Friday, October 11, 2013

வெற்றிவாணியே! ஓம் அன்னையே! லலிதாம்பிகையே!


பவள சங்கரி



வெற்றிவாணியே! ஓம்அன்னையே!  லலிதாம்பிகையே!

புவனமெங்கும் ஓயாது ஒலிக்குமோர் வேதமாம்
கவனமெல்லாம் நிறைந்து கானமாய் இசைக்குமாம்
சலனமெல்லாம் நீங்கிடவே சர்வமாய் ஒலிக்குமாம்
லலிதா சகசுரநாமமாய் பாரெல்லாம் பரவிடுமாமே!

யாதுமாகி எங்கும் நிறைந்தவளே லலிதாம்பிகையே
அனைத்துலகையும் ஆளும் அகிலாண்ட நாயகியே
ஸ்ரீபுரம் மேவிய ஸ்ரீலலிதாம்பிகையே உமையே
திருமேயச்சூர் வாழ்நாயகியே மின்னுமேகலையே!

காவிரிசூழ் பொழில்சோலை  வளமைசூழ்  பசும்வயல்
நவரத்தினமாலை புனைந்த அகத்திய மாமுனிவாழ்
அற்புதத்தலத்தில் வீற்றிருக்கும் ஆனந்த நாயகியே
ஆதவனுக்கும் சாபவிமோசனம் அருளிய அன்னையே!

ஞானசம்பந்தனும் நாவுக்கரசனும் பாடிப்பரவிய மேகநாதசாமியே
ஐயன் காதலொடு வலக்கரத்தினால் தீண்டுமின்பம் பெற்றநாயகியே
இன்பமும் துன்பமும் நிரந்தரமான வாழ்வின் ஆதாரமாய் 
நகைப்பும் கோபமுமாய் காட்சியளிக்கும் நவரசநாயகியே!

சகலபுவனேசுவரரை சர்வமாய் பூசித்த மகாலக்குமி அன்னையே
 இடக்கரத்தில் தூதுக்கிளி தாங்கிநிற்கும் துர்காதேவியே
சேதிகேட்டு குறைதீர நல்லாசிநல்கும்  லலிதாம்பிகையே
வலக்கால்மடக்கி இடக்கால்நீட்டி பதுமத்தில் வீற்றிருக்கும் அன்னையே

இடுக்கண்தீர இவ்வுலகனைத்தும் இன்புற 
இல்லமெல்லாம் ஒளிபரவ இக்கணமே வாருமம்மா
பண்டாசுரனை கொன்றழித்த மனோன்மணியே!
மாதா ஜயஓம் லலிதாம்பிகையே! ஓம் அன்னையே! வருக வருகவே!

நன்றி

அன்புடன்
பவளா

2 comments:

  1. மாதா ஜயஓம் லலிதாம்பிகையே!

    அழகான பதிவு. பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete