Friday, August 9, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (22)


பவள சங்கரி
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்!
live-your-life
அன்று ஞாயிற்றுக் கிழமை. ஊரின் மத்திய பூங்கா ஒன்றிற்குச் சென்றிருந்தோம். அங்கு ஒரு புறம் சிரிப்பொலி அதிர்ந்து கொண்டிருந்தது. தன்னிச்சையாக அங்கு கண்கள் சென்றபோது, ஒரு கூட்டமாக சில முதியவர்கள் அமர்ந்து ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டு சத்தமாக சிரித்துக் கொண்டு, அந்த உலகில் அவர்களைத் தவிர வேறு எவருமே இல்லை என்பது போல கொண்டாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் குழந்தைத்தனமான அந்த நடவடிக்கை பார்ப்பதற்கே மகிழ்ச்சியாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருந்தது. அப்போது அருகில் என்னைப் போலவே பார்த்து இரசித்துக் கொண்டிருந்த இன்னொரு பெண் அவர்கள் அருகில் சென்று அதே உற்சாகத்துடன் தன்னை அறிமுகம் செய்துகொண்டு, அவர்களைப் பற்றியும் அறிந்து கொள்ளும் ஆவலில் பெயரையும், ஊரையும் கேட்டவர், அடுத்தது வயதையும் கேட்டுவிட்டார். அவ்வளவுதான். உடனே அனைவரின் முகத்திலும் உற்சாகம் குறைந்ததோடு, லேசான கலக்கமும் தெரிந்தது. அதில் ஒருவர், கோபமாக ‘என்பது வயசு ஆவுது.. இப்ப என்ன அதுக்கு?’ என்றார். மிக யதார்த்தமாக, நட்புடன் கேட்ட கேள்வியாக இருப்பினும் அது அவர்களுடைய மகிழ்ச்சியை மொத்தமாய் சீர்குலைத்துவிட்டது. அனைவரும் ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்துவிட்டனர். சற்று நேரம் முன்பு அத்துனை கலகலப்பாக உரையாடிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் இப்போது ஈயாடவில்லை. அவர்கள் சுய நினைவிற்கு வந்து, தங்களின் வயதைப் பற்றி சிந்திக்க வேண்டிய தேவை வந்தபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். திடீரென்று அவர்களின் மனநிலையில் அப்படி ஒரு மாற்றம் ஆச்சரியம் ஊட்டக்கூடியது. சுயபச்சாதாபத்தில், வேதனையோடு எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த நடையில் முன்பிருந்த உறுதியும் குறைந்திருந்தது. உலகில் பிறந்தவர் அனைவரும் இது போன்ற மாற்றங்களுக்கு ஒரு நாள் தயாராகத்தான் இருக்க வேண்டிவரும். ஒரு சிலர் அந்த முதுமையையே தங்களுக்குக் கிடைத்த மரியாதைக்குரிய காலமாகக் கருதி நிம்மதி கொள்பவரும் இருக்கின்றனர்.

Thursday, August 8, 2013

தினமணியில் ‘என் விடியலின் வேர்கள்’



அன்பு நண்பர்களே,

வணக்கம். தினமணியில் என் ’விடியலின் வேர்கள்’ நூலின் மதிப்புரை வழங்கியுள்ளார்கள்.தினமணி நாளிதழுக்கு மனமார்ந்த நன்றி.  இது என்னுடைய 400 வது பதிவு என்பதிலும் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு. என்னை உற்சாகப்படுத்தி, என் நிறை, குறைகளை சுட்டிக்காட்டி என்னை வழி நடத்திக் கொண்டிருக்கும் என் நண்பர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். 

அன்புடன்
பவள சங்கரி



-- 
விடியலின் வேர்கள் (பேராண்மைமிக்க பெண் சாதனையாளர்கள்) - பவளசங்கரி திருநாவுக்கரசு; பக்.176; ரூ.80; பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14.
அன்னை தெரசா, அன்னிபெசண்ட் அம்மையார், முத்துலட்சுமி ரெட்டி, தில்லையாடி வள்ளியம்மை. செüந்திரம் ராமச்சந்திரன், சுசேதா கிருபளானி, இந்திராகாந்தி, லெட்சுமி சேகல், ஈ.வே.ரா.மணியம்மை உள்ளிட்ட 22 பெண் சாதனையாளர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
இந்தப் பெண் சாதனையாளர்களின் பிறப்பு, வளர்ப்பு, சாதனைகள், கருத்துகள், அவர்களின் முக்கியத்துவம் வாய்ந்த சமூகப் பணிகள் போன்றவற்றை மிக எளிய நடையில் சுவையுடன் நூல் விவரித்துச் செல்கிறது.
இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் சாதனையாளர்கள் பல்வேறு இயக்கங்கள், நோக்கங்கள், கருத்துகளைக் கொண்டிருந்திருக்கிறார்கள். இவர்கள் வாழ்ந்த காலங்களும் கூட வேறுபட்டவை. எனினும் தங்கள் வாழ்நாளில் சாதனை செய்தவர்கள் இவர்கள் என்ற ஓர் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
பலருக்கும் தெரிந்த பல்வேறு விவரங்களின் தொகுப்பு என்று இந்நூலை ஒதுக்கிவிட முடியாது. ஒவ்வொரு சாதனையாளரைப் பற்றியும் தெரியாத - இதுவரை சொல்லப்படாத பல தகவல்கள், செய்திகளை இந்நூலின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பெண்கள் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இந்நூல் வெளிவந்திருப்பது சிறப்பு.