Tuesday, June 21, 2022

அப்பா என்றால் ....

அப்பா எனும் அற்புதம் புவியில் என்றும் பெருவரம் தரணியில் அவரே தனிரகம் அல்லல் தீர்க்கும் அருமருந்து இருள் நீக்கும் அகல்விளக்கு அகிலம் போற்றும் இறைதூதர் கன்னற் சுவையின் கருவூலம் கவிதை வானின் நட்சத்திரம் கருணைத் தேரின் மணிமகுடம் கற்பகத் தருவின் ஆணிவேர் பூவுலகை நீங்கினாலும் மனமதை நீங்காமல் நிறைந்திருக்கும் நித்தியன் நித்திரையிலும் நீதி சொல்லும் நிரந்தர நிமலன் சொற்திரையில் நிம்மதி அளிக்கும் நாயகன் எல்லோரும் நலம் வாழும் நல்லெண்ணம் கொண்ட மனிதன் என்றும் நீங்காமல் நிறைந்திருக்கும் ஈசனின் புத்திரன் குகன் எனும் சிநேகிதன் புவனம் போற்றும் உத்தமன் என் வாழ்நாள் வழிகாட்டியாக வாகை சூடும் அன்பான தந்தையவர்! வரலாறாக நிலைத்திருக்கும் வல்லவர்!!

Thursday, May 12, 2022

திருமண பரிசுப் பெட்டகம்





 

சங்க இலக்கியப் பாடலில் வாழ்வியல்

 

பரிசுப் பெட்டகம்

 

மையக்கருத்தாகக்கொண்ட பாடல் :

குறுந்தொகை 28 - தலைவி தோழியிடம் சொன்னது

முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்
அலமரல் அசை வளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.

ஔவையார் 

சுரும்பாற்குழலி – குயிலினியன் ஆகியோருக்கு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற தை மாதம் பௌர்ணமி தினத்தில் பரிசம் போட உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

“குழலி .. அடியே குழலி ... சுரும்பாற்குழலியே, என்னடி பகற்கனவா? எத்தனை முறை கூப்பிட்டாலும் காதில் விழவில்லையோ..”

“ஓ .. நீயா புள்ள. என்ன வேணும் உனக்கு இப்ப..”

“ஏய் என்னடி இது, இந்த மதிவதனி இங்குட்டு வந்து அரை மணி ஆச்சு.. காட்டு கத்தலா கத்திக்கிட்டு இருக்கேன். எந்த உலகத்துல இருக்குறவளாம்?”

“இங்கனத்தானே இருக்கேன். கண்ணு தெரியலையாக்கும்”.

“ம்க்கூம் .. தெரிஞ்சிட்டாலும்.. அது சரி என்ன ஆச்சு உன் மாமன் பரிசம் போட தயாராயிட்டானா .. தகவல் வந்துச்சா?”

“இல்லடி.. அதுதான் ஒரே வெசனமாவே இருக்குடி.. போன் போட்டாலும் கிடைக்கல .. தொடர்பு எல்லைக்கு வெளிய இருக்காறாமாம்”

“என்னடி சொல்ற. பௌர்ணமிக்கு இன்னும் 3 நாட்கள்தானே இருக்குது. இன்னும் ஊர் திரும்பாம அப்படி எங்க போயிருப்பாரு. ஒன்னுமே விளங்கலையே”  

“எத்தனைப் பெரிய போராட்டத்திற்கு அப்பறம் இந்த கல்யாணம் நடக்கப்போகுதுன்னு முழுசா சந்தோசப்படக்கூட முடியலையே. ஊரே கொஞ்சமும் கவலைப்படாம ஆனந்தமா தூங்கிக்கிட்டிருக்கு. நான்தான் தூக்கமில்லாம அலைமோதிக்கிட்டு கிடக்கேன். சுவத்துல போய் முட்டிக்கலாம்னு இருக்கு. எங்க போயி தேடுறது இந்த மனுசன. அப்பா கோவத்துல கத்துறாரு. சொந்த பந்தமில்லாத அனாதப் பயல கட்டிக்குவேன்னு அடம் பிடிச்சு சம்மதிக்க வச்சீல்ல. இப்ப அழுது புலம்பி என்ன ஆவப்போவுதுன்னு கோபத்துல துடிக்கிறாருடி. குயிலன் வந்து சேரலைன்னா அதே மூகூர்த்தத்தில மணமேடையில உட்கார வைக்க அந்த பெங்களூருக்கார பயல தயார் பண்ணிக்கிட்டிருக்காரு. குயிலன் கட்டாயம் வரமாட்டான்னு தானே முடிவு செஞ்சுகிட்டு வெளிநாட்டுல இருக்குற அவனை புறப்பட்டு வரவும் சொல்லிட்டாரு. என்ன செய்யிறதுன்னே புரியலைடி”.


“அப்பா வேற என்ன செய்ய முடியும் சொல்லு. உன் வாழ்க்கை நல்லபடியா அமைய வேணும்னு அவரைத் தவிர வேறு யார்தான் அக்கறை காட்ட முடியும். அமைதியா இரு. எல்லாம் நல்லபடியா முடியும்”

இந்த நேரம் பார்த்துதானா இப்படி ஆகனும். இயற்கையே சதி செய்வது போல இப்படி ஒரு கொள்ளை நோய் உலகையே பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. எந்த தொழில்நுட்பமும், நவீன மருத்துவமும் பலனில்லையே. பலரும் பல விதமான பாதிப்புகளுக்கு ஆளாகி ஊரே அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருக்க சுரும்பாற்குழலியின் திருமணம் பற்றி கவலைப்படுபவர் யார்? என்னமோ பெயரில் ஏதோ வைரசு உலகம் முழுவதும் தொற்றாய் பரவி கொத்துக்கொத்தாக உயிர்பலி வாங்கி வருவதால், பொழுதுபோக்கு, வணிக வளாகங்கள், டாசுமாக்கு கடைகள், திருவிழாக்கள் என பொது மக்கள் கூடும் இடங்களுக்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளதும், இந்த வைரசை தமிழில் குடுமிநுண்மி அல்லது தீநுண்மி எப்படி அழைக்கலாம் என்று தமிழறிஞர்களின் விவாதம் ஒருபுறம் என்று அவரவர்களுக்குத் தகுந்த பிரச்சனை இருக்க, சுரும்பாற்குழலி மட்டும் குயிலினியனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லையே, ஒரு வேளை இந்த கொடும் தொற்றின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கலாமோ என்ற மனக்குழப்பத்தில் சோறு தண்ணீரில்லாமல் துவண்டு கிடந்தாள்.

“குழலி, என்ன புள்ள இப்படி கிடக்குற.  2 நாளா ஒன்னுமே சாப்பிடலயாமே. ஏன் இப்படி அடம் புடிக்கிற, உன் மாமன் சீக்கிரம் வந்துடுவான், ஒழுங்கா சாப்பிடு, அப்பறம் கல்யாண சமயத்துல முகமெல்லாம் பொலிவில்லாம போயிடும் பாத்துக்க ...”

“அட போடி. பரிசப்பணமும், சீர்வரிசைப் பொருட்களும் சிறப்பா எடுத்துக்கிட்டு வாறேன் பாருன்னு சொல்லிட்டுப் போன மாமனக் காணோமே, என்ன ஆச்சோ, ஏது ஆச்சோன்னு நானே வயித்துல புளியைக் கரைக்க காத்துக்கிடக்கறேன். நீ என்னடான்னா சோறு திங்கச் சொல்லறியாக்கும் ..”

“இல்லடி குழலி அவருக்கு ஒன்னும் இருக்காது. சீக்கிரமே வந்துடுவாரு பாரு”

“என் குயிலன் வராம இனி பச்சத் தண்ணி கூட குடிக்க மாட்டேன். இன்னும் நாளைக்கு ஒருநாள் தான இருக்கு. அவருக்கு எது நடந்தாலும் அது எனக்கும் நடக்கட்டும். என் சாமி என்ன முடிவு செய்தாலும் எனக்கு சம்மதந்தான்..”

பயித்தியமாட்டம் பேசாத புள்ள. எல்லோருக்கும் நல்லதை மட்டும் நினைக்கிற உன் மாமனுக்கு அப்படி கொள்ளை நோயெல்லாம் வரும்னா நம்பறே நீ?”

எவ்வளவோ சமாதானம் செய்தும் குழலி எதற்கும் செவி சாய்ப்பதாக இல்லை. இனி அந்த ஆண்டவனாப் பார்த்து ஏதாவது வழி காட்டினால்தான் உண்டு என்று அனைவரும் அமைதி காக்க வேண்டியாகிவிட்டது.

குயிலினியன், இந்த உலகில் யாருக்குமே கிடைக்காத, அன்பு, அறிவு, அழகு என அனைத்திலும் ஈடு இணையில்லாத தேவதைக்கு இதுவரை யாரும் கொடுக்காத பரிசாகக் கொடுத்து அசத்த வேண்டும் என்று பெரும் முயற்சி எடுத்துக்கொண்டான். பரிசப் பணமும் கணிசமான அளவிற்கு வைத்திருந்தாலும் ஊரே மெச்சும் அளவிற்கு பரிசும் கொடுக்க வேண்டும், என்ன கொடுக்கலாம் என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தான். இவ்வளவு பெரிய நகரத்தில் அப்படியேதும் அதிசயப் பொருள் கிடைக்காமலா போகும் என்று சர்வ சாதாரணமாக நினைத்துக் கொண்டுவிட்டான் போலும். கடந்த ஒரு வாரமாக இதற்காக அலைந்து திரிந்து சலித்துப் போனதுதான் கண்ட பலன். இன்னும் 3 நாட்கள் இருக்கும் நிலையில் இனிமேலும் அப்படியேதும் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையும் இழந்துவிட்டான். ஏதாவது ஒன்றை வாங்கிக்கொண்டு கிளம்பலாம் என்ற மனநிலையும் வரவில்லையே, என்னதான் செய்வது என்று தெரியாத குழப்பத்தில் கடற்கரைக்குச் சென்று சற்று காலாற நடந்துவிட்டு வந்தால் தேவலாம் போல இருந்தது. எப்படியிருந்தாலும் அடுத்த நாள் எதையாவது வாங்கிக்கொண்டு ஊருக்குக் கிளம்பவேண்டியதுதான் என்றும் ஒரு புறம் அறிவூட்டியது மூளை. எப்போதுமே மூளை சொல்வதை மனது கேட்காமல் அடம் பிடிப்பதுதான் விதியின் போக்கை நிர்ணயித்துவிடுகிறது. காலமும் சூழலும் பெரும்பாலும் இதற்கு துணை போய்விடுகிறது.

பீச்சில் கூட்டமே இல்லை. இது போன்று காண்பது மிக அரிது. அரசு எச்சரிக்கையின் பேரில் கூட்டம் கூடும் இடங்களுக்குத் தேவையில்லாமல் செல்ல வேண்டாம், குறிப்பாக குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று ஒலிபெருக்கி சற்று முன்னர்கூட ஒலித்துக் கொண்டிருந்தது. மக்களுக்கு உயிர் பயத்தை நன்றாகவே காட்டிவிட்டது இந்த தொற்று நோய். ஒரு காலத்தில் காலரா நோய் இப்படி கொத்து கொத்தாக மக்களைக் கொன்று சென்றதை அவன் தாத்தா கதை கதையாகச் சொன்னது நினைவிற்கு வந்தது. உலகமயமாக்கல் என்ற நவீன சிந்தைகளால் வணிகமும், பொருளாதாரமும் மட்டுமா உயர்ந்தது. பின் இணைப்பாக இது போன்று கொள்ளை நோய்களும், கலாச்சார சீர்கேடுகளும் சேர்ந்துதானே அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதெல்லாம் எங்கு போய் முடியப்போகிறதோ?

சிந்தனை தொலை தூரத்திற்கு சிறகு விரிக்க, கால்கள் தானாக நடந்து நடந்து கடலுக்கு அருகில் தண்ணீருக்குள் நடந்து கொண்டிருப்பதுகூட தெரியாமல் போய்க்கொண்டிருந்தான். திடீரென்று வந்த பேரலை ஒன்று அவனைச் சுழட்டி இழுத்துச் சென்றது. என்ன நடந்தது என்று உணரும் முன்பே யாரோ கையைப் பிடித்து இழுத்துப்போட்டது போல இருந்தது. கண் விழித்துப் பார்த்தபோது முன்னால் ஒரு பெரியவர், வெண்பட்டு நீண்ட தாடியும் பார்க்கவே கண்கள் கூசும் பளபளவென்ற தேகமும் வாய் நிறைய சிரிப்பும் அதுவரை கண்டிராத ஒரு உருவம்! இடையில் உடை இருந்ததா என்றுகூட தெரியவில்லை.

அவன் இருந்த இடம் இயற்கையின் அருட்கொடையான ஒரு தெற்றிக்காடு என்பது புரிந்தது. பூமியின் நிலப்பரப்பில் எப்பொழுதும் நிலத்தடி நீரைத் தேக்கி வைத்திருக்கும் காடுகள்தான் தெற்றிக்காடுகள் என்று படித்த நினைவு இருந்தாலும் இதுவரை கனவிலும் கண்டிராத இடம் இது. பொதுவாக அதிக அளவில் வெப்பம் இருந்தாலும், அதிக அளவில் காற்று அடித்தாலும் கிணறு, ஏரி, குளம், குட்டைகளில் நீர் குறைந்துவிடும். ஆனால் இந்தத் தெற்றிக்காடுகள் இருக்கும் பகுதிகளில் நீர் நிலத்தடியிலும் இறங்காமல், வெப்பம் மற்றும் காற்றாலும் உறிஞ்சப்படாமல் இருக்கும் அதிசய பூமி.  தான் எப்படி இங்கு வந்தோம், இது எந்த மாநிலத்தில் உள்ள இடம், மனித நடமாட்டமும் இல்லை என்று ஆச்சரியத்தின் உச்சத்தில் இருந்தாலும் தன்னையறியாமல் ஏதோவொரு இனம் புரியாத ஆனந்தம் குடிகொண்டிருப்பதை உணர்ந்தான். 1000 அயிரைப்பேரடி (கிலோமீட்டர்) கடந்து வந்திருப்போமா? தன்னை அழைத்து வந்த அந்தப் பெரியவரை சுற்றும் முற்றும் தேடினான். எங்கும் காணவில்லை. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல உணர்ந்தான். சில நிமிடங்கள்தான்...

மீண்டும் அந்த பிரகாசமான முகம் கண்முன்னால் கருணையின் வடிவாய், கனிவான புன்னகையுடன்..  கண்ணைத்தவிர வேறு எந்த புலனும் வேலை செய்யவில்லையோ? அசைவற்ற பாறைபோல் நிற்கிறேனோ? சித்தரோ, புத்தரோ, போதிதர்மரோ யாரோ தெரியவில்லை. இந்த தெற்றிக்காட்டில் என்ன செய்கிறார் தன்னந்தனியாக? ஒரு பெட்டியை ஏந்திக்கொண்டு வருகிறார். மரகத இலிங்கத்திருமேனி போலக் காட்சியளித்த நினைவு .. 

அவ்வளவுதான் மீண்டும் கடலில் தூக்கிப்போட்ட உணர்வு ..

சுள்ளென்று சூரியன் முகத்தில் அடித்த உணர்வில் அசைய முற்பட்டான்.. “எங்கு இருக்கிறேன்.. கடல் அலைகள் மேலே மோதி மோதி விழிக்கச் செய்திருக்கும் போல.. மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்துவிட்டேனோ”.

சட்டென்று மரகத இலிங்கத் திருமேனி நினைவிற்கு வந்து, சுற்றும் முற்றும் தேட ஆரம்பித்தான். கடற்கரையில் ஒரு ஈ, காகம் கூட இல்லை. வெகு அருகில் அதே பெட்டி, மேலே சம்மணமிட்டு உட்கார்ந்திருப்பது அதே மகான்!

“போ ..போ. ஊசலாடும் உயிர்களைக் காப்பாற்று. இதில் இருக்கிறது பார் மந்திர மூலிகைக்கட்டு! ஓடு .. ஓடு விதியிருப்பவன் பிழைப்பான் உன்னால்” என்று அசரீரியாக ஒலித்தவர்,

அவ்வளவுதான்.. திரும்பிப் பார்க்காமல் மீண்டும் கடலுக்குள் இறங்கிவிட்டார். அடுத்த நொடி, குழலியின் நினைவு வந்து தேதியும், மணியும் பார்த்தால், பரிசம் போடும் நேரத்திற்கு இன்னும் சொற்ப மணித்துளிகளே இருந்தன. ஒரு வாடகை மகிழுந்தைப் பிடித்தான். பரபரப்பாக அனைத்தும் நடந்தன. வண்டியில் ஏறி அமர்ந்து, பொக்கிசப்பெட்டியை அணைத்தவாறு அசதியில் கண்ணயர்ந்தவன், ஓட்டுநர் குறிப்பிட்ட இடம் வந்துவிட்டதை எழுப்பி தெரிவிக்க மெல்ல இறங்கியவனுக்கு ஆச்சரியம். அதே பரபரப்பு அங்கும்!

சுரும்பாற்குழலி அலங்காரம் செய்யமாட்டேன் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தாள். மாப்பிள்ளை என்று வேற்று நாட்டிலிருந்து வந்திருந்த ஒருவன் தன்னுடனேயே சீதனமாக தொற்றையும் தூக்கி வந்தவன் சில மணி நேரங்களில் ஊர் முழுவதும் பரப்பி விட்டிருந்தான். பரிசம் போட வந்தவன் பரிசாகக் கொண்டுவந்தது தொற்றுக் கிருமிகளை என்று மருத்துவர் கண்டுபிடிப்பதற்குள் அந்த சிறிய ஊரே மொத்தமாகப் பாதிக்கப்பட்டுவிட்டன.

குயிலினியன் சட்டென்று நினைவிற்கு வந்தவனாக பெட்டகத்தைத் திறந்து அந்த மந்திர மூலிகையை வெளியே எடுத்த நொடியில் அதன் நறுமணத்தின் நெடி நொடியில் ஊர் முழுவதும் பரவி, மயங்கியவர்களை விழித்தெழச் செய்தது! நம்ப முடியாமல் பார்த்தவர்களுக்கும், பகுத்தறிவு பேசுபவர்களுக்கும் தன்னிடம் சொல்வதற்கு பதில் ஏதுமில்லை என்று அவனுக்குத் தெரியும்! இந்த உலகையே பேரழிவிலிருந்து காக்கப்போகும் வேர்கள் நிரம்பிய அட்சயப் பாத்திரம் அது என்பது அறியாமலா போகும்?

பரிசம் போட இதைவிட வேறு என்ன பரிசு வேண்டும் என்று குயிலினியனை ஊரே மண்டியிட்டு வணங்கி வாழ்த்தி மணமேடைக்கு அழைத்து வந்ததை கண்கள் கலங்கி மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள் சுரும்பார்குழலி!

முற்றும்

 


#இன்றைய முக்கிய செய்திகள்#

Sunday, April 10, 2022

உயிர் பெற்ற என் சிறுகதை

 

2011ஆம் ஆண்டில், 'எங்கே அவள்' என்று ஒரு காதல் கதை எழுதியிருந்தேன். அது இளமையை உருக்குலைக்கும் werner syndrome என்ற ஒரு கொடுமையான வியாதி .. 21 வயதில் பாட்டியின் தோற்றத்தையும் கொடுத்து 40 வயதில் ஆயுளையும் முடித்தே விடும் அந்த வியாதியினால் பாதிக்கப்பட்ட கதாநாயகியின் நெகிழ்வான நிலை குறித்த சிறுகதை ..



சரி அதை ஏன் இப்போது சொல்ல வேண்டும் என்றுதானே கேட்கிறீர்கள் ... இன்று விகடனில் பாரி ரோம்பெர்க் சிண்ட்ரோம் (Parry Romberg syndrome) என்ற அரிதான வகை நோய் பற்றியும், அரசு மருத்துவமனையில் செலவின்றி அந்தப் பெண்ணின் பிரச்சனைக்குத் தீர்வு கண்டிருக்கிறார்கள் என்பதைப் படித்தவுடன் என்னுடைய இந்த கதை நினைவிற்கு வந்தது ..

"மருத்துவம் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் கட்டாயம் நல்லதொரு தீர்வும், அவளுடைய நிறைந்த ஆயுளுக்கு உத்திரவாதமும் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உறுதியுடன் காத்திருக்கிறான் இந்த உண்மைக் காதலன்" என்று என் கதையை முடித்திருப்பேன். அது இன்று நினைவானதில் பெருமகிழ்ச்சி ...



என் கதையை வாசிக்க விரும்பினால் இதோ என் வலைப்பூவில் இங்கு .....



https://coralsri.blogspot.com/2011/11/blog-post_23.html



விகடன் செய்தி இதோ இங்கே ....

https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-government-hospital-doctors-solved-woman-s-rare-disease

 

 

Saturday, January 8, 2022

பாரம்பரிய உடையில் தைப்பொங்கல்!

 

 



 

ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு. பேசும் மொழி, உண்ணும் உணவு, வாழும் முறை போன்றனைத்தையும்விட அணியும் ஆடை அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை என்பது ஒருவரின் முக்கியமான அடையாளம். அவரின் தன்மை, தரம், சார்பு, இயல்பு என அனைத்தையும் எடுத்துக்காட்டுவது. ஒருவருடைய ஆடையே அவருடைய முழுமையான பண்பாட்டை வெளிப்படுத்துகிறது. ஒருவர் அணியும் ஆடையை வைத்தே அவர் வாழும் நாட்டின் தட்பவெப்ப நிலையைக் கணிக்க முடியும் எனும்போது, தமிழ்நாடு போன்று வெப்பமான சூழலில் வாழ்பவர்கள் லெக்கின்ஸ், ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணியும்போது அவை உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும். தமிழ்ப் பெண்கள் சேலை அணிவதும் ஆண்கள் வேட்டி அணிவதும் பன்னெடுங்காலமாகப் பின்பற்றப்படும் இப்பழக்கத்தின் பின்புலம் தமிழர் பண்பாட்டின் ஒரு கூறு.

எனவே தைப்பொங்கல் போன்ற பண்பாட்டு பண்டிகைகளின் போதாவது நாம் வேட்டி சேலை அணிந்து கொண்டாடுவோம். இதுவே நம் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் விதமாக அமையும். நம் பண்பாட்டு கொண்டாட்டங்களில் பட்டாடைகளுக்கு பிரத்யேக இடமுண்டு.

 

காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டும் வைத்து

தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்

அந்தத் திருமகளும் உன்னழகைப் பெறவேண்டும் ….

 

என்று வண்ணமிகு ஒளியில்  மின்னும் மேடையின் பின்புலத்தில் மென்மையாக ஒலித்துக்கொண்டிருக்க அழகிய மங்கையர் வண்ண வண்ணப் பட்டாடை அணிந்து அணிவகுத்து நிற்கின்றனர். பார்ப்பவர்களின் கண்களில் வியப்பும், ஆனந்தமும் மாறி மாறி நாட்டியம் பயின்று கொண்டிருந்தன.

 

அன்று கல்லூரிகளுக்கு இடையிலான பிரம்மாண்ட தமிழர் மரபுத் திருவிழா நிகழ்வு. எப்போதும் லெக்கின்சும், ஜீன்சும், சராரா, சுடிதார் என்று போட்டுக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்த இளஞ்சிட்டுகள் அன்று தமிழர் பாரம்பரிய உடையான பட்டுப்பாவாடை தாவணி, பட்டுச் சேலை, நகை, நட்டு, பூ, பொட்டு என அழகிய பாரம்பரிய உடைகளில் மேடையை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். ஃபிரீ ஹேர் என்று சொல்லிக்கொண்டு தலைமுடியை விரித்துவிட்டுக் கொண்டிருந்தவர்கள் அழகிய பின்னலிட்டு, கண்களில் மையிட்டு, பொன்னகையும் போட்டு காளையரை கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெண்களின் கண்களின் இருந்த பூரிப்பும், கலாச்சாரப் பெருமையும் அவர்களின் தன்னம்பிக்கையை மேலும் ஒரு படி உயர்த்திக்காட்டியதும் உண்மை. நளினமே இல்லாமல் ஆண்களைப்போல் நடை, உடை, பாவனை என்று இருந்த கன்னியரின் அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடன் கூடிய வித்தியாசமான நடை  அனைவரையும் கவர்ந்திழுக்கத்தான் செய்தன. அவரவர்களின் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பான பாரம்பரிய உடைகளை அணியும் பெண்ணின் மதிப்பு எப்போதும் ஒருபடி கூடுதலாக இருக்கும் என்பதே உண்மை. நவநாகரிக மேலைநாட்டு உடைகளை அணியும் பெண்களை காட்சிப்பொருளாக இரசிக்கும் இளைஞர்கள் பாரம்பரிய உடையில் இருக்கும் பெண்ணின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கித் திரிவதையும் காணமுடியும். அதேபோல் இப்படி பாரம்பரிய உடையில் இருக்கும் பெண்ணைத்தான் மகாலட்சுமி போல் கையெடுத்து கும்பிடத்தோன்றும் வகையில் இருக்கிறாள் என்பார்கள். இதெல்லாம் அவரவர் இனம் சார்ந்த இயல்பான உளவியல் கூறுகள்.

 

கலாச்சாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் பெயர்பெற்ற நம் இந்தியாவில் எப்போதும் பட்டுப்புடவைகளுக்கு என்று தனிப்பெருமை உண்டு. உலகளவில் பட்டுப்புடவைகள் தயாரிப்பில் இந்தியா 2வது இடத்தில் இருக்கிறது. பட்டுப்புடவையில் பல்வேறு ரகங்கள் உள்ளன. இன்றைய நவீன உலகிலும் உடைகளிலும் நவீன வளர்ச்சியை எட்டியிருக்கும் இக்காலகட்டத்திலும்கூட பெண்களுக்கு பட்டுப்புடவைகள் மீது அலாதி பிரியம் உண்டு.  மன்னர் காலத்திலேயே அரச பரம்பரையினரின் கௌரவ உடையாக மகுடம் சூடியிருந்தவை வண்ண வண்ண பட்டுப் புடவைகள்.  பல்லவப் பேரரசில் தலைசிறந்த நகரமாக விளங்கியது காஞ்சிபுரம். இந்த நகரமே பாரம்பரியம் மிக்க கோவில்களுக்கும், பட்டுப்புடவைகளுக்கும் பெயர்பெற்றது. தூய்மையான மல்பரி எனும் பட்டு நூலில் இருந்து பட்டுப் புடவைகள் தயாரிக்கப்படுகின்றன. இதுவே  இந்தப் பட்டுப்புடவைகளின் தனிச்சிறப்புமாகும். மன்னர் காலந்தொட்டு இன்றளவிலும் தமிழர் திருமணங்களில் தவிர்க்க முடியாத பாரம்பரியச் சின்னமாக விளங்குவது காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள். இது கோயில் நகரமாகவும் இருப்பதால், இங்கு உள்நாடு, வெளிநாடு என ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவதோடு பட்டுப் புடவைகளை நினைவுச் சின்னமாக பெருமையுடன் வாங்கிச் செல்வதையும் காணமுடிகின்றது.

 

பட்டுப்புடவை என்பது எல்லாப் பெண்களுக்கும் பிடித்தமான பாரம்பரிய உடை. பாரம்பரியத்தை விரும்பி மதிக்கும் அனைத்து பெண்களும் பட்டுப்புடவையை கட்டாயம் விரும்புவார்கள். 

பொதுவாக தென்னிந்தியத் திருமணங்கள் பெரிதும் மாறுபட்டவை. திருமண உடை என்றாலே பாரம்பரியமான நெசவுப் புடவைகளான  பட்டின் பல வகைகளை அணிந்து கொள்வதைப் பெருமிதமாக நினைக்கிறார்கள். பெண்களின் திருமணக் கனவுகளில் முதன்மை பெறுவதும் இந்தப் பட்டாடைகளே.  நவீன உடை அணியும் வழக்கம் கொண்டவர்களாக இருந்தாலும் திருமணங்களுக்கு பட்டுச்சேலைகள் அணிந்து செல்வதையே  பெருமையாக நினைத்தாலும், உடுத்த வசதியாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் பட்டு சுடிதார் உடன் டிசைனர் பட்டு துப்பட்டாவை அணிந்து கொள்கிறார்கள்.

 

 குடும்ப விழாக்கள் என்றாலே பலருக்கு ம்மை அறியாமலேயே உற்சாகம் தொற்றிக் கொள்வதன் காரணம் பல காலமாக உடுத்தாமல் உறங்கிக் கொண்டிருக்கும் பட்டாடைகளின் நினைவு வந்து எதை உடுத்தலாம் என்ற மிகப் பெரிய ஆர்வமும் எழும். அதுவும் திருமணவிழா என்று வந்துவிட்டால் கல்யாண வீட்டுக்காரர்களைப் போலவே விருந்தினர்களாகச் செல்பவர்களுக்கும் புதிய வடிவில் மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் வகையில் தாமும் அணிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உந்தித்தள்ளுவதும் இயற்கைதான். உலகின் எந்த மூலையில் நடக்கும் இந்தியத் திருமணம் என்றாலும், அல்லது பாரம்பரிய விழாக்காலக் கொண்டாட்டங்கள் என்றாலும் அங்கு இறக்குமதி செய்யப்பட்ட பட்டுச்சேலைகள், சல்வார், பட்டுப் பாவாடை என்று அவரவர் சமூகக் கலாச்சாரத்திற்கு ஏற்றாற்போல் உடைகளை அணிந்து அசத்துகிறார்கள்..

 

தமிழ்நாடு என்றாலும் தமிழர்கள் என்றாலும் முதன் முதலில் அனைவர் நினைவிலும் வருவது அவர்களின் பாரம்பரிய ஆடையான புடவைகள்தான். புடவைகளை தங்களுடைய கலாச்சார அணிகலனாக மாற்றியவர்கள் தமிழர்கள். அதுவும் பட்டுப் புடவையென்பது பெண்களின் மங்கலச் சின்னமாக உயர்ந்து நிற்பது. அந்த வகையில் இன்றும் நம் தமிழ் திருமணங்களில் பட்டுபுடவைகள் தான் முன்னிலை வகிக்கின்றன.

 

பெண்கள் மட்டுமல்லாமல் பெண் தெய்வச் சிலைகளுக்கும் பட்டாடை உடுத்தி அழகு பார்ப்பதில் நம் தமிழர்களுக்கு தனித்திறமையும் உண்டு. தம் செல்லப்பெண் போலவே எண்ணி, அலங்கரித்துக் கொண்டாடும் வழமையும் இருக்கத்தான் செய்கின்றன.

 

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி

சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள்

பெண்ணவளின் கண்ணழகைப் பேசி முடியாது

பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு)

மின்னலைப் போல் மேனி அன்னை சிவகாமி

இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்

பின்னல் சடை போட்டு பிச்சிப்பூச் சூடிடுவாள்

பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் (சின்னஞ்சிறு)

 

பெண்மையின் இலக்கணத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் அற்புதமான பாடல் இது. பெண் என்பவளே சக்தியின் வடிவம் அல்லவா. அறிவைப் போலவே அழகிலும் குறைந்தவளில்லை. குழந்தையாகட்டும், குமரியாகட்டும் அன்றி முதுமையின் வாசலில் நிற்பவராகட்டும்பெண் என்றாலே தனிப்பட்ட ஒரு அழகும், நல்ல கலையுணர்வும்உடன் பிறந்தவைகளாகவே இருக்கின்ற. இதற்கு அவர்கள் தங்கள் உடைகளைத் தேர்வு செய்யும் பொறுமையே சாட்சி.

 

பெரும்பாலான நாடுகளில் பூப்பு நன்னீராட்டு விழா போன்று பெண்களுக்கான தனிப்பட்ட கலாச்சார சடங்குகள் கூட வழமையாக நடந்து வருகின்றன. இதற்கான பாரம்பரிய உடையான பட்டும் அவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றது. சாத்திரங்கள் சொல்லும் சான்றுகள் பல இருப்பினும்பௌதிக மாற்றங்கள் பெண்களுக்கு பெருமளவில் வெளிப்படும் அந்தத் தருணத்தை உற்சாகமாக வரவேற்று கொண்டாடும் நிலையில் நம் பாரம்பரிய ஆடைகள் தனிப்பட்ட பெருமை பெறுகின்றன.

 

நம் தமிழ்நாட்டுக் கிராமங்களில் பெண் பூப்படைந்துசடங்குகள் செய்யும்போது, பெண்ணிற்கு நம் பாரம்பரியப் பட்டாடையை அணியச் செய்து குலவை ஒலியெழுப்பி ஊருக்கெல்லாம் அறிவிப்பார்கள். ப்பானியர்கள் பெண்ணின் பருவ வயதை அறிவிக்கும் முகமாக அவளுடைய பதினைந்தாம் வயதில் கிமோனோ உடை அணிவித்து விழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஆப்பிரிக்க நாட்டிலும் பெண் பூப்படையும் நேரத்தில்  பல வித்தியாசமான சடங்குகளை நடத்துகின்றனர். அமெரிக்காவின் ஹிஸ்பானிக் என்றொரு சமூகத்தில்பெண்களின் பதினைந்தாவது வயதில் அவர்களுக்கு அழகிய உடைகள் அணிவித்து அழகாக மெழுகுவர்த்திகள் ஏற்றி சமயப் பிரார்த்தனையுடன் பெண்கள் பருவத்திற்கு வரும் அந்த நிகழ்ச்சியைக் கொண்டாடுவார்கள். இப்படி அவரவர் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு அவரவர் உடைகள் பெரும் பங்கு வகித்தாலும் அவர்களிடையேயும் நம் பாரம்பரியப் பட்டாடைகளின் தனித்தன்மை பெரிதும் போற்றப்படுகிறது என்பதே உண்மை.

 

கலாச்சாரம் என்பது வாழ்வியல் பழக்கவழக்கங்கள், ஆடை அணிகலன்கள், கலைகள் போன்றவற்றின் மூலம் வெளிப்படும் மக்களின் பிரதிபலிப்பு. நாகரிக வளர்ச்சியும் பிறமொழிக் கலப்புகளும் மேற்கத்திய கலாச்சார ஊடுருவல்களுமே இன்றைய அடிப்படை மாற்றத்திற்குக் காரணம். எந்த ஒரு கலாச்சார முறையும் தனிமனித அனுபவத்துக்குள் வந்தால் மட்டுமே அந்த பாரம்பரியம் எப்போதும் உயிர்ப்போடு இருக்கின்ற ஒரு வாழ்க்கை முறையாக மாறும். பண்பாடு அல்லது கலாச்சாரம்  என்பது பொதுவாக மனித செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புகளைக் குறிக்கின்றது.  உலகுக்கே பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சொல்லிக் கொடுத்த நம் தமிழ் இனம் மது பெருமைகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்திக்கொண்டு வருகின்றன.

 

 பண்பாடு என்பது வாழ்க்கை முறை என்பது சமூகவியல் அறிஞர்களின் கருத்து. அச்சமும், நாணமும் கொண்ட பெண், தான் அணியும் ஆடையின் வாயிலாகவும் அவற்றை வெளிப்படுத்துபவள் தன் உடலின் பெரும்பகுதியையும் போர்த்தக்கூடிய ஆடையாகிய சேலையை அணிகிறாள். இது தமிழர் பண்பாட்டின் ஒரு கூறாகத் திகழ்கிறது. நெற்றியில் அணியும் திலகமும், திருநீறும், தலையில் சூடும் மலரும், கைகளில் அணியும் வளையலும் இவ்வகையான பண்பாட்டுக் குறியீடுகள்.

 

அக உணர்வின் வெளிப்பாடான புறச்செயல்கள், சம்பிரதாயங்கள் என்பவையும் பண்பாட்டின் இரு கூறுகள். ஆடை அணிதல், உணவு முறை, பழக்கவழக்கங்கள், நம்பிக்கை வழிபாடு, ஆகியவற்றில் தமிழர்களுக்கென சில தனித்தன்மைகள் அமைந்துள்ளன. அதில் ஆடவர் வேட்டி அணிவதும், இளம் மங்கையர் தாவணி அணிதல், சேலை அணிதல் ஆகியவை முக்கியமானவை, அதுவும் தமிழர் திருநாள் போன்ற விழாக்கள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை.

 

உணவு, உடை, பழக்க வழக்கங்கள், திருமணம் போன்ற விழாக்களின் நிகழ்முறைகள் அனைத்தும் தமிழர்களின் மரபுப்படி அர்த்தமுள்ளவை. பல்வேறு தட்பவெப்ப நிலைக்கு உட்பட்ட நிலையில் உணவு, உடை போன்றவற்றையும் அதற்கேற் அமைத்துள்ளனர். நாகரிகம் என்னும் பெயரில் உடையமைப்பில்  மாற்றங்கள் ஏற்படுத்துவது நாகரிகச் சிதைவைண்டாக்குவதும் இயல்பு.

 

சிலர், சில நாடுகளில் குடியேறிய நாட்டுப் பண்பாட்டுடன் ஒன்றுபட்டாலும், தங்கள் பண்பாட்டின் தனித் தன்மையையும் காப்பாற்றி வருகின்றனர். உலக நாடுகள் பலவற்றில் குடியேறியுள்ள தமிழர்கள் தங்கள் அடையாளங்களைக் காக்கவும் தங்கள் தனித்தன்மையைப் புலப்படுத்தவும், தங்கள் பண்பாட்டுப் பெருமையை உணர்ந்து பெருமைப்படவும் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் பலவற்றை இன்றளவும் போற்றி வளர்த்தும் வருகின்றனர். அந்த வகையில் இன்றும் பெண்களின் பட்டாடை மோகம் சற்றும் குறைந்தபாடில்லை என்பதே சத்தியம்!

 

தமிழர் மரபின் பண்பாட்டு அடையாளமாக நம் வாழ்க்கை முறையில் ஆழமாக வேரூன்றி இருக்கும் பொங்கல் திருவிழாவில், உழவுத் தொழிலும், அது சார்ந்த ஏனைய மற்ற தொழில்களும் சிறந்து விளங்கும் மகிழ்வை பறைசாற்றும் விதமாக நாம் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதன் அடையாளமே நாம் அணியும் பட்டாடைகள். இதில் திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கான கன்னிப் பொங்கல் ஆண்களுக்கான கன்றுப் பொங்கலும் முக்கியத்துவம் பெறுகின்றன. நம் அகத்தையும் புறத்தையும் புதுப்பித்துக்கொள்ளவும் புத்துணர்ச்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திக்கொள்ளவுமே இப்படியான பண்டிகைகள். இது போன்ற பண்டிகை நாட்களிலேனும், நம் பாரம்பரிய உடைகளான, ஆண்கள் பட்டு வேட்டியும், பெண்கள் பட்டுச் சேலையும் அணிந்து கொண்டாடும் வகையில்  நம் அடுத்த தலைமுறைகளுக்கும் நம் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை எடுத்துச் செல்ல முடிகிறது என்பதே சத்தியம்.