Wednesday, June 8, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(12)

வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (12)

”உலக அறிவில் எப்போதும் இந்த எதிரொலியும், எதிர்ச்செயலும், எதிர்வினையும் இருக்கத்தான் செய்யும். நீங்கள் எதைச் செய்தாலும் அது உங்களிடம் திரும்பி வரும். நீங்கள் எதைச் சொன்னாலும் அது திரும்பி வந்து உங்கள் காதில் ஒலிக்கும். நீங்கள் எதை நினைத்தாலும் அந்த எண்ணம் திரும்பத் திரும்ப எழுந்து கொண்டேயிருக்கும் “........(கீதை)

எப்போது ஒரு மனிதன் இறப்பின் விளிம்பைத் தொட்டு வருகிறானோ, அப்போதே அவன் மனநிலையில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. சிலது, தற்காலிகமாக மறைந்து போவதும், சில குணங்கள் எஞ்சிய வாழ்க்கையில் நிலைத்து நின்று விடுவதும் கூட உண்டு. ராமச்சந்திரனின் நிலையும் அப்படித்தான்.மங்கிய நிலவொளியில் மண்டிய புதரினுள் மறைந்துக் கிடக்கும் மாய மோதிரத்தைத் தேடும் மாவீரன் போல
அவர்தம் மனமும் நினைவலைகளின் இறுதி வேர் வரைச் சென்று ஆழ்ந்த தேடல்களைச் செய்து கொண்டுதான் இருந்தது. தன் தவறுகள், தன்னையறியாமல் செய்த பிழைகள் மற்றும் அடுத்தவர் மனம் நோகச் செய்தத் தருணங்கள் என்று பலதும் மனக் கண் முன் காட்சிகளாக விரிந்தது. இந்த்த் தேடல்தானே பக்குவத்தின் அடிப்படை!

’சுயநலம்’, என்பது மனித வாழ்வில் தவிர்க்க இயலாத ஒரு குணம் என்றாகிப் போவதே நிதர்சனமாகிறது.இந்த சுயநலமே வாழ்க்கை ஓட்டத்தின் அடி நாதமாக விளங்குவதும் உண்மை. எத்தனைதான் வெளிவேடமிட்டாலும், ஒரு நிலையில் அது காட்டிக் கொடுத்தும் விடுகிறது, தன்னுடைய செயல்களாலேயே. அது உறவுகளானாலும், நட்பு மற்றும் காதல் எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல.எல்லாமே ஒரு கணக்குத்தான்!எதிர்காலம் என்ற பெரிய கேள்விக்குறியின் பிரதிபிம்பம்.அந்த வகையில் தன் தங்கை மகள் தன் மருமகளாக வந்தால் தனக்குப் பிறகு தன் மனைவிக்கும் பாதுகாப்பு என்று அவர் நினைப்பதிலும் தவறில்லை. அனுவின் பொறுமையான குணமும் , பக்குவமும், சூழலுக்கு ஏற்றவாரு தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் திறனும் அவள் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துவது இயற்கை. பெரிய அழகி இல்லையென்றாலும், அவளுடைய நடை, உடை மற்றும் பாவனை அவளை பெரிய அழகியாகக் காட்டும். அழகு என்பதே அவரவர் பார்க்கும் பார்வையில் தானே இருக்கிறது. இரசிக்கத் தெரிந்த மனம் இருந்தால், இறைவன் படைப்புகள் அனைத்துமே ஒரு அதிசயமான அழகுதானே!ஆனாலும் இன்றைய நிலையில் தன்னைச் சார்ந்த எவர் மனதையும் நோகச் செய்வதைவிட முடிந்த வரை அவர்களை திருப்திப் படுத்த வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி இருந்தது அவருக்கு.

மாறன் காலை கடன்களையெல்லாம் முடித்து, நல்ல ஸ்டிராங்காக ஒரு ஃபில்டர் காபி போட்டு குடிக்க ஆசையாக இருந்தாலும், அதற்கெல்லாம் பொறுமை இல்லாதவனாக, ப்ரூ காப்பியே போதும் என்ற நிலையில், ஒரு கப் காப்பியுடன் வந்து, ரம்யாவின் போன் எண்ணைச் சுழற்றினான். சட்டென உடனே போனை எடுக்கும் வழக்கம் கொண்ட ரம்யா, நாலைந்து மணியொலிக்குப் பிறகும் எடுக்காததால், ஏதோ வேலையாக இருக்கிறாள் போல் உள்ளதே, என்று சற்று நேரம் கழித்து தொடர்பு கொள்ளலாம் என்று காத்திருந்தான்.ஒரு ஐந்து நிமிடம் இருக்கும், காபியை சுவைத்து முடிப்பதற்குள், அவளிடமிருந்து அழைப்பு மணி.

”ஹலோ, மாறன் என்ன விசயம், இன்று இவ்வளவு காலையிலேயே போன்.நான் போன் பண்ணினால், கத்துவாய், அலுவலகம் கிளம்பும் நேரம் தொந்திரவு செய்வதாக......”

“அட ஆமாம்ப்பா, அதை ஏன் கேட்கிறே. நேற்று இரவே உனக்கு போன் செய்யலாம் என்று இருந்தேன். நீ வேறு வீர சாகசங்கள் எல்லாம் செய்த அலுப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பாயே, ஏன் தொந்திரவு செய்ய வேண்டுமென்று விட்டு விட்டேன்”

”அப்படி என்ன அவசரம், ஏதேனும் முக்கியமான விசயமா?”

“ அதெல்லாம் ஒன்னுமில்லைப்பா.....என் நண்பன் தினேஷ் வாஷிங்டனில் இருக்கிறானே, அவன் நேற்று இரவு வந்த சிறிது நேரத்திலேயே அழைத்திருந்தான்”

ஓரளவிற்குத் தெளிவாக தினேஷ் சொன்ன அத்தனை விசயங்களையும் எடுத்துச் சொன்ன போதும் ரம்யாவிடமிருந்து ஒரு மௌனமே பதிலாக இருந்தது.

“ என்ன ரம்யா.....இவ்வளவு யோசனை? அந்தப் பெண்ணை உன் அறையில் தங்க வைக்க விருப்பமில்லையென்றால், வேறு ஏதும் ஏற்பாடு செய்யலாமா?”

“இல்லை மாறன், நானும்தான் ஊருக்குச் செல்கிறேனே, திரும்பிவர எப்படியும் ஒரு மாதம் ஆகும். அதற்குப் பிறகு ஒரு 50 நாட்கள்தானே,அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். ஆனால் அவர் அனுசரித்துப் போகிறவரா என்று தெரியவில்லையே”

“ஆமாம், ரம்யா...நானும் அவரைப் பற்றி எதுவும் விசாரிக்கவில்லை. நேற்று இருந்த பயணக் களைப்பில் எனக்கு ஏதும் தோன்றவில்லை. பெயர் கூடச் சரியாகக் கேட்கவில்லை.பார்க்கலாம், இன்று அவனே அழைக்கக் கூடும், அப்போது நான் விவரமாகக் கேட்டுக் கொள்கிறேன்”

அலுவலகத்தில் அன்று முக்கியமான மீட்டிங். அது மட்டுமல்லாமல் விடுமுறைப் பணிகளும் சேர்ந்து கொண்டது. எதைப்பற்றியும் நினைக்கும் வாய்ப்பே இல்லாமல் போனது.மதியம் உணவு இடைவேளையின் போது கூட அவசரம்தான். மாலை ஓரளவிற்கு முக்கியமான பணிகளையெல்லாம் முடித்துவிட்ட திருப்தியில், நாற்காலியில் சாய்ந்து காலை நீட்டி ஓய்வெடுக்கும் வேளையில்தான் தினேசின் நினைவு மெல்ல எட்டிப் பார்த்தது.......

‘அடடா, ரம்யாவிடம் பேசிவிட்டு தினேசைக் கூப்பிடுவதாகக் கூறினோமே, மறந்தே போய்விட்டதே’ என்று எண்ணியவன், செல்பேசியை எடுத்து எண்ணை தேடப்போக.....

‘என்னைத் தாலாட்ட வருவாளோ’ என்று பாட ஆரம்பித்தது செல்பேசி....

“ ஹலோ, தினேஷ், சொல்லுங்கள், உங்களுக்கு ஆயுசு 100! இப்போதுதான் உங்களிடம் பேசலாம் என்று போனை எடுத்தேன், அதற்குள் நீங்களே கூப்பிட்டு விட்டீர்கள். ரம்யாவிடம் பேசிவிட்டேன். அவள் தன் அறையிலேயே உங்கள் உறவினரைத் தங்க வைத்துக் கொள்வதாகச் சொல்லி விட்டாள். எனக்குத்தான் அதை உங்களுக்குத் தெரியப்படுத்த நேரமில்லாமல் போய்விட்டது.”

“பரவாயில்லை, மாறன், நீங்களும் விடுமுறைக்குப் பிறகு இப்போதுதான் அலுவலகம் வந்திருக்கிறீர்கள். பல வேலைகள் இருக்கும். அதனால்தான் நானும் தொந்திரவு செய்ய விரும்பவில்லை. ஆனாலும், இது கொஞ்சம் அவசரத் திட்டமாக ஆனதால், உங்களை இப்படி தொந்திரவு செய்ய வேண்டியதாக உள்ளது”

“பரவாயில்லை. அதனாலென்ன, அவர்கள் எப்போது வருகிறார்கள்.வழி தெரியுமா, விமான நிலையம் சென்று அழைத்து வர வேண்டுமா, எல்லா விவரமும் சொன்னால் பரவாயில்லை”

“ஆமாம், மாறன், அவர் நியூ ஜெர்சி ஏரியாவிற்கு புதிதாக இருப்பதால், நீங்கள் விமான நிலையம் வந்தால் நன்றாக இருக்கும். நான் அவர் பற்றிய மற்ற விவரங்களை மெயிலில் அனுப்புகிறேன்”.

மாறன் இருக்கும் மன நிலையில் இது சற்று சிரமமான காரியம்தான் என்றாலும், சனிக்கிழமையன்று ஓய்வு நாளாக இருப்பதனால் சமாளிக்கலாம் என்று எண்ணியவன், திரும்பவும் பெயர் கூடக் கேட்க மறந்து போனதை எண்ணி லேசாகப் புன்னகைத்துக் கொண்டான்.இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது, ரம்யாவிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணி அவள் இருக்கைப் பக்கம் பார்வையை நோட்டம் விட்டவன், அவள் இருக்கையில் இல்லாதது கண்டு அறை முழுவதையும் நோட்டம் விட்டான். சற்று தொலைவில் ரம்யா, ஒரு அமெரிக்கப் பெண்மணியிடம் கையை ஆட்டி, ஆட்டி பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.ரம்யா இப்படித்தான், யாராக இருந்தாலும் தன் அன்பான பார்வையாலும், துடுக்கான பேச்சாலும் எளிதாக கவர்ந்து விடுவாள்.முதல்நாள் தான் பணிக்கு அமர்ந்த அந்தப் பெண்ணிடமும் இவ்வளவு எளிதாக நட்பானது ஆச்சரியம்தான்.. அவளுடைய இந்த குணத்தை நம்பித்தானே தினேசின் உறவினரை அங்கு தங்க வைக்க ஏற்பாடு பண்ணினான் அவன்.

வெள்ளிக் கிழமை இரவு, தினேசின் மெயில் வ்ந்திருந்தது. சனிக்கிழமை காலை வாஷிங்டனிலிருந்து கிளம்பி மதியம் வந்து சேருவார் எனவும், விமானத்தின் எண் மற்றும் அவருடைய பெயர், தற்போதைய முகவரி, பணியாற்றும் அலுவலகம் போன்றத் தகவல்களை மேலோட்டமாக நோட்டம் விட்டவன், முதலில் பெயரைப் பார்க்க வேண்டும், அப்போதுதான் அறிமுகப் படுத்திக் கொள்ள முடியும்.உள்நாட்டு விமான சேவையாதலால், சிறிய போயிங் விமானமதான் வரும். அதில் பயணிகளின் எண்ணிக்கையும் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும் என்பதாலும், வருபவர் நம் தென் நாட்டவர் என்பதாலும் முகத்தை வைத்தேக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்காது.

திரும்பவும் அவரின் விவரம் பற்றிய பட்டியலை நோட்டம் விட்டவன், முதலில் பெயரைப்பார்த்தவன் அதற்கு மேல் தன் கண்கள் அகல மறுக்க அங்கேயே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். ஆம் அதில் ‘அவந்திகா’ என்ற அந்த தேனினும் இனிய பெயரை உச்சரித்துப் பார்க்கையிலேயே தன்னைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றுவது போல் உணர்ந்திருந்த அந்த ஒரு காலத்தின் மிச்சம் இப்போதும் மெல்ல எட்டிப் பார்க்க எத்தனித்தது.........

அவந்திகா, அவளாக இருக்குமோ.............சரி இன்னும் ஒருநாள் தானே காத்திருப்போம் என்று எண்ணியவாறு கிளம்பத் தயரானான் மாறன்!

தொடரும்.