Friday, May 11, 2012

பெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம்! (4)



பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்
கருமமே கட்டளைக் கல். - திருக்குறள்

பெரும்பாலும் இதுதான் பெண்களின் நிலையாக இருக்கிறது என்பதையும் கண்கூடாகவே காண முடிகிறது. கைப்பாவையாக ஆட்டுவிக்கப்படுவதும், எளிதாக கைப்பாவையாக ஆகிவிடுவதன் காரணமும் வெகு எளிதாக உணர்ச்சிவயப்படக்கூடிய உளவியல் தன்மைகளே. இதனை நல்வழியில் செயல்படுத்தி சாதனைகள் பல புரிந்து பெண்குலத்திற்கே பெருமை சேர்த்த சுதந்திரப் போராட்டத்தில் அண்ணல் காந்தியடிகளுக்கு உறுதுணையாக தம் சேவைகளையும் ஈந்து, பெண் என்பவள் சமுதாயத்தில் எத்துனை முக்கியமான அங்கம் என்பதையும் நிரூபித்தவர்கள் பலர்.

19ம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் பெண்கள் இயக்கம் பல பாகங்களிலும், பல வடிவங்களிலும் துளிர்விட ஆரம்பித்தது. ஒன்றிணையாமல் அங்குமிங்கும் இயங்கிக் கொண்டிருந்தபடியால் அவைகள் உறுதிப்படவில்லை. பாலகங்காதர திலகர் போன்றவர்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்கு எதிராக நடத்திய போராட்டம், அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. வாழ்க்கையின் உன்னதம் புரிய ஆரம்பித்தது. தங்கள் வாழ்க்கைக்கும் அர்த்தங்கள் உண்டு என்ற விழிப்புணர்வு ஏற்பட்டது.

சுதந்திரப்போராட்டத்தின் போது உப்பு சத்தியாகிரகத்தில் பெண்கள் கலந்து கொள்ள போராடித்தான் உள்ளே நுழைய முடிந்தது. கவிக்குயில் சரோஜினி நாயுடு, முத்துலட்சுமி ரெட்டி, அன்னிபெசண்ட் அம்மையார், ருக்மணிதேவி, லட்சுமிபாய் போன்றோரின் பங்களிப்பு பெண்குலத்தின் பெருமைகளை காலங்காலமாக பறை சாற்றக்கூடியது..

கார்க்கி,மைத்ரேயி போன்ற பெண் தத்துவ ஞானிகளும், சங்க காலத்தில் ஔவை , காக்கைப்பாடினியார், அங்கவை, சங்கவை போன்ற பெண்பாற் புலவர்கள் மற்றும் விறலி, பாணினி போன்ற இசைக் கலைஞர்களும் வாழ்ந்து சரித்திரம் படைத்துள்ளார்கள். ஆய்வாளர்களின் கருத்துப்படி கி.பி 500 காலகட்டங்களில், எழுதப்பட்ட மனுநீதியில் குழந்தைப் பருவத்தில் தந்தைக்கும், மங்கைப் பருவத்தில் கணவனுக்கும், கணவன் இறந்த பிறகு மகனுக்கும் அடிமை என்பது சொல்லப்பட்டுள்ளது. உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், போன்ற கொடுமைகளும் சமுதாயச் சட்டமாகவே இருந்த காலத்தில், பல படையெடுப்புகளைச் சந்தித்த நமது பாரத தேசம், பல நாகரீகங்களையும் சந்திக்க வேண்டிய காலகட்டமாகவும் இருந்தது. அலெக்ஸாண்டர் படையெடுப்பால் கிரேக்க நாகரீகம் பரவியது. முகலாயர்கள் படையெடுப்பால் பாரசீக நாகரீகம் பரவியது. ஆங்கிலேயர்களால் ஆங்கில கலாச்சாரமும் பரவியது. இத்துனைக்குப் பிறகும், நமது பண்பாடும், கலாச்சாரமும், துளியும் பிறழாமல் பாதுகாக்கப்பட்டது நம் பாரதப் பெண்களின் பெருமையாகும்.

1774 - 1855 காலகட்டங்களில் நிறுவப்பட்ட பிரம்ம சமாஜம் மூலமாக வங்க நாட்டின் தங்கம் ராஜாராம் மோகன்ராய் அவர்கள் பெண்கள் சுதந்திரம், சம உரிமை, விதவை விவாகம் போன்ற சீர்திருத்தக் கொள்கைகளை முன்வைத்தார். இவருடைய பெண் கல்வித்திட்டத்தை முழுவதும் ஆதரிக்கும் முகமாக கேசவசந்திர சென் என்பவர் 1838 - 1884 களிலேயே விக்டோரியா பெண்கள் பள்ளியைத் துவங்கினார். இது மென்மேலும் பெருகி 40 பள்ளிகளாக வளர்ச்சியும் கண்டது. பலதார மணத்தை தண்டனைக்கு உரியதாக ஆக்கியவர் ஈஸ்வரசந்திர வித்யாசாகர் என்ற முற்போக்குச் சிந்தனையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1872களில் பெண்ணின் திருமண வயது 14 என்று நிர்ணயிக்கப்பட்டது.

சுவாமி விவேகானந்தரின் பிரதம சீடரான சகோதரி நிவேதிதா, விவேகானந்தர் உதவியுடன் வங்காளத்தில் பெண்கள் பள்ளிகள் பலவற்றைத் தொடங்கியதுடன் அவர்களிடையே இந்துமத உணர்வோடு சமுதாய விழிப்புணர்வும் கல்வி பற்றிய விழிப்புணர்வும் ஏற்படச் செய்தார். சுவாமி தயானந்த சரசுவதி ஆர்ய சமாஜத்தை தோற்றுவித்ததன் மூலமாக ஆண்,பெண் இருவருக்கும் சமத்துவமும், சம வாய்ப்பும் ஏற்பட வழிவகுத்தார்.. அவ்வை இல்லம் என்ற பெண்களின் பயிற்சி மையம் 1930ல் சென்னை மயிலாப்பூரில் துவக்கப்பட்டது. அன்னி பெசண்ட் அம்மையாரின் தலைமையில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட இம்மையம், அவருக்குப் பிறகு திருமதி முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் அருமையாக வழிநடத்தப்பட்டது. தேவதாசி முறையை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவரும் இவரே. சுபாஷ் சந்திர போஸின் தேசிய ராணுவப் படையில் பெண்கள் பிரிவில் கேப்டன் லட்சுமி படைத் தலைவராக இருந்ததும் நினைவுகூரத்தக்கது.

பெண்கள் பர்தா போடும் முறையும் படையெடுத்து வந்த அந்நிய ஆடவரிடமிருந்து அவர்களைக் காக்கும் பொருட்டே ஏற்பட்டாலும், அது அவர்களுடைய சுத்ந்திரத்திற்கு முற்றிலும் தடையாகவே இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இடைக்கால இந்தியப் பெண்களுக்கு, குறிப்பாக இந்து மதம் சார்ந்த பெண்களுக்கு கல்வி கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு வீட்டு வேலைகள் தொடர்பான கல்வி மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் ஒரு பிரபலமான இந்திய தத்துவவாதி வாட்சாயனர், பெண்கள் ஆய கலைகள் அறுபத்தி நான்கிலும் தேர்ச்சி கொள்ளக் கூடியவர்கள், நூற்பு, சமையல், மருத்துவ அறிவு, பாராயணம் போன்ற பல கலைகளும் அதில் அடங்கும் என்று உறுதிபடக் கூறியுள்ளதும் கருத்தில் கொள்ள வேண்டியது.

இந்து மதம் சார்ந்த சமுதாயத்தை மற்ற சமயங்களுடன் ஒப்பிடும்போது, புத்தம், சமணம் மற்றும் கிறித்துவ, சமயம் சார்ந்த சமூகங்களில் சற்று அதிகப்படியான கனிவுடனான பார்வை இருந்தது. மற்ற சமூகங்களில் பெண்களின் வாழ்க்கைத்தரம் சற்று மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகவே இருந்தது எனலாம். எளிதாக கல்வி பெறும் நிலையும் இருந்தது. அசோகர் காலத்தில் பெண்கள் மதபோதகர் பணியிலும் பங்கெடுத்துக் கொண்டனர். . புகழ் பெற்ற பயணி யுவான் சுவாங்கின் கூற்றுப்படி, ஹர்ஷவர்த்தனனின் சகோதரி ராஜ்யஸ்ரீ , அவரது காலத்தில் ஒரு சிறந்த அறிஞராக இருந்தார் என்பதும் விளங்குகிறது. மற்றொரு உதாரணம் மன்னர் அசோகரின் மகள். சங்கமித்திரை தன் சகோதரன் மகேந்திரனுடன் இலங்கைக்கு புத்தமத போதனைக்காகச் சென்றார் என்பதும் தெரிய வருகிறது.

நாடு சுதந்திரம் பெற்ற பின்பும் பெண்கள் தங்கள் பிரச்சனைகளுக்காக போராட வேண்டிய நிலையில் இருந்ததும் தவிர்க்க முடியாததாக இருந்தது.சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திரப்பிரதேசத்தில் ரோசம்மா என்றொரு சாதாரண ஏழைப் பெண்ணைப்பற்றி நம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது நினைவிருக்கலாம். குடிகார கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு, அடியும் உதையும் பட்டு, உழைத்து ஓடாய்த் தேய்ந்து போன நிலையிலும் வயிற்றுக்கு சோறு இல்லாத நிலையில் வேதனையில் சுருண்டு, முடங்கிவிடவில்லை அப்பெண்.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

என்று பாரதி பாடி வைத்ததை உணர்ந்திருந்தவள், வீட்டை விட்டு வெளியே வந்து மதுக்கடையை நடத்தக்ககூடாது என்று போராடினாள். இதைக்கண்ட பாதிக்கப்பட்ட மற்ற பெண்க்ளும் ஒன்றிணைய போராட்டம் வலுப்பெற்றது. இச்செய்தி காட்டுத்தீயாக நாடு முழுவதும் பரவ, எழுச்சி கொண்ட பெண்கள் உரக்க குரல் எழுப்ப, ஆட்சியாளரின் செவியில் சென்றடைந்த அந்தக் குரல்கள் வெற்றிகண்டன.ஆம், ஆந்திரபிரதேசத்தில் மது ஒழிப்பு போராட்டம் வெற்றி பெற்றது. ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர ஆரம்பித்தது. இன்று ஆயிரக்கணக்கான ரோசம்மாக்களையும், சரோஜினி நாயுடுக்களையும் நாடு கண்டுகொண்டுதான் உள்ளது. சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு பலவிதமான வாக்குறுதிகள் பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டது. பல கனவுகளை பெண்களுக்கு ஏற்படுத்தியது. ஆனாலும் அவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை என்பதே நிதர்சனம். 1960 - 70களில் மீண்டும் பெண்ணிய இயக்கங்கள் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேதா பட்கர் போன்றோர் களமிறங்கி செயல்பட்டதோடு பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் வெற்றி கண்டனர். விலைவாசி ஏற்றம், நிலவுடமை உரிமை, , விவசாயிகள் இயக்கம், என்று அனைத்திலும், அரசியல் கட்சிகளுடனும், தனிப்பட்ட முறையிலும், பங்குபெற ஆரம்பித்தார்கள். வரதட்சணை கொடுமைகளை எதிர்த்துப் போராட்டமும் வலுப்பெற்றது. 1997ல் பாத்திமா பீவியால் முதல் குழு அமைக்கப்பட்டு பெண்களின் சுயசக்தி (Women’s Empowerment) பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இக்குழு வங்கிக்கடனுதவி மூலமாக பெண்கள் குழுக்களாக இணைந்து பொருளீட்டவும், தம் திறமைகளை வெளிக்கொணரவும் வழிவகுத்தது. பல குடிசைத் தொழில்களும் வளர்ச்சி கண்டது.

1960களில் காமராசர் மதிய உணவுத் திட்டமும், இலவசமாக பால் வழங்கும் திட்டமும் கொண்டுவந்ததன் மூலமாக கல்வியின் விழிப்புணர்வும் ஏற்பட்டது.சாதிய உணர்வு தலையெடுத்தபோது, அதனைக் களைந்தெறிய பெண்கள் பொதுத் தளத்திற்கு வரவேண்டும் என்று குரல் எழுப்பியவர் டாக்டர் அம்பேத்கர். பெண்களின் பேறுகால விடுப்பிற்காகவும் அவர் போராடியதும் குறிப்பிடத்தக்கது.

பெணகளின் வாழ்வியலின் மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்டவரில் குறிப்பிடத்தக்கவர் ஈ.வெ.ரா.பெரியார் அவர்கள். சொல்வீரராக மட்டுமல்லாமல், செயல் வீரராகவும் தம் குடும்பத்திலேயும், பெண்களுக்கான முற்போக்குச் சிந்தையை செயல்படுத்திக் காட்டியவர். இந்திய அளவில் ஆண், பெண் உறவில் சமத்துவம் ஏற்படும் வகையில் பெண்களின் போராட்டம் அவள்ளவு எளிதாக பயனளிக்கக் கூடியதாக இல்லை என்பதையும் மறுக்க இயலாது. முன்செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு பின்னடைவு காத்துக் கொண்டுதான் இருக்கிறது. அவைகளையும் மீறித்தான் பெண்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. பல்வேறு முரண்பாடுகளை, குடும்பத்திலும், பணியிடங்களிலும் தங்கள் வாழ்நாள் முழுவதும் சந்திக்கும் நிலையும் சில இடங்களில் இருக்கத்தான் செய்கிறது.

நவீன இந்தியாவில் பெண்களின் நிலையில் பெரும் முரண்பாடுகள்தான் இருக்கிறது. ஒருபுறம் வெற்றியின் உச்சத்தை விரைவாக எட்டும் அவர்கள் மறுபுறம் தம் சொந்த குடும்ப உறுப்பினர்கள் மூலமாகக்கூட பலவிதமான முட்டுக்கட்டைகளையும், எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள். பண்டைய கால பெண்களை ஒப்பு நோக்கும் போது இன்றைய நவீன யுகப் பெண்கள் பல சாதனைகள் புரிந்தவர்களாக இருப்பினும், இன்னும் இவர்கள் கடக்க வேண்டிய தொலைவு மிக அதிகம் உள்ளது. குடும்பம் என்ற பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியே வரும் பெண்கள், பல்வேறு திறமைகள் என்ற கவசங்களுடன் போர்முனைக்குச் செல்வது போன்றுதான் இருக்கிறது இன்றைய வாழ்க்கை நிலை. இந்தியாவில் இன்றளவும் அந்த பாரபட்சம் உள்ளதென்பதை ஆண், பெண் பாலின விகித கணக்கெடுப்பு நிரூபிக்கிறது. இந்த 2012 கணக்கெடுப்பின்படி, 1000 ஆண்களுக்கு 940 பெண்களே உள்ளனர் என்பதும் வருத்தத்திற்குரிய விசயம்.

இத்தகைய பெரும் போராட்டங்களுக்கிடையே மலர்ந்த பெண்களின் வாழ்வில் இன்றைய பிரச்சனைகளும், ஊடகங்கள், விளம்பரங்கள போன்றவைகளால் அவர்தம் வாழ்க்கை சீர் குலைவதும் நாம் கூர்ந்து நோக்கத்தக்கது.

மேலும் பேசுவோம்.

Wednesday, May 9, 2012

ரௌத்திரம் பழகு!


மணிக்கூண்டு சிக்னல். கடைவீதியின் மிக முக்கியமான ஒரு நாற்சந்தியின் சிக்னல். ஈரோட்டின் ஜவுளிச் சந்தை கூடுமிடத்திற்கு வெகு சமீபம் என்பதாலும், அன்று சந்தை நாள் என்பதாலும் கலகலவென்று தெருவெல்லாம், சரக்கு வண்டிகளும், இருசககர, நான்கு சக்கர வாகனங்களும் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. சிக்னலில் சிவப்பு வண்ணம் வந்து அந்த மூன்று நிமிடம் காத்திருக்கும் பொறுமை கூட இல்லாமல் சிக்னல் விழுவதற்குள் அந்த இடத்தைக் கடந்துவிட வேண்டும் என்ற அவசரம் அத்துனை பேருக்கும் இருந்தது. எத்துனை விதமான மனிதர்கள், அவர்தம் குணங்களை இந்த ஒரு சில நிமிடங்களில் கணிக்க முடியும் அளவிற்கு அவர்தம் போக்கு. இவ்வளவு அவசரமாக வந்தும் சிக்னலில் சிவப்பு விளக்கு விழுந்து விட்டதே என்று சர்ர்ர்ர்ர்ரென்று வந்து வண்டியை நிறுத்தி விட்டு சிக்னலைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவர்கள் மத்தியில் சற்றே ஓரமாக நின்றிருந்த ஒரு இரு சக்கரவாகனப் பெண்மணி முன்னால் தெரிந்த ஏதோ மனித தலையை அடையாளம் கண்டு மெல்ல தம் வண்டியை ஓரமாகவே உருட்டிக் கொண்டு நாலெட்டில் அந்த மனிதரை நெருங்கி, சற்றும் தாமதிக்காமல் தன்னால் இயன்ற மட்டும் கையை ஓங்கி அந்த மனதனின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டவுடன் அத்தனை பேரும் ஸ்ஸ்ஸ்ஸ் என தன் கன்னம் நோக்கி தன்னிச்சையாக கையைக் கொண்டுபோகும்படி ஆனது.. தொலைச்சுப்புடுவேன்.. எங்கே போயிடுவே. மரியாதையா வந்து சேரு. .........என்று மேலும் சொன்ன சில வார்த்தைகள் சரியாகக் காதில் விழவில்லை. அதற்குள் சிகனலில் மஞ்சள் விளக்கு வரவும் வாகனங்கள் கிளம்பத் தயாராகின.. அடுத்த பச்சை விளக்கில் அனைத்து வாகனங்களும் முந்திச்செல்ல முற்பட்டு, அதில் அடி கொடுத்தவரும், அடி வாங்கியவரும் ஆளுக்கொரு திசையில் பறக்க ஆரம்பித்து விட்டார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த என்னால்தான் இந்த சம்பவத்தை மறக்கவே முடியவில்லை. அப்படி என்ன கோபம் வந்துவிடும் ஒரு பெண் பிள்ளைக்கு. எப்படியும் 30 வயது இருக்கும்.. இந்த வயதில் நடுத்தெருவில் ஒரு ஆடவனை அடிக்கும் அளவிற்கு எத்துனை துணிச்சல் இருக்க வேண்டும்.. சே.. கொஞ்சமும் சபை நாகரீகம் தெரியாத கேவலமான குணம் என்று திட்டிக்கொண்டே சென்றேன்.. அன்று முழுவதும் அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்த ஆக்ரோஷமும், அந்த ஆடவன் நடுங்கி பின் வாங்கியதும் அடிக்கடி மனக்கண் முன்னால் வந்து போய்க் கொண்டிருந்தது......

பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடந்து கொண்டிருப்பதால் நாலைந்து நாட்களாக அதே நினைவாக இருந்தபடியால் மெல்ல, இந்தப் பெண் அடி கொடுத்த விசயம் சுத்தமாக மறந்துவிட்டது. ஒரு வாரம் சென்றிருக்கும். ஒரு நாள் மாலை பள்ளிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன்.. கடைவீதியில் வந்து கொண்டிருக்கும் போது என் இரு சக்கர வாகனம் கூட நுழைய முடியாத அளவிற்கு ஒரு இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. போக்குவரத்து இடைஞ்சல் ஆக நேர்ந்த போது போக்குவரத்து காவல் துறை அதிகாரி வந்து அங்கு கூட்டத்தை விலக்க வேண்டியதாக இருந்தது. யாரோ ஒருவன் நன்கு அடி வாங்கியிருந்தான். குடித்திருப்பவன் போன்று உளறிக் கொண்டும் இருந்தான். போலீஸாரும் உள்ளே சென்று கூட்டத்தை விலக்கி அவனை மிரட்டி விட்டுச் சென்றார். அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் எட்டிப்பார்க்க நினைத்த போது, அதே முகம்... கோபமான அதே முகம், கூட்டத்தை விலக்கிக் கொண்டு யாரையோ வசைமாரி பொழிந்து கொண்டு கையோடு ஒரு பெண்ணை தரதரவென இழுத்துக் கொண்டு வேகமாக வந்து தன் வ்ண்டியில் ஏறியதோடு பின் இருக்கையில் கையோடு கூட்டிவந்த அந்தப் பெண்ணையும் அமர்த்திக் கொண்டு யாரையும் திரும்பிக்கூட பாராமல் விர்ரென்று வண்டியைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டார், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க..... அந்த அம்மாவைப் பார்த்தவுடன் எனக்கு திரும்பவும் அன்று அடி வாங்கியவனின் நினைவு வந்தது. ஒரு வேளை திரும்ப அவனாகவே இருக்குமோ என்று எண்ணி திரும்பிப் பார்த்தால் இது வேறு ஒரு ஆள்.

அட....ச்சை.. என்ன பொம்பிளை இது.. கொஞ்சமும் அடக்கமில்லாமல் இதே பொழைப்பாகத் திரிகிறதே.. யார்தான் இதைத்தட்டிக் கேட்பது. பெண் குலத்திற்கே அவமானச் சின்னம் போல

என்று எண்ணிக் கொண்டே, முனுமுனுத்தவாறே கிளம்பினேன்.. அடுத்து ஒரு வாரம்தான் இருக்கும் இன்னொரு இடத்தில் ஏதோ தகராறு நடந்து கொண்டிருந்தபோது கட்டாயம் இந்தம்மாதான் அதற்கு காரணமாக இருப்பாள் என்று மனம் நம்ப ஆரம்பித்துவிட்டது. அந்தம்மாவின் தலை போல் தெரிந்தது என்னுடைய கற்பனையாகக்கூட இருக்கலாமோ என்னவோ அதுவும் புரியவில்லை. ஆனாலும் அந்தம்மாவின் மீது ஒரு வெறுப்பே வளர ஆரம்பித்துவிட்டது.

பரிட்சையெல்லாம் முடிந்து விடுமுறை ஆரம்பித்து விட்டது. அன்று ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரியும் என் சகோதரரைக் கண்டு ஒரு குடும்ப விசயம் பேச வேண்டும் என்று சென்றேன். அண்ணன் வேலையில் மும்முரமாக இருந்ததாலும், அவருடைய அறையில் யாரோ வாடிக்கையாளர்கள் பேசிக்கொண்டிருப்பதும் தெரிய, வெளியில் இருந்த இருக்கையில் அமர்ந்து அங்கிருந்த தினசரிகளை புரட்டிக் கொண்டிருந்தேன். உள்ளே இருப்பவர்கள் வெளியே வந்தவுடன் போகலாம் என்று காத்திருந்தேன். சற்று நேரத்தில் அறைக்கதவு திறந்து யாரோ இருவர் வெளியில் வருவது தெரிந்தது.. தினசரியில் சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருந்த ஒரு செய்தியின் இறுதிப்பகுதி.. அதை மட்டும் படித்துவிடலாமே என்று வேகமாக பார்வையை ஓட்ட, ஏதோ தெரிந்த குரல் போல கேட்கவும் குரல் வந்த திசை நோக்கி பார்வையைத் திருப்ப, அங்கு என் வெறுப்பிற்கு முழுவதுமாக பாத்திரமாகியிருந்த அதே பெண்மணி. இங்கு என்ன செய்கிறது இந்த அம்மணி என்று யோசிக்கும் போதே, மேலாளர் அறையைக் காட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தது உதவி மேலாளரிடம்.. ஒரு புழுவைப்போல அந்த அம்மாவைப் பார்த்த என் பார்வை அவரை அத்துனை சங்கடப்படுத்தியிருக்க வாய்ப்பிருக்குமா என்று தெரியவில்லை.. அப்படி நெளிந்து கொண்டிருந்தார் பாவம்..

அறையினுள் சென்று சகோதரரிடம் கேட்ட முதல் கேள்வி, இப்போது ஒரு அம்மணி வந்து செல்கிறதே அது யார் என்பதுதான்.... சகோதரரும், தன்னுடன் அழைத்து வந்திருந்த ஒரு பெண், கணவனால் கைவிடப்பட்டவர் என்றும், அவளுக்கு ஒரு சிறுதொழில் கடன் வேண்டியும் அழைத்து வந்திருந்ததாகச் சொன்னார். உடனே நான், “அண்ணா அந்த அம்மா சம்பந்தமாக எது செய்தாலும் பல முறை யோசித்து செய்யுங்கள். மிக மோசமான பொம்பிளை போலத் தெரிகிறது, சரியான சண்டைக்காரி. நாளைக்கு உங்களுக்கு ஏதும் பிரச்சனை வந்துவிடப் போகிறதுஎன்றேன். அண்ணனும், அதுசரி, விசாரிக்காமல் கொள்ளாமல் அவ்வளவு எளிதாகவெல்லாம் தூக்கிக் கொடுத்து விடமாட்டோம் அரசாங்கப் பணத்தைஎன்று சொன்னதும்தான் மனம் ஆறியது..

அடுத்த நாள் காலை வழக்கம்போல ரயில்வே காலனி மைதானத்தில் நடைப்பயணம் சென்றுவிட்டு திரும்பலாம் என்று எண்ணியபோது சற்று அதிகமாக நடந்த களைப்பு அங்கிருந்த பெஞ்சில் சிறிது நேரம் உட்கார்ந்து ஓய்வெடுக்கத் தூண்டியது. அப்போது அங்கு டீ விற்றுக் கொண்டிருந்தவர் வைத்திருந்த எப்.எம். ரேடியோவில் ஒரு குட்டிக்கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள்... அதாவது, வியாச முனிவர் ஒருநாள் நகரத்தினுள் நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு புழு ஒன்று வெகு வேகமாக அந்த இடத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது. இதைக் கவனித்த வியாசர் அப்படி அவசரமாக எந்த கோட்டையைப் பிடிக்கப் போகிறாய்”? என்று கேட்க,

அதற்கு அந்தப்புழு,”சுவாமி, தொலைவில் ஒரு வாகனம் வரும் அதிர்வு தெரிகிறது.அதனால் என்னை காப்பாற்றிக் கொள்ளவே இத்துனை வேகமாகச் செல்கிறேன் என்றது.

அதற்கு வியாசரும், “அப்படி உன்னைக் காப்பாற்றிக் கொண்டு நீ என்னசாதிக்கப் போகிறாய். ஒரு அற்பப் புழுவான நீ உயிரோடு இருந்துதான் என்ன சாதிக்கப் போகிறாய், உன்னால் யாருக்கு என்ன இலாபம்”? என்றார்.

அந்த புழு அவரைப் பார்த்து உங்கள் அளவிற்கு நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுபோல என் அளவிற்கு நானும் செய்து கொண்டுதான் இருக்கிறேன். அதனால் இதில் யார் பெரியவன் என்ற சர்ச்சையெல்லாம் வேண்டாம் என்றது.

வியாசரோ மிகவும் கோபப்பட்டு என்னுடன் உன்னை இணைத்துப் பேச என்ன தகுதி இருக்கிறது உனக்கு. நீயும் நானும் ஒன்றா.. தவத்தில் சிறந்து விளங்கும் நான் எங்கே, அற்பமாகச் சுற்றித் திரியும் நீ எங்கேஎன்று சத்தம் போட ஆரம்பித்தார்.

அந்தப்புழு சற்றும் தயங்காமல், “ஐயனே, நான் என்னை என்றுமே பெரியவனாக நினைத்துக் கொண்டதே இல்லை. ஆனால் தலைப்பரட்டை புழுவிற்கும், மற்ற சிறு புழு வகைகளுக்கும் நான் உயர்ந்தவன்தான். அதேபோல தேவர்களுக்கு ஒருபடி தாழ்ந்தவர்தான் நீங்கள். என் அளவிற்கு என்னுடைய இன்பமோ அல்லது துன்பமோ பற்றி ஏதும் உங்களுக்குத் தெரியுமா? அப்படியிருக்க நீங்கள் எப்படி உயர்ந்தவர்கள் ஆவீர்கள்’? என்று வினவ அப்போதுதான் வியாசருக்கு உரைத்தது தன்னுடைய தவறு என்ன என்று

இந்தக் கதையை சொல்லி முடித்தவர், உலகத்தில் யாருமே அற்பமானவர்கள் அல்ல, ஏதோ ஒரு காரணத்திற்காக இயற்கையால் படைக்கப்பட்டவர்கள். காரணங்கள் இல்லாமல் காரியங்கள் இல்லை. அதனால் எவரையும் உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ மதிப்பிடக்கூடாது என்று பேசிமுடித்தார்.

நேரம் ஆகிவிட்டபடியால் எழுந்து வீடு நோக்கிச் செல்லும் போது வ்ழியெல்லாம் ஏதோ மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. அந்தக் கதை என் மனதை மிகவும் பாதித்திருந்தது. ஏனோ அந்த சண்டைக்கார அம்மணியின் முகம் நினைவில் வந்தது.. தான் அவ்வளவு மோசமாக நடந்து கொண்டிருக்கக் கூடாதோ.. அவருடைய சூழ்நிலை என்ன ஏது என்று கூட யோசிக்காமல் சகோதரனிடமும் அவரைப்பற்றி ஒரு மோசமான அபிப்ராயத்தை திணித்து விட்டோமே என்று வருத்தம் ஏற்பட்டது.

அதே உறுத்தலுடன் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது, வழியில் முதன்முதலில் அந்த அம்மையாரிடம் அறை வாங்கிய அந்த ஆடவனைக் காண முடிந்தது.. இன்னொருவனிடம் ஏதோ பேசிக் கொண்டிருப்பது தெரிய, மெதுவாக நெருங்கிச் செல்லும் போது , இன்னொருவன் , என்னப்பா ஆச்சு அந்த பிரச்சனை .. அதான் அந்த குருட்டுப் பிள்ளையை கெடுத்துப்போட்டு ஒதுக்கிவிட்டு வந்தாயே. இப்ப என்ன ஆச்சு அந்த ஆசிரமத்துக்காரம்மா உன்னை இழுத்துக்கிட்டுப் போச்சே.”? என்று கேட்க,

அவனும், “அதை ஏம்ப்பா கேக்கற, அந்த குருடி அனாதைச் சிறுக்கிதானேன்னு சாதாரணமா நினைச்சி உட்டுப்போட்டு வந்துட்டேன். ஆனா அந்த ஆசிரமத்துக்காரம்மா என்னை துரத்தி துரத்தி அடிச்சி அந்தப் புள்ளைய கட்டி வச்சிப்புடிச்சி... அதோட நிக்காம, கண் வங்கில போராடி அந்த புள்ளைக்கு பார்வை கிடைக்கவும் வழி செய்துடிச்சி.. இப்ப அந்தம்மாதாம்ப்பா எங்களுக்கு தெய்வம்.. எங்களுக்கு மட்டுமா, அந்த ஆசிரமத்துல வந்து பாரு எத்தனை பொம்பிளைகள், பெரிசுகள்னு அனாதைகளா அவங்களோட பாதுகாப்புல இருக்காங்கன்னு.. ஒரு கல்யாணம் இல்லை, சொந்தபந்தமும் இல்லை, தன்கிட்ட இருந்த சொத்தெல்லாம் இந்த ஆசிரமத்துக்கு எழுதி வச்சதோட, உடம்பாலயும் உழைச்சு ஓடாத்தேயற அந்தம்மா இன்னொரு மதர் தெரசாப்பா.. என்ன அந்த தெரசாம்மா அமைதியே உருவாக, அன்பே தெய்வமாக வாழ்ந்தாங்க. இந்தம்மா கொஞ்சம் பாரதியின் ரௌத்திரம் பழகுறாங்க.. என்னைப்போல ஆளுங்களை சமாளிக்க அதுவும் தேவையால்ல இருக்கு. அன்னைக்கு உட்ட ஒரு அறையில பாரு இன்னைக்கு ஒழுங்கா அந்த ஆசிரமத்துக்கு பாதுகாவலனாவும், அந்த குருட்டுப் பொண்ணு வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாவும் இருக்கிறேனே..என்று சொன்ன போது,

என் கன்னத்தில் யாரோ ஓங்கி அறைந்தது போல இருந்தது. அவசரப்பட்டு தீர விசாரிக்காமல் கூட எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோமே என்று மனம் நொந்து போனாலும், வீட்டிற்குப் போய் குளித்துவிட்டு, முதல் வேலையாக வங்கிக்குச் சென்று சகோதரனிடம் நடந்ததெல்லாம் கூறி ,அந்தம்மா கூட்டி வந்த அபலைப் பெண்ணிற்கு தொழிற்கடன் பெற உதவ வேண்டும் என்று எண்ணிய போதுதான் மனபாரத்தை இறக்கி வைத்தது போல ஒரு நிம்மதி கிடைத்தது....

Tuesday, May 8, 2012

இரபீந்திரநாத் தாகூர்


Chain Of Pearls (7 May 1861 – 7 August 1941 / Calcutta)


Mother, I shall weave a chain of pearls for thy neck
with my tears of sorrow.

The stars have wrought their anklets of light to deck thy feet,
but mine will hang upon thy breast.

Wealth and fame come from thee
and it is for thee to give or to withhold them.
But this my sorrow is absolutely mine own,
and when I bring it to thee as my offering
thou rewardest me with thy grace.
Rabindranath Tagore



முத்துச்சரம்

எம் கண்ணீர் முத்துக்களால்
உம் கழுத்திற்கு முத்துச்சரம் கோர்த்தேன் அன்னையே

நட்சத்திரங்களின் ஒளியால் உருவாகிய கொலுசு உம் பாதங்களின் அணியாகி மேலும் அழகு சேர்க்கிறது
ஆனால் என்னுடையதோ உமது மார்பகத்தின் மீதன்றோ அழகூட்டுகிறது

செல்வமும் கீர்த்தியும் வருவது உம்மிடமிருந்து
அவைகளைக் கொடுப்பதோ அன்றி தடுத்து நிறுத்துவதோ உம்மையேச் சாரும்.
ஆயின் இந்த துக்கம் முற்றிலும் என்னுடையது,
உமக்கதை காணிக்கையாக்கும் தருணமதில் நீர் உமது கருணையெனும் வெகுமதியை எமக்களிப்பாயாக.


Monday, May 7, 2012

நம் தோழி இதழில் என் குறுநாவல்





இந்த மாத நம் தோழி இதழில் என் குறுநாவலை முழுவதுமாக வெளியிட்டிருக்கிறார்கள். நம் தோழி இதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஷ்யாம் அவர்களின் அழகான ஓவியங்களுக்கும் நன்றிகள் பல.


Sunday, May 6, 2012

காற்றில் ஆடும் தீபங்கள் (3)

வாழ்வியல் வண்ணங்கள்!

தீபம் (3) – தாளம் தப்பிய ராகம்?

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று நாம் கால்ங்காலமாக மூளைச்சலவை செய்யப்பட்டு வளர்ந்து வந்துவிட்டோம் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அதையே தெய்வ வாக்காக எடுத்துக் கொண்டு வாழ்ந்த பெண்டிரின் மன நிலைமை இன்றைய பல பெண்களுக்கு சற்றும் இல்லை என்றே தோன்றுகிறது. கல்வியறிவில் நல்ல முன்னேற்றம், பொருளாதார சுதந்திரம் பணியிடங்களில் உயர் பதவிகள் இவைகளெல்லாம் நல்ல மாற்றங்களை சமுதாயத்தில் ஏற்படுத்தியிருந்தாலும், ஒரு சில பிரச்சனைகளையும் உருவாக்காமல் இல்லை. கிடைத்தற்கரிய ஒரு பொருள் தம் கையில் கிடைத்து விட்டால் அதைச் சரியாகப் பயன்படுத்தும் வழிவகையறியாத ஒரு சிறு குழந்தையின் மன நிலையில் இது போன்ற சில சம்பவங்களும் முன்னுதாரணங்களாகிவிடுகின்றன..சரிசெய்ய முடிந்த பிரச்சனைகள் படிப்பினையாக மாறி நல்வழி காட்டினாலும், சரிசெய்ய முடியாத சில தவறுகள் உயிரையே பலி வாங்குவதும் உண்டு. அப்படி ஒரு சம்பவம் ஏனையோருக்கு வேண்டுமானால் பாடமாக அமையலாம். சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினருக்கோ இது தீராத வேதனையாகவன்றோ ஆகிவிடுகிறது.

”ஆசிர்வாதங்களைக் கணக்கில் கொள், பிரச்சனைகளை அல்ல” என்பார்கள். ஆனால் நாம் எப்போதும் நம் பிரச்சனைகளையும், நமக்குக் கிடைக்காததையும் பற்றித்தான் அதிகமாக சிந்திக்கிறோம். கிடைத்த பேறுகளை எண்ணி பெருமிதம் கொள்ள மறந்து விடுகிறோம். ஒரு மனிதரிடம், அவர் எத்தனை பெரிய அறிவாளியாக இருந்தாலும், எல்லா நல்ல குணங்களும் ஒருசேர அமைந்திருப்பது சாத்தியமல்ல. குறை நிறைகளுடன் இருப்பதுதான் மனித மனம். அதை உணர்ந்து கொண்டால்தான் வாழ்க்கை இனிமையாகக் கழியும். அப்படியில்லாமல், தம்முடைய வாழ்க்கைத் துணையிடம் அதிகமாக எதிர்பார்க்கும் போதுதான் பிரச்சனை விசுவரூபமெடுக்கிறது. அப்படி ஒரு ச்ம்பவம் இந்தப் பெண்ணின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போட்டிருக்கிறது பாருங்கள்!

சாதனா கல்வி, கலை, அழகு, அறிவு என அனைத்திலும் மிகச்சிறந்து ஒரு செல்வச்சீமான் குடும்பத்தில் மூத்த மகளாகப் பிறந்தவள். தந்தையின் செல்லமும், செல்வமும் அவளை அளவிற்கதிகமான தன்னம்பிக்கையும், கர்வமும் ஊட்டி வளரச் செய்தது. வாழ்க்கையில் தனக்கு அனைத்துமே உயர்ந்ததாக மட்டுமே அமைய வேண்டும் என்ற உறுதியான எண்ணம் கொண்டவள். பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை மனமுவந்து ஏற்றுக் கொண்டாள், ஆனால் அதிக எதிர்பார்ப்புடன்! கணவனின் வெளித்தோற்றமும், கல்வியும், வசதி வாய்ப்பும் அனைத்தும் அவளுக்கும் திருப்தியளிப்பதாகவே இருந்தாலும், போகப்போக தன் அறிவுக்குத் தகுந்த சமமான அறிவாளியாக தன் கணவன் இல்லை என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில் இரண்டு குழந்தையும் பிறந்துவிட்டது. நாளுக்கு நாள் தனக்கு பொறுத்தமானவனாக கணவன் இல்லை என்ற எண்ணம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. வெறுப்பைக் கொட்ட ஆரம்பித்தாள். கணவனின் ஒவ்வொரு செய்கையின் மீதும் குற்றம் காண ஆரம்பித்தாள். குடும்பத்தில் அமைதி குறைய ஆரம்பித்தது.. இந்த நேரத்தில்தான் விதி ஒரு நண்பனாக உள்ளே நுழைந்தது.

கணவனின் தொழில்முறை நண்பன் வந்து போய்க் கொண்டிருந்தவன், இவர்களின் நிலையை நன்கு புரிந்து கொண்டு, அதைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அவளுக்குப் பிடித்த வகையில் பலவிதமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு அவளைக் கவரும் முயற்சியில் ஈடுபட்டான். ஏற்கனவே கணவனின் மீது வெறுப்பாக இருந்தவள் எளிதாக அந்த வலையில் சிக்க வேண்டியதாகிவிட்டது. அந்தக் கயவனும் அவளை பல விதங்களில் மூளைச்சலவை செய்ய ஆரம்பித்ததன் விளைவு, அவள் துணிந்து எடுத்த முடிவு அவள் உயிரையே குடிக்கக்கூடிய காலனாக மாறிவிட்டது. ஆம், தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு அந்தக் கயவனை நம்பி வாழ்க்கையைத் தொடர முடிவெடுத்தாள். பெற்றோரிடம் சென்று பலவாறு போராடியும் அவர்களின் ஒப்புதல் கிடைக்காததோடு, குழந்தைகளையும் அவளுடன் அனுப்ப மறுத்து விட்டனர். தாங்கள் இறந்தால் கூட தங்கள் முகத்தில் விழிக்கக் கூடாது என்றும் திட்டவட்டமாகச் சொல்லி தலை முழுகுவதாகவும் சொல்லிவிட்டார்கள். அந்த நேரத்தில் வீம்பிற்காக அவள் எடுத்த முடிவு வெகு விரைவில் மிகத் தவறானது என்பதை அவளுக்கு விளக்கிவிட்டது. கணவனை விட்டுவிட்டு அடுத்தவனை நம்பிச் சென்ற சில நாட்களிலேயே அவனுடைய உண்மைச் சொரூபம் தெரிந்துவிட்டது.

முதலில் சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பவன் போல இவள் பெயரில் ஒரு சொத்தை வாங்கிவிட்டு, அவள் பெயரில் இருந்த பெரிய சொத்துக்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்தபோதுதான் அவளுக்கு விழிப்புணர்வே ஏற்பட்டிருக்கிறது அவனுடைய நோக்கம் என்ன என்று. எத்துனை பாதுகாப்பான ஒரு வாழ்க்கையை இழந்து இன்று பெற்றோரின் ஆதரவும் இல்லாமல் நிர்கதியாக நிற்கிறோம் என்று. மிகவும் மனமுடைந்து போன நிலையில், பெற்றோரும் மன்னிக்கத்தயாரில்லை என்ற சூழலில் ஒரு பெண் வேறு என்ன முடிவு எடுக்க முடியும்? அதேதான் தற்கொலைதான்.. பெட்ரோல் ஊற்றி தன்னையே கொளுத்திக் கொண்டாள். தன்னோடு சேர்ந்து தன் தீய எண்ணங்களும் எரிந்து போகட்டும் என்ற முடிவில்.. 80 சத்விகித தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையிலும் கூட, பெற்றோரைப் பார்த்து மன்னிப்புக்கோர வேண்டும் என்று மன்றாடிய போதும் பெற்றோர்கள் மறுத்து விட்டனர். என்று தங்கள் மகள் தங்கள் பேச்சைக் கேளாமல் வீட்டை விட்டு குடும்ப மானம் பற்றிக்கூட கவலைப்படாமல் போனாளோ அன்றே அவள் இறந்து விட்டாள். இனி நாங்கள் யாரை வந்து பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். உயிர் விடும் வரை பெற்றோரைக் கேட்டுக் கொண்டேயிருந்து விட்டு உயிரை விட்டிருக்கிறாள் அந்த பேதை! யோசிக்காமல் அவசரப்பட்டு எடுத்த முடிவினால் அவளுடைய இரண்டு குழந்தைகளும் தாயில்லாத குழந்தைகளாக பாட்டி வீட்டில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு பெண் எவ்வளவுதான் படித்திருந்தாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், தனக்கென்று உள்ள எல்லையைத் தாண்டினால் பாதுகாப்பு என்பது இல்லாமல் போவதும், வாழ்க்கையில் அமைதியை இழக்க நேரிடும் என்பதையும் உணர வேண்டும்!