Wednesday, November 28, 2012

மீண்டுமொரு சரித்திரம்





காத்திருக்கிறாள்
கன்னியவள்
கனிவான மணமகனுக்காக...

கண்ணில் ஓர் காதலுடன்
கையில் மாலையுடன்
சுயம்வர மண்டபமதில்...

Tuesday, November 27, 2012

Sand and Foam - Khalil Gibran (5)



 (வாலிகையும்) மணலும் , நுரையும்! (5)

பவள சங்கரி

புனையிழையவள் தம் முகத்தை புன்னகையால் முகத்திரையிடலாம்.

சோகத்தில் சோர்ந்த இதயமது, இன்பமான இதயத்துடன், இன்னிசை கீதமதை இதமாக இசைக்கும் அவரின் என்னே உயர் பண்பு.

எவனொருவன் மாதொருத்தியை புரிந்து கொள்கிறானோ, அல்லது மேதைகளை, சோதனைகளுக்குள்ளாக்குகிறானோ, அல்லது மௌனத்தின் மர்மமதை விடுவிக்கிறானோ, அவனொருவன் மட்டுமே சௌந்தர்யமான சொப்பனத்திலிருந்து, எழுப்பி, காலை உணவு மேசையின் மீது அமரச் செய்யக் கூடியவன்.

Monday, November 26, 2012

நம்பிக்கை ஒளி! (8)





பவள சங்கரி

நம்பிக்கை ஒளி!(7)

சுப்ரஜா, வாழ்க்கையில் துயரமான பகுதி என்ற ஒன்றையே கனவிலும் கண்டிராத ராஜா வீட்டு கன்றுக்குட்டியாக துள்ளித் திரிபவள்.கிருஷ்ணா குரூப் ஆஃப் கம்பெனிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனர், கிருஷ்ணராஜின் ஒரே வாரிசு. பார்ன் வித் சில்வர் ஸ்பூன்என்பதால் கஷ்டம் என்பதே தெரியாமல் வளர்ந்தவள். தம் தளராத உழைப்பினால் ஐந்து தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சொத்து சேர்த்து விட்டவர், கிருஷ்ணராஜ். ஒரே மகளை செல்வச் செழிப்பில் திணறச் செய்பவர். நினைத்ததும், கேட்டதும் உடனே கிடைக்கும் வரமும் பெற்றவள். ஆயினும் தான் வளர, வளர கூடவே  சேர்ந்து தம் செல்வச் செருக்கின் காரணமான  குறும்புகளும் அதிகமாகிக் கொண்டிருந்தது ஒரு நிலையில் அது தந்தைக்கு வேதனை ஏற்படுத்துவதாகவே இருந்தது. ஏழ்மையின் துயர் பற்றி எள்ளளவும் சிந்திக்காதவள், அதன் பிடியில் சிக்கித் தவிப்பவர்களின் வேதனையை உணர முடியாமல், மேலும் ரணப்படுத்தக் கூடியவள். தாயின் அதிகப்படியான செல்லத்தினால் எதையுமே தவறு என்று தெரியாமலே செய்து கொண்டிருப்பவள்.

மகளின் திருமண வயது வந்தபோதுதான் தந்தைக்கு அவள் எதிர்காலம் பற்றிய கவலையும் உடன் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. திருமண வாழ்க்கையின் அனுசரிப்பு தம் மகளுக்கு சாத்தியமாகுமா என்ற கவலையும் இருந்தது. அழகும், அறிவும், வசதியும் ஒருங்கே அமையப் பெற்றதால் ஈயாய் மொய்க்கும் இளைஞர் கூட்டத்திடம் தவறாக மாட்டிக் கொள்ள்க் கூடாதே என்ற கவலையும் அதிகமானது. விட்டுக் கொடுக்கும் சுபாவமே அறவே இல்லாமல் இருப்பவளால் திருமண வாழ்க்கையை சரிவர நடத்திச் செல்ல முடியுமா, தன் பெயருக்கும் சேர்த்து பங்கம் வந்துவிடுமோ என்ற கவலையில் பெற்றோர் இருந்தது நியாயம்தானே. அடிக்கடி இதனைத் தம் நெருங்கிய நண்பனும், உறவினருமான தில்லைராசனிடம் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தபோதுதான் தில்லைராசன் கொடுத்த ஊக்கத்தில் ஆறுதல் அடைந்து கொண்டிருந்தார் கிருஷ்ணராஜ். இன்னொருவர் வீட்டில் சென்று அக்குடும்பத்தாருடன் அனுசரித்து வாழும் கலை சுட்டுப் போட்டாலும் தம் மகளுக்கு வரப்போவதில்லை என்பதை தெளிவாகப் புரிந்து வைத்திருந்தவர், நல்ல பையனாகப் பார்த்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டிவந்தது.