Wednesday, April 13, 2011

அறுசுவை அமுதம்

இனிய தமிழ் ‘கர’ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

சித்திரைப் பெண் சிரித்தோடி வரும் திருநாள். சித்திரைத் திருநாளில் கடைப்பிடிக்க வேண்டிய வழக்கங்களை நம் முன்னோர்கள் சுவைபட விளக்கியுள்ளனர். அதன் படி கொங்கு நாட்டில், இன்றும் பெரும்பாலானவர்கள் அதனைக் கடைபிடித்து வருகின்றனர் என்றே கொள்ளலாம்.

சித்திரைத் திருநாள்,ஸ்ரீராமபிரான், ஸ்ரீ ராமானுஜர் மற்றும் ஆதி சங்கரரும் அவதரித்த பொன்னான திருநாளாகும்.

முதல் நாளே வாசலில் சாணம் போட்டு மெழுகி, வண்ண கோலமிட்டு, அழகு மலர்களுடன் அலங்காரம் செய்து வைப்போம்.

விடியற்காலை, அதாவது பிரம்ம முகூர்த்த வேளையில் சித்திரைக் கனி மற்றும் பொன் ஆபரணம் வைத்து மஞ்சள் சரக்கொன்றை மற்றும் நறுமணம் கமழும் மலர்களும், மஞ்சள், குங்குமம போன்ற மங்கலப் பொருளும் வைத்து அதன் முகத்தில் தான் முதலில் விழிப்போம்.

காலையில் மங்கல நீராடி, அவரவர் விருப்ப தெய்வங்களை மனதார வணங்கி, அன்று அறுசுவை உணவும் உண்ண வேண்டும். அதாவது, வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் பல்வேறு அனுபவங்களையும் குறிக்கும் வகையில், இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, காரம் மற்றும் கசப்பு என்ற அறுசுவை உணவையும் அன்று உண்ண வேண்டும் என்பர்.

இந்தக் “கர” ஆண்டின் துவக்க நாளை கொண்டாட அறுசுவை உணவின் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1.இனிப்பு வகை:


தேங்காய் பர்பி.

தேவையான பொருட்கள் :

1.2 கப் துறுவிய தேங்காய்.

2. 1 கப் பால் கோவா.[சக்கரை இல்லாதது]

3. 1 டே.ஸ்பூன் நெய்.

4. 1 கப் சக்கரை.

5. 2 கப் பால்

6. 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்.

7. 1 சில்வர் இலை அலங்கரிப்பதற்கு.

செய்முறை :

1. ஒரு அடி கனமான பாத்திரம் எடுத்து, அதில் தேங்காய் துறுவல், ஏலக்காய் தூள், சக்கரை மற்றும் பால் சேர்த்து குறைந்த தீயில் 10 நிமிடமோ அல்லது செட்டியாகும் வரையோ வைத்திருக்க வேண்டும். நடுவில் கிளறி விட வேண்டும்.

2. கோவாவை அத்துடன் கலந்து, நன்கு கிளறி விடவும்.

3. நெய்யைக் கலந்து, நன்கு கிளறி விடவும்.

4. ஒரு குழி தட்டில் நெய் தடவி, தேங்காய் கலவையை அதில் பரப்பி, மேலே சில்வர் பேப்பர் அலங்கரம் செய்து ஆறவிடவும்

பிறகு அதனை தேவையான வடிவத்தில் துண்டு போடவும்.

புளிப்பு :

மாங்காய் பச்சடி :

தேவையான பொருட்கள் :

1 2 கப் பச்சை மாங்கயை சிறு சன்னமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவம்.

2 . 1 சுப் சக்கரை.

3.1 டீஸ்பூன் சீரகப் பொடி.

4. 1 டீபூன் - எள்ளு லேசாக நுணுக்கியது.

5 , 1/2ஸ்பூன் கடுகு.

6. 2 முழு சிகப்பு மிளகாய்

7 . தேவையான அளவு உப்பு

8. பெருங்காயம் ஒரு துளி.

9 .1 டிஸ்பூன் எண்ணெய்.

செய்முறை :

1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் அதில், கடுகு, சீரகப் பொடி, எள்ளு, பெருங்காயம் இவையெல்லாம் போட்டு, சிவந்தவுடன்,

2. அதில் உப்பு மற்றும் மாங்காய்த் துண்டுகளும் போட்டு அதில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்

3. இறுதியாக சக்கரை சேர்த்து, நன்கு கெட்டியாகும் வரை சிறு தணலில் வேக விடவும்.

துவர்ப்பு :

விடாங்காய் பச்சடி :

1. விடாங்காய் ஓடை நீக்கி உள்ளிருக்கும் ஊனை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

2. அதில் தேவையான அளவு உப்பும் ஒரு பச்சை மிளகாயும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

3. இதை இப்படியே சாப்பிடலாம். அல்லது தேவையானால் தயிர் சேர்த்துக் கலந்து கொள்ளலாம்.

கசப்பு:

வேப்பம் பூ ரசம்:

வழக்கமாக ரசம் வைப்பது போல் வைத்து, அதில் வேப்பம் பூவை லேசாக வாணலியில் எண்ணெய் இல்லாமல் வறுத்து, அதை ரசத்தில் கொட்ட வேண்டும்.

காரம் :

காண்ட்வி :

தேவையான பொருட்கள் :

1. க்டலை மாவு - 1/4 கிலோ

2. தயிர் - 1/4 கிலோ

3. தண்ணீர் - 500 மி.லி.

4. பச்சை மிளகாய் 4 நன்கு அரைத்தது.

5. சீரகம் - 1/4 ஸ்பூன்.

அலங்கரிப்பதற்கு :

தேங்காய்த் துறுவல் - 1 டே.ஸ்பூன்.

கொத்தமல்லி இழை - 2 டே.ஸ்பூன்.

கடுகு தாளித்தது.

செய்முறை :

1. கடலை மாவை தயிருடன் கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

2, அதனுடன், மிளகாய் விழுது, சீரகம், உப்பு, எல்லாம் கலந்து அடுப்பில் சிறு தீயில் வைத்துக் கிளறிவிட வேண்டும்.

3. கெட்டியானவுடன், அதனை ஒரு தட்டில் பரவலாக சன்னமாக வரும்படி ஊற்ற வேண்டும்.

4. ஆறியவுடன், அதனை சுருட்டி ரோல் போல செய்து, தேவையான அளவு கட் செய்து கொள்ளலாம்.

5. அதன் மீது தாளித்த கடுகையும், தேங்காய் துருவலும், மல்லி இலைகளும் தூவ வேண்டும்.



Tuesday, April 12, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி -2 -( 3)


காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி 2 -( 3.)


மனித உடல் என்பதே ஒரு வேள்விச் சாலை. தூய்மையான அந்த உடலுக்கு, அண்டம் அனைத்தையும் தம்முளவாக்கிய ஆண்டவனும் அடி பணிகிறான். காரணம் அந்த உடலில் கோவில் கொண்டிருந்த உயிரே சாட்சாத் அந்த ஆண்டவன் தானே! இதுவே கயைத் தத்துவம் என்பர்.

Apr 12, 2011

விந்திய மலைச் சாரலுக்கு வடக்கே, மகத நாட்டிலே சம்பகம் என்னும் பெயர் கொண்ட, தேன் சொரியும் மலர்கள் நிறைந்த வனத்திலே, ஆனந்த மலையெனத் திகழும் கோலாகல பர்வதத்திலே இத்திருத்தலம் அமைந்துள்ளது. அரக்கர் குலத்தில் அவதரித்த கயாசுரன் என்ற அசுரனின் பெயரால்தான், இத்தலம் கயை என்று அழைக்கப்படுகிறது.

கயாசுரனின் மெய்யான தவத்தை மெச்சிய காத்தல் கடவுளான விஷ்ணு பகவான், வேண்டிய வரம் அருள்வதாய் உறுதி கொடுத்ததைப் பார்த்த தேவர்கள் அஞ்சி நடுங்கினர். கயாசுரன் அப்படி என்னதான் வரம் கேட்டான்....?


“தேவர்கள், ரிஷிகள்,மந்திரங்கள், துறவிகள் இவர்களைக் காட்டிலும் என் உடல் புனிதமாக வேண்டும், என்னைத் தொடுபவர்களுக்கும் புனிதம் ஏற வேண்டும்” என்பதாகும்.அசுர குலத்தில் பிறந்த ஒருவருக்கு எத்துனை உயர்ந்த குணம்.......!

இவ்வரத்தின் பயனாய், நரகம் என்ற ஒன்றே செயலற்றுப் போய், தூய்மை வரம் சுவர்கத்திலேயே, இட நெருக்கடியை உண்டு பண்ணியதாம்.

’குலத்தளவே ஆகுமாம் குணம்’ என்பர் பெரியோர்.

பிறவியால் சாதியா? செயலால் சாதியா?

இன்றளவும் விவாதத்திற்குரிய பிரச்சனை இது. வேதியர் குலத்தில் உதித்த இராவணன் தன் செய்கைகளினால் அசுர குலத்தவன் ஆனான்.அசுரர் குலத்தவரான பிரகலாதனோ, தேவர் உலகத்தினராகும் தகுதி பெற்றான். சத்திரிய குலத்தில் அவதரித்த விசுவாமித்திரரோ, பிரம்ம ரிஷியானாரே. அப்படித்தான் கயாசுரனும் தம் வரத்தால் மட்டுமன்றி, விஷ்ணு பகவான் தானமாக கேட்ட தன் உடலையே, நல்ல காரியம் என்பதனால் துளியும் யோசிக்காமல் மிக மகிழ்ச்சியுடன், தன் உடலைக் கீழே கிடத்தினான். அவன் படுத்த அந்த இடம்தான் மகத தேசத்தைச் சேர்ந்த சம்ப காரண்யம் என்ற மதுவனம், கோலாகலம் என்ற மலையைத் தலைக்கு உயரமாகக் கொண்டு, அவன் வேள்விக்குத் தன்னை அர்ப்பித்த இடமே கயை என்னும் சுதார சேத்திரமாகியது.இந்த வேள்வியில் பங்கு கொள்ள தேவர் உலகமே கூடியதாம்.


‘உயிர் ஒடுங்குவதற்கு இறை அனுமதி வேண்டும்’ என்பதும் உயிர் ஒடுங்கிய பின்னும் உடல் ஒடுங்கச் சிறிது நேரம் பிடிக்கும் என்பதையும் அவன் செயல்கள் உணர்த்தும். அந்த நேரத்தில் தேவர்கள் அவன் வேண்டும் வரம் கேட்கச் சொன்ன போதும் அவன் முக்தி வேண்டாமல், உலக நன்மைக்காக,வரம் கேட்டான்.


“ சூரியனும் சந்திரனும், நட்சத்திரங்களும் பூவுலகமும் இருக்கும் வரை எல்லாத் தெய்வங்களும், உருவமாகவோ, அருவமாகவோ இங்கேயே என்னில் உறைய வேண்டும். இந்த, தலம் தன் பெயரில் கயை என்று காலம் முழுவதும் விளங்க வேண்டும். இங்கு வந்து பிண்டம் போட்டுச் சிரார்த்தம் செய்பவர்களின் பித்ருக்கள் அனைவருக்கும் பிரம்ம லோகம் சித்திக்க வேண்டும். அவர்களை எந்த பாவமும் தீண்டக் கூடாது.” என்ற வரம் கேட்டான்.

அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார் கல்லால்
பிற வாழி நீந்தலரிது.

என்னும் ஐயனின் குறளுக்கு இலக்கணமாய் கயையில் விஷ்ணு பதம் அமைந்துள்ளது.

நம் முன்னோர்களுக்கு நாம் கொண்டுள்ள மதிப்பும் மரியாதையையும், நன்றியுணர்வையும் தெரிவிக்கும் வகையிலேயே, சிரார்த்தம் செய்யப்படுகிறது. நமது முந்தைய மூன்று தலைமுறைகளையும் நினைவு கூர்கிறோம். நம் முன்னோர்கள் நம் வம்சத்தில் யாராவது ஒருவராவது கயைக்கு வந்து நம்மைக் கரையேற்ற மாட்டார்களா என்று காத்திருப்பார்களாம்.கயைக்குச் சென்று பிண்டம் போட்டு,நன்றிக் கடன் செலுத்துவது,நம் கடமையாகும்.என்று பெரியவர்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.


கயையிலே, தங்கள் முன்னோருக்கு மட்டுமன்றி, உற்றார், உறவினர், நண்பர், பகைவர் என்று எல்லோருக்குமே பிண்டம் போட்டு அவர்களுக்கு நற்கதியை கிடைக்கச் செய்யலாம்.தனக்கும், ‘ஆத்ம பிண்டம்’ போட்டு விஷ்ணு பதத்தில் ஒப்படைக்கலாமாம். இதனால்தான் கயைக்கு இத்துனை மகத்துவம் என்கின்றனர். பிராமணர்களைக் கொண்டு சிரார்த்தம் செய்வதற்கும் ஒரு புராணக்கதை நிலவுகிறது.


பல்குனி நதியில் பொதுவாகத் தண்ணீர் இருப்பதில்லை. ஊற்று நீரில் மூழ்கிப் பிண்டம் போடலாம். அடுத்த படியாக விஷ்ணு பத பிண்டம், பிறகு சிரார்த்தம். அஷய வடத்துக்குச் சென்று பிண்டம் போடுவது வழக்கம். அங்கே சிரார்த்தம் செய்தவருக்குக் கயை வாழ் அந்தணர்கள் மாலை போட்டு பித்ருக்கள் சுவர்க பதம் அடைந்ததாக்ச் சொல்லி வாழ்த்துவார்கள்.


கயை சென்று வருகிறவர்கள் அஷய வடத்தின் அடியில் ஒரு காய், ஒரு கனி, ஒரு கீரை இவற்றை உட்கொள்வதில்லை என்று விரதம் மேற்கொள்ள வேண்டுமாம்.ஆனால் நாங்கள் சற்று வித்தியாசமாக ஒரு முடிவு எடுத்தோம். அதாவது, அவரரிடம் இருக்கும் வேண்டாத பழக்கங்கள் ஏதாவதை விட்டு வருவது என்று. நான் சற்று அதிகமாகக் கோபப்படுவேன். அதை விட்டு விடுவது என்று முடிவு செய்து, முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.அதே போல் என் கணவரும், வியாபாரத்தில் இனி கடன் கொடுப்பதும், வாங்குவதும் முடிந்த வரை தவிர்ப்பது என்ற முடிவும் எடுத்து விட்டு வந்தோம். இன்றும் முடிந்த வரை காப்பாற்றுகிறோம்.


இரவு விஷ்ணு பதம் சென்று அபிசேகம் ஆகும் பொழுது பார்த்தால் விஷ்ணு பதம் பதிந்திருப்பதைக் கண் குளிர தரிசனம் செய்யும் பேரும் பெறலாம். ஆனால் நாங்கள் மதியமே தரிசனம் முடித்து கிளம்பி விட்டோம். பல வண்ண மலர்கள் மற்றும் குங்குமத்தினால் நிறைந்திருந்த விஷ்ணுபாத தரிசனம் பெற்று மன நிறைவுடன் புத்த கயா கிளம்பினோம்.

தொடரும்.


--
Apr 12, 2011
Apr 12, 2011
by coral shree







--



Sunday, April 10, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் - பகுதி - 4


தோள் கொடுக்கும் தோழமை பல நேரங்களில், மலை போன்ற துன்பங்களைக்கூட, கண்ணிமைக்கும் நேரத்தில் பனி போல உருகி ஓடச் செய்துவிடும்.
கணக்குப் பார்த்து வரும் காதலைப் போல, சூழல் பார்த்து வரும் நட்பும் இருக்கத்தான் செய்கிறது. நட்பில் பல வகை. தனக்கு மட்டுமே ஏவல் புரியும் சேவகனாக, தன் பெருமையைப் பறை சாற்றும் மத்தளமாகவும் இருந்தால்தான் அந்த நட்பு நிலைக்க முடியும் என்ற அவல நிலையுடைய நட்பும் இருக்கத்தான் செய்கிறது. நல்ல நட்பு என்பது, சிலருக்கு வெகு யதார்த்தமாக இளமைக் காலம் தொட்டே, தானாகவே சுகமான சுமையாக அமைந்துவிடும். ஆனால், பெரும்பான்மையோருக்கு, பல முறை சூடு பட்டும், வாழ்நாளில் பெரும் பகுதி தேடலிலேயே கரைந்து போய் விடுவதும் உண்டு. ஒருவர் வாழ்க்கையில், நல்ல பெற்றோர், நல்ல வாழ்க்கைத் துணை, நல்ல மக்கட்பேறு அமைவது எத்துனை அவசியமோ, அதைவிட ஒரு படி மேலாக, அமைதியான வாழ்க்கைக்கு நல்ல ஆத்மார்த்தமான நட்பும் அவசியமாகிறது. எந்த விதமான துயரங்களையும் கடக்கச் செய்யும் அசுர பலம் வாய்ந்தது நல்ல நட்பு.
அந்த வகையில் மாறன் பாக்கியசாலி என்றே சொல்ல வேண்டும். பள்ளி இறுதியாண்டில் முதன் முதலில் ரம்யாவைச் சந்தித்தான். தந்தையின் அலுவல் மாற்றத்தின் காரணமாக வட நாட்டிலிருந்து சென்னை வந்து சேர்ந்தவள். அதுவும் பள்ளி இறுதி ஆண்டு ஆனபடியால், டென்சனான ஒரு சூழலில் இவர்களின் முதல் சந்திப்பு…
பள்ளி இறுதி ஆண்டு, பிராஜெக்ட் வேலைகள் எல்லோரும் முடிக்கப் போகும் தருணத்தில், அப்போதுதான் புதிதாக வந்து சேர்ந்திருந்த ரம்யா, கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல தவித்துக்கொண்டிருந்த நேரம். ஆசிரியரும் மற்ற மாணவர்களின் உதவியைப் பெற்று பணியை முடிக்கச் சொன்னாலும், ரம்யாவின் நுனி நாக்கு ஆங்கிலமும், ஆளை அடித்து வீழ்த்தும் அழகும் அவளிடம் நெருங்கிப் பழக, மற்ற மாணவர்களுக்கு சங்கோஜத்தை ஏற்படுத்தியது. ஆனால் இதே காரணம் மாறனுக்கு அவள் மீது பற்றும் ஒரு பாசமும் ஏற்படுத்தியது.
ஒரு நல்ல நட்பூவாக மலர்ந்தது, அவர்கள் சிநேகம். அதற்குப் பிறகு போட்டி நல்ல முறையில் இருந்தபடியால் இருவரும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, கல்லூரியும் மற்றும் பாடப் பிரிவும் இருவரும் ஒன்று போல் தேர்ந்தெடுத்துச் சேர்ந்த போது மீண்டும் போட்டி தொடர்ந்தது.
ரம்யாவின் சுறுசுறுப்பும் எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் அவளைப் படிப்பில் முதன்மை நிலையில் வைத்திருந்தது. மாறனும் அவளுக்குச் சளைத்தவன் இல்லை. இருவரும் இளங்கலை பொறியியல் படித்து முடித்து கேம்பஸ் நேர்முகத் தேர்வில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்தபடியால், இருவரும் ஒரு பிரபலமான கம்பெனியில் பணியில் அமர்ந்ததும், எல்லாம் விளையாட்டுத்தனமாக நடந்து முடிந்துவிட்டது.
இன்று இருவரும் ஒரே பிராஜெக்டில் பணி புரிந்தாலும், ரம்யாவிற்கு நல்ல தங்கும் இல்லம் ஏற்பாடு பண்ணிக் கொடுப்பதில் ஆரம்பித்து, ஒரு நல்ல பாதுகாவலனாக இந்த நட்பு மணம் வீசிக் கொண்டிருப்பது மற்ற நண்பர்களும் ஆச்சரியப்படும் ஒரு விசயமாகும்.
இரவு வெகு நேரம் தூங்காமலே ஏதேதோ, நினைவுகளின் அழுத்தம் கண்களில் குடிகொள்ள, காலை அசந்து உறங்கிவிட்டிருந்தான் மாறன்.
நல்ல ஆழ்ந்த உறக்கம், தொலைபேசி மணி ஒலித்தது வெகு தூரத்தில் கேட்டது.
“ஹலோ, மாறன்…. என்னப்பா இன்னும் துயிலெழவேயில்லையா…மணி என்னன்னு பார்த்தாயா?”
கண்ணைக் கசக்கிக்கொண்டு மணியைப் பார்த்தவன், அடடா, “ஒன்பது மணியா ஆகிவிட்டது” என்று பரக்கப் பரக்க எழுந்து காலைக் கடன்களை முடித்து அலுவலகத்திற்குத் தயாரானான்.
வாகனம் நிறுத்துமிடத்தில் வண்டி, அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்றுகொண்டிருந்தது. இரவு ஒரே நேர்க்கோட்டில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வண்ணமயமான வண்டிகள் இடையில் அங்கங்கே உறுவி எடுக்கப்பட்டிருந்தன. முழுவதுமாக வெண்பனி சூழ்ந்த ஒரு பனிக் குன்றாகக் காட்சியளித்தது… வழக்கமாகக் காலையில் சீக்கிரமாகவே அலுவலகம் கிளம்புபவனுக்கு.இந்தக் காட்சி சற்றே அரிதானது…….
சில்லென்ற குளிர்க் காற்று பலமாக வீச, தரையில் படிந்திருந்த வெண்பனியின் சறுக்கலில் மாட்டி விடாத வண்ணம், சர்வ எச்சரிக்கையுடன், அடி மேல் அடி வைத்து…. காலையில் இந்த அவசரத்தில், வெண்பனிக் குன்றாகச் சூழ்ந்திருந்த பனிக்கட்டிகளை விலக்குவது மிகச் சலிப்பான காரியமாக இருந்தது….. வேறு வழியில்லை என யோசித்துக்கொண்டே மளமளவெனக் காரியத்தை முடித்து வண்டியைக் கிளப்ப, பத்து நிமிடம்……..
காரிலேறி வழக்கம் போல ஒரு கையில் பிரெட்டையும் மறு கையில் ஸ்டியரிங்கையும் பிடித்துக்கொண்டு, காலை உணவை ஆரஞ்சு பழச் சாறுடன் முடித்துக்கொண்டான். ரம்யாவிற்கு போன் செய்து, தான் வழியில் இருப்பதைக் கூறலாம் என்று டயல் செய்தால், அவள் பிசியாக இருப்பது தெரிந்தது.
அலுவலகத்தில் நுழையும் போது, சற்று, மற்ற விசயங்களின் பாதிப்பு குறைந்தது போல ஒரு உணர்வு இருக்கத்தான் செய்தது.
“ஹாய், என்னப்பா…… இவ்வளவு லேட். எப்பவும் பங்க்சுவலா இருப்பாயே….” என்றவள், அப்போது தான் அவன் கண்களை நேராகப் பார்த்தவள், ஒரு குழப்பத்துடன் உற்று நோக்கினாள்.
அவன் பார்வை சற்றே தாழவும், ஏதோ உணர்ந்து கொண்டவளாக,
“என்னப்பா….. என்னாச்சு. அப்பா ஏதும் பேசினாரா? ஏன் அவந்திகாவைச் சந்திக்கச் சென்றாய் என்று கோபித்துக் கொண்டாரா…?” என்றாள்.
ஏனோ ரம்யா இவ்வாறு கேட்டவுடன், அவனையறியாமல், கண்கள் கலங்கி உள்ளம் பொங்க ஆரம்பித்தது. தான் இருக்கும் சூழலின் நிலை உணர்ந்தவனாகத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள பெரிதும் முயன்றான். இதை உணர்ந்த ரம்யா,
“சரி வா மாறன், கேண்டீன் வரை சென்று வரலாம். இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை” என்றாள். அவனுக்கும், தன் மனத்தில் உள்ளதைக் கொட்டினால் தான் அமைதி பெற முடியும் என்ற நிலை.
“சரி இப்ப சொல்லு, என்ன நடந்தது?” என்றாள் கேண்டீனில் ஒரு சேண்ட்விச் வாங்கி கையில் வைத்துக்கொண்டு.
எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது என்று எதுவுமே புரியாமல், ஒரு வினாடி தவித்தவன், நிதானமாகப் பேச ஆரம்பித்தான். பணி நேரமாக இருப்பதால் சுருக்கமாக, வேகமாகச் சொல்ல வேண்டுமே என்றும் நினைத்துக்கொண்டான்……..
“என்ன சொல்வது ரம்யா, ஆரம்பத்திலிருந்து நான் விரும்பிய அனைத்தும், தடையில்லாமல் கிடைத்து வந்த எனக்கு, வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் சோதனை வந்துவிட்டதே” என்றான் கண்கள் கலங்க.
அவன் முகத்தில் இருந்த வேதனையையும் கலங்கிய அந்தக் கண்களையும் காணச் சகியாதவளாக,
“ஹேய், என்னப்பா….இது? நீ இவ்வளவு மனம் நொந்து நான் பார்த்ததில்லையே. என்ன ஆச்சு, சொல்லு. எதுவானாலும் சரி பண்ணிடலாம். பதற்றம் இல்லாமல் அமைதியாக இரு மாறன். எந்தப் பிரச்சினையயும் நிதானமாகக் கையாண்டால், சரியான தீர்வு உண்டுன்னு நீயே அடிக்கடி சொல்லுவியே… இப்ப என்ன ஆச்சு மாறன், உனக்கு…?”
“இல்ல ரம்யா. இந்த விஷயத்தில் என்னால் அப்படி இருக்க முடியலை. என்னமோ தெரியல, அப்பா அவ்வளவு ஈசியா சொன்ன அந்த விசயம் என் மனத்தை இவ்வளவு பாதிக்கும்னு நானே நினைக்கல…..”
“அப்படி என்னதான் சொன்னாருன்னு சொல்லேன்..”
“திருமணப் பெண் போட்டோ மாறிப் போச்சுப்பா……. அப்படீன்னு சர்வ சாதாரணமாச் சொல்றார், ரம்யா…… அவந்திகா என் மனத்தில் சிம்மாசனமிட்டிருப்பதையும், அவள் கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஆக்கிரமித்துக்கொண்டு வருவதையும் அவரிடம் நான் எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது?”
“என்னப்பா…இது. ஏன் உங்கப்பா இப்படி இருக்கார்… இவ்ளோ ஈசியா போட்டோ மாறிப் போச்சுன்னு சொல்லியிருக்கார். நீ என்ன சொன்னே அவர்கிட்டே……?”
“என்ன சொல்றது ரம்யா…. எப்படி சொல்றது?”
“அட போப்பா… சொல்ல வேண்டிய நேரத்தில சொல்லாம இருக்கறது பெரிய தப்பாப் போயிடும். உனக்கு சிரமம்னா சொல்லு, அப்பாகிட்ட நான் பேசறேன்”
“இல்ல ரம்யா. அவந்திகாவோட ஜாதகம் எனக்குப் பொருத்தம் இல்லையாம். அதை அவர்கள் வீட்டில் திருப்பிக் கொடுத்துவிட்டாராம். அன்று ஏதோ அவசரத்தில் அவந்திகாவோட போட்டோவும் பயோடேட்டாவும் தவறி அனுப்பிட்டராம்.”
“சரி அதனால் என்ன? இப்ப திரும்பப் போய், உனக்கு அந்தப் பெண்ணை ரொம்பப் பிடித்த விசயம் பற்றிக் கூறி, மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டியது தானே”
“இல்லை ரம்யா, இப்ப பார்த்திருக்கிறது, என் ஒன்று விட்ட அத்தைப் பெண்ணை. அவர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். இந்த நேரத்தில் நான் எப்படி அவந்திகா பற்றிச் சொல்வது..?”
“ஓ, மணியாகிவிட்டது. சீட்டிற்குப் போகலாம் வா மாறன். மதியம் இது பற்றி பேசலாம். நீ ஒன்றும் கவலைப்படாதே. அவந்திகா உனக்குத்தான். இல்லாவிட்டால் அவள் ஏன் உன் கண்ணில் பட வேண்டும். இவ்வளவு நெருங்கி வர வேண்டும்?”
ரம்யாவின் வார்த்தைகள் சற்றே தெம்பளிக்கவும், உற்சாகத்தை வரவழைத்துக்கொண்ட மாறன், இருக்கைக்குச் செல்லத் தயாரானான், அப்பா அங்கே பெண் பார்க்கும் படலத்திற்கு ஏற்பாடு செய்துகொண்டிருப்பது தெரியாமலே…….
(தொடரும்………