Thursday, January 2, 2014
Wednesday, January 2, 2013
கொங்கு நாட்டு மகளிருக்கான சடங்குகளும், சம்பிரதாயங்களும்
பவள சங்கரி
இயற்கையின் படைப்புகளிலேயே மிகவும், உன்னதமானது பெண் இனம். அனைத்து உயிரினங்களுக்கும் தனிப்பட்டதொரு மென்மையையும், அழகையும் அள்ளி வழங்கியிருப்பது கண்கூடு. அந்த வகையில் மனிதப் பிறவியில் இந்தப் பெண் இனம் பல வகையான உணர்வுகளுக்கும், அதற்குரிய சூழலுக்கும் ஆட்படுவதும் இயற்கை. இந்த இயற்கையின் விநோதத்தை அதீதமாக காட்சிப்படுத்த நினைப்பது மனிதர்களுக்கேயுரிய இயல்பாக இருப்பதே நம் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளின் முக்கிய அம்சமாக இருக்கிறது. இதில் பெரும்பாலும் நன்மைகளும், தீமைகளும் சமமாகக் கலந்து இருப்பதே நிதர்சனம். வளர்ந்து விட்ட நாகரீகத்தில் மற்றைய சில நாடுகளில் ஓரளவிற்கு இதெல்லாம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், நம் இந்திய கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் இதெல்லாம் இன்றும் வழமையாகத்தான் இருக்கிறது. வாழையடி வாழையாக கடைபிடிக்கப்படும் பழக்க வழக்கங்கள் பல அர்த்தமுள்ளதாக இருப்பினும், சில வேண்டாதவையாகவும் தேவையற்றவைகளாகவும் உள்ளது.
பொதுவாக பெண்களின் பருவக் காலங்களை , பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை மற்றும் பேரிளம்பெண் என ஆறு வகைகளாகப் பிரித்துள்ளனர். பேதைப் பருவம் என்பது ஏழு வயது வரையிலான குழந்தைப் பருவம். பெதும்பை என்பது பதினொரு வயது வரையிலான ஒரு பருவம். அடுத்து வருவதுதான் மங்கை எனும் பூப்படையும் பருவம். மடந்தை என்பவள் திருமண வயதில் இருக்கும் பத்தொன்பதிற்கும் மேற்பட்ட பருவத்தினள். அரிவை எனும் பருவம் இருபத்தைந்து வயதான தாய்மைப் பருவம். தெரிவை என்பது உலகம் அறிந்த முப்பது வயதிற்கும் மேலான பருவம். அடுத்து நாற்பது வயதுப் பருவமான உலக ஞானமும், அனுபவமும் பெற்ற பேரிளம் பெண் என்பது. இதன் அடிப்படையிலேயே நம்முடைய பெரும்பான்மையான சம்பிரதாயங்கள் அமைந்திருக்கின்றன.
Friday, November 16, 2012
துர்காபாய் தேஷ்முக்
துர்காபாய் ஒரு பெண்ணல்ல்
அவர் ஒரு மனித டைனமோ (மின்னோட்டம் உண்டாக்கும் பொறி)
(சரோஜினி நாயுடு)
”இரும்புப் பெண்” என்று அனைவராலும் பாராட்டப்பெற்ற துர்காபாய் தேஷ்முக், மிக வித்தியாசமான, துணிச்சலான சுதந்திரப் போராட்ட வீராங்கனை மட்டுமல்லாது, தன்னலமற்ற ஒரு சிறந்த சமூகசேவகி, மிக வித்தியாசமான பெண்ணியவாதி.
அரசியலமைப்பு மன்றம் மற்றும் தற்காலிக பாராளுமன்றத்தில், 750 திருத்தங்களுக்கு குறைவிலாமல் கொண்டுவந்தவர். கோடிக்கணக்கான நிதியை மூலதனமாகக் கொண்டு ஆறு பெரிய கல்வி நிறுவனங்களை உருவாக்கி நடத்தி வந்தவர். பயிற்சி பெற்ற சரியாக நிர்வகிக்கப்படும் ஊழியர்கள் மூலமாக பல சமுதாய மாற்றங்கள் கொண்டுவர முடியும் என்ற கனவும் உடையவர். தம்முடைய சுதந்திர தாகத்தின் விளைவாக இளம் வயதிலேயே சிறைக்கம்பிகளைக் கண்டவர். ஒடுக்கப்பட்ட மற்றும், ஒதுக்கித்தள்ளப்பட்ட பெரும்பான்மையான மகளிருக்காகப் போராடியவர். அவருடைய வாழ்க்கை இலக்குகள் நிறைந்ததாகவும், சாதனைக்ளை ஊக்குவிக்கின்ற சம்பவங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது.
ஜூலைத்திங்கள் 15ம் நாள், 1909ம் ஆண்டு, ஆந்திரப் பிரதேசம், இராஜமுந்திரியில், காக்கிநாடாவின் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். தம்முடைய எட்டாவது வயதிலேயே, ஒரு வசதியான ஜமீந்தார் குடும்ப தத்துப் புத்திரனுக்கு பால்ய விவாகம் செய்து வைக்கப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு , அவர் பருவமடைந்த போதுதான் திருமணம் என்பதற்கான அர்த்தம் புரிந்தது. அதில் விருப்பமில்லாதலால் அந்த திருமண பந்தத்தை முறித்துக் கொண்டு பொது வாழ்க்கையில் ஈடுபட முடிவெடுத்தார். சுப்பாராவ் என்ற தன்னுடைய இளம் கணவரிடமும் தன் மனநிலையைச் சொல்லி புரியவைக்க முடிந்தது அவரால். சுப்பாராவும் அதனை ஏற்றுக் கொண்டு கொஞ்ச காலம் கழித்து ஒரு வழக்கறிஞரின் மகளை திருமணம் செய்து கொண்டார். 30 ஆண்டுகள் அவரோடு வாழ்ந்த பின்பு தம்முடைய மனைவியின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையாக துர்காபாயை நினைத்தார் என்பது ஆச்சரியமான விசயம்.
Thursday, September 6, 2012
ஓயாத உழைப்பும், மனிதநேயப் பண்பும்!
Monday, September 3, 2012
அஞ்சா நெஞ்சம்!
ருக்மணி லட்சுமிபதி - (1892 - 1951)
நம் இந்திய அன்னை அடிமைத் தளையில் சிக்குண்டு தவித்தபோது எண்ணற்றவர்கள் அதற்காக பெரும் போராட்டங்கள் நிகழ்த்தி தத்தம் இன்னுயிரையும் ஈந்துள்ளனர். அடுப்படியே உலகம் என்று வாழ்ந்த அந்த காலத்திலும் துணிச்சலாக அன்னை திருநாட்டிற்காக வெளியே வந்து போராடிய பல பெண்கள் இன்று நம் வரலாற்றின் பக்கங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள்..
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்:
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.
என்பான் பாரதி. அதற்கேற்ப புதுமைப் பெண்களாய், நாட்டின் கண்களாய்த் திகழ்ந்த முத்துப்பரல்களில் குறிப்பிடத்தக்கவர் ருக்மணி லட்சுமிபதி.
Tuesday, August 14, 2012
தியாக தீபம்!

தியாக தீபம் - அன்னை இந்திரா (1917 - 1984)
"If I die a violent death as some fear and a few are plotting, I know the violence will be in the thought and the action of the assassin, not in my dying......!" Indira Gandhi.
”பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்!” - மகாகவி பாரதி.
நெஞ்சுரமும், நேர்மைத்திறமும், நேர் கொண்ட பார்வையும் அஞ்சா நெஞ்சமும் கொண்ட மாதர் குல திலகம் , 'இரும்பு பெண்மணி’, இந்திரா பிரியதர்சினி, அவதரித்தது, ஜவஹர்லால் நேரு மற்றும் கமலா நேரு என்ற புகழ்பெற்ற பெற்றோரின் கருவில். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய முப்பெரும் நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் அலகாபாத் நகரில். மற்ற குழந்தைகளைப் போன்று பெற்றோரின் முழுமையான அரவணைப்பில் கடந்ததல்ல அவருடைய இளம் பிராயம். ஆம், நவம்பர் 19, 1917இல் பிறந்தார் இவர். பிறந்த இரண்டாண்டுகளில், 1919 ஆம் ஆண்டு நம் தேசத் தந்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பியவுடன், நேரு குடும்பத்தின் அடிக்கடி தொடர் சந்திப்பின் மூலமாக இந்திய சுதந்திர தாகத்தை எழுச்சியூட்டி, அவர்களை முழுமையாக ஈடுபடச் செய்தார். அவருடைய நான்காம் வயதில், தந்தை ஜவஹர்லால் நேருவும், தாத்தா மோத்திலால் நேருவும் முதல் முறையாக சிறை சென்ற போது. பின்பு தாயும் இணைந்து கொள்ள, போகப்போக அதுவே வாடிக்கையாகிவிட்டிருக்கிறது. பிற்காலங்களில் தம் இளம் பிராயத்தை நினைவு கூர்கையில் இளம் வயதில் ஒரு பாதுகாப்பற்ற உணர்வு தனக்கு இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். தாயின் மெல்லிய உடல் வாகையையும், தந்தையின் கூரிய நாசியும், துணிவும் கொண்டவர்.
அவர் பிறந்த நேரம் முதல் உலகப் போர் முடிந்த நேரம். தந்தையும், தாத்தாவும் சிறையில் அடைபட,, குடும்பத்தின் மற்ற பெண்களுடன் குழந்தை இந்திராவும் காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் தங்க வேண்டிய கட்டாயம். ஆசிரம வாழ்க்கை புதிய அனுபவத்தையும், சுதந்திரப் போராட்ட வித்தையும் விதைத்தது. அதன் காரணமாக பால்யகால விளையாட்டே மேடைப்பேச்சு, கைது, கூட்டம் ஆங்கிலப் போர் வீரர்களை போரிட்டு முறியடிப்பது என்பது போல் அமைந்தது, அவருடைய பிற்கால வாழ்க்கை முறைமைகளுக்கு அடித்தளமாக அமைந்தது. இதுவே அவர் ஒரு சுதந்திர உணர்வுள்ள , உறுதியான இதயம் கொண்ட ஒரு பெண்ணாக வளர வழி வகுத்தது.
அவருடைய குழந்தைப்பள்ளி தில்லியிலும், பள்ளிப்படிப்பு முதலில் அலகாபாத் நகரில் ஒரு கான்வெண்ட் பள்ளியிலும் பின்பு ஒரு தங்கும் பள்ளியிலும் தொடர்ந்தது. புத்தகம் படிப்பதில் ஆழ்ந்த விருப்பம் கொண்டவராக வளர்ந்தார். தந்தை வாங்கி வைத்திருந்த பெரும்பாலான புத்தகங்களை வாசித்திருக்கிறார். கவிஞர், எழுத்தாளர், ஓவியர் என பல்வேறு முகங்கள் கொண்ட ரவீந்திரநாத் தாகூரின், சாந்தி நிகேதன் பள்ளியில் , சேர்க்கப்பட்டார். இதைப்பற்றிக் கூறும் போது அவர், “ தந்தையின் முயற்சியால் ஏற்கனவே எனக்கு இலக்கியத் தொடர்பு இருப்பினும், சாந்தி நிகேதனுக்குச் சென்றவுடன் தாகூர் மூலமாக கலையுலகின் கதவு தானாகத் திறந்தது” என்றார். தன்னுடைய 11வது வயதில் இராமாயணக் காப்பியத்தில் வருவது போன்று, வானரப் படையை நிறுவ முயன்றார். தன் வயதொத்த சிறுவர் சிறுமியரை இணைத்து, வானரசேனை என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்து வைத்தார்.
வானரசேனை என்ற இந்த அமைப்பு பல அரும் பணிகளைச் செய்தன. அதாவது, சுதந்திரப் போராட்ட வீரார்களுக்கு உணவு, குடிநீர் விநியோகம் செய்வது, கொடிகள் தைத்துக் கொடுப்பது, கல்வியறிவற்றவர்களுக்கு தேவையான மடல்கள் எழுதிக் கொடுப்பது, விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டு தலைமறைவாக வாழ்பவர்களுக்கு மடல் கொண்டு சேர்க்கும் சேவையைச் செய்தல், சமையல் செய்து கொடுத்தல் போன்ற எண்ணற்றப் பணிகள் செய்து வந்தனர். இவையனைத்தும் அண்ணல் காந்தியடிகளின் கொள்கைகளின் தாக்கம்தான் என்பதை அவரே, 1930 இல் பூனாவில் ஒரு பள்ளியில் படிக்கும் போது, ” காந்தியடிகள் என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருந்தார். என் ஒவ்வொரு செயல்களிலும் முன்னேற்றங்களிலும் அவருக்கு பெரும் பங்கு உண்டு” என்ற சொற்கள் மூலம் அதை உறுதிபடுத்தினார்.
”பாலசர்க்கா சங்கம்” என்ற நிறுவனத்தை , காந்தியடிகளின் அறிவுரைப்படி நிறுவி, சிறுவர், சிறுமியுடன், நூற்பு வேள்வியை மேற்கொண்டார். ஆனந்த பவனம் என்ற தம்முடைய மாளிகையின் மூத்த பணியாளர் ஒருவருக்கு தம் இளம் வயதிலேயே கல்வி கற்பிக்கும் பணியும் மேற்கொண்டார். தம் இல்லத்திற்கு சற்று அருகாமையில் இருந்த ஒரு தொழுநோய் இல்லத்திற்கு அடிக்கடி சென்று தன்னால் ஆன சேவைகளைச் செய்ய முற்பட்டிருக்கிறார்.
இந்திரா தம்முடைய 17 வது வயதில் தன் தாய் கமலா நேருவிற்கு காசநோயினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட காரணத்தினால், அவருடைய மருத்துவத்திற்காக அவருடன் சுவிட்சர்லாந்து செல்லவேண்டி வந்தது. அந்த நேரத்தில் தந்தையும் சிறைச்சாலையில், ஆனால் 1936 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 28ஆம் நாள் தாய் கமலா நேரு இறந்தபோது தந்தை விடுதலை செய்யப்பட்டு, உடனிருந்தார். இந்தியாவிற்கு திரும்பியபோது, மிக அழுத்தமான ஒரு சூழலில் சிக்குண்டு இருந்தார். வேதனை, கவலை, அனைத்திற்கும் மேலாக தனிமை! இந்த நேரத்தில் தம் பால்ய கால நண்பரான பிரோஸ்காந்திதான் இவருக்கு உடனிருந்து ஆறுதலளித்து வந்தார். நேரு குடும்பத்தின் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர் இவர். இரண்டாம் உலகப் போர் தொடங்கப் போகும் சில காலம் முன்னர்தான் அவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் சேர்ந்தார்.
மோதிலால் நேரு தம் பெருஞ்செல்வத்தை தேசத்திற்காக அளித்துவிட்டார். நேரு தாம் எழுதிய புத்தகத்தின் மூலமாகக் கிடைத்த வருமானத்தைக் கொண்டுதான் தம் மகளைப் படிக்க வைத்தார்.
ஒரு ஆண்டிற்குள்ளாக அங்கு அவருடைய உடல் நிலை பாதிக்கப்பட்டு, சுவிட்சர்லாந்து சென்று மருத்துவம் பார்க்க வேண்டி வந்தது. நோயின் கொடுமையும், தனிமையும் ஒரு சேர வாட்ட, அந்த நேரத்தில் பிரோஸ்காந்தி அவருக்குத் துணையாகவும், ஆதரவாகவும் இருந்துள்ளார். 1939 இல் இரண்டாம் உலகப்போர் ஆரம்பமானவுடன், இந்திரா, கப்பல் மூலமாக, பிரோஸ்காந்தியுடன் இந்தியா வந்து சேர்ந்தார். தன் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக பிரோஸ்காந்தியை 1941 ஆம் ஆண்டு,மார்ச் மாதம் அலகாபாத்தில் அவரை மணந்து கொண்டு, லக்னோவில் தம் திருமண வாழ்க்கையைத் துவங்கினார். நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கையில் மேலாளராக பணி புரிந்தார் பிரோஸ்காந்தி. அப்பத்திரிக்கையின் பெண்கள் பகுதியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் இந்திராவிற்குக் கிடைத்தது. 1944 ஆகஸ்ட் 20 ஆம் தேதி மும்பையில் ராஜீவ் காந்தியைப் பெற்றெடுத்தார் இந்திரா.
பிரோகம் மும்பையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரசு கமிட்டி கூட்டத்திற்கு இந்திராவும் சென்றார். ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற இயக்கமும் இங்குதான் துவக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில், நேருஜி, இந்திரா காந்தி மற்றும் பிரோஸ்காந்தி மூவரும் கைது செய்யப்பட்டு , சிறை வைக்கப்பட்டனர்.
நம் இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திருநாளும், ஆகஸ்ட் 15 ஆம் நாள் 1947 ஆம் ஆண்டு வந்தது. ஆனாலும் இந்திய - பாகிஸ்தான் பிரிவினையும் உடன் வந்தது, மகாத்மாவை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. மத வெறியும், வகுப்புக் கலவரங்களும் நாட்டில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தின. மக்கள் பாகிஸ்தானிலிருந்து கூட்டம் கூட்டமாக அகதிகளாக வந்தனர். இந்த அகதிகள் முகாமிற்கு அன்னை இந்திரா நேரிடையாகச் சென்று, அவர்களுக்கு உணவு, உடை என எந்த குறைவும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். இஸ்லாமியர்கள் வாழ்ந்த பகுதிக்கும் எந்த அச்சமுமின்றி சென்று வந்தார்.
சுதந்திர இந்தியாவின் பிரதம மந்திரியாக பதவியேற்ற ஜவஹர்லால் நேரு, தம் இறுதிக் காலமான 1967 வரை பதவியில் இருந்தார். அந்த காலகட்டத்தில், தாய் உயிருடன் இல்லாத காரணத்தினால் , குடும்பப் பராமரிப்பிற்காக இந்திராவும் , தம் கணவர், குழந்தைகளுடன் மும்மூர்த்தி இல்லத்தில் (Teen Murthi House) தங்க வேண்டி வந்தது. உலக நாடுகளின் அழைப்பை ஏற்ற தந்தையுடன் பல நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கும், பல அரசியல் பிரபலங்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது அவருக்கு. 18 ஆண்டு காலம் தந்தையுடன் கற்ற அரசியல் நெளிவு சுளிவுகள், இந்திராவை ஒரு பெரும் ராஜதந்திரியாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும் பண்படுத்தியது. பாரிசில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திற்கும், காமன்வெல்த் மாநாட்டிற்கும், மற்றும் அமெரிக்காவிற்கும் தன் தந்தையுடன் சென்று வந்தது பல அனுபவங்களைக் கொடுத்தது. எலிசபெத் மகாராணியின் மகுடாபிஷேகதிற்கான அழைப்பை ஏற்று அங்கு சென்றபோது, வின்ஸ்டன் சர்ச்சிலையும் சந்தித்தார். 1952 இல் தீன் மூர்த்தி பவனுக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி திருமதி ரூஸ்வெல்ட்டைச் சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
1959 இல், பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி இந்திராகாந்தி அம்மையாரை செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக நியமித்தார். குறைந்த விலையில் வானொலி தயாரிப்பதையும், குடும்ப நலத்திட்டத்தையும் துவக்கி வைத்தார். பிரோஸ்காந்தி பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956 முதல் 1960 வரை அகில இந்திய காங்கிரசின் இளைஞர் அணித்தலைவராக இருந்தார் இந்திரா காந்தி. 1960 ஆம் ஆண்டு பிரோஸ்காந்தியின் திடீர் மறைவு இந்திராவை மிகவும் பாதித்தது. 1964 ஆம் ஆண்டு, புவனேசுவரம் காங்கிரசு மாநாட்டில் மயக்கமுற்று விழுந்த தந்தை நேருஜியை கண்ணும் கருத்துமாக மகள் கவனித்துக் கொண்டாலும், காலன் அவரையும் விட்டு வைக்காமல் மே மாதம் 27ஆம் நாள் அதே வருடத்தில் அழைத்துக் கொண்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் , வலுவடைந்திருந்த நேரம், தமிழ் நாட்டிற்கு வந்திருந்த அன்னை இந்திரா மக்களின் நல்லாதரவையும் பெற்றிருந்தார். தேசிய ஒருமைப்பாட்டை மிகவும் நேசித்த அன்னையின் சேவையைப் பாராட்டும் விதமாக அவர்தம் பிறந்த நாளை தேசிய ஒருமைப்பாட்டு தினமாகக் கொண்டாடுவதும் சிறப்பு
பாகிஸ்தான் படை வீரர்களின் காஷ்மீர் ஊடுறுவல் கலவரத்தை ஏற்படுத்தியது. இந்திராகாந்தி ஸ்ரீநகர் சென்று பல பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார். போர் உருவாகி, நிறுத்தமும் ஏற்பட்டது. சிப்பாய்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஊக்கமளித்தார். பாகிஸ்தானுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக லால் பகதூர் சாஸ்திரி ரஷ்யாவிலுள்ள தாஷ்கண்டிற்கு சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்பு அங்கேயே லால் பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் காலமானார். அவர் மறைவிற்குப் பிறகு 1966 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 25ம் நாள் இந்தியாவின் பிரதமர் ஆனார். காமராசரின் உறுதுணை பெரும் பலமானது இவருக்கு. பிரதமராக இவர் ஆற்றிய தொண்டு பாரே புகழும் வண்ணம் இருந்தது!
1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து இலட்சக்கணக்கான அகதிகள் சாரிசாரியாக இந்தியா நோக்கி வர ஆரம்பித்தார்கள். இது பெரும் பிரச்சனையாக உருவெடுக்க ஆரம்பித்த நேரம், இந்திராவின் நண்பர் ஒருவர், தான் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாட்டிற்கும், அந்தக் கோடை விடுமுறையில் செல்லப் போவதாக சொன்னபோது, அன்னை சற்றும் தயங்காது, “ பலர் உங்களிடம் வந்து இந்தியாவில் என்ன நடக்கிறது என்று கேட்பார்கள். அப்போது நீங்கள், இன்னும் ஓர் ஆண்டு காலத்தில் மேற்கு வங்காளத்திலிருந்து இந்திய மண்ணிற்கு வரும் அகதிகளே இருக்க மாட்டார்கள் என்று இந்தியப் பிரதமர் ,அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாகச் சொல்லுங்கள்”என்றார். மேற்கு வங்க இடதுசாரிகளின் கிளர்ச்சியைத் துணிவுடன் எதிர்கொண்டு ஜனநாயக முறையில் சமாளித்தார். கேரளாவில் உணவுப் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் தலை தூக்கிய நேரம் அது. வாஷ்ங்டன் சென்று ஜனாதிபதியுடன் பேசிக் கொண்டிருந்த போது, “ என் நாட்டு மக்களுக்காக விடம் அருந்தச் சொன்னாலும், தயங்காமல் அருந்துவேன்” என்று சொன்னது அவர் நாட்டின் மீது கொண்டிருந்த அபரிமிதமான பற்றைக் காட்டியது. அவருடைய துணிச்சலான போக்கு பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டது.
“ இந்து மதத்தின் வேதாந்தத் தத்துவங்களில் எனக்கு நல்ல நம்பிக்கை இருந்தாலும், மனித குலத்தைப் பிரிக்கும் அந்த மதவெறியைத் தீவிரமாக எதிர்க்கிறேன்” என்ற தெளிவான சிந்தனை கொண்டிருந்தார். உலகளவில், பொதுவுடைமை அல்லாத 70 நாடுகள் பங்கு கொண்ட, வாக்கெடுப்பில், உலகப்புகழ் பெற்ற தலைவராக இந்திரா காந்தி அம்மையாரே தேர்ந்தெடுக்கப்படது குறிப்பிடத்தக்கது. இவர் செய்த பல அரிய சாதனைகளே இதற்குக் காரணம்.தன் ஆட்சிக் காலத்தில் நாணயத்தின் மதிப்பைக் குறைத்தார். உச்சநீதி மன்ற தலைமைப் பதவி நியமனத்தை மூப்புரிமை அடிப்படையில் செய்யும் மரபை மாற்றியமைத்தார்.
பஞ்சாப் கலவரம் தீவிரமான வேளையில் அவர்களை ஒடுக்க பொற்கோவிலுக்குள் இராணுவத்தை அனுப்பினார். 1984 ஆம் ஆண்டில், ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்” தீவிரவாதிகளை ஒடுக்க வைத்ததோடு பிந்த்ரன்வாலே கொல்லப்பட்டார். இந்த நேரத்தில்தான் சீக்கிய மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி வந்தது அவருக்கு. ஜனநாயகத்தைப் பாதுகாக்க நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த வேண்டி வந்தது. 1969 இல் பதினான்கு மிகப்பெரிய வங்கிகள் தேசிய உடமையாக்கப்பட்டது. பத்திரிக்கை தணிக்கை முறை ஒழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மன்னர்களுக்கு அளிக்கப்பட்ட மானியங்கள் நிறுத்தப்பட்டது. பஞ்சாப் மட்டுமன்றி, காஷ்மீர், மணிப்பூர், அஸ்ஸாம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட பிரிவினை வாதமும் முடக்கப்பட்டது. இப்படி பல்வேறு சோதனைகளைக் களைந்து சாதனைகளாக மாற்றிய பெருமை அம்மையாரையேச் சேரும்.
அவருடைய பல்வேறு நாட்டு நலப்பணித்திட்டங்கள் ,மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் முக்கியமானது இருபது அம்சத் திட்டம். இத்திட்டத்தின் மூலம், மலை சாதி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், கிராமப்புற, வறுமைக் கோட்டின் கீழே உள்ள மகளிர், ஆகியோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அறிவியல் துறையும், வான் ஆய்வு மையங்களும் பெரும் வளர்ச்சி கண்டது அம்மையாரின் ஆட்சிக்காலத்தில். பொருளாதாரமும் நல்ல வளர்ச்சியடைந்தது. நம் இந்திய நாட்டு விஞ்ஞானிகளின் தனிப்பட்ட முயற்சியால் அணு ஆய்வு சோதனையிலும் வெற்றி கண்டதும் குறிப்பிடத்தக்கது. பல ஏவுகணைகள் விண்ணில் செலுத்தப்பட்டன. தொலைத்தொடர்பிற்கென பல கோள்கள் செலுத்தப்பட்டன. இன்சாட் A, B விண் வெளிக்கலங்கள், அணுமின் நிலையங்கள், பெரிய தொழிற்சாலைகள் என அனைத்தும் வெற்றிகரமாக செயல்பட்டன.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளை சீரிய முறையில் நடத்தியமைக்காக 1982 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் கழகத்தின் விருது இவருக்கு வழங்கப்பட்டது. தொள்ளாயிரத்தைம்பது நாடுகள் இணைந்த கூட்டுச் சேரா இயக்கத்தின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னுடைய அன்பான போக்கினாலும், சாமர்த்தியமான செயல்களினாலும், நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களைத் தீர்த்து வைத்தார். ஓயாத உழைப்பும், உன்னத முயற்சியும், நாட்டை உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கும் அவரை உச்சாணியில் ஏற்றி வைத்த வேளையில், துரதிருஷ்டவசமாக, அக்டோபர் 31ந்தேதி, 1984 ஆம் ஆண்டு, அவருடைய இரண்டு சீக்கிய மெய்க்காப்பாளர்களான பியாந்த்சிங் மற்றும் சத்வந்த்சிங் என்பவர்களால் ஈவு இரக்கமின்றி, சுட்டுக் கொல்லப்பட்டார். தன்னிகரில்லா அந்தத் தியாகச்சுடரின் அஸ்தி நாற்பது கலசங்களில் சேகரிக்கப்பட்டு, மக்களின் அஞ்சலிக்காக நாட்டின் பல முக்கிய தலைநகரங்களில் வைக்கப்பட்டிருந்தது. யமுனை ஆற்றங்கரையில் அவர்தம் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.
நல்ல பல குறிக்கோள்களை , பல்வேறு சோதனைகளுக்கிடையேயும் நிறைவேற்றிக் காட்டிய சாதனைப் பெண்மணி அன்னை இந்திரா. மனிதாபிமானம், சகோதரத்துவம், அநியாயத்தைத் தட்டிக்கேட்கும் துணிச்சல், சகமனிதர்களிடம் அன்பு, நாட்டுப்பற்று, விடாமுயற்சி இப்படி ஆக்கப்பூர்வமான நல்லெண்ணங்கள் மூலமாகவே நாட்டில் பல அரிய நற்பணிகள் செய்து தம் இன்னுயிரையும் ஈந்தார். அவருடைய சாதனை வாழ்க்கை பல்லோருக்கும் முன்னுதாரணமாக இருப்பதில் அதிசயமில்லை. பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வாழ்ந்து காட்டியவர் அன்னை இந்திரா காந்தி!
நன்றி : திண்ணை வெளியீடு
Thursday, August 9, 2012
அடக்கமே உருவான அன்புமலர்!
அன்னை ஈ.வே.ரா. மணியம்மை
பொதுத் தொண்டில் ஈடுபடும் மகளிர் வாழ வேண்டிய நெறி முறைமைகளுக்கு ஓர் இலக்கணம் வகுக்கப்படுமேயானால் , அந்த நெறியாக, இலக்கணமாக வாழ்ந்தவர் மணியம்மையார்!
சமூக நீதி, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, போன்ற உயர்ந்த கோட்பாடுகள் விருட்சமாக வேர் விட்டுப் படர்ந்த ஓர் இயக்கம் என்றால் அது திராவிட இயக்கம். ஆண்களின் ஆதிக்கம் கோலோச்சி நிற்கும் அரசியல் களத்தில் ஒளி வீசும் தீபமாக , திராவிட இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று , சுடர்விட்டுப் பிரகாசித்தவர் மணியம்மையார். திராவிட இயக்கத்தில் சாதி இழிவு நிலை ஒழிந்து, சமத்துவம் தழைத்தோங்கவும், திராவிட இன மக்களின் அடிமைத்தளை ஒழியவும், அவர்தம் விடுதலைக்கு ஓங்கி குரல் எழுப்பிய உத்தம ஆத்மா , அன்னை ஈ.வே.ரா மணியம்மையார்.
ஈ.வே.ரா. பெரியாரின் உற்ற துணையாக அவருடைய உடல் நலத்தைப் பேணியதோடு, அவரோடு இணைந்து கழகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் காரணமாக சிறைக்கோட்டம் ஏகினாலும், மனம் தளராது, பெரியாரின் வீட்டு நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டு, இடையறாத கட்சிப் பணியும் செய்து, பெரியாரின் மறைவிற்குப் பிறகும் அவர் விட்டுச் சென்ற பணிகளை செவ்வனே, திறம்பட நிர்வகித்த பெருமைக்குரிய சிறந்த பெண்மணி மணியம்மையார்.
தமிழகத்தையும், தமிழ் இன மக்களையும் அனைத்து வகைகளிலும் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய கொள்கை கொண்டிருந்த பெரியாரை கண்ணும் கருத்துமாக பாதுகாத்த வகையில் திராவிட இயக்கத்திற்கே பெரும் தொண்டாற்றியவர் என்ற பெயர் பெற்றாலும், உண்மையான தாய்மைப் பண்பும், இளகிய உள்ளமும், சேவை மனப்பான்மையும், ஒருங்கே அமையப் பெற்ற தியாகச் சுடர்தான் மணியம்மையார். மூப்பின் விளிம்பில் இருந்த பெரியார், “ இந்த வயதிலும் சாகாமல் இருக்கிறேன் என்றால் அது இந்த அம்மாவால்தான் என்பது யாருக்கும் தெரியாது. எனது உடம்புக்கு ஏற்ற உணவு பக்குவப்படி கொடுப்பது, உடை மாற்றுவது எல்லாம் இந்த அம்மாதான்” என்று மனம் நெகிழ்ந்து கூறியுள்ளதே அதற்கான சான்று.
எந்தப் பலனும் எதிர்பாராமல், சேவை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஒரு தாயாக பெரியாரை அரவணைத்துக் காத்து வந்தார். அவருடைய வாழ்க்கையின் ஆழத்தைப் புரிந்து கொண்டவர்கள், உலகில் எந்த ஒரு தாயும், இத்தகைய ஏச்சையும், பழியையும், கேலி கிண்டலையும், ஏளனமான சொற்களையும், அவதூறுகளையும் சுமந்திருப்பார்களா என்றால், இல்லை என்றே உறுதிபட உரைப்பர். அவருடைய மனம், செயல், சொல் , எண்ணம் , குறிக்கோள் அனைத்துமே தொண்டு என்பது மட்டுமே! பெண்மைக்கே உரிய விருப்பங்களான, ஆடம்பரம், அலங்காரம், படாடோபம், பகட்டு என்ற எண்ணங்கள் எதுவுமே இல்லாமல், காது, கழுத்து, மூக்கு,கை என எங்குமே எந்த அணிகலனும் அணியாமல், மிக மலிவான கைத்தறி சேலையும், அதுவும் கருப்பு வண்ண சேலையும், வெள்ளை இரவிக்கையும் மட்டுமே அணிந்து, ஆணவம், அகந்தை, அடுத்தவரை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணம் ஏதுமில்லாமல் , மிக எளிமையாக, அடக்கமே உருவமாக, இயக்கப் பணி மட்டுமே வாழ்க்கையாக வாழ்ந்து காட்டியவர் மணியம்மையார்.
தந்தை பெரியார் அவர்களின் மிக முக்கியக் கோட்பாடான, பெண்ணினத்திற்கேயுரிய, உரிமை உணர்வு, சமத்துவப் பாங்கு, சுதந்திரப்பண்பு, விடுதலை வேட்கை, கொள்கைப் பிடிப்பு, ஆர்வம், அக்கரை, எளிய தோற்றம், சிக்கன இயல்பு, சீர்திருத்தச் சிந்தனைப் போக்கு, ஏற்றமிகு நடத்தை போன்ற அனைத்து குண நலன்களும் அட்சரம் பிறழாமல் அப்படியே கடைப்பிடித்து, அவருக்குப் பின் திராவிடக் கழக தலைமைப் பொறுப்பும் ஏற்ற சீர்மிகு வெற்றிப் பெண்மணி மணியம்மையார். திறந்த புத்தகம் போன்றது இவரது வாழ்க்கை. எந்த ஒளிவு மறைவோ, கள்ளத்தனமோ, பேராசையோ, இல்லாத ஒரு பேரானந்த நிலையில் இருந்தது இவர் வாழ்க்கை என்றால் அது மிகையாகாது. குடும்பமாக இருந்த ஒரு இயக்கத்தின் தாயாக இருந்து தொண்டர்களை குழந்தைகளாக பாவித்து, வழி நடத்தியவர் மணியம்மையார். பெரியார் வகுத்த பாதையில் அடி பிறழாமல், நடந்து, வரலாற்றில் இப்படிப்பட்ட புரட்சித்தாயை இந்த நாடு கண்டதில்லை என்ற அறிஞர்களும், ஆய்வாளர்களும் வியக்கும் வண்ணம் வாழ்ந்தவர் இவர். பெரியாரின் வாழ்க்கை வரலாறு என்றால் திராவிட இயக்க வரலாறு என்பது போல, அந்த வரலாற்றில் நீங்கா இடம் பெறும் வரலாறு அன்னை மணியம்மையாரின் வரலாறு. அவர் கேட்டு வந்த பழிச்சொல், வசை மொழி, இழிவுச் சொற்கள் அனைத்தும் அவரை மென்மேலும் பண்படுத்தி, அவரைப் பன்மடங்கு ஆக்கப்பூர்வமாக உழைக்கச் செய்தது. அந்த வகையில் உலகின் அத்துனைப் பெண் இனமும் மனதில் உள்வாங்கிக் கொள்வதோடு, தாம் தேர்ந்தெடுத்தப் பாதையில் ஏற்படும் தடைகளை எளிதாக முறியடித்துக் கொண்டே முன்னேறிச் செல்லும் அந்த வல்லமையை தம் வாழ்நாளின் இறுதி நாள் வரை இறுக்கமாக பற்றிக் கொண்டிருந்த அந்த மன உறுதியை, முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு வாழக்கூடியது என்றால் அது மிகையில்லை!
வட ஆற்காடு மாவட்டம் பற்றி அறிஞர் அண்ணா ஒரு முறை நகைச்சுவையாக , ”வட ஆற்காடு மாவட்டம் அன்னை மணியம்மையாரை கொண்டு வந்து சேர்க்காவிடில், திமுக பிறந்திருக்க வாய்ப்பே இல்லை”, என்று குறிப்பிட்டது , அவர்தம் திறமையை நன்கு பறைசாற்றுகிறது.
1943 இல் செல்வி காந்திமதி பெரியாரிடம், அவருக்குச் செயலாளராகவும், வரவு, செலவு கணக்கு பார்ப்பவராகவும், பெரியார் சொற்பொழிவு ஆற்றும் நேரங்களில் , இயக்க ஏடுகளை விற்பனை செய்பவராகவும் தம் பணியைத் தொடர்ந்தார். காந்திமதியின் தந்தை திரு கனகசபையின் நண்பர் கு.மு.அண்ணல்தங்கோ என்பார் காந்திமதி என்ற இவருடைய பெயரை கே.அரசியல் மணி என்று மாற்றினார். அதனைச் சுருக்கமாக கே.ஏ. மணி என்றும் அழைக்கப் பெற்றார். இவர் வெளியிட்ட அறிக்கை மிக ஆழமான தகவல்கள் கொண்டதாக இருந்தது. கழகத்தின் களப்பணிகள் செய்வதற்கு மன உறுதியும், நாணயமும், நா - நயமும் கொண்டவராகவும், தேவையற்ற பழிச்சொற்களைக் கண்டு அஞ்சாதவரும், தந்தை பெரியாருடன் அனைத்து பயணங்களும் உடன் சென்று அவருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்வதுடன், கழக உறுப்பினர்களை அறிமுகம் செய்து கொள்ளவும் வேண்டும். அதுமட்டுமல்லாமல் இயக்கப் புத்தகங்கள் படிக்கவும், எழுதவும் அறிந்திருக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக அப்படி கழகத் தொண்டில் அர்ப்பணிப்பு செய்பவர்களின் வாழ்க்கை சீவனத்திற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்து வைக்க வேண்டும் என்ற பெரியாரின் விருப்பமும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படிருந்து. மிக யதார்த்தமான அறிக்கை. தங்கள் கழகத்தின் எதிர்கால நிலை குறித்த தெளிவான அறிக்கை!
மணியம்மையார், 1920 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் நாள் , திரு வி.எஸ். கனகசபை மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். விறகுக் கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வந்தார், இவர் தந்தை. பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு எழுத முடியாமல் அவரது உடல் நிலையில் ஏற்பட்ட கோளாறு தடை செய்தது. இரண்டாவது முறை எழுத முயன்ற போது தந்தையின் உடல் நிலை மோசமானதால் எழுத முடியாமல் போனது.
சேவை மனப்பான்மையில் சிறந்து விளங்கிய மணியம்மையார், மருத்துவமனையில் சென்று ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்த்து ஆளாக்குவதைத் தம் கடமையாகக் கொண்டிருந்தார். முதலில் பத்து குழந்தைகளுடன் ஆரம்பித்த இந்தப்பணி, நூறு குழந்தைகளுடன் தொடர்ந்தது. பெற்ற தாயைப் போலவே அன்பும் பாசமும் காட்டி வளர்த்து வந்தார்கள், அக்குழந்தைகளை.
மே மாதம் 15 ஆம் நாள் 1943ஆம் ஆண்டில் மணியம்மையாரின் தந்தை திரு கனகசபையின் மறைவிற்கு, உடல் நலமில்லாத போதும் வந்து கலந்து கொண்ட பெரியாரிடம், அண்ணல்தங்கோ அவர்கள் காந்திமதியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அடுத்த மாதமே, 30 ந்தேதி, பெரியாரின் உடல் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. வயிற்று வலி, கால் வீக்கம், ஏப்பம், விக்கல் ஆகியவை ஏற்பட்டன. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரே வாரத்தில் 34 பவுண்டு எடை குறைந்திருக்கிறார். செப்டம்பர் மாதத்தில் திருச்சியில் நடந்த மாநில சுய மரியாதைத் தோழர்கள் கூட்டத்தில் பெரியார் அவர்கள் கலந்து கொண்டார்கள். சுய மரியாதை இயக்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனமும், தமக்குப் பிறகு இயக்கம் சரியாக நடைபெற அதற்கொரு வாரிசும் அவசியமாகிறது என்று பெரியார் அங்கு பேசினார்.
மணியம்மையார் கழகத்திற்குள் வரும் முன்பே, வாரிசு பற்றிய பிரச்சனை வந்து விட்டது. 1933 இல் பெரியாரின் மனைவி நாகம்மையார் இறந்த பின்பு, துயரம் மனதில் வலியூட்டினாலும், தம்முடைய பொது வாழ்க்கை இன்னமும்,தங்கு தடையின்றி நடைபெறும் என்றே அவரால் எண்ணத் தோன்றியது. அவருடைய உறவினர்கள் பத்து ஆண்டுகளாகப் பலமுறை கட்டாயப்படுத்தியும்,
அவர்தம்முடைய மறுமணத்திற்கு சம்மதிக்கவில்லை. கழக சம்பந்தமாக பல பெண்களிடம் தொடர்பு கொண்டிருந்தாலும், தனி மனித ஒழுக்கத்தைத் தவறாது கடைப்பிடித்து வந்த பெரியார், கொள்கைப் பற்றுடைய தலைவர், மனதில் துளியும் சலனமின்றி தூய்மையான மனதுடனே இருந்தார். காந்திமதியின் தந்தையார், பெரியாருக்கு அடிக்கடி , உடம்பைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மடல் எழுதுவாராம். அப்போது அதற்குப் பதிலாக, ஒரு முறை “ எல்லோரும் தூர இருந்தபடி, உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால் கூட இருந்து உதவி செய்ய யாரும் இல்லை ... என்னவோ என் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்” என்று எந்தவிதமான உள்நோக்கமுமின்றி , சலிப்புடன் எழுதினார்.
பெரியாரின் கடிதம் கண்ட கனகசபை, தம் மகள் காந்திமதியை அழைத்து வந்து, இவள் தங்களுடன் இருந்து உதவி செய்வாள் என்று கூறினார். தம் தந்தை இறந்த பிறகு ஒரு மாதம் கழித்து, பெரியாரிடம் வந்து சேர்ந்தார். பெரியார் முதலில் அவரை குலசேகரப்பட்டினம் தமிழ் கல்லூரியில் காந்திமதியைச் சேர்த்து தமிழ் வித்வான் கல்வி கற்க வைத்தார். முதல் முறை உடல் நலக் குறைவினால் தேர்வு எழுத முடியாமல் போக, இரண்டாம் முறை, மதுரையில் சென்று தேர்வு எழுதச் சென்றபோது, இவரைக் கண்ட இவருடைய உறவினர் ஒருவர் , அவரை வீட்டில் இருந்து ஓடி வந்து விட்டார் என்று எண்ணி காவல் நிலையத்தில் கொண்டு சென்று அவரை ஒப்படைத்தார். தேர்வு எழுதவே தாம் மதுரை வந்துள்ளதாக வாதித்து , காவலர்களை ஒப்புக்கொள்ளச் செய்தாலும், நேரம் கடந்து போனதால் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
மணியம்மையாரின் முதல் எழுத்தோவியமாக ,’ இராமாயணம் - கந்தபுராணம் ‘ ஒப்பீடு 1944 ஆம் ஆண்டு, கந்த புராணமும், இராமாயணமும் ஒன்றே என்ற கட்டுரையின் முதல் பகுதி மட்டும் வெளியானது. இதன் தொடர்ச்சி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்து நிறைவுற்றது. இக்கட்டுரைகளே 1960 இல் புத்தகமாக வெளி வந்தது. இதுவே அம்மையாரின் , அச்சில் வெளிவந்த முதல் நூலாகும். ‘பெண் கல்வி’ எனும் தலைப்பில் ’தோழர்’ மணியம்மை சொற்பொழிவு , 1944 இல் ஆகஸ்ட் 19 இல் ’ஈரோடு உண்மை விளக்கம் கல்வி நிலையம் ’ , எனும் தலைப்பில் குடியரசில் எழுதியது குறிப்பிடத்தக்கது. ‘தோழர்’ என்று மணியம்மையார் குறிப்பிடப் பெற்றுள்ளார். ஆண், பெண் என்ற இரு பாலருக்கும் பொதுவாக தோழர் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“ தனிப்பட்டோர் நலத்தைவிடச் சமுதாயத்தின் மானமே பெரிது” எனும் கருத்து மணியம்மையாரின் கொடியேற்று விழா உரையில் இடம்பெற்றது. இது அனைவரையும் கவர்ந்தது. கழகத் தொண்டர்களை திரும்பிப் பார்க்கச் செய்தது.
திராவிடர் கழகக் கொடியின் இலட்சியம் “நம்முடைய சமுதாய சுயமரியாதையையே குறியாய்க் கொண்டு நமது இழிவுகளும், தடைகளும் நீக்கப் பெற்று மனிதத்தன்மை பெறுவதே முக்கிய நோக்கம் என்பதையும் , அதையேத் தாங்கள் முக்கியமாகக் கருதுவதோடு அதற்காக தாங்கள் துக்கப்படுகிறோம் என்கிற துக்கக் குறியையும் காட்டுவதற்காகக் கருப்பு வர்ணத்தையும் அதற்காகத் தீவிர கிளர்ச்சியில் இறங்கிவிட்டோம். இனி ஓய மாட்டோம். எது வரினும் எதிர்த்து நிற்போம் என்பதைக் காட்டுவதற்காக நடுவில் சிவப்பு வர்ணத்தையும் வைத்துள்ளதை தமது திராவிடர் கழகக் கொடியில் பயன்படுத்துகிறோம்” என்பதாகும்.
1949க்குப் பிறகு பெரியாரின் துணைவியாராக அவருக்குப் பணிவிடைகள் செய்வதும், ஐயா ஏற்படுத்திய திருச்சி ஆதரவற்ற குழந்தைகளின் இல்லமான நாகம்மையார் இல்லப் பொறுப்பு, பெரியார் - மணியம்மையார் இல்லப் பொறுப்பு ஆகியவைகளே அவருடைய அன்றாடப் பணிகளானது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது தந்தை பெரியாரின் மறைவிற்குப் பிறகுத் தம்முடைய எழுத்துப் பணிகளை மீண்டும் தொடர ஆரம்பித்தார்.
" சீதையைப் பற்றிய ஒரு நடுநிலைமை ஆராய்ச்சி” என்ற கட்டுரையில், வால்மீகி தனது இராமாயணம் என்னும் காவியத்தில் சீதையை ஒரு கற்புள்ள உயர்குணப் பெண்ணாகச் சித்தரிக்க வேண்டும் என்று எண்ணி இருந்திருக்கிறாரா? அல்லது சீதையைக் காம உணர்ச்சிக் காதல் கொண்ட ஒரு சாதாரணப் பெண்ணாகச் சித்தரிக்க வேண்டும் என்று முடிவுவெடுத்திருக்கலாமோ? அல்லது சீதையைக் காம உணர்ச்சிக் காதல் கொண்ட ஒரு சாதாரணப் பெண்ணாகச் சித்தரிக்க வேண்டும் என்று கருதி இருந்திருக்கிறாரோ ? ” என்பதுபோன்ற மிக வித்தியாசமான சிந்தனையை கிளப்பி விடுவது இந்த ஆராய்ச்சியின் மையக்கருத்தாக உள்ளது.
’தேவர்களின் காமவிகாரம்’ என்ற திரட்டு, இந்து சமயப் புராணக் கதைகளை விமர்சிக்கும் கட்டுரையாகும். “ இந்து சமயத் தேவர்களின் எண்ணிக்கை 33 கோடி என்று புராணங்களும், இதிகாசங்களும் சொல்லுகின்றன. இந்த 33 கோடி தேவர்களின் வரலாறுகளைப் புராண இதிகாசங்கள் எழுதவில்லை. முக்கியமான ஒரு சிலரைப் பற்றி மாத்திரம் புராணங்களிலும் , இதிகாசங்களிலும் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இவர்களின் யோக்கியதையைப் பற்றி ஆராய்வதற்காகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது’ என்கிறார்.
’காம விகாரங் கொண்டு திரியும் இந்து மத தேவர்கள் சரித்திரங்கள் அடங்கிய புராணங்களையும், இதிகாசங்களையும் படிப்பதானாலும் கேட்பதனாலும் கடுகளவாவது ஆத்திக புத்தி உண்டாகுமா? கடவுள் பக்தி ஏற்படுமா? மோட்சம் கிடைக்குமா? அல்லது சன்மார்க்க புத்தியாவது உண்டாகுமா? இந்த ஆபாசம் நிறைந்த சாமிகளின் கதைகளைப் படித்தால் அறிவு விளக்கமுறுமா? தேசத்திற்கு நல்ல பெயர்தான் கிடைக்குமா? யோசித்துப் பாருங்கள்’ என்பதே இக்கட்டுரையின் சாரங்கள். மிஸ் மேயோ போன்ற மேனாட்டுப் பெண்கள் இந்தியாவைப் பற்றியும், இந்து சமயத்தைப் பற்றியும் இழிவாக எழுதினார்கள் என்றால் அதற்கு இது போன்ற கீழ்த்தரமான புராணக்கதைகள்தான் காரணமாக இருந்திருக்கும், என்றார்.
”தந்தை பெரியார் அவர்கள் தாழ்த்தப்பட்டோர் முன்னேற வழி” என்ற தலைப்பில் மனமுருகி சொற்பொழிவாற்றியதை மணியம்மையார் தொகுத்து வழங்கியதன் கருத்துகள் , பல ஆண்டிற்கு முற்பட்டதாயினும் அவைகள் இன்றளவிலும் பொருந்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆதி திராவிடர்கள் இந்துக்கள்தான் என்று ஒப்புக் கொள்ளப்பட்டப்போதிலும், அவர்களை இழிவுபடுத்திக் கொடுமை செய்வதில் ஒரு சிறிதும் பின்வாங்குவதில்லை என்றும், அக்கொடுமைகளைத் தடுத்துக் கேட்டால் , மனுதர்ம சாத்திரம் சொல்கிறதென்று, சாத்திரக் குப்பைகளைக் காரணம் காட்டுகிறார்கள் . மதத்தையும் தங்கள் கொடுமைகளுக்கு ஆதரவாக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறு மதத்தின் பெயராலும், சமய நூல்கள் , சாத்திரங்கள், புராணங்களின் பெயராலும் செய்யப்படும் கொடுமைகளுக்கு அளவில்லை . சாதிக்கொடுமைகளை ஒழித்துச் சமத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டுத்தான் தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது. சம உரிமை இல்லாதிருப்பதைவிடச் சாவதே மேல் என்று நினைப்பவர்களின் சுதந்திரத்திற்கு ஒன்றும் தடையாய் இருக்க முடியாது. அதற்குத் தடையாய் இருக்கும் கடவுளும், மதமும், மோட்சமும், நரகமும் அவர்களுக்கு அக்கரையில்லை என்றும் இவ்வாறு ஆவேசமாக ஆற்றிய சொற்பொழிவை அதன் ஆவேசம் சற்றும் குறையாமல் மணியம்மையாரும் தொகுத்து வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
1945 லிருந்து பெரியார் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அவதிப்பட்டார். அத்துனை அவதியிலும் மக்கள் தொண்டிற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அவர்தம் உன்னத மனம் அச்சேவையில் எந்தக் குறையும் வைக்கத் தவறவில்லை. மணியம்மையாரின் தொண்டும், பெரியாரின் உடல் நலத்தைப் பேணிக் காப்பதில் அவர் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியும் ஈடு இணையற்றது.
தந்தை பெரியாரை , மணியம்மையார் மணமுடிக்கும் ஏற்பாடுகள் நடந்த போது, அவைகள் அவரிடம் கலந்து பேசியோ, அவருக்குத் தெரிந்தோ நடந்தது அல்ல. மணியம்மையாரைப் பொறுத்த மட்டில் பெரியாரின் கருத்து என்னவோ அதுவே தம்முடைய கருத்தாகவும் கொண்டு வாழ்ந்தவர். பெரியார் செய்யும் ஒவ்வொரு காரியமும், பேசும் ஒவ்வொரு பேச்சும் கழக நன்மைக்காக மட்டுமே இருக்கும் என்றும் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தார்.
1949 ஆம் ஆண்டு பெரியாருக்கும், மணியம்மையாருக்கும் திருமண அறிவிப்பு வெளியிட்டவுடன், பல குழப்பங்கள் கழகத்திலும், கழகத் தொண்டர்களிடமும் ஏற்பட்டுள்ளது. அறிஞர் அண்ணாவும், 72 வயது நிரம்பிய ஒருவர் 26 வயதேயான ஒரு இளம் பெண்ணை மணப்பது கழக வளர்ச்சிக்கு நல்லது அல்ல, அவதூறுகள் வந்து சேரும் என்று வாதிட்ட போதும், 19 - 06 - 1949 ல் விடுதலை பத்திரிக்கையில் , ‘இயக்க விஷயத்தில் தனக்கு இதுவரை அலைந்தது போல அலைய உடல்நிலை இடம் கொடுக்கவில்லை. தன்னைப் போல பொறுப்பு எடுத்துக்கொள்ளத்தக்க ஆள் வேறு யார் இருக்கிறார்கள். ‘ என்பதில் தனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் எவரும் கிடைக்கவில்லை என்றார். ஆதலால் தனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி , அவர் முலம் பல ஏற்பாடுகள் செய்து விட்டுப் போக வேண்டுமென்று அதிகக் கவலை கொண்டிருப்பதனால், அது பற்றியே திரு. இராஜாஜியிடமும் பேசியுள்ளதாகவும் எழுதினார்.
திருமணம் குறித்து அம்மையார், “ அய்யாவின் திருமணம் என்னும் ஏற்பாடு , ஓர் இயக்கப் பாதுகாப்பு ஏற்பாடே என்பதை விளக்கி விடுதலை நாளேட்டிலும், குடிஅரசு வார ஏட்டிலும் அறிக்கை வாயிலாக வெளியிட்டார்.
திருமண கலாட்டாக்கள் முடிவடைந்து, ஐயாவின் மனைவி என்று சட்டப்படி ஆனபின்னும், ”ஐயாவின் மனைவி”, என்ற அதிகாரத் தோரணையில் ஆரவாரம் செய்வதோ, மேடையில் சென்று சரிசமமாக அமர்வது என்று எதுவும் அம்மையாரிடம் இல்லை. பெரியார் அந்தத் தள்ளாத வயதிலும், நோயின் பிடியிலும் சிக்குண்ட போதும் சமூகம் மேம்பட வேண்டும் என்ற உயரிய கொள்கையில் 3 மணி நேரம் கூட பேசிக்கொண்டிருப்பார். அப்போது, கோடிக்கணக்கான அவருடைய சொத்துக்கு வாரிசாகவும், கொள்கைப் பிடிப்புள்ள, ஆயிரக்கணக்கான தொண்டர்களின் உண்மையான தலைவனாகவும், இருந்த ஒரு பெரிய மனிதரின் மனைவியாகவும் இருந்த மணியம்மையார், கூட்டத்திற்கு அப்பால் ஒரு மூலையில் கிழிந்த கோணிகள், அட்டைகள் அல்லது புத்தகம் கட்டிவந்த காகிதங்களை விரித்து அதில் கழகப் புத்தகங்களை அடுக்கி விற்பனையை ஆரம்பித்து விடுவார். அந்தக் கணக்கைச் சரியாக ஐயாவிடம் ஒப்படைத்தும் விடுவார்.
மணியம்மையார், பெரியாரை கணவர் என்ற உரிமை எடுத்துக் கொண்டு எந்தச் செயலும் செய்ததாகக் தெரியவில்லை. அத்துனை தொண்டர்களும் ஒருமுகமாக இதனை உறுதியிட்டுக் கூறுவதில் இது தெளிவாகிறது. 1957 ஆம் ஆண்டு, சாதி ஒழிப்புக் கிளர்ச்சியில் அன்னையாரின் பங்கு குறிப்பிடத்தக்கது. இதன் ஒரு பகுதியாக, பார்ப்பனர் உணவு விடுதிகளில் முன்புறப் பலகைகளில் உள்ள ‘பிராமணாள்’ என்ற அடைமொழியை அடைப்பதாக (அழிப்பதாக) முடிவெடுக்கப்பட்டது. கிளர்ச்சிக்கு ஆரம்பமாகப் பெரியார் சென்னை அரசுக்கும், ஆளுநருக்கும், கடிதம் ஒன்றை எழுதி, அதனை 27 ந்தேதி, ஏப்ரல் மாதம் 1957 ஆம் ஆண்டின் விடுதலை பத்திரிக்கையில் வெளியிட்டார். அதில் அவர் தமது நோக்கமாக, சாதி மத பேதமற்ற சமுதாயம் நிறுவப்பட வேண்டும் என்பதாகவும், அரசாங்க ஆணைகளெல்லாம் சாதியைக் காட்டக் கூடாது என்றும், நம் நாட்டில் சாதிப்பிரிவு என்பது, அன்றாடப் புழக்கத்தில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதவர் என்ற இரண்டிற்குள் அடங்கி விடுவதை அழகாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிய பாங்கு சுவையானது.
உணவு விடுதிகளில் ‘பிராமணாள்’ என்று பெயர்ப்பலகையில் வெளியிடுவது, தமிழர்களை இழிவுபடுத்தும் செயலாகும் என்பதை, ஒரு தெருவில், ‘இது பத்தினி வீடு’ என்னும் பெயர்ப்பலகை இருந்தால் , மற்ற வீடுகள் ‘வேசி வீடு’ என்னும் பொருள்படாதா? என அறிக்கையில் வெளியிட்டும் பேசியும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும். அத்தனைக்கும் அரசாங்கத்திடமிருந்து தகுந்த நடவடிக்கைகள் ஏற்படாததால், கிளர்ச்சி செய்ய முடிவு செய்யப்பட்டது. பல உணவு விடுதிகளில் பிராமணாள் விடுதி என்ற பெயர் நீக்கப்பட்டு, சைவ உணவு விடுதி என்று மாற்றப்பட்டது. இருப்பினும் இன்றைய பாரதி சாலை என்ற அன்றைய பெல்ஸ் சாலையில் , அப்படிப் பெயர் மாற்றம் செய்ய ஒத்துவராத ஒரு பெரிய உணவு விடுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு கிளர்ச்சி செய்ய முடிவெடுத்து தொண்டர்கள் பலர் புடைசூழ, பெரியாரின் மேற்பார்வையில், விடுதி முதலாளியிடம் அதனை மாற்றியமைக்குமாறு கேட்டுக் கொண்டும் பயனில்லாததால், தாங்களே அழிக்க முன்வந்ததால், போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இடைவிடாத இந்தக் கிளர்ச்சியில், 210 ஆம் நாள் (2-12-57) கைதாகித் தண்டனை பெற்றோரின் எண்ணிக்கை 837 ஆனது. இதில் மணியம்மையாரும், விசாலாட்சி அம்மையார் மற்றும் சுப்பிரமணியம் ஆகியோருடன் மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார். அதே ஆண்டு, 11ஆம் மாதம் , இரண்டு இலட்சம் ஈட்டிகள் திரண்டதாக பெரியாரே வருணித்த மாபெரும் மாநாடு நடந்தது. அதில் பெரியார் சற்றுக் கடுமையாக வெளியிட்ட அறிக்கை அவரைப் பல பிரிவுகளில் பதிவு செய்து கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
1958 ஆம் ஆண்டு , ஜனவரி 19 ஆம் நாளில் வெளியான , ‘இளந்தமிழா புறப்படு போருக்கு’ , என்ற கட்டுரையினால் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனச் செயலாளர் மணியம்மையார் அவர்களை ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் கொண்டு வெளியான ’விடுதலை ’ மீது அரசு வழக்குத் தொடர்ந்தது. தமிழறிஞர்கள் சாட்சி சொன்ன புகழ் பெற்ற வழக்காக இவ்வழக்கு அமைந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் பொருட்டு மு.வரதராசனார் அவர்கள் முன்வந்து சாட்சியமளித்த முதல் வழக்கு இது என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சாதி ஒழிப்பு மாநாடுகள் பல மாவட்டங்களிலும் நடைபெற்றன. குன்றக்குடி அடிகளார், டாக்டர் மா. இராசமாணிக்கனார், டி.பி. சொக்கப்பா, பட்டுக்கோட்டை எம்.எஸ் . கிருட்டிணசாமி பாவலர் பாலசுந்தரம், பாரதிதாசன், வீர.கே.சின்னப்பன், கி.வீரமணி, ச.சோமசுந்தர பாரதியார் முதலானவர்களுடன் மணியம்மையாரும் இணைந்து பங்கேற்று அவற்றை நடத்தினார். இந்த வழக்கில் 100 ருபாய் அபராதமும் கட்டத் தவறினால் ஒரு மாதம் சிறை எனவும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். கழகத்தின் நடைமுறைக்கிணங்க அம்மையார் அபராதம் கட்ட மறுத்து சிறை சென்றார். 1958 ஆம் ஆண்டு, மார்ச் 22ம் நாள் அந்த விடுதி வழக்கு நிறைவுற்று, முரளி கபே, சைவ காபி சாப்பாடு ஓட்டல் என்று பெயர் மாற்றம் பெற்றது.
1964 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் நாள் ஈரோட்டில் நடந்த தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழாவில் அவர், ‘ எனக்கு என்று எந்தச் சொத்தோ பணமோ இல்லை. இருந்ததை எல்லாம் விற்று இந்த ஸ்தாபனத்தில்தான் போட்டு வைத்து உள்ளேன் . ஏதோ மணியம்மைக்கு ஒன்றிரண்டு இருக்கின்றன. அவ்வளவுதான் ஆகும்’ என்று பேசியவரைத் தொடர்ந்து பேசிய மணியம்மையார்,
‘ ஐயா அவர்கள் பேசும்போது தமது சொத்துக்களையெல்லாம் விற்று ஸ்தாபனத்திற்குச் சேர்ப்பித்தது போக எனக்கென்று ஏதோவிட்டு வைப்பதாகக் குறிப்பிட்டார்கள். அப்படி எனக்கென்று என்ன விட்டு வைத்திருக்கிறார்? என்ன விவரம் என்று எனக்கு இதுவரை தெரியாது , அவர்களும் கூறியது இல்லை. எனக்கு அப்படி சொத்து வேண்டிய அவசியமும் இல்லை. எனக்கு என்னையே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய அறிவு எனது தாய்தந்தையர்களால் அளிக்கப்பட்டவளாகத்தான் இருக்கிறேன். அப்படி ஐயா அவர்கள் எனக்கு என்று வைத்து இருப்பாரேயானால் அதையும் இப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களுக்குத்தான் செலவு செய்வேன்’ என்று கூறியது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இதை வெறும் மேடைப்பேச்சாக , கைதட்டலுக்காகச் செய்யாமல், பெரியாரின் மறைவிற்குப் பிறகு,ஈரோட்டில் உள்ள பெரியார் அண்ணா நினைவு இல்லம் ,ஈரோட்டு இல்லம் மற்றும் பெரியார் அவர்கள் மணியம்மையாருக்காக வழங்கிய தனிச்சொத்து அனைத்தையும் பொதுவிற்கு வழங்கியதே அதற்கான சான்று.
தந்தை பெரியார் மறைவிற்குப்பின் 1974 ஆம் ஆண்டு, ஐயாவின் 96 ஆவது பிறந்தநாள் விழாவில் தன் குடும்பம், தான் கடந்து வந்த பாதை, தன் இலட்சியம் ஆகியவைகள் குறித்து மனம் திறந்து முதன் முறையாக வெளிப்படையாகப் பேசக் காண்கிறோம்.
‘ நான் ஒரு இலட்சியத்திற்காகவே வாழ்கிறேன். உன்னையும் ஒரு இலட்சியவாதியாக ஆக்கவே விரும்புகிறேன். என்று 28 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயம் ஐயா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அந்த அருமையான உள்ளத் தூய்மையான வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றன. அதன் உட்பொருளை, மெய்ப்பொருளை புரிந்து கொள்ளும் வல்லமை, அறிவு, தகுதி, அன்று எனக்குப் போதாமல் இருந்த காரணத்தால் அதிகமாக அதைப்பற்றிச் சிந்திக்கவோ மனதில் ஏற்கவோ இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்தாற்போல் என்னைப் பற்றிச் சில வார்த்தைகள்! பெருமைக்காகவோ, அகம்பாவத்திற்காகவோ இவை என்று எடுத்துக் கொள்ளாமல் ஐயாவின் ‘தொண்டு புரிவது இலட்சியம்’ என்று ஒப்படைத்த ஒரு சிறிய ஜீவனின் உள்ளக்கிடக்கை என்பதாக நமது தோழர்கள் நினைத்தால்தான் நான் சொல்வதில் உள்ள உண்மை நன்கு புரியும். தந்தை பெரியார் அவர்களிடம் நான் வந்து சேர்ந்தது எந்தவிதமான பலனை எதிர்பார்த்தோ , பணத்திற்கு ஆசைப்பட்டோ , பெருமை ஆடம்பர உல்லாச வாழ்வு வாழ்வதற்கோ, என் குடும்ப முன்னேற்றம் கருதியோ அல்லது வேறு எந்தவிதமான பலனையும் எதிர்பார்த்தோ , வந்தவள் அல்லவே அல்ல’ என்ற போக்கில் பேசிய பேச்சு, அவருடைய திறந்த புத்தகமான வாழ்க்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், தன்னலமற்ற மனப்போக்கின் வெளிப்பாடாகவும், இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 1974 இல் தி.மு.க. பற்றி பேசுகையில் அம்மையார், ‘இன்றைய தி.மு.க. ஆட்சி கட்டிக் காக்க வேண்டிய அசல் தமிழர் கட்சி’ என்றதும் குறிப்பிடத்தக்கது.
1978இல் தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து எம்.ஜி.ஆர். அரசிற்கு எதிராகப் போராட்டம் நடத்தினார். தமிழக அரசின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தினால் நிர்வாகச் சீர்குலைவு ஏற்பட்டதையும் தம் ஊழியர்களுடன் தக்க உடன்பாடு காணவேண்டி அரசினை வலியுறுத்தி, ‘என்.ஜி.ஓ. பிரச்சனையும் அரசின் விசித்திர அணுகுமுறையும் ‘ என்னும் தலையங்கத்தினை விடுதலை இதழில் மார்ச் 9 ஆம் நாள் 1978 ஆம் ஆண்டில் எழுதிய இந்த எழுத்துக்களே இவர் தம் வாழ்நாளில் எழுதிய இறுதித் தலையங்கமாய் அமைந்தது. அரசை அடக்கு முறையைத் தவிர்க்க வேண்டும் என்பதை அன்புடன் எடுத்துக் கூறிய அதே வேளையில், அரசு ஊழியர்களும் பொறுமையுடன் , தங்கள் கடமையறிந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் வெளிப்படுத்தியது அவர்தம் தாய்மை உணர்வை பறை சாற்றும் விதமாகவே அமைந்திருந்தது. அம்மையார் தம் இன்னுயிர் இழக்கப் போகும் ஆறு நாட்களுக்கு முன்பு அரசு ஊழியர்கள் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடிவடைந்து, போராட்டமும் கைவிடப்பட்டது.
மார்ச் 16 ஆம் தேதி 1978 ஆம் ஆண்டில் மணியம்மையாருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்தது. பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் அன்பான அஞ்சலியுடன் அம்மையாரின் இன்னுடல், தந்தை பெரியாரின் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது, கழகக் கண்மணிகளின் அன்புத்தாய் மணியம்மையார். தாம் இறப்பதற்கு முன்பே, பெரியார் சுயமரியாதைப் பிரசார நிர்வாகக் கமிட்டியின் செயலாளர் பதவியைத் தொடர , திரு கி. வீரமணி அவர்களை நியமனம் செய்கிறேன் என்று எழுதி வைத்திருந்தார் அன்னையார்.
சுயநலமற்ற, தன்னிகரில்லாத் தம்முடைய சேவை மனப்பான்மையால் , தாம் சார்ந்திருந்த கழகத்தின் கொள்கைகளை நிறைவேற்றுவதே தம் கடமையாக எண்ணி வாழ்க்கையையே அர்ப்பணித்த மணியம்மாரை இன்றும் மனமார வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் அன்பான அவருடைய கழகக் கண்மணிகள்! கழகம் சார்ந்தோ அல்லது மணியம்மையார் பெண் குலத்தில் தோன்றிய ஒரு உன்னத பிறவி என்ற முறையிலோ பெண் குலத்திற்கே முன்னுதாரணமான வாழ்க்கை இவருடையது என்றாலும் அது மிகையில்லை.
கவிஞர் பூங்குன்றனாரால் எழுதப்பட்டு, சென்னை கடற்கரையில் அம்மையாருக்கு நடைபெற்ற மாபெரும் இரங்கல் பொதுக்கூட்டத்தில் திரு.டி.எல் மகராசனால் பாடப்பட்ட பாடல் வரிகள் வருமாறு:
அம்மா மறையவில்லை!
அம்மா மறையவில்லை - அய்யா
இலட்சியம் சாகவில்லை!
அம்புவி மீதினிலே - அவர்கள்
பாதையை நாம் தொடர்வோம்! (அம்மா)
அம்மா என்ற சொல்லினிலே - அன்பின்
ஆறு பாயுதடா!
அம்மா என்ற சொல்லினிலே - ஐயா
உருவம் தெரியுதடா (அம்மா)
தியாகத் திருவுருவம் - தந்தை
ஆயுளின் இரகசியம்!
தீயில் மெழுகாம் - இந்தத்
தாயின் கதையடா! (அம்மா)
போராட்ட குணமடா - நெஞ்சம்
புலிவாழும் குகையடா!
ஈரோட்டு எரிமலையில் - பூத்த
எழுச்சியின் சின்னமடா (அம்மா)
மணியம்மையாரின் குணநலன்களை தெள்ளத்தெளிவாக எளிமையாக எடுத்துக் காட்டும் இப்பாடல் அம்மையாரின் வாழ்க்கைக்கு ஓர் சான்றாக நிற்பதும் நிதர்சனம்!
பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36
63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார் தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...
-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...


