Thursday, October 13, 2016

சுட்டும் விழிச்சுடர்! – மூட நம்பிக்கை


சமீபத்தில் ஆன்மீகம் – தெய்வ நம்பிக்கை என்ற பெயரில் ஒரு இளம் பெண்ணை மூளைச்சலவை செய்து பட்டினி போட்டு கொன்ற சம்பவம் சமூகவியலாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த காரணத்தால் உயிர் நீத்துள்ளார். சமண சமயத்தைச் சேர்ந்த சிறுமி ஆராதனா சம்தரியா. சமயக் கடமை என்ற பெயரில் தண்ணீர் மட்டுமே குடித்து 68 நாட்கள் தொடர் விரதம் இருந்து வந்துள்ளார். விரதம் முடிந்ததைக் குறிக்கும் வகையில் ஆராதனாவின் பெற்றோர் அவரைத் தேரில் ஊர்வலமாக அழைத்துச்சென்று ‘பாரானா’ என்ற பெயரில், பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அதில், தெலுங்கானா மாநில அமைச்சர் பத்மராவ் கவுட், தலைமை விருந்தினராக பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆராதனா, சென்ற ஆண்டிலும் இதேபோன்று 68 நாள் விரதம் மேற்கொண்டதை சிறார் உரிமை அமைப்பு மூலம் அறியமுடிகிறது. செகந்திராபாத்தில் நகைக்கடை உரிமையாளரின் மகளான, எட்டாம் வகுப்பு பயிலும் ஆராதனா என்ற சிறுமி பெற்றோரின் கட்டாயத்தின்பேரில் இப்படிப்பட்ட ஒரு விரதத்தை மேற்கொண்டதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. விரதம் முடிந்து உடல் பலகீனமாக இருந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் அக்டோபர் 3ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார்.