Thursday, September 29, 2011

இன்கண் - கலீல் கிப்ரான் ( மொழி பெயர்ப்பு )


இன்கண்

வருடம் ஒருமுறை நாட்டின்பக்கம் தலை காட்டும் ஓர் துறவியும், அம்மகானை நெருங்கியே, இன்கண் குறித்து இயம்பும்படி வேண்டினாரே!

மறுமொழியாய் பகன்றாரே அம்மகானும்:

இன்கண் என்பது சுதந்திர - கானம்,
ஆயினும் அஃது சுதந்திரமன்று.
அது உம் இச்சைகள் மலரும் பருவம்,
ஆயினும் அஃது அவற்றின் கனிகள் அன்று.
அது உயர்ச்சி நோக்கி அழைக்கும் ஆழம்
ஆயினும் அஃது ஆழமும் அன்று உயரமும் அன்று.
அது கூண்டில் அடைக்கப்பட்ட சிறகுகளே.
ஆயினும் அஃது சூழ்ந்து கொண்ட வெற்றிடம் அன்று
ஓய், ஒவ்வொரு மெய்மையிலும் , இன்பமே சுதந்திர கீதம்.
மேலும், யாம் உவகையுடன் நிறைந்த  இதயத்துடன்
உம்மை இசைக்கச் செய்கிறேன்;
இருப்பினும் உம் இதயம் அந்த இசையினூடே
உம்மையே இழக்காமல் இருக்கச் செய்வேன்.

உம்முடைய இளவல்களோ உண்மகிழ்வே உன்னதமாக 
எண்ணி எதைஎதையோ நாடிச்செல்கின்றனர்.
அது காரணம் கொண்டு அவர்கள் விசாரணைக்கும்
கண்டிப்புக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
யாம் அவ்விளவல்களை ஒருகாலும் விசாரிக்கவோ, கண்டிக்கவோ செய்யோம். அவர்களின் தேட்டத்தை ஏற்போம்.
அவர்கள் இன்பத்தைக் கண்டுபிடிக்கலாம்;
ஆயினும் அவள் மட்டும் தனித்து அல்ல;

சகோதரிகள் எழுவராம் அவளுக்கு, அதிலும் கடையவள்,
இன்பத்தினும் இனியவள்.
வேருக்காக பூமியைத் தோண்டி ஆங்கே புதையலைக் கண்டெடுத்த
மானிடனை அறிந்திலையோ நீவிர்?

உம் மூதறிஞரில் சிலர், இன்பம் என்பது மயக்க நிலையில் இழைத்த தவறென துயருற்று நிற்கின்றனர்
ஆனால், துயர் என்பதெல்லாம் , மேகம்சூழ் மனமேயன்றி
அதற்கான தண்டனம் அன்று.
அவர்கள் தம் இன்பங்களின் நன்மையுணர்தல் நலம்,
காரணம் அவைகள் கோடையின் அறுவடைகளாகலாம்.
இருப்பினும் அந்த சோகமே சுகமாயின் அவர்கள் சுகமாக்கப்படட்டும்!

மேலும், உம்மவரில் தேட்டலில் திளைத்திருக்கும் இளவலாகவும் இல்லாமல்
நினைவலைகளைச் சுமக்கும் முதியோராகவுமன்றி இரண்டுங்கெட்டானாக
இருதலைக்கொள்ளியாய் இருப்போரும் உள்ளனரே;
அவர்களின் தேட்டலின் திணறலிலும், நினைவலைகளின் தீண்டலினாலுமே
அனைத்து இன்பங்களிலிருந்தும் விலகி இருக்கின்றனரே,
அவர்தம் இச்சைகளை புறக்கணிக்கவாவது செய்யலாம் அன்றி 
அதற்கெதிரான தவறைக்கூட இழைக்கலாம்.
ஆயினும் அவர்களை முன்னிறுத்துவது அவர்தம் உண்மகிழ்வுகளே!
ஆம், இப்படித்தான் அவர்கள் நடுங்கும் கரங்களுடன், வேருக்காகத் தோண்டும் குழிகளிலும் புதையலைக் கண்டெடுக்கின்றனர்.
ஆயினும் அந்த ஆர்வத்தை புண்படுத்தக்கூடியவர் எவர் 
என்று எமக்குக் கூறுங்கள்.
எங்கேனும் கீதமிசைக்கும்புள் , இரவின் இனிமையை புண்படுத்துமா,
அன்றி அந்த மின்மினிதான், நட்சத்திரங்களை புண்படுத்துமா?
உம்முடைய தீசுவாலையோ அன்றி கரும்படலமோ அவ்வளிக்குச் சுமையாகக்கூடுமோ?
பணிக்காரனால் இடர்பாடு இழைக்கும் நித்சலமான குளமாக 
எண்ணிப்பார் உம் இச்சையை?

மறுதலிக்கலாம் உம் இன்பங்களை அடிக்கொருமுறை, ஆயின்
உம் சரிவுகளின் விருப்பத்தை சேமித்துக்கொள்
இன்று புறக்கணிக்கப்படுவதாகக் காட்சியளிப்பது, மறு நாளுக்காகக் காத்திருக்கக்கூடும் என்பதை எவர் அறிவார் ?
தம் பாரம்பரியத்தையும்,  உண்மையான தேவையையும் உம் சரீரம்
அறிந்திருப்பதோடு , அது வஞ்சிக்கப்படாமலும் இருக்கலாம்.
உம் சரீரம் என்பது உம் ஆன்மாவின் நரம்பால் இசைக்கப்படும் யாழிசை,
அதிலிருந்து இனிய நாதத்தை மீட்டுவதோ அன்றி குழப்பி ஒலிகளை 
வெளிப்படுத்துவதோ எதுவாயினும் உம்மால் மட்டுமே .

“ நன்றாக இல்லாத இன்பத்திலிருந்து, நன்றாக உள்ள இன்பத்தை எவ்வாறு அடையாளம் காணப்போகிறோம்? “, என்று உம் இதயத்தைக் கேட்டுப்பார் இப்போது.
உம் வயலுக்கும், தோட்டத்திற்கும் சென்று பார், தேனீயின் இன்பம் மலரின் தேனைச் சேகரிப்பதிலேயே உள்ளதென்பதை உணர்வாய்
ஆயினும் தன் தேனை அந்த தேனீக்காக வழங்குவதிலேயே அம்மலரின் 
இன்பமும் உள்ளது.
அத்தேனீக்கு ஒரு மலர் என்பது வாழ்வின் நீரூற்றாகும்,
அம்மலருக்கோ ஒரு தேனீ காதலின் தூதுவனாகும்,
தேனீ மற்றும் மலர் என்ற அந்த இரண்டிற்கும் இன்பத்தைக் கொடுப்பதும், பெறுவதும் தேவையும் மற்றும் மெய்மறக்கச் செய்வதுமாகும்.

ஆர்பலீசு மக்களே, அந்த மலர்களையும், தேனீக்களையும் போன்று உங்கள் இன்பத்திலிருங்கள். 


இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு -- குறள் (1152)

http://youtu.be/Yr3Ymt69Mi0


                                                               

Sunday, September 25, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் (22)


அன்னபூரணி ஓரமாக அந்த மலர் மஞ்சத்தில் சுருண்டு கிடந்தாள்!
திருமண அலைச்சலும், களைப்பும் கூட அவளுக்கு தூக்கம் வரவழைப்பதாக இல்லை. மனதில் ஏதோ விபரீதமாக நடக்கப் போகிறது என்ற எச்சரிக்கை மணி ஒலிப்பது போலவே இருந்ததால் ஒரு படபடப்பும் தொற்றிக் கொண்டது. சிறிது நேரத்திற்கு ஒரு முறை கணவனின் முகத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். அவனுடைய ஒரு சிறு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்தாள். அவன் வலி நிவாரணிகள் கொடுத்த மெல்லிய மயக்கத்தில் கண்ணயர்ந்திருந்தாலும் ஏனோ அவளுக்கு மட்டும் உறக்கத்தின் சாயல்கூட இல்லை.
அடுத்த நாள் காலை தூக்கம் மறந்த சிவந்த கண்களுடனும், அலங்காரம் கலையாத துவண்ட மலரென வந்து நிற்கும் புதிய மருமகளைப் பார்த்தவுடன் விடயம் புரிவதில் சிரமம் இருக்கவில்லை மாமியாருக்கு…….. லேசான பதட்டத்துடனே அவளை நெருங்கி தலையை மெதுவாக வருடி, “என்னம்மா….. மிதிலன் தூங்குகிறானா. இன்னும் எழுந்திருக்கவில்லையா? “ என்றாள்.
“ ஆம் அத்தை, அவருக்கு இரவு காய்ச்சல் அதிகமாக இருந்தது. மாத்திரை போட்டார். அதனால் இன்னும் அசந்து உறங்கிக் கொண்டிருக்கிறார். “
சூழ்நிலையின் இறுக்கத்தை தளர்த்தும் வகையில், மாமியார் தன் மருமகளை அணைத்து, “ போய் குளித்து விட்டு வாம்மா.பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.” என்றார்.
மிதிலன் எழுந்த போதும் காய்ச்சல் குறையாதது கண்டு மருத்துவமனைக்குச் செல்ல முடிவெடுத்து கிளம்பினாலும் அடுத்து வந்த நாட்கள் அன்னபூரணியின் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு கொடுமையான காலம்…….
இருபது ஆண்டுகளுக்கு முன் மருத்துவ வசதியில் அந்த அளவிற்கு பின்னடைவு அடைந்திருந்த காலம் அல்ல என்றாலும், நோயின் தன்மை அதனை பின்னுக்குத் தள்ளி விட்டது எனலாம். ஆம் மிதிலனுக்கு அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் எண்ணவும் நடுக்கம் ஏற்படுத்தும் விசயங்கள். பலவிதமான மருத்துவ சோதனைகள். மருத்துவமனை வாசம் என்று புது மணப்பெண் என்ற கிளுகிளுப்பே இன்றி வாழ்க்கை கோரமான தன் முகத்தை காட்ட ஆரம்பித்திருந்தது. வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அடிக்கொரு முறை தங்கி மருத்துவம் பார்க்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டு, இறுதியில் மூன்றே மாதத்தில் உயிரற்ற உடலாக வீடு திரும்பினான், அனைவர் தலையிலும் பெரிய கல்லாகத் தூக்கிபோட்டபடி…….
அதற்குப் பிறகு அன்னபூரணியின் பெற்றோரும், மிதிலனின் பெற்றோரும் எவ்வளவோ சொல்லியும் மறுமணத்தில் நாட்டமே இன்றி பல காலங்களையும் இப்படியே கடந்ததோடு, அதற்கு பிறகு பல சேவைகள் மூலம் தன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
வாட்ச்மேன் சாந்தநாதன் மூலமாக அன்னபூரணி அம்மாளின் கதையைக் கேட்டு அசந்து போய் நின்றிருந்தான் ரிஷி.

அவந்திகாவிற்கு ஏன் தான் ஞாயிற்றுக் கிழமை வந்தது என்று இருந்தது. ரம்யா ஊருக்குச் சென்று இந்த ஒரு வாரத்தில் அலுவலகம், வீடு என்று இருந்தாலும், ஞாயிற்றுக் கிழமை வந்தவுடன் தனிமை சற்று கொடுமையாகத்தான் இருந்தது. ஏனோ மாறனின் நினைவும் வந்தது. அந்த ஊரில் அலுவலக நண்பர்களைத் தவிர அவள் அறிந்த ஒரே நபர் அல்லவா….. காலை 6 மணிக்கே முழிப்பு வந்தாலும், எந்த வேலையும் ஓடவில்லை. எங்கேனும் வெளியில் சென்று வந்தால் தேவலாம் போல் இருந்தது. மாறனிடம் கேட்கவும் தயக்கமாகவும் இருந்தது. தினமும் அவளை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வதும், திரும்ப வீட்டில் கொண்டுவந்து விடவும் என்று இத்தனை பெரிய உதவி செய்பவனிடம் ஞாயிற்றுக்கிழமை கூட வெளியில் கூட்டிப் போகும்படி தொந்திரவு செய்ய விரும்பவில்லை அவள். மேலும் இந்த ஒரு வாரத்தில் ஒரு சிநேகிதமான பார்வைகூட அவனிடமிருந்து வரவில்லையே என்று யோசிக்கவும் தோன்றியது. இப்படி ஏதேதோ சிந்திக்கும் வேளையில் , செல்பேசியின் இனிய பாடல் அழைப்பு அதைக் கலைத்தது.
“ ஹலோ, …….”
“ ஹலோ” என்று சொல்லும் போதே திடீரென ஏனோ முதன் முதலில் சில நாட்கள் முன்பு வாஷிங்டனில் கேட்ட அதே பரிவான, காதலுடனான அந்த இனிய குரல் நினைவில் வந்ததோடு உடலும், உள்ளமும் சிலிர்க்கவும் செய்தது.
“ஹலோ”
அவந்திகாவின் குரலில் இருந்த இந்த மாற்றம் மாறனுக்குத் தெளிவாகப் புரிந்ததாலும், காரணம் புரியாமல் ஆச்சரியமாக இருந்தது………..

“ ம்ம்…… நான் மாறன் அவந்திகா. நீங்கள் எழுந்து விட்டீர்களா. அல்லது தூங்கும் போது தொந்திரவு செய்கிறோனோ என்று நினைத்தேன்.  இன்று துலிப் மலர் காட்சிக்குப் போகலாம் என்று என் நண்பர்கள் கூறினார்கள். நீங்கள் விரும்பினால் எங்களுடன் சேர்ந்து கொள்ளலாம் . வருவதானால் நாங்கள், வந்து உங்களை பிக் அப் செய்து கொள்கிறோம். 9 மணிக்கு ரெடி ஆக முடியுமா?”
படபடவென அவன் பேசி முடித்தாலும் அவள் காதுகளில் தேன் பாய்ந்தது போல் இருந்தாலும், அவன் என்ன சொல்கிறான் என்று புரிந்து கொள்வதற்கு சற்று நேரம் பிடித்தது. துலிப் மலர்கள் என்ற வார்த்தை மட்டும் காதில் விழுந்தது……..
அந்த துலிப் மலர்களின் அழகு நினைவில் வர உள்ளம் ஏனோ இன்று இனம் புரியாத ஒரு இன்ப நிலையில் பரவசமாக மலர்ந்தது………….