Thursday, July 5, 2012

ஏகாலி


மிகப் பிரம்மாண்டமான அரங்கம். கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. சபையின் நாயகன் 27 வயது இளைஞன். கருத்த நெடிய உருவம். ஒல்லியான தேகம். எந்த ஆடம்பரமும் இல்லாத ஒரு சாதாரணமான பேண்ட், சட்டை, கண்களில் ஒளி மின்ன, பரபரப்பான பார்வை, சபையில் அலைந்து யாரையோ தேடிக் கொண்டிருக்கிறது அவ்வப்போது. அரசு உயர் அதிகாரிகளும், சில விஞ்ஞானிகளும், வெளிநாட்டிலிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே வந்திருந்த தொழிலதிபர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என்று சபை களைகட்டத் தொடங்கியிருந்தது. மகனுக்கு எதற்காக இந்த விழா எடுக்கிறார்கள், அவன் அப்படி என்ன சாதித்திருக்கிறான் என்று எதுவுமே புரியாமல், இது போன்ற கற்றவர்கள் சபையில் மிகவும் அன்னியப்பட்டு தான் இருப்பதாக உணர்ந்து முதல் வரிசையில் இருக்கையின் விளிம்பில் இழுத்துப் போர்த்திய நூல் சேலையுடன், மெலிந்த, வாடிய தேகத்துடன் பெருமை பொங்க அமர்ந்திருந்தாள் அவனுடைய தாய்.

காரின் இருதய பாகமான கார்ப்பரேட்டரில் ஒரு புதுமையான கண்டுபிடிப்பை உட்புகுத்தி இன்று எரிபொருள் தட்டுப்பாடான காலத்தில் 50 சதவிகித எரிபொருள் சிக்கனம் செய்யக்கூடிய ஒரு சாதனையைச் செய்துள்ள ஏகலைவனுக்குத்தான் இந்த பாராட்டு விழா. அதுமட்டுமல்ல இவனுடைய கண்டுபிடிப்பின் காப்புரிமை கிடைக்கும் வாய்ப்பிற்காக முயற்சி செய்யும் பொருட்டும் பல கார் தொழிற்சாலை அதிபர்களின் பிரதிநிதிகள் ஆவலாகக் காத்திருந்தனர். மேடையில் அனைத்து பிரபலங்களுக்கும் அறிமுகம் செய்து கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தாலும், கண்கள் மட்டும் அரங்கின் வி.ஐ.பிக்கள் இருக்கையை வலம் வந்து கொண்டிருந்தது... திடீரென்று தான் எதிர்பார்த்து காத்திருந்த அந்த விஐபி வந்து தம் இருக்கையில் அமரவும் அவனுடைய முகத்தில் ஒரு அமைதிப் புன்னகை ஒளிவீசுவதை தாமும் கவனித்து பெருமிதம் கொண்டாள் அந்த தாய்.

விழா ஆரம்பமாகி விட்டது. வழமையான வரவேற்பு மற்றும் பாராட்டு வசனங்களுக்குப் பிறகு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஏகலைவனுக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்ததோடு ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தின், மிக ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்து இன்று உலகமே பாராட்டி கொண்டாடும் வகையில் ஒரு அரிய கண்டுபிடிப்பை வழங்கி, தாம் பிறந்த நாட்டிற்கும், பெற்ற அன்னைக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்றும், வெகு விரைவில் நம் ஜனாதிபதியிடம் விருது பெறப்போகிறார் என்றும் அறிவித்த போது சபையில் கரவொலி எழும்பியது.

அடுத்து ஏகலைவனை ஏற்புரை அளிப்பதற்காக அழைத்தார்கள். அவனுடைய பேச்சைக் கேட்க சபையே ஆவலாகக் காத்திருக்க பலத்த கரவொலிகளுக்கிடையே எழுந்து வந்து, சபையை ஒரு முறை ஆழ்ந்து நோக்கியவன், முதல் வார்த்தையாக இந்தப் பரிசும், பாராட்டும் மொத்தமும் தன் அன்னையையே சாரும் என்றும் அவையோரின் அனுமதியுடன் தன் அன்னைக்கு இந்த மேடையில் அதற்கான நன்றியைச் செலுத்த விரும்புவதாகக் கூறி, இருக்கையின் விளிம்பில் ஒட்டாமல் அமர்ந்திருந்த அந்தத் தாயை மேடைக்கு அழைத்தான். சற்றும் எதிர்பாராத அந்த தாய் சங்கடத்தில் நெளிந்து கொண்டு அமர்ந்திருக்க விழா அமைப்பாளர்கள் குழுவில் இருவர் சென்று அவரை கையைப்பிடித்து அழைத்து வந்தனர். தம் கையில் இருந்த மாலையை தன் அம்மாவின் கழுத்தில் போட்டு, நெடுஞ்சாண்கிடையாக அந்த மேடையில் அன்னையின் காலில் வீழ்ந்து ஆசி பெற்றபோது அவருடைய கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தம் ஏழாவது வயதிலேயே, குடித்து சீரழிந்து போன தன் தந்தையை இழந்த பின்பு, தாய் தன்னை வளர்க்க பட்ட துயரங்களை, வீட்டு வேலை செய்து மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து போன உண்மையை தயக்கமின்றி எடுத்துக் கூறியபோது அனைவரின் கண்களும் கலங்கித்தான் போனது. அடுத்து தன் கண்டுபிடிப்புகளும் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும் மிக அழகாக எடுத்துரைத்தான். பலவிதமான சோதனைகளையும் கடந்து இந்த கண்டுபிடிப்பு இன்று நம் நாட்டிற்கு முழுமையாக அர்ப்பணிக்கப்படுவதாக அறிவித்தான். இந்த காப்புரிமை மூலமாக பெரிய தொழிற்கூடம் அமைத்து கார்ப்பரேட்டர் தயாரித்தால் அதைத் தங்களுக்கு முழுவதுமாக கிடைக்க ஒப்பந்தம் பெறலாம் என்று பல நிறுவனங்களும் காத்துக் கொண்டிருந்தபோது, தான் மேலும் ஆய்வுப் பணியில் ஈடுபடப் போவதாகவும், இந்த காப்புரிமையை தான் முழுமையாக ஒருவருக்கு சமர்ப்பிக்கப் போவதாகவும் ஒரு பிரபல பத்திரிக்கையில் பேட்டியும் கொடுத்திருந்தான். அதற்காகவே, அதை அறிந்து கொள்ளும் ஆவலில் அனைவரும் அவனுடைய பேச்சை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அதை வெளியிடக்கூடிய அந்த கட்டத்திற்கு வந்திருந்தான். இந்த கண்டுபிடிப்பின் முழு முதல் மூலக்காரணம் எவரோ, அவருக்கே இதன் முழு உரிமையையும் கொடுக்கப் போவதாக அறிவித்தான். இதைச் சொன்னவன், அடுத்த வார்த்தையாக,

ஐயா, வாங்க.... முதலாளி ஐயா வாங்கஎன்று அந்த அரங்கின் விஐபிக்களின் இருக்கையில் மூன்றாம் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவரைப் பார்த்துக் கூப்பிட்டான். அனைவரும் ஒரு சேர ஆவலுடன் திரும்பிப் பார்த்தனர். அப்போது அந்த குறிப்பிட்ட இருக்கையில் அமர்ந்திருந்த, விஜயன் என்ற பரத் குரூப் ஆப் இன்ஜீனீயரிங் கம்பெனி முதலாளியும், தனக்குப் பின்னால் யாரையோ கூப்பிடுகிறார்கள் என்று எண்ணி திரும்பிப் பார்த்தார். ஆனால் ஏகலைவன் திரும்பவும், “ஐயா உங்களைத்தான், முதலாளி ஐயா, வாங்கஎன்று திரும்பவும் தம் கையை நீட்டிச் சொன்னபோது அரங்கின் அத்துனை பார்வையும் தம்மீது விழுந்த போதுதான் தம்மை அழைப்பதை உணர்ந்து ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்ற விஜயன் மெல்ல எழுந்து நின்றார்.

மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் என்ன நடக்கிறது என்று புரியாத நிலையிலேயே சென்று மேடையில் அமர்ந்தார். அனைவரும் வாழ்த்து சொன்னபோதுதான், ஏகலைவன் அந்த முழு காப்புரிமையையும் அவருக்குக் கொடுப்பதாக முடிவு செய்திருப்பது புரிந்தது. தன்னையே நம்ப முடியாமல் கிள்ளிப் பார்த்துக் கொண்டார். இது எப்படி சாத்தியமாகும், தனக்கு எப்படி கொடுக்க முடியும் என்ற குழப்பமே அவர் முகத்தில் அதிகமாக இருந்தது. அப்போதுதான் ஏகலைவன் திரும்பவும் அவர் அருகில் சென்று ஒரு மாலையை எடுத்து அணிவித்து, ஆசி பெற்றுவிட்டு, பேச ஆரம்பித்தான்.

தான் இன்று நம் நாட்டிற்கு மட்டுமல்லாமல் இந்த உலகத்திற்கே சவாலாக இருக்கக் கூடிய எரிபொருள் சிக்கனம் என்ற பெரும் பிரச்சனைக்கு ஒரு துளித்தீர்வு, கொடுக்க முடிந்ததில் பெரும் மகிழ்ச்சியடைவதாகவும், தன்னுடைய ஆய்வுப்பணி அத்தோடு நிற்காமல் மேலும் பல திட்டங்கள் வைத்துள்ளதாகவும் கூறியபோது அரங்கமே கைதட்டலில் திளைத்தது. இந்த தன்னுடைய முழு முயற்சியின் அடிநாதமே விஜயன் என்கிற இந்த முதலாளிதான் என்று கூறியதோடு தம்முடைய கண்டுபிடிப்பின் முழு காப்புரிமையையும் அவருக்கேச் சொந்தம் என்று கூறி அதற்கான சான்றுப் பத்திரமும் அவர் கையில் கொடுத்தபோது, மறுக்க இயலாமல் அதை வாங்கிய நேரம் அவருடைய இரு கைகளும் நடுங்கியது அப்பட்டமாகத் தெரிந்தது.

அடுத்து விஜயன் தம் நன்றியுரை வழங்க வேண்டிய தருணத்தில், கண்கள் கலங்க அவர் பேசியபோது சபையே மௌனமாக அமர்ந்திருந்தது. ஊசிமுனை அமைதி நிலவியதன் காரணம் அந்தக் காட்சி அப்படியே அனைவரின் மனக்கண்களில் விரிந்ததுதான்.........

ஜெயலட்சுமியின் ஒரே மகன் ஏகாலி என்று அழைக்கப்படுகிற ஏகலைவன். மகனுக்கு ஆறு வயது இருக்கும் போதே கார்ப்பரேசனில் கடைநிலை ஊழியனாக பணியில் இருந்த அவனுடைய தந்தை மொடாக்குடியின் காரணமாக ஈரல் கெட்டு உயிரை விட்டபின்பு, சாப்பாட்டிற்கே சிரமப்பட்ட காலத்தில் பரத் கம்பெனியின் முதலாளி விஜயன் வீட்டில் வேலை வாங்கிக் கொடுப்பதாக பக்கத்து வீட்டு பெண் சொன்னதால் அவர்கள் வீட்டில் போய வேலைக்குச் சேர்ந்தாள். கபடமில்லாமல் சொல்கிற வேலை அத்தனையும் செய்து, வெகு விரைவிலேயே எஜமானி அம்மாவின் விசுவாசியாகிவிட்டாள். மகனையும் அரசு உதவி பெறும், பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தாள். அங்கேயே மதிய உணவும் சாப்பிட்டுக் கொண்டு படித்து வந்தான். மாலையானால் அம்மாவைப் பார்க்க முதலாளி வீட்டிற்கு ஓடி வந்துவிடுவான். அங்கேயே தோட்டத்தின் பக்கம் உட்கார்ந்து படிக்க ஆரம்பிப்பான.. நாளடைவில் முதலாளியின் இரு மகன்களும் மெல்ல பழக ஆரம்பித்த போது, அவர்களுடன் துணைக்குச் செல்வது, பையை தூக்க முடியாத போது தானும் தூக்கிச் சென்று கொடுப்பது என்று அப்படியே அவர்களுடன் இருக்கும் நேரங்கள் அதிகரித்தது.

மாலையில் அவர்களுக்குப் பாடம் கற்பிக்க பல தேர்ந்த ஆசிரியர்கள் வீட்டிற்கு வருவது வழக்கம். அந்த நேரங்களில் தானும் வெளியே ஒரு மூலையில் அமர்ந்து அந்த பாடங்களைக் காதில் வாங்கிக் கொண்டு தம் அறிவை வளர்த்திக் கொள்வதில் மிக வல்லமை படைத்தவனாக இருந்தான்... காலங்கள் உருண்டோடியது. தம் எடுபிடி வேலைகளையும் தொடர்ந்து கொண்டு கல்வியிலும் தேறிக் கொண்டிருந்தான். முதலாளியின் மகன்களின் கருணைப் பார்வையின் மூலம் தம் கல்வியும் பெரிய சிரமமில்லாமல் போய்க் கொண்டிருந்தது. முதலாளி அம்மாவும் அன்பே உருவாய் இருந்ததால் ஜெயலட்சுமியும், ஏகலைவனும் ஓரளவிற்கு பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில்தான், பள்ளியிறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மாகாணத்தில் முதல் மாணவனாகத் தேறியதால், முதலாளியின் மகன் சேர்ந்த அதே கல்லூரியில் இலவசமாக இருக்கை கிடைத்து தானும் இயந்திரவியல் பொறியியல் படிப்பு படிக்க வாய்ப்பும் கிடைத்தது பல்கலைக்கழகத்தின் முதல் மாணவனாகத் தேறிய போதுதான் சில விரும்பத்தகாத விசயங்கள் நடக்க ஆரம்பித்தது.

தாம் முதல் தரத்தில் தேறியுள்ள மகிழ்ச்சியை முதலாளியிடம் பகிர்ந்து ஆசி வாங்க வேண்டும் என்று ஆவலாக ஓடி வந்தான் வேறு சிந்தை ஏதுமற்ற அந்த தந்தையில்லாத ஏக்கத்தில் இருந்த இளைஞன்.

தம்மிடம் வேலை செய்பவளின் மகன் முதல் மாணவனாகத் தேறியிருக்கும் போது தம் சொந்த மகன் மிகக் குறைந்த மதிப்பெண் வாங்கிவிட்டானே என்ற ஆதங்கத்தில் இருந்த முதலாளியோ, அவனுடைய எண்ணம் ஏதும் உணராதவராக,

என்னடா உன் வெற்றியை கொண்டாட வந்துட்டியா... போடா போ... இந்த படிப்பும், மார்க்கும் நாங்கள் போட்ட பிச்சைதானே... பெரிசா வந்துட்ட

ஐயா, கஷ்டப்பட்டு படிச்சுதானங்களே இந்த மார்க்கு வாங்கினேன்.. நீங்க சொல்றாமாதிரி புத்தகமும், துணிமணியும் நீங்க போட்ட பிச்சையானாலும், படிப்பறிவு என்னதுதானுங்களே....

என்னடா.. ஏகாலிப்பயலே... எதிர்த்தாப் பேசறே... அவ்வளவு ரோசம் உள்ளவனா இருந்தா இந்த படிப்பு சர்டிபிகேட்டெல்லாம் கொடுத்துட்டு போய் ஏதாவது சாதிச்சுக்காட்டு பார்ப்போம்.. அப்ப ஒத்துக்கறேன் நீ அறிவாளின்னு..

என்று ஏதோ கோபத்தில் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டார். வீட்டில் சென்று இதே நினைவாக இருந்தவனைப் பார்த்து வருத்தப்பட்டு கேட்ட தாயிடம்,

அம்மா, முதலாளி ஐயா சொல்றதிலேயும் நியாயம் இருக்கில்லையா, அவிக குடும்பம் போட்ட பிச்சைதானே இந்த பட்டம், இது இல்லாம நானு ஏதாவது சாதிச்சு காட்டணும்மா.....என்று ஏதேதோ சொன்னது அந்த படிப்பறிவில்லாத தாய்க்கு புரியவில்லை.

அதே யோசனையாக இருந்தவன் ஒரு நாள் என்ன நினைத்தானோ, தம்முடைய மொத்த கல்விச் சான்றிதழ்களையும் கொண்டுவந்து முதலாளி அம்மாவிடம் கொடுத்து ஐயாவிடம் சேர்த்து விடுங்கள் என்று சொல்லிச் சென்றவனை இன்றுதான் மேடையில் பார்க்கிறார். வீட்டை விட்டுச் சென்றவன் பல மாதங்களுக்குப் பிறகு அவ்வப்போது தம் தாயை மட்டும் வந்து பார்த்துவிட்டு ஏதோ தன்னால் முடிந்த பணம் கொஞ்சம் கொடுத்துவிட்டுச் செல்வதாகக் கேள்விப்பட்டதோடு சரி. பத்திரிக்கைகள் மூலமாக ஏகலைவனின் கண்டுபிடிப்புகள் பற்றி அறிந்து கொண்டு, விசாரித்த போது, ஒரு சிறிய பொறியியல் நிறுவனத்தில் தம் திறமையைக் காட்டி வேலை வாங்கிக் கொண்டு அங்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் கால் வயிறும், அரை வயிறும் சாப்பிட்டுக் கொண்டு இந்த ஆய்வுப் பணியைச் செய்ததாகக் கேள்விப்பட்டதாகச் சொன்னார். இந்த காப்புரிமையை பெறுவதற்கு தாம் சற்றும் அருகதையற்றவன் என்றும், தம் மனதில் இவ்வளவு நாட்கள் பாரமாய் அழுத்திக் கொண்டிருந்த பாறையை இன்றுதான் இறக்கி வைத்தது போன்று தாம் உணர்வதாகச் சொன்னார். தாம் சொன்னது போலவே பட்டமும், பதவியும் இன்றியே பெரும் சாதனையைச் செய்து காட்டிவிட்டார் என்றார் பெருமை பொங்க.

அப்போது திரும்பவும் ஏகலைவன் மைக்கை வாங்கி, அன்று முதலாளி ஐயா இப்படி சொல்லாமல் விட்டிருந்தால், இன்று தானும் ஒரு வேளை ஒரு கம்பெனியில் சேர்ந்து சம்பளம் வாங்கிக் கொண்டு சுகமாக காலம் கழித்திருக்கக் கூடும். ஆனால் இன்று நாட்டிற்கே பயன்படும் ஒரு கண்டுபிடிப்பு சாத்தியமாகாமல் போயிருக்கலாம் என்றும் கூறிய போது, கைதட்டல்கள் எழும்பி, அதனை ஆமோதிப்பதாகவே இருந்தது.

விஜயன், தமக்கு அளித்த இந்த வாய்ப்பை தாம் முழுமையாக ஏற்றுக் கொள்வதோடு, இதில் கிடைக்கப்போகும் ஐம்பது விழுக்காடு ஈவுத்தொகையை ஏகலைவனுக்கு அளித்து அவரையும் தமக்குச் சமமாக ஒரு தொழிலதிபராக ஆக்கப் போவதாகவும் வாக்களித்தார்.

ஆனால் ஏகலைவனோ, அந்த நிதியின் மூலம் உலகத்தரத்திற்கு இணையாக ஆய்வுக்கூடம் ஒன்று அமைத்து, ஆய்வுப்பணியில் ஈடுபடும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக அதில் பணிபுரிய தளம் அமைத்துக் கொடுக்கப் போவதாக அறிவித்தபோது கரவொலி விண்ணைப் பிளந்தது.

நன்றி: திண்ணை வெளியீடு

Monday, July 2, 2012

பிரார்த்தனை – கலீல் கிப்ரான்


வேதனையிலும், தேவையிலும்
திளைத்திருக்கும் மகிழ்ச்சியிலும்,
நிறைவான தருணங்களிலும்
பிரார்த்தனை செய்கிறீர் நீவிர்
வாழும் தூய வெளியில் உம்மையே
ஐக்கியமாக்கி கொள்ளுவதற்கா
இந்த பிரார்த்தனைகள்?
உம்முடைய சுகத்தையேக் கருத்தில்
கொண்டு
அதன் இருண்ட மூட்டத்தை
அண்டவெளியில் நீர்த்துப்போகச்
செய்து, உம் இதய விடியலுக்கான
ஊக்குவிக்கியாகவும் இருக்கலாமிது.
உம்முடைய ஆன்மாவின்
ஆணையினை
செவிசாய்த்து ஆழ்ந்து கண்ணீர்
சொரியும்
அந்தத் தொடர்ந்த கதறலினூடேயான
பிரார்த்தனை உம்மை உம்
கதறலிலிருந்து விடுவித்து
புன்னகைப்பூ பூக்கச்செய்யும்
அருமருந்தாகட்டும்…..
உம் பிரார்த்தனைகளின் தருணங்களில்
அந்த மணித்துளியில் பிரார்த்திப்போரை
வானவெளியில் சந்திக்க நேர்ந்தாலும்
அப்பிரார்த்தனையில் காப்பினுள்
ஆழ்ந்து இலயித்திருப்போரை
ச்ந்திக்காமலும் போகலாம் நீவிர்.
உம்முடைய ஆலய தரிசனம்
மாயையான ஊனுடம்பின் காட்சியாக
இன்றி, பேரானந்தம் அளிக்கும்
இனிய தோழமையாகட்டும்!
கிடைத்தற்கரிய ஒன்றை
வேண்டுதலன்றி
உம் ஆலய தரிசனத்தின் தேவை
வேறு ஏதும் இல்லையன்றோ;
உம்மை பணிவாக்கிக்கொள்ளும்
பொருட்டு
நீவிர் அதனுள் நுழைய வேண்டிவரின்
எந்த இயங்கேணியாலும் நீவிர்
உயர்த்தப்பட மாட்டீர்;
அல்லது மற்றையோரின் நன்மை
வேண்டி
யாசகம் பெறுவதற்காக நீவிர் ஆங்கு
நுழைய வேண்டியிருப்பினும் செவி
சாய்க்கப்படமாட்டீர்.
நீவிர் அரூபமாக ஆலய்ம் நுழைவதே
போதுமானது.
வார்த்தைகளால் எவ்வாறு பிரார்த்திக்க
இயலும்
என்பதை உமக்கு எம்மால் கற்பிக்க
இயலாது.
அந்த இறையே உம் உதடுகளினூடே
வார்த்தையாகும் வரமளிக்கும்போது
சேமிக்கப்பட்டிருக்கும் உம்முடைய
வார்த்தைகளில் அவர் கவனம்
கொள்வதில்லை.
மேலும் எம்மால் உமக்கு, சாகரம்,
வனங்கள் மற்றும் குன்றுகளின்
பிரார்த்தனை கீதங்களைக் கற்பிக்க
இயலாது.
ஆயினும் குன்றுகளாலும்,
வனங்களாலும்
மற்றும் சாகரங்களாலும் அவதரித்த
உம்முடைய இதயங்களினூடே
அவைகளின் பிரார்த்தனைகள்
ஊடுறுவிச் செல்வதையும்
உணருவீர்கள்.
நித்சலமான இரவின் நீட்சியினூடே
நீவிரும் பயணித்தால் அவைகள்
அமைதியாக விளம்புவதைக்
கேட்கலாம்:
சுயமாய் இயங்கும் சிறகுகளை
எமக்காக வடிவமைத்த எம் இறையே,
எம்முள் மலர்ந்திருக்கும் தங்களுடைய
விருப்பமே இது.
எம்முள் இது இச்சையானது
தங்களுடைய இச்சையினாலன்றோ.
எம்முள் இருக்கும் உம் சக்தியே
உம்முடைய இரவுகளை எம் பகலாக
மாற்றக்கூடியதான அந்த வல்லமையும்
உம்முடையதே.
“எம்முடைய தேவைகளை உம்மிடம்
கேட்க இயலாது, காரணம் அவைகள்
எம்முள் உதிக்கும் முன்னரே அதனை
அறிவீர் நீவிர்.
நீரே எம்முடைய தேவை;
உம்மிடம் சரணாகதி ஆவதானாலேயே
யாம் அனைத்தும் அருளப்பெற்றவர்
ஆகிறோம்.
Prayer – Prophet
Then a priestess said, Speak to us of Prayer.
And he answered, saying:
You pray in your distress and in your need; would that you might pray also in the fullness of your joy and in your days of abundance.
For what is prayer but the expansion of yourself into the living ether?
And if it is your comfort to pour your darkness into space, it is for your delight to pour forth the dawning of your heart.
And if you cannot but weep when your soul summons you to prayer, she should spur you again and yet again, though weeping, until you shall come laughing.
When you pray you rise to meet in the air those who are praying at that very hour, and whom save in prayer you may not meet.
Therefore let your visit to that temple invisible be for naught but ecstasy and sweet communion.
For if you should enter the temple for no other purpose than asking you shall not receive:
And if you should enter into it to humble yourself you shall not be lifted:
Or even if you should enter into it to beg for the good of others you shall not be heard.
It is enough that you enter the temple invisible.
I cannot teach you how to pray in words.
God listens not to your words save when He Himself utters them through your lips.
And I cannot teach you the prayer of the seas and the forests and the mountains.
But you who are born of the mountains and the forests and the seas can find their prayer in your heart,
And if you but listen in the stillness of the night you shall hear them saying in silence,
“Our God, who art our winged self, it is thy will in us that willeth.
It is thy desire in us that desireth.
It is thy urge in us that would turn our nights, which are thine, into days which are thine also.
We cannot ask thee for aught, for thou knowest our needs before they are born in us:
Thou art our need; and in giving us more of thyself thou givest us all.”

Khalil Gibran _ PRAYER _ Video by Alice

இன்&அவுட் சென்னை பத்திரிக்கையில் என் சிறுகதை- இரட்டை முகம்




THANKS TO

& OUT CHENNAI MAGAZINE
















இரட்டை முகம்!

பனிக்காலம் முடிந்து கோடை தொடங்கி விட்டது. மழை விட்டும் தூவானம் விடவில்லை.கோடை மழை,வெப்பத்தைச் சற்று குறைத்ததனால் அசந்து தூங்கி விட்டாள் செல்வி. மேற்கூரையின் வேய்ந்த ஓடுகள், இரவு அடித்த பேய் மழையும், காற்றும் சேர்ந்து லேசான இடைவெளி விட்டிருந்தது. அதனூடே மெல்ல எட்டிப் பார்த்த கதிரோனின் வீச்சில் ஒரு வரி முன்னெற்றியிலும், இடது கண்ணிலும், ஒடுங்கிய கன்னத்திலும் பட்டு, ஆழ்ந்த நித்திரையிலிருந்தவளை முகச் சுளிப்போடு விழிக்கச் செய்தது.

அடடா, வெய்யில் வந்துவிட்டதா....நேரம் போனதே தெரியவில்லையே! வேலைக்குப் போகனுமே என்று வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தாள் செல்வி. வீடே நிசப்தமாக இருந்தது ஏன் என்று தெரியவிலை. அம்மாவும், அண்ணனும் வேலைக்குச் சென்றிருப்பார்களோ....

அண்ணன் பெயிண்டர் வேலைக்கும், அம்மா சித்தாள் வேலைக்கும் போவதனால், காலை 8 மணிக்குள் கிளம்பாவிட்டால் மேஸ்திரியிடம் சென்று வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும். இரண்டு பேருந்து மாறி செல்ல வேண்டும். ஆகவே நேரத்தோடு இருவரும் இளம்பி விட்டார்கள் போல

பணிக்குச் செல்ல நேரம் கடந்து விட்டது, விரைவில் கிளம்ப வேண்டும் என மனம் பணித்தாலும், உடல் அசைந்து கொடுக்கவில்லை..........
--
’என்னது... இது உடம்பு இவ்வளவு கனமாக இருக்கிறது. ஒரு இரவிற்குள் அப்படி என்னதான் ஆகியிருக்கும். அடித்துப் போட்டது போல அசதி வேறு...தலைப்பாரம். தன் மீதிருந்து தனக்கே அனல் வீசுவது போல..பிரம்மையோ?’

அப்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது, இரவு ப்டுக்கப் போகுமுன் அம்மா சொன்னது.

‘செல்விம்மா, உடம்பு அனலா கொதிக்குதும்மா. காய்ச்சல் நிறைய இருக்கும் போல, இந்த கஞ்சியை குடிச்சிப்பிட்டு மாத்திரையை போட்டுக்கிட்டு படுத்துக்க சாமி.. நாளைக்கு முடிஞ்சா வேலைக்குப் போ, இல்லாட்டி வயித்துக்கு கஞ்சியை குடிச்சிப்பிட்டு நல்லா தூங்கு. டாக்ட்ர் ஊட்டு அம்மாகிட்ட நான் சொல்லிப்புடறேன்...நீ வேலைக்குப் போகத் தேவல..’

‘இல்லம்மா. டாக்டர் வீட்டிற்கு ஒறம்பற [விருந்தாளிகள்] வந்திருக்காங்க...இன்னைக்கு லீவு எடுத்தா அந்தம்மா கண்டபடி கத்தும். நாளைக்கு மின்னைக்கு அந்தப் பக்கமே போவ முடியாது’

கஸ்தூரிக்கு பதில் பேச முடியவில்லை. அவளுக்கும் தான் அந்த டாக்டர் ஊட்டு அம்மாவைப் பத்தி தெரியுமே. ஒரு நாள் வேலைக்குப் போகாட்டாலும் ஆளு வந்துவிடும். வாட்ச்மேன் ஐயன் வந்திடுவாரே கையோடு கூட்டிச் செல்வதற்கு. அந்த டாக்டர் வீட்டு அம்மா பேசுகிற பேச்சு தெருவையே கலக்கும். அந்த அம்மாவின் கடுஞ் சொல்லிற்கு அஞ்சியே அவர்கள் வீட்டிற்கு வேலைக்கு வர பலரும் அஞ்சுவர். இத்தனைக்கும், சம்பளம் என்று பார்த்தால், மற்ற வீடுகளில் கொடுப்பதை விட ஒரு பங்கு அதிகமாகவே கிடைக்கும். ஆனால் அதற்குத் தகுந்த வேலையும் இருக்கும். அந்த அம்மாவிற்கு வீடு பளபளவென கண்ணாடி போல இருக்க வேண்டும். வீட்டைக் கூட்டி மெழுகி முடித்தவுடன், காலிலிருக்கும், காலணியை (வீட்டில் பயன் படுத்தும் பிரத்யேக காலணி) கழட்டி வைத்து விட்டு, தேய்த்து, தேய்த்து நடந்து பார்ப்பார்கள். ஒரு சிறு மண் துகள்களோ, குப்பையோ காலில் பட்டால் அவ்வளவுதான்.....வசவு ஆரம்பித்து விடும். ’என்னத்த வீடு கூட்டுற.....’ என்று பெரும் பாட்டாக வரும்.

அழகான அந்த கரும் பசசை வண்ண பளபளக்கும் கிரானைட் கல் எங்கேனும் ஒரு துளி அழுக்கு இருந்தாலும் போதும் அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்து விடும். இனி தாமதிக்க முடியாது என்ற ஞானோதயம் வர, சட்டென ஒரே மூச்சில் தம் கட்டி எழுந்திருக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றாள். மெதுவாக அப்படியே பொடக்களைப் பக்கம் சென்றவள் தட்டியின் கயிற்றுத் தாழ்ப்பாளை மெதுவே உறுவி, ஒடுங்கிப் போன ஹைதர் அலி காலத்திய அலுமினிய குவளையை எடுத்து தண்ணீர் மோந்து, கோபால் பல்பொடி போட்டு பல் துலக்கி, காலைக் கடன்களை முடித்து விட்டு தள்ளாடியவாறு வேளியே வந்தாள்.(வழக்க்ம் போல இன்றும் சம்பளம் வந்தவுடன் முதல் வேலையாக இந்த ஓட்டை குவளையை மாற்றி பிளாஸ்டிக் மக் வாங்க வேண்டும்) என்ற உறுதி மொழியோடு கழிவறையை விட்டு வெளியே வந்தாள்.

அம்மா கலையத்தில் வைத்துச் சென்ற கஞ்சி அவளைப் பார்த்து சிரித்தது......

‘நல்ல நாளிலேயே உனக்கு என்னைக் கண்டால் ஆகாது. இன்று காய்சல் அடித்த வாய் வேறு...கசப்பு கொடுக்கத்தானே செய்யும். என்னைச் சீந்தவா போகிறாய்’ என்பது போலப் பார்த்தது....

செல்வியோ, வெறும் வயிற்றில் மாத்திரை போட முடியாதே என்று பல்லைக் கடித்துக் கொண்டு நான்கு வாய் கஞ்சியைக் குடித்துவிட்டு மாத்திரையைப் போட்டுக் கொண்டாள். டாக்டர் வீட்டில் வேலை செய்வதில் இன்னொரு புண்ணியம், சகல வித வலிகளுக்கும் நிவாரணிகள் இலவசமாகக் கிடைக்கும்......எப்ப்டியோ டாக்டர் வீட்டிற்குப் போனால் சாப்பிட ஏதாவது மிஞ்சிப் போன காலைப் பலகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

மாத்திரை போடவும், காய்ச்சல் கொஞ்சம் குறைந்து வேர்த்து விட்டது. வேலைக்குக் கிளம்பத் தயரானாள். அப்போதுதான் அவர்கள் வீட்டின் விருந்தாளியாக வந்திருந்த அந்தப் பையனின் கழுகுப் பார்வை அவளுக்கு நினைவிற்கு வந்து சங்கடப்படுத்தியது..... பாழாய்ப்போன பதின்ம வயதின் பளபளப்பு....பன்னிக்குட்டிக் கூட அழகாய்த் தெரியும் பருவம்...

பதின்மம்.. ஒட்டிய கன்னமும், மாநிற்முமாக இருந்தாலும், பூசியவாறு சதையும், லேசான பளபளப்பும், உடல் முழுவதும் பெரும் மாற்றத்தின் துள்ளலும் பார்க்கின்ற வக்கிரமான கண்களுக்கு தீனிப் போடத்தான் செய்கிறது....எங்கு சென்று எதை மறைப்பது...எப்படி மறைப்பது. அந்தப் பார்வையின் வீச்சு தாங்காமல், ஆடையே நழுவி வீழ்ந்ததுபோல் கூனிக் குறுகி, இந்த வேதனை பாழாய்ப்போன அந்த கழுகுக் கண்களுக்குத் தெரியவா போகிறது.... குனிந்து வீடு பெருக்கக் கூட சங்கோஜம்....எங்கிருந்தோ இரண்டு புண்கள் [கண்கள்] தன்னையே நோட்டம் விடுவது போல ....சே,என்ன கொடுமை இது. இன்னும் எத்தனை நாள் இந்தக் கழுகு அங்கே இருக்கும் என்று தெரியவில்லையே,சென்று ஒழிந்தால் தேவலாம் போல இருந்தது அவளுக்கு..ஏழ்மையின் ரணத்தைவிட இந்தக் கொடுமை சற்று அதிகம்தான். அம்மாவிடம் சொன்னால் பாவம் ரொம்பவும் வருத்தப்படுவார்கள்.

அம்மாவிற்கு என்னமோ தன் செல்ல மகள் ஆபீஸ் உத்தியோகம் பார்ப்பது போல ஒரு நினைப்பு.. தன்னைப் போல வெய்யிலிலும், மழையிலும், கல் மண் சுமந்து சிரமப் படக்கூடாது என்றுதானே தன்னோடு வேலைக்கு வரக்கூடாது என்று பிடிவாதமாக டாக்டர் வீட்டில் வேலைக்குச் சேர்த்து விட்டார்கள்.

அங்கேயும் இப்படி ஒரு பிரச்சனை என்று சொன்னால், அம்மா பாவம் என்ன செய்ய முடியும்? வேலையை தூக்கி எறிந்துவிட்டு வா என்று சொன்னாலும்,இது போன்ற கழுகுகள் இல்லாத இடம்தான் ஏது? எவ்வளவு நாள் ஓடி ஒளிய முடியும். சரி இனியும் தாமதிப்பதில் அர்த்தமில்லை என்பது புரிய,பரபரவென புறப்பட ஆயத்தமானவள், அன்று ஏனோ முதல் முறையாக துப்பட்டாவைத் தேட ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. போகிற அவசரத்தில் பெரும்பாலும் துப்பட்டாவை மறந்து விடுபவள், புதிதாக இருந்த துப்பட்டாவை எடுத்து அழகாக போட்டு,மறக்காமல் பின் குத்தி வைத்தாள். வீட்டை பூட்ட மறந்தவள், நாலு எட்டு எடுத்து வைத்தவுடன் நினைவுவர, திரும்ப ஓடி வந்து சாவியை எடுத்து பூட்டிவிட்டு அதை எறவானத்தில் சொறுகி விட்டு, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே, இந்த பொக்கிச அறைக்கு ஒரு பூட்டு, அதற்கு ஒரு சாவி வேறு என்று நினைத்துக் கொண்டே, பரபரவென நடக்க ஆரம்பித்தாள். நாலு எட்டு வைத்தவுடன், வாட்சுமேனை பார்த்து விட்டாள்.

‘ என்னாச்சு, இவ்வளவு நேரமா, வேலைக்கு வர, அம்மா கோபமா இருக்காங்க...’

‘அண்ணே, நேத்தெல்லாம் ஒரே காய்ச்சல். இப்போதான் மாத்திரை போட்டுக்கிட்டு வரேன்’

‘சரி சரி, ஆனா விருந்தாளிக வந்திருக்கிற நேரத்தில இப்படி லேட்டா வந்தா திட்டுவாகல்ல’

‘ஆமாண்ணே, அதான் பயம்மா இருக்கு’

‘சத்தமில்லாம போய் வேலையைப் பாரு, விருந்தாளிங்க முன்னாடி ரொம்ப வைய மாட்டாக’

‘ சரிண்ணே......’

வீட்டிற்குள் காலடிவைக்கும் போதே கொல்லென்ற சத்தம். அனைவரும் பட்டாசாலையில் உட்கார்ந்து சினிமா படம் பார்த்துக் கொண்டு சத்தம் பண்ணிக் கொண்டிருந்தனர். நல்ல வேளை இந்த சத்தத்தில் அம்மா திட்டினால் கூட இவர்களுக்கு காது கேக்காது......சத்தம் நல்லதுதான் என்று எண்ணிக் கொண்டே மெதுவாக சமயலறைப் பக்கம் சென்றாள். எப்படியும் திட்டு விழும் என்ற பயத்துடனேயே மெதுவாக அடி மேல் அடி வைத்து சென்றாள். எந்த சாமி புண்ணியமோ, அம்மா திட்டுகின்ற மூடில் இல்லை. திரும்பி, ஒரு முறை மேலிருந்து கீழாக பார்த்துவிட்டு, முறைத்து விட்டு, திருப்பிக் கொண்டார்கள். என்ன நினைத்தார்களோ,

‘ ஏய் இங்க வா, என்ன குளிக்கலையா....நேத்து உடுத்தின துணியோட வந்திருக்க...அதுவும் புதுசா துப்பட்டாவெல்லாம் போட்டுகிட்டு., ஒரு மார்கமாத்தான் இருக்க.....பெரிய அழகு ராணியா நீங்க..... உங்க அழகை பாத்து இங்கே எல்லாம் கண்ணு வைக்க க்யூவுல நிக்கிறாங்களாக்கும்’இதுல ஒன்னியும் குறைச்சல் இல்ல. இந்த புத்தியெல்லாம் வந்தா நீ எங்கெ ஒழுங்கா வேலை செய்யப் போற... போ..போ...போய் பாத்திரத்தை சட்டுனு கழுவி எடுத்துட்டு வா..’

கொல்லைப்புறம் மலையாகக் குவிந்து கிடந்தது பாத்திரங்கள். மலைப்பாக இருந்தது....எப்பத்தான் கழுவி எடுக்கப் போறோமோ, கடவுளே.....வெய்யில் வேற.தலை வலிக்க ஆரம்பித்திருந்தது. இருந்தாலும்,அந்தக் கழுகுப் பார்வைக் கரடிக்கு இந்த சூரிய பகவானின் உஷ்ணமே தேவலாம் போல இருந்தது. மெதுவாக பாத்திரங்களைத் துலக்க ஆரம்பித்தாள்.

‘செல்வி....என்ன பண்றெ அங்கே.. சட்டுனு கழுவி எடுத்துட்டு வா பாத்திரத்த...வீடு கூட கூட்டாம கிடக்கு..’

அடக் கடவுளே, வீடு பெருக்கி துடைக்க வேண்டுமா.. அந்த நாய் போய் தொலைச்சப்புறம் கூட்டலாம் என்றால் இந்த அம்மா வேற.. இதுகிட்டசொன்னா புரிஞ்சிக்கவா போகுது.... என்னையே திட்டும் திருப்பி..

விதியை நொந்து கொண்டு சாமான்களை கழுவி திட்டுமேல் தண்ணீர் போக கவிழ்த்து வைத்து விட்டு அந்த இடத்தை சுத்தமாக அலம்பிவிட்டு, பாத்திரங்களை துடைத்து உள்ளே எடுத்துச் சென்றாள். நன்கு பளபளப்பாகத்தான் இருந்தது. ஆனாலும் அந்த அம்மா திருப்பி, திருப்பி எங்காவது அழுக்கு கண்டுபிடிக்க ஆலாய்ப் பறக்கும்.......

’செல்வி.....வந்துட்டியா, சரி எல்லாத்தையும் இங்கே வைத்துவிட்டுப் போய் சட்டுனு வீட்டை சுத்தம் பண்ணு’

‘சரிங்கம்மா...’

’ என்ன...ஏன் இழுத்துக்கிட்டு நிக்கற போய் வேலையைப் பாக்கலாமில்ல’

‘ இல்லம்மா...கொஞ்சம் தலை வலியா இருக்கு, கொஞ்சம் டீ தறீங்களா..’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள்.

‘ வந்ததே லேட்டு, இது வேறயா..வரும் போது குடிச்சிடு வரலாமில்ல,..சரி இரு தறேன்..’

சூடான, டீ தலை வலியை சற்று போக்கியது. அதெல்லாம் அம்மா நல்ல டீதான் தருவாங்க....ஒவ்வொரு வீட்டில வீட்டுக்காரங்களுக்கு தனியா,நல்ல டீயும், வேலைக்காரங்களுக்குத் தனியா தண்ணி டீயும் போடுவாங்க. ஆனா அம்மா அந்த விதத்துல ரொம்ப நல்லவங்க. அவிங்க என்ன சாப்பிட்றாங்களோ அதைத்தான் எனக்கும் தருவாங்க..

கடவுளே அந்த பையன் எங்காவது போய் தொலைஞ்சிருக்கனுமே...வீடு பெருக்கி, மொழுகுற வரைக்குமாவது இல்லாம இருந்தா தேவலையே....

அப்பாடி...ஆளைக்காணோம். சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு போக வேணும். சரியா செய்யாட்டாக் கூட பரவாயில்ல...இன்னைக்கு அம்மாகிட்ட திட்டு வாங்கினாலும் பரவாயில்ல...எப்படியோ வேலை முடிஞ்சா சரி.

அப்பாடி, இத்தனை பெரிய ஹால், கூட்டி மெழுகறதுக்குள்ள இடுப்பே க்ழண்டு போகுது சாமி......ஆச்சு இன்னும் இரண்டு அறைதானே, பெரிய வேலை முடிஞ்சிடும்..

அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.சாதாரணமா போற போக்கில செய்யற வேலையெல்லாம் இன்னைக்கு இவ்வளவு சிரம்மா இருக்கு.. எல்லாம் இந்த காச்சல் படுத்துற பாடு..ம்ம்.....

குச்சியில் துடைத்தால் அழுக்கு போகாதாம், அதனால் துணியை வைத்து நன்றாக குனிந்து, அழுத்தி துடைக்கனும் அப்பத்தான் நல்லா அழுக்கு போகுமாம்...

படுக்கை அறை திறந்துதான் இருந்தது. போய் கூட்டி மொழுகிடலாம் என உள்ளே சென்றாள். அலங்கோலமாகக் கிடந்தது அறை. குளியல் அறையில் தண்ணீர் சத்தம். யாரோ குளிப்பார்கள் போல.....சீக்கிரம் அவுக வரதுக்குள்ள வேலையை முடிச்சிபிடலாம் என அவசர அவசரமாக கூட்டி முடித்தாள். மொழுகுவதற்காக துணி எடுத்து அலசிப் பிழிந்து குனிந்து மொழுக ஆர்ம்பித்த போது......

முதுகில் ஏதோ குறுகுறுப்பாக உணர முடிந்தது.சோப்பு வாடை வேறு கும்மென வந்தது.....ஏதோ புரிந்தது போல திரும்ப யத்தனிப்பதற்குள்.. அந்த முரட்டு உருவம் அவள் மீது பாய, தன்னால் முடிந்த மட்டும் பலமாக தள்ளி விட்டவள், ஒரு கணமும் தயங்காமல், துணியை அங்கேயே வீசி விட்டு ஓடினாள். இதற்கு மேல் பேசாமல் இருந்தால் தப்பாகிவிடும் என்று அம்மாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று ஓடினாள்.

அம்மா சமயலறையில் அவசரமாக ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள். சென்ற வேகத்தில் அம்மா.....என்று மிகவும் பரபரப்பாக அதே படபடப்புடன் கூப்பிடவும், என்னவோ ஏதோவென்று படாரென திரும்பியவர் கையில் இருந்த வெண்ணெய் போல, அதை அப்படியே ச்மயலரை சிங்க்கில் கொட்டிவிட்டார்கள். செல்விக்கு கை காலெல்லாம் நடுங்கி விட்டது....

அந்த அம்மாவோ அவள் சொல்ல வந்ததைக் கேட்காமல் வெண்ணெய் கொட்டி விட்டதே என்ற கோபத்தில், ‘அடி நாயே, அறிவில்லை. எதுக்கு அப்பிடி கத்துற’ என்று சொல்லிக் கொண்டே,

அடடா இத்தனை வெண்ணெய்யும் கொட்டி விட்டதே. சிங்க் வேற கழுவவே இல்ல...சொல்லிக் கொண்டே அந்த வெண்ணெயை அப்படியே அள்ளி பாத்திரத்தில் போட்டு கழுவ ஆரம்பித்தார்கள். இதனைக் கண்ட செல்விக்கு பேரரதிர்ச்சியாக இருந்தது...சுத்தம், சுத்தம் என்று வாய் கிழிய பேசுபவர்கள் இப்படி தொட்டிக்குள் விழுந்த வெண்ணெயை எடுத்து வைத்துக் கொள்கிறார்களே.......

தான் சொல்ல வந்ததை இனிமேல் இவர்களிடம் சொல்லி ஆகப் போவது ஒன்றுமில்லை என்று முடிவு செய்தவள், வாய் பொத்தி மௌனமானாள்..