Wednesday, January 2, 2013

கொங்கு நாட்டு மகளிருக்கான சடங்குகளும், சம்பிரதாயங்களும்



பவள சங்கரி

இயற்கையின் படைப்புகளிலேயே மிகவும், உன்னதமானது பெண் இனம். அனைத்து உயிரினங்களுக்கும்   தனிப்பட்டதொரு மென்மையையும், அழகையும் அள்ளி வழங்கியிருப்பது கண்கூடு. அந்த வகையில் மனிதப் பிறவியில் இந்தப் பெண் இனம் பல வகையான உணர்வுகளுக்கும், அதற்குரிய சூழலுக்கும் ஆட்படுவதும் இயற்கை. இந்த இயற்கையின் விநோதத்தை அதீதமாக காட்சிப்படுத்த நினைப்பது மனிதர்களுக்கேயுரிய இயல்பாக இருப்பதே நம் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளின் முக்கிய அம்சமாக இருக்கிறது. இதில் பெரும்பாலும் நன்மைகளும், தீமைகளும் சமமாகக் கலந்து இருப்பதே நிதர்சனம். வளர்ந்து விட்ட நாகரீகத்தில் மற்றைய சில நாடுகளில் ஓரளவிற்கு இதெல்லாம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், நம் இந்திய கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் இதெல்லாம் இன்றும் வழமையாகத்தான் இருக்கிறது. வாழையடி வாழையாக கடைபிடிக்கப்படும் பழக்க வழக்கங்கள் பல அர்த்தமுள்ளதாக இருப்பினும், சில வேண்டாதவையாகவும் தேவையற்றவைகளாகவும் உள்ளது.

பொதுவாக பெண்களின் பருவக் காலங்களை , பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை மற்றும் பேரிளம்பெண் என ஆறு வகைகளாகப் பிரித்துள்ளனர். பேதைப் பருவம் என்பது ஏழு வயது வரையிலான குழந்தைப் பருவம். பெதும்பை என்பது பதினொரு வயது வரையிலான ஒரு பருவம். அடுத்து வருவதுதான் மங்கை எனும் பூப்படையும் பருவம். மடந்தை என்பவள் திருமண வயதில் இருக்கும் பத்தொன்பதிற்கும் மேற்பட்ட பருவத்தினள். அரிவை எனும் பருவம் இருபத்தைந்து வயதான தாய்மைப் பருவம். தெரிவை என்பது உலகம் அறிந்த முப்பது வயதிற்கும் மேலான பருவம். அடுத்து நாற்பது வயதுப் பருவமான உலக ஞானமும், அனுபவமும் பெற்ற பேரிளம் பெண் என்பது. இதன் அடிப்படையிலேயே நம்முடைய பெரும்பான்மையான சம்பிரதாயங்கள் அமைந்திருக்கின்றன.

Monday, December 31, 2012

மெய்ஞ்ஞானத்திலிருந்து தோன்றியதே விஞ்ஞானம்!


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே!!


வல்லமைக்கு நன்றி


நேர்காணல் – பவள சங்கரி

புகழ் கண்டு மயங்காதே
புகழ் தேடிச் செல்லாதே
புகழாரம் பாடாதே.

இன்னல் கண்டு கலங்காதே
இகழ்ச்சி கண்டு பதராதே
இகழ்ந்துரைக்க எண்ணாதே

தியானம் என்றால் என்ன?

“எண்ணத்தை வெளிப்படுத்துவதுதான் தியானம். நல்லெண்ணத்தை நாம் கொள்ளும்போது அதுவே நம் செயலுக்கு ஆதாரமாக விளங்குகிறது. நற்சுவாசத்துடன், நல்லெண்ணத்தை நாம் வெளிப்படுத்தும்போது அந்த அலைகள் அதற்கு தகுந்தவற்றை ஈர்த்து நம் செய்கைக்கு துணை புரிகின்றது.”
“தியானம் மூலம் தம் குருதேவர் கொடுக்கும் பாடங்களின் மூலம் தம்முடைய மெய்ஞ்ஞானத்தை உயர்த்திக் கொள்வதோடு தம் வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொண்டு அதன் தரத்தையும் உயர்த்திக் கொள்ளலாம். சப்த ரிஷிகளின் துணையோடு மாமகரிஷிகள், நவகோள்கள் , ராசி மண்டலங்கள், நட்சத்திர மண்டலங்களின் ஈர்ப்போடு தம்மைத் தாமே உயர்த்திக் கொள்ள்லாம்” என்று ஆணித்தரமாகக் கூறும் ஞானத்திருமதி ராஜம்மாள் பாலசுப்பரமணியம் அம்மையார், தன்னுடைய 70 அகவையைத் தாண்டியவர். நல்ல ஆரோக்கியமும், தெளிவான சிந்தனையும், கலகலப்பான உற்சாகமும், அமைதியான மனோநிலையும் கொண்ட இளம் மங்கையாக வலம் வருதலே இதற்கான சான்று.. ஆவிகளுடன் தம்மால் உரையாட முடியும் என்றும் அதற்கான அனுமதி கிடைக்கும் போது மட்டுமே அது குறித்த செய்திகளை பகிர்நது கொள்ள முடியும் என்றும் சொல்லி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். இது குறித்து அவரிடம் மேலும் சில வினாக்களும் அதற்கான அவ்ருடைய விடைகளும் பல ஐயங்களை தெளிவாக்கும் விதமாக அமைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியின் தாளாளர் ’கவாலியர்’ எம். எஸ் மதிவாணன் அவர்களின் உடன் பிறந்த சகோதரி இவர். இவர்களின் குடும்பமே ஆழ்ந்த ஞானமும், எண்ணமே கடவுள் என்ற உறுதியான நிலைப்பாடும், நேர்மையே  இலட்சியம் என்ற கடப்பாடும் கொண்டு செயல்படும் பாங்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியது.

வள்ளியம்மை





பவள சங்கரி

கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தினக் கொடியை ஏற்றி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் .வீரதீர சாகசங்கள் புரிந்தவர்களுக்கு விருது வழங்குவதற்குத் தயாரானார். சுனாமியின் போது தம் உயிரைப் பணயம் வைத்து, இரண்டு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய இளைஞன், ஒகேனக்கல் ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்த படகிலிருந்து பல உயிர்களைக் காப்பாற்றிய முதியவர், இளம் பெண்களைக் கடத்தும் கும்பலைக் காட்டிக்கொடுத்த நபர், குழந்தைக் கடத்தல் கும்பலைக் கண்டுபிடிக்க உதவியவர் என முதன்மை வரிசையில் அமர்ந்திருப்போரின் மத்தியில் தம்முடைய மனைவி வள்ளியம்மை நாச்சியார் என்கிற வள்ளியும் அமர்ந்திருப்பதைக் கணவன் முத்துமணி. உற்று நோக்கியவாறு காத்திருந்தான்.