Saturday, August 25, 2012

காலிபிளவர் டிக்கா


எங்கம்மா சொல்லிக் கொடுத்த ரெசிப்பியாக்கும்! நீங்களும் சுவைத்துப் பாருங்களேன்.....


காலிபிளவர் டிக்கா

தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர்-1 (ஒரேஅளவாக 12 துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

கெட்டியான தயிர்-1/2 கப்

கரம் மசாலாப் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு -1 டேபிள் ஸ்பூன்

கடலை மாவு -1 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

1.கெட்டியான தயிரை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும். அதில் கரம் மசாலாப் பவுடர், இஞ்சி பூண்டு விழுது, அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், உப்பு முதலியவற்றைக் கலந்து கொள்ளவும்.

2.இந்தக் கலவையில் காலிபிளவரை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

3.தந்தூர் ஓவனைச் சிறிது நேரம் சூடுபடுத்திய பின் ஸ்கீவரில் காலிபிளவரை 1 இன்ச் தள்ளித் தள்ளி அடுக்கி வைத்து 10 நிமிடம் கிரில் செய்யவும். ஸ்கீவெரை எப்போதும் போல் சுற்றி விடவும். இப்போது சூடாகக் காலிபிளவரைக் கொத்தமல்லித் தழை தூவி சாஸுடன் பரிமாறவும்.

மழைக்கு சூடா.......

ஆமாங்கோவ்.... எங்கூர்ல செம மழைங்கோவ்... அதான் சூடா......

மக்களே ரொம்ப நாளைக்கப்பறம் ஒரு ரெசிப்பி போடறேன்.... டேஸ்ட் செய்து பாருங்கள்...


சில்லி கோபி

கோபி மஞ்சூரியன்


தேவையான பொருள்கள்

காலிஃப்ளவர் – மீடியம் (350 கிராம்)

பெரிய வெங்காயம் – 250 கிராம்.

தக்காளி – 150 கிராம்

குடை மிளகாய் - 1 சிறியது

சில்லி சாஸ் – 1 ஸ்பூன்

சோயா சாஸ் – 1 1/2 ஸ்பூன்

அஜினோ மோட்டோ – சிறிதளவு

முட்டை - 1 (தேவையென்றால்)

இஞ்சி , பூண்டு விழுது - 1ஸ்பூன்

எண்ணை – 100 கிராம்.

ரெட் கலர் – 1 துளி

மைதா – 10 கிராம்

உப்பு – தேவையான அளவு

பச்சை மிளகாய் – தேவையானால்

செய்முறை:

1. காலிஃப்ளவரை சுத்தம் செய்து ஒவ்வொரு பூவாக பிரித்து எடுத்து தண்ணீர் இல்லாமல் துடைத்து வைத்துக் கொள்ளவும்.

2. முட்டையை அடித்து அதில் மைதா, அஜினா மோட்டோ, உப்பு, சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள்வும்.

3. இஞ்சி பூண்டு கலவையுடன் மைதா கலவையையும் காலிஃப்ளவர் பூவையும் சேர்த்து பிரட்டி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

4. வாணலியில் எண்ணை வைத்து பொறித்து எடுக்கவும்.

இது சில்லி கோபி.

சிறிது பெரிய வெங்காயத்தை நேர்வாக்கில் அரிந்து எடுத்துக் கொண்டு, மீதி இருக்கும் வெங்காயத்தையும் தக்காளியையும் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். சிறிது எண்ணையை வாணலியில் ஊற்றி சூடான பின் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை அதில் போட்டு நன்றாக சிவக்கும் வரை வதக்கவும்.

பின்னர் அதனுடன் குடை மிளகாய் போட்டு வதக்கி, பொறித்த காலிஃப்ளவர் அரைத்த விழுது, அனைத்தையும் வாணலில் போட்டு நன்றாக வேக வைக்கவும். தேவையானால் சிறிது தண்ணீரும் காரத்திற்கு பச்சை மிளகாயை நேர்வாக்கில் அரிந்து சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவிற்கு ஸாஸ், உப்பு சேர்த்து நன்றாக வெந்தபின் இளம் சூட்டோடு எடுத்து பரிமாறலாம். இறுதியாக வெங்காயத்தாள் அல்லது கொத்தமல்லி சேர்க்கலாம்.
இதுவே கோபி மஞ்சூரியன்

Tuesday, August 21, 2012

மரியாதைக்குரிய களவாணிகள்!


நிசப்தமான வீதி. மதியம் 3 மணி. அக்னி நட்சத்திரம் தகிக்கும் காலம். மக்கள் வெளியே வரவே அஞ்சும் வெப்பம்.. கோவையிலிருந்து ஈரோடு வழியாக நாமக்கல் செல்லும் பாதையில் ஒளப்பம்பாளையம் என்கிற உலகப்பம்பாளையம் செல்கிற மண் சாலை கிட்டத்தட்ட பொட்டல் காடு எனலாம். காருக்குள்ளும், புழுக்கம்தான். மனதிற்குள் இருக்கும் புழுக்கம், கணவன் ,மனைவி இருவரின் பெருமூச்சும் சேர்ந்து உஷ்ணம் தகிக்க ஆரம்பித்து விட்டது. குளிரூட்டப்பட்ட காரிலேயே பயணம் செய்து பழகிப்போன உடல் இந்த கடும் வெப்பத்தைத் தாங்குவது எளிதல்லவே. இன்று நிலைமை ஊரைவிட்டே கிராமம் நோக்கிச் செல்ல வேண்டியதாகிவிட்டது.. போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலையாதலால் தடங்கலின்றி பயணம் தொடர நினைவுகளோ பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்து விட்டது.

கன்றுக்குட்டியாய் துள்ளித் திரியும் அந்த 19 வயது இளமைப்பருவத்தில் ஆரம்பித்த உழைப்பு. கல்லூரி படிப்பு முடிந்த அன்றிலிருந்து நிற்காத ஓட்டம். சொந்த தாய்மாமன் ஜவுளிக்கடையில் எடுபிடி வேலைகளில் ஆரம்பித்து, படிப்படியாக கணக்குப்பிள்ளையாக வளர்ந்து, மெல்ல தொழில் கற்றுக் கொண்டு இன்று, மரகதம் குரூப் ஆஃப் கம்பெனிகள் என்றால் ஊரில் தெரியாதவர்கள் இல்லை. டெக்ஸ்டைல்ஸ் உலகில் கொடிகட்டிப் பறந்தவர்களில் இவரும் ஒருவர். தம் கடுமையான உழைப்பு மற்றும் நேர்மையால் வெகு விரைவில் முதலாம் இடத்திற்கு வந்தவர். இந்த 30 வருடத்தில் பலவிதமான அனுபவங்களைப் பெற்ற மனிதர்தான் ஆனாலும் காற்று எப்போதும் ஒரே பக்கமாக வீசுவதில்லையே. இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சொல்லி வைத்தது போன்று, பங்குச் சந்தை சரிவு, நூல் விலை ஏற்றம், மின்வெட்டு என அனைத்தும் ஒன்றாகச் சேர சீட்டுக்கட்டு மாளிகை போல சிறுகச் சிறுக உயர்ந்த தொழில் இன்று அதே வேகத்தில் சரிந்தும் போனது.. செல்வம் அனைத்தும் வந்த வழியே ஒவ்வொன்றாக மறைய ஆரம்பித்தது. சிதம்பரநாதன் தன்னால் யாருக்கும் நட்டம் வரக்கூடாது என்பதில் மட்டும் தெளிவாக இருந்தவர் தன் சொத்துக்கள் அனைத்தையும் தயங்காமல் விற்று கொடுக்க வேண்டியவர்களுக்கெல்லாம் கொடுத்து முடித்தார். கோயிலாக நினைத்த, குடியிருந்த அந்த பங்களாவையும் கூட விட்டுவைக்கவில்லை. இன்று வாழ்க்கைக்குத் தேவையான சில அத்தியாவசியப் பொருட்களை மட்டும் தன்னுடைய பழைய மாருதி காரில் எடுத்து போட்டுக்கொண்டு தங்கள் பூர்வீகக் கிராமமான உலகப்பம்பாளையம் நோக்கி தம் அன்பு மனைவியுடன் கிளம்பியாகிவிட்ட்து. முன்னோர் வாழ்ந்த வீட்டை அப்படியே பழமை மணம் மாறாமல் காத்து வந்தது வீண் போகவில்லை. அமைதியைத் தேடிப் போகும் நேரம் கைகொடுக்கிறது.

தன் வயிற்றில் ஒரு புழு பூச்சியோ உருவாகவில்லையே என்று பல நாட்கள் ஏங்கித் தவித்த அந்த எண்ணம் இன்று விசுவரூபம் எடுத்தது, கற்பகத்திற்கு. தங்களுக்கென்று ஒரு குழந்தை பிறந்திருந்தால் இந்நேரம் வளர்ந்து வாலிபப் பருவத்தில், இப்படியொரு இக்கட்டான சூழலில் தோள் கொடுத்திருக்கலாமோ என்ற ஏக்கம் அதிகமானது...

கிரீச்ச்ச்ச்ச்ச்... என சத்தத்துடன் வண்டி நிற்க, சுயநினைவு வந்தவளாக வெளியே எட்டிப் பார்த்தாள். நடுத் தெருவில் ஒரு பெரிய கல் .. சிதம்பரநாதன் இறங்கி கல்லை நகர்த்த எத்தனிக்க, பின்னாலிருந்து ஒரு குரல். என்ன சார் உதவி வேண்டுமா?” என்று. கல் சற்று பெரிதுதான்.. இன்னொருவர் உதவி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த மாத்திரத்தில் இருவர் வந்து குரல் கொடுக்க, மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. பாரத்தை விலக்கி வைத்து வழியை தெளிவாக்கப் போகிறவர்களாயிற்றே?

கல்லை இருவரும் சேர்ந்து நெட்டித் தள்ளிவிட்டு, வியர்வையைத் துடைத்தவர்கள், “அம்மா கொஞ்சம் தண்ணீர் இருந்தால் கொடுங்கள் அம்மாஎன்றான் ஒருவன். கற்பகம் கதவைத் திறந்து தண்ணீர் பாட்டிலையும், குளிர் பானம் இருந்த பாட்டிலையும் எடுத்துக் கொடுத்தாள். அவர்களின் பார்வைகளோ வண்டியுனுள் துளவிக் கொண்டிருந்தது. திடீரென பார்வையில் ஒரு குரூரம் தெரிந்தது. பணம் இருந்த கைப்பையும் கண்ணில் பட்டுவிட்டது. அதில் ஒருவன் இடுப்பிலிருந்து கத்தியை உருவியவாறு,

ஏம்மா, அந்த பணப்பையை கொடு வாங்கிக்கினு, போய்க்கினே இருப்போம். இல்லேனு வை.. இதுதான் பேசும்

என்று கத்தியைக் காட்டி மிரட்ட ஆரம்பித்து விட்டான். பளபளவென கத்தியைப் பார்த்த பயத்தில் முகமெல்லாம் வெளுத்துப்போக, வாயடைத்து அப்படியே செயலிழந்து போனாள் கற்பகம். சூழ்நிலையின் அபாயம் உணர்ந்த சிதம்பரநாதன் சட்டென அந்த பணப்பையை எடுத்து தன் காலடியில் போட்டுக் கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க.. அதற்குள் அந்த திருடர்களில் ஒருவன் சட்டென பின்புறக் கதவு வழியாக வண்டியினுள் ஏறி கற்பகத்தின் கழுத்தில் கத்தியை வைக்க, மற்றொருவனோ முன் கதவைத் திறந்து சாவகாசமாக கொண்டாய்யா.. கொடுத்துப்பிட்டு உயிரை காப்பாத்திக்கினு போவியா, சும்மா சீன் காட்டற... என்றான் எகத்தாளமாக.

ரோட்டில் ஆள் நடமாட்டமோ, வண்டி, வாகனமோ எதுவுமே இல்லை.. மெயின் ரோட்டிலிருந்து பிரிந்து உள் ரோட்டிற்கு வந்துவிட்டதால் போக்குவரத்து அதிகமில்லை., மிஞ்சிய தன் ஒரே சொத்தான மனைவியையும் இழக்க மனமில்லாமல், கையிலிருந்த அந்த கடைசிப் பணமான 2 லட்சம் ரூபாயையும் தூக்கிக் கொடுத்துவிட்டு, வண்டியை, கிளப்பி, அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் போதும் என்று வியர்க்க, விறுவிறுக்க சல்லென்று ஒரே மூச்சாக ஆக்சிலேட்டரை அமுக்கிப் பிடித்து வீட்டின் முன்பாக வந்து நிறுத்தினான். கற்பகத்தின் முகத்தில் இன்னும் அதிர்ச்சியின் ரேகை மீதம் இருந்த்து., வீட்டைத் திறந்து உள்ளே சென்று ஃபேனைப் போட்டு அப்படியே சுவர் ஓரமாக சாய்ந்து உட்கார்ந்ததுதான் தெரியும்... இருவருக்கும். கர... கரவென்ற அந்த மின்விசிறியின் ஓசைகூட செவியை எட்ட விடாமல். அதிர்ச்சியும், அசதியும் கண்ணயரச் செய்தது. இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. கண் விழித்த மறு நொடி, சிதமபரநாதனுக்கு, எஞ்சியிருந்த அந்த சொச்சமும் பறிபோய்விட்டதே என்ற வேதனை தாக்க ஆரம்பித்தது. அந்த இரண்டு இலட்சத்தில் ஒன்றரை இலட்சம் இன்னொருவருக்குச் சேர வேண்டியது. அவர் இதே ஊரில் வசிப்பவராதலால் நேரில் கொண்டுவந்து கொடுத்து விடலாம் என்று வந்த நேரம் இவ்வளவு மோசமாக இருக்கிறதே.. மீதமுள்ள 50000 ரூபாயை வைத்துக்கொண்டு திரும்பவும் புதியதோர் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியது. யாருக்கும் கடனாளியாக இருக்கக் கூடாது என்றுதானே அத்துனை சொத்தையும் விற்று பைசா சுத்தமாக பட்டுவாடா செய்துவிட்டு வந்தோம். இப்போது இந்த ஒன்றரை இலட்சம் கொடுக்க வேண்டியவருக்கு எப்படி கொடுப்பது... காரை விற்றால்கூட 50000 தேறுமா தெரியவில்லை.. என்ன செய்வது என்று புரியாமல் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற உணர்வு வர, கண்கள் கலங்கி, கண்ணீர் பொங்கிவர ஆரம்பித்த்து.

லேசான விசும்பல் சத்தம் கேட்டு, வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தாள் கற்பகம். என்னங்க.. என்னாச்சு..?” என்று பதறினாள். ஒரு நொடியில் சூழலை உணர்ந்து மௌனமானாள். தன் 22 வருட குடும்ப வாழ்க்கையில் முதன் முதலில் கண்ட காட்சி. அழுது தீர்த்த கணவனை இடைமறிக்காமல் யோசனையில் ஆழ்ந்தாள். மனபாரம் குறையுமட்டும் அழட்டும் என விட்டுவிட்டு அடுத்து நடக்க வேண்டியதைப்பற்றி சிந்திக்கலானாள். கையில், கழுத்தில் இருக்கும் நகைகள் நல்ல வேளையாக அந்த திருடர்கள் கண்ணில் படவில்லை. ஒரு வேளை அவர்கள் பணம் மட்டும்தான் கொள்ளையடிப்பார்கள் போல என்று நினைத்துக் கொண்டாள். இன்று பவுன் விற்கும் விலைக்கு எப்படியும் கனிசமாக ஒரு தொகை சேரும் அதை வைத்து முதலில் அந்த ஒன்றரை இலட்சம் தர வேண்டியவருக்கு கொடுத்துவிடலாம் என மனம் கணக்குப் போட்ட்து.

உலகப்பம்பாளையம் வந்து சேர்ந்த இந்த நான்கு நாட்களில் மனம் ஓரளவு தெளிந்திருந்தது. பச்சைப்பசேல் என்ற வயல் வெளியும், வெள்ளந்தியான மக்களும், எளிமையான வாழ்க்கை முறையும் மன அமைதியைக் கொடுத்திருந்தது. பணம் கொடுக்க வேண்டிய சோமசுந்தரம் வெளியூர் போயிருப்பதாக அக்கம் பக்கத்தினர் கூறியிருந்ததால் அவர் வரட்டும் என்று காத்திருந்தனர். மாதாமாதம் கற்பகம் அமாவாசையன்று தவறாமல் குலதெய்வ வழிபாட்டிற்காக கோவிலுக்கு வருவது வழக்கம். கோவிலிலிருந்து வீடு கூப்பிடு தூரம்தான். பக்கத்தில் குடியிருந்தவர்களை வைத்து வீட்டை பராமரித்து வைத்திருந்தாள். சுற்றி இருந்த நிலத்தில் இரண்டு தென்னை மரமும், வாழை மற்றும் ஒரு சில காய்கறிகளும் பயிரிட்டு வைத்திருந்தாள். சரியான பராமரிப்பினால் அந்த இடமே இன்று பசுமையாக்க் காட்சியளித்தது. அதை வைத்து எளிமையாக சமைத்து சாப்பிட்டுவிட்டு பொழுதைக் கழிக்கலாம்தான்..... சக்கரமாகச் சுழன்று, நிற்க நேரமில்லாமல் தொழிலை கவனித்துக் கொண்டிருந்த மனிதர் இன்று வேலைவெட்டி இல்லாமல் சும்மா இருப்பது எளிதல்ல. குற்ற உணர்ச்சியால், கூனிக்குறுகிப் போய்விடுவார். ஏதாவது செய்ய வேண்டும் என்று மனம் பரபரத்த்து.

அன்று வெள்ளிக்கிழமை. காலையில் குளித்துவிட்டு செடியில் பூக்களைப் பறித்துக் கொண்டு இருவரும் அம்மன் கோவிலுக்குக் கிளம்பினார்கள். காலை நேரம் மட்டும்தான் அந்த பூசாரி வந்து நைவேத்தியம் வைத்து பூசை செய்து முடித்து டவுனிற்கு வேலைக்குச் சென்றுவிடுவார். பிறகு மாலை சற்று நேரம் கோவிலைத் திறந்து விளக்கேற்றி வைப்பார். கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு திரும்பியவர்களின் எதிரில் சோமசுந்தரம் வந்து நின்றார். அவரைப் பார்த்தவுடன் அவருக்குக் கொடுக்க வேண்டிய பணம்தான் முதலில் நினைவு வந்தது. மனைவியைத் திரும்பிப் பார்த்தார். அவளும், அண்ணே, ஊருக்குப் போயிருந்தீங்களா..ஆளைக் காணோமேன்னு பார்த்தோம்.

ஆமாம்மா.. பையனுக்கு சென்னைல நல்ல வேலை கிடைச்சிருக்கு. கஷ்டப்பட்டு அவனை படிக்க வச்சது வீண் போகல.. அண்ணந்தானே காலேஜில் சேர்த்து விட்டாக.. டிரஸ்ட் மூலமா பீஸ் கட்டவும் ஏற்பாடு செய்து கொடுத்தாங்க. இன்னைக்கு பையன் இன்ஜினியராகி பெரிய கம்பெனியில வேலைக்கு சேர்ந்திருக்கான்னா அதுக்கு அண்ணந்தான் காரணம். எனக்கும் உடம்புக்கு முடியல, அதனால பையன் என்னையும் சென்னைக்கே வரச்சொல்லிட்டான். மனைவிக்கு கர்ப்பப்பையில கட்டி இருக்கு. அதை ஆபரேசன் செய்யணும். அதனால சென்னைக்கே போகலாம்னு இருக்கோம் என்றார்.

அதுவும் நல்லதுதாங்க. பையனோட போய் கொஞ்சநாள் இருந்துட்டு வாங்க. உங்க பணம் ஒன்றரை இலட்சம் என்கிட்ட இருக்கு சோமசுந்தரம். பேங்கில இருந்து நாளைக்கு கொண்டாந்து தறேன்

அண்ணே, அதிருக்கட்டும்ணே... ஒரு சின்ன உதவி உங்களால ஆகோணும்.... என்னடா ஆட்டோ மெஷின் போட்டு கொடிகட்டி வாழ்ந்த மில் அதிபரை இப்படி கேவலப்படுத்தறானேன்னு நினைக்கக் கூடாதுண்ணே... என்கிட்ட இருக்கற இந்த செமி ஆட்டோ நூல் சுத்துற மிஷின் உங்ககிட்ட இருந்துதானே வாங்கியாந்தேன்.. பேருக்கு ஒரு தொகை வாங்கிக்கிட்டுத்தான் இதை எனக்குக் கொடுத்தீங்க. இதில உழைச்சுத்தான் இன்னைக்கு என் குடும்பமே நல்ல நிலையில இருக்கு. அவ்வளவு ராசியான யூனிட் அண்ணே இது.. 4 குடும்பம் இதைக்கண்டு பிழைச்சிட்டிருக்குது.. அதனால்...தப்பா நினைக்கலேன்னா கொஞ்ச நாளைக்கு நீங்க கவனிச்சிக்கிறீங்களாண்ணே... அந்த நாலு குடும்பம் உங்க புண்ணியத்துல பிழைக்கும்.என்றார்.

சற்று யோசிக்க ஆரம்பித்தவர், அதிருக்கட்டும்ப்பா.. உன் பணத்தை எப்ப வந்து வாங்கிக்கற.. நாளைக்கு காத்தால வங்கிக்குப் போறேன், எடுத்துட்டு வந்து கொடுக்கிறேன். வந்து வாங்கிட்டு போயிடு. மற்றதைப்பத்தி யோசிச்சு முடிவெடுக்கலாம்என்றார்.

அண்ணே.. அந்த பணம் இப்போதைக்கு உங்ககிட்டேயே இருகட்டும்ணே.. நான் ஊருக்குப் போயிட்டு வந்து தேவையானப்ப வாங்கிக்கறன்.. உங்ககிட்ட இருக்கறதும் எனக்கு பேங்கில இருப்பது போலத்தானேண்ணே

சரிப்பா... நாளைக்குப் பார்க்கலாம்...என்று கிள்ம்பினார்.

அண்ணே.. இந்த யூனிட் விசயமா.....?”

பார்க்கலாம்ப்பா...யோசிக்கிறேன்..

சிதமபரநாதனுக்கு அத்துனை பெரிய மில் ஓனராக இருந்தவ்ருக்கு, இந்த மிகச் சிறிய யூனிட்டை எடுத்து நடத்துவது என்பது பெரிய விசயமில்லை என்றாலும், தன்மானம் இடம் கொடுக்கவில்லை. ஆனாலும், கற்பகம் அவ்ரிடம் கேட்ட சிலகேள்விகள் அவரை இந்த விசயத்திற்கு ஒப்புக் கொள்ளச் செய்த்து. ஆம் இன்று தாங்கள் ஏதோ சமைத்து சாப்பிட்டுவிட்டு எளிமையாக வாழ்க்கையை ஓட்டி காலத்தைக் கழிக்கலாம் என்றாலும், முதல் பிரச்சனை அவரால் சும்மா உட்கார்ந்து சாப்பிட முடியாது , அடுத்து ஒவ்வொரு மாதமும் ஒரு பெரிய தொகை ஒரு சில முதியோர் இல்லங்களுக்கும், குழந்தைகள் காப்பகங்களுக்கும் போய்க்கொண்டிருந்தது. இன்று திடீரென சுத்தமாக நின்று போனால் அவர்களின் பாடு சற்று திண்டாட்டம்தானே.. ஏதோ கொஞ்சமாவது தங்களாலானதைக் கொடுக்கலாமே என்று பலவற்றையும் பேசி கணவனை சம்மதிக்க வைத்தாள். இதையறிந்த சோமசுந்தரத்திற்கும் மகிழ்ச்சிதான். தன் வாழ்வாதாரமாக இருந்த அந்த சிறிய யூனிட்டை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக ஊருக்குக் கிளம்பினார்.

திரும்பவும் தான் ஆரம்பித்த அதே இடத்திற்கே வந்து நின்றுவிட்ட்து சற்று மலைப்பாக இருந்த்து. ஆனால் இன்று அனுபவம் என்ற பெரிய பலம் வழித்துணையாக வருவது உற்சாகமளித்த்து. சினிமா பட்த்தில் வருவது போல ஒரே பாட்டில் திரும்ப பழைய நிலைக்கு திரும்ப முடியாதுதான், ஆனாலும் உழைப்பின் சுவை கண்ட சிதம்பரநாதன், திரும்ப உழைக்க ஆரம்பித்தால் போதும், ஒரு நூல்முனை கிடைத்தாலும் பிடித்துக் கொண்டு எளிதாக மேலுக்கு வந்து விடுவார் என்று அவருடன் வாழ்ந்த இந்த 22 வருட வாழ்க்கை அவளுக்கு கற்றுக் தந்த பாடம்.

அடுத்தடுத்த நாட்கள் கடுமையாகத்தான் இருந்தது. ஏற்கனவே சோமசுந்தரம் ஏற்படுத்தியிருந்த தொடர்புகளுக்கு சப்ளை செய்வதோடு, தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இரவு ஷிப்டும் வைத்து மேலும் இரண்டு பேரை வேலைக்குச் சேர்த்து அவர்களுக்கு பயிற்சியும் கொடுக்கும் வேலையும் நடந்தது. கற்பகமும் வீட்டு வேலைகளை வேகமாக முடித்துவிட்டு வந்து பேக்கிங் வேலைகளை எடுத்துக் கொண்டு உற்சாகமாக செய்ய ஆரம்பித்தாள். குளிரூட்டப்பட்ட அறையில் சுகமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தவளை இப்படிப் பார்ப்பதில் வேதனைதான்.. ஆனாலும், மாதத்தில் பாதி நாட்கள் வெளியூர் பயணம். மீதிநாட்கள் டென்சன், பிரச்சனைகள், ஓட்டம் என்று பொழுது ஓடிக்கொண்டிருந்தபோது பல நாட்கள் தனிமை வாட்டிய காலத்திற்கும், இப்போது கணவனுடனேயே பெரும்பாலான நேரங்கள், உதவியாகவும் இருக்கும் வாய்ப்புடன் கிடைக்கும் போது இதைவிட ஒரு மனைவிக்கு வேறு என்ன சந்தோசம் இருக்க முடியும்?

கணவன் விரும்பாவிட்டாலும் தன்னிடம் உள்ள கடைசி நகையையும் கட்டாயப்படுத்தித்தான் கொடுத்தாள். தாலிக்கொடியை கழட்டும்போது வேதனையின் எல்லையில் இருந்தாலும், மஞ்சள் கயிறுடன் கணவனின் நிம்மதியும் சேர்ந்து அதிக பளபளப்பான தோற்றத்தையேக் கொடுத்ததால் அதை மறப்பதில் சிரம்மும் இல்லை அவளுக்கு. இந்த வாழ்க்கையிலும் ஒரு அர்த்தமும், நிம்மதியும் இருக்கத்தானே செய்கிறது.. நல்ல வாடிக்கையாளராக வங்கி மேலாளரிடம் வாங்கியிருந்த நற்பெயர் கைகொடுத்தது இன்று... அமைதியான சூழல், சந்தடியில்லாத வீதி, கபடமில்லாத மனிதர்கள் என நாளடைவில் அந்த இடம் மிகவும் பிடித்துப்போய் விட்டது இருவருக்கும். மாலை நேரத்தில் அங்கிருக்கும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் வேலையும் நடந்து கொண்டிருந்தது. வெகு விரைவிலேயே மக்களிடம் நெருக்கம் அதிகமாகி தாயாய், பிள்ளையாய் பழக ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆள்,அம்பு என்று அதிகாரத் தோரணையில் தொழில்புரிந்தவருக்கு, இன்று எடுபிடி வேலையிலிருந்து முதலாளி வேலை வரை அனைத்தும் தானே செய்வது கடினமாக இருந்தாலும், ஜெயித்துக்காட்ட வேண்டும் என்ற வெறி அதனை சட்டை செய்யவில்லை. சாப்பாடு, ஓய்வு எல்லாமே இரண்டாம்பட்சமாகிப் போனது. தொழிலில் மட்டுமே முழு கவனம் செலுத்தும் நேரம் மனைவியின் அக்கரையான கவனிப்பு ஆரோக்கியத்தை மீட்டுக் கொடுத்தது.

இந்த நேரத்தில்தான் அந்த அதிசயம் நடந்தது. பொதுவாகவே ஒரு முறை ஒரு சொத்து கையைவிட்டுப் போனால் திரும்ப வந்து சேருவது சாமான்ய காரியமல்ல. உழைப்பின் பயனாக ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதமாக அந்த நிகழ்வு நடந்தது... சிதம்பரநாதனின் நூல் மில்லை விலைக்கு வாங்கிய சபரி குரூப்ஸ் கம்பெனியின் முதலாளி வெளிநாட்டில் தன் வியாபாரத்தை பெருக்கும் வகையில் அங்கு சென்று சிலகாலம் தங்க வேண்டி வந்ததால் மில்லை லீசுக்கு விடப்போவதாக நேரடியாக சிதம்பரநாதனையேக் கூப்பிட்டுச் சொல்லி அவரை எடுத்து நடத்தச் சொன்னார்.. முதலில் சற்று தயங்கினாலும், கற்பகம் கொடுத்த நம்பிக்கையில் ஒப்புக் கொண்டார்.. கிராமத்தில் இருக்கும் யூனிட்டை கற்பகமே கவனிக்க வேண்டியும் வந்தது. திரும்ப வாழ்க்கையின் அதே ஓட்டம். கற்பகத்திற்கு ஏனோ அந்த கிராம வாழக்கையை விட்டுவர மனமில்லை.

இந்த மூன்று வருடங்களில் உழைப்பு.. உழைப்பு என்பதைத் தவிர வேறு எதையும் நின்று நிதானித்து யோசிக்கக் கூட அவகாசம் இல்லை. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்ங்கற மாதிரி ஒரு சின்ன யூனிட்டை வச்சு இன்னைக்கு கையை விட்டுப்போன தன்னுடைய பழைய மில்லை திரும்ப வாங்கும் தெம்பும் வந்தாலும், மனம் ஏனோ பெரிதாக அதில் ஈடுபாடு கொள்ளவில்லை. இந்த மூன்று வருட வாழ்க்கை பல மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. மனம் வெகுவாக பக்குவப்பட்டிருந்தது.

அன்று சபரி மில்ஸ் முதலாளி பேச்சு வார்த்தைக்காக வந்திருந்தார்.. சிதம்பரநாதனிடம் அவரால் முடிந்த தொகையை வாங்கிக்கொண்டு ஒப்படைப்பதற்கு தயாராக இருந்தார். வெளிநாட்டில் மேலும் சில ஆண்டுகள் தங்க வேண்டிய சூழலில் அவர் இருப்பதால் சிதமபரநாதனை அந்த மில்லை எடுத்து நட்த்தும்படி கேட்டுக் கொண்டிருந்தார். ஆரம்ப காலத்திலிருந்து பணி புரியும் தொழிலாளர்களும் அதனை பெரிதும் விரும்பி வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் மனதார ஒப்புக் கொள்ளும் எண்ணம் வரவில்லை. கிராமத்தில் தங்கியிருந்த இந்த மூன்று ஆண்டுகளாக வாழ்க்கை அதன் இனிமையை நுகரச் செயதுவிட்ட்து. அந்த பசுமையிலும், அமைதியிலும் மனம் லயித்துப் போனதோடு, அதுவே சொர்க்கமாகப்பட்டது. போலிகளற்ற யதார்த்தம் நிம்மதியளித்தது. அதை இழக்க மனமில்லாவிட்டாலும், உடனே மறுக்க மனமில்லாமல் ஒரு வாரம் யோசித்து பதிலளிப்பதாகச் சொல்லிவிட்டு வந்தார். வரும் வழியில் ஏனோ அன்று தங்கள் பணத்தைக் களவாடிச்சென்ற அந்த இருவரையும் தன்னையறியாமல் தேடச்செய்தது. அந்த குறிப்பிட்ட இடத்தில் சற்று நேரம் வண்டியை நிறுத்திக்கூடப் பார்த்தார். அவர்கள் இருக்கும் சுவடே இல்லை. எந்த ஊரில் டேரா போட்டிருப்பார்களோ தெரியவில்லை.. எது எப்படியோ தன்னுடைய சரித்திரத்தையே மாற்றியமைத்த மரியாதைக்குரிய களவாணிகள்.. என்று நினைத்தபோது புன்சிரிப்பாக மலர்ந்த்து.

கிராமத்தின் சுகமான சூழலில் சுவைகண்ட மனது திரும்ப நகரத்து இயந்திர வாழ்க்கைக்கு திரும்பிச் செல்ல மறுக்கிறது. மனைவி கற்பகத்தின் நிலையும் இதுதான் என்பதும் தெரிந்தது.. முன்னோர்கள் வாழ்ந்த அந்த வீட்டில் அவர்களின் மூச்சுக்காற்று அங்கேயே சுற்றி வருவது போல சுகம் அவளுக்கு. அது கொடுக்கும் நிம்மதி எந்த நவீன வசதியும் கொடுக்காது என்று தெளிவாக இருந்தாள். இருவரின் மனதும் இதிலேயே ஒன்றிப்போனதால் விலக மனம் வரவில்லை. இரவு வெகு நேரம் இருவரும் பழைய கதைகளையும் பேசிக்கொண்டிருந்தபோது இன்றைய நிலையையும் ஒப்பிட்டு இறுதியில் தெளிவான ஒரு முடிவுடன் தூங்கப் போனார்கள்..

காலையில் பறவைகளின் கிரீச்சிடும் ஒலியைக்கேட்டு மெல்ல புரண்டுப் படுத்தவள்.. நேரங்கழித்து தூங்கப் போனதால் ஏற்பட்ட அசதியும் கண்களை அழுத்த, மிகச் சிரமப்பட்டுதான் எழுந்தாள் படுக்கையைவிட்டு.. அவள் அன்றாடம் வைக்கும் அந்த ஒரு பிடி சோற்றுக்காக பல பறவைகளும் காத்துக்கிடப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.. அதைவிட அந்த சின்னக் குஞ்சுகள் குட்டி அலகால் ஒவ்வொரு பருக்கையாக கொத்தி, கொத்தித் தின்பதைக் காண கண்கள் கோடி வேண்டும். மெல்ல எழுந்து போய் அப்படியே துளவிக்கொண்டே கண்ணைத் திறப்பதற்கே பெரும்பாடுதான்... சாப்பாட்டுக் கிண்ணத்தைப் பார்த்தவுடன் பலமாக ஆனந்தமாக குரல் வருவதாகப் பட்டது அவளுக்கு. அதுவும் கலர் சாதம் என்றால் நொடியில் காலியாகிவிடும். அதுகளுக்கு நல்ல ருசி தெரிந்திருக்கிறது போலும் என்று எண்ணிக்கொள்வாள். சாப்பாடை வைத்துவிட்டு சமையலறையின் சன்னலில் போய் நின்று வேடிக்கைப் பார்ப்பதில் ஒரு தனி சுகம்.

முதலில் ஒரு காக்கை வந்தது. ஒரு பருக்கை கூட எடுக்கவில்லை. சத்தமிட்டு மற்ற உடன்பிறப்புக்களை அழைத்தது.. அழகாக ஆளுக்கு நான்கு பருக்கைகள் எடுத்துக் கொண்டு ஒதுங்கி அடுத்தவருக்கு வழிவிட, மற்றவர் வந்து தானும் அதேபோல் நான்கு பருக்கைகளுடன் பறந்துபோய் தள்ளி மற்றொரு மரத்தில அமர்ந்து கொண்டார். கரும்புள்ளி மைனா ஜோடி ஒன்று வெகு நேரமாக காத்திருக்கிறது காக்கை கூட்டம் சென்றவுடன் தாங்கள் போய் பசியாறலாம் என... இதெல்லாம் முடிந்தவுடன் இறுதியாக அணில் பிள்ளை வரும் குடுகுடுவென.... அழகாக உட்கார்ந்து சாடை வேறு காட்டும்.. சின்ன அசைவு இருந்தாலும், நொடியில் சிட்டாகப் பறந்து விடும்.. ஆகா நகரத்தில் காணக்கிடைக்காத என்ன ஒரு ரம்மியமான காட்சிகள்!...

லேசாக சூரிய கிரணங்கள் தலைகாட்ட பறவைக் கூட்டங்கள் தலையை மறைத்துக் கொண்டன. சூடாக பில்டர் காப்பியின் மணம் தன் நாசியைத் துளைக்க படுக்கையை விட்டு மெல்ல எழுந்த சிதம்பரநாதன் பல் துலக்கி வந்து பட்டாசாலையில் அமரவும், மனைவி காப்பியுடன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

ஏனுங்க.... நம்ம முடிவுல மாத்தம் ஒன்னுமில்லையே....? இங்கனேயேத்தானே நம்ம மீதி வாழ்க்கை கழியப்போகுது..? என்ன முடிவு செய்தீங்க. எதுவானாலும் சீக்கிரமா அவிககிட்ட சொல்றதுதான் முறை. நம்மளால அவிகளுக்கு பிரச்சனை ஆகக்கூடாது. வேற யாரையும் பார்த்து பொறுப்பை கொடுப்பாங்கள்ல...

ஆமாம்மா.. நானும் அதைத்தான் நினைச்சேன். குளிச்சிட்டு கிளம்பறேன். கொஞ்சம் பேங்க் வேலையும் இருக்கு. நீ யூனிட்டுக்குப் போ. இன்னைக்கு நூல் பை வரும். லாரிகாரருக்கு பணம் அங்கேயே டிராவுல இருக்கு. எடுத்து கொடுத்துடு.

சரிங்கோ.. வெள்ளன வந்திடுங்க.. இன்னைக்கு நம்ம கோவில்ல இப்ப பூசை இருக்கும் போல. யாரோ குழந்தைக்கு பேரு வக்கிறாங்களாம். வந்தீங்கன்னா நாமும் சாமி கும்பிட்டுட்டு வரலாம். ஒரு முடிவு எடுக்கறதுக்கு முன்னாடி நம்ம ஆத்தா எல்லமமா தாயை கும்பிட்டுட்டு போனா நல்லதுதானே..

இருவரும் மளமளவென குளித்துவிட்டு கோவிலுக்குச் செல்லவும் அங்கு அம்மனுக்கு விசேசமாக பூசைகள் நடந்து கொண்டிருந்தன. பெயர் சூட்டும் விழாவிற்காக குழந்தையை பெற்றோர் கையில் வைத்துக் கொண்டு நின்றிருக்க குழந்தையின் தாத்தா பூசாரியிடம் போய் மெதுவாக பெயரைச் சொல்லவும், அவரும் அம்மனிடம் போய் அர்ச்சனை செய்யப் போனார். நவநாகரீகமாக இருந்த பையனும், பெண்ணும் என்பதால் பெயர் எப்படியும் நாகரீகமாகத்தான் இருக்கப் போகிறது என்று ஆவலாக பார்த்துக் கொண்டிருக்க, பூசாரி அர்ச்சனையின் போது சிதம்பரநாதன் என்று தன் பெயரைச் சொன்னது அறைகுறையாக காதில் விழ, தனக்குத்தான் சரியாக புரியவில்லை போலும் என காத்திருந்தார்கள். அவர் பூசை முடித்துவிட்டு வந்து பிரசாத்தை துளி எடுத்து குழந்தைக்கு கொடுத்துவிட்டு குழந்தை காதில் அனைவரும் மூன்று முறை பெயரைச் சொல்லலாம் என்று சொன்னார். உடனே குழந்தையின் தாத்தா, பாட்டியும் பின்பு அப்பா, அம்மாவும் மற்றும் வரிசையாக உறவினர்களும் குழந்தையின் காதில் சிதம்பரநாதன் என்று சொல்லவும்தான் ஆச்சரியமாக இருந்தது இருவருக்கும். இதே சந்தேகம் பூசாரிக்கும் எழ அவர் அந்தக் குழந்தையின் பெற்றோரிடம் கேட்க, அதற்கு அந்த தந்தையும், தங்கள் குடும்பத்தின் குலவிளக்கின் பெயர் இது என்றார்.

ஆமாங்க, நான் இன்னைக்கு படிச்சு ஒரு நல்ல நிலைமைல இருக்கேன்னா அதுக்கு இந்த பெயருள்ள மகராசந்தான் காரண்ம். இன்னைய வரைக்கும் அவரை நான் பார்த்தது இல்ல. என்னைப் போல எத்தனையோ பேரை அந்த மகராசன் படிக்க வச்சிகிட்டிருக்காரு. ஆனா இன்னைய வரைக்கும் தன்னோட முகத்தை பெருமையா வெளியே காட்டிக்கிட்டதில்ல. நானே ரொம்ப சிரமப்பட்டுதான் இந்த பேரை கண்டுபிடிச்சேன். என் மகனும் நாளைக்கு இதுபோல அமைதியா சேவை செய்கிற பரோபகாரியா வரணும்கிறதுதான் என்னோட ஆசை..

ஆமாங்க, ஐயா பெரிய நூல் மில் முதலாளின்னு சொன்னாங்க.. குழந்தை,குட்டி கூட இல்லையாம். ஊரில இருக்கற குழந்தைகளையெல்லாம் தங்களோட குழந்தைகளா நினைச்சி படிக்க வக்கிறாக.. நானும் எத்தனையோ வியாபாரம் மாத்தி, மாத்தி பன்றேன், எதுவும் ஒட்ட மாட்டேங்குது வாயுக்கும், வயிற்றிற்குமே போத மாட்டேங்குது. ஆனா இதுபால மகராசருங்களுக்கு ஆண்டவன் அந்த அதிர்ஷ்டத்தை கொடுப்பது எவ்ளோ நல்ல விசயம்.. நாம சம்பாதிச்சா நம்ம குடும்பம் மட்டும்தான் சுகமா இருக்கும். ஆனா இது போல மகராசனுங்க சம்பாதிக்கும் போது ஊரில் எத்த்னை குடும்பங்கள் தலை நிமிர முடியுது.. அந்த மனுசர் எங்க இருந்தாலும் இன்னும் பல நூறு வருசம் நல்லாயிருக்கோணும்என்றார்.

பூசாரி உடனே புரிந்து கொண்டு ஏதோ சொல்ல வாயெடுக்க உடனே சிதம்பரநாதன் ஜாடையில் வேண்டாம் என்று தடுத்து விட்டார். அவர் மனதில் ஒரு தீர்க்கமான முடிவும் எடுத்து விட்டார். தன்னால் இயன்றவரை உழைக்க வேண்டியது தன் கடமை என்று. கற்பகமும் இதற்கு கட்டாயம் மறுப்பு சொல்ல மாட்டாள் என்றும் தெரிந்தது அவள் முகத்தைப் பார்க்கும் போதே... !

நன்றி : திண்ணை வெளியீடு

கதையே கவிதையாய்!


இரு வேடர்கள்! - கலீல் ஜிப்ரான்
ஒரு மே மாத பகல் பொழுததனில், ஏரிக்கரை ஒன்றில் வகுமையும், வருத்தமும் சந்தித்தனர். வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டவர்கள், அமைதியான அந்த் நீரோட்டத்தின் அருகமர்ந்து உரையாடினர்.
சுகம் பூவுலகை நிறைத்திருக்கும் அந்த அற்புத அழகைப் பற்றியும், காடுகள் மற்றும் மலைகளுக்குள்ளேயான, அன்றாட வாழ்க்கையின் அதிசயம் பற்றியும், மேலும் புலரும் பொழுதிலும் மதி மயங்கும் அந்தி வேளையிலும் ஒலிக்கும் அந்த இனிய கீதங்களைப் பற்றியும் உரையாடலானது.
சுகம் மொழிந்த அனைத்தையும் ஒப்புக்கொண்டது துக்கம். அந்த மணித்துளியின் மந்திர வித்தையையும், அழகு நிறைந்திருக்கும் அவ்விடம் பற்றியும் அறிந்தே வைத்திருந்தது துக்கம், மேலும் மே மாதத்தின் வயல்கள் மற்றும் குன்றுகளைப் பற்றியும் சொல்லாற்றலுடனேயே உரையாடியது. பின்னர் சுகமும், துக்கமும் சேர்ந்து வெகு தூரம் உரையாடிக்கொண்டு வந்தனர். அவர்கள் அறிந்த அனைத்தையும் ஒப்புக்கொள்ளவும் செய்தனர்.