Saturday, July 24, 2010

என்.... குழந்தையா........இப்படி......?

சமீபத்தில் என் தோழி ஒருவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்க நேரிட்டது. இயல்பாகவே கலகலப்பான சுபாவமுடைய அவள் முகத்தில் ஏனோ ஒரு சோகம், காரணம் கேட்டபோது எனக்கும் அதிர்சியாக இருந்தது. குழந்தைகள் வளர்ப்பில் இன்று அதிகப்படியான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.அவர்களின் படிப்பை மட்டும் குறியாகக் கொண்டு, சில நேரங்களில் மற்ற பழக்கவழக்கங்களை கவனிக்காமல் விட்டுவிடும் போது அது பெரிய ஆபத்தில் கொண்டு விட்டுவிடுகிறது.

என் தோழிக்கும் அப்படித்தான் ஆனது. இந்தத் தம்பதியருக்கு ஒரே செல்ல மகன் . ஏழு வருடங்கள் தவமிருந்து பெற்ற பிள்ளை. அதனால் இயல்பாகவே அதிக செல்லம் கொடுத்து வளர்த்து விட்டார்கள்.ராஜா வீட்டு கன்றுக் குட்டி போல வளர்ந்து வந்தான். ஒரு பெரிய கான்வென்ட்டில் படித்துக் கொண்டிருந்தான். இயல்பாகவே நல்ல புத்திசாலியான அவன் படிப்பில் திடீரென தொய்வு ஏற்பட்டது. அவன் நடவடிக்கைகளிலும் சிறிது, சிறிதாக மாற்றம் தெரிய ஆரம்பித்தவுடந்தான், பெற்றோருக்கு சந்தேகம் வர, அவனை கவனித்துப் பார்த்ததில், அவனுக்குப் போதைப் பழக்கம் இருப்பது தெரியவர, பேரதிர்ச்சிக்குள்ளானார்கள், பெற்றோர். நாளுக்கு நாள் அவன் அழிச்சாட்டியம் தாங்க முடியாமல் போனது. ஒரு கட்டத்தில், சே, இபபடி ஒரு பிள்ளை நமக்குத் தேவைதான என்று வெம்பி , வேதனைபட வேண்டியதாகியது. இது யாருடைய தவறு. ஏன் இப்படி நடந்தது ?

சில பெற்றோர்கள், போதைப் பழக்கங்கள் பற்றி குழந்தைகளிடம் விவாதிப்பது தவறு என்று எண்ணுகிறார்கள். பள்ளிக்கூடங்களில், அறிவுறுத்துவது மட்டுமே போதும் என்று எண்ணிவிடுகிறார்கள். இது தவறு. குழந்தைகள் நலனில் பெற்ரோரை விட அதிக அக்கரை யார்தான் எடுத்துக் கொள்ள முடியும்? குழந்தைகளுக்கு அறிவுறுத்தும் முன் எந்தெந்த எந்தெந்த விதமாக குழந்தைகள் தவறு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை முதலில் உணர வேண்டும். இன்று பலவிதமான போதைப் பொருட்கள் புழங்க ஆரம்பித்துவ்ட்டன. தாங்கள் வாழக்கூடியப் பகுதியில் எது போன்ற புழக்கம் அதிகமாக உள்ளது என்பதை முதலில் கண்டுபிடிக்கவேண்டும்.பிறகு அது குறித்த விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு அறிவுறுத்தும் போது திறமையான, மனதில் ஆழப்பதியும் படியான சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.தான் தன் மனம் போன போக்கில் வாழும் பெற்றோர்கள், குழந்தைகள் மட்டும் எந்த தவறும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை. பெரும்பாலான இளைஞர்கள் முதலில் முயற்சிப்பது புகைபிடிக்கும் பழக்கம்தான்.

போதைப் பழக்கத்திற்கு அடிமையான விடலைப் பருவத்தினருக்கு பெரும்பாலும் பெற்றோர்களே முன்னோடிகளாக இருப்பதாக, ஐக்கிய நாடுகளின் நேஷனல் கவுன்சிலின் போதைத்தடுப்பு பற்றிய விவாதத்தின் போது அறுதியிட்டுக் கூறியுள்ளது.

பெரும்பாலான நேரங்களில் மதுப்பழக்கம் உடையவர், அதிக வேலை காரணமாக அசதி தெரியாமல் இருப்பதற்காகவும், மனச் சஞ்சலம் அதிகமானதால் குடிப்பதாகவும் கூறுகின்றனர். இதைக் கவனிக்கின்ற குழந்தைகள் மனநிலையில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

குழந்தை, அப்பா ஏன் குடிக்கிறார் என்று கேட்கும்போது, அப்பா பெரியவர், அந்த சுவை அவருக்குப் பிடித்திருக்கிறது , அதனால் ஏதோ சில நேரங்களில் குடிக்கிறார், என்றுதான் சொல்ல வேண்டும். அப்பாவிற்குத் தேவையாக இருப்பதால் குடிக்கிறார் என்ற வார்த்தையை கண்டிப்பாக நீக்கிவிட வேண்டும்.

குழந்தை, ஏன் நான் குடிக்கக் கூடாது என்று கேட்டால், நீ இன்னும் பெரியவனாகவில்லை, சிறுவயதில் குடிப்பது சட்டப்படி குற்றம், அதோடு உன் உடல் நிலையையும் இது பாதிக்கும், நீ வளர்ந்து பெரியவனாகும் போது நீயே முடிவு செய்து கொள்ளலாம் என்று தெளிவாகக் கூற வேண்டும்.

போதை தடுப்பு முறைகள் பற்றி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அதாவது 5 வயது முதலே அறிவுறுத்த ஆரம்பித்து விட வேண்டும். நெருப்பைத் தொட்டால் சுடும் என்று யதார்த்தமாக குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பதுபோல போதை மருந்துகளின் அபாயங்களையும் புரிய வைத்துவிட வேண்டும். குழந்தைகள் வளர்ந்து பெரியவனாகும் போது சொல்லிக் கொள்ளலாம் என்று காத்திருந்தால் சில நேரங்களில் அது பயனற்றுப் போகும். வருமுன் காப்பதுதானே சாலச் சிறந்தது?

குழந்தைகளை பள்ளிக் காலங்களிலிருந்தே அவர்கள் நடவடிக்கைகளில் பெற்றோர் தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஆரம்பக் காலங்களில் கண்டுபிடித்து விட்டால் மாற்றுவதும் எளிதாகும். மேலை நாடுகள் போல, நம் நாடுகளில் இது போன்ற கணக்கெடுப்புகள் அதிகமாக இல்லை. நம் கலாச்சாரம் பண்பாடு கருதி இதைத் தவிர்த்து விடுகிறார்கள்.கலிபோர்னியாவில் சமீபத்தில் எடுத்த ஒரு கணக்கெடுப்பின் படி 25 முதல் 30 சதவிகித பெற்றோர் தெரிந்தும் கண்டும் காணாமல் இருப்பதாகக் கூறுகிறார்கள். குழந்தைகளிடம் இதன் அபாயம் குறித்து பேசும் போது, அதை ஒரு தனி வகுப்புப் பாடம் போல நடத்தக் கூடாது. டிவி பார்க்கும் போதோ, அல்லது காரில் பயணம் செய்யும் போதோ, அறிவுரை கூறுவதுபோல் இல்லாமல் யதார்த்தமாகக் கூற வேண்டும். ஏதாவது சம்பவங்களையோ அல்லது உதாரணங்களையோக்கொண்டு அழுத்தமாக, அதே சமயம் யதார்த்தமாகச் சொல்ல வேண்டும். போதைப் பழக்கம், உடல் உறுப்புக்களை அப்படியே கறையான் போன்று அரித்து விடும், என்பதனையும் உணரச் செய்தல் வேண்டும்.

குழந்தைகளுக்கு மனமகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஆரோக்கியமான மற்ற கேளிக்கைகள் பற்றி புரிய வைக்க வேண்டும்.உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை சிறுவயது முதலே ஊக்குவிக்க வேண்டும்.
பெரும்பாலும் சற்றே வளர்ந்த குழந்தைகள் ,நண்பர்கள் மூலமாகத் தான் இது போன்ற தீய பழக்கங்களை தொற்றிக் கொள்கின்றனர். நண்பர்கள் கட்டாயப்படுத்தினால் கூட மறுக்க வேண்டும் என்பதன் அவசியத்தைப் புரிய வைக்க வேண்டும். பெற்றோருக்கு இது போன்ற தீயப் பழக்கங்கள் அறவே பிடிக்காது என்று உணர்ந்த குழந்தைகள், நண்பர்கள் மத்தியிலும் கண்டிப்பாக 'ஐய ..... இதெல்லாம் வேண்டாம், எனக்குப் பிடிக்காது, உனக்குக்கூட இது தேவையில்லை என்றுதான் கூறுவார்கள்.

குழந்தைகளாக இருக்கும் பொழுதே இது போன்ற ஆரோக்கியமான எண்ணங்களை வளர்த்து விட்டோமானால், அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் போது, படிப்பு, தொழில் சம்பந்தமாக நம் கண் பார்வையில் இல்லாமல், வெளியூர்களுக்கோ, வெளி நாடுகளுக்கோ செல்லும் நேரங்களில் கூட பெற்றோர்கள் கவலையில்லாமல், அவர்கள் முன்னேற்றத்திற்கு அணையும் போடாமல், ஊக்குவிக்கும் வண்ணம் செயல்படலாம்.

Friday, July 23, 2010

என்னங்க மனசு சரியில்லையா?

ப்........ச்சு........ என்ன வாழ்க்கைங்க..... போர் அடிக்குது. என்னமோ போங்க........
இப்படி பலவிதமாக, பலவிதமான சலிப்புகளை பலரிடம் கேட்க முடிகிறது.வாழ்க்கை என்றால் ஏதோ ஒரு பிரச்சனை, ஏதோ ஒரு கவலை இருக்கத்தான் செய்யும். அதற்காக அதையே நினைத்து, கவலைப் பட்டுக் கொண்டே உட்கார்ந்திருந்தால், அது, டிப்ரஷன் என்கிற மனச் சோர்வில் தான் கொண்டு விடும்.
சமீபத்திய ஆராய்ச்சியின் மூலம் பத்துக்கு எட்டு பேர், அதுவும் ஆண்களைவிட,பெண்களே அதிலும் குறிப்பாக குடும்பத் தலைவிகளே அதிகமாக இந்த மனச் சோர்வின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கிறார்களாம்.
இதற்கான அறிகுறிகள் என்னென்னத் தெரியுமா?
1.நிரந்தரக் கவலை
2.எந்த வேலையிலும் மனம் ஈடுபடாமை
3.சிடுசிடுப்பு
4. பசியின்மை
5.தூக்கமின்மை
6.களைப்பு போன்றவைகள்.
இதன் பின் விளைவுகள், அசிடிட்டி, தலைவலி, உடற் சோர்வு, கை, கால் வலி ஆகியவைகள்.
கணவர், குடும்பத்திலுள்ளவர்கள் பற்றிய கவலைகள், பணப்பற்றாக்குறை, குழந்தைகள் எதிர்காலம், தன்னால் எதுவும் சரி செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம், இது போன்ற காரணங்களினால் மனக்கவலை ஏற்பட்டு, அமைதியை இழக்க நேரிடுகிறது.
எந்த காரணத்திற்காக மனது சஞ்சலப் படுகிறதோ, அந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, கவலையில் ஆழ்ந்துப் போவதால் எந்தப் பயனும் இல்லை. எப்பொழுதும் மனச் சோர்வில் தோய்ந்து, முடங்கி விடுபவர்கள், முன்னேற்றப் பாதையை எண்ணிக்கூடப் பார்க்க முடியாதவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
பென்சில்வேனியா நகர பல்கலைக்கழக மனோத்தத்துவ ஆராய்ச்சியாளர், தாமஸ் போர்கோவெக் என்பவர், கவலைப் படுவது என்று ஆரம்பித்து விட்டால், அதற்கு ஒரு எல்லையே இல்லை என்கிறார்.
உதாரணமாக, நம் வாகனத்தில் பிரேக் சரியாக இருக்குமோ........இல்லையோ..... என்று ஆரம்பித்து, அடுத்து, பிரேக் சுத்தமாக செயலிழந்துப் போனால்,......... வழியில் குழந்தை குறுக்கே ஓடி வந்து விட்டால் என்ன செய்வது என்பது வரை அனாவசியமாக அந்த கவலை விரிந்து கொண்டே போகும். சில நேரங்களில் சாதாரண தலைவலி கூட மூளைக் கட்டியாக இருக்குமோ என்ற சஎதேகப் புயலைக் கூட கிளப்பி விட்டுவிடும்.
சோகமான மனநிலை காரணமாக உற்சாகமின்மை, மற்றும் கண்ணிற்கு கீழ் கரு வளையமும் ஏற்படுகிறது. இதற்கு, குறைவான சுய மதிப்பீடு, குற்ற உணர்வு போன்ற சில காரணங்களும் உண்டு.
சில நேரங்களில் வீட்டிலிருக்கும் குடும்பப் பெண்களுக்கு தினந்தோறும் ஒரே மாதிரியான வேலை செய்வதால் மனச் சோர்வு ஏற்படலாம். இது போன்ற நேரங்களில் மாமூலான அன்றாட வேலைகளை சற்றே மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
தோழிகள், கணவர், குழந்தைகளுடன் பிக்னிக் அல்லது கடைத்தெருவிற்குச் சென்று வரலாம்.அழகாக மெகந்தி இட்டுக் கொள்ள, அல்லது குழந்தைகளுக்கு இட்டு விட முயற்சிக்கலாம்.
ஏதாவது பொழுதுபோக்கு, விளையாட்டு அல்லது பெயிண்டிங், சங்கீதம் கற்றுக் கொள்வது போன்றவற்றில் ஈடுபடலாம். காரணம் இரசனைக்குரிய இது போன்ற விசயங்களில் ஈடுபடும்போது, கவலை காத தூரம் ஓடிவிடும். வீட்டில் உள்ள பர்னிச்சர்கள்,அல்லது மற்ற பொருட்களை சற்றே மாற்றியமைத்து, அழகுபடுத்துவது, ஏதாவது புது வகையான சமையல் ஐட்டம் முயற்சி செய்வது போன்ற காரியங்களும் ஓகேதான்.
காலை நேரக் குளிர்ந்தக் காற்று மனதிற்கு ஒரு அமைதியை அளிக்கும்.,அதனால் விடியற்காலை நடைப்பயிற்சி நல்ல பலனைத் தரும். மேலும், பிரணாயாமம், யோகாசனம், ஏரோபிக்ஸ் போன்றவைகள்கூட சூப்பர்தான். பிறகென்ன, மன அமைதியுடன் உல்லாச வாழ்க்கை தையன்னா........தையன்னாதான்.............

Thursday, July 22, 2010

ஊருக்கு உழைத்திடல் யோகம் !!!!!


கதர் ஆடையை அள்ளிச் செறுகிய எளிமையான தோற்றமும், படிய வாரிய தலைமுடியும், அனைவரிடமும், மிக இயல்பாக பழகும் தன்மையும் பார்க்கும் பொழுது, திருமதி அருணா ராய், அவர்கள் நம் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போலவே காட்சியளிக்கும் இவரின் தொடர்ந்த சமூகப் பணிகளுக்காக ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படும் 'மகசேசே விருது' 2001ம் ஆண்டு அளிக்கப் பட்டுள்ளது.

சென்னையில் பிறந்து, தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்ட இவர் தன் இளம் வயதிலேயே வழக்கறிஞரான தந்தையுடன் தில்லியில் சென்று தங்கி விட்டார். இராணுவத் தளபதி கே.சுந்தர்ஜீ அவர்கள் அருணாராயின் தாய்மாமன்.
1967ம் ஆண்டு தில்லிப் பல்கலைக் கழகக் கல்லூரி ஒன்றில் ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ பட்டம் பெற்று, பின்னர் ஐஏஎஸ் படித்து தேர்ச்சி பெற்று 1969ல் தென்னாற்காடு, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும், 1970ல் பாண்டிச்சேரியிலும் பணியாற்றியுள்ளார் ஆயினும் பரவலாகவும் வலுவாகவும் மக்களுக்குச் சேவை செய்யும் வண்ணம் தன் பதவியையே 1975ம் ஆண்டு துறந்து, ராஜஸ்தான் சென்று சமூகப் பணி மற்றும் ஆய்வு மையம் [Social work and research centre SWRC] தன் கணவர் திரு சஞ்ஜித் பன்கர் ராய் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட சேவை அமைப்பில் இணைந்து பணியாற்றினார்.

பின்னர் 1990 ஆண்டு மஸ்தூர் கிசான் சக்தி சங்கத்தினர் [Mazdoor kisan sakthi sangatha MKSS] என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பைச் சிலருடன் இணைந்து நிறுவினார். ராஜஸ்தானில் செயல்படும் இந்த அமைப்பின் மூலம் இவர் அடிமட்ட மக்களுடன் இணந்து, மக்களை வழி நடத்தி , மக்களுக்கான பல முக்கிய உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அருணாராய், இன்று அடிமட்ட மக்களுக்கு சேவை செய்யும் விதமாக அவர்களுள் ஒருவராக ராஜஸ்தானில் ஒருஎளிய குடிசையில் வாழ்ந்து வருவதே இவரது எளிமைக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

இந்திய நாடு விடுதலை பெற்றதிலிருந்து இயற்றப்பட்ட பல முக்கியச் சட்டங்களில் மிக முக்கியமானது தகவல் பெறும் உரிமைச் சட்டம்- 2005 [The Right to Information Act 2005]. இது லஞ்ச ஊழல் ஒழிப்பு இயக்க வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். இச் சட்டத்தைக் கொண்டுவர பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து குரல் கொடுத்தவர்- இடைவிடாது இதற்கென மக்களைத் திரட்டிப் பல வடிவங்களில் களம் இறங்கிப் போராடியவர் இச் சட்டத்தின் முக்கியத்துவத்தையும், தேவைகளையும் மக்களுக்குப் பல கோணங்களில் எடுத்துச் சொல்லி மக்களிடத்தில் விழிப்புணர்வை உண்டாக்கினார்.

மிக நலிந்தப் பிரிவினருக்கான 'அன்னபூர்னா' திட்டம் மூலம், அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் பெற வேண்டிய ஒரு 75 வயது முதியவர், 12 மாதமாக எதுவும் கிடைக்காமல், மிக நலிந்து, துவண்ட போது, இவர் ஏற்படுத்திய விழிப்புணர்வால், அம் முதியவர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம், கடந்த ஓராண்டு காலக் கணக்குகளுக்கான தகவல்களைப்பெறுவதற்கான விண்ணப்பத்தை அனுப்பியவுடன், அடுத்த நாளே அப் பெரியவருக்குரிய 12 மாதத்திற்கான ரேசன் பொருட்கள் உடனடியாகச் சென்று சேர்ந்ததிலிருந்து, இச் சட்டத்தின் சக்தியை மழுமையாக உணரமுடிகிறதல்லவா?

இது மட்டுமல்லாமல் எரிவாயு இணைப்புக்காக பல காலமாகக் காத்துக்கிடந்த ஒருவர், இதே மறையில் விண்ணப்பிக்கவும், உடனடியாக அவருக்கு, இணைப்பு வழங்கப்பட்டது போன்ற பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன.இதையெல்லாம் பார்க்கும்போது, மென்மையான இந்த உருவத்திற்குள் இத்தனை உறுதியா என்ற மலைப்புத்தான் தோன்றுகிறது.இன்று நாடெங்கும் வெவ்வேறு பிரச்சனைகளுக்காக வெவ்வேறு மாநிலங்களில் நடைபெறும் பொது விசாரணைகளில் நீதிபதியாக[ jury] பங்கேற்கிறார்.இதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் உயர் மட்டக் குழுக்களின் ஒன்றான தேசிய ஆலோசனைக் குழுவில்[National advisory council] உறுப்பினராக விளங்குகிறார்.

இளம் வயதிலிருந்தே,ஆணுக்குப் பெண் சமம் என்ற சிந்தனையில் மிக உறுதியான நம்பிக்கை கொண்டவரான இவர் தேசிய நெடுஞ்சாலையிலும், கிராமங்களின் பள்ளம் மேடுகள் நிறைந்த பள்ளத்தாக்குகளிலும் அக்காலத்திலேயே திறமையாகவும் வேகமாகவும் ஜீப் ஓட்டுவதிலும் வல்லவராக அனைவராலும் பாராட்டப் பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக உரத்த குரல் கொடுப்பதோடு களத்தில் இறங்கி பெண் உரிமைகளுக்கு வித்தியாசமான கோணத்தில் தனது அழுத்தமான பங்களிப்பைச் செலுத்தி வருகிறார், இந்த பாரதி கண்ட புதுமைப்பெண்.

கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், என்பது போல ஒவ்வொரு இந்தியரும், தன் உரிமையைப் பெற பேசவேண்டிய இத்தருணத்தைப் பற்றிய விழிப்புணர்வை பெண்களுக்கு, குறிப்பாக அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படுத்துவதையே தன் வாழ்க்கையின் முக்கியக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் இவரால் பெண் குலத்திற்கே பெருமை என்பதே நிதர்சனம். இப்படிப்பட்ட மங்கையர் குல மாணிக்கத்திற்கு நம் ஈரோட்டின் மக்கள் சிந்தனைப் பேரவை பாரதி விருது வழங்கி கொஉரவிதது சாலப் பொருத்தம்.

.
'இருட்டு போனால் திருட்டு குறையும்' என்ற வகையிலும், ஆட்சி முறையின் இதயப் பகுதியில் ஏழ்மை மக்களை கொண்டு வரும் என்பதிலும், தகவல் பெரும் உரிமைச் சட்டம் ,எவ்வளவு முக்கியத்துவம் வய்ந்ததென்பதையும், வாய்ப்பாட்டு, நாடகம், குறுஒபடம் மூலம் பலவகையில் படிப்பறிவில்லாத பாமர மக்களுக்கும், அடிமட்ட மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையே தன் லட்சியமாகக் கொண்டு வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இவர், தன் திருமணத்தில்கூட கதர் ஆடையே உடுத்தி நகையும் போடாமல், மிக எளிமையாக நடத்தி ஒரு புரட்சியே ஏற்படுத்தியுள்ளார்.








, .

Tuesday, July 20, 2010

தப்புக் கணக்கு

ஏன்னா, யாரோ பெல் அடிக்கறாளே, வாசக்கதவை திறக்கப்படாதோ?
நான் பேப்பர் படிச்சுண்டிருக்கேனோல்லியோ. நீயே போய் தொறயேன்.
நான் கைக்காரியமா இருக்கேன்னா. நீங்களே செத்த தொறங்கோளேன்.
ஒரு அரை பக்கமானும் சேந்தா மாதிரி படிக்க விட மாட்டியே, முணுமுணுத்துக் கொண்டே போய் கதவைத் திறந்தார் வெங்கடேசன்.

அட வாம்மா, பத்மா. தனியாவா வந்தே? உன் ஆத்துக்காரர் வரலியா?
இல்லப்பா, அவர் வேலையா வெளிய போயிருக்கார். நான் ஒரு முக்கியமான விசயமா வந்தேன்.

வாடி, பத்து, இன்னைக்கு காலையிலிருந்து உன்னைத்தான் நினைச்சுண்டிருந்தேன். பருப்பு உசிலி பண்ணினேன், உனக்குப் பிடிக்குமோல்லியோ, அதான்!

என்னம்மா, என்னமோ முக்கியமான விசயமா வந்தேன்னியே, என்று அவளையோசனையுடன் பார்த்தார், வெங்கடேசன். ஆமாம்ப்பா, இன்னைக்கு நம்ம வைசாலியை பொண்ணு பாக்க மாப்பிள்ளை ஆத்துக்காரா, பெங்களுருலருந்து வரா. அதான் உங்க இரண்டு பேரையும் கூட்டிண்டு போலாமேன்னு வந்தேன்., என்றாள்.

அம்மா ஏற இறங்க தன்னைப் பார்த்து ஏதோ முனுமுனுப்பதைப் பார்த்து,
என்னம்மா, உன் பேத்தியை பார்க்க மாப்பிள்ளை ஆத்துக்காரா வரான்னு சொல்றேன், உன் முகத்துலே சந்தோசத்தயே காணோமே, ஏம்மா என்றாள், சலிப்பாக.

ஆமாண்டி, மாப்பிள்ளை ஆத்துக்காரா வந்தா, உன் பொண்ணு உடனே குளுகுளுன்னு ஒத்துண்டுதான் மறு வேலை பார்க்கப் போறா? ஏதோ நாலு எழுத்து படிச்சு, வெள்ளைத் தோலோடவும், சிம்ரனாட்டம் ஒடிசலான உடம்போட, கண்ணுக்கு லட்சணமா இருக்கறதால பெரிய இடத்தில இருந்தெல்லாம் மாப்பிள்ளை வந்து கேட்டா, இவ என்னடான்னா, ஏதாவது காரணம் சொல்லி எல்லாத்தையும் தட்டி கழிச்சுண்டிருக்கா. ஊர்ல இல்லாத அதிசயமான்னா இருக்கு இவோ பண்றது.அங்கங்க, மாப்பிள்ளை ஆத்துக்காராதான் பிகு பண்ணிக்குவா, இங்க என்னடான்னா உல்டாவால்ல இருக்கு. என்னடா, அப்பா பைபாஸ் ஹார்ட் சர்ஜரி பண்ணிண்டிருக்காரே, அவரை சும்மா அலைய விடப்படாது, நல்ல இடமா வரும்போது ஒத்துக்கணும்கற எண்ணம் கூட இந்தப் பொண்ணுக்கு இல்லையே. அவ மனசுலே என்ன தான் வெச்சுண்டிருக்கா? இன்னும் எப்பேர்ப்பட்ட இடம் வந்தா இவ ஒத்துக்குவாளாம்? இந்த அழகும், இளமையும், ரொம்ப நாளைக்கெல்லாம் நீடிச்சு இருக்காது. பன்னிக்குட்டிக் கூடத்தான் பருவத்திலே அழகாத்தான் இருக்கும். இதெல்லாம் உன் பொண்ணுக்கிட்ட எடுத்துச் சொல்ல மாட்டியா நீ?அம்மா நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன். ஏனோ அவ பெரிய இடத்து படிச்ச மாப்பிள்ளையெல்லாம் கூட தட்டிக் கழிக்கறா.இந்த முறையாவது ஒத்துக்குவான்னுதான் ஆண்டவனை பிரார்த்தனை பண்ணிண்டிருக்கேன். சரி நான் கிளம்பறேன்மா.சொஜ்ஜி, பஜ்ஜி எல்லாம் இனிமே போய்த்தான் ரெடி பண்ணனும். நீங்க நேரத்தோட வ்ந்து சேருங்கோ, என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.

வரலட்சுமிக்கு, வைசாலிக்கு இந்த வரனாவது அமைய வேண்டுமே என்ற கவலை உலுக்கி எடுத்தது. இந்தப் பெண் ஏன் இப்படி இருக்கிறாள் என்று நினைக்க, நினைக்க குழப்பமாக இருந்தது. இவ வயசு பெண்களெல்லாம் ஆசை, ஆசையாக கல்யாணம் பண்ணி குடியும், குடித்தனுமாக இருக்கும் போது இவளுக்கு மட்டும் என்ன வந்தது? வேறு ஏதாவது பிரச்சனையாக இருக்குமோ? இந்த காலத்து நவநாகரீக பொண்ணுங்க மாதிரியில்லாம, குனிந்த தலை நிமிராம காலேஜ் சென்று வருபவள்தான், காதல், கத்தரிக்காய்னெல்லாம் மாட்டிக்காம இருக்க வேண்டுமே, பகவானே என்று வேண்டிக்கொண்டாள். சே, சே அப்படியெல்லாம் நடக்காது. பட்டப் படிப்பு படித்து முடித்தவுடனே, பொறுப்பாக ஒரு வேலையில் சேர்ந்து கொண்டு, மேற்படிப்பைக் கூட அஞ்சல் வழியாத்தானே படித்து முடித்தாள். இவ்வளவு பொறுப்பான பெண், அதுமாதிரியெல்லாம் செய்ய மாட்டாள் என்று மனதைத் தேற்றிக் கொண்டாள்.

குறிப்பிட்ட நேரத்தில் சரியாக மாலை 5 மணிக்கு மாப்பிள்ளை வீட்டார் காரில் வந்து இறங்கினர். எல்லோரும் இறங்கியபின் கடைசியாக மாப்பிள்ளை மெதுவாக இறங்கி நடந்து வரும் போதுதான் தெரிந்தது, மாப்பிள்ளைக்கு கால் சற்றே ஊனம் என்று. லேசாக சாய்ந்து, சாய்ந்து நடந்து வந்தார். மற்றபடி ஆள் பார்ப்பதற்கு வாட்ட சாட்டமாக லட்சணமாக இருந்தார்.அப்பொழுதே தெரிந்து விட்டது, இந்த மாப்பிள்ளையும் ரிஜெக்டட் என்று. சரி சரி நடப்பது, நடக்கட்டும் என்று, நானும் ஏனோ தானோ என்று தான் உட்கார்ந்திருந்தேன். ஆனால் மாப்பிள்ளையோ கலகலவென்ற தன்னுடைய வெளிப்படையான பேச்சினால் வெகு சீக்கிரத்திலேயே எல்லோரையும் கவர்ந்து விட்டார்.

தன்னுடைய அப்பா பாதி படிப்பின் போதே ஒரு விபத்தில் இறந்ததையும், தன் அக்காவின் உதவி இல்லாவிட்டால் இன்று தான் இப்படி ஒரு நல்ல நிலைமையில் இருக்கவே வாய்ப்பில்லை என்பதைக்கூட வெளிப்படையாக அவன் பேசியது, எல்லோருக்கும் அவன் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியது, என்றே கூற வேண்டும். தன்னுடைய வெள்ளந்தியான பேச்சின்மூலம் எல்லோரையும் எளிதாக கவர்ந்த மாப்பிள்ளை, வைசாலிக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தியிருப்பானோ என்பதை அவளுடைய முகத்திலிருந்து ஏதும் புரிந்துக் கொள்ள முடியவில்லை. எந்த சலனமுமில்லாமல், வழக்கமான லேசான புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சரியான அழுத்தக்காரி. பாரேன், எந்த உணர்ச்சியுமே இல்லாம அப்படியே அமைதியா இருக்கறத?

மாப்பிள்ளையின் உற்சாகத்தைப் பார்த்தவுடனே, தெளிவாகத் தெரிந்தது, அவருக்கு வைசாலியை மிகவும் பிடித்திருக்கிறது என்பது. இருந்தாலும் ஊருக்குப் போய் கடிதம் போடுகிறோம் என்ற மாமூலான பதிலைச் சொல்லாமல், எனக்கு பெண்ணைப் பிடித்திருக்கிறது, அவருக்கு என்னைப் பிடித்திருக்கிறதா என்று தெளிவாகக் கேட்டுக் கொள்ளுங்கள், என்றார்.

எல்லோரும் வைசாலியின் முகத்தைப் பார்க்க, அவளோ சிறிதும் தயக்கமின்றி நான் அவருடன் சற்று தனியாகப் பேச வேண்டும், என்றாள்.

பத்து நிமிடமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்ன பதில் சொல்லப் போகிறார்களோ தெரியவில்லை.

வைசாலியும், மாப்பிள்ளையும், சிரித்துக்கொண்டே வந்தார்கள். வைசாலி முழு திருப்தியுடன் தனக்குப் பூரண சம்மதம் என்றாள். திருமணத்திற்கு நாள் குறிக்கும் மற்ற ஏற்பாடுகளும் நடக்க ஆரம்பித்துவிட்டது.

வரலட்சுமிக்கு மட்டும் மிகவும் குழப்பமாகவே இருந்தது. எத்தனையோ அருமையான வரன்களையெல்லாம் நிராகரித்துவிட்டு இந்த மாப்பிள்ளையை மட்டும் ஏன் ஒத்துக் கொண்டாள் என்று.

அன்று ஞாயிற்றுக் கிழமை. வைசாலி வீட்டில் இருப்பாள். அவளை நேரடியாக கேட்டே விட வேண்டும் என்று முடிவு செய்து அங்கு சென்றாள்.

பட்டுப் புடவை வாங்குவதற்கு, கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தனர். வைசாலி, அவள் அப்பாவிடம் விவாதித்துக் கொண்டிருந்தாள்.அனாவசியமாக அதிக விலையில் புடவை எடுக்க வேண்டாம், என்றாவது ஒரு நாள் கல்யாணத்தில் கொஞ்ச நேரம் கட்டுவதற்கு இத்தனை பணத்தை அதில் இன்வெஸ்ட் பண்ண வேண்டாமே, சிம்பிளாக இருந்தால் போதும், அனாவசியமாக செலவு செய்ய வேண்டாமே என்று சொல்லிக் கொண்டிருந்தாள். இதுதான் சமயம் என்று ,தன்னுடைய சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக,

'ஏன் இந்த மாப்பிள்ளையை மட்டும் ஒப்புக் கொண்டாய்,' என்று கேட்டாள்.
வைசாலியும், சிரித்து மழுப்பி விட்டு, உடை மாற்றுவதற்காகத் தன் அறைக்குச் சென்றாள்.

வரலட்சுமியும் விடாப்பிடியாக அவள் பின்னாலேயேச் சென்றாள்.
பாட்டி," என்ன வேண்டும் உனக்கு, ஏன் இப்படிப் படுத்தறே? நான் கிளம்பறேன். அப்பா லேட்டாச்சுன்னா சத்தம் போடுவார்.வெளிச்சத்துலே எடுத்தாத்தான் புடவை கலர் நன்னா தெரியும்னு சொல்லுவார்", என்றாள்.வரலட்சுமியும்விடாப்பிடியாக, "ஏன் வைசாலி இப்படி பண்ணினே, உன் அழகுக்கும், அறிவுக்கும் தகுந்த மாதிரி எத்தனை பெரிய இடத்து மாப்பிள்ளையெல்லாம் வந்ததே, அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, இந்தப் பையனை மட்டும் ஏன் செலக்ட் பண்ணினே, எனக்கு காரணம் தெரியாட்டி, தலையே வெடிச்சிடும் ", என்றாள்.

பாட்டியின் அக்கறையுடனான பாசமான, கேள்வி அவளுடைய மௌனத்தைக் கலைத்து, மனம் திறக்க வைத்தது.

" பாட்டி, அப்பாவிற்கு ஹார்ட் சர்ஜரி பண்ணியிருக்கோல்லியோ? அவரால முன்ன மாதிரி, ரொம்ப அலைஞ்சி ஓடியாடி பிசினஸ் பண்ண முடியாது. அடிக்கடி அவருக்கு செக்கப் செய்து உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். தம்பி, இப்பத்தான் முதல் வருடம் எஞ்ஞினீயரிங் படிக்கிறான். அவனுக்கு பேமெண்ட் சீட்டிற்குப் பணம் கட்ட வேண்டும். அதுவும் அவன் வெளியூரில் படிப்பதால் செலவும் அதிகம்.என்னைப் பெரிய இடத்தில் கட்டிக் கொடுத்தால், நான் சந்தோசமாகத்தான் இருப்பேன். ஆனால், அதற்காக அப்பா மிகவும் அதிகமாக செலவு செய்ய வேண்டியதாகும். அதுமட்டுமில்லாமல், வசதியான இடமாக இருந்தால் என்னை வேலைக்குச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். அப்பாவிற்கோ, தம்பிக்கோ பணம் தேவையென்றால் என்னால் உதவ முடியாது. என்னை படிக்க வைக்க அப்பா எவ்வளவு சிரமப்பட்டார்னு எனக்கும் தெரியும் பாட்டி. அந்தப் படிப்பு அவருக்கும் பயன்படனும்னு நான் நினைக்கிறதுலே என்ன தப்பு இருக்கு. நான் அவர்கிட்ட தனியா பேசினப்ப இதையெல்லாம் தான் பேசி, தெளிவாக எடுத்துச் சொன்னேன். அவரும் அதற்கு மனப்பூர்வமாக சம்மதிச்சுட்டார். அதனால்தான் நான் ஒத்துண்டேன்", என்றாள்.

இதைக் கேட்டவுடன், வரலட்சுமி அவளைக் கட்டி அணைத்து, உச்சி முகர்ந்து," என் கண்ணே, நான் உன்னைப் பத்தி என்னமோ நினைச்சுட்டேன். இந்த வயசுலே உனக்கு இருக்கற அனுபவமும், தியாக மனசும், புரியாம, இவ்வளவு நாளா உன்னை திட்டிக்கிட்டு இருந்தேன்னு நினைச்சா எனக்கே வெக்கமா இருக்கு, என்னை மன்னிச்சிடும்மா" என்றாள் கண்ணீர் மல்க.

ஆணுக்கு நிகராக சம உரிமை கேட்கும் பெண் குழந்தைகள் இன்று ஆணுக்கு நிகராக பொறுப்பேற்றுக் கொள்ளவும் தயங்குவதில்லை என்பதைப் பார்க்கும் போது மனதிற்கு தெம்பாகத்தான் இருக்கிறது.

முகத்திரை.

பாரதி எனும் என் பெயரின் முகமூடியில்
உன் வீர தீர சாகசங்களையெல்லாம்
வரைந்துத் தீர்த்த நீ
இன்று மட்டும் உண்மையை எழுதிவிட்டாயே
நானும் ஒரு கோழைதான் என்று!!!

துணை

நான் பிரச்சனையிலிருக்கும் போது தீர்வு சொல்லி
குழப்பத்திலிருக்கும்போது தெளிவடையச்செய்து
அழும்போது ஆறுதல் அளித்து
சோர்ந்தபோது தன்னம்பிக்கை அளித்து
தவறியபோது தத்துவ ஞானம் அளித்து
என் வாழ்க்கைப் பயணத்தின் வழிகாட்டியாக
இருந்த என் துணையை இழந்தேனே!
இழந்தது அழியக் கூடிய மனிதத் துணையை அல்ல!
உயிரினும் மேலான, என்றுமே
அழிவென்பதேயில்லாத அத்துணை
நண்பர்கள் கடன் வாங்கித் திருப்பிக் கொடுக்க
மறந்த என் புத்தகங்கள்தான்!!!!

முதுமையின் மழலை


என் மழலைக் குறும்புகளை
உன் தாய்மை பறைசாற்றி மகிழ்ந்தது


உன் முதுமைக் குறும்புகளை
என் ஆணவம் மூடி மறைக்கிறது.


என் மழலை அழிச்சாட்டியத்திற்கு நீ கொடுத்த பரிசு
வண்ண வண்ண இனிப்புகள், தாலாட்டுக்கள்.


உன் முதுமை அழிச்சாட்டியத்திற்கு நான் கொடுத்தது
வண்ண வண்ண மாத்திரைகள், உன்னை தூங்க வைப்பதற்கு.


என் மழலையின் பரிணாமம் வாலிபம்
உன் முதுமையின் பரிணாமம் மறுபிறவியா?


அடுத்த பிறவியிலும் உன் கர்பக்கிரகத்தில்
என் உயிர்க்கருவை அனுமதிப்பாயா?

வெற்றி

முட்டுக் கட்டைகளை மூலதனமாக்கி
ஏமாற்றங்களை ஏணியாக்கி
சோதனைகளை சாதனையாக்கிய
வெற்றி விழாவில் பாராட்டுப் பத்திரம்
அந்த முட்டுக்கட்டைக்கு.
ஒரு பெண்ணின் வெற்றிக்குப்
பின்னாலும் ஒரு ஆண்.

. உயரமாக நில்லுங்கள்

1. உடல் அளவில்.... உயர்ந்து நில்லுங்கள்
2. மன அளவில்....... உயர்ந்து நில்லுங்கள்
3. ஆன்மீக அளவில்....... உயர்ந்து நில்லுங்கள்.

சிறந்தவைகள்

நதிகளில் சிறந்தது கங்கை , மலைகளில் சிறந்தது இமயம் , மலர்களில் சிறந்தது தாமரை , மணிகளில் சிறந்தது மாணிக்கம் , தெய்வங்களில் சிறந்தவர் முருகர் , யாத்திரைகளில் சிறந்தது கயிலை யாத்திரை.

குற்றம் கண்டு தனைத் திருத்துதல்

தன் குற்றம், குறை, கடமை, தன்னுள் கண்டு,
தான் கண்டு, தனைத்திருத்தும் தகைமை வந்தால்,
என் குற்றம், பிறர் மீது சுமத்தக் கூடும்.
ஏதெனும் கண்டாலும், மன்னித்தாலும்,
மேன்மைக்கே மனம் உயரும். பிறந்தவரால்
மிக வருத்தம், துன்பம். அதுவந்த போதும்
தன்மைக் கேயாம் செய்த பாவம் போச்சு.
நாம் கண்ட தெளிவு. இது வாழ்த்தி வாழ்வோம்.