Saturday, June 23, 2012

கொங்கு குல மகளிர் - எம் பார்வையில் (2)



பண்மொழியறிவு என்பது எல்லா காலங்களிலும் பெரிதும் போற்றிப் புகழப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் கல்வித்துறையின் கணக்கெடுப்பில் பர்மிங்காம் நகரில் உள்ள 430 பள்ளிகளில், 117 பள்ளிகளில் பெரும்பான்மையான மாணவர்கள் பிற மொழிகளை பேசுபவர்களாக இருக்கின்றனராம். பொதுவாகவே அங்கு பல குழந்தைகள் 31 வகையான மொழிகள் பேசுவதாகவும் சொல்கிறார்கள். இன்று மொழிக்கல்வி கற்க பல வகையான வசதிகள் இருக்கின்றன. ஆனால் இவையெதுவும் இல்லாத, கணினித்துறை போன்ற நவீனத்துவ வளர்ச்சியும் இல்லாத சங்க காலத்திலேயே, பல மொழிகளையும் கற்றுத் தேர்ந்த பல அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலேயே கொங்கு நாட்டில் தான் கல்வி வளர்ச்சி அதிகமாக இருந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

“கற்றறிந்த புலவர்கட்கும் பெருமதிப்பு இருந்தது. சிற்றூரில் உள்ள கொங்கு மக்கள்கூட காணிப்புலவர்களைக் கம்பரின் வாரிசுதாரர்கள் என்றும், அவர்களை மதித்து உபசரிப்பது தங்கள் தலையாய கடமை என்றும் எண்ணிச் செயல்பட்டனர். சங்க காலத்தில் பொன்முடியாரும், அவ்வையாரும், காக்கைபாடினியாரும் கொங்குநாட்டில் வாழ்ந்த பெண்பாற்புலவர்கள் ஆவர்” என்று ஆசிரியர் கூறுகிறார்.

இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் பெண்பாற்புலவர்கள் பற்றிய செய்திகள் அதிகம் இல்லாத போழ்தும், கொங்கு நாட்டில் தமிழ் புலமை மட்டுமல்லாது, கொங்குகுல மகளிர் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதும் வியப்பிற்குரிய செய்தியாக உள்ளது.

“அஞ்சு வயதில் ஆதியை ஓது”
“ஆதியை ஓத அறிவுண்டாமே” என்று தொடங்கும் கொங்கு சமுதாயத்திற்கேயுரிய் நீதி நூலான, கொடுமணலில் பிற்கால அவ்வையார் பாடிய “கல்வி ஒழுக்கம்” மற்றும் தலைய நல்லூரில் ஒரு காட்டுக்குப் பெயரே “ஆரியப்படிப்புக்காடு” என்று இருப்பதும் ஆதாரமாகக் காட்டுகிறார் ஆசிரியர்.

ஈரோடு வட்டத்தில் உள்ள சிற்றூரான கங்காபுரம் எனும் ஊரில் வாழ்ந்த பழ்னியம்மாள் பற்றிய ஒரு சுவையான தகவலை ஆதாரமாகக் காட்டுகிறார் முனைவர். தோட்டத்திற்கு சென்று திரும்பிய பழனியம்மாள் தம் வீட்டருகே வந்த போது திண்ணையில் ஒருவர் தலையில் உருமாலை, பட்டு வேட்டி, பட்டு சரிகைத் துண்டு, எல்லா விரல்களிலும் மோதிரம், கழுத்தில் பதக்கம், அருகில் ஏட்டுச் சுவடுகள், கைகட்டி இரு சுற்றுச் சொல்லிகள் (ஏடு எழுதுவோர்) ஆகியவற்றுடன் ஆடம்பரமாக, கர்வத்துடன் பணிவு மட்டும் இல்லாமல் அமர்ந்திருந்திருக்கிறார்.

அவரைப் பார்த்து, “ஐயா , தாங்கள் யார் என்று அறியலாமா” என்று பணிவாகக் கேட்டுள்ளார் பழனியம்மாள். அதற்கு அவர், “யாம் பாண்டி நாட்டு பைந்தமிழ்ச் சிங்கம், பரமேசுவரப் புலவர், யாம் “சோடசாவதானி” என்றாராம். சோடசம் என்றால் பதினாறு, அவதானி என்றால் கலைகளில் வல்லவர் என்று பொருள், அதாவது தாம் பதினாறு விதமான கலைகளில் வல்லவர் என்று கூறியிருக்கிறார். பழனியம்மாளுக்கோ அவருடைய ஆணவத்தை எப்படியும் அடக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது. பழனியம்மாள் உடனே, “ஓ அப்படியா, நீங்கள் இரண்டு ஆடு திருடிய கள்வரா?” என்றார். திடுக்கிட்ட பரமேசுரப்புலவர், சமாளித்துக் கொண்டு எழுந்து நின்று வணங்கி, ”அம்மா தாயே என்னை மன்னிக்க வேண்டும்” என்றாராம் பயத்துடன்.

சோடசம் - சோடு என்றால் இரண்டு (சோடி) அசம் என்றால் ஆடு என்றும் அவதானி என்றால் திருடுவதில் வல்லவன் என்ற பொருளும் உண்டு. சோடசாவதானி என்ற வடமொழிச் சொல்லிற்கு இரு பொருள் கூறிய பழனியம்மாளின் மதி நுட்பத்தை அறிந்து ஆணவம் அடங்கிய புலவர் அமைதியாக கிளம்பி விட்டாராம். அவர் சென்ற பின்பு கணவரிடம் சொல்லி, இருவரும் சேர்ந்து சிரித்திருக்கின்றனர்

இதே போன்று கொங்கு குலக் “கண்ணகி” யாகிய வெள்ளையம்மாள் வரலாற்றைப் பெரும் செல்வமாகப் பாடி, காவியமாகத் தந்தவர் தமிழ் வளளல் கண்ணாடிப் பெருமாள் என்கிறார். இன்றும் காடையூர் ஈசுவரன் கோவிலில் தெய்வமாக நின்று அருள்பாலிக்கும் வெள்ளைய்ம்மாளின் காவியம் ஓவியமாகத் தீட்டப்படுள்ளது (6. வெற்றி மங்கை வெள்ளையம்மாள்)

7.மாண்புடைய மனைக்கிழத்தியர் என்ற தலைப்பில், கி.பி. 12, 13ஆம் நூற்றாண்டுக் கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளில் “மனைக்கிழத்தி” என்ற சிறப்புச் சொல்லைக் காண முடிகிறது என்கிறார். இது பாண்டிய நாடு, சோழ நாடு, தொண்டை நாட்டில் இல்லாத தனிச்சிறப்பு என்கிறார். அவர்கள் பெயரில் .பல கல்வெட்டுகள் பொறிக்கப்படிருப்பதன் ஆதாரமும் வழங்கியுள்ளார், புலவர்.

8. படைகளை விரட்டிய பாவை, 9.தாமரை நாச்சியெனும் தகவுடையார், 10. அதிசயப்பெண் அருக்காணித் தங்கம் (பொன்னர் சங்கரின் அருமைத் தங்கை) 11. விளக்குக் கொடையளித்தோர், 12.பக்தி பிடித்த சடைச்சியம்மாள், 13. திருப்பணி செய்த திருமதிகள், போன்ற தலைப்புகளில் பல சுவையான தகவல்களை வழங்கியுள்ளார்.

14. கொங்குப் பிராட்டியார்:

கருவூர், வெஞ்சமாங்கூடல், பவானி, கொடுமுடி, திருச்செங்கோடு, அவிநாசி, திருமுருகன்பூண்டி முதலிய ஏழு தேவாரத் தலங்களையும் , பேரூர், கொல்லி, ஏழூர், தோளூர் முதலிய பல வைப்புத் தலங்களையும் பெற்ற கொங்குநாடு சிறந்த வைணவத் தலங்களையும் பெற்றுள்ளது. வைணவத்தின் 108 திவ்யத் தலங்களில் ஒன்று கொங்கு நாட்டில் தாராபுரம் அருகில் அமைந்திருக்கும், கொங்கு என்ற கொங்கூரே என்பதாகும்.

“கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்
எங்கும் புகுந்து விளையாடும் என்மகள்”
பெரியாழ்வார் பாசுரம்.

இராமானுசர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த முதலாம் குலோத்துங்கன் (1070 - 1119) அவையில் சைவ - வைணவ ச்மயவாத சபை நடைபெற்றது. அரசன் ஆதரவில் சைவர் வென்றனர். “சிவமே பரம் பொருள் - வேறு இல்லை” என்று எழுதிக் கையெழுத்திட வைணவர்கள் வற்புறுத்தப்பட்டனர். சமயவாத சபைக்கு இராமானுசர் வரவேண்டும் என்று அரசன் ஆணையிட, இதனைக் கேளவியுற்ற கூரத்தாழ்வார் இராமானுசரிடம் சென்று, சோழ மன்னனின் அழைப்பில் வஞ்சம் இருப்பதால் அச்சபைக்கு எழுந்தருளுவது நல்லதன்று என்று கூறினார். ஆயினும் அரசரின் ஆணையை நிறைவேற்றும் பொருட்டு, இராமானுசரின் உடையணிந்து கூரத்தாழ்வார் சமய சபைக்குச் செல்வதென்றும், கூரத்தாழ்வார் உடையுடன் இராமானுசர் வெளியேறி விடுவதென்றும் தீர்மானித்து அப்படியே செய்தனர். இராமானுசர் வெள்ளாடையணிந்து கர்நாடக நாடு செல்ல மேற்கு நோக்கிப் பயணமானார். கொங்குநாடு புகுந்த இராமானுசரை வேட்டுவ குலப் பெருமக்கள் வரவேற்று உபசரித்து கொங்கூரில் இருந்த அக்கிரகாரத்தில் இருந்த கொங்குப் பிராட்டியாரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். திருவரங்கத்தில் உடையவரிடம் உபதேசம் பெற்றிருந்த கொங்குப் பிராட்டியார் மகிழ்ச்சியின் எல்லையில் தன் கணவர் கொங்கிலண்ணனோடு மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டு திருஅமுது படைக்க முற்பட்டனர். சில நாட்கள் கொங்கு பிராட்டியார் இல்லத்தில் கொங்கூரில் தங்கியிருந்துவிட்டு பின் கர்நாடக மாநிலத்தின் மேலக்கோட்டை என்ற ஊரை நோக்கிப் புறப்பட்டாராம்.. கொங்கு பிராட்டியாரைப் பற்றி வைணவ இலக்கியங்களில் பல தனியன்களிலும், பிரபந்தங்களிலும் புகழ் மொழிகள்பல உள்ளன. இவர் கணவர் கொங்கிலண்ணன் என்ற கொங்கிலாச்சான் 74 வைணவ சிங்காசனாதிபதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார் என்கிறார்.

15. இணையற்ற இரட்டைப் புலவர்கள், 16. பொங்கலூர் புகழ்மிகு பெண்கள், 17. தெய்வமாக மாறிய தேனாயி, 18. மலர்ந்தும் மணம் வீசா மலர்கள், 19. கொங்குவேளிர் பணிப்பெண், 20. நீர்நிலை தந்த நங்கையர், 21. மாணிக்கி என்னும் மங்கைநல்லார், 22. உயர்பண்புள்ள உமையாயி, 23. மருத்துவக் கலைதேர் மங்கலை, 24. வியன்பணியாற்றிய வேட்டுவர் குல மகளிர், 25. கவரிமான் அனைய குப்பநாச்சி, 26. வீரப்பெண் மீனாட்சி, 27. பெயர் தெரியாப் பெண்டிர் ஆகிய தலைப்புகளில் மிகச் சுவாரசியமான வரலாறுகளை ஆசிரியர் ஆதாரங்களுடன் பதிவிட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது.

வெளியில் தெரியாத முக்கியமான பல வரலாற்றுத் தகவல்கள் ஆதாரங்களுடன் காணக் கிடைப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும். அந்த வகையில் இந்நூலின் ஆசிரியர் புலவர், கல்வெட்டறிஞர் முனைவர் செ.இராசு அவர்கள் தனிச்சிறப்பு பெறுகிறார் என்றால் அது மிகையாகாது.

நூலின் பெயர்: கொங்கு குல மகளிர்
நூல் பொருள் : பெண்ணியம்
ஆசிரியர் : புலவர் செ.இராசு எம்.ஏ.,பிஎச்.டி.
பக்கங்கள் : 128
விலை: ரூ50/-

அட்டை விளக்கம்

முன் அட்டை:

* தாரமங்கலம், கட்டி முதலி அவர்கள் மனைவி சின்னம்மையார்,
* பூங்கோதை கல்வெட்டு
* மாணிக்கி, நாகமலை ஓலை

பின் அட்டை: காடையூர் வெள்ளையம்மாள்.


Tuesday, June 19, 2012

கொங்கு குல மகளிர்

















கொங்கு குல மகளிர்

ஆசிரியர் - புலவர், முனைவர் செ. இராசு

மரபு சார்ந்த அடையாளங்களை த்னிப்பட்ட அக்கரையுடன் அணுகும் போக்கு இன்று நவீனத்துவவாதிகளாலும் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.. மரபின் வளமான கூறுகளை உள்வாங்கிக்கொண்டு அதனைத் தம் படைப்புகளில் புகுத்தி தரம் உயர்த்துவதில் இன்று பல படைப்பாளிகள் வெற்றி கண்டுள்ளனர். அந்த வகையில் கல்வெட்டறிஞர் என்று தமிழ்ச் சான்றோர்களால் பெரிதும் போற்றப்படுபவரான புலவர், முனைவர் திரு. செ. ராசு அவர்களின் “கொங்கு குல மகளிர்” என்னும் அரிய நூல், பல்வேறு கல்வெட்டுச் சான்றுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் மற்றும் வழித் தோன்றல்களை ஊர் ஊராக நேரடியாகச் சென்று அவர்களின் வாயிலாகக் கேட்டும் தொகுத்து வழங்கப்பட்டுள்ள அருமையானதொரு வரலாற்று ஆவணம். இவருடைய மற்றைய கொங்கு நாடு, கொங்கு நாட்டுச் செப்பேடுகள், கொங்கு கல்வெட்டுகள், கொங்கு குல வரலாறு, கொங்கு நாட்டில் ஊராட்சி முறை, Kongu in Sangam Time, போன்ற நூல்கள் நம் கொங்கு நாட்டின், பூகோள அமைப்பு, வேளாண்மை மற்றும் பிற தொழில்கள், கொங்கு மக்களின் பண்பாடு,நாகரிகம், பழக்க வழக்கம், நிர்வாகத் திறமை, விருந்தோம்பல் ஆகியவற்றை தெளிவாக எடுத்தியம்புவது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் ‘கொங்கு குல மகளிர்’ என்ற இந்த நூலும் கொங்கு குலமகளிரின் தனிப்பட்ட சிறப்பியல்புகளை எடுத்தியம்பும் சிறந்ததொரு ஆவணமாக அமைந்துள்ளதும் பெரும் பாராட்டுதலுக்குரியது.

தன்னுடைய 13 வயதில் முதன்முதலாகத் தன் பெற்றோருடன் தமிழ்நாடு வந்தவர் கனடாவில் பிறந்த வெள்ளை இன பெண்மணியான முனைவர் பிராண்டா, மீண்டும் தன்னுடைய 22வது வயதில் 1965ம் ஆண்டு கொங்கு நாட்டில் கோவையில் வந்து தங்கி தம் முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டார். அழகாக தமிழ் பேச கற்றுக் கொண்டவர், கொங்கு மக்களையும், அவர்களின் விருந்தோம்பல் பண்பையும் காதலிப்பதாகக் கூறும் இவர், கொங்கு தமிழ் பாதுகாக்கப்பட வேண்டியது என்கிறார். 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழோடும், தமிழகத்தோடும் நெருங்கிய தொடர்புடையவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


புலவர் ராசு அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டுள்ளது போன்று, ஒரு நாட்டின் வரலாறு முழுமையடைய வேண்டுமாயின், அந்நாட்டின் சமுதாய வரலாறு, மற்றும் சமுதாயத்தின் அங்கங்களான தனி மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முறைகளையும் ஆய்ந்தறியப்பட்டதாக இருக்க வேண்டும். அந்த வகையில், பல்வேறு துறைகளில் ஆண்களுக்கு நிகராகவும், சில துறைகளில் ஆண்களுக்கு மேலாகவும் கொங்கு நாட்டுப் பெண்கள் சிறந்து விளங்கியமை குறித்த வரலாற்றுச் செய்திகளை ஆவணமாக்கியுள்ளார்.

“கற்றறிந்த சான்றோர்களாக, கவிபாடும் புலவர்களாக, புலவர்களை ஆதரித்த புரவலர்களாக, புலவர்களால் போற்றிப் புகழ்ந்து பாடப்பட்டவர்களாக, வட மொழியிலும் வல்லவர்களாக, நல்லறம் கூறும் நடுவர்களாக, நாட்டு நிர்வாகம் செய்யும் உயர் அலுவலர்களாக, பக்தியில் சிறந்தவர்களாக, ஆலயத் திருப்பணி செய்து, பல்வேறு கொடைகளைக் கோயிலுக்குக் கொடுத்தவர்களாக, ஆடவர்களை நெறிப்படுத்தும் குடும்பத் தலைவியர்களாக, அளப்பரிய ஆற்றல் படைத்தவர்களாக, மருத்துவக் கலையில் வல்லவர்களாக, தன்மான உணர்ச்சி உடையவர்களாகப் பலர் இருந்துள்ளமை தெரிய வந்துள்ளது” என்று தகுந்த அழியா ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.

பெரும்பான்மை கொங்கு வேளாளர் சமூகப் பெண்களும், கொங்கு நாட்டு வேட்டுவர், செங்குந்தர், குயவர், நாவிதர், புலவர் சமுதாயப் பெண்கள் போன்றவர்கள் பற்றிய இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, ஓலைப்பட்டயச் செய்திகள் பல இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

“குடத்திலிட்ட விளக்காக இருந்த நம் குல மகளிரின் மாண்புதனை, புகழினை குன்றிலிட்ட விளக்காகப் பிரகாசிக்கச் செய்த ஓய்வறியா உழைப்பாளி புலவர் செ.ராசு அவர்களுக்கு கொங்கு குல மகளிரின் சார்பாகப் பாராட்டுகளையும், நன்றியினையும் உரித்தாக்குகிறேன்” என்று தம் அணிந்துரையில் கூறியுள்ள முன்னாள் மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சர் மாண்புமிகு சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் மேலும்,

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பெருநோக்கோடு வாழ்ந்து வந்த நிலையில் ஆரியம் புகுந்தது. வருணத்தின் பெயரால் நான்கு சாதிகள் உருவாக்கப்பட்டன. அதில் நாம் தீண்டத்தகாத சூத்திரர்கள் ஆக்கப்பட்டோம். சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே. இது ஆண்டவன் கட்டளையென்று நம்மைப் படு குழியில் தள்ளினார்கள். மொழியும்,இனமும் தங்கள் தொன்மை வரலாற்றை இழந்து புதிய ஆரிய கலாச்சாரத்தை மேற்கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டனர் . ஆண்களுக்கே கல்வி மறுக்கப்பட்ட நிலையில் பெண் கல்வியைப் பற்றி கவலைப்பட யாருமில்லை.. கல்வி இல்லை, கருத்துச் சுதந்திரம் இல்லை, பொருளாதார சுதந்திரமும் இல்லாத நிலையில் பெண்கள் அடிமைகளைப் போல வாழ்ந்திருந்தனர்.” என்று குறிப்பிட்டுள்ளதும் கூர்ந்து நோக்கத்தக்கது.

கொங்கு குல மகளிர் எனும் தலைப்பில் கொங்கு வானில் மின்னும் 27 நட்சத்திரங்களின் மூலமாக இவர்தம் பெருமைகளை தெளிவுற விளக்கியுள்ளார்.

1. நடுவராக விளங்கிய நங்கை

காலிங்கராயன் வழிவந்த நிலக்கிழாரான காசிலிங்கக் கவுண்டர் கனகபுரத்தில் வாழ்ந்த சாத்தந்தைகுலப் பெரியவருடைய பேரன் பழனிவேலப்ப கவுண்டர் மகள் தெய்வானை என்பவர். புலவன்பாளையம் குந்தாணி சாமிநாதக் கவிஞரிடம் தமிழ், கணக்கு, இலக்கணம், இலக்கியம், நீதிநூல், புராணங்கள் ஆகியவற்றைக் கற்றுத்தேர்ந்த இவரது கூரிய அறிவுத் திறமை அனைவரையும் வியக்கச் செய்த்ததற்கான சான்று : பாசூர் குருக்கள் அகிலாண்ட தீட்சிதருடன், வெள்ளோடு இராசாக்கோவிலில் முகாமிட்டிருந்த போது தெய்வானை இவருடன் விவாதித்த பாங்கு மற்றும் எழுப்பிய ஐயங்கள்!

பணியாளர்களிடமும், குடிபடைகளிடமும், எளியவர்களிடமும் அன்பு செலுத்தி பலப்பல உதவிகளும் செய்து, அவ்ர்களுக்கு அறங்கூறும் அவ்வையாக இருந்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் நற்பெயர் பெற்று வாழ்ந்ததற்கான ஆதாரங்களாக செப்பேடு இன்றும் ஈங்கூர் புலவன் புதூர் பழனிச்சாமி கவுண்டரிடம் உள்ளது என்கிறார் புலவர்,முனைவர் திரு செ. ராசு.

2. புலமை பெற்ற புகழுடையோர்

“பெண்ணுரிமை பற்றிப் பெரிதாகப் பேசப்பட்டும், பெண் முன்னேற்றத்திற்குப் பல திட்டங்கள் வகுக்கப்பட்டும் உள்ள இக்காலத்தில் பிற துறைகளைப் போல கவிதை இயற்றும் நல்ல புலமையுடைய பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம்” என்கிறார் ஆசிரியர்.

சங்க இலக்கியத்தில் முப்பதுக்கு மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் குறிக்கப் பெற்றிருந்தாலும், இடைக்காலத்தில் மிக அரிதாகவே ஓரிரு பெண்பாற் புலவர்களே இருந்துள்ளனராம்.. ஆனால் கொங்கு நாட்டில் கொங்கு வேளாண் சமுதாயத்தில் இக்காலகட்டத்தில் புலமையுடைய பெண்கள் பலர் வாழ்ந்துள்ளனர் என்கிறார்.

ஐவேலி அசதி அவ்வையார் எனும் கொங்கு வேளாண் குலப்பெண், பெரும் புலவராக விளங்கிய இவரை வரவேற்று பொன் இலையில் உணவளித்துப் பாராட்டியவர் மீது “சேனைத் தலைவனை செங்கோல் அசதியை” என்று புகழ்ந்து பாடியுள்ளார். அசதியைப் பாடிய அவ்வையாருக்கு, கோயில் கட்டி வழிபாடு நடத்தியுள்ளனர்.

16ம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த, திருச்செங்கோட்டுக் கலம்பகம் பாடியவருள் ஒருவரான பூங்கோதை சிறந்த புலமையும், கணக்கறிவும் பெற்று கணக்கு அலுவலராக இருந்ததை செப்பேடு கூறுகிறது என்கிறார்.

“கண்ணொளி கதிரொளி” என்ற சமய இலக்கியம் பாடியவருள் ஒருவரான சின்னமமையார், பவானிக் கோவில் திருப்பணி செய்தவர் போன்ற விவரங்கள், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது என்கிறார்.

சிவன்மலையாண்டவர் மீது பல பாடல் தொகுதிகளையும், தம் கணவரின் குதிரைச் சவாரித் திறமை குறித்தும் பாடல் பாடியுள்ள வள்ளியாத்தாள் தமிழ்க்கவி பாடும் ஆற்றல் கொண்ட திருச்செங்கோட்டில் அர்த்தநாரீசுவரர் கோவிலில் பணிபுரிந்த அழகு நாச்சி, பேரூர்ப் பட்டீச்சுரர் கோயில் பற்றிய சிறு பிரபந்தங்கள் மற்றும் பழனி, பச்சைத்தாய் பதிகம், பட்டிநாதர் பதிகம், அமிர்தச்ரக்கும்மி, பேரூர் வெண்பாமாலை, மரகதவல்லி பதிகம் போன்ற பாடல்கள் பாடிய துளசியம்மாள், போன்றவர்கள் பற்றிய சுவையான தகவல்களும், அவர்கள் இயற்றிய சில பாடல்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

3. பாடல் பெற்ற பழையகோட்டை மகளிர்

தமிழ்நாட்டில் மூவேந்தருக்கும், வேறு எந்த குறுநில மன்னர்கட்கும் இல்லாத தனிப்பெருமையாக பழையகோட்டை பட்டக்காரர் மரபினரை ஐம்பதிற்கும் மேற்பட்ட புலவர்கள் பாடியுள்ளனர். அதில் பல மகளிரும் அடங்குவர் என்கிறார்.

பட்டாபிஷேகத்தில் பங்கு, சிவகாமியின் சிவபக்தி, பத்தினி முத்தாத்தாள் பரிவு,
1895ம் ஆண்டில், மாவட்ட ஆட்சியரிடம் நேரில் விவாதித்து, பழைய கோட்டையைப் பாதுகாத்த வான்புகழ் கொண்ட வள்ளியாத்தாள், பெருங்கொடை அளித்த பெரியாத்தாள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஜான்சி ராணி போல, வீரமங்கை வேலுநாச்சியார் போல குதிரையில் பயணம் செய்து பண்ணைய வேலைகளைக் கவனித்த வஞ்சியாத்தாளின் வாழ்வு நெறி போன்ற பல சுவாரசியமான தகவல்களும், சில பாடல்களும் கொடுத்து சுவைபட விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எத்த்னைநாள் இருந்தாலும் எள்ள்ளவும்
மனம்குன்றாது இனிமையாக
சுத்தமுள கம்பமுதும் பசுந்தயிரும்
காய்கறிகள் ருசியாய்த்தந்து
உத்தமக்கா மிண்டரெனும் கந்தன்
சக்கரையார்க்கு உவந்துவந்த
பத்தினிமுத் தாத்தாளின் பக்தியைநான்
என்னென்று பகருவேனே.

என்று கந்தன் சர்க்கரை உத்தமக்காமிண்ட மன்றாடியார் மனைவி முத்தாத்தாள் மனையில் விருந்துண்ட ஒரு மருத்துவர் புலமை பெற்ற புலவர் பாடியுள்ளதை குறிப்பிட்டுள்ளார்.

4. புலவர்களைக் காத்துப் புகழ்கொண்டோர் என்னும் தலைப்பில் “கொடை கொடுத்த கொடை” என்று சொல்லக்கூடிய இன்றும் நிலைத்து வாழுகின்ற தமிழ் இலக்கியச் செல்வங்களை பழந்தமிழ் மன்னர்களும், மக்களும் பொருள் உதவி செய்து காத்து வந்த புலவர்களின் மூலமே கிடைக்கப் பெற்றோம் என்றும், இத்தகு சீரிய செயல்களில் கொங்கு வேளாளர் குலத்துப் பெண்களும் தங்கள் பெயரை நிலைநாட்டி இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளனர் அவர்களிடம் கொடையைப் பெற்ற புலவர்கள் தம் பாடலில் அவர்களின் கொடைச்சிறப்புக்களைப் பாடியுள்ளனர் என்று ஆசிரியர் கூறுகிறார்.

தாய்போன்ற பூந்துறைத் தெய்வானை, பார்புகழ் கொண்ட பழனியம்மாள், ஈஞ்சம்பள்ளி பச்சையம்மாள் ஈகைத்திறம், சீர்மிகக் கொண்ட சின்னம்மாள், யாரும் அளிக்காத அருங்கொடையாக தாம் அணிந்திருந்த தாலியைக் கழற்றி வழங்கிய சம்பந்தச் சக்கரையார் மனைவி,போன்று பல மகளிரை புலவர்கள் போற்றிப்பாடிய பாடல்களுடன் குறிப்பிட்டிருப்பது சுவையான தகவல்கள்...

வடமொழியிலும் வல்லமை பெற்ற பெண்கள் பற்றிய வரலாறு சுவாரசியமான தகவல்கள் கொண்டதாக அமைந்துள்ளது சிறப்பு..

தொடரும்.
--

Monday, June 18, 2012

ஆசை அறுமின்!


சாம்பிராணிப் புகையின் மணம், மேக மூட்டமாய் வீடு முழுவதும் நிறைத்திருக்க, வெங்கடேசுவர சுப்ரபாதம் இதமாய் ஒலிக்க, விடியலில் எழுந்து குளித்து, மஞ்சள் பூசி, குங்குமமிட்ட மங்கலகரமான முகத்துடன், நுனியில் முடிந்த கூந்தலில் கொஞ்சமாக முல்லைப் பூவும் சூடி, விளக்கேற்றி, பூஜை முடித்து, மணக்க, மணக்க பில்டர் காபியுடன் மகனை எழுப்ப வந்தாள் மங்களம். கணவர் பூஜை அறையில் இருக்கிறார். பூஜை முடிய எப்படியும் இன்னும் 20 நிமிடமாவது ஆகும். மகன் குளிக்காமல் காபி சாப்பிடுவதற்கு திட்டி அலுத்துப் போனவர் ஒரு வழியாக விட்டுவிட்டார்.

காபியின் மணம் நாசியில் துளைக்க மெல்ல புரண்டு படுத்து எழுந்தவன், தாயின் சிரித்த முகத்தைக் கண்டவுடன் உற்சாகமாக துள்ளி எழுந்து, பல் துலக்கி, முகம் அலம்பி ஓடி வந்தான். காபியை ருசித்துக் கொண்டே வெளியே வந்தவன், அப்பாவும், அம்மாவும் தனக்காக காத்துக் கொண்டிருப்பதாகத் தெரிய வரவேற்பறைக்குத் தானும் சென்றான். அம்மா மெல்ல ஆரம்பித்தாள்..

டேய், நாணா, (நாராயணன் என்பதன் சுருக்கம்) இன்னைக்கு பொண்ணு பார்க்க போகணும். சாயரட்சை சீகிரம் வந்துடலாமோன்னோ?”

அம்மா,நான் தான் முன்னாடியே சொல்லிட்டேனே.. நேக்கு பொண்ணு எப்படி இருக்கனும்னு.. நீ பார்த்துட்டு வந்துடு, உனக்கு திருப்தின்னா அப்பறமா நான் வந்து பார்த்துக்கறேன்

ஏண்ணா, என்னன்ண்னா.. பேசாம இருக்கேள்.. இவனை கேட்கப்படாதோ.. பத்திரிக்கை துறையில இருகறவாளுக்கு பெண் கொடுப்பதே பெரிசுன்னு இருக்கற காலத்துல, இவன் பெண் இப்படி இருக்கணும்,அப்படி இருக்கணும்னு கண்டிசன் எல்லாம் போடறானே.. நன்னாவா இருக்கு இது..?”

ஏண்டி, அப்படி என்ன பெரீசா கண்டிசன் போட்டான் அவன், பொண்ணு உன்னை மாதிரி வீட்டிற்கு அடக்கமா, கட்டுப்பெட்டியா இருக்கணும்னுதானே.. அந்த மாதிரி ஒரு பொண்ணா பார்த்தா போறது.. இதுக்கு ஏன் அலுத்துக்கறே..

சொல்லமாட்டேள்.. இந்த கம்ப்யூட்டர் காலத்துல உட்கார்ந்துண்டு பொண்ணு இப்படி இருக்கணும்னு போய் சொன்னாவே சிரிக்கறாண்ணா.. என்னமோ சர்வசாதாரணமா சொல்றேள்..

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே பூனை போல மெதுவாக நகர்ந்து தன் அறைப்பக்கம் ஓடி, மளமளவென குளித்து தயாராக ஆரம்பித்தான்.. முக்கியமான ஒரு பேட்டி அடுத்த 2 மணி நேரத்தில்.. தொழிலதிபர் சந்திரமோகன் என்றால் ஊரில் அனைவருக்கும் சிம்ம சொப்பனம். அவ்வளவு எளிதாக பேட்டியெல்லாம் கொடுக்கக் கூடியவர் அல்ல. அன்று பல இடைவிடாத முயற்சியின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட பேட்டி.. தமிழ்நாட்டின் சிறந்த தொழிலதிபர் என்ற விருது சமீபத்தில் வாங்கியிருந்தார். அதற்கான பிரத்யேகப் பேட்டி என்பதால் மனிதர் ஒப்புக் கொண்டுள்ளார். கிளம்பிய வேகத்தில் வெளியே வந்தவன் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு ஓடத் தயாரானான். அம்மா, காலை உணவு தயாராக இருக்கிறது இரண்டு தோசை வார்க்கிறேன் என்று கத்துவது கூட காதில் விழாதவாறு, கைகளை ஆட்டிவிட்டு பறந்தான் மோட்டார் பைக்கில்.

சந்திரமோகன் வீட்டில் காலை நேரம் பலர் அவரைப் பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர். தன்னுடன் வந்த போட்டோகிராபர் மணியும் தன்னைப் போலவே மிகுந்த ஆர்வத்துடன் இருப்பது தெரிந்தது..வாழ்க்கையில் எப்படியாவது உயர்ந்த நிலைக்கு வரவேண்டுமென்பது மட்டுமே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்து வருபவன் நாராயணன், பல திட்டங்கள் மனதில் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் மூலதனம் வேண்டுமே.. தந்தை வங்கி ஊழியர், பெரிய சொத்தெல்லாம் இல்லாவிட்டாலும், குடியிருக்க வீடும் தேவையான வருமானமும் என அமைதியாக குடும்பம் நடந்து கொண்டிருந்தாலும், தன் வாழ்க்கை அப்படி இருக்கக் கூடாது, தானும் பெரிய ஆளாக வேண்டும் என்ற வெறியையே வளர்த்துக் கொண்டிருந்தான். ஏதாவது நூல்முனை கிடைத்தாலும் பிடித்து மேலே வந்துவிட வேண்டும் என்ற் துடிப்புடன் இருந்தான்.

சந்திரமோகன், 40 வயது என்று தானே சொன்னபோதும் நம்ப முடியாத தோற்றம். 30 வயது இளைஞராக அத்துனை சூட்டிப்பு மனிதரிடம். அவருடைய ஆரம்ப காலத்தின் அல்லல்கள், போராட்டங்கள், வெற்றியின் படிகள் என்று ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் பேசப்பேச அப்படியே மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தான் நாராயணன். தன்னுடைய ஆர்வத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்திருந்த பேட்டி.. தானும் ஓர் நாளில் வானில் இப்படி சிறகடித்துப் பறக்கப் போகிறோம் என்ற கற்பனையில் வெளியில் வந்தவன், சிறு சலசலப்பு இருப்பதை கவனித்து அருகில் சென்று பார்க்க நெருங்கும் போது, எதிரில் ஒருவர் புன்சிரிப்புடன் வேகமாக உள்ளே செல்ல, சந்திரமோகனின் உதவியாளரிடம் ஒருவர் வாதம் செய்து கொண்டிருந்தார். என்னுடைய அப்பாயிண்ட்மெண்ட் இப்போது, ஏன் அவரை அனுப்புகிறாய் என்று கேட்டதற்கு, அவர் பங்கு மார்க்கெட் ஏஜெண்ட் என்றும், தினமும் வருபவர் என்றும், பத்து நிமிடத்தில் அவர் வெளியே வந்ததும் போகலாம் என்றும் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். இவர் இவ்வளவு பெரிய பிசினஸ் மேக்னெட்டாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் போல என்று நினைத்துக் கொண்டே பல யோசனையில் வெளியே வந்தான்..

சந்திரமோகனிடம் பேட்டி எடுத்துவிட்டு வந்த நாள் முதல் மனது ஒரு நிலையில் இருப்புக் கொள்ளவில்லை நாராயணனுக்கு.. எப்படியாவது தானும் ஏதாவது செய்து பெரிய ஆளாக வேண்டும் என்று பரபரக்க ஆரம்பித்து விட்டது. இந்த நேரத்தில்தான் ஒருநாள் வங்கியில் ஒருவரைப் பார்த்த போது எங்கோ பார்த்த நினைவு வர, அவரும் தன்னைப் பார்த்து புன்னகைக்க, யாராக இருக்கும் என்று யோசிக்கும் போதே, அவ்ரே வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டார். தொழிலதிபர் வீட்டில் சந்தித்த பங்குச் சந்தை ஏஜெண்ட் என்று. இருவரும் பேசிக் கொண்டே வெளியே வந்தனர். முடிவில் மனதில் ஏதோ அப்போதே தானும் பெரிய முதலாளி ஆகிவிட்டது போன்ற களிப்பில் உற்சாகமாக விடைபெற்று, ஒரு வாரத்தில் முதலீட்டிற்கான பணத்தை ஏற்பாடு செய்து கொண்டு வருவதாகக் கூறிவிட்டுக் கிளம்பினான். அந்த அளவிற்கு அந்த ஏஜெண்ட்டின் பேச்சு இருந்தது. இவ்வளவு எளிதாக ஒருவர் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் நம் நாட்டில் ஏன் இன்னும் இவ்வளவு ஏழ்மை இருக்க வேண்டும். எல்லோரும் நொடியில் பணக்காரர்களாகி விடலாம் போல் உள்ளதே... ஒரு வேளை முயற்சி செய்வதில்லையோ, ரிஸ்க் எடுக்க பயந்தவர்களாக இருக்கிறார்கள் நம் மக்கள்... இப்படி யோசித்துக்கொண்டே சென்று சேர்ந்தான்.

அலுவலகப் பணியின் அழுத்தத்துடன், எப்படியும் ஒரு வாரத்திற்குள் பணம் புரட்டிவிட வேண்டும் என்ற அழுத்தமும் சேர்ந்து அலைக்கழிக்க, மனதோடு சேர்ந்து உடலும் சோர்வுற்ற நேரம், டீக்கடை நோக்கி தானாக கால்கள் நகர்ந்தன.. ஸ்டிராங்காக ஒரு டீ போடச்சொல்லி ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருக்கும் போது, அங்கு பெஞ்சில் உட்கார்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த பெரியவர், புதிதாக வந்த ஒருவரைப் பார்த்து, “என்னப்பா, முகத்துல உசிரையேக் காணோம்.. வழக்கம் போல இன்னைக்கும் தங்கச்சிக்கிட்ட சண்டை போட்டுட்டு வரியாக்கும்.. இன்னைக்கு பங்குச்சந்தை வேற விடுமுறையாப் போச்சு.. இல்லேனா அங்க போயி உக்காத்திருப்ப..?”

ஏண்ணே.. உனக்கு கிண்டலா இருக்கா என் பொழைப்பு. நாலு காசு சம்பாதிச்சு பொண்டாட்டி,புள்ளைய நல்லா வச்சிருக்கலாமுன்னு நினைச்சது தப்பா.. என்னமோ கொலைக்குத்தம் பன்ற மாதிரியே பேசறீங்க.. இப்பதான் அவகிட்ட வாங்கி கட்டிக்கிட்டு வந்தா, இங்க நீங்க வேற..

பங்குச் சந்தை பற்றிய பேச்சு வந்தவுடன் தானும் அதைப்பற்றி அறியும் ஆவலில் கவனம் செலுத்த ஆரம்பித்தான் நாராயணன்..

ஏம்ப்பா.. அதெல்லாம் நமக்கு எதுக்குப்பா. வேலைக்குப் போய் நாயா பாடுபட்டு கொண்டாந்த காசை ஒழுங்கா ஊடு கொண்டி சேர்க்காம,இப்படி இந்த சூதாட்டத்துல உட்டுப்போட்டு போனா பொண்டாட்டி கொஞ்சுவாளாக்கும்?”

அண்ணே. நானும் பல தடவை சொல்லிப் போட்டேன், அது சூதாட்டம் இல்லைன்னு.. அதுவும் ஒரு வியாபாரம்ண்ணே... என்னைக்கிருந்தாலும் நான் ஒரு நாளைக்குப் பெரிய ஆளாயி காட்டறேன் பாருங்க அப்பத்தான் நம்புவீங்க நீங்க..

அட ஏம்ப்பா.. குதிரை ரேசுக்குப் போறவனவிட மோசமான பொழைப்பு இது.. அந்த குதிரை ரேசுக்குப் போறவன் கூட , வசதியாவும், புத்திசாலியாவும் இருந்தா ரேசுல பணம் கட்ட மாட்டான்.. அந்த ரேசுல ஓடுற குதிரையைத்தான் விலைக்கு வாங்குவான்.. அது தெம்பு இருக்கும் காலம் பூரா சம்பாதிச்சு கொட்டும் பாரு..

டீயைக் உறிந்துக் கொண்டே நிதானமாக அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான் நாராயணன், எப்படியும் போட்டோகிராபர் மணியை அங்குதான் வரச்சொல்லியிருப்பதால் அதுவரை காத்திருக்க வேண்டியதுதானே என்று.

அந்தப் பெரியவர் அங்கு வந்தவர் தன் பேச்சை அவ்வளவு சுவாரசியமாக கேட்கவில்லை என்று தெரிந்தும் லெக்சர் அடிப்பது போல அவ்வளவு தெளிவா பேசிக் கொண்டிருந்தார். அவர் பேச்சில் ஒரு நிதானமும், அழுத்தமும் இருந்ததால் தானும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான்.

பல விசயங்களை அனாவசியமாக பேசியவர், பங்குச் சந்தையைப் பற்றி இவ்வளவு நுணுக்கமாக அறிந்து வைத்திருப்பவர், தான் ஏன் அதற்கு ஆதரவாக பேசவில்லை என்ற யோசனையும் எழுந்தது. மனிதர் செய்தித்தாளைக் கரைத்துக் குடித்து, உலக செய்திகள் எல்லாம் அறிந்தவர் போலவே பேசியது அதிகப்படியாக இருந்தாலும், அவர் சொன்ன சில விசயங்கள் யோசிக்க வைத்தது. பங்குச் சந்தையின் போக்கை பெரும்பாலும் நிர்ணயிப்பவர்கள், பெரிய முதலீட்டாளர்கள்தான்... அந்நிய முதலீட்டை உள்ளே விட்டபோது ஆரமபத்தில் எத்தகைய சலசலப்பு ஏற்பட்டது என்பது அனைவரும் அறிந்தது. முதலீட்டாளர்கள் பணத்தைக் கொட்டி முதலீடு செய்து குறிப்பிட்ட பங்கின் விலையை உயர்த்தி நல்ல உச்சத்தில் அத்தனைப் பங்குகளையும் விற்று காசு பண்ணிக் கொள்வார்கள். விலை உயருகிறது என்று அடித்துப் பிடித்துக் கொண்டு கடனை, உடனை வாங்கி முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்கள், மளமளவென விலை சரிய ஆரம்பித்தவுடன் பெரும் நட்டத்திற்குள்ளானார்கள். செபியின் , அந்நிய பெரும் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை பங்குகளை வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தது மூலமாக ஓரளவிற்கு காப்பாற்ற முயற்சி செய்தது. ஆனாலும் நம்ம பங்குச் சந்தை முதலைகளே இது போன்ற விளைய்யாட்டை விளையாடத் தயங்குவதில்லையே... இப்படி பல விசயங்களை அத்துபடி செய்யாமல் எளிதாக அதில் இலாபம் பார்க்க முடியாது. சிறு முதலீட்டாளர்களை வைத்துத்தான் எந்த வியாபாரமும் நிலைத்து நிற்க முடியும், அதற்கு உதாரணமாக வங்காள தேசத்தில் சிறு முதலீட்டாளர்களுக்கு கடன் கொடுத்து அக்கரையுடன் அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கி அவர்களை முன்னேற்றிய ஒருவர் பற்றியும், அமெரிக்க அதிபர் கூட அந்த மைக்ரோ ஃபைனான்சு திட்டம் பற்றி கேள்விப்பட்டு, தங்கள் நாட்டிலும் அந்த முறையை பின்பற்றியதாகவெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார் அந்த பெரியவர்..

இதைவிட அவர் சொன்ன ஒரு கதை மிகவும் சிந்திக்கச் செய்தது நாராயணனை.. அவர் சொன்ன கதை இதுதான்...

எப்படியும் வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பவன் அந்த பெரிய முதலீட்டாளரின் உண்மையான சேவகன். ஒரு நாள் முதலாளியிடம் சென்று தானும் முதலீடு செய்ய விரும்புவதாகக் கூறுகிறான். அவரும் இதெல்லாம் சாமான்ய காரியம் அல்ல என்று சொன்னாலும் அவனுக்குப் புரியாது என்று தெரிந்ததால் அவரும்,

உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது முதலீடு செய்வதற்கு?” என்று கேட்க,அவனும் சட்டைப்பையில் இருந்த 500 ரூபாயை எடுத்து பெருமையாகக் காட்டுகிறான். முதலாளியோ சிரித்து விட்டு, அவனைப் போய் தன் காரியதரிசியிடம் தான் சொன்னதாகச் சொல்லி ஒரு இலட்சம் ரூபாய் வாங்கிக் கொள்ளச் சொன்னார். நேராக பங்குச் சந்தை அலுவலகம் ஒன்றிற்குச் சென்று தான் சொல்லும் பங்கை அப்படியே அந்த ஒரு இலட்சத்திற்கு வாங்கச் சொன்னார். அங்கு இருப்பவ்ர்கள் அனைவரிடமும் சத்தமாக தன் பெயரைச் சொல்லி ஐயா வாங்கச் சொன்னார் என்று சொல்லச் சொன்னார். அவனும் குறைந்த விலையுள்ள அந்த பங்கை ஒரு இலட்சத்திற்கு வாங்கிய மறு நிமிடம் மளமளவென பலரும் அதில் முதலீடு செய்ய, விலையும் கிடுகிடுவென உயர ஆரம்பித்தது. மதியம் 2.30 மணிக்கு ஒன்று பத்தாகப் பெருகியது. உடனே அதை விற்கச் சொல்லி ஆணையிட்டார் அந்த முதலாளி. அவனும் ஐயா விக்கச் சொல்லி விட்டார் என்று சொல்லி விற்று காசை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான். அவனுக்கு ஒன்று பத்தானதில் பேராச்சரியம். முதலாளியிடம் கொண்டுபோய கொடுத்த போது அவரும் அவனுடைய இலாபத்தை எடுத்துக் கொண்டு தன்னுடைய பணத்தை கொண்டுபோய் காரியதரிசியிடமே கட்டிவிடச் சொன்னார். மாலை 4 மணிக்கு வர்த்தகம் முடிந்த பின்பு திரும்பப் போய் அந்த குறிப்பிட்ட பங்கின் விலையை பார்க்கச் சொன்னார். அது ஏற்கனவே இருந்த விலையை விட மிகவும் குறைந்திருந்தது. அன்று முதலீடு செய்த முதலீட்டாளர்களின் நிலையை யோசிக்க வேண்டும். ஸ்டாப் லாஸ் போட்டு விட்டு உட்கார்ந்திருந்தவர்கள் ஓரளவிற்கு நட்டத்திலிருந்து தப்பித்தாலும், வந்த இலாபம் அத்தனையும் இழந்து விட்டோமே என்று டென்சனின் உச்சத்தில், விட்டதைப் பிடிக்க பைத்தியமாக அடுத்த பங்கை நோக்கி படையெடுக்கவும், அந்த ஸ்டாப் லாஸ் போடாமலே வியாபாரம் செய்தவன் உள்ளதும் போனதென்று அனைத்தையும் தொலைத்து விட்டு சோர்வின் உச்சத்தில் இருப்பவனையும், விவரமாக கிடைத்த வரை இலாபம் என ஓரளவிற்கு சம்பாதித்துக்கொண்டு வெளியே போன சொற்பமானவர்களையும் காண முடிந்தது அவனால்! பங்குச் சந்தையின் தினசரி வியாபாரம் பற்றி அறிந்து கொண்டவன் விவரமாக அந்த இலாபத்தை வைத்து பொட்டிக்கடை வைத்து பிழைத்துக் கொண்டானாம்.. இதையும் மீறி கமோடிட்டிஸ் என்று ஆரம்பித்ததைக் கேட்கும் பொறுமை இல்லாமல் அதற்குள் மணியும் வந்துவிட கடமை அழைக்க கிளம்பிவிட்டான்.

இத்தனைக் கதையைக் கேட்டும் தன்னால் திறமையாக செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையால் எப்படியும் பணம் புரட்டிப் போட்டு அந்த ஏஜெண்ட்டின் வழிகாட்டுதலுடன் பங்கு சந்தை வியாபாரத்தில் இறங்கிவிடுவது என்ற முடிவுடன் இருந்தான் நாராயணன். அடுத்த இரண்டு, மூன்று நாட்கள் வெளியூர் பயணம் செய்ய வேண்டியிருந்ததால் சொந்த வேலையை கவனிக்க முடியாவிட்டாலும், அந்த நினைவு மட்டும் உள்ளே கனன்று கொண்டுதான் இருந்தது.

வெளியூரிலிருந்து திரும்பியவன் அன்று டீக்கடை இருந்த தெருவைக் கடக்கும் போது தன்னிச்சையாக கணகள் அங்கு திரும்ப அங்கு அந்தப் பெரியவர் மிகவும் சோகமாக ஏதோ சத்தமாக சொல்வதும் சுற்றி சிலர் கூடி நின்று பேசுவதும் புரிந்தது, வண்டியின் வேகத்தைக் குறைத்த அந்த நொடியில்....

வண்டியை மொத்தமாக நிறுத்தி ஓரங்கட்டிவிட்டு இறங்கி அருகில் வந்தான், தன் தொழில் முறை ஆர்வத்துடன். அங்கு அந்த பெரியவர் சொன்ன செய்தி மிகவும் அதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு. ஆம், அன்று புத்தி சொல்லிக் கொண்டிருந்த அந்த நபரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். வருகிற வருமானத்தில் பெரும் பகுதியை இழப்பதோடு, ஊரைச்சுற்றி கடனும் வாங்கியதோடு, இறுதியாக அவருடைய மனைவி தன் தாய்வீட்டு சீதனமாகக் கொண்டு வந்த 25 பவுன் நகையை பத்திரமாக வங்கி லாக்கரில் தன் மகளுக்காக பத்திரப்படுத்தி வைத்திருந்தவள், அதனைத் தனக்குத் தெரியாமலேயே எடுத்து அடமானம் வைத்து அதை மீட்க முடியாமல், மூழ்கிப்போனது பாதியாம், மீதியை விற்று விட்டானாம். தன் நெருங்கிய உறவினரின் வீட்டு திருமணத்திற்கு செல்வதற்காக நகையை எடுப்பதற்காக லாக்கரில், ஜாயிண்ட் அக்கவுண்ட் என்பதால் சாவியை எடுத்துக் கொண்டு சென்று பார்த்தவள் அது காலியாக இருப்பது கண்டு அதிர்ச்சியுற்று, கணவனை அழைத்து விசாரிக்கவும் விவரம் தெரிந்திருக்கிறது. தன் குழந்தையின் எதிர்கால வாழ்க்கைக்கு இருந்த ஒரே ஆதரவும் போய்விட்டதே என்ற தாங்க முடியாத வேதனையில் உயிரையும் இழந்திருக்கிறாள் அந்த பேதை பாவம்... இன்று அந்த குழந்தையும் அனாதையாக நிற்கிறது. அவனும் கிலி பிடித்தவன் போல கிடக்கிறான்...

அதிர்ச்சியில் மனம் உறைந்து போக ஒன்றும் பேசாமல் கிளம்பினான் ஒரு முடிவோடு. அரைக்காசு சம்பாதித்தாலும் தம் பெற்றோர் போல பாதுகாப்பான, அமைதியான வாழ்க்கைக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டான். விடா முயற்சி இருந்தால் கட்டாயம் சரியான பாதை விரைவில் பிடிபடும், தாமும் ஒரு நாள் உயர்ந்து நிற்போம் என்ற தளராத மனநிலையுடன் அங்கிருந்து கிளம்பினான். சற்று தொலைவு செல்லும் போது, பின்னால் யாரோ தன் பெயர் சொல்லி அழைப்பது கேட்டு, போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலையாதலால் நிதானமாக திரும்பிப் பார்த்தவன், அந்த பங்குச் சந்தை ஏஜெண்ட்டைப் பார்த்தவுடன், பார்க்காதது போல திரும்பிப்போக எண்ணினாலும், வண்டியை நிறுத்தி அவரிடம் நெருங்கி, நலம் விசாரித்துவிட்டு, அவர் எந்தெந்த கம்பெனி பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார் என்று விசாரிக்க, அதற்கு அந்த ஏஜெண்ட்டும் தன் தொழில் அதுவல்ல என்றும் ஏஜெண்ட் வேலை மட்டுமே தன்னுடையது என்று சொல்லவும் தன்னையறியாமல் புன்னகைத்து விட்டு நன்றி சொல்லி விடைபெற்றான், தெளிவான குழப்பமில்லாத மன நிலையுடன்.

நன்றி: திண்ணை வெளியீடு


Sunday, June 17, 2012

பாலையும் சோலையாகுமா?

IN& OUT CHENNAI MAGAZINE

அக்னிகுஞ்சு அடிவயிற்றில் எறிய
அடுப்பினிலோ பூனை தூங்க
உயரிய விளைச்சலால்
குவிந்து கிடக்கும் முத்துக்கள்

மக்கிப்போவதைக் கண்டு
மனம் பதைக்கும் நீதியரசர்கள்
எரியும் தீயை அணைக்க
இலவசமாய்த் தந்திட பரிந்துரை
வறுமைத்தீயும் ஒழிந்து
குளிர்ந்திடுமா வறியவரின் வயிறு!

பசுமைப் புரட்சியும்
வெண்மைப் புரட்சியும்
ஓங்கும் இந்நாளில்
வறட்சியும் வறுமையும் ஒழிந்து
பசிக்கொடுமை நீங்கி
பாலையில் வாழ்வோரின்
வயிற்றிலும் பால்வார்க்கப்படுமா?

தணலில் காயும் முதுமையும்
வளமையாகுமா வறுமை நீங்கி?
பெற்றபிளைகளால் கைவிடப்பட்ட
பெற்றோரைக் காக்க
சட்டம் போட்ட
அரசால் தீர்வு அளிக்க
முடியுமா முழுமையாக
தத்தெடுக்க முடியாதா தாயாக?