Thursday, February 14, 2013

வெற்றிக் கனியை எட்டிப்பறிப்போம்! (3)


பவள சங்கரி


நிலையான குறிக்கோளும், தெளிவான சிந்தையும்!



 நாம் எல்லோருமே வாழ்க்கையில் வெற்றியாளர்களாக இருப்பதையே பெரிதும் விரும்புகிறோம். எங்கு வெற்றி, எதில் வெற்றி என்று நிலையான ஒரு குறிக்கோள் இருந்தால்தானே அந்த வெற்றிப் பாதையை நெருங்க முடியும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை என்பது இலக்கு இல்லாத ஓர் பயணம் போன்றது. மேலோட்டமாக, பொத்தாம் பொதுவாக ஒரு குறிக்கோள் என்பதைவிட உறுதியான மற்றும் நிலையானதொரு குறிக்கோளைக் கொண்டிருத்தல் வேண்டும். அதற்குத் தெளிவான சிந்தனை வேண்டும். நாம் சாதிக்க நினைக்கும் விசயங்களை முதலில் பட்டியலிட வேண்டும்.


உதாரணமாக நம் இலட்சியம் குடியிருப்பதற்கு ஒரு அழகான வீடு கட்ட வேண்டும் என்றால், அந்த வீடு எந்த அளவில், எந்த இடத்தில், அதாவது நகரத்தின் மையப் பகுதியிலா அல்லது  நகர எல்லையை விட்டு அமைதியான ஒரு பகுதியிலா என்பது போன்றதோடு அதற்கான செலவு எவ்வளவு ஆகும் போன்ற அனைத்தையும் தெளிவாகப் பட்டியலிட வேண்டும். இதில் மிக முக்கியமானது நம் சக்திக்கு உட்பட்ட இலட்சியமாக இருக்க வேண்டியது. நம் தகுதிக்குத் தகுந்த குறிக்கோளை நிர்ணயிக்க வேண்டியது அவசியம். ஒரு சிறிய வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு அரசாங்கப் பணியில் இருப்பவரின் ஆசை அதைவிட சற்றே பெரிதான, கொஞ்சம் அதிகமான வசதிகளுடன் கூடியதான் ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற தெளிவான குறிக்கோள் உடையவராக இருந்தால் அது சாத்தியமாவதில் பெரிய பிரச்சனை இருக்காது. தாம் செய்யும் வேலையை நல்ல விதமாகச் செய்வதோடு, கூடுதலான நேரப் பணியையும் (overtime) ஏற்றுக் கொள்ளலாம். எந்த வங்கியில் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கிறார்கள், அதைத் திருப்பிச் செலுத்தும் வழி எந்த அளவு சாத்தியம் போன்ற அனைத்தையும் தெளிவாகத் திட்டமிடல் அவசியம். இப்படி திட்டமிட்ட விசயங்களைத் தெளிவாக ஒரு குறிப்பேட்டில் பதிவிட வேண்டியதோடு அதனைத் தாமும், தம் குடும்பத்தாரும் அன்றாடம் அதிகமாகப் புழங்கும் இடத்தில் கண்ணில் படும்படியாக வைக்க வேண்டியது அவசியம். இது கேட்பதற்கு நகைச்சுவையாக இருப்பது போல இருக்கலாம். ஆனால் பல வெற்றியாளர்கள் இது போன்ற வழிமுறைகளை பின்பற்றியிருக்கிறார்கள் என்பது விசாரித்துப் பார்த்தால் அறியலாம். ஒரு வீடு கட்டுவது என்பது அந்த குடும்பத் தலைவன் மற்றும் சம்பாதிக்கும் மனைவி ஆகிய இருவரின் கையில் இருந்தாலும், ஓய்வு பெற்ற பெற்றோர் மற்றும் சிறிய குழந்தைகள் ஆகியோருக்கும் இந்த இலட்சியம் அறிந்திருந்தால் குடும்பத்திலோ அல்லதுதனிப்பட்ட முறையிலோ தேவையற்ற அதிகப்படியான செலவினங்களைக் குறைத்தும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தும் அந்த இலட்சியத்தை அடைவதற்கு பெரிதும் துணையாக இருப்பார்கள். அந்த இலட்சியத்தை முழுமையாகவும், சிறப்பாகவும் அடைவது எப்படி?

Wednesday, February 13, 2013

காதலின் வேதம்



பவள சங்கரி



 
காதலின் கீதம் – Song Of Love (Khalil Gibran) – மொழிபெயர்ப்பு




காதலர்களின் விழிகளும் யானே
இச்சையூட்டும் இன்பரசமும் யானே
மற்றுமந்த உளத்தின் ஊட்டமும் யானே
விடியலில் மலரும் மனமும்  முத்தமிட்டுத்தம் அமுதகத்தின்மீது கிடத்திக்கொள்ளும் அக்கன்னியவளையும் கொண்டதோர் ரோசாவும் யானே.


நிலையான செல்வத்தின் இல்லமும் யானே
இன்புறவின் துவக்கமும் யானே.
சாந்தம் மற்றும் கலக்கமின்மையின் தொடக்கமும் .யானே
இரமியத்தின் இதழின் மீதான் மென்னகையும் யானே
எம்மைத் தொடர்ந்து பற்றும் தருணமதிலந்த யுவன்தம் கடமையையும் மறந்து, அவர்த்ம் முழு வாழ்வும் இன்பக்கனாவின் நிதர்சனமாகிறது.

Monday, February 11, 2013

வாலிகையும் நுரையும் (11) - கலீல் ஜிப்ரான்



பவள சங்கரி


இரமியத்திற்கப்பால் எந்த மெய்ஞானமோ அன்றி  விஞ்ஞானமோ  இல்லை.
யானறிந்த ஒவ்வொரு உயர்ந்த மனிதனும் ஏதோ சிறிய அளவிலேனும் ஒப்பனை செய்திருந்தனர்; மேலும் அந்தச் சொற்பமே  அவனை மந்தமாக இருப்பதிலிருந்தோ அல்லது பித்துக்குளித்தனத்திலிருந்தோ அன்றி தற்கொலையிலிருந்தோ காக்கிறது.
 எவரையும் அதிகாரம் செலுத்தாமலும், எவரிடமும் அடிபணியாமலும் இருப்பவர் எவரோ அவரே உண்மையில் பெரிய மனிதர்.

அவன் குற்றவாளிகளையும் தீர்க்கதரிசிகளையும் அழிப்பதாலேயே அவனையோர் சராசரியானவன் என்று எளிதாக நம்பிவிடமாட்டேன்.

இறுமாப்பெனும் பிணியுடனான காதற்பிணியே பொறுமையென்பது.

புழுக்கள் திரும்பலாம்; ஆனால் இரசிகங்களும் (யானைகள்) கூட விட்டுக்கொடுக்குமென்பது விநோதம் இல்லையா?