Thursday, October 10, 2013

கன்னித்தாயே! பகவதி அன்னையே! போற்றி போற்றி!



பவள சங்கரி


கன்னித்தாயே! பகவதி அன்னையே! போற்றி போற்றி!




சிற்றாடை கட்டியவளே சிந்தையெலாம் நிறைந்தவளே
சீர்வளர்கன்னி சிவநேயச்செல்வியே தவக்கோலம்கொண்டவளே
சுசீந்திரநாயகன்  தாணுமாலயனின் திருக்காதல் நாயகியே
சுந்தரக்கன்னியே குமரித்தாய் அன்னையே போற்றி போற்றி!

விண்ணோருக்கும் முனிவோருக்கும் பூவுலக மாந்தருக்கும்
பாதகம் புரிந்த பாணாசுரனை அசுரனை ஆவேசங்கொண்டு
அழிக்க கன்னியாய் அவதரித்தவளே கன்னியாகுமரி அன்னையே!
வாடாவிளக்கே வடிவுடைநாயகியே  அனுதினமும் துதிப்போம் உன்னையே!

கடுந்தவத்தில் கற்சிலையாய் சமைந்திருந்தவளே சகலகலாவல்லியே
காதல்நாயகனின் வரவுக்காய் காத்திருந்த கன்னியவளே
காமபாணமேந்திய பாணாசுரனை  சக்கராயுதம் கொண்டழித்தவளே
தேவரும் மாந்தரும் கைகூப்பித் தொழும் கன்னியாகுமரித் தாயே!

கலங்கரை விளக்காய் ஒளிவீசும் நாகமணி மூக்குத்தியணிந்த மாதவமே!
முக்கடலும் முத்தமிடும் குமரிக்கரையோரம் உறையும் அன்னையே
சூர்யோதயமாய் சந்திரோதயமாய் சித்திராப் பௌர்ணமியில்  மேலெழும் அன்னையே
சித்திரமாய் சிலைவடிவாய் மெய்சிலிர்க்கச்செய்யும் அற்புதமே அன்னையே!

அப்பனின் கைத்தலம் பற்ற ஸ்ரீபாதப் பாறையில் கால்பதித்த அன்னையே
வேதாந்தி விவேகானந்தனுக்கும் வள்ளுவனுக்கும்  வரமளித்த அன்னையே
கன்னித்தாயாய் அமர்ந்து கவலையெலாம் போக்கும் கன்னியாகுமரி அன்னையே
கற்சிற்பமும் புற்பாயும் சங்கும் மரமும்  உன்வடிவாகுமே பகவதி அன்னையே! போற்றி! போற்றி!


படத்திற்கு நன்றி:







3 comments:

  1. அழகான படம். அருமையான ஆக்கம். பாராட்டுக்கள். நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி சகோதரர்களே

    ReplyDelete