Friday, March 8, 2013

பெண் எனும் சக்தி!



பவள சங்கரி


சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் தோழிகளே! பெண் என்றாலே முதலில் தோன்றுவது, இறைவன் பெண்களுக்கென்றே தனிப்பட்ட முறையில் வழங்கியுள்ள தாய்மை வரம். இதனை அவரவர்கள் தத்தம் சூழலுக்கேற்ப, வயதிற்கேற்ப, மன  ஓட்டத்திற்கேற்ப, ஒரு பெண்ணை தாயாகவோ, சகோதரியாகவோ, தோழியாகவோ, காதலியாகவோ, பணிப்பெண்ணாகவோ, மனைவியாகவோ ஏதோ ஒரு கோணத்தில் நேசிக்கத் தொடங்குகிறார்கள். ஒவ்வொரு பாத்திரத்தையும் அவள் தம் வாழ்நாளில் கடந்து கொண்டுதானிருந்தாலும், தாய்மை என்ற அந்த உணர்வு மட்டும் ஒரு பெண்ணின் அனைத்துச் செயல்களின் அடிநாதமாக ஒரு மெல்லிய இழையாக ஓடிக்கொண்டுதான் இருக்கும். அதன் வழி நடப்போரின் வாழ்க்கை அமைதியாகச் செல்லும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த இயற்கை குணத்தை மீறும்போது அதற்கான சில எதிர் விளைவுகளைச் சந்திக்கவும் நேருகிறது.

மகளிர் தின வாழ்த்துக்கள்!


அன்புத் தோழிகளுக்கு ,

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்! இன்று புதிதாய்ப் பிறந்தது போன்று ஒரு புத்துணர்வு. வருடா வருடம் வருகிற ஒரு தினம் என்றாலும், ஓடுகிற ஓட்டத்தில் மூச்சிறைக்காமல் சற்றே நின்று, நிதானித்து, ஓடிய பாதையை மெல்லத் திரும்பிப் பார்த்து, கடந்து வந்த கரடு, முரடுகள்,  பஞ்சுப் பொதிகள், மலரணைகள்,  மனித நேயச் சாரல்கள் என அனைத்தையும் அசை போடும் ஒரு இனிய தருணமாக இருக்கிறது. உதறித்தள்ள வேண்டிய உறுத்தல்களை சட்டை செய்யாமல், நல்ல நினைவுகளை அசை போட்டு மகிழ்வுறும் இனிய தருணமாக அமைத்துக் கொண்டால் அடுத்த படியை எட்டி வைக்க அது உதவி செய்யும் இல்லையா... வாழ்த்துக்கள் தோழிகளே. 

Wednesday, March 6, 2013

பாசச்சுமைகள்







பவள சங்கரி

காலை நேர பரபரப்பு ஏதுமில்லாமல் ஒரு மயான அமைதி..  சரியான இடைவெளியில் டொக்.. டொக்.. என்று செக்யூரிட்டி சிஸ்டத்தின் சத்தம் மட்டும் பலமாக ஒலிப்பது போல இருந்தது.  வீடு முழுவதும் ஊதுவத்தியின் நறுமணம். புகை வரும் திசை நோக்கிச் சென்ற கால்கள் பூஜை அறையில் ஜெகஜோதியாக விளக்குகளும், புத்தம் புது மலர்களின் மென்மணத்துடன் பளபளவென துடைத்து வைக்கப்பட்டிருக்கும் வெள்ளியிலான விக்கிரகங்கள். வரவேற்பறையில் அலங்காரமாக வீற்றிருக்கும் புத்தர் மற்றும், நடராசர் சிலைகளும்கூட குறைவில்லாமல் இருந்தது. சமயலறையில் சமையல் செய்வதற்குத் தோதாக அனைத்தும்  தயார் நிலையில் இருந்தது.

கனகலட்சுமி, மஞ்சள் பூசிய முகத்துடன், கருகருவென்ற தன் நீண்ட கூந்தலை, காதுகளின் இரு புறமும் ஒரு சிறு கற்றை முடியை எடுத்து தண்ணீர் சடை  போட்டு, நுனியில் சின்ன முடிச்சாக இட்டு, அதன்மீது சிறு மல்லிகைச் சரமும் சூடிக்கொண்டு நேரே பூஜையறைக்குள் சென்றவள், அன்றாட வழிபாட்டை முடித்து வந்தாள். இந்த 30 நாட்களாக வீடு நிசப்தமாக இருக்கிறது. மாமியார் இறந்து சடங்குகளெல்லாம் முடிந்து, உறவினர்கள் அனைவரும் திரும்பிச் சென்றாகிவிட்ட நிலையில் வேலையாட்களின் நடமாட்டம் மட்டுமே ஆறுதலளித்தது. ஒரே செல்ல மகளின் திருமணம் பேசி முடியப்போகும் வேளையில் மாமியாரின் மரணமும், அதைவிட கணவனின் திடீரென்ற புத்தி பேதலிப்பும் அவளை ரொம்பவும் வாட்டிவிட்டது. சம்பந்தமில்லாமல் ஏதேதோ உளறிக் கொண்டு, ஒழுங்கான சாப்பாடும், தூக்கமும் இல்லாமல் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டு, அவ்வப்போது அம்மா.. போயிட்டியா... ஏன் இப்படி பண்ணினே.....என்று மட்டும் கூச்சலிட்டுக் கொண்டிருக்கும் கணவனை நினைத்து அதைவிட வேதனையாக இருந்தது. 75 வயதில் தாயை பறி கொடுக்கும்போதும் கூட இந்த அளவிற்கு சோகம் தாக்குமா என்று அனைவருக்கும் ஆச்சரியம்தான்.

Monday, March 4, 2013

வாலிகையும் நுரையும் - கலீல் ஜிப்ரான் (13)




பவள சங்கரி

இரகசியங்கள் பொதிந்துள்ள மனத்தோர் மட்டுமே பொத்தி வைத்த நம் இரசியங்களையும் புனிதமாக்க இயலும்.

எவரொருவர் உமது துக்கங்களையன்றி, சுகங்களை மட்டுமே பகிருகிறாரோ அவர் சுவர்கத்தின் ஏழு வாயில்களின் ஒன்றின் திறவுகோலை இழந்தவராகிறார்..

ஆமாம் நிர்வாணம் என்ற ஒன்றுள்ளது.; உமது ஆடுகளை பசிய மேய்ச்சலில் ஓட்டிச்செல்லும் போதிலும், உம் குழந்தைகளை உறங்கச் செய்யும் தாலாட்டிலும், மற்றும் உமது கவிதையின் இறுதி வரிகளை அலங்கரிப்பதிலுமே இருக்கிறதந்த நிர்வாணம்..

நாம் அதை அனுபவிக்கும் வெகு காலத்திற்கு முன்பே நமது சுக துக்கங்களைத் தெரிவு செய்து விடுகிறோம் நாம்.

சோகம் என்பது இரு தோட்டங்களுக்கும் இடையிலானதோர் சுவர்.

உம்முடைய சுகமோ அல்லது துக்கமோ உயர்ந்து நிற்கும்போது அப்பெரும் புவனமே தாழ்ந்து போகிறது.

பெட்பு என்பது வாழ்வின் பாதி; அலட்சியம் என்பது இறவின் பாதி.

இன்றைய நம் சோகத்தின் மிகக் கைப்பானதொன்று என்றால் அது நம் நேற்றைய இன்பமே.

அவர்கள் எம்மிடம், “இப்புவியின் இன்பங்கள் மற்றும் அந்த மறு உலகின் அமைதிக்கும் இடையிலானதை தெரிவு செய்தாக வேண்டும் நீவிர்என்றனர்.
மேலும் அவர்களிடம், “ இப்புவியின் இன்பங்கள் மற்றும் மேலுலகின் அமைதி என இரண்டையும் தெரிவு செய்தேன். காரணம் எம் மனதிலந்த மாபெருங்கவி யாத்த அக்கவியோ  தேடுதலோடு இசைக்கவும் செய்கிறதுஎன்றேன், யான்..

நம்பிக்கை என்பது சிந்தனைச் சாத்தினால் என்றுமே நெருங்க முடியாத  மனதினூடேயானதோர் பாலைவனச்சோலை

உமது உயரத்தை அடையும் தருணம் மேலும் நீவிர் அந்த இச்சைக்காக விருப்பம் கொள்வீர்; மற்றும் உணவு வேட்கைக்காகவே பசி கொள்வீர் நீவிர்; மற்றும் மேலும் பெரும் நீர்வேட்கைக்காக தாகம்  கொள்ளக்கூடும் நீவிர்.

அந்த வளியிடம் உம் இரகசியங்களைப் பகிரும்போது அதனை அது மரங்களிடம் பகிருதலால் அவ்வளியை  குறை சொல்லலாகாது, நீவிர்.

அந்த வசந்தகால மலர்களனைத்தும் அத்தேவதைகளின் காலை உணவு மேசையினுடன் சம்பந்தப்பட்ட கூதாளியின் சுவனங்கள்தாம்.