Saturday, October 22, 2011

மரப்பாவை

பவள சங்கரி

காலையிலிருந்து என்ன ஆயிற்று இன்று மரகதவல்லிக்கு ? நிற்காத விக்கல். தண்ணீர் குடித்தும் அடங்காத தொடர் விக்கல். யாராவது விடாமல் நினைத்துக் கொண்டிருந்தால் அப்படி நிற்காமல் விக்கல் வருமாமே? யார் நினைப்பார்கள் இந்த நேரத்தில். மகள் அலுவலகத்தில் முழு முனைப்பாக பணியில் இருப்பாள், அதனால் நினைக்கும் வாய்ப்பு குறைவு. கணவர் சொல்லவே வேண்டாம், டென்சன் பார்ட்டி. அலுவலகம் சென்றால் அதிலேயே மூழ்கிவிடும் ஒழுக்கமான பணிக்காரர். தோழி ரமாவாக இருக்குமோ…… இல்லை அவள் மகன் வீட்டிற்கு அமெரிக்கா சென்றிருக்கிறாள். இப்போது ஆனந்தமாக உறங்கும் நேரம்! அருமை அம்மாவிடமும் மணிக்கணக்காக ஊர் நியாயம் அனைத்தும் பேசி முடித்து விட்டதால் அதற்கும் வாய்ப்பு இல்லை… வாடிக்கையாக வருகிற கீரைக்காரம்மாவாக இருக்குமோ, நேரமாகிவிட்டதென்று சென்று விட்டு வீட்டில் சென்று நாளை வந்தால் பேச்சு வாங்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டிருக்கிறதோ?

விக்கலினூடே, விருந்தும், விருப்பமான தொலைக்காட்சித் தொடரும் என பொழுது கழிந்து கொண்டிருந்தாலும், இன்னவென்று சொல்ல முடியாத ஒரு உறுத்தல் உள்ளத்தில்….. திடீரென ஏதோ ஒரு வித்தியாசமான மணம் தன்னைச் சூழ்ந்துள்ளது போன்ற உணர்வு. ரோசா மலரில் பன்னீர் தெளித்தது போன்று ஒரு வித்தியாசமான மணம். ரோசாவிற்கேயுரிய அந்த இதமான நறுமணமாக இல்லாமல் நாசியை உறுத்துகிற ஒரு வித்தியாசமான மணம்.

தொலைக்காட்சித் தொடரில் நாயகியின் பால்யகால நினைவலைகளைக் காட்டும் நிகழ்வுகளில் திடீரென ஏனோ பொறிதட்டியது போல ஒரு மின்னல் வந்து மறைந்தது. பள்ளி இறுதி வகுப்பு படித்துக் கொண்டிருந்த பருவம். பட்டாம்பூச்சியாய் சிறகடித்துப் பறந்த காலம். தில்லியில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். கோடை விடுமுறையில் கிராமத்து அத்தை வீட்டிற்குச் செல்லும் வழமை பல ஆண்டுகளாக இருந்தது. சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து உத்திரமேரூர் செல்வது வழக்கம்.

இயந்திரத்தனமான நகர வாழ்க்கையை விட்டு சுகமான சுவாசத்திற்கு இதமான தென்றலும், பசுமையான வயலும், ஏரிக்கரையின் குளிர்ந்த காற்றும், சுவர்க்க பூமியாக இருக்கும் அனைவருக்கும். கபடம் இல்லாத நல்ல மனிதர்களின் அன்பும், பண்பும் மேலும் இன்பம் சேர்க்கும் இனிய பொழுதுகள் அவை. இன்று நினைத்தாலும் உள்ளம் பரவசம் ஆகும். இன்றைய குழந்தைகள் பாவம் இழப்பது எத்தனை எத்தனை இன்பங்கள் என்று எண்ணி ஏக்கமாகவும் இருக்கும். அத்தையின் பாரம்பரிய திண்ணை வீட்டில், ஒவ்வொரு நேரமும் ஒரு விடுதி நடத்துவது போல உணவு பரிமாற வேண்டும், நாங்கள் அனைவரும் ஒருசேரச் செல்லும் அந்த கோடை விடுமுறைக்காலங்களில். பெரும்பாலும் இரவு நேரங்களில் அன்றாடம் பின் முற்றத்துப் பரந்த வாசலில்

அனைவரையும் ஒன்றாக உட்கார வைத்து நிலாச்சோறு போடுவார்கள் நெஞ்சை விட்டு என்றென்றும் அகலாத இன்பச் சுவை அது! ஒரு பெரிய அகன்ற பாத்திரத்தில் சாதம் போட்டு அதில் சாம்பார் விட்டு, மணக்க, மணக்க புத்தம் புதிதாக காய்ச்சிய நெய்யும் விட்டு, தோட்டத்தில் புதிதாக பறித்துக் கொண்டு வந்த பிஞ்சுக் கத்ததிக்காய் வதக்கலோ அல்லது மொட்டுக் காளான் மசாலோ ஏதோ ஒன்று இருக்கும்! அத்தை கையில் உண்ட அந்த அமிர்தத்திற்கு இணையாக இன்று எந்த நட்சத்திர விடுதியோ, தட்டி விலாசோ எதுவும் நிற்க முடியாது. பெரிய உருண்டைகளாக உருட்டி,கைகளில் போடுவார். உடன் செவிக்குணவாக புராணக் கதைகளும் இருக்கும். அத்தை கம்பராமாயணம் சொல்வதில் வல்லவர்.

‘அண்ணலும் நோக்கினாள்……… அவளும் நோக்கினாள்’ என்று அழகாக ஏற்ற, இறக்கத்துடன் அத்தை கதை சொல்வதைக் கேட்கும் போது இன்னும் இரண்டு கவளம் அன்னம் சேர்ந்து உள்ளே போகும். பகல் பொழுதுகளில் தோட்டத்தில் சென்று புளிய மரத்தின் இடையே, ஊஞ்சல் கட்டி சலிக்க,சலிக்க ஆடுவது, வரப்பு நீரில் ஆன மட்டும் குதிப்பது, தோட்டத்தைத் சுற்றி கண்ணாமூச்சி ஆட்டம் என்று இப்படி எத்தனையோ பொழுது போக்குகள். அதிலும் அத்தனைப் பேரிலும் மரகதவல்லிக்கு மட்டும் தனி செல்லம் எல்லோரிடமும். அது அவளுடைய நகர வாழ்க்கை கொடுத்த நுனி நாக்கு ஆங்கிலமும், பகட்டாக, நாகரீகமாக உடை உடுத்தும் பாங்கோ அன்றி, அவளுடைய கலகலப்பாகப் பழகும் தன்மையோ, ஒடிசலான, எலுமிச்சை நிற தேகமோ, எதுவோ ஒன்று அனைவரையும் எளிதில் அவள்பால் கவர்ந்து விடுவதும் நிதர்சனம்.

தெருவில் இறங்கி நடந்தாளானால் அத்துனை கண்களும் அவள் மீதுதான் இருக்கும். தனக்கும் மரகதவல்லி தெரிந்தவள்தான் என்று காண்பித்துக் கொள்வதில் அத்துனை பேருக்கும் அவ்வளவு பெருமையாக இருக்கும்.தெருவில் பார்க்கும் அத்தனை பேருடனும் புன்னகையுடனும், நட்புடனும் பழகுவதில் அவளுக்கு நிகர் அவள் மட்டுமாகத்தான் இருக்க முடியும். எல்லோரையும் சொந்தமாக நினைக்கும் குணம். அத்தை மகன், வண்ணநிலவனுக்கும் மரகதவல்லி மீது ஒரு கண் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். வார்த்தைக்கு வார்த்தை ‘சிட்டு’ என்று செல்லமாக கூப்பிட்டுக் கொண்டேயிருப்பான். தெருவில் விடலைகள் பார்வை பட்டால் கூட கொதித்தெழும் நாயக பாவம் அதிகம் காட்டுபவன், எல்லோரிடமும் ஆண்,பெண் என்ற பாகுபாடில்லாமல் சகஜமாகப்பழகும் மரகதவல்லியை உரிமையுடன் கோபித்துக் கொள்ளவும் தயங்க மாட்டான்.

பெரியப்பாவின் மகள் பூவிழிக்கு மாமன் மீது ஒரு கண் என்பது எல்லோருக்கும் தெரியும். தின்பண்டங்களின் தனக்கான பங்கின் ஒரு பகுதியையும் தாராளமாகத் தன் மாமனுக்குக் கொடுத்து விடுவாள். மாமனின் ஒரு பார்வைக்காகத் தவம் இருப்பவள். இதையெல்லாம் மற்ற வாண்டுகளும் ஓரளவிற்கு புரிந்து கொண்டாலும் கண்டும் காணாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் மரகதவல்லி மட்டும் அடிக்கடி அவர்கள் இருவரையும் சீண்டிக் கொண்டே இருப்பாள். ஆனால் வண்ணநிலவனோ எதையும் மனம்விட்டு சட்டென்று பேசும் வழக்கமற்றவன். அதனாலேயே பல நேரங்களில் தந்தையிடம் வசவு வாங்கிக் கட்டிக் கொள்வான்.

காலங்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன. பள்ளி முடித்து கல்லூரி வந்தவுடன் அனைத்தும் மாறிவிட ஆரம்பித்திருந்தன. அரசல் புரசலாக வீட்டில் ஏதோ அடிக்கடி அம்மாவிற்கும் அப்பாவிற்கும் தன்னைப்பற்றி வாக்குவாதங்கள் நடந்து கொண்டிருந்தது மட்டும் உணர முடிந்தாலும் அதில் அதிகமாக தலையிட்டு அறிந்து கொள்ளும் ஆர்வமெல்லாம் இருந்ததில்லை அவளுக்கு. தன் கல்வியில் முழு கவனம் செலுத்த வேண்டுமென்பது மட்டும் தந்தையின் கட்டாய ஆர்வமாக இருந்தது. அவளுக்கும் கல்லூரி வாழ்க்கை என்ற மாய உலகினுள் நுழைந்தவுடன், பழைய நினைவுகள் மாறி புதிய நண்பர்கள், புதிய வழக்கங்கள் என்று நிறைய மாறியிருந்தன. பூவிழியை வண்ணநிலவன் திருமணம் செய்து கொள்ளும் நாள் மட்டும் விரைவில் வரும் என்று எதிர்பார்த்தவள் , ஓரிரு ஆண்டுகளில் பூவிழிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம்செய்த காரணமும் புரியவில்லை. அதை நேரிடையாக எவரிடமும் கேட்கும் தைரியமும் வரவில்லை அவளுக்கு!

ஆனால் அந்தத் திருமணத்தில் அவ்வளவாக நிறைவிருந்ததாகத் தெரியவில்லை பூவிழிக்கு. கடனே என்று எந்த மகிழ்ச்சியுமின்றி இயந்திரமாக இயங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. ஏனோ தன்னிடமும் அவள் சரியாக முகம் கொடுத்துப் பேசாததும் ஆச்சரியமாகவே இருந்தது. அதற்குப் பிறகு குடும்பத்தில் நடந்த பல நல்ல காரியங்களுக்குத் தன்னால் கலந்து கொள்ள இயலாமல் போனது மரகதவல்லியின் குடும்ப உறவுகளின் நெருக்கத்தில் சிறு தொய்வும் ஏற்பட்டுப் போனது. படிப்பு முடிந்து, தந்தை காட்டிய மணமகனுக்குக் கழுத்தை நீட்டியது, திரும்பவும் அதே தில்லியில் பெற்றோரின் அருகண்மையிலேயே குடித்தனம் அமைந்தது அனைத்துமே தானாக நடந்து கொண்டிருந்தது. ஒரு பெண் குழந்தை பெற்று, அதனைக் கண்ணுங்கருத்துமாக வளர்ப்பது , மாமனார், மாமியார், மற்ற குடும்ப உறவுகள் என்று வாழ்க்கையின் பலவிதமான பொறுப்புகளின் அழுத்தம் தன் தாய் வீட்டுச் சொந்தங்களின் நினைவுகளை மழுங்கடித்ததும் நிசம். அத்தை குடும்பமும் தங்களிடமிருந்து சற்று விலகியிருப்பதாகவேப்பட்டது அவளுக்கு. தன்னைக் கண்டவுடன் அள்ளி அணைத்துக் கொள்ளும் அத்தை ஒரேயடியாக விலகியது சற்று மன வருத்தமாக இருந்தாலும் காரணம் புரியாமலும்,தன் குடும்ப பொறுப்புகளின் அழுத்தத்தினாலும் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் மறக்க வேண்டிய சூழலுக்கும் வந்துவிட்டாள்.

ஆனால் இதெல்லாம் இன்று ஏன் தேவையில்லாமல் நினைவிற்கு வருகிறது என்று மட்டும் அவளுக்குப் புரியவே இல்லை. எந்த வேலை செய்தாலும் மனம் எதிலோ கட்டுண்டது போன்று ஒரு இறுக்கத்துடனே இருந்தது…… அத்தோடு வித்தியாசமான அந்த மணம் வேறு மிகவும் சங்கடப்படுத்தியது அவளை. எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக இரவில் நிம்மதியான உறக்கமும் இல்லாமல், ஏதோ அரை மயக்க நிலையில் இருக்கும் வேளையில் யாரோ தட்டி எழுப்பியது போல விலுக்கென்று விழிக்கவும், விருட்டென்று யாரோ நான் போகிறேன் என்று சொல்லிக் கொண்டே மின்னலாக மறைவதும் தெரிய……. அதிர்ச்சியில் வியர்த்துக் கொட்ட….. தொலைபேசி அழைப்பு மணி சிணுங்க, படபடவென இதயம் துடிக்க, மெல்ல எழுந்து மின் விளக்கை ஏற்றியவள், தொலை பேசியை எடுத்து ஹலோ என்பதற்குள் இதயம் பலவாறு படபடத்ததை தாங்க இயலவில்லைதான்! தொலைபேசியில் வந்த செய்தியோ மேலும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. ஆம் வண்ணநிலவனுக்கு மாரடைப்பாம், இரண்டு நாட்களாக கோமாவில் இருந்தவன், இன்று அதிகாலை இறந்து விட்டானாம்………

பொழுது விடியக் காத்திருந்தவள் கணவனுடன் கிளம்பி தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தது கூட தெரியாமல் ஏதோ விளங்காத மன நிலையுடனேயே வந்து கொண்டிருந்தாள். டாக்சியில் ஏறி உத்திரமேரூர் வந்து சேர்ந்த போது, பழைய நினைவுகள் மெல்ல வர ஆரம்பித்தாலும், அங்கு வந்தபோது தான் தெரிந்தது இரண்டு நாட்களாகத் தன்னுடனேயே இருந்த அந்த மணத்தின் நெடி வந்த வழியும் புரிந்தது.. ஆம் அதே நெடி, பன்னீர், ஊதுவத்தி, ரோசா அனைத்தும் இணைந்த ஒரு விதமான நெடி! தலை சுற்ற ஆரம்பித்தது அவளுக்கு. உள்ளே நுழைந்தவுடன் அத்தை , பாவி வந்துவிட்டாயா என்று தலையில் அடித்துக் கொண்டு ‘ஓ’வென்று கதறியது மேலும் சங்கடப்படுத்த, மரகதவல்லியின் அம்மாவும், அவளை இங்கு இவள் ஏன் வந்தாள் என்பது போல் பார்க்க, மேலும் குழப்பம் அதிகமானது.

சடங்குகள் , சம்பிரதாயங்கள் என்று நிறைய இருந்தாலும், திருமணமே ஆகாத ஒரு பிரம்மச்சாரிக்கு சடங்குகள் அதிகம் செய்வதில்லை. குழப்பம் மட்டும் தீராவிட்டாலும், என்னவோ தெளிவாக ஆரம்பித்தது. அம்மா வேறு அத்தையை நெருங்கக் கூட முடியாமல் ஒதுங்கியே இருந்ததும் புரிந்தது. இவையனைத்திற்கும் விடை சில நிமிடங்களில் வண்ணநிலவனின் உயிரற்ற உடலைக் குளிப்பாட்டி மேல் சட்டையை எடுத்து சந்தனம் பூச முயற்சித்த போது விளங்கிவிட்டது. ஆம், திரும்பி அந்தப் பக்கம் செல்லலாம் என்று நகரப்போனவளின் கண்களில் ‘சிட்டு’ என்று இதயத்தின் வெகு அருகில் பச்சைக் குத்தி வைத்திருப்பது பளிச்சென்று பட, நொடிப்பொழுதில் நடந்ததனைத்தும் விளங்கிப்போக, காலம் கடந்த ஞானம் பயனற்றுப் போக…….

தீடீரென மாமா’, என்று ஓவென அலறியதன் காரணம் புரியாமல் வந்திருந்த உறவினர்கள் விழிக்க, மரகதவல்லி பார்த்த ஒரு பார்வையில், கூனிக்குறுகிப்போய் தலையைக் குனிந்து கொண்டாள் மரகதவல்லியின் தாய். அத்தையின் மடியில் தலை வைத்து கவிழ்ந்து முட்டிக் கொள்ள மட்டுமே முடிந்தது அவளால். ’மகனைத் தின்னாச்சு…… தண்ணியைக் குடிச்சு முழுங்கு’, என்று யாரோ அத்தைக்குத் தண்ணீரைக் கொடுத்து குடிக்கச் சொன்னது காதில் விழ, மேலே விழுந்த தண்ணீர்த் துளி நிகழ்கால நினைவைத் திருப்பித்தர, மெல்ல எழுந்தாள்……

வண்ணநிலவனின் இறுதி யாத்திரை உறவுகளின் ஓலங்களினூடே அமைதியாகக் கிளம்பி விட்டது. மரத்துப்போன உணர்வுகளின் நீட்சியாய் துவண்டு போய் கணகள் பார்வையை மறைக்க செய்வதறியாது சுயநினைவின்றி கலங்கி நின்றிருந்தாள். பெண்ணுக்கென்று தனிப்பட்ட உணர்வோ, விருப்பமோ எதையுமே அனுமதிக்காத கட்டுப்பாட்டுக் கலாச்சாரத்தில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறாள். சமுதாய வரம்புகள் என்ற பெயரில் ,சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் பல பெண்களின் நியாயமான உணர்வுகளும் கூட சூறையாடப்படுவதும் இயல்பாகத்தானே நடந்து கொண்டிருக்கிறது இந்த சமுதாயத்தில்!

அந்த மட்டும் அவனுடைய ஆத்மா அமைதியான உலகில் , இனிமையாகப் பயணிக்கட்டும் என்று மனதார வேண்டிக் கொண்டாள் மரகதவல்லி தன் விருப்பக் கடவுளிடம்.

இதைப்பற்றிய எந்தச் சிந்தையுமே இல்லாத மரகதவல்லியின் கணவனோ, உடனடியாக ஊருக்குக் கிளம்ப வேண்டும் என்று சாடையில் பேசிக் கொண்டிருந்தான். உடனே திரும்பிப் போகவும் பயணச் சீட்டுடன் வந்ததால், விமானத்திற்கு நேரமாகி விட்டதை உணர்ந்தவள் மனக்குமுறலை வெளியே காட்டக்கூட திராணியற்றவளாக மனதில் அடக்கி வைத்துக் கொண்டு மரக்கட்டையாக புன்னகை முகமூடியையும் தரித்துக் கொண்டு கிளம்பத்தயாரானாள்!

படத்திற்கு நன்றி

Tuesday, October 18, 2011

வாழ்க்கை ஓடம்!

அலையினூடே உயர்ந்து தாழ்ந்து வாழ்க்கை ஓடமாய்
உயர்வை நோக்கி உன்னத கீதமாய் ஒலியூட்டி
தாழ்வின் நீட்சியிலும் நித்சலமான நீரோட்டமாய்.......
மால்வண்ணனின் அருள் பனித்துளியாய் பட்டொளி வீச
கார்முகில் களிநடம் புரியும் கனன்ற பொழுதுகளிலும்
பால்வண்ண நிலவொளியின் இலையுதிர் பருவமதில்
புள்ளினக் கூட்டமொன்று புதுமலர் காண மனம்நாடி
கருத்தாய் கதைப்பல பேசி நாடுவிட்டு காடுதேடி
வகையாய் வண்ணம் கண்டு குதூகலம் கொண்டு
இன்பமாய் இனிமையாய் இலக்கியமாய் இதமாய் ..............

வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (24)


பவள சங்கரி
பொதுவாக காதலில் ஏமாற்றப்பட்டவர்களைவிட, ஏமாற்றியவர்களுக்கே, வலியும், வேதனையும் அதிகம். காரணம் நியாமானதாக இருப்பினும், ஏமாற்றம் என்பதின் நிறம் ஒன்றுதானே. அந்த வகையில் நொந்து போன ஒரு ஆத்மாவிற்கு வாழ்வு கொடுப்பது தியாகம் என்றால், நம்பிக்கையும், உயிரும் ஒரு சேர வைத்திருக்கும் ஒரு உன்னதமான இதயத்தை நோகச் செய்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லையே. காலம் கடந்த யோசனையால், நிம்மதி குலைந்து போனதும் தவிர்க்க முடியாமல் மேலும் குழப்பத்தில் ஆழ்ந்தான் ரிஷி. ரம்யாவை சந்திக்காமலே இருந்தால் தேவலாம் போல் இருந்தது அவனுக்கு. குற்ற உணர்ச்சியில் குமைந்து கொண்டிருந்தான் அவன். வந்தனாவின் நினைவு வர மருத்துவமனைக்குக் கிளம்பத் தயாரானான். வந்தனாவின் துவண்ட முகம் நினைவில் ஆட, பரபரவென பழைய எண்ணங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு கிளம்பத் தயாரானான். வந்தனா மருத்துவமனையில் இருப்பதை ரம்யாவிடம் சொல்லி அவளையும் வேதனைப்படச் செய்ய வேண்டாமே என்ற எண்ணத்தில் அவளிடம் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் அதிக நாட்கள் அதை மறைக்கவும் முடியாது என்பதும் தெரிந்துதான் வைத்திருந்தான் ரிஷி.
அவந்திகா துலிப் மலர்களின் அழகில் தன்னையே பறி கொடுத்தாலும், அத்துனை அழகையும் தன் தூரிகையின் நாட்டியம் மூலம் வண்ண ஓவியமாக்கினாள். உள்ளத்தின் உற்சாகத் துள்ளல் அவளுடைய படைப்புகளிலும் பிரதிபலிப்பதும் இயற்கைதானே…. ஏனோ மாறனின் விட்டேத்தியான போக்கு அவளுடைய உற்சாகத்திற்கு அவ்வப்போது ஒரு சிறு தடைக்கல்லை உருட்டிவிட்டுக் கொண்டிருந்தது. அதையும் மீறி தன்னுடைய உற்சாகம், வேலியில்லாத காற்றைப் போன்று கரை புரண்டு உரசிக் கொண்டுதானிருந்தது. மாறனின் மீது செல்லக் கோபமும் அதிகமானது, என்ன ஆணவம் இந்த மனிதருக்கு என்று. துரத்தி,துரத்தி வந்த காலம் போய், இன்று வலிய செல்லும் போது விலகி, விலகி விருப்பமின்மையை வெளிப்படுத்தினாலும், காரணம் மட்டும் புரியவில்லை அவந்திகாவிற்கு. இந்த சமயம் பார்த்து ரம்யா இல்லையே என்று வருத்தமாக இருந்தது. யதார்த்தமாக பேசக்கூடியவளாதலால் அவளிடம் மாறனின் இந்தப் போக்கிற்கான காரணம் கேட்பதில் சிரமம் இருக்காது. எப்படியோ ரம்யா வருவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கிறதே. அதுவரை காத்திருக்க வேண்டுமே என்று மலைப்பாகவும் இருந்தது அவளுக்கு. இந்த இயந்திர வாழ்க்கை ஏனோ திடீரென சுமையாகத் தெரிந்தது.
ரம்யாவிற்கு வந்தனாவை நேரில் சென்று பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஊருக்குச் செல்வதற்கு முன் ஒரு முறை வந்தனாவை அவசியம் சந்திக்க வேண்டுமென நினைத்துக் கொண்டாள். உலகம் எவ்வளவு குறுகிய எல்லைக்குள் இருக்கிறது என்பது பல நேரங்களில் சில ஆச்சரியங்கள் மூலம் நிரூபணம் ஆகும்.
மகாபாரதப் போரின்போது பார்த்தனின் சாரதி வடிவில் அற்புதக் காட்சியளிப்பவர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி ஆலயத்தின் வேங்கடக் கிருட்டிணர். சென்னையில் மிகப்பழமை வாய்ந்ததும், மிக அழகான, புராதன வடிவான சிற்பங்களும், காண்போரின் கண்களையும்,அவர்தம் கருத்தையும் கவரக் கூடியதுமாகும் இந்த 1000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட திருக்கோவில். அரசன் தொண்டைமான் சுமத்திக்கு பார்த்தசாரதியாக காட்சியளிப்பதாக அளித்த வாக்கை நிறைவேற்றும் பொருட்டு, அவருக்கு திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதியாகவே காட்சியளித்த பெருமானை, அகத்திய மாமுனி சிலையாக நிறுவியதாகப் புராணங்கள் சொல்லும். இந்த ஆலயம் இன்னொரு தாய் வீடு எனலாம் அனுவிற்கு! சனிக்கிழமை தோறும் வேங்கடவனை தரிசனம் செய்வதைத் தம்முடைய பல்லாண்டுகால வழக்கமாகக் கொண்டிருப்பவள்.மிக வித்தியாசமான மீசை உள்ள வேங்கடவனை தரிசிப்பதில் அத்துனை இன்பம் அவளுக்கு. அன்று சனிக்கிழமையாதலால் , தரிசனம் பெற வேண்டி மாலை அந்திக்கால பூசையைக் காண வந்திருந்தாள் .
இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் நற்புவி தனக்கு இறைவன்
தன்துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றையோர்க் கெல்லாம்
வன்துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று இயங்கும்
என்துணை எந்தை தந்தை தம்மானை திருவல்லிக் கேணி கண்டேனே
என்ற திருமங்கையழ்வாரின், அழகிய பாசுரத்தை இனிமையாக இசைத்தபடி மெய்மறந்து கண்கள் மூடி நிற்பதில் அத்தனை சுகம் அவளுக்கு!
கோவிலைச் சுற்றியுள்ள தெப்பக் குளத்தில் அல்லி மலர்ந்து கண்களில் தண்ணொளி பரவச் செய்து கொண்டிருப்பதைப் ஆனந்தமாக ரசித்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான், முதுகில் யாரோ செல்லமாகத் தட்டுவது உணர்ந்து மெலிதான சிலிர்ப்புடன் சட்டெனத் திரும்பியவள், அங்கு, அறிந்த இரண்டு முகங்களுடன், அறியாத ஒரு புது முகமும் கண்டு ஆச்சரியமாக கண்கள் அகல பார்த்துக் கொண்டிருந்தாள். ரம்யாவின் அம்மா, அனுவைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தாலும், திரும்பவும் அனுவை முதன் முதலில் சந்தித்த அந்த இக்கட்டானச் சூழலை நினைத்துக் கொண்டவராக, திரும்பவும் அது பற்றி சொல்ல ஆரம்பித்த போது அனுவும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள் பதிலாக.
ஆனால் இவை எதுவும் காதுகளில் விழாதவளாக, இந்த முகத்தை எங்கோ வெகு அருகில் நெருக்கமாகச் சந்தித்திருக்கிறோமே என்ற குழப்பத்தில் மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தாள் ரம்யா…….
‘ ஆகா, கண்டுபிடித்து விட்டேன்…. இந்த முகத்தைக் கணினியில், மாறன் அனுப்பிய மடலில் வெகு அருகில் கண்டிருக்கிறேனே… அட அந்த அனுவா இவள்……என்ன ஆச்சரியம். யாரைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாளோ, கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்தது போன்று, வந்து நிற்கிறாளே! சரி ஏதோ நல்லதும் நடக்கப் போகிறது…’
மனதில் தோன்றிய பிரகாசம் மின்னலாக கண்களிலும் வெளிப்பட்டதோ என்னவோ, அதன் பளபளப்பைக் கண்டு தன் கண்களும் கூச, சட்டென்று பார்வையைத் தாழ்த்தியவள், எதிரில் நிற்பவள் யாராக இருக்கும், இப்படித் தன்னை உற்று நோக்குகிறாளே என்ற எண்ணத்துடன் ஒரு வித குறுகுறுப்புடன், திரும்பவும் தலையைத் தூக்கி ஏறிட்டாள். மௌனம் பல மொழிகள் பேசி விட்டன அந்த நொடிப் பொழுதுகளில்!
ஆம், அனுவிற்கும் ரம்யாவின் பார்வை மூலம் ஏதோ தன்னை நன்கு உணர்ந்தவள் எதிரில் நிற்பதாக உள்ளுணர்வு உணர்த்தினாலும், ‘ யார் இவள், தான் முன் பின், கண்டிராத இந்த நவீன மங்கை…… ஓ இந்த அம்மாவின் மகளாக இருப்பாளோ…. பெயர் கூட என்னவோ சொன்னாரே… அமெரிக்காவில் இருப்பதகாச் சொன்னாரே, அவளாக இருக்குமோ’?
“ ஹலோ, ஐயாம், ரம்யா. யூ ஆர் அனு… ரைட்?” என்று கையை நீட்டினாள்.
அனுவிற்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி இவளுக்குத் தன்னைத் தெரியும். தாய் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே மிகவும் பழகிய பாவனையில் கை கொடுக்கும் இவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தவளுக்கு தன் வாழ்க்கையின் பாதையே இவளால்தான் மாறப் போகிறதுஎன்பது அப்போது தெரிந்திருக்க நியாயமில்லையே.
” ஹலோ, ஆம், நான் அனுதான். நன்றி……. என்னை…… உங்களுக்கு முன்பே தெரியுமா…..?” என்று புருவம் சுருங்க அவள் தாயையும், சகோதரனையும் பார்த்துக் கொண்டே கேட்டாள்.
அதைச் சரியாகப் புரிந்து கொண்ட ரம்யா, “ ஆம், எனக்கு உங்களை நன்றாகத் தெரியுமே…. உங்களை நான் முன்பே பார்த்து விட்டேன். அதாவது அமெரிக்காவில் இருக்கும் போதே… எப்படி என்று கெஸ் பண்ணுங்கள் பார்க்கலாம்” என்றாள் குறும்பாக பார்த்துக் கொண்டு.
அனுவிற்கு சற்று குழப்பமாகத்தான் இருந்தது. ரம்யாவின் அம்மா தன்னை ஏதும் புகைப்படமெல்லாம் எடுக்கவில்லையே. தன் மீது இருக்கும் அபிமானத்தில் ஒரு வேளை தன்னைப் பற்றி அதிகமாகக் கூட பெருமையாகச் சொல்லியிருக்கலாம். ஆனாலும் தன் புகைப்படம் போனது என்றால்……. ஏனோ சட்டென்று மாறனின் நினைவோ, அவனும் அமெரிக்காவில் தானே இருக்கிறான் … என்ற நினைவோ தோன்றவில்லை. அதற்குக் காரணம் மாறன் தன்னிடம் நெருங்கிப் பழகாததாகவும் இருக்கலாம்.
“ ஓகே… ஓகே. நானே சொல்லிவிடுகிறேன். குழப்பம் வேண்டாம். மாறனும், நானும் ஒன்றாக ஒரே அலுவலகத்தில், அடுத்தடுத்த கேபினில் வேலை பார்க்கிறோம்… இப்போது குழப்பம் தீர்ந்ததா?”
“ஓ, அப்படியா, …. “ என்றாள் நம்ப முடியாத ஆச்சரியத்துடன்.
“ ரொம்ப தேங்க்ஸ் அனு. அம்மா உங்களைப் பற்றி அடிக்கடி பேசுவார்கள். நீங்கள் அன்று செய்த உதவி மிகப் பெரியது..” என்றாள் கண்கள் கலங்க, கள்ளமற்று சிரித்துக் கொண்டிருக்கும் தன் தம்பியை பார்த்துக் கொண்டே……..
“அதெல்லாம் ஒன்னுமில்லை. விடுங்க ரம்யா” என்றாள் தர்ம சங்கடத்துடன்.
“ சரி, இந்த கோவிலுக்கு அடிக்கடி வருவீர்களாமே. அம்மா சொன்னார்கள். இன்று நீங்கள் சொன்னதால்தான் கட்டாயப்படுத்தி என்னையும் கூட்டி வந்தார்கள். எனக்கும் சீக்கிரம் திருமணம் ஆக வேண்டுமாம்”… என்றாள் கண்கள் சிமிட்டியபடி.
“ ம்ம்ம்.. இந்தக் கோவில் திருவேங்கடநாதர் மிகுந்த சக்தி உள்ளவர். அவரை வழிபட்டால் திருமண பாக்கியம் மட்டுமல்ல,குடும்பத்தில் அமைதியும் சுபிட்சமும் நிலவும். இங்குள்ள நரசிம்மர் அஞ்ஞானத்தை ஒழித்து ஞான தீபம் ஏற்ற வழி வகுப்பதில் வல்லவர். ஆம். இந்த நரசிம்மர் புத்தியை தெளிய வைத்து நன்கு கல்வி கற்கும் ஆற்றலை வளர்க்கக் கூடியவர். அதனால்தான் தம்பியை இங்கு அழைத்து வரும்படி சொல்லியிருந்தேன்” என்றாள் நாணத்துடன்.
“ தேங்க்ஸ் அனு. நீங்கள் நல்ல சமூக சேவகியாமே… அம்மா சொன்னார்கள்”
“ அப்படியெல்லாம் இல்லை. ஏதோ என்னால் ஆனதை அவ்வப்போது இயலாதவருக்கு உதவுவேன். அம்மாவிற்கு என் மீது அன்பு மிகுதியால் அதிகம் சொல்கிறார்கள், அவ்வளவுதான்”.
“ சரி, அவசியம் வீட்டிற்கு வாருங்கள் அனு. நான் இன்னும் மூன்று வாரங்கள் இங்கு இருப்பேன். அதற்குள் முடிந்த வரை சந்திப்போம். நானும் உங்களுடன் பல விசயங்கள் பேச வேண்டும்” என்றாள் பீடிகையாக.
அனுவிற்கு தன்னிடம் பல விசயம் பேச என்ன இருக்கிறது என்று ஏதோ நெருடியது. ஒரு வேளை மாறன் ஏதும் சொல்லியிருப்பாரோ என்ற சந்தேகமும் எழத்தான் செய்தது அவளுக்கு.
பொழுது போய்க் கொண்டிருந்தது. இரவும் நெருங்கிக் கொண்டிருந்ததால், அனைவரும் கிளம்பத் தயாரானார்கள். அனுவிற்கு வழக்கத்தைவிட அன்று சற்று கூடுதலாகவே நேரம் ஆகிவிட்டதால் அம்மா தேட ஆரம்பித்து விடுவார்களே என்ற நினைவில் மற்ற எண்ணங்களுக்கு விடை கொடுத்து விட்டு கிளம்பத் தயாரானாள். தன் வீட்டு விலாசத்தை தெளிவாகக் கூறி அவளை அவசியம் வருமாறு அழைத்தாள். ரம்யாவும் மறக்காமல், அனுவின் செல்பேசியின் எண்ணையும் வாங்கிக் குறித்துக் கொண்டு தன் எண்ணையும் கொடுத்து விட்டு விரைவில் சந்திப்பதாகக் கூறிவிட்டு கிளம்பினார்கள். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி அனைத்திற்கும் சாட்சியாக, நடக்கப் போவதற்கு காரணகர்த்தாவாக, அமைதியான புன்னகையுடன் அனைவரையும் வழி அனுப்பி வைத்தார்.
தொடரும்.

வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (23)


பவள சங்கரி
துலிப் மலர்களின் குளிர்ச்சியான நினைவுகள் மனம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டதோடு அன்று மாறனின் குரலும் ஏனோ அவளுக்கு உற்சாகமும் கொடுத்தது. வாய் பேச மறந்து மோனத்தில் இருந்தாளோ அப்பேதை!
மாறன் மறுபடியும், “ஹலோ, லைனில் இருக்கிறீர்களா……. என்று கேட்டவுடன் தான் விழிப்பு நிலை ஏற்பட்டவளாக , “ சாரி, அவசியம் வருகிறேன். நானும் பொழுது போகாமல்தான் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். என் தூரிகையும் மலர் சொந்தங்களின் உறவை நாடி காத்துக் கிடக்கிறது. துலிப் மலர்களின் அழகை அள்ளிப்பருக தவம் கிடக்கிறது….”
“ ஓ…. என்ன ஆச்சு அவந்திகா? கவிதையாக வருகிறது வார்த்தைகள் இன்று”.
“ ம்ம்ம்… அப்படியா. எனக்கொன்றும் அப்படி தெரியவில்லையே? உங்களுக்கு அப்படி தோன்றினால் எனக்கு அதில் மகிழ்ச்சியே”
“ சரி… சரி. என்னவோ உங்களிடம் மாற்றம் தெரிகிறது. பார்ப்போம், ஒரு நாள்வெளியே வந்துதானே ஆக வேண்டும்”
“ அதெல்லாம் ஒன்றுமில்லை மாறன். நான் சீக்கிரம் கிளம்பி தயாராகிறேன். எதேனும் ஒரு சிற்றுண்டியும் தயார் செய்கிறேன்.”
“ அதெல்லாம், வேண்டாம். வீணாக ஏன் சிரமப்படுகிறீர்கள். வெளியில் பார்த்துக் கொள்ளலாம். தீபிகாவும் ஏதோ செய்யப்போகிறேன் என்றாள்”
“ சரி, நான் தீபிகாவிடம் கேட்டுக் கொண்டு, அதற்கு தகுந்தாற்போல் ஏதும் சைட் டிஷ் மட்டுமாவது செய்கிறேன். நேற்றே சொல்லியிருந்தால் நல்ல உணவு வகைகள் ஏதும் செய்திருக்கலாமே மாறன்?”
“ இல்லை நேற்று இரவு வெகு நேரம் அரட்டைக்குப் பிறகுதான் இன்று துலிப் கண்காட்சிக்குப் போகலாம் என்று முடிவு செய்தோம். அந்த இரவு வேளையில் உங்கள் தூக்கத்தையும் கெடுக்க வேண்டாமே என்று தான் கூப்பிடவில்லை. தீபிகாவிற்கும் காலையிலதான் சொன்னேன். அவளும் திட்டிக் கொண்டே இப்பதான் ஏதோ செய்து கொண்டிருக்கிறாள். பரவாயில்லை , முடிந்தால் செய்யுங்கள் . “
“ சரி நான் பார்த்துக் கொள்கிறேன். நேரில் சந்திப்போம். பை”
அவந்திகா உடனே பரபரப்பாக, தீபிகாவிற்கு போன் செய்து அவள் சப்பாத்தியும், கிரேவியும் செய்வதை தெரிந்து கொண்டு, தயிர் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் செய்வதாகக் கூறிவிட்டு, வேகமாக வேலையும் துவங்கி விட்டாள். சமையல் முடித்து, குளிக்கச் செல்ல நினைத்தவளுக்கு ஒரே குழப்பம். எந்த உடை உடுத்துவது என்று. ஒரு முறை மேக வண்ண நிறம் தனக்குப் பிடிக்கும் என்று மாறன் சொன்னது நினைவிற்கு வர, சமீபத்தில் வாங்கி வைத்திருந்த ஒரு அழகான டிசைனர் புடவையை உடுத்திக் கொண்டாள். வெகு நாட்களுக்குப் பிறகு இன்று புடவை உடுத்தும் ஆசை வந்தது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.
துலிப் என்பதன் பொதுவான விளக்கம் ‘ சரியான காதல்’, என்பதாகும். மற்ற மலர்களைப் போன்றே துலிப் மலர்களிலும்,ஒவ்வொரு வண்ண மலருக்கும் ஒரு தனித்தன்மையும், முக்கியத்துவமும் உள்ளது. காட்டாக, செந்நிற துலிப் , உறுதியான, உண்மையான காதலின் அடையாளமாம். ஊதா வண்ணம், ராஜ வம்சத்து உயர் காதலையும், மஞ்சள் வண்ணம், ஒரு காலத்தில் நம்பிக்கையற்றதாக கருதப்பட்டது, இன்று மகிழ்ச்சி எண்ணங்களையும், சூரிய ஒளியையும் வெளிப்படுத்தும் ஒன்றாகவும், வெண்ணிற துலிப்கள் ஊடலின் சமரச முயற்சியின் அடையாளமாகவும் , இப்படி பலவித குணநலன்களையும் கொண்ட இத்துலிப் மலர்கள் பொதுவாக அழகிய கண்களுக்கு உவமானப்படுத்தப்படுவதும் உண்டு.
இந்த துலிப் மலர்களின் அத்துனை அழகையும், அதனதன் தன்மைகளுடன் அழகிய ஓவியமாக்க கைகள் பரபரக்க காலம் பார்த்துக் காத்திருந்தாள் அவந்திகா …….. காலம் நல்ல பதிலும் சொல்லும் என்ற நம்பிக்கையும் இருந்தது. தன் பெற்றோரிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் கூட துளிர்விட ஆரம்பித்திருந்தது. ஆனால் இவையனைத்தும் அன்று மாலை துலிப் விழா முடிந்து இல்லம் திரும்பும் நேரம் நம்பிக்கையும் குறைய ஆரம்பித்தது அவனுடைய கண்டும் , காணாத தன்மையினால்………….. மெல்லிய ஒரு சோகம் படர ஆரம்பித்த போதும், ஏனோ அதுகூட சுகமானதொரு அனுபவமாக இருந்தது அவளுக்கு!

விரலில் அளவிற்கு அதிகமாக வளர்ந்திருக்கும் நகத்தை வெட்டினால் கூட ஏதோ நம் உடமையை இழப்பது போன்ற ஒரு உணர்வு இல்லாமல் இருப்பதில்லை. வெட்டினாலும் விரைவில் முளைக்கக் கூடிய விரல் நகத்தையே இழப்பதில் வேதனைப்படும் இந்த மனித மனம், தன் உடலில் ஒரு முக்கிய பாகத்தை, அதுவும் பெண் என்ற முக்கியமான அடையாளத்தைக் கொடுக்கும் ஒரு அங்கத்தை இழக்க வேண்டியச் சூழலில் அப்பெண் படும் வேதனை அளப்பரியது. அது இளம் வயதோ அன்றி முதுமையின் முகட்டில் இருப்பவரோ எவராயினும் சரி, இதே நிலைதான் என்பதே நிதர்சனம். அதுவும் நோயின் கொடுமையும், சேர்ந்து மனதையும் உடலையும் ஒருசேர ரணப்படுத்தும் வேளையில், எந்த வார்த்தைகளும் ஆறுதலளிக்கப்போவதில்லையாயினும், தனக்கு ஆதரவாக தன் குடும்பத்தினர் அருகில் இருக்கும் போது அந்த ரணத்தின் பாரம் சற்றே குறையக்கூடியதும் நிதர்சனமே!
அன்னபூரணி அம்மாளின் சேவை அந்த வகையில் வணக்கத்திற்குரிய ஒன்று என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு நோயாளியும் அவரை தாயாகவும், சகோதரியாகவும், மகளாகவும் காணக்கூடிய ஒப்புயர்வற்ற அந்நிலையே அதற்கு எடுத்துக்காட்டு எனலாம். அத்தனை பரிவும், பாசமும் ஒரு மூன்றாம் மனிதரிடம் காட்டுவது என்பது சாமான்ய காரியமல்லவே. ஆனால் அவையனைத்தும் அன்னபூரணி அம்மாளுக்கு கைவந்த கலையாம்! தன்னலமற்ற அந்த சேவைக்கு நிகர் அது மட்டுமாகவே இருக்கக்கூடும். ஆம் அந்த பரிவும், பாசமும் அந்த நோயின் தன்மையை குறைக்க இயலாவிட்டாலும் மன வேதனைக்கு மருந்தாகவும் இருப்பதும் உண்மை.
ரிஷிக்கு இவையனத்தும் ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. வாழ்க்கையில் இது போன்று ஒரு நிலை வரும் என கனவிலும் நினைத்தவனில்லை . அன்று கதிரியக்க சிகிச்சை முடிந்து வாடிய மலராக துவண்டு கிடந்த தன் அன்பிற்கினிய மனைவியைக் காணச் சகியாமல் வெளி வாசலில் வந்து அமர்ந்திருந்தவனின் கண்களில் பட்ட இந்த காட்சிகள் தன் மனதிற்கும் ஆறுதலாக இருந்ததை உணர்ந்து, அவருக்கு மனதிற்குள்ளேயே நன்றியும் தெரிவித்துக் கொண்டிருந்ததை உணர்ந்த அன்னபூரணியம்மாளும், ரிஷியின் அருகில் வந்தமர்ந்து, பொறுமையாக பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். அவருடைய கனிவான பேச்சும், பார்வையும் தம் மன பாரத்தை கனிசமாக குறைத்திருப்பதையும் உணர முடிந்தது. மனைவி களைப்பாக உறங்கிக் கொண்டிருப்பதால், விழிக்க எப்படியும் சில மணி நேரங்கள் ஆகும் என்பதால் வீட்டிற்கு சென்று குளித்து, உணவருந்தி வரலாம் என்று கிளம்பினான்.
வீட்டில் நுழையவும், தொலைபேசி அழைப்பு முனகவும் சரியாக இருந்தது. யாராக இருக்கும் இந்த வேளையில் என்று நினைத்துக் கொண்டே மெதுவாகச் சென்று ஒலிவாங்கியை எடுத்தவன், ‘ஹலோ’ என்ற அந்த இனிய குரலைக் கேட்டுத் தன் காதுகளையே நம்ப இயலாதவனாக , ரம்யாவின் குரல் போல் உள்ளதே……. என்று யோசித்தாலும், அவளாக இருக்காது என்று நினைத்துக் கொண்டு , திரும்பவும் தானும் ,’ஹலோ’ என்றான் மெலிதாக.
‘ரிஷி…?’ என்ற பரிவான அந்த குரலைக் கேட்டவுடன், நம்பிக்கை வந்தது அவனுக்கு அது ரம்யாதான் என்று.
‘ சொல்லு, ரம்யா. எப்போது வந்தாய்? நலமாக இருக்கிறாயா?’ என்றான் தொண்டை கம்ம….
‘நான் நலம்தான் ரிஷி. நான் வந்து ஒரு வாரம் ஆகிறது. வந்தனா எங்கே, இப்போது எப்படி இருக்கிறார்கள், நலம்தானே?’ என்றாள்.
ரம்யாவின் பாசமான அந்த குரலைக் கேட்டவுடன் அவனால் தன் அழுகையை கட்டுப்படுத்த இயலவில்லை. அவள் மடியில் தலை வைத்து ஓவென்று அழ வேண்டும் போல் தோன்றினாலும், எந்த உரிமையில் அவளிடம் தன் சோகத்தை பகிர்ந்து கொள்ள முடியும் தன்னால் என்பதையும் உணர முடிந்தது அவனால்… ஏன் அவளையும் வேதனைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், வெகு சிரமப்பட்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு, ‘ ம்ம். நன்றாக இருக்கிறாள். தூங்கிக் கொண்டிருக்கிறாள் ரம்யா. எழுப்பட்டுமா?’ என்றான்.
‘இல்லை ரிஷி. வேண்டாம். நான் ஒரு நாள் நேரில் வருகிறேன், சரி பிறகு பார்க்கலாம்’, என்று சொல்லி அவன் வீட்டு விலாசத்தையும் மறக்காமல் வாங்கி குறித்துக் கொண்டாள்.
ரிஷிக்கு பழைய நினைவுகளும், புதிய வேதனைகளும் சேர்ந்து பெருங்குழப்பத்தை உண்டாக்கியது என்னவோ நிசம்தான்………..