Thursday, July 18, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (19)


பவள சங்கரி
“ஒருவரை விடுவிக்க வெறுமனே அவருடைய சங்கிலிகளை உடைத்தெறிவது மட்டுமல்லாமல் அடுத்தவர்களின் சுதந்திரத்தை மதிப்பதோடு அதை மேம்படுத்தும் வகையில் வாழ்வதில்தான் இருக்கிறது. 
_நெல்சன் மண்டேலா


அறியாததை அறிந்து, தெரியாததற்குள் காலடி வைக்கலாமா?
நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்று எடுத்துக்கொண்டு வாளாவிருக்கலாமா? அல்லது நம்மை மீறி நடப்பவைகளை எதிர்த்து நின்று போராடலாமா? அல்லது விட்டுவிலகி வேறு பாதையை நாடலாமா?
சமீபத்தில் என் நண்பர் ஒருவரை வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்தேன். அவர் சமீபத்தில் மிகப்பெரிய வியாபார காந்தமாக மாறிவிட்டதாகக் கேள்விப்பட்டிருந்தேன். உண்மையில் அவரை எனக்குத் தெரியும் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கும் பெருமையாக இருந்தது. காரணம் வாழ்க்கையின் அடி மட்டத்திலிருந்து உழைப்பினால் மேல் நிலைக்கு வந்தவர். அன்று அவரைப் பார்த்தபோது என் கற்பனைக்குச் சற்றும் எட்டாத நிலையில் மிகவும் வேதனையாகக் காணப்பட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய வியாபார பங்குதாரர் தன்னை ஏமாற்றிவிட்டு பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்று புலம்பினார். இத்தனைக்கும் அந்தக் கூட்டாளி இவருடைய நெருங்கிய நண்பர். தான் ஏமாற்றப்பட்டதால், வேதனையிலும், கோபத்திலும் உழன்று நொந்து போயிருந்தார். இது நடந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆன நிலையில் இன்னும் அவர் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல், தன் வேதனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் முகமாக, இந்த ஏமாற்றத்திற்கு தர்க்கரீதியான ஒரு காரணத்தைத் தேடி தன் மூளையை கசக்கிப் பிழிந்துகொண்டிருக்கிறார். எப்படியாவது அதை அறிந்தே ஆக வேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறார்.