Saturday, December 24, 2016

அடியாரேயாயினும் உழைப்போரே உன்னதம் பெறுவர்!


பவள சங்கரி
appar_thirunavukkarasar-95x300ஞானசம்பந்தப்பெருமானும், அப்பர் பெருமானும் ஏழாம் நூற்றாண்டின் இடையில் சமக்காலத்தில் வாழ்ந்த திருத்தொண்டர்கள். இவர்கள் இறை வழிபாட்டிற்காக திருவீழிமிழலையில் தங்கியிருந்த காலத்தில் அந்த நாட்டில், மழையின்மைக் காரணமாக பெரும் பஞ்சம் ஏற்பட்டு, உயிர்கள் அனைத்தும் பசியால் வாடி வருந்தியிருந்தன. அடியார்களும் துயர்மிக உற்ற நிலையில் ஆண்டவனிடம் முறையிட்டு வேண்டினர். இதனையறிந்த திருஞானசம்பந்தப்பிள்ளையார், `கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ?’ என்று மனம் நொந்தவாறே, இறைவனை நினைந்துறுகியவாறே உறங்கச் செல்கிறார். எம்பெருமானார் பிள்ளையின் துயர் பொறுக்கவில்லை போலும்! அவர்தம் கனவில் தோன்றி, மக்கள், மாக்கள் துயர் தீர்க்கும்பொருட்டு ஆலயத்தில் உள்ள கிழக்கு, மேற்கு பலிபீடங்களில் இருவருக்கும் பொற்காசுகள் அளித்துள்ளதாகக் கூறுகிறார். விழித்தெழுந்த ஞானசம்பந்தப்பெருமான், அப்பரடிகளையும் உடன் அழைத்துக்கொண்டு ஆண்டவன் அருளியவாறு பலிபீடம் நோக்கிச்செல்கிறார். கிழக்கு பலிபீடத்தில் சம்பந்தப்பெருமானும், மேற்குப் பலிபீடத்தில் அப்பர் பெருமானும் காசு பெற்று உயிரினங்களின் துயர் துடைக்க மேவுகிறார்கள். அவரவர் திருமடங்களுக்குச் சென்று அடியவர்களுக்கும் அமுதளிக்க விரைகின்றனர். இங்குதான் வினை விடுபடுகிறது. அப்பர் பெருமானின் திருமடத்தில் விரைவாகவும், சம்பந்தப்பெருமானின் திருமடத்தில் காலம் தாழ்ந்தும் திருவமுது அளிக்கப்படுகிறது. இதையறிந்த சம்பந்தப்பிள்ளையார் அதற்குரிய பொறுப்பாளர்களை அழைத்து காரணம் வினவுகிறார். அவர்களும், சம்பந்தப்பெருமானின் பொற்காசுகள் மாற்று குறைந்ததாக இருந்ததால் அதனை மாற்றி பொருட்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுவதே காரணம் என்று கூறுகிறார். ஓய்வின்றி உழவாரப்பணி செய்து நொந்து போயிருக்கும் அப்பர் பெருமானாருக்கு மேலும் துன்பம் நேரக்கூடாது என்றுதானோ நல்ல காசுகளை அளித்துள்ளார் எம்பெருமானார் என்று உணர்ந்த சம்பந்தப்பிள்ளையார் மறுநாள் ஆலயம் சென்று `வாசிதீரவே காசு நல்குவீர்` என்ற கீழ்கண்ட திருப்பதிகம் பாடி இறைவனை மனம் குளிரச்செய்து தாமும் நற்காசினைப்பெற்று அடியார்களுக்கு விரைவில் தக்க சமயத்தில் உணவளித்து மகிழ்வித்து தாமும் மனமகிழ்ந்தார். இறையருளால் சில நாட்களிலேயே மழைவளம் பெற்று நாடும் செழித்து, பஞ்சமும் நீங்கி, மக்களும் நலமாக வாழ்ந்தனர்.
வாசிதீரவே, காசு நல்குவீர்;sambandhar1
மாசுஇல் மிழலையீர்; ஏசல் இல்லையே
இறைவர் ஆயினீர்; மறைகொள் மிழலையீர்;
கறைகொள் காசினை, முறைமை நல்குமே
செய்யமேனியீர்; மெய்கொள் மிழலையீர்;
பைகொள் அரவினீர்;உய்ய நல்குமே
நீறு பூசினீர்; ஏறு அது ஏறினீர்;
கூறு மிழலையீர்;பேறும் அருளுமே
காமன்வேவ, ஓர் தூமக் கண்ணினீர்;
நாம மிழலையீர்; சேமம் நல்குமே
பிணிகொள் சடையினீர்; மணிகொள் மிடறினீர்;
அணிகொள் மிழலையீர்; பணிகொண்டு அருளுமே
மங்கை பங்கினீர்; துங்க மிழலையீர்;
கங்கை முடியினீர்; சங்கை தவிர்மினே
அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்;
பரக்கும் மிழலையீர்; கரக்கை தவிர்மினே
அயனும் மாலுமாய் முயலும் முடியினீர்;
இயலும் மிழலையீர்; பயனும் அருளுமே
பறிகொள் தலையினார், அறிவது அறிகிலார்;
வெறிகொள் மிழலையீர்; பிரிவது அரியதே
காழிமா நகர் வாழி சம்பந்தன்,
வீழிமிழலை மேல், தாழும் மொழிகளே
பி.கு. செய்தொழில்களில் இலாபம் பெருகுவதற்கும், கடினமான வழக்குகளிலும் வெற்றி பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகம் இது!
http://www.vallamai.com/?p=74118

Thursday, December 22, 2016

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!


எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு தமிழ் இலக்கியத்துக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு வல்லமையின் மகிழ்ச்சியான வாழ்த்துகள்.
வண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள் வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)
cropped-e0ae89e0aeafe0aeb0e0aeaae0af8de0aeaae0aeb1e0aea4e0af8de0aea4e0aeb2e0af8d-1வண்ணதாசன்

சுய மரியாதை



புதுச்சேரி யூனியனின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி.. புதுச்சேரி யூனியனை குற்றமில்லா பிரதேசமாக உருவாக்குவோம் என்று உறுதியோடு இருப்பவர். 1972இல் இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி. திகார் சிறையில் கைதிகளின் நலன் கருதி (3C மாடல் அதாவது C-Collective, C-corrective, C-Communicative என்ற பொருளில்) கிரண்பேடி நல்ல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளார். டென்னிஸ் போட்டியில் ஆசிய சாம்பியன் பட்டம் வென்றவர். அவருடைய கம்பீரமான குரலும், மிடுக்கான தோற்றமும் அவர் 61 வயதைக்கடந்தவர் என்று அறியும்போது ஆச்சரியம் கொள்ளவைக்கும். ஐ.நா.சபையில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பணியாற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் மேகன் டோன்மேன் என்பவர் இவரைப் பற்றி, “யெஸ், மேடம் சார்” என்ற ஆவணப்படம் உருவாக்கியிருக்கிறார் .
சமீபத்தில் திருமணமான ஒரு இளம் இணையர் இவரிடம் ஆசிகள் பெறுவதற்காக காலில் விழுந்திருக்கின்றனர். அவர் உடனே அதைத்தடுத்து காலில் ஏன் விழுகிறீர்கள் என்று கூறிவிட்டு தானும் அவர்கள் காலில் விழுந்துள்ளார். இனியொருவர் இதுபோன்று சக மனிதர் காலில் விழவேண்டியதில்லை என்ற சுய மரியாதை விழிப்புணர்வை ஏற்படுத்தி பலமடங்கு உயர்ந்து நிற்கிறார்!

Saturday, December 17, 2016

Poetry by Lee Si-young – கொரிய மொழிபெயர்ப்பு





வளியினூடே ஏகும் அம்பாய்
இலக்கைப் பற்றிக் கொண்ட
அதன் சர்வமும் தவிக்கிறது.
எம் மொழி மட்டும் அவ்வளியினூடே
ஊடுறுவி எவருடைய இதயத்தையேனும்
தீண்டக்கூடுமாயின், அதன் ஆணிவேரையே
துளைக்கக்கூடுமாயின், ஆனமட்டும் ஆட்டிவைத்துவிடுமதை.
கங்கின் விதை போன்றோ,
முதற்காதல் கீதம் போன்றோ
சர்வமாய் மலர்ந்து கிடப்பதேயது.

Thursday, December 15, 2016

41% இந்துக்களுக்கு அடிப்படைக்கல்வி இல்லை!



உலகளவிலான அனைத்து மதங்களின் அடிப்படையில் கல்வி கற்றோரின் எண்ணிக்கையை பியூ ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் அதிர்ச்சிகரமான தகவலாக, உலகளவில் நம் இந்து மதமே அடிப்படைக் கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. யூதர்களே கல்வியில் முதலாம் இடத்தில் உள்ளனர்.
41% இந்துக்கள் அடிப்படை கல்வியே இல்லாமல் இருக்கின்றனர்.
53% இந்துப்பெண்கள் / 29% இந்து ஆண்கள் சுத்தமாக கல்வி வாடையே இல்லாதவர்களாக உள்ளனர்!
6.4 ஆண்டுகள் அடிப்படைக்கல்வி பெற்ற இந்து மதத்தின் ஆண்கள் மத்தியில் 4.2 ஆண்டுகள் மட்டுமே பெண்கள் அடிப்படைக் கல்வி பெறுகின்றனர்.
இசுலாமியப்பெண்கள் 4.9 ஆண்டுகள் அடிப்படைக்கல்வி பெறுகின்றனர்.

Tuesday, December 6, 2016

சோ ராமசாமி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்




மூத்த பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் சித்தாந்தவாதி, நகைச்சுவை நடிகர், நாடக ஆசிரியர், வழக்கறிஞர் திரு.சோ ராமசாமி அவர்கள் இன்று அதிகாலை (07/12/2016) நம்மைவிட்டுப் பிரிந்துள்ளது மிகவும் வேதனைக்குரிய விசயம். எழுத்துலகில் தனக்கென ஒரு தனிப்பாணியை உருவாக்கி மக்களை தட்டியெழுப்பிய அரசியல் சிந்தனைவாதி, உயர்திரு சோ அவர்களின் முகமது பின் துக்ளக் என்ற நாடகம் தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் பரவி அரசியலில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை. இந்த நாடகம் பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. அவருடைய எழுத்துகள் போலவே இந்த நாடகமும் மக்களிடையே பன்மடங்கு எழுச்சியை ஏற்படுத்தியது. பத்திரிக்கைத் துறையில் அவர் ஆற்றிய பணிக்களுக்காக 1986ஆம் ஆண்டு வீரகேசரி விருதும், 1994ஆம் ஆண்டு கொயங்கா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 அன்னாரது ஆன்மா சாந்தியடையவும், அவர்தம் குடும்பத்தாரும், இரசிகர்களும் மனம் அமைதி பெறவும் எல்லாம் வல்ல கூத்தப்பெருமானை இறைஞ்சுகிறோம். 

Sunday, December 4, 2016

தீவிர சிகிச்சை பெறும் தமிழக முதலமைச்சர் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்


பொன் மனச் செல்வி!
செல்வி. ஜெ. ஜெயலலிதா

தமிழக  முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது.


தற்போதைய முதல் அமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான, ’அம்மா’, ‘புரட்சித் தலைவி’ என்று அன்பாக தொண்டர்களால் அழைக்கப்பெறும் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் அரசியலில் நுழைவதற்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களின் மூலம் தன்னுடைய கலையுலகச் சாதனையை நிரூபித்தவர். செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களின் தனிச் சிறப்பென்பதே, அவர் எந்தத் துறையில் நுழைந்தாலும் அத்துறையின் எல்லைவரை சென்று சாதிக்கும் வல்லமைப் பெற்ற, தோல்வியைக் கண்டுத் துவளாத, துணிச்சல்மிகு பெண்மணி என்றால் அது மிகையாகாது. ஃபீனிக்ஸ் பறவை போல, அழிக்க, அழிக்க, அந்தச் சாம்பலிலிருந்து மேலும், மேலும் புத்துணர்வுடன் உயிர் பெற்று வரும் வல்லமை கொண்டவர் இந்தப் பன்முக நாயகி. அந்த வகையில் பெண்குலத்திற்கே பெருமை சேர்க்கும், தன்னம்பிககை எனும் மகுடம் சூடிய இரும்புப் பெண்மணி, தாய்மை முலாம் பூசிய தங்க மங்கை,

Monday, November 28, 2016

வந்துவிடு வனிதா.. !

பவள சங்கரி


ஓவியம் : நன்றி திரு. ஜீவா

சன்னல் திட்டின் விளிம்பில் உட்கார்ந்தவாறு மாலை நேர மங்கிய ஒளியில் மயிலிறகாய் வருடும் தென்றல், முன் நெற்றி முடியை மெல்லச் சுழட்டியடித்தது. அவளுடைய தலை சன்னலில் முட்டியிருந்தது. சன்னல் தூரிகையின் நெடி மூக்கில் நுழைந்து ஒருவித உறுத்தலை ஏற்படுத்தியது.அவள் களைப்பாகவும் இருந்தாள்.

Thursday, November 24, 2016

பப்பாளி



சின்ன வயதில் நோட்டிற்குள் வைத்த மயிலிறகு குட்டிப் போட்டதா என்று கொஞ்ச நேரத்திற்கொரு முறை பார்க்கும் பழக்கம் இத்தனை வயசாகியும் இன்னும் விட்டபாடில்லை..  

Tuesday, November 22, 2016

உறுமீன்



உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை...  நன்றி.


ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் 
வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி)



Monday, November 14, 2016

குழந்தைகள் தினம்!







அன்பு மலர்களே!
கவின்மிகு வனங்களே!
தொட்டால் சிணுங்கியாகிறாய்
அழகு வண்ணம் காட்டி
வலை வீசிமகிழ்கிறாய்!
குயிலின் குரலில் மதிமயக்கி
நினைவிழக்கச் செய்கிறாய்!
மயிலின் ஒயிலாய் வலம்வந்து
வாஞ்சை சேர்க்கிறாய்!
கனிந்த பார்வையில் கல்லையும்
கற்கண்டாய் ஆக்குகிறாய்!
இருண்ட வானில் இனிமையாய்
ஒளி பாய்ச்சுகிறாய்!
திரண்ட மேகமாய் நிறைந்து
நீர் வார்க்கிறாய்!
பனிமழையோ பகல்நிலவோ
பட்டொளிவீசி நிற்கிறாய்!
விழியின் அசைவில் வித்தாகி
விதியின் விருட்சமாகிறாய்!
பாடும் பறவையோ பசுவின்மடியோ
பரவசமாய் நேசமாகிறாய்!
பசுந்தளிராய் பக்கமிருந்து பரிவாய்
பூத்துக் குலுங்கி பசப்புகிறாய்!
புன்னகையெனும் கிரீடம் சூடி
புவியின் புத்தொளியாகிறாய்!
ஆயிரமாயிரம் காலம் ஆருயிராய்
ஆனந்தம்பாடி வாழ்வீர்நீவிர்!!

Thursday, November 10, 2016

சுட்டும் விழிச்சுடர்! - கொடிது .. கொடிது...

பவள சங்கரி


நேற்று காலை செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருக்கும்போது பக்கத்தில் ஏதோ படபடவென மெல்லிய சிறகசைக்கும் ஓசை கேட்டது. சற்றே திரும்பிப்பார்த்தபோது, அழகிய அந்த அடர்நீல வண்ண பட்டாம்பூச்சி என்னருகில் சன்னல் விளிம்பில் தம் சிறகை மெல்ல ஆட்டியபடி அழகு காட்டிக்கொண்டிருந்தது. புதிய 2000 உரூபாய் நோட்டின் சுவையான செய்தியைக்கூடத் தொடரத் தோன்றாமல் அதன் அழகிலேயே இலயித்திருந்த அந்த சுகமான தருணத்தில்தான் திடீரென ஒரு இராட்சசன் பல்லி உருவத்தில் வந்து கப்பென அதன் மென்சிறகைக் கவ்வியே விட்டது. என்ன செய்வது என்று அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அது அந்த சிற்றுயிரை மேலும் தன் வயமாக்கிக்கொள்ள யத்தனித்தது. சட்டென்று சுயநினைவு வந்தவளாக அந்த இராட்சசனை விரட்டிவிட்டாலும் அடுத்த சில மணித்துளிகள் அது துடிதுடித்ததைக் காணச்சகிக்கவில்லை. எப்படியும் பிழைத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில், செய்வதேதும் அறியாமலே உயிர் நீர் ஊற்றுவதாக எண்ணிக்கொண்டு என் விருப்ப தெய்வங்கள் அத்தனையையும் வேண்டிக்கொண்டு துளித்துளியாக நீர் தெளித்தும் பார்த்தும் ஒன்றும் பலனில்லை. இன்னும் மறக்க முடியாமல் மனபாரம் ஏற்படுத்தும் காட்சியது.. மனிதர்களின் வாழ்க்கைகூட இப்படித்தானே. எந்த நேரத்தில் வாழ்க்கை எப்படி மாறும் என்று தெரியாமலேதானே நம் விருப்பம்போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..

Saturday, November 5, 2016

நெருஞ்சி முள்


கணிப்பொறியில் சிக்குண்ட 
கனிசமான பொழுதுகளில் 
அம்மாவிடமும் இயந்திரத்தனமான 
உரையாடல்கள்.

இடப்புற ஊக்கு வலப்புறமும்
வலப்புற வளையம் இடப்புறமும்
இடமாறியிருந்த அம்மாவின் 
இரவிக்கையை முதலுங்கடைசியுமாய்
கண்டது இறுதிக் குளிப்பாட்டலில்தான்.
பிடிமானம் அற்றுப்போன இயந்திரத்தனம்
காலமெலாம் நெஞ்சின் நெருஞ்சியாய் .....

Thursday, November 3, 2016

நீளும் பயணம்!



உம் இதய இச்சையின் உச்சம்
நோக்கிய உயர்வில் இன்னொருவர்
நீ கொள்ளையடித்த பணப்பையைக்
களவாடி அதன்மீது மெழுகுக்
கொழுப்பையும் பூசி அப்பொதியையும்
இன்னொருவரை சுமக்கச்செய்பவரிடம்
இரக்கம் காட்டுங்கள்! பாவம்
அச்சதைப் பிண்டத்திற்கு ஏறுதலும்
கடினம், பாதையும் நீண்டதாகிவிடும்!

கலீல் கிப்ரான் / மொழிபெயர்ப்பு

Friday, October 28, 2016

இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்!!




தீபவொளியின் திருமுகம் இதமாய் சுடர்க
தீந்தமிழின் நலம் யாவும் சூழ்க
வான்நிலவின் ஒளிர் முகம் மலர்க
தேன்கனியின் நறுமுகை நலம் பகிர்க
தானெனும் மாயை விலகி ஒளிர்க
வீணெனும் விகல்பம் நீங்கி நிமிர்க
வாழ்வெனும் வசந்தம் பரவி மகிழ்க
தாழ்வெனும் எண்ணம் நிலையா தொழிக

வரமும் நலமும் நித்தம் தொடரும்
இகமும் பரமும் நன்மை நிலைக்கும்
தேவியவள் நேசம் கனிந்து பெருகும்
கருணை பொழில் வாணியின் அருளும்
எங்கும் நிறைந்து அறிவொளி படரும்
பொங்கும் செல்வம் தங்கும் என்றும்
ஒளிரும் மங்கலம் விலகும் இருளும்
மலரும் இன்பம் வையகம் முழுதும்!!

Saturday, October 22, 2016

தாய் மொழி!




உலகளாவிய ஆய்வு நிறுவனத்தின் முடிவுகளின்படி, குழந்தைகள், வாசிக்கவும், எழுதவும் கற்கவேண்டிய முதல் மொழி தங்கள் தாய்மொழி மட்டுமேதான்! குறைந்தபட்சம், ஒரு நிமிடத்திற்கு  45 முதல் 60 வார்த்தைகள் வரை சரளமாக வாசிக்க முடிந்தால் மட்டுமே அவர்களால் வாசித்த அந்த விசயத்தை முழுமையாக உள்வாங்க முடியுமாம். இத்தன்மை அவரவர்கள் தாய்மொழியால் மட்டுமே சாத்தியமாகுமாம். இந்த அடிப்படை ஞானம் வாய்க்கப்பெற்ற குழந்தைகள் மிக எளிதாக இரண்டாம் மொழியில் வல்லமை பெற்று சாதனையும் படைத்துவிடுகிறார்களாம்... பெற்றோர்கள் அவசியம் சிந்தித்துணரவேண்டிய விசயம்!

Wednesday, October 19, 2016

தேசிய தமிழ் காவலர்!


பவள சங்கரி
சமீபத்தில் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பா.ஜ.க மூத்த தலைவர் தேசிய தமிழ் காவலர், தமிழ்வேள் – இல.கணேசன் அவர்களை வல்லமை வாழ்த்துகிறது.




நேற்று பொற்றாமரை கலை இலக்கிய மன்றத்தின் மாதாந்திர இலக்கியக் கூட்டமும், மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதை முன்னிட்டு பொற்றாமரை குழுவினர் மற்றும் நண்பர்களின் பாராட்டு விழாவும் ஒரு குடும்ப விழா போன்று மிக எளிய முறையில் நடைபெற்றது. இலக்கிய உலகின் ஆகச்சிறந்த ஆளுமைகள் ‘எழுத்துச் சித்தர்’ திருமிகு. பாலகுமாரன், திருமிகு.சிவசங்கரி, திருமிகு. திருப்பூர் கிருஷ்ணன், திருமிகு.கவிக்கோ ஞானச்செல்வன், திருமிகு ஹெச்.ராமகிருஷ்ணன் போன்றோர் கலந்துகொண்டு வாழ்த்தினர். சகோதரிகள் குமாரி அஞ்சனி – அஸ்வினி ஆகியோரின் இனிமையான வீணை இசையுடன் இனிதே ஆரம்பித்தது இந்த விழா. ‘வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள்’ என்று கலைவாணியை காட்சியில் நிறுத்தி, ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ எனத் தொடர்ந்து வாழ்த்தி, ‘குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா’ என மிக அழகானதொரு இசை வேள்வியை நிகழ்த்தி அனைவரையும் இசையில் மெய்யுருகச் செய்தனர். வளர்ந்துவரும் இசைக் கலைஞர்களை உற்சாகப்படுத்தி வரும் பொற்றாமரை அமைப்பு இம்முறை இக்கலைஞர்களை அறிமுகப்படுத்தி கௌரவித்துள்ளார்கள்.


மாதமொரு இலக்கிய அறிமுகம் என்ற வரிசையில், திரு ம.வெ. பசுபதி அவர்கள் அருமையாக ஆசாரக்கோவை பற்றியும், கவிதை உறவு ஆசிரியர் திரு ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்கள் ‘சொந்தமாய் ஒரு சொர்க்கம்’ என்ற தலைப்பில் உறையாடியதைத் தொடர்ந்து தலைவர் தலைமையுரையுடன் விழா சிறப்பாக நிறைவடைந்தது.

Thursday, October 13, 2016

சுட்டும் விழிச்சுடர்! – மூட நம்பிக்கை


சமீபத்தில் ஆன்மீகம் – தெய்வ நம்பிக்கை என்ற பெயரில் ஒரு இளம் பெண்ணை மூளைச்சலவை செய்து பட்டினி போட்டு கொன்ற சம்பவம் சமூகவியலாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த காரணத்தால் உயிர் நீத்துள்ளார். சமண சமயத்தைச் சேர்ந்த சிறுமி ஆராதனா சம்தரியா. சமயக் கடமை என்ற பெயரில் தண்ணீர் மட்டுமே குடித்து 68 நாட்கள் தொடர் விரதம் இருந்து வந்துள்ளார். விரதம் முடிந்ததைக் குறிக்கும் வகையில் ஆராதனாவின் பெற்றோர் அவரைத் தேரில் ஊர்வலமாக அழைத்துச்சென்று ‘பாரானா’ என்ற பெயரில், பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அதில், தெலுங்கானா மாநில அமைச்சர் பத்மராவ் கவுட், தலைமை விருந்தினராக பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆராதனா, சென்ற ஆண்டிலும் இதேபோன்று 68 நாள் விரதம் மேற்கொண்டதை சிறார் உரிமை அமைப்பு மூலம் அறியமுடிகிறது. செகந்திராபாத்தில் நகைக்கடை உரிமையாளரின் மகளான, எட்டாம் வகுப்பு பயிலும் ஆராதனா என்ற சிறுமி பெற்றோரின் கட்டாயத்தின்பேரில் இப்படிப்பட்ட ஒரு விரதத்தை மேற்கொண்டதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. விரதம் முடிந்து உடல் பலகீனமாக இருந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் அக்டோபர் 3ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார்.

Saturday, October 8, 2016

சோதிவடிவே! சுடரொளியே!





ஆயிரமாயிரம் திருநாமங்கள் அன்னையின்
ஆனந்தப்பாயிரம் இசைக்கோலங்கள் சங்கமம்
விண்ணிலேற்றும் விசைக்களிப்பின்  சாகசங்கள்
கண்ணிலூற்றும் காவியங்களின் ஒலியோவியங்கள்

Friday, October 7, 2016

வெந்தயக்கீரை பலதானிய ரொட்டி









தேவையான பொருட்கள் :


வெந்தயக்கீரை - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
கடலை மாவு  - 1/4 கப்
குதிரைவாலி மாவு - 1/4 கப்
கம்பு, சோளம் மாவு - 1/4 கப்
திணை அரிசிமாவு  - 1/4 கப்
பச்சை மிளகாய், இஞ்சி விழுது - 1 1/2 தே.க
மிளகாய் தூள் - 1/2 தே.க
சீரகத்தூள்  - 1/2 தே.க
கொத்தமல்லி தூள் - 1/2 தே.க
தூள் உப்பு   - 3/4 தே.க
மஞ்சள் தூள்  - 1/2 தே.க
தயிர்    - 5 தே.க
தேவையான அளவு எண்ணெய்

மேற்கண்ட அனைத்துப் பொருட்களையும், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையுடன் கலந்து, தேவையான அளவு தண்ணீருடன் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக்கொள்ளவும். வட்ட வடிவில் சப்பாத்தியாக இட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுத்து, சுருட்டி அடுக்கவும். சுவையான, ஆரோக்கியமான வெந்தயக்கீரை  பலதானிய ரொட்டி தயார். பன்னீர் பட்டர் மசாலா அல்லது காய்கறி குருமாவுடன் சூடாகப் பரிமாறவும்.

Thursday, October 6, 2016

INDIAN TEMPLES - கற்பக நாயகி - திருக்கருகாவூர்

ஓம் மகாசக்தியே போற்றி!



பவள சங்கரி

எத்தனை எத்தனை பிறவியம்மா
எல்லாம் உன் அருளம்மா
அத்தனையும் பாவங்களன்றி
வரமாக்கிய வடிவுடைநாயகியே
நாடகமான வையகத்தில்
பூடகமான மனமின்றி
சேடகனாய் வாழாமல்
சிறகடித்து சிறந்திருக்கருள்வாயே

Friday, September 30, 2016

காக்கும் வரமருளும் அன்னையே!



பிள்ளைகள் பலகோடி, அத்தனையும்
உனைநாடி உன்பதம் தேடி
வாழும்வழி தாங்கும்கதி தேடும் உயிர்கள்!
சூழும்துயர் நீங்கும்சதி நாடும் மனங்கள்
காக்கும்வரம் நாளும் தரும் அன்னையே!
வீழ்த்தும் கபடம் தாக்கும் பாகாசுரன்களை
பாட்டுக்கொரு புலவனும் பாருக்கொரு ஞானியும்
ஊர்தோறும் உழவனும் சோறுக்கென சேறும்
வாழ்வுக்கொரு வீணையும் பாரதத்திற்கொரு வீரமும்
அளித்தவள் அவளே அன்னை பராசக்தி!

Thursday, September 22, 2016

மாயக்கண்ணன் – கோவர்த்தனநேசன்



அருள்மிகு கோவர்த்தனநேசன் ஆலயம் – மதுரா

மாயக்கண்ணன் குழந்தையாக அவதரித்த புனித பூமி மதுரா. இந்தியத் திருநாட்டின் எண்ணற்ற புனிதமான வழிபாட்டுத் தலங்களில் இதுவும் முக்கியமான ஒரு தலம். பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 100வது தலம் இது. பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் என ஐம்பெரும் ஆழ்வார்களால் 50 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது.
ஆண்டாள் அருளிய திருப்பாவையின் ஐந்தாவது பாசுரம் இது:

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
எனும் சிறப்பு வாய்ந்த இப்பாடல் மிக்க பொருட்செறிவு கொண்டது !

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ…


ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ…

குழந்தையின் தாலாட்டு! இந்த இரு சொற்களில் எத்தனைத் தத்துவங்கள்!
தால் என்பது நாவைக் குறிக்கும் சொல். நாவை ஆட்டி இசையாய் எடுத்து, ஊட்டி செல்லக்குழந்தையை ஆராட்டுதல் “தாலாட்டு” எனப்படுகிறது. இந்தத் தாலாட்டில் வல்லினமும், மெல்லினமும் தவிர்த்து, இடையினத்தில் மென்மையாக இசைப்பதே இனிய தாலாட்டுப் பாடலாம். (கசடதபற வல்லினம், ஙஞணநமன மெல்லினம், யரலவழள இடையினம்) இதுவே குழந்தைகளை அமைதியாக உறங்கச்செய்து, மூளை வளர்ச்சியையும் ஊக்குவித்து, குழந்தையை அமைதியான சூழலில் வளரச்செய்கிறது. வன்மையான வல்லினப்பாடல் குழந்தையை அச்சுறுத்தும். மென்மையான மெல்லினப்பாடல் குழந்தையின் அழுகைச்சத்தத்தில் அமிழ்ந்துவிடக்கூடும். ஆகவே இடையினத்தில் இசைக்கும் பாடலே குழந்தைக்கு ஏற்றதாகும்.  தமிழரின் தன்னிகரில்லா தாலாட்டு, தரணியில் தனித்து நிற்பதன்றோ! வாழ்க தமிழ்! வாழ்க தமிழர் தம்பெருமை!

வாழ்க்கை - LIFE QUOTES



Monday, September 12, 2016

பன்மொழிப் புலவன் பாரதீ


 “விடுத  லைக்கு  மகளிரெல்  லோரும்
    வேட்கை  கொண்டனம்;  வெல்லுவ  மென்றே
    திடம  னத்தின்  மதுக்கிண்ண  மீது
    சேர்ந்து  நாம்பிர  திக்கினை  செய்வோம்” 
(பாரதியார் கவிதைகள். 577) 

- “சீயூசூனி”  என்னும்  பெண்  கவிஞர்  சீன  மொழியில்  பாடிய  பாடலின் , மாகவி பாரதியின்  தமிழ்  மொழிபெயர்ப்பு இது. 

பாரதியார்    புதுவையில்  பத்தாண்டுகள் தங்கியிருந்தார்,   அப்பொழுது  பிரெஞ்சு  மொழியைக்  கற்றிருக்கிறார்.  “லா மார்ஸெலேஸ்”  என்னும்  பிரெஞ்சு  தேசிய கீதத்தை  “அன்னை  நன்னாட்டின்  மக்காள்”  என்று  தமிழில்  மொழிபெயர்ப்புச்  செய்துள்ளார்.   தமிழில்  தேசியகீதம் எழுத  வேண்டும்  என்ற எண்ணம்  தோன்ற இதுவே  வித்தாய் அமைந்துள்ளது.



பாரதியின் எழுத்துக்கள் விவேகபாநு, ஞானபாநு, காமன் வீல், ஆர்யா, மெட்ராஸ் ஸ்டாண்டர்ட், நியூ இண்டியா, பெண்கல்வி, கலைமகள், தேசபக்தன், கதாரத்னாகரன் போன்ற இதழ்களில் அவர் மொழிபெயர்ப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.


Wednesday, August 31, 2016

தமிழ் இந்து நாளிதழில் என்னுடைய ‘கெய்ஷா’




தமிழ் இந்து நாளிதழில் என்னுடைய ‘கெய்ஷா’ என்ற மொழிபெயர்ப்பு நூலுக்கு அழகாக விமர்சனம் எழுதியுள்ளார்கள். திரு மானா பாஸ்கரன் அவர்களுக்கும், இந்து நாளிதழுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஒரு தேசத்தின் கலாச்சாரப் பின்னணியோடு அந்த தேசத்தை நாம் புரிந்துகொள்ள முற்படும்போதுதான் அதன் முழு பரிமாணத்தையும் நன்கு உணர முடியும். பாரம்பரிய இசை, நடனம், கூத்து, ஓவியம் வழியே பின்தொடர்ந்தால் ஒரு தேசத்தின் ஆழ அகலங்களை முற்றும் உணரலாம். உலக அரங்கில் நவீன ஜப்பானின் பொருளாதாரக் கொடி காற்றில் அசைந்து உயரப் பறக்கிறது. அந்த நவீனத்தின் புராதன அடையாளங்களுள் ஒன்றுதான் ‘கெய்ஷா உலகம்’.

நான்மாடக்கூடல் நாயகி!


அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் – மதுரை
am1
அன்னை மீனாட்சியின் ஆட்சியின் அருமைப் பெருமைகள் அனைத்தும் தெள்ளத் தெளிவாகக்காட்டும் அற்புத ஆலயம் இது.
am
இமைகளற்ற மீன் தன் முட்டைகளை கண் பார்வையின் சக்தி கொண்டே பொரிக்கச்செய்து காத்து வருவதைப்போன்று மீன் போன்று அழகிய வடிவுடை நயனங்களைப் பெற்ற அன்னை மீனாட்சி இப்புவி மக்களை கண்ணிமைக்காது காத்து வருகின்றாள். இதன் காரணமாகவே அன்னை மீனாட்சி என்ற திருநாமமும் கொண்டாள்! அன்னை எழுந்தருளியிருக்கும் புனிதத் தலம் மதுரை மாநகர். பாண்டிய மன்னன் குலசேகரப் பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றியதால் கடம்பவனம் என்ற வனத்தை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைந்துள்ளதால்நான்மாடக்கூடல் என்ற அழகிய பெயரும் மதுரைக்கு உண்டு.