Saturday, September 27, 2014

கற்பகவல்லியே! காமாட்சியே!


கற்பகவல்லியே! காமாட்சியே!

நன்றி : வல்லமை


பவள சங்கரி


நவ்வி போலுமே விழியுடையாள் – ஐயன்
கவ்வி கடுந்தவம் கலைத்துமகிழ செல்வி
நஞ்சுண்டகண்டனவன் பாதம் பணிந்தே 
பாவவினை களையும் வரமளிப்பவளே!!
கனிவளச் சோலையில் கற்பகத்தருவாய் படர்ந்து
கசிந்துருகும் பக்தரின் பரிதவிப்பில் சொற்பதமாய்
விரிந்துவிரிந்து விசித்திரமாய் விந்தையானாய்
விரைந்துவந்து உந்தன் மகவைக் காத்தருளே!
சிந்திய முத்துக்களின் புத்தொளியில் சீவனின்
சிந்தை மலர்களின் சிலிர்ப்பில் சித்தாந்தம்
பேசும் சின்னக் கிளியின் கொஞ்சுமொழியில்
சித்தம் கலங்காமல் இறுமாப்பு கொண்டாயோ?
ஒங்காரரூபினி என்றால் ஓயாமல் ஓசைஎழுப்பி
ரீங்காரம் செய்யும் தேனீயாய் சுற்றிவரும்
பாங்கான பக்தருக்கு வரமருளும் நித்தமும்
நீங்காத நாயகியே! காத்தருளும் காமாட்சியே!!


Friday, September 26, 2014

அருளன்னை!


பவள சங்கரி





அம்புவியைக் காக்கும் அருளன்னை - கனிவுடனே
இப்புவி மாந்தரின் சங்கடம் போக்குமலர்ப்பாதம்
மந்திரச் சொல்லால் பணிந்து நாளும்
வெந்தயத்தீயின் விதியை வீழ்த்து!


Wednesday, September 24, 2014

அம்மையும் நீயே!


பவள சங்கரி


அம்மையும் நீயோ இப்புவியும் உன்னதோ
உன்னைநினைந்தே தமிழை ஓதினேன் – என்னை
கனிந்தேற்றுக் கொள்ளாத நாயகியுண்டோ உண்டோ
செருக்கேற்றுக் கொள்ளாத கவிஞனும்!

தேவி பிறந்தவூர் அலைகடல் சூழுமூர் 
சிற்றாடையும் சிந்தூரமும் மாணிக்கமும் சூடியவள்
புன்னகையும் புதுப்பொலிவும் பூமணமும் நித்தம்
நிறைதலம் நீள்கடல் நாயகியே!

Tuesday, September 23, 2014

அந்தாதியும், அபிராமிப்பட்டரும்!


பவள சங்கரி


அர்த்தநாரியாய் ஆருத்ரனாய் ஆதவனாய்
இடுகாட்டு நாயகனாய் இகம்பர அதிபதியாய்
ஈரேழுலகின் ஈடில்லா ஈசனின் இடப்பாகம்
உரையும் ஊழிமுதல்வனின் நாயகியே! அபிராமி அன்னையே!!
பழமைக்கோலம் பரிதியின் தவம்
புதுமையில் புகுந்தால் புவிநாசம்
பழமையும் புதுமையும் பரிதிக்கேது
சுட்டெரிக்கும் சூதையும் சூழ்வினையையும்!!
பரிதிக்கே ஒளியாய் ஓங்கிய உத்தமியே
பங்கயத் தேரில் பதவிசாய் பவனிவரும்
மங்கையர்கரசியே மாதவச் செல்வியே
அங்கையர்கண்ணி அம்மையே! ஆனந்தமே!!
தஞ்சமென்று சரண் புகுந்தோர் நெஞ்சமெலாம்
பஞ்சமில்லா பேரருள் புகுத்தி வஞ்சமெல்லாம்
நீக்கியருள் மழைமேகமாய் புவியனைத்தையும்
காத்தருள் அகிலாண்ட நாயகியே! அபிராமியே!

Monday, September 22, 2014

அமர காவியம்!



பவள சங்கரி


காதல் என்பது நீ காதலிக்கும் அந்த ஒருவருக்கானதேயல்ல
உன்  தனித்தன்மையை உணரச் செய்து
உன் சுகதுக்கம் என எதையும் எவருடன் பகிரமுடிகிறதோ
எவருடன் நீ நீயாகவே இருக்க முடிகிறதோ
எவரால் உன் வாழ்க்கையில்  மாற்றம் ஏற்படுகிறதோ
எவரால் அப்படியொரு காதலை உணர்த்த முடிகிறதோ
அந்த ஒருவருக்கே உரித்தானது அது!
வானத்தில் எழுதிவைத்தேன் உன் பெயரை
மேகம் வந்து மறைத்துவிட்டது.
கடலோரத்தில் மணல்மேட்டில் எழுதிவைத்தேன்
அலைவந்து மொத்தமாக அடித்துச்சென்றது.
இருதயத்தில் பொரித்து வைத்தேனதை
இரும்பாக நிலைத்து நிற்கிறது அங்கே!
வண்ணமயமான ஒரு காகிதத்தில் கண்ணைக்கவரும் வகையில் கருத்தாய் கவிதைகள் எழுதி எவரோ தவறவிட்டுப்போன அது தன் கையில் ஏன் கிடைத்தது என்று சிந்திக்க முடியாத அளவிற்கு ஒரு கணம் அதன் கருத்தில் இலயித்துப்போனாள் மரியா.