Monday, May 18, 2026

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 28

 63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

 

திருஞானசம்பந்தர் வரலாறு

`வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்

மதுமலர்நற் கொன்றையான் அடியலால் பேணாத

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்`

என்று சுந்தரர் தம் திருத்தொண்டத் தொகையில், இவர் வரலாற்றை முதன்முதலில் குறிப்பிட்டு அருளியதோடு, திருஞானசம்பந்தர் பெருமைகளைத் தாம் அருளிய தேவாரத் திருப்பதிகங்களிலும் போற்றிப் பாடியுள்ளார். நம்பியாண்டார் நம்பிகள், இரண்டு பாடல்களில் இவர் வரலாற்றை அந்நூலில் விளக்கியதோடு பதினொராம் திருமுறையில் இலங்கும் ஆறு பிரபந்தங்களில் திருஞானசம்பந்தர் வரலாற்றையும், அவர் தம் அருள் நலங்களையும், அவர் அருளிய தேவாரத் திருமுறைகளின் பெருமைகளையும் தெளிவுற விளக்கியுள்ளார். பன்னிரு திருமுறைகளுள் முதல் மூன்று திருமுறைகளை அருளிச் செய்தவரான திருஞானசம்பந்தர் பெருமானின் அருள் வரலாற்றைப் பெரியபுராணத்தில் 1256 பாடல்களால் சேக்கிழார் சுவாமிகள் அழகுற விரித்துரைத்துள்ளார்.

சிவநெறி செழித்தோங்கிய சீர்மிகு திருப்பதியாம் சீர்காழி எனும் அருள் நகரில் அவதரித்தவர் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் சுவாமிகள். ஊழிக்காலத்தே உலகெலாம் அழிந்தாலும், பன்னிரண்டு ஊழியிலும் அழியாது அடியாருக்கு அருள் சுரக்கும் அருட்பதியாகி நின்றமையால், பிரமபுரம், புகலி, வேணுபுரம், தோணிபுரம், சீரபுரம், சீர்காழி, வெங்குரு, பூந்தராய், புறவம், சண்பை, கொச்சைவயம், கழுமலம் எனும் பன்னிரண்டு திருப்பெயர்களைக் கொண்டது இவ்வூர்!

 

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்

பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத

சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்

பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

அந்தணர் குலத்தில் சிவபாத இருதயர் என்னும் வேதியர், அவர்தம் அருமைத் துணைவியார் பகவதியார் எனும் இல்லறத்தை நல்லறமாகக் கருதி, இறைவழிபாடு, அடியார் வழிபாடு, குருவழிபாடு ஆகிய முத்திற வழிபாட்டிலும் சிறந்து விளங்கும் அருட்பேராற்றல் பெற்ற இணையருக்குத் தவப்புதல்வனாய் அவதரித்தவர், திருஞானசம்பந்தர். வேத நெறி வளர்ச்சி குன்றியிருந்த தமிழகத்தில் அப்போது சமண புத்த சமயங்கள் தலைதூக்கி நின்றன. இதனைக் கண்டு மனம் நொந்த சிவபாத இருதயர் இந்த மன்பதை வாழ, சிவநெறி உலகெலாம் பரவி தமிழ்ச் சமுதாயத்தை தழைத்தோங்கச் செய்யவும், தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் காக்க நல்லதொரு ஞானக்குழந்தை ஒருவரைத் தங்களுக்குத் தந்தருளுமாறு திருத்தோணிபுரத்து இறைவனை வேண்டித் தவம் புரிந்தனர். இறைவனின் இன்னருளால் பகவதியாரும் கருக்கொண்டு, சைவமே அவ்வம்மையார் மணி வயிற்றில் உருக்கொண்டது!

வேத நெறி தழைத்து ஓங்க

  மிகு சைவத் துறை விளங்கப்

பூத பரம்பரை பொலியப் புனித

  வாய் மலர்ந்து அழுத

சீத வள வயல்

  புகலித் திருஞான சம்பந்தர்

பாத மலர் தலைக் கொண்டு

  திருத் தொண்டு பரவுவாம்

ஒரு திருவாதிரைத் திருநாளில், சிவநெறி சிறந்து விளங்கவும், தமிழ் மக்கள் செய்த தவம் நிரம்பவும், தவநெறி தழைக்கவும் ஆளுடைய பிள்ளையார் திருவவதாரம் செய்தருளினார். அனைத்துயிர்களும் மகிழ்வுற்றன. திருப்பெயரிடுதல், தொட்டிலிற் கிடத்தல் போன்று அனைத்துச் சடங்குகளும் உரிய காலங்களில் நிகழ்ந்தன. பகவதி அம்மையார் அத்தெய்வக் குழந்தைக்கு  இறையன்பைத் தம் திருமுலைப்பாலுடன் கூட்டி ஊட்டி வளர்த்து வந்தார். குழந்தையின் அழுகையை சேக்கிழார் பெருமான் புனிதவாய் மலர்ந்தருளினார் என்று அழகாகக் குறிப்பிடுகிறார். ஆளுடையப் பிள்ளையாருக்கு வயது இரண்டாண்டுகள் நிரம்பின. மூன்றாவது வயதின் தளர் நடைப்பருவத்தில் பிள்ளையார் ஏனைய குழந்தைகளோடு வீதியில் விளையாடும் நிலையை எய்தினார். நீடுதுயில் கொண்டுள்ள சைவத்தைச் சிவநெறியைத் தட்டி எழுப்பித் தரணிக்கெல்லாம் பரப்ப வந்த செந்தமிழ்ச் செல்வனுக்குத் தாலாட்டுப் பாடித் தூங்க வைத்தால் சிவநெறி தழைக்க, சைவம் சிறக்கக் கால தாமதமாகும் எனக் கருதியதால் சேக்கிழார் பெருமான் தாலாட்டுப் பாடித் தூங்கவைக்கவில்லை போலும்!

ஒரு நாள் காலையில் சிவபாத இருதயர் வழக்கம்போல் தம் வழிபாட்டு நெறியினைச் செய்வதற்கு, வேதவிதிப்படி நீராடுதற்குத் திருக்கோயிலின் உள்ளிருக்கும் பிரம்மதீர்த்தத்திற்குப் புறப்பட்டார். தந்தையார் வெளியில் செல்வதைக் கண்ட பிள்ளையார் தானும் உடன் வரவேண்டுமென்ற குறிப்போடு கால்களைக் கட்டிக் கொண்டு அழுதார்.

கண் மலர்கள் நீர் ததும்பக்

  கைம் மலர்களால் பிசைந்து

வண்ண மலர்ச் செங்கனிவாய்

  மணி அதரம் புடை துடிப்ப

எண்ணில் மறை ஒலி பெருக

  எவ் உயிரும் குதூகலிப்ப

புண்ணியக் கன்று அனையவர்

  தாம் பொருமி அழுதருளினார்

தந்தையாரும் தம் மைந்தனை உடனழைத்துக் கொண்டு சென்று பிரம்ம தீர்த்தக்கரையில் பிள்ளையாரை இருத்திவிட்டு விரைந்து நீராடித் திரும்பும் எண்ணத்தோடு நீர்நிலையில் இறங்கினார். கரையில் அமர்ந்திருந்த பிள்ளையார் தந்தையைக் காணாமல் முற்பிறப்பின் நினைவு மேலிட்டவராய் திருத்தோணி மலைச் சிகரத்தைப் பார்த்துக் கண்மலர்கள் நீர் ததும்பக் கைமலர்களால் பிசைந்து வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடை துடிப்ப `அம்மே அப்பா` என அழைத்து அழுதருளினார். அருளுடையப் பிள்ளையின் அழுகுரல் கேட்ட நிலையில் தோணிபுரத்து இறைவர் இறைவியாருடன் விடைமீது அமர்ந்து குளக்கரைக்கு எழுந்தருளிய வேளையில் எம்பெருமான் உமையம்மையிடம் `அழுகின்ற பிள்ளைக்குத் தன் முலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து ஊட்டப் பணித்தார். அம்மையாரும் அவ்வாறே சிவஞானமாகிய அமுதைக் குழைத்து அழுகின்ற குழந்தை கையில் கொடுத்து உண்ணச் செய்து அழுகை தீர்த்தருளினார்.

குளித்து முடித்து வந்த தந்தை குளக்கரையில் தங்கள் தவச்செல்வன் கையில் பொற்கிண்ணத்துடன், எச்சிற்பால் உண்ட வாயும், இன்ப நடம் புரியும் பாங்கைக் கண்டு சினந்தவர், அருகிருந்த சிறுகோல் எடுத்து யார் கொடுத்த எச்சில் பால் இது என்று வெகுண்டு கையை ஓங்கினார்.

போதையார் பொற்கிண்ணத்து

அடிசில் பொல்லாதென

தாதையார் முனிவுறத்

தான் எனை ஆண்டவன்

காதையார் குழையினன்

கழுமல வளநகர்ப்

பேதையாள் அவளொடும்

பெருந்தகை இருந்ததே

 

எண்ணரிய சிவஞானத் தின்னமுதம் குழைத்தருளி

உண்ணடிசில் எனஊட்ட உமையம்மை எதிர்நோக்கும்

கண்மலர்நீர் துடைத்தருளிக் கையில்பொற் கிண்ணம்அளித்(து)

அண்ணலை அங்கு அழுகைதீர்த்து

அங்கணனார் அருள்புரிந்தார்.

 

 

சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்

பவமதனை அறமாற்றும் பாங்கினில்ஓங் கியஞானம்

உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்

தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்

எனச் சேக்கிழார் பெருமான் போற்றி உரைத்தலைக் காணலாம்.

தோடுடை யசெவி யன்விடை யேறியோர் தூவெண் மதிசூடிக்

        காடுடை யசுடலைப் பொடி பூசியென் னுள்ளங்கவர்கள்வ

        னேடுடை யமல ரான்முனை நாட்பணிந் தேத்த வருள் செய்த

        பீடுடை யபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே”

சிவஞானச்சம்பந்தப் பெருந்தகையார், தலைக்குமேல் கையைத் தூக்கி வேண்டியபடி தம் சிறு விரல்களால் எதனாலும் கட்ட முடியாத பரம்பொருளைச் சுட்டிக்காட்டி தம்மெதிரேத் தோன்றிய தோணிபுரத்து இறையை தம் தந்தையாருக்கு அடையாளம் காட்டினார். ஞானக்குழந்தை தாம் பாடிய முதல் பதிகத்தின் முதல் அடியிலேயே தமிழ் மொழியைத் தலைக்கேற்றி மந்திரங்களுக்கெல்லாம் மூலக்கூறாகிய, ‘ஓம்’ எனும் ஓங்காரத்தினைத் தமிழ் என்றும் பெயரின் முதல் எழுத்தாம், ‘த’ மெய்யுடன் இசைத்துத் ‘தோ’ எனத் தொடங்கிப் பாடினார். தம் உள்ளத்துள் எழுந்த உயர் ஞானத் திருமொழியால் தனக்கு ஞானப் பாலளித்த உமை அம்மையின் தோடணிந்த திருச்செவியைச் சிறப்பிக்கும் முறையில் `தோடுடைய செவியன்` என்ற முதற்பெரும் பாடலால் கடவுளின் அடையாளங்களைச் சுட்டித் திருப்பதிகம் அருளிச் செய்தார். அதனைக் கேட்ட தந்தையார் சிவபாத இருதயர் தாம் அடிப்பதற்காக ஓங்கிய கோல் நெகிழ்ந்து வீழும் வண்ணம் வியப்பும் வெருட்சியும் மேலிட்டவராய் நின்றார். ஞானசம்பந்தப் பெருமானை அழைத்துக்கொண்டு ஆலயம் சென்று  எம்பெருமானை வணங்கிப் போற்றி மீண்டார். இச்செய்தி நகர் முழுவதும் பரவிய நிலையில் அன்பர்கள் ஞானசம்பந்தரைப் போற்றி வரவேற்க, சிவபாத இருதயர் பிள்ளையாரைத் தம் தோள்மேல் அமர்த்திக் கொண்டு மகிழ்ச்சியுடன் தம் இல்லம் சென்றடைந்தார்.

உமையம்மையார் அளித்த ஞானப்பாலை உண்ட திருஞானச்சம்பந்தர் திருநெறியத் தமிழ் பாடி தம் திருமாளிகையில் இறையருளையே எண்ணியிருந்தவர் மறுநாட் காலையில் துயிலெழுந்து நீராடி ஈசனை வணங்கிப் போற்றி, தன் தாய்வழிப் பாட்டனார் ஊரான நனிபள்ளி முதலிய ஊர்களை வணங்கி பின்பு சீர்காழி சேர்ந்தார். `காரைகள் கூகைமுல்லை` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிக் கொண்டே நனிபள்ளி ஆலயத்தை அடைந்து வணங்கிப் போற்றி அவ்வூரின் அருகிலுள்ள தலைச்சங்காடு, சாய்க்காடு, வெண்காடு முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு மீண்டும் சீர்காழிப் பதிக்குத் திரும்பினார். வளம் குன்றிப் பாலையாயிருந்த நனிபள்ளி, ஞானசம்பந்தர் வரவால் நெய்தலாய்ப் பின் மருதமாயிற்று. இது ஞானசம்பந்தர் வரலாற்றில் அமைந்த இரண்டாவது தல யாத்திரையாகும்.

 

சீர்காழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்காவைத் தரிசிக்கும் வேட்கை எழ அத்தலத்தை தம் தந்தையாரின் தோளில் மீதேறி அடைந்து ஆலயத்தை வலம் வந்து இறைவன் திருமுன் நின்று `மடையில் வாளை` எனத் தொடங்கும் இசைத்தமிழ்ப் பதிகத்தை அழகுற தம் பிஞ்சுக் கைமலர்களால் தாளம் இட்டுப் பாடினார். அதனால் பிள்ளையார் தம் பிஞ்சுக்கரங்கள் சிவப்பதைக்கண்டு மனம் பொறாது திருவைந்தெழுத்து எழுதப் பெற்ற பொற்றாளத்தைத் திருஞானசம்பந்தப் பெருமானார்க்கு அளித்தருளினார். அவரும் அத்தாளத்தைத் தலைமேல் கொண்டு போற்றி, தாளமிட்டு அத்திருப்பதிகத்தைப் பாடிப் போற்றிய அத்திருத்தலமே திருஞானசம்பந்தர் மேற்கொண்ட முதல் தல யாத்திரையாகும். அவ்வாறு திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றுச் சீர்காழி திரும்பிய ஞானசம்பந்தப் பெருமான் நேரே ஆலயம் சென்று `பூவார் கொன்றை` எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் தாளமிட்டுப் பாடிப் பரவியவர் பின்னர் தம் மாளிகையைச் சென்றடைந்தார். நம் தமிழ்ச் சமுதாயத்திற்குச் சிவனடி பரவும் ஒரு நெறியே தம் திருநெறி எனப் போர்முரசு கொட்டி வழிப்படுத்தினார்.

 

திருஞானசம்பந்தர் மிக இளைய பருவத்திலேயே இறைவனால் ஆட்கொள்ளப் பெற்ற அற்புதத்தைக் கேள்வியுற்று அவரை வணங்குதற் பொருட்டு, திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர்தம் மனைவியார் மதங்கசூளாமணியாரும் சீர்காழிப் பதியை அடைந்தனர். ஞானசம்பந்தர் அவர்களை எதிர்சென்று அழைத்து வந்து திருத்தோணிபுரத் திருக்கோயிலில் இருத்தி யாழிசையில் இறைவரைப் போற்றுமாறு செய்து அவர்கள் தங்குதற்குத் தனி இல்லம் அமைத்துக் கொடுத்தருளினார். திருநீலகண்டர் ஞானசம்பந்தர் பாடும் பாடல்களை யாழிசையில் வாசித்து மகிழ்ந்தார். பின்னர் அடியவர் புடைசூழ யாழ்ப்பாணருடன் கொள்ளிட நதியைக் கடந்து தில்லை சென்றடைந்தார். தென் திசைவாயில் வழியே ஆலயத்திற்குள் சென்றவர் பேரம்பலத்தைக் கண்டு வணங்கியவர், `கற்றாங்கு எரியோம்பி` `ஆடினாய் நறுநெய்` என்பனவாகிய திருப்பதிகத்தால் போற்றி வழிபட்டார். திருவேட்களத்தில் தங்கியிருந்து நாள்தோறும் தில்லைக் கூத்தனை வழிபட்டார். அங்குத் தங்கியிருக்கும் நாட்களில் திருக்கழிப்பாலை, திருநெல்வாயில் முதலிய தலங்களை வழிபட்டார்.

செல்லும் வழியில் திருஎருக்கத்தம்புலியூர் எனும் தலத்தை அடைந்தபோது திருநீலகண்ட யாழ்ப்பாணர் அப்பதி அவருடைய பதி எனக் கூறக் கேட்ட சம்பந்தப் பெருமான் மாதவம் செய்த பதி அது என்று கூறி மகிழ்ந்தார்.

ஞானசம்பந்தர் எருக்கத்தம்புலியூரிலிருந்து திருமுதுகுன்றம் திருபெண்ணாகடம் ஆகிய தலங்களை வணங்கிக்கொண்டு திருநெல்வாயில் அரத்துறை செல்லப் புறப்பட்டார். தந்தையார் தோள்மேல் அமர்ந்து செல்ல மனம் இன்றித் திருவடி நோக நடந்தே வருவதைக் கண்ட தந்தையாரும் அடியவர்களும் மிகவும் பரிவுற்றனர். திருநெல்வாயில் அரத்துறை அணுகியபோது மாலை நேரம் நெருங்க, வழி நடந்த களைப்பு ஏற்பட்டதால் ஞானசம்பந்தர் அடியவர்களோடு மாறன்பாடி என்ற ஊரில் தங்கினார்.

அரத்துறை இறைவன் ஞானசம்பந்தரின் களைப்பை அறிந்து அரத்துறை அந்தணர்கள் கனவில் தோன்றி `ஞானசம்பந்தன் தம்மைக் காண வருகிறான் என்றும், அவனுக்கென ஆலயத்துள் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னம் ஆகியன வைத்துள்ளதாகவும், அவற்றை எடுத்துச் சென்று கொடுத்து பாலகனை அழைத்து வரப் பணித்தார். எம்பெருமான் ஞானசம்பந்தர் கனவிலும் தோன்றி தாம் அளிக்கும் பொருள்களை ஏற்றுக்கொண்டு வருக` எனக் கூறியருளினான். அரத்துறை அந்தணர்கள் வியந்து எழுந்து இறைவனளித்த அப்பொருட்களைக் கொண்டு சென்று ஞானசம்பந்தரிடம் நடந்ததைக் கூறிச் சிவிகையில் ஆரோகணித்து அரத்துறை வரவேண்டுமென வேண்டினர். ஞானசம்பந்தர் இறைவன் திருவருளை எண்ணி வியந்து அச்சிவிகையை மும்முறை வலம் வந்து பணிந்து ஐந்தெழுத்தோதி அச்சிவிகையில் அமர்ந்து “எந்தை ஈசன் எம்பெருமான்` என்ற திருப்பதிகத்தால், இறையருளை வியந்து அரத்துறை ஈசனை வணங்கிப் போற்றினார். திருநெல்வாயில் அரத்துறையில் சில நாள் தங்கியிருந்து புறப்பட்டுச் சிவிகையில் விசையமங்கை, திருவைகா, புறம்பயம், சேய்ஞலூர், திருப்பனந்தாள், பந்தணைநல்லூர், ஓமாம் புலியூர், வாழ்கொளிப்புத்தூர், கடம்பூர், நாரையூர், கருப்பறியலூர், முதலிய தலங்களைப் பணிந்து திருப்பிரமபுரம் மீண்டருளினார்.

 

தொடரும்

 

 

பெரியபுராணம் எனும் பேரமுதம் – பகுதி 27

 63 நாயன்மார்கள் வரலாறு   – 24. நமிநந்தியடிகள் நாயனார்

நமிநந்தியடிகள் நாயனார் அந்தணர் குலத்தில் பிறந்து, வேத வேள்விகளால் சிவபெருமானை ஆராதித்து, இரவும் பகலும் சிவ சிந்தனையோடு திகழ்ந்த, அடியவர்கள்பால் மாறாத அன்பு கொண்டவர். தூய திருநீறு அணிவதே மெய்ப்பொருள் என்ற எண்ணத்துடன் வாழ்ந்தவர். “அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் போற்றப்படும் நாயனார் பெருமான். சோழ வளநாட்டில் திருவாரூருக்குத் தெற்கே திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில் ஆறாவது மைல் தொலைவில், தற்போது திருநெய்ப்பேர் என்று அழைக்கப்படும் ஏமாப்பேரூர் எனும் தலத்தில் அவதரித்த இவர், திருவாரூர் சென்று புற்றிடம் கொண்ட பெருமானை வழிபடுவது வழக்கம். சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள ஆரூர் சிவபெருமானை வழிபட்டு வந்தார். இத்தலத்தின் மூலவர் வான்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராசன் ஆகிய திருப்பெயர்களைக் கொண்டுள்ளார்.

இவ்வாரூர் திருக்கோயில் திருமதிலுக்கு அருகில் அரநெறி என்ற தனிக்கோயில் உண்டு. இங்குள்ள சிவன் அரநெறியப்பர் என அழைக்கப்படுகிறார். இக்கோயில் திருவாரூர்க் கோயிலுக்குள்ளேயே தெற்குச் சுற்றில் உள்ள இக்கோயில் அசலேச்சரம் என்று வழங்கப்படுகிறது.  நமிநந்தியடிகள் அரநெறி அண்ணலை கண்ணீர் சொரிந்து வழிபட்டார். அத்திருக்கோயிலில் அழகாக விளக்குகள் பல ஏற்றி, அனைவரும் வந்து வழிபட வகை செய்ய வேண்டும் என்றும் விரும்பினார். அப்போது கதிரவன் மறையும் பொழுது. தமது இல்லம் சென்று நெய் கொண்டு வந்து விளக்கேற்றலாம் என்றால் அதற்கு போதிய நேரம் இல்லை. ஆதலால் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று, சமணர் வீடு என்று அறியாமல் எம்பெருமானுக்கு விளக்கேற்ற நெய் வேண்டுமென்று கேட்டார். அவர்கள் நெய் கொடுக்க மறுத்ததோடு “உங்கள் இறைவன் கையில் தீயை வைத்துள்ள அவருக்கு விளக்குக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டதோ? அவ்வாறு விளக்கு ஏற்ற வேண்டுமாயின் தண்ணீரைக் கொண்டு விளக்கு ஏற்றுங்கள்” என்று ஏளனம் செய்தனர்.

கையில் விளங்கும் கனல் உடையார்

  தமக்கு விளக்கு மிகை காணும்

நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீர்

  ஆகில் நீரை முகந்து எரித்தல்

செய்யும் என்று திருத் தொண்டர்க்கு

  உரைத்தார் தெளியாது ஒரு பொருளைப்

பொய்யும் மெய்யும் ஆம் என்னும்

  பொருள்மேற் கொள்ளும் புரை நெறியார்.

சமணர்கள் எம்பெருமானை ஏளனம் செய்ததை எண்ணி அழுது தொழுத நாயனார், அரநெறியப்பரின் சந்நிதியை அடைந்து, “இறைவா, சமணர்கள் கூறிய வார்த்தைகளால் என்னுடைய மனம் மிகவும் வருத்தமுற்றுள்ளது. இம்மொழிகளைக் கேட்பதற்கு என்ன பாவம் செய்தேனோ?” என்று மனதிற்குள் வேண்டினார். அப்போது வான்வெளியில் ஒரு குரல் ஒலித்தது. நமிநந்தி! கவலை வேண்டாம். திருவிளக்குப் பணி நிறைவடைய நெய்தானே வேண்டும். ஏளனம் செய்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வை. அவர்கள் சொன்னது போலவே, கோயில் அருகிலுள்ள குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து விளக்கில் ஊற்று. விளக்கு பிரகாசமாய் எரியும், என்று அருளினார்.

பெருமகிழ்ச்சி அடைந்த நமிநந்தியடிகள் நாயனார், உடனே திருக்குளத்திற்கு ஓடிச்சென்று, ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தை உச்சரித்தபடி திருக்குளத்து நீரை எடுத்துக் கொண்டு வந்து ஒரு விளக்கில் ஊற்றி, திரியை முறுக்கிவிட்டு விளக்கை ஏற்றினார். அதிசயத்திலும் அதிசயம்! உலகம் வியக்க விளக்கு பிரகாசத்துடன் எரிந்தது. இதனைக் கண்டு பரவசம் அடைந்த நமிநந்தியார், குளத்து நீரினைக் கொண்டு திருக்கோவில் முழுவதும் விளக்குகளை ஏற்றினார். இரவு முழுவதும் விளக்குகள் எரியும் வண்ணம் எல்லா விளக்குகளிலும் நிரம்ப நீரினை ஊற்றி வைத்தார். இதனைக் கண்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். நீரால் நமிநந்தியடிகள் விளக்கு ஏற்றியதைக் கேள்விப்பட்ட சமணர்கள் வெட்கம் அடைந்தனர். இரவு நெடுநேரம் அறநெறியப்பரின் சந்நிதியில் இருந்துவிட்டு நமிநந்தியார் தமது இருப்பிடம் திரும்பி சிவவழிபாட்டினை முடித்துவிட்டு நித்திரை கொண்டார்.

சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும்

  சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி

ஆதி முதல்வர் அரநெறியார் கோயில்

  அடைய விளக்கு ஏற்றி

ஏதம் நினைந்த அருகந்தர்

  எதிரே முதிரும் களிப்பினுடன்

நாதர் அருளால் திரு விளக்கு

  நீரால் எரித்தார் நாடு அறிய

வீட்டில் அனுதினமும் வழிபாடு செய்வதற்காக நள்ளிரவில் புறப்பட்டுச் செல்வார். மீண்டும் திருவாரூரை அடைந்து திருக்கோயிலின் உள்ளும் புறமும், நீரினால் விளக்கேற்றினார். ‘நீரினால் விளக்கிட்டமை நீள் நாடறியும் அன்றே’ என்று நாவுக்கரசர் பெருமானார் பாடியருளினார்.

திருவாரூருக்கு அருகில் உள்ள மணலி என்ற ஊருக்கு ஆண்டுக்கு ஒருமுறை தியாகராசப் பெருமாள் எழுந்தருளுவார். மக்களுடன் நமிநந்தியடிகளும் அங்கு சென்று வழிபட்டு வீடு வந்தவர், வீட்டிற்குள் நுழையாமல் வெளியிலேயே அமர்ந்தவாரு, மனைவியை அழைத்து, பல தரப்பட்ட மக்கள் கூட்டத்தின் நடுவில் இருந்ததால் குளித்துவிட்டுத்தான் வழிபாடு  செய்ய வேண்டும் என்பதால் வெந்நீர் தயார் செய்யவும்  கூறினார். உடல் அசதி காரணமாக மனைவி உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் நமிநந்தியடிகள் நாயனார் திண்ணையில் கண்ணயர்ந்துவிட்டார். அப்போது அவருடைய கனவில் பேரொளியாகத் தோன்றிய திருவாரூர்ப் பெருமான், திருவாரூரில் பிறந்த அனைவருமே நம் கணங்கள் ஆன பரிசு காண்பாய் என்று கூறினார்.

மேன்மை விளங்கும் திருவாரூர்

  வீதி விடங்கப் பெருமாள்தாம்

மான அன்பர் பூசனைக்கு வருவார்

  போல வந்து அருளி

ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார்

  எல்லாம் நம் கணங்கள்

ஆன பரிசு காண்பாய் என்று அருளிச்

  செய்து அங்கு எதிர் அகன்றார்.

கண் விழித்து எழுந்த நமிநந்தியடிகள் நாயனார் நடந்தவற்றை மனைவியிடம் கூறி, தன் தவறான எண்ணத்தை நினைத்து வருந்தினார். திருக்கோயிலுக்கு வந்தவர்கள் யாராயினும் அவர்கள் சிவனடியார்கள் என்று கருதாதது மிகப்பெரிய குற்றம் என்று வருந்தினார். பின்னர் குளிக்காமலே உடனே சென்று வழிபாடு செய்யலானர். விடியற்காலை எழுந்து வழிபாட்டை முடித்துவிட்டு திருவாரூர் நோக்கிச் சென்றார். கனவில் பெருமான் குறிப்பிட்டது போன்று அவர் திருவாரூரில் பிறந்து வாழும் அனைவரும் சிவனடியார்களாகவும், ஒளிப்பிழம்பாகவும் விளங்கும் காட்சியைக் கண்டார். உடனே நமிநந்தியடிகள் நாயனார் தலைக்கு மேல் கைகூப்பி வணங்கினார். எம்பெருமான் திருமுன் வீழ்ந்து வணங்கி மன்னிப்பும் வேண்டினார். திருவாரூரையே தமது இருப்பிடமாகக் கொண்டு திருத்தொண்டு பல செய்து வந்தார்.

பங்குனி உத்திரப் பெருவிழாவைத் துவக்கி வைத்ததும் இவ்வடியாரே ஆவார். திருவாரூர் திருநீற்றின் பெருமை பெற்று விளங்கியது. சோழ மன்னன் ஆரூர் பெருமானுக்கு அறக்கொடைகள் பல அளித்து அவற்றை சைவ ஆகம விதிப்படி நடத்த நமிநந்தி அடிகளையே தலைவராக நியமித்தான். நமிநந்தியடிகள் நாள் பூசைகளுடன் பங்குனி உத்தரப் பெருவிழாவை சிறப்புறச் செய்வதற்கு உறுதுணையாக விளங்கினார்.

சிவனடியார்களுக்கு நியதியாக வேண்டுவன எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தமையால், திருநாவுக்கரசு நாயனாரால் தேவாரப்பதிகத்தில் தொண்டற்காணி என்று சிறப்பித்துப் பாடப்பட்டார்.

சிவபெருமானால் ‘உலக மக்கள் அனைவரும் சமமே’ என்று அறிவுறுத்தப்பட்டவர் நமிநத்தியடிகள்.

நண்ணுபுகழ் மறையோர்வா ழேமப் பேறூர்

    நமிநந்தி யடிகடிரு விளக்கு நல்க

வெண்ணெயம ணர்கள் விலக்க நீரா லாரு

    ரிலங்குமா னெறியாருக் கேற்று நாளிற்

கண்ணமணர் கெடக்கண்பெற் றடிகள் வாழக்

    காவலனா னிபந்தங்கள் கட்டு வித்தே

யண்ணலருள் காண்டாரு ரமர்ந்து தொண்டர்க்

    காணியெனு மரசினரு ளடைந்து ளாரே.

 

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் சொல்லும் கருத்து:

 

சிவாலயத் திருத்தொண்டுகளில் திருவிளக்குத் திருத்தொண்டு மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது.

விளக்கினாற் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றியாகும்

 துளக்கில் நன்மலர் தொடுத்தால் தூயவிண் ணேறலாகும்

 விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்

அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகள்தாம் அருளுமாறே

என்ற தேவாரப் பாடல் விளங்கச் செய்கிறது.

சிவ வடிவம் ஒளிமயமாதல் என்பதனை, தேவாரத்தில் “திருவையாறகலாத செம்பொற் சோதி” என்றும்,

திருவாசகத்தில், ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரும்சோதி” – “சோதியாய்த் தோன்றும் உருவமே” – “சோதியே சுடரே சூழொளி விளக்கே” என்றும், திருவிசைப்பாவில் “ஒளிவளர்விளக்கே” – “சுடரொளி விளக்கினுள்ளொளி விளக்குந் தூயநற் சோதியுட் சோதி” எனவும், கந்தரலங்காரத்தில் “ஓங்காரத்துள் ளொளிக்குள்ளே முருகனுருவங் கண்டு தூங்கார்” எனவும் வருவனவற்றாலும் அறியலாம்.

மெய்யுணர்வு பெற்ற நிலையில் ஆன்மாவும் ஒளிமயமாகவேயிருக்குமெனல், விளக்கினை யேற்றி வெளியை யறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடையார்கள் விளக்கை விளக்கும் விளக்கவர்தாமே” என்னும் திருமந்திரத்தால் அறியப்படும்.

“தாவியவனுடனிருந்துங் காணாத தற்பரனை

ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும்

நாவியல்சீர் நமிநந்தியடிகளுக்கு நல்குமவன்

கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே”

 எனும் தேவாரப் பாடலால் அறியலாம்.

 “விளக்கில் விளக்கும் விளக்கவர்தாமே” என்ற திருமூலர் கூற்றுக் கிலக்கியமாய் விளங்கித் திகழ்ந்தவர் நமிநந்தியடிகள்.

வென்றிவிடையார் மதிச்சடையார் வீதிவிடங்கப் பெருமாள் தாம் என்றுந் திருவாரூராளும் இயல்பின் முறைமைத் திருவிளையாட்டொன்றுஞ் செயலும் பங்குனியுத்தரமாந் திருநாள் உயர்சிறப்பும் நின்று விண்ணப்பஞ் செய்தபடி செய்தருளும் நிலைபெற்றார்” எனவும்,

“இன்ன பரிசு திருப்பணிகள் பலவுஞ்செய்தே ஏழுலகும் மன்னு பெருமைத்திருவாரூர் மன்னரடியார் வழிநிற்பார் அன்ன வண்ணந் திருவிளையாட் டாடியருள எந்நாளும் நன்மை பெருக நமிநந்தியடிகள் தொழுதார் நாமுய்ய” எனவும் உள்ள திருத்தொண்டர் புராணச் செய்யுள்களால் அறியப்படும்.

திருச்சிற்றம்பலம்.

 

பெரியபுராணம் எனும் பேரமுதம் – பகுதி 26

 63 நாயன்மார்களின் வரலாறு – 23. திருநீலநக்க நாயனார்

 

வேத உள்ளுறை ஆவன

  விரிபுனல் வேணி

நாதர் தம்மையும் அவர்

  அடியாரையும் நயந்து

பாதம் அர்ச்சனை புரிவதும்

  பணிவதும் என்றே

காதலால் அவை இரண்டுமே

  செய் கருத்து உடையார்

சோழமண்டலத்தில், காவிரி ஆறு பாய்ந்தோடி வளப்படுத்தும் தன்மை கொண்ட  சாத்தமங்கை எனும் ஊரில் திருநீலநக்க நாயனார் அந்தணர் குலத்தில் பிறந்தவர்.  திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திலிருந்து கிழக்கே ஏழு மைல் தொலைவில் அமைந்துள்ள இவ்வூர் நம்பியாரூரரால் தம் திருத்தொண்டத்தொகையில்,’ஒலி புனல் சூழ் சாத்தமங்கைஎன்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தரின் திருமணத்தை தரிசித்து சிவப்பேற்றை அடைந்த மறையவர்.”
திருநீலநக்க நாயனாரை
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்” என்று போற்றுகின்றார். திருச்சாத்தமங்கை இன்று மக்கள் வழக்கில் சீயாத்தமங்கை, செய்யாத்தமங்கை என்று பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இவ்வூரில் அமைந்திருக்கும் திருதலத்தில் அயன் என்னும் நான்முகன்வழிபட்டதால் அயவந்தி எனப்பட்டது. மறையவர்கள் மிகுதியாக வாழ்கின்ற இவ்வூரின் இறைவன் திருநாமம் மலர்க்கண் அம்மை என்றும் அயவந்தீசுவரர் என்றும் பார்வதி தேவி இருமலர்க்கண்ணம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர். திருநீலநக்க நாயனார் வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவர் என்பதால் மறையொழுக்கம் வழுவாமல் ஆகமவிதிப்படி எந்நேரமும் வேத பாராயணம் செய்வார். இத்திருக்கோயிலில் அருமறைப் பொருளில் தெளிந்த இவர் நாள்தோறும் சிவாகம விதிப்படி சிவபூசை செய்துகொண்டு, அங்கு வரும் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்தல் முதலாகிய பலவகைப்பட்ட பணிகளையும் செய்து வந்தார். திருச்சாத்தமங்கையில் வாழும் மறையவர்கள் திருநீற்றினைப் போற்றி அதன் பெருமையை வளர்த்து மூன்று வகையான அக்னியை வளர்த்தனர்.

சிவனுக்கும், சிவனடியார்களுக்கும் உகந்த நாளான திருவாதிரை நன்னாளில்தான் ஞானப்பால் உண்டார் சம்பந்தப் பெருமான். அப்படிப்பட்ட ஒரு திருவாதிரை நன்னாளில், திருநீலநக்க நாயனார் அயவந்தீசுவரருக்குப் பூசை செய்வதற்காக பூசைக்குரிய பொருட்களுடன் தம் மனைவியை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று இறைவனை வலம் வந்து வணங்கி ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் இறைவன் திருமேனியில் சிலந்தி ஒன்று விழுந்தது. அதனைக் கண்ட திருநீலநக்க நாயனாரின் மனைவியார் விரைந்து சென்று தாய்மையுணர்வுடன் வாயினால் ஊதியவாறு அந்த சிலந்தியை விரட்டி அடித்தார். இதனைக் கண்ட திருநீலநக்க நாயனார் கோபமடைந்தார். வழிபாட்டில் எச்சில் படுவது பாவம் என்பதால் ஆகம நெறிக்கு புறம்பாக சிவபெருமானை எச்சில் செய்த உம்மை இக்கணமே துறந்தோம் என்று கூறி, மாலைப்பொழுது ஆனதால் வீட்டிற்குத் திரும்பினார் அச்சங்கொண்டு நடுங்கிய நாயனாரின் மனைவியும் மன வேதனை மேலிட செய்வதறியாது கோயிலிலேயே தங்கி விட்டார். இருள் சூழ்ந்திருக்க எம்பெருமானை வணங்கியபடியே அந்தக் காரிருளில் நடுங்கியபடியே கோயிலுக்குள் தங்கியிருந்தார். நாயனார் வீட்டில் சென்று படுத்து உறங்கினார்.

நீலநக்க நாயனாரின் உறக்கத்தில் ஒரு கனவு தோன்றியது. அயவந்தித் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அயவந்திநாதர் தோன்றினார். எம்பெருமான் நாயனாரிடம், அவருடைய மனைவியார் ஊதிய இடம் நீங்கலாக மற்ற இடமெங்கும் சிலந்தியினால் ஏற்பட்ட கொப்புளம் என்று கூறி தம் திருமேனியைக் காட்டியருளினார். மனைவியின் எச்சில் பட்ட இடம் எம்பெருமானுக்கு அமுதநீராயிற்று எனவும் அதுபடாத இடமெல்லாம் கொப்பளமாக மாறியதையும் பெருமான் கனவில் காட்டியதை உணர்ந்து தவறு செய்துவிட்டோமே என்றும் வருந்தினார். கண் விழித்த திருநீலநக்க நாயனார் எம்பெருமானுடைய திருவருளை வியந்து ஆடிப்பாடி கூத்தாடி, கோயிலுக்குச் சென்று அயவந்தீசுவரரைத் தரிசனம் செய்து விட்டு மனைவியை அழைத்துக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பினார் 

நீதிதரு மறையோர்வாழ் சாத்த மங்கை

    நீலநக்க ரயவந்தி நிமலர் மேனி

யூதிவிழுஞ் சிலம்பிகடிந் தவளை நீத்தார்க்

    குமியாத விடநாத னுறுநோய் காட்டக்

காதன்மிகு மனைவியையு மகிழ்ந்து மேவிக்

    காழியார்கோ னமுதுசெயக் களித்து வாழ்ந்து

வேதிகையிற் பாணனார்க் கிடமு நல்கி

    விளங்குபெரு மணத்தரனை மேவி னாரே.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் காலத்தில் வாழ்ந்தவரான திருநீலநக்க நாயனாருக்கு அவர்மீது அதீத ஈடுபாடும் பக்தியோடும் நெருங்கிப் பழகினார். ஒருநாள் ஞானசம்பந்தப்பெருமான் திருநள்ளாறு சென்றுவிட்டு திருசாத்தமங்கை வந்தபோது அவரை வரவேற்க திருசாத்தமங்கையில் பந்தல் போட்டு, தோரணங்கள் கட்டி, மேளதாளத்துடன் வரவேற்றார். அன்று இரவு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருநீலநக்க நாயனார் இல்லத்தில் தங்க முடிவெடுத்தவர், தம்முடன் வந்திருக்கும் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும் அவர் இல்லத்திலேயே தங்க இடம் அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார். அதற்கு திருநீலநக்க நாயனார் சற்றும் தயங்காமல், தாம் செய்யும் வேள்விக் குண்டத்திற்கு அருகில் யாழ்ப்பாணருக்கு உறங்க இடம் அளித்தார். குலம் பார்க்காமல் மகிழ்வோடு அடியாரின் விருப்பத்தை நிறைவேற்றிய திருநீலநக்க நாயனாரின் பெருமையை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அயவந்தீசுவரரின் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


திருநீலநக்க நாயனார் அவ்வப்பொழுது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இருக்கும் தலங்களுக்குச் சென்று தம்முடைய நட்பை வளர்த்துக் கொண்டார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் திருமணத்தினைக் கண்டு களிக்க மனைவியுடன் திருப்பெருமணநல்லூரை அடைந்தார். அத்திருமணத்தை, திருமண வேள்விச் சடங்கினை தாமே முன்னின்று நடத்தி வைத்தார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடன் கூடிய அடியார் திருக்கூட்டத்துடன் சிவசோதியினுள் கலந்து இன்புற்றனர்.

திருநீலநக்கர் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

திருவாசகத்தில்,

சொற்பதங்கடந்த அப்பன் தாளதா

மரைக ளேத்தித் தடமலர்

சூட்டமாட்டா ஆளலா தவரைக்கண்டால்

அம்மநாம் அஞ்சுமாறே

உயிர் பாச நீக்கம் பெற்று சிவப்பேறடைதல் உள்ளார்ந்த ஆன்மிகத் தகுதியை உண்டுபண்ணுதற்கும் பெருஞ்சிவப்பேற்றை அடைந்து பேரின்பமடையச் செய்வதுமே சிவபூசையின் சாராம்சமாகும்.  வேதத்தின் முதற்பொருளான அடியார்களைப் போற்றலும், எம்பெருமானை அர்ச்சிப்பதுமாகிய இரண்டுமே வாழ்வின் குறிக்கோள் என்று வாழ்ந்தவர் திருநீலநக்க நாயனார். அருள் நூல்களின் சாரமாக விளங்குவது மெய்ப்பொருளாக விளங்குவது திருநீறே ஆகும். உயிர்களைக் காப்பதும் திருநீறே ஆகும். சைவத்தில் சிவபூசையானது சுத்த நிலையிலுள்ள ஆன்மாக்கள் அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாக வற்புறுத்தப்பட்டுள்ளதாகும். திருமந்திரத்தில், யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை” எனவும் போற்றப்பட்டுள்ளது.

 தேவாரத்தில்,

அருப்போடு மலர்பறித்திட் டுண்ணாவூரும்

அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே  

ஒரு காலும் திருக்கோயில் சூழாராகில்

உண்பதின்முன் மலர்பறித்திட்டுண்ணாராகில்

அருநோய்கள் கெட வெண்ணீறணியா ராகில்

 அழியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்

 பெரு நோய்கள் மிக நலியப் பெயர்த்துஞ் செத்துப்

பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின்றாரே

என்று போற்றப்படுதலும் குறிப்பிடத்தக்கது. திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள், பூத்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி ஏத்தாதாரில்லை” என்ற அருளிப்பாட்டின் மூலம் சிவபூசை அனைவர்க்கும் உரித்தானதென்று விதித்துள்ளதும் அறியத்தக்கது.

 சிவனடியார் வழிபாடும் சிவபூசைக்குச் சமமான மகிமையுடைத்ததாகும். சிவபெருமானை பூசிப்பவர்களின் உள்ளத்தில் சிவபெருமானே தோன்றி அருள் அளிப்பதற்கொப்ப சிவனடியார் வழிபாட்டுக்கும், வழிபடுவோரிடத்தில் சிவம் தோன்றி விளங்குதலால் அறியலாம் என்பது தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளபடி,

எவரேனுந் தாமாக இலாடத்திட்ட திருநீறும்

அஞ்சனமுங் கண்டாலுள்கி உவராதே

அவரவரைக் கண்டபோதில் உகந்தடிமைத்

திறம் நினைந்தங் குணர்வே மிக்கு

இவர்தேவர் அவர் தேவரென்று பேசி

இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே

பேணிக் கவராதே தொழுமடியார் நெஞ்சினுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக்காணலாமே

 எனவும், திருமந்திரத்தில் “மஞ்சன மாலை நிலாவியவானவர் நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம் அஞ்சமுதாம் உபசாரமெட்டெட்டொடும் அஞ்சலியோடுங் கலந்தர்ச்சித்தார்களே” எனவும் வருவனவற்றாலறியப்படும்.

 “வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தில் ஓதத்தகும் அறம் எல்லாமுள” என்கிறார் திருமூலர்.

தாம் பூசிக்கும் சிவலிங்கத்தின் திருமேனியில் விழுந்த சிலந்தியை அயலில் நின்ற தம் மனைவியார் எம்பெருமானை பச்சிளங் குழந்தையாகக் கருதி வாய் நீர்பட ஊதி உமிழ்ந்து விட்டமை மாபெரும் தவறு என்று நினைத்தவர் உடனடியாகத் தான் அவரைத் துறந்து விட்டதாகச் சொல்லி அகற்றிவிட்டார்.

விழுந்த போதிலங் கயனின்ற மனைவியார் விரைவுற்
றெழுந்த ச்சமோ டிளங்குழ வியில்விழுஞ் சிலம்பி
ஒழிந்து நீங்கிட வூதிமுன் றுமிப்பவர் போலப்
பொழிந்த வன்பினா லூதிமேற் றுமிந்தனர் போக.

என்ற சேக்கிழார் வாக்கினால் அறியலாம்.

“ஈசனறியும் இராப்பகலுந் தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிந்தறிவார்களை” என்ற திருமூலர் கூற்றுக்கிணங்க நாயனாரது இறை அன்பையும் தம் மனைவியாரது தாய்மைப் பரிவுடனான அன்பையும் சீர்தூக்கி இருவரது ஆக்கத்துக்கும் ஏற்றவகையில் அருளிய சிவபெருமானின் கருணையை அறியச்செய்கிறது.

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்க்கும் அவர் மனைவியார்க்கும் தங்க இடம் கொடுக்க வேண்டி ஞானசம்பந்தப் பெருமான் சுவாமிகள் இந்நாயனாரைக் கேட்டுக் கொண்டதும் சுவாமிகள் அவர்களுக்குத் தமது சிவபூசை மேடையிலேயே இடங்கொடுத்ததும், சைவசமயத்தில் சாதியொழிந்த இடம் இது என்ற பக்குவநிலையை எடுத்துரைப்பதையும் அறியலாம் . சிவபெருமான் மீது கொண்ட பற்றே அனைத்திலும் சிறந்தது என்ற சுத்த நிலையில் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும் மனைவியாரும் உண்மைச் சிவனடியார்களாகிவிட்ட நிலையில் பாணர் என்ற பெயர்க்குரிய அவர்களின் சாதி, குல நிலைகள் முற்றாக அற்றொழிந்தவாயின.

சீல மெய்த் திருத்

  தொண்டரோடு அமுது செய்தருளி

ஞாலம் உய்ந்திட நாயகியுடன்

  நம்பர் நண்ணும்

காலம் முற்பெற அழுதவர்

  அழைத்திடக் கடிது

நீல நக்கனார் வந்து அடி

  பணிந்து முன் நின்றார். 

 

நின்ற அன்பரை நீல

  கண்டப் பெரும் பாணர்க்கு

இன்று தங்க ஓர் இடம்

  கொடுத்து அருளுவீர் என்ன

நன்றும் இன்புற்று நடு

  மனை வேதியின் பாங்கர்ச்

சென்று மற்று அவர்க்கு

  இடம் கொடுத்தனர் திருமறையோர். 

 

ஆங்கு வேதியில் அறாத

  செந்தீ வலம் சுழிவுற்று

ஓங்கி முன்னையில் ஒரு

  படித்து அன்றியே ஒளிர

தாங்கு நூலவர் மகிழ்வுறச்

  சகோட யாழ்த் தலைவர்

பாங்கு பாணியாருடன் அருளால்

  பள்ளி கொண்டார்.

திருச்சிற்றம்பலம்

 

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 28

  63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்   திருஞானசம்பந்தர் வரலாறு `வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும் மதுமலர்நற் கொன்றையா...