Thursday, January 29, 2015

சுட்டும் விழிச்சுடர்!



பவள சங்கரி
சுட்டும் விழிச்சுடர்! (1)
http://www.vallamai.com/?p=54082


நம் இந்தியாவைப் பொறுத்த வரையில் பெண் குழந்தைகளை பெரும் சுமையாக நினைப்பதாலேயே பெண் குழந்தை என்று தெரிந்தால் அதை கருவிலேயே அழிக்கும் சூழலும் காணப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில், அதாவது 1990 – 2010 இடையே சுமார் ஒரு கோடி பெண் சிசுக்கள் கருவிலேயே கலைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் ஆண் பெண் குழந்தைகள் விகிதம் கவலை தருவதாக உள்ளதென கருக்கலைப்புக்கு எதிரான அமைப்பு CAMPAIGN AGAINST SEX SELECTIVE ABORTION(CASSA) தெரிவிக்கிறது. தமிழ் நாட்டில் மாநில விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 952 பெண் குழந்தைகள் என்பதாக இருக்கிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு மதுரை, தர்மபுரி,சேலம்,விழுப்புரம், அரியலூர்,பெரம்பலூர்,கிருஷ்ணகிரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 952 க்கும் குறைவான பெண் குழந்தைகளே இருப்பதாக தெரிவிக்கிறது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 900 க்கும் குறைவான பெண் குழந்தைகளே இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. 2001ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 933 பெண்கள்தான் இருந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை நகர்புறங்களில் 946 ஆகவும், கிராமப் புறங்களில் சுமார் 900 ஆகவும் தான் இருக்கிறது. அதே நேரத்தில் படித்தவர்கள் அதிகமுள்ள கேரளாவில் ஆயிரம் ஆண்களுக்கு 1058 பெண்கள் இருக்கிறார்கள். ஹரியானா மாநிலத்தில் மிகக் குறைவாக 861 பெண்கள்தான் இருக்கிறார்கள்.

Wednesday, January 28, 2015

மீகாமனில்லா நாவாய்!






மிதமான சாரலில் இதமாய் நனைந்தபடி
நடமிடும் அழகில் இலயித்த வான்மேகம் 
வளமாய் பொழிந்து வசமாய் வீசிடும்
வளியின் வீச்சில் வெகுதூரம் விரைந்தோடி
மௌனலையினூடே கிழித்துச்செல்ல எத்தனிக்கும்

மீகாமனில்லா நாவாய்  நீராழியலையின்
மிதவையாய்  வெள்ளத்தினூடே ஓயாமல்
 காற்றின் திசையில் சிறகடித்தபடி
 ஆழிப்பேரலையின் அதிர்வில் திசைமாறி 
மதங்கொண்ட களிறே போலோடியது

நீரடிப்பதால் அழுவதில்லை மீன்கள்
பேரிடியால் வீழ்வதில்லை நீரலைகள்
குத்தீட்டியால் குத்திக் கிழித்தாலும்
குழம்பித் திரியா வான்மேகங்கள் 

முகமூடியணியும்  விடையறியா வினாக்கள் 
அக்கரை செல்ல அக்கறையாய்
கலங்கரை விளக்கை நாடும் 
வெள்ளோட்டத்தில் கரை காணா  
விண்ணேகும் விதியறியா நாவாயது!


நன்றி ; திண்ணை



Monday, January 26, 2015

குடியரசு தின நல்வாழ்த்துகள்!






பவள சங்கரி

அன்னிய ஆதிக்கமெனும் அகந்தைத்தளையை
அகிம்சையெனும் சம்மட்டியால் அடித்துநொறுக்கி
இம்சையெலாம் களைந்து அன்னையவளை
சிம்மாசனமேற்றிய சிம்மங்களை சிகரமேற்றி
நினைவுகூரும் நிறைவான தருணமிது!

தேகம்வருத்தி குருதிசிந்தி இன்னுயிரீந்து
தாய்மண்ணை மீட்ட மித்திரர்கள்
வன்மையோரவர் பாதம் பணிந்து
நன்முத்துக்களின் தியாகம் போற்றி
அவர்தம் வழித்தொடரும் தருணமிது!

ஒருதாய் மக்களெனும் உன்னதமும்
ஓர்குலம் ஓரினமெனும் நல்மனமும்
அறவழியும் அன்புநெறியும் உளமேற்று
புறவழியும் புன்மைநெறியும் புறந்தள்ளி
புத்தொளியூட்டி வீரவாகை சூட்டியதருணமிது!

இந்தியநாடு என்வீடு இந்தியனென்பதென் இறுமாப்பு! 
சத்தியமும் சமத்துவமும் எங்கள் உயிர்மூச்சு!
வந்தே மாதரமென்பது எங்கள் அன்றாடப்பேச்சு!
புத்தன் இயேசு காந்தி அல்லாவென எல்லாமுமெங்கள் நேசம்! 
ஒன்றுகூடி உறவாடிக் கொண்டாடுமெங்கள் தேசம்!