வைத்துவிட்டுப் போய் சட்டுனு வீட்டை சுத்தம் பண்ணு’

‘சரிங்கம்மா...’

’ என்ன...ஏன் இழுத்துக்கிட்டு நிக்கற போய் வேலையைப் பாக்கலாமில்ல’

‘ இல்லம்மா...கொஞ்சம் தலை வலியா இருக்கு, கொஞ்சம் டீ தறீங்களா..’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள்.

‘ வந்ததே லேட்டு, இது வேறயா..வரும் போது குடிச்சிடு வரலாமில்ல,..சரி இரு தறேன்..’

சூடான, டீ தலை வலியை சற்று போக்கியது. அதெல்லாம் அம்மா நல்ல டீதான் தருவாங்க....ஒவ்வொரு வீட்டில வீட்டுக்காரங்களுக்கு தனியா,நல்ல டீயும், வேலைக்காரங்களுக்குத் தனியா தண்ணி டீயும் போடுவாங்க. ஆனா அம்மா அந்த விதத்துல ரொம்ப நல்லவங்க. அவிங்க என்ன சாப்பிட்றாங்களோ அதைத்தான் எனக்கும் தருவாங்க..

கடவுளே அந்த பையன் எங்காவது போய் தொலைஞ்சிருக்கனுமே...வீடு பெருக்கி, மொழுகுற வரைக்குமாவது இல்லாம இருந்தா தேவலையே....

அப்பாடி...ஆளைக்காணோம். சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு போக வேணும். சரியா செய்யாட்டாக் கூட பரவாயில்ல...இன்னைக்கு அம்மாகிட்ட திட்டு வாங்கினாலும் பரவாயில்ல...எப்படியோ வேலை முடிஞ்சா சரி.

அப்பாடி, இத்தனை பெரிய ஹால், கூட்டி மெழுகறதுக்குள்ள இடுப்பே க்ழண்டு போகுது சாமி......ஆச்சு இன்னும் இரண்டு அறைதானே, பெரிய வேலை முடிஞ்சிடும்..

அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.சாதாரணமா போற போக்கில செய்யற வேலையெல்லாம் இன்னைக்கு இவ்வளவு சிரம்மா இருக்கு.. எல்லாம் இந்த காச்சல் படுத்துற பாடு..ம்ம்.....

குச்சியில் துடைத்தால் அழுக்கு போகாதாம், அதனால் துணியை வைத்து நன்றாக குனிந்து, அழுத்தி துடைக்கனும் அப்பத்தான் நல்லா அழுக்கு போகுமாம்...

படுக்கை அறை திறந்துதான் இருந்தது. போய் கூட்டி மொழுகிடலாம் என உள்ளே சென்றாள். அலங்கோலமாகக் கிடந்தது அறை. குளியல் அறையில் தண்ணீர் சத்தம். யாரோ குளிப்பார்கள் போல.....சீக்கிரம் அவுக வரதுக்குள்ள வேலையை முடிச்சிபிடலாம் என அவசர அவசரமாக கூட்டி முடித்தாள். மொழுகுவதற்காக துணி எடுத்து அலசிப் பிழிந்து குனிந்து மொழுக ஆர்ம்பித்த போது......

முதுகில் ஏதோ குறுகுறுப்பாக உணர முடிந்தது.சோப்பு வாடை வேறு கும்மென வந்தது.....ஏதோ புரிந்தது போல திரும்ப யத்தனிப்பதற்குள்.. அந்த முரட்டு உருவம் அவள் மீது பாய, தன்னால் முடிந்த மட்டும் பலமாக தள்ளி விட்டவள், ஒரு கணமும் தயங்காமல், துணியை அங்கேயே வீசி விட்டு ஓடினாள். இதற்கு மேல் பேசாமல் இருந்தால் தப்பாகிவிடும் என்று அம்மாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று ஓடினாள்.

அம்மா சமயலறையில் அவசரமாக ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள். சென்ற வேகத்தில் அம்மா.....என்று மிகவும் பரபரப்பாக அதே படபடப்புடன் கூப்பிடவும், என்னவோ ஏதோவென்று படாரென திரும்பியவர் கையில் இருந்த வெண்ணெய் போல, அதை அப்படியே ச்மயலரை சிங்க்கில் கொட்டிவிட்டார்கள். செல்விக்கு கை காலெல்லாம் நடுங்கி விட்டது....

அந்த அம்மாவோ அவள் சொல்ல வந்ததைக் கேட்காமல் வெண்ணெய் கொட்டி விட்டதே என்ற கோபத்தில், ‘அடி நாயே, அறிவில்லை. எதுக்கு அப்பிடி கத்துற’ என்று சொல்லிக் கொண்டே,

அடடா இத்தனை வெண்ணெய்யும் கொட்டி விட்டதே. சிங்க் வேற கழுவவே இல்ல...சொல்லிக் கொண்டே அந்த வெண்ணெயை அப்படியே அள்ளி பாத்திரத்தில் போட்டு கழுவ ஆரம்பித்தார்கள். இதனைக் கண்ட செல்விக்கு பேரரதிர்ச்சியாக இருந்தது...சுத்தம், சுத்தம் என்று வாய் கிழிய பேசுபவர்கள் இப்படி தொட்டிக்குள் விழுந்த வெண்ணெயை எடுத்து வைத்துக் கொள்கிறார்களே.......

தான் சொல்ல வந்ததை இனிமேல் இவர்களிடம் சொல்லி ஆகப் போவது ஒன்றுமில்லை என்று முடிவு செய்தவள், வாய் பொத்தி மௌனமானாள்..


பவள சங்கரி திருநாவுக்கரசு.

Wednesday, April 20, 2011

அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில்


அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில் - ஆனைமலை - பொள்ளாச்சி.


8.jpg

மிகவும் சக்தி வாய்ந்த சிறு தெய்வமான மாசாணி அம்மன், மயானத்தில் துயில் கொள்ளும் ‘மயான சயனி’ என்னும் பெயர் கொண்ட ஒரு அற்புத அன்னையாவாள். இத்தகைய சக்தி வாய்ந்த அம்மன் உறையும் இடம்,கோவை மாவட்டத்தின், ஆனைமலை என்னும் சிற்றூரில். இது பொள்ளாச்சியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆழியாற்றின் கிளை நதியான உப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் குடி கொண்டுள்ள மற்றைய தெய்வங்கள், மகா முனீஸ்வரர் மற்றும் நீதிக்கல் தெய்வம்.

மாசாணி அம்மனின் திரு உருவம் மிகவும் தனிப்பட்ட வடிவுடைய ஒன்றாகும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த அம்மன், 15 அடி உயரமானபொதுவாக நாம் அனைத்துத் தலங்களிலும் அம்மன் நின்ற கோலத்திலோ, அமர்ந்த கோலத்திலோதான் காட்சி கொடுப்பதைக் கண்டிருப்போம். ஆனால் இந்த மாசாணி அம்மனோ சயன கோலத்தில் மிக வித்தியாசமானக் காட்சி அருளும் நாயகியாக இருப்பது அதிசயத்திலும் அதிசயம் . நான்கு கைகளில. இரண்டு கைகளை நிலத்தின் மேலே தூக்கிக் கொண்டு,மற்ற இரு கைகளும் தரையோடு இருக்கும். கைகள் திரிசூலம், முரசு, அரவம் மற்றும் மண்டையோடு தாங்கியிருக்கும்.

pict2032.jpg

அன்றாடம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அன்னையை தரிசித்த வண்ணம் உள்ளனர். அன்னை தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காக்கக் கூடியவள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை பரவலாக உள்ளது. இந்த கோவிலில் ஒரு பிரத்யேகமான பழக்கம், பக்தர்கள் தங்கள் குறைகளையும், தேவைகளையும் ஒரு துண்டு காகிதத்தில் எழுதி அதனை அன்னையின் பாதத்தில் பூசாரியின் மூலம் சமர்ப்பிக்கும் போது, அன்னை தங்கள் உண்மையான ஆழ்ந்த பக்தியைக் கண்ணுற்று, தங்கள் குறைகளுக்குச் செவி சாய்த்து அதனை மூன்று வாரங்களில் நிவர்த்தி செய்து விடுவதாகவும் நம்பிக்கை பரவலாக உள்ளது.

இந்த கோவிலின் மிக சுவாரசியமான விசயமே, அன்னையின் உடனடி நீதி வழங்கும் சக்தி அம்சமான நீதிக்கல்! தீய சக்திகள் மற்றும் எதிரிகளின் தொல்லைகளால் பாதிக்கப்படும் மக்கள் அல்லது தங்களுடைய பொருட்கள் தொலைந்து போனாலோ, வியாபாரத்தில் பேரிழப்பு ஏற்பட்டாலோ அன்னையின் உதவி நாடி வந்து அங்கிருக்கும் நீதிக்கல்லின் தெய்வத்திடம் முறையிட்டு அங்குள்ள ஆட்டுரலில் மிளகாய் போட்டு அரைப்பார்கள்.அரைத்த அந்த மிளகாய் விழுதை நீதிக்கல்லின் மீது ஆழந்த பக்தியுடன் பூசுவார்கள்.இதனால் தங்களுடைய குறைகள் விரைவில் தீர்க்கப்படுவதாகவும் நம்புகின்றனர் .

pic4.jpg


இத்தலத்தின் வரலாறு :

இது சங்க காலத்தில் உம்பற்காடான, ஆனைமலையில் நடந்த கதை. இந்த பகுதியை நன்னன் என்னும் ஓர் அரசன் ஆண்டு வந்தான். இவன் ஆழியாற்றங்கரையில் இருந்த தன் அரசு தோட்டத்தில் ஒரு மாமரத்தை வளர்த்து வந்தான். அம்மரத்தின், கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ ஒருவரும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தான்.

6.1.jpg

ஒரு நாள், விதி வசத்தால், ஆழியார் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த ஒரு பெணகள் குழுவிலிருந்த ஒரு பெண், பக்கத்தில் இருந்த நன்னனின் மாந்தோட்டத்து மரத்திலிருந்த ஒரு மாங்கனி அந்த ஆற்றில் விழுந்ததைக் கண்டு, அதன் கட்டுப்பாடு குறித்து மறந்து போனவளாக, அதனை உண்டுவிட்டாள். இதை அறிந்த நன்னன் அப்பெண்ணை உடனடியாக கொலை செய்துவிடும்படி உத்தரவிட்டான். அப்பெண்ணின் தந்தை அதற்குப் பிராயச்சித்தமாக, எடைக்கு எடை தங்கத்தால் செய்த பாவை ஒன்றையும், எண்பத்தோரு களிற்றையும், அந்தப் பெண் அறியாமல் செய்த தவறுக்காக தண்டம் இழைப்பதாகக் கூறியும் இரக்கமற்ற அந்த மன்னன், நன்னன் அந்தப் பெண்ணைக் கொன்றுவிட்டான்.பிற்காலங்களில் அந்தப் பெண்ணின் மிக நெருங்கியத் தோழியான இன்னொரு பெண் அரசனின் மீது கடுங்கோபம் கொண்டு அவனை பழி தீர்ப்பதற்காக, போரின் போது கொன்று விட்டாள் என்று சொல்லப்படுகிறது. அதற்குப் பிறகு அந்தப் பெண் ஆழியாறு ஆற்றங்கரையில் இருந்த மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளாள். மக்கள் அவள் உருவ நடமாட்டம் இருப்பதைக் கண்டு , வழிபட ஆரம்பித்து உள்ளனர். அந்தப் பெண்ணைத்தான் மயான சயனி என்று வழங்கி, காலப்போக்கில் அது மருவி, மாசாணி என்றாகி உள்ளது.

இதே மாசாணி அம்மன், ஸ்ரீ ராமர் காலத்துடன் சம்பந்தப்படுத்தி சொல்லப்படுகிறது. விசுவாமித்திர முனிவர் கடகனாச்சி மலையில் யாகம் நடத்துவதற்கு முடிவெடுத்த போது, தீய சக்திகள் கொண்ட தடகா என்ற அரக்கன், அந்த மலையை வேட்டையாடி, முனிவரின் யாகத்திற்கும் ஊறு விளைவித்தான். ஆகவே விசுவாமித்திரரின் வேண்டுதலின் பேரில், தசரத மன்னன் ராம, இலக்குவனை முனிவருடன், யாகத்தைக் காக்கும் பொருட்டு அனுப்பி வைத்தார். பார்வதி தேவி ராம இலக்குவன் முன் தோன்றி, அந்த அரக்கனை அழிப்பதற்கு சக்தியையும், ஆசியையும் வழங்கி, அந்த அரக்கன் கொல்லப்பட்டவுடன், அந்த சிலையை அழித்து விடும்படியும் கூறினார். ஆனால் ஸ்ரீராமரோ அந்தச் சிலையை அழிக்க மறுத்து மக்களைக் காக்கும் பொருட்டு அங்கேயே விட்டு வைத்தார். அந்த பார்வதி சிலைதான் மாசாணி அம்மன் என்றும் நம்பப்படுகிறது. ஸ்ரீராமர் சீதாப்பிராட்டியைத் தேடி இலங்கைக்குச் செல்லும் வழியில் மாசாணி அம்மனை தரிசித்து, யாகம் நடத்தி, அந்த மயானத்தில் பூசை செய்யவும், மனம் குளிர்ந்த மாசாணி நேரில் தோன்றி ராவணனுடனான போரில் வெற்றி பெற ஆசி கூறி அனுப்பி வைத்தாராம்.

7.jpg

விசேடமான நாட்கள் :

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் மாசாணி அம்மனுக்கு உகந்த நாட்கள். அன்று அம்மன் வழிபாட்டில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்திலும், பௌர்ணமி நாட்களிலும் விசேட பூசைகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் குண்டம் மிதிவிழா சிறப்புடன் நடத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த குண்டம் மிதி விழாவில் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தை மாதப் பௌர்ணமி நாளில் கொடியேற்றி, 14 ஆம் நாள், விசேட பூசைகளுடன், 16 ஆம் நாள் தேர்த் திருவிழாவும், அதே நாள் இரவு 10 மணி அளவில் தீமிதி விழாவும் நடைபெறும். 50 அடி நீளமுள்ள அந்த குண்டம், பக்தர்கள் உண்மையான பக்தியுடன் செல்கையில் காலில் எந்த தீக் காயங்களையும் ஏற்படுத்துவதில்லை என்கின்றனர். 18 ஆம் நாள் கொடி இறக்கி, 19 ஆம் நாள் விசேச அபிசேக, ஆராதனைகளுடன், விழா நிறைவு பெறும்.

திருவிழா நாட்கள்:

வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், தமிழ் வருடப்பிறப்பு, அம்மாவாசை, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழி தனுர் பூசை, நவராத்திரி.

திறக்கும் நேரம் :

கோவில் வளாகம், காலை 6 மணி முதல், இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆனைமலை, கோவையிலிருந்து, 60 கிமீ தூரம் உள்ளது. கார் அல்லது பேருந்தில் செல்ல 1.30 மணி ஆகும்.

NH 209 => Kinattukkadavu => Pollachi => Anaimalai.
--

Sunday, April 17, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் (5)

வெண்ணிலவில் ஒரு கருமுகில் (5)

பன்முக மனிதர்கள் இருப்பதைப் போல ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் பல முகங்கள் இருக்கிறது. ஆம், அக வாழ்க்கையின் முகம் ஒன்று, புற வாழ்க்கையின் முகம் வேறு. அந்த அகம் மற்றும் புற வாழ்விலும் உட்பிரிவுகளும் உண்டு. அகவாழ்வின் முகத்திற்கும், புறவாழ்வின் முகத்திற்கும் பல மாற்றங்கள் உண்டு. நிறைய முரண்பாடுகளும் இருக்கும். அதை தூக்கி எடை பார்க்க ஆரம்பித்தால் குடும்பம், உறவு, பந்தம் என்ற அக வாழ்வுதான் முற்றிலும் பாதிக்கப்படும். இதையெல்லாம் அதிக ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தாலே முடிவு பிரம்மச்சரியமோ அல்லது காவி உடையோ என்ற தப்பித்தல்தான். ஆனாலும அந்த தப்பித்தல் ஒரு தற்காலிகமானதாகத் தான் இருக்குமே தவிர அதுவே நிரந்தரமாகாது.

ரம்யா ஊருக்குச் செல்ல திட்டமிட்டாள். தன் தந்தை, தாய் அன்புத் தம்பி என்று சிறிய குடும்பம்தான். எல்லோரையும் பார்த்து வருடம் ஒன்றாகிவிட்டது. இதற்கு மேல் தான் ஒரு முறை சென்று வராவிட்டால் பிரச்சனை பலவாகிப் போகும்.

‘ என்ன ரம்யா, உனக்கு லீவ் சேங்க்‌ஷன் ஆகிவிட்டது போல. சரவணன் அங்கு கரிச்சி கொட்டிக்கிட்டு இருக்கான்’

‘ஆமாம்ப்பா, அவன் கடக்கிறான். நான் இரண்டு மாதம் முன்பே அப்ளை பண்ணியிருந்தேனே, உனக்குத் தெரியாதா’ என்றாள்.

’ம்.சரி விடு.எப்ப கிளம்பப் போகிறாய். டிக்கெட் பார்த்து விட்டாயா. நான் பார்க்கட்டுமா’ என்றான்

‘டிக்கெட் கன்பார்ம் ஆயிடிச்சு. அடுத்த மாதம், முதல் வாரத்தில் கிளம்பலாம் என்று இருக்கிறேன் மாறன்'.
--
'தம்பி இப்போது எப்படி இருகிறானாம் ரம்யா ?பெங்களூர் நிமான்ஸ் மருதுவமனையில்தானே ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது முனனேற்றம் தெரிகிறதா’

தம்பியைப் பற்றி பேச்செடுத்தவுடனே ரம்யாவின் முகம் உச்சி வேளை கதிரவனின் அனலில் துவண்டு போன ரோசா மலரைப் போன்று களையிழந்து போனது.

‘ம்ம்.அம்மா அப்படித்தான் கூறினார்கள் .குறும்பு மட்டும் குறையவே இலலை என்கிறார்கள். ஆளும் வாட்ட சாட்டமாக நன்கு வளர்ந்து விட்டானாம். அவனைச் சமாளிப்பது பெரும் பிரச்சனையாக இருப்பதாகக் கூறினார்கள்.அப்பாவிடமும் இப்போதெல்லாம் அடங்க மறுப்பதாகக் கூறினார்கள். இந்த முறை ஊருக்குப் போகும் போதுதான் , அவனை பிரத்யேகமாக கவனித்துக் கொள்வதற்கென்று ஒரு ஆளை ஏற்பாடு செய்ய வேண்டும்’

அதற்குள் மாறனுக்கு அலுவலக தொலைபேசி அழைப்பு வரவும் அதனைக் கவனிக்கச் சென்றாலும், ரம்யாவின் நினைவலைகள் மட்டும் தன் குடும்ப சூழலுக்குள் சிக்கி வெளி வர வழி தேடிக் கொண்டிருந்தது. தம்பி கோபாலகிருஷ்ணன் பிறந்த போது வீடே எப்படி கோலாகலமாக இருந்தது. 12 வருடம்...ஒரு மாமாங்கத்திற்குப் பிறகு வீட்டில் ஒரு மழலை தவழ்ந்தால் பெற்றோரை விட தனக்கு எத்துனை மகிழ்ச்சியான தருணமாக அது இருந்தது என்பதை அடிக்கடி நினைத்துக் கொள்ள தவறுவதில்லை.
பிறந்தவுடன், அன்றலர்ந்த மலர் போன்ற முகமும், கொவ்வைச் செவ்வாயும், குனித்த புருவமும், ரம்யாவை மிகவும் கவர்ந்து, தன் அன்புத் தம்பிக்கு கோபால கிருட்டிணன் என்ற பெயரையும் சூட்டச் செய்தது. அன்றிலிருந்து இன்று வரை, ஏன் தம்பிக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்த பிறகும் கோபியின் மீது பாசம் பெருகிக் கொண்டேதானே இருக்கிறது.மூன்று, நான்கு வயது வரை மற்ற குழந்தைகளைப் போல சாதாரணமாக் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தவன் தானே. திடீரென வந்த காய்ச்சல் குறையாததனால் ஜன்னி போல வந்து மூளையை சிறிதாகப் பாதித்திருக்கலாம் என்று ஏதேதோ காரணம் கண்டு பிடித்தாலும், கோபி மற்ற குழந்தைகளைப் போல விரைவில் சகஜ நிலைக்கு திரும்பி வருவான் என்று நம்பிக் கொண்டுதான், அவனுடைய நோய்க்கான தீர்வு தேடி, நண்பர்கள் சொல்லும் அத்தனை முயற்சிகளிளும் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறாள்.

அப்பாவின் நினைவு வந்தவுடன் அவருடைய பதட்டமான முகம்தான் நினைவிற்கு வருகிறது இப்போதெல்லாம். வியாபாரத்தில் நண்பர்களை நம்பி மோசம் போனதை மறக்க முடியாமலும், விட்டதைப் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் மேன் மேலும் ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொள்வதும், அதில் இருந்து விடுபட முயற்சிப்பதும், இப்படியே பல வருடங்களாக வாழ்க்கையில், நம்பிக்கையை மட்டும் இழக்காமல் போராடிக் கொண்டே இருக்கும் அந்த உறுதியான மன நிலையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லாதது அவளுக்கு ஆச்சரியமான விசயமாக இருக்கும்.

தொலைபேசி மணி மென்மையாக இசைக்கவும், தன் குடும்பச் சூழலிலிருந்து மீண்டுவர முடிந்தது அவளால். மாலை பணி முடிந்து வீடு திரும்பும் வரை ஒரு தியானம் போல வேறு எந்த நினைவிற்கும் இடம் கொடுக்க மாட்டாள்!

மாலை மணி ஐந்தாகிவிட்டது. வேலையெல்லாம் முடித்து விட்டு தன் சொந்த மெயில் பெட்டியைத் திறந்து பார்த்தாள் வழக்கம் போல. அன்று வழக்கத்திற்கு மாறாக ஒரு புதிய ஆனால் தன் உயிரோடு இணைந்த பெயராக ஒரு காலத்தில் இருந்த, ரிஷி என்ற பெயர் கொட்டை எழுத்தில் இருந்த ஒரு மெயில் கண்ணில் பட்டது......... ஏனோ அந்த மெயிலை திறக்க அவளுக்கு மனம் ஒப்பவில்லை. ஒரு காலத்தில் இந்த பெயர் எப்ப்டி எல்லாம் தன்னை மெய்சிலிர்க்கச் செய்தது என்று நினைத்துப் பார்த்த போது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது.

ரிஷி என்ன அவ்வளவு எளிதாக மறக்கக் கூடிய காரியமா செய்தான். அவனை எவ்வளவு நம்பியிருந்தாள் அவள். ஆரம்பத்தில் காதல் மயக்கத்தில் இருந்த அவன், நாட்கள் வருடங்களாக மாறி மயக்கம் தெளிந்தாலும், யதார்த்த சூழலை உணர்ந்து கொள்ள முடியாதவனாகவே இருந்து விட்டானோ என்ற கோபம் மட்டும் அவன் மீது குறையவே இல்லை அவளுக்கு.......

மெயில் பெட்டி குப்பையாக குவிந்து கிடந்தாலும், ரிஷி என்ற அந்த கொட்டை எழுத்து மெயில் அடிக்கடி வரிசையாக பல முறை கண்ணில் பட்டது. யாராக இருக்கும் இத்தனை முறை கொடுத்துள்ளார்கள் , ஒரு வேளை அவனாக இருக்குமோ என்ற நினைவில் அதனைத் திறந்து பார்க்கும் எண்ணம் கூட வீண் என்று தோன்றியது அவளுக்கு.

எவ்வளவு ஆழ்ந்த காதல் வைத்திருந்தாள் அவள் ரிஷி மீது. இன்று அந்த பெயர் மெயில் கூட தீண்டத் தகாததாகப் போனது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒரு காலத்தில் நொடிக்கொரு முறை நினைத்து பரவசம் அடைந்த காலத்தையும், அவனுடைய ஒவ்வொரு செயலையும் பெரிய சாதனையாக கண்ணுற்ற எண்ணமும் இப்போது நினைத்தாலும் வேடிக்கையாக இருக்கிறது.

‘ரம்யா போகலாமா, இன்னும் வேலை முடியலையா’, என்று கேட்டுக் கொண்டே வந்தான் மாறன்.

‘இல்லை மாறன், இதோ முடிந்துவிட்டது. சும்மா மெயில் பார்த்துக் கிட்டிருந்தேன். இதோ முடித்துவிட்டேன் என்று அவள் அதிலிருந்து வெளியேற நினைத்த போது, அருகில் இருந்த மாறன் கண்களில் கொட்டை எழுத்தில் எழுதப்பட்ட ரிஷி என்ற பெயர் படவும் அவன் முகத்திலும் ஒரு வாட்டமும், மாற்றமும் தெரிந்தது. ஆனாலும் இது அவனுடைய மெயில்தானா என்று அவளைக் கேட்க மனம் வரவில்லை. காரணம் அவன் செய்த காரியம் அப்படி. அவனைப் பற்றிப் பேசினால் அவள் வருத்தம் அதிகமாகுமே என்ற கவலை வேறு அவனை பேச விடாமல் செய்தது. இருந்தாலும் சட்டென மாறனைத் திரும்பிப் பார்த்தவள் அவன் முகத்தில் இருந்த சந்தேகக் கீற்றை உணர்ந்தவளாக லேசான புன்னகையை பதிலாக்கினாள்.

இருவரும் காரை நோக்கி பயணிக்கும் போதும், ஆழ்ந்த மௌனத்திலேயே ஆழ்ந்து போனாலும், மாறன் தொண்டையைக் கணைத்துக் கொண்டு,

’ரம்யா ரிஷின்னு இருந்த மெயில், அவன்தானா..... பார்த்தாயா நீ. நிறைய மெயில் அதே பேரில் இருந்தது போல. கொட்டை எழுத்தில் இருந்ததால் சற்று தொலைவிலிருந்த போதும் தெளிவாகத் தெரிந்தது. அதான் கேட்டேன் ’ என்றான்.

‘இல்லை மாறன் அந்தப் பேரைத் தொட்டு மெயிலைத் திறக்க எரிச்சலாக இருந்தது. அதனால் தான் பார்க்கவில்லை’ என்றாள் குறைந்த தொனியில்.

‘ஹாய், ரம்யா, மாஷன், என்று கூப்பிட்டுக் கொண்டே அருகில் வந்தான் ஜேம்ஸ். மாறன் என்ற அழகிய பெயர் அவன் வாயில் படும் பாடு, மிக அதிகம். ஆனால் ரம்யா என்ற பெயரை உச்சரிக்கும் போதே அவன் முகத்திலும், வார்த்தைகளிலும் ஒரு உற்சாகமும் ஆனந்தமும் வெளிப்படையாகத் தெரியும். அதை மறைக்கும் முய்ற்சியும் அவன் எடுக்க மாட்டான் என்பதால் அந்த யதார்த்தம் ரசிக்கும் வண்ணமே இருக்கும். ரம்யா மட்டும் அதை துளியும் சட்டை செய்ய மாட்டாள்.

‘ஓகே, கைய்ஸ், சீ,யூ டுமாரோ’ என்று சொல்லி கை ஆட்டிவிட்டு, ரம்யாவைப் பார்த்து லேசாக கண்ணையும் காட்டிவிட்டு சிட்டாகப் பறந்து விட்டான் ஜேம்ஸ்.

ரம்யாவின் அமைதி ஏனோ அவனுக்கு உறுத்தலாக இருந்தது. பல பிரச்சனைகள் அவளை அழுத்திக் கொண்டிருப்பது தெரிந்தது. அந்தக் கசப்பான நினைவுகளை எப்படியும் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவளிடம் பேச்சுக் கொடுக்க முயன்ற அதே நேரம்,

‘ என்ன மாறன் அப்பாவிடம் ஏதாவது பேசினாயா, அவர் என்ன சொன்னார்......அவந்திகா பற்றி ஏதேனும் பேசினாயா’ என்றாள்.

‘இல்லை ரம்யா. அப்பா திரும்ப அந்த இன்னொரு பெண், அதான் ஏதோ சொந்தம் அப்படீன்னு சொன்னாரே, அந்த போட்டோவை அனுப்பியிருப்பார் போல. போன் செய்து சொன்னார். நான் இன்னும் அதைப் பார்க்கவே இல்லை. ஒரே சங்கடமாக இருக்கிறது. என்ன செய்வது என்றே புரியவில்லை’ என்றான்.

‘நீ இப்படியே சொல்லிக்கிட்டே இரு, உன் அப்பா உன் மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு......’

மேற்கொண்டு அவள் பேசப்போவதைக் கேட்க விரும்பாதவன் போல, நேரமாச்சு ரம்யா கிளம்பலாமா என்றான்.

அவள் ஏதோ சொல்ல முயற்சிக்கவும், மாறனின் செல்பேசி அழைக்கவும் சரியாக இருந்தது.

‘ ஹலோ, ஐயாம் மாறன் ஹியர்’.......என்றான்.

மறுமுனையில் ஒரு சிறு தயக்கம் தெரிந்தது. பின்பு மெதுவாக மாறன்தானே இது என்ற குரல் தயகத்தினூடே வந்தது.

‘ஹலோ, மாறன் நான் ரிஷி , எப்படி இருக்கிறாய். என் மீது உள்ள கோபம் இன்னும் தீரலையா உனக்கும். என்ன செய்வது சூழ்நிலை, அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டியதாகி விட்டது. ரம்யா எப்படி இருக்கிறாள்.நான் அவளுக்கு பல முறை மெயில் கொடுத்தும் பதில் இல்லை......அவளிடம் கொஞ்சம் பேச வேண்டும் மாறன்...’

மாறனுக்கு கோபம் தலைக்கேறியது. பாவி.....இனி பேசுவதற்கு என்ன இருக்கிறது...........

ஹலோ........ஹலோ....மாறன் இருக்கிறாயா .............

தொடரும்.