Saturday, October 12, 2013

மயான சயனியே! மாசாணியே போற்றி! போற்றி!


பவள சங்கரி



மலரென உதித்து மலையென உயர்ந்து தீயெனக் கொதித்து
மதியெலாம் நிறைந்து மயானத்தில் உறைந்து மாசில்லாத
மயான சயனியாய் மாசாணியாய் உப்பாற்றங்கரையில்
மங்கலநாயகியாய் மகிழ்ந்தருளும் மகிசாசுரமர்த்தனியே! போற்றி!

வான்நோக்கிய கரமிரண்டும் மலர்மஞ்சளுடன் மங்கலமாய்
மண்நோக்கிய கரமிரண்டும் சூலமும் முரசும் அரவமுடன் 
மண்டையோடும் தாங்கி தவிப்போருக்கு அபயம் அளிக்கும் 
வற்றாத சீவநதியாய் வரமளிக்கும் வடிவுடை நாயகியே போற்றி!

Friday, October 11, 2013

வெற்றிவாணியே! ஓம் அன்னையே! லலிதாம்பிகையே!


பவள சங்கரி



வெற்றிவாணியே! ஓம்அன்னையே!  லலிதாம்பிகையே!

புவனமெங்கும் ஓயாது ஒலிக்குமோர் வேதமாம்
கவனமெல்லாம் நிறைந்து கானமாய் இசைக்குமாம்
சலனமெல்லாம் நீங்கிடவே சர்வமாய் ஒலிக்குமாம்
லலிதா சகசுரநாமமாய் பாரெல்லாம் பரவிடுமாமே!

யாதுமாகி எங்கும் நிறைந்தவளே லலிதாம்பிகையே
அனைத்துலகையும் ஆளும் அகிலாண்ட நாயகியே
ஸ்ரீபுரம் மேவிய ஸ்ரீலலிதாம்பிகையே உமையே
திருமேயச்சூர் வாழ்நாயகியே மின்னுமேகலையே!

Thursday, October 10, 2013

கன்னித்தாயே! பகவதி அன்னையே! போற்றி போற்றி!



பவள சங்கரி


கன்னித்தாயே! பகவதி அன்னையே! போற்றி போற்றி!




சிற்றாடை கட்டியவளே சிந்தையெலாம் நிறைந்தவளே
சீர்வளர்கன்னி சிவநேயச்செல்வியே தவக்கோலம்கொண்டவளே
சுசீந்திரநாயகன்  தாணுமாலயனின் திருக்காதல் நாயகியே
சுந்தரக்கன்னியே குமரித்தாய் அன்னையே போற்றி போற்றி!

விண்ணோருக்கும் முனிவோருக்கும் பூவுலக மாந்தருக்கும்
பாதகம் புரிந்த பாணாசுரனை அசுரனை ஆவேசங்கொண்டு
அழிக்க கன்னியாய் அவதரித்தவளே கன்னியாகுமரி அன்னையே!
வாடாவிளக்கே வடிவுடைநாயகியே  அனுதினமும் துதிப்போம் உன்னையே!

Monday, October 7, 2013

அருள்நிறை அன்னபூரணியே!


பவள சங்கரி




கண்ணின் கருமணியே காமாட்சியே
விண்ணின் பருப்பொருளே காமாட்சியே
தண்ணளியும் தானேவந்துதிக்கும் காமாட்சியே
எண்ணமெலாம் நிறைந்திருப்பவளே காமாட்சியே!

தேடியுனை ஓடித்திரிந்து களைத்து

நாடியுனை நானடைந்தக்கால் 
பாடிப்பரவசமாய் சிலிர்த்தேன்
கூடிக்களித்திருக்க முளைத்தேன் முத்துமணியே!

ஆத்துமந்தன்னை அருவமாயிருந்து காப்பவளே அன்னபூரணியே

கூத்துவந்தன்னை அஞ்சற்கவென அபயமளிப்பவளே அன்னபூரணியே
காத்துவந்தென்னை கருவறையில் தஞ்சமளிப்பவளே அன்னபூரணியே
அட்சயப் பாத்திரமென அருளெலாம் அள்ளித்தருபவளே அன்னபூரணியே

படத்திற்கு நன்றி:

http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=1541&Cat=3

Sunday, October 6, 2013

வாராதுவந்த மாமணியே வாரணாம்பிகையே!


பவள சங்கரி



வற்றாத வரமருளும் நாயகியே வாரணாம்பிகையே
பொற்கோவிலில் ஆருத்ரா கபாலீசுவரனுடமர் வாரணாம்பிகையே
வற்றாத காவிரியின் வரமானவளே வாரணாம்பிகையே
பொற்பாதம் போற்றுகின்றேன் வாராணாம்பிகையே!