Friday, March 23, 2012

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(31)

நண்பர்கள் சேர்ந்து விட்டால் அங்கு கொண்டாட்டத்திற்கு பஞ்சமேது… குடும்பத்தினர்கள், அவரவர்களும் தங்கள் சொந்த கதையையும் சோகக் கதையையும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் அடிக்கும் லூட்டிகள் பெற்றோருக்கு வேண்டுமானால் சமாளிப்பது சிரமமாகலாம். ஆனால் அவர்கள் படும்பாட்டை கேட்பவர்களுக்கு சுவாரசியத்தில் குறைவிருக்காது. குழந்தைகள் எளிதாக தாங்கள் வாழும் இடங்களுக்குத் தகுந்தவாரு தங்களை பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள். அங்கிருக்கும் மற்ற குழந்தைகளைப் பார்த்து சகல பழக்கங்களையும் கற்றுக் கொள்ளத் தயங்குவதும் இல்லை. நாகரீகத்தில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில், நம் நாட்டின் சூழலில் வளர்ந்த பெற்றோர்களின் குழந்தைகள் அங்கிருக்கும் குழந்தைகள் போல நடந்து கொள்ளும் போது அவர்களுக்கு அதன் தாக்கம் சற்று அதிகமாகத்தான் இருக்கும்.

சந்திரு, தம் 8 வயது மகனை, ஏன் எப்பொழுது பார்த்தாலும் வீடியோ கேம் விளையாடிக் கொண்டேயிருக்கிறாய். வேறு பிழைப்பே கிடையாதா என்று கேட்கப்போக, அவன் அதை துளியும் சட்டை செய்யாமல் தன் வேலையில் கவனமாக இருந்திருக்கிறான். பல முறை கேட்டும் பதில் இல்லாதலால், கோபம் தலைக்கேற, முதுகில் ஒரு தட்டு தட்டி விட்டார். அவ்வளவுதான். மளமளவென எழுந்து சென்ற அந்த சிறுவன் நேரே போய் ஒருவரும் சற்றும் எதிர்பாராத வகையில், தொலைபேசியை எடுத்து 911 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விட்டான்… இது அமெரிக்க நாடுகளில் சர்வ சாதாரணமாக நடக்கக் கூடிய நிகழ்வுதான் என்றாலும், மகன் செய்த செயலால் குடும்பமே ஆடிப்போய்விட, பிறகு காவல்துறையினர் உடனடியாக வரவும், அதற்குள் கணவனும், மனைவியும் மகனிடம் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டு, தெரியாமல் எண்ணை அழுத்தி விட்டதாக சொல்லச் சொல்லி கெஞ்சிக் கேட்டு சம்மதிக்க வைப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டதை சொல்லி ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்ததை,துளியும் கவலை இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் சம்பந்தப்பட்ட அந்த குழந்தை.

இப்படி ஆளாளுக்கு ஒரு கதையைச் சொல்லிக் கொண்டிருக்க, இரண்டு சிட்டுகள் மட்டும் எதிலும் கவனம் செல்லாமல் தனி ஆவர்த்தனம் வாசித்துக் கொண்டிருந்தன கண்களால். அன்றாடம் பார்க்கக்கூடிய அந்த பார்வையில் புதிதாக ஏதோ மாற்றம் இருப்பது இருவருக்கும் தெரிந்தாலும், அதை மறைக்க எவ்வளவு முயன்றாலும் இயலாமல் தவித்ததும் வெளிப்படையாகத் தெரிந்தது. கண்களால் ஆயிரம் கதைகள் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தன… ஏதோ இந்த உலகில் தங்கள் இருவரைத் தவிர ஒருவருமே இல்லாதது போன்ற எண்ணம் மட்டுமே இருந்தது அவர்களுக்கு.

கல்வியறிவு மட்டும் ஒரு மனிதனை அறிவாளி ஆக்கிவிடுவதில்லை. வெறும் புத்தக அறிவை மட்டும் வைத்துக் கொண்டு , சுய சிந்தனை சற்றும் இல்லாமல் இருப்பவரை எப்படி அறிவாளி என்று ஏற்றுக் கொள்ள முடியும். சுய சிந்தனை மட்டுமே ஒரு மனிதனின் கற்கும் கல்வியை புரிந்து கொள்ளச் செய்ய இயலும் . அதாவது அது மட்டுமே விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய உளவியல் செயல்முறை, என்று ஜெ.கிருஷ்ணமூர்த்தி சொல்வார் என மற்றொரு நண்பர் சூடாக விவாதித்துக் கொண்டிருக்கும் எந்த ஒரு சக்தியும் இவர்களுக்கிடையில் நுழைய முடியாத வகையில் எண்ணங்கள் ஒன்றுபட மௌன மொழியில் கருத்துப் பரிமாற்றமும் நடந்து கொண்டிருந்தது. எங்கெங்கோ சுற்றி பேச்சு இறுதியாக ஓவியங்கள், சமையல் கலை என்று வந்தபோது அவந்திகாவின் ஓவியக் கண்காட்சி பற்றி ஏதோ பேச்சு வந்த போது அனைவரும் ஒருசேர அவளைப் பார்க்க, இருவரும் அதுகூட தெரியாமல் வெறித்துக் கொண்டிருக்க, சற்று நேரம் அனைவரும் அமைதியாக பொறுமையாக அவர்களிருவரைய்ம் பார்த்துக் கொண்டு, சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டிருக்க, அவந்திகாவின் தோழி யாமினி மட்டும் அதற்கு மேல் சிரிப்பை அடக்க மாட்டாதவளாக,

” அடடா, என்னதான் நடக்குது இங்கே……?”

திடீரென அனைவரும் கொல்லென்று சிரிக்க, சுய நினைவு வந்த மாறனும், அவந்திகாவும் வெட்கத்தில் தலை கவிழ, ஏற்கனவே ரோசா வண்ணத்தில் இருந்த அவளின் கன்னம் வெட்கத்தினால் மேலும் கோவைப்பழம் போல சிவந்து போனது. இப்படி கையும் களவுமாக மாட்டிக் கொள்வோம் என்று நினைக்காதவர்கள், செய்வதறியாது தவித்துப் போனாலும், என்னைக்கிருந்தாலும் இதை மறைக்கக்கூடிய விசயமல்ல என்பதும் உணர்ந்ததால் தெரிந்ததே நல்லதாகப் போய்விட்டது என்று நினைத்தான் மாறன். அம்மா சொன்ன ஜாதகப் பிரச்சனையோ, அப்பாவின் உறுதியான நிலைப்பாடுமோ, அனுவின் நிலையோ எதைப்பற்றியும் துளியும் நினைவில் வரவில்லை அந்த இன்பமான சூழலில்..

ரம்யாவும், அனுவும் மாறனின் தந்தையை அன்று சந்திப்பதாக முடிவு செய்திருந்தார்கள். அவர் நல்ல முடிவாக சொல்லுவார் என்ற நம்பிக்கையும் இருந்தது அவர்களுக்கு. எவ்வளவுதான் செண்ட்டிமெண்ட்டான காரணங்கள் இருந்தாலும், ஒரு மகனின் ஆசையை நிறைவேற்ற வேண்டிய கடமையும் ஒரு தந்தைக்கு இருக்கிறதே. ஜாதகக் கோளாறை நிவர்த்தி செய்யும் பரிகாரங்களைத் தேடிச்செல்ல ஆரம்பித்து விட்டார். ஏனோ மனதில் ஒரு உறுத்தல் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. இது போன்ற நம்பிக்கைகள் அழுத்தம் பெறும்போது வேறு எந்த விதமான சிந்தைகளையும் உட்புக விடாமல் தடையை ஏற்படுத்தி விடும். அந்த வகையில் இந்த நினைவு மாறனின் தந்தை ராமச்சந்திரனை மிகவும் அலைக்கழித்தது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வாட்டம் அவர் முகத்திலும் தெரிந்தது. மனைவிக்கு பெரும் குழப்பமாக இருந்தது. ஏற்கனவே இருதய நோய் உள்ள மனிதராச்சே, இந்த மன அழுத்தம் நல்லதல்லவே என்ற குழப்பம் ஒரு புறம் இருந்தாலும், மகனின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய கடமையும் நினைத்து அதை வெளிக்காட்டிக் கொள்ளவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துப் போனாள். பெற்றோர் என்பவர் மட்டுமே இறுதியில் தியாகச் சுடர்களாக ஒளிவீச வேண்டியவர்கள் என்பது மட்டுமே நம் பாரம்பரிய வழக்கமாகிவிட்டதே… இதை மாற்றுவதும் அவ்வளவு எளிதான காரியமும் அல்லவே. தன்னால் ஆனது அந்த நேரத்தில் கணவரை சமாதானம் செய்வது மட்டுமே என்பது புரிந்ததால் அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

ரம்யாவும், அனுவும் திரும்பவும் வந்து சென்றவுடன் அவந்திகாவின் பெற்றோரிடம் பேச வேண்டும் என்ற முடிவும் எடுத்தார்கள். அதற்கு முன் மற்றொரு முக்கியமான காரியமாக அனுவிற்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டுதான் அடுத்த வேலையை ஆரம்பிக்க முடிவு செய்தார். குடும்ப ஜோசியரை முதலில் பார்த்து வேண்டிய பரிகாரங்களுடன் வேலையைத் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. வருகிற முகூர்த்த மாதத்தில் திருமணத்தை முடித்துவிட வேண்டும் எனவும் முடிவு செய்து, நல்ல நாளாகப் பார்த்து அவந்திகாவின் வீட்டிற்கு முறையாகச் சென்று திருமணம் பேச வேண்டும் என்றும் முடிவு செய்தார்கள். எவ்வளவுதான் ஆக்கப்பூர்வமாக சிந்தித்துக் கொண்டிருந்தாலும், அந்த உறுத்தல் மட்டும் குறைந்த பாடில்லை.

நான்கு நாட்களில் ரம்யா வந்துவிடுவாள் என்ற எண்ணமே மாறனுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது.. தன் வாழ்க்கையில் புதிய ஒளி வெள்ளத்தை அல்லவா புகுத்தப் போகிறாள். இப்படிப்பட்ட அருமையான நட்பு யாருக்குக் கிடைக்கும். பிறவிப்பயன் அடைந்தது போன்று ஒரு மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்கு முக்காடித்தான் இருந்தான், தந்தையும் மனம் இரங்கி திருமணத்திற்கு ஒப்புக் கொண்ட செய்தி கேட்டு. ரம்யா கொடுத்த தொலைபேசி செய்தி வயிற்றில் பாலை வார்த்தது போன்று இருந்தது இருவருக்கும்…..

மளமளவென நல்ல காரியங்கள் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார் மாறனின் தந்தை. அதுதான் அவருடைய இயற்கை குணம். முடிவு எடுக்கும் வரைதான் குழப்பத்தில் இருப்பார் ராமச்சந்திரன். நன்கு யோசித்து முடிவு எடுத்தவுடன் பின்வாங்க மாட்டார். எது வந்தாலும் எதிர்கொண்டு சமாளிக்கும் வல்லமையும் உண்டு மனிதருக்கு. மகனிடம் விடுமுறை பற்றியும் பேச வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டிருந்தார். மனைவி மூலமாக அவந்திகாவும் தன் பெற்றோருடன் பேசியிருப்பதாக அறிந்து கொண்டதால் அவர்கள் வீட்டில் பெரிய விவாதத்திற்கெல்லாம் இடம் இருக்காது என்பதும் புரிந்ததால் அடுத்த நடவடிக்கை பற்றி கவனம் கொள்ள் முடிந்தது.

ராமச்சந்திரனுக்கு தம் பால்ய சிநேகிதன் ராஜாராமன் நினைவு வந்தது. அவருக்கு ஒரு மகன் இருப்பதும் அவர்களும் வரன் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கேள்விப்பட்டிருந்தது நினைவில் வர முதல் காரியமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தன் சகோதரி தன் மீது கொண்ட மரியாதை கொடுத்த தைரியத்தில் தானே நேரில் சென்று அனு திருமணம் குறித்து பேசுவதற்காக கிளம்பி விட்டார். அனைத்தும் நல்லபடியாக இருந்தால் அனுவின் வீட்டில் சொல்லிக் கொள்ளலாம் என்ற முடிவோடு கிளம்பி விட்டார். தான் எதிர்பார்த்ததைவிடவே காரியங்கள் தடையின்றி நடந்தது உற்சாகத்தைக் கொடுத்தது அவருக்கு. அனுவிற்கு ஒரு நல்ல வரன் அமைந்து விட்டால் பிறகு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தம் மகனின் திருமணத்தை மகிழ்ச்சியுடன் நடத்த முடியும் என்ற சுயநலமும் இல்லாமல் இல்லை.

மாப்பிள்ளை சென்னையிலேயே ஒரு தனியார் வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து கொண்டிருப்பதாலும், நல்ல குடும்பமாகவும் இருப்பதாலும் தனக்கு திருப்தி ஏற்பட, மாப்பிள்ளையின் ஜாதகமும், புகைப்படமும் வாங்கிக் கொண்டு வந்தார். மாப்பிளளைக்கு நல்ல களையான முகம். அனுவிற்கு மிகப்பொருத்தமான வரன். ஜாதகம் சரியாக இருந்தால் முடித்து விடலாம் என்று முடிவும் செய்து, நேரே தன் சகோதரியின் வீட்டிற்குச் சென்றார். அனுவின் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லபடியாக முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது. கூடவே அனு என்ன சொல்லுவாளோ என்ற லேசான ஐயமும் வந்தது.

தொடரும்.

படத்திற்கு நன்றி :

http://www.publicdomainpictures.net/view-image.php?image=7499&picture=young-couple

நன்றி :வல்லமை.

Monday, March 19, 2012

அக்கக்கூ.......


அக்கக்கூ… அக்கக்கூ….. அக்கக்கூ…..


களத்து மேட்டில் கானாங்குருவி ஒன்னு
கசிந்துருகி காதலனின் வரவிற்காய்
தவமிருக்க, திசைமாறிய புள்ளது
பேசிய மொழிகள் பலவும்
சிந்தையை நிறைத்து பேதலித்த
புத்தியும் நொந்த மனமும்
கொண்ட பேதை அவள்
நட்ட கல்லாய் நலிந்து நிற்க
ஆம்பி பூத்த வரப்பதனில்
ஆனந்தமாய் காகலூகம் ஒன்னு
கருத்தாய் கதைபாடி சேதிசொல்ல
ஆம்பரியமாய்க் கண்டதும் பற்றிக் கொள்ளும்
மானுடக் காதலது விட்டவுடன்
தொற்றிக் கொள்ளும் மற்றுமொரு துணையை!
புள்ளின் இனமோ தனிமையில் வாடினாலும்
துணைவேறு நாடாமல் கொண்டவனின்
வரவுக்காய் காலமெல்லாம் காத்துக்கிடக்கும்!
மண்ணில் உய்ர்ந்த புள்ளின் இனமது!
கண்ணில் நீராய் உள்ளம் நிறைக்குமது!
அக்கக்கூ… அக்கக்கூ… அக்கக்கூ…..
படங்களுக்கு நன்றி :

நன்றி : வல்லமை

அரிநெல் - கவிதை நூல் - எம் பார்வையில்

அரிநெல் - பிச்சினிக்காடு இளங்கோ

Inline image 1

ஐயன் வள்ளுவனின் இரட்டை வரிக் குறள்கள் சொல்லும் ஆயிரம் கருத்துகள் போல, ஔவைப்பிராட்டி திருவாய் மலர்ந்தருளிய ஒற்றைவரி ஆத்திச்சூடி சொல்லும் ஆயிரம் தத்துவங்கள் போல, சுருங்கச் சொல்லி விளங்கச் செய்யும் உத்தி மிக எளிதாக மக்கள் மனதில் பதியச் செய்யும் சிறந்ததொரு கலை. அந்த வகையில் நவீன கவிதைகள் அதுவும் ந்றுக்கென்று ஒரு சில வார்த்தைகளில் ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லி சுருக்கென்று உரைக்கச் செய்யும் கவிதைகள் இன்றைய நவீன அவசர உலகத்தின் வாசகர்களுக்கு சிறந்த விருந்துதான்! கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ இந்த உத்தியை மிக சாமர்த்தியமாகப் பயன்படுத்தி தம் கவித்துவத்தை வெளிப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளார்.

‘அரிநெல்’ என்ற கவின்மிகு தலைப்பின் தோன்றலின் கூற்றையும் அச்சொல்லின் பொருள் அளிப்பதன் மூலம் ஆரம்பித்திருக்கிறார்.

Inline image 3
தொன்மைக்கும்
தொன்றுதொட்டுத் தொடரும்
வேளாண்மைக்கும்
உரிய சொல். என்ற பொருளும்,

அரிநெல் கசக்கி
நெல்லெடுத்துச் சேமித்து, பின்
விற்றுக் காசு பார்ப்பது
சின்ன வயதில்
ஒரு கொண்டாட்டம்.

விளைந்தவைதான்
ஆனாலும்
விளைச்சலுக்குரியவை
காரணம்
விதைப்பதற்குரியவை...
என்ற தன்னிலை விளக்கத்தையும் மிகத் தெளிவாகவே அளித்துள்ளார்.

எதார்த்தம் என்பது எப்போதும், எளிமையாகவும் உண்மையாகவும் இருக்கிறது என்று தாம் நம்புவதாலோ என்னவோ ,

மூழ்கி எடுத்த
முத்துக்கள் அல்ல
இயல்பாய் விட்ட
மூச்சின் எச்சம் ..... என்கிறாரோ...?

மிக எளிமையாக இத்தொகுப்பைப் படைத்ததன் காரணமாக,
பரிணாமமும், பரிமாணமும் தெரிந்திருந்தும் பரிமாறப்பட வேண்டியவை என்பதால் அத்துனை எளிமை என்கிறார்.

தன் சுவாசமாக இருப்பதும், உயிராக இருப்பதுவுமான கவிதை மானுடத்தின் மீது கொண்ட அதீத விசுவாசத்தின் காரணமாக , தன்னையே ஆசானாகவும், மாணாக்கனாகவும் ஆக்கிக் கொண்டமையையும் உணரச் செய்கிறார்.- நான்

நடைமுறை’ எனும் கவிதையில்,

மனமெல்லாம்
அமாவாசை
முகமெல்லாம்
பௌர்ணமி
என்ற வரிகள் நம்மை பல்வேறு சிந்தனைகளுக்குள் ஆட்படுத்துவதைத் தவிர்க்க இயலாது.

அதே போன்று, ‘அறிவுரை’ எனும் கவிதை,

பார்க்கும் திசையெல்லாம்
போதிமரம்
புத்தனைக் காணோம்
என்று போகிற போக்கில் இன்றைய வாழ்க்கையின் யதார்த்தத்தை பதிவிட்டுச் சென்றிருக்கிறது.

‘எதார்த்தம்’ என்னும் கவிதையோ,

புதுச்செருப்போடு
ஆலயத்தில்
நினைவுக்கே
வரமறுக்கிறான் இறைவன்
என்று மத்தியதர மக்களின், மன ஓட்டத்தைப் படம் பிடித்துக் காட்டிச் சென்றுள்ளது!

இலக்கியம்’ -
கல்லாய்
இருந்த என்னைச்
சிலையாய்ச் செய்த
சிற்பி
என்றும்,

மௌனத்தின்
வெளிச்சம்
என்றும்,

கற்காலமாய் இருந்தேன்
நிகழ்காலத்தையும்
எனக்கு
நிரந்தரமாக்கிய வள்ளல்
என்றும் இப்படி பலவாறு தன்னிலை விளக்கமும் சுவைபட அளித்துள்ளது வாசகரின் வாசிப்பனுபவத்திற்கும் சுவை கூட்டுவதாகவே அமைந்துள்ளது.

செடியும்,மலரும், வேர்களும் கூட மொழிபெயர்ப்பின் மூலம் தங்களை படைப்பாளியாக்கிக் கொண்ட விதததை கவிஞர் வருணிக்கும் விதம் கரும்பின் சுவை - மௌனம்.

துன்பங்களால் துளையிடப்பட்ட புல்லாங்குழல் - இனிய கீதம் - சுவையான புனைவு!

இரண்டே வார்த்தைகளில்,இருபது அர்த்தங்களை உணர்த்தும் அற்புதம் எழுதுகோல்! - கை, நா.

தம் மொழி தாய்மொழியான விந்தையை விளக்கும் இனிமை - தாய்மொழி.

பூக்களிடம்
மூர்ச்சையாகிவிடுகிறோம்
பழங்களுக்குப்
பலியாகிவிடுகிறோம்
வேர்களை
நினைக்காமல்.......
பலவீனத்திலும் ம்னிதாபிமானத்தைக் கடைபிடிக்கும் இங்கிதம், சங்கீதமான பலவீனம்!

நம் செம்மொழியின் வல்லமையை பறைசாற்றும் விதமாக ஒரு பெரும் போராட்டத்தையே ஒரு சில வார்த்தைகளின் கூட்டமைப்பில் முடித்து வைத்த பாலஸ்தீனம் - இஸ்ரேல்

எது எல்லை
என்பதே தகராறு
இதயமில்லை
என்பதே கோளாறு

நிலவும், சூரியனும், நட்சத்திரங்களும், விண்மீன்களும், நிறைமதியும், இரவும், மலரும், மரமும்அனைத்தும் கவியின் புகழ்மாலையை புனை மாலையாய்ச் சூடி நாணி நின்று மேலும் அழகு சேர்க்கின்றன.

கவிதை எழுதுவது ஒரு கலை. கவித்துவம் என்பது படைப்பாளிகளின் வரப்பிரசாதம் என்பதெல்லாம் அனைவரும் அறிந்த உண்மை. ஆயினும் வாசகர்களின் புரிதல் மட்டுமே, அவர்களைச் சிந்திக்கச் செய்யும் அந்த வல்லமை மட்டுமே ஒரு படைப்பாளியை வெற்றியாளராக்கக் கூடியது. அந்த வகையில் நாலு வார்த்தைகளின் மூலமாக நாற்பது கருத்துகளைச் சிந்திக்கச் செய்திருக்கும் கவிஞரையும் வெற்றியாளர் என்று கருத வைத்துள்ளார்.

[நீ] நிராசை -

எலிகளின்
மூளையில்
இருட்டுக்கனம்
அணைநீர் மீது
அடங்காத் தாகம்

புலி பசித்தன்ன மெலிவில் உள்ளத்து
உரனுடையாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவாகியரோ” - என்ற புறப்பாடலை நினைவூட்டும் விதமாக அமைந்துள்ளது இக்கவிதை. எலி போன்று முயற்சி இல்லாதவரிடம் நட்பு கொள்வது நல்லதல்ல, என்பதாக விளக்கியிருக்கும் இப்பாடல் கவிஞரின் கருத்திற்கு கனமான ஒளியைக் கூட்டுவதாக அமைந்துள்ளது.

எளிமையின் வியப்பும், அக்கறையின் வர்ணமும் வரையறுக்கப்பட்ட விதம் கவிதைக்கு வலிமை!

இன்னொருவரால் கட்டுப்படுத்தப்படுகிற,
இன்னொரு கையால் உருவாக்கப்படுகிற
மனம் தனது சுதந்திரத்தை
இழந்து விடுகிறது “
என்பார், வாழ்வியல் ஞானி, தத்துவமேதை ஜே.கே. என்கிற, ஜே.கிருஷ்ணமூர்த்தி.

பச்சைப் பொய் சொல்லும் கதையைக் கேட்டால், ஜே.கே சொன்ன தத்துவத்தை ஒப்பிட்டு நோக்க ஏதுவாகும்!

(பச்சைக்கிளி)
உணர்வுகள் ஊமை
சுதந்திரமோ நுடம்
கைதியைப்
பறவை என்கிறார்கள்.

நீ
நடந்தால்
அது
அபிநய பரதம்

ஆடினால்
அதுவே
எங்கள் கிராமியக் கரகம். என்று நதியை, ரதியாகப் பார்க்கும் கவிஞரின் நயமான சொல்லாடல்! ந[ர]தியே

பகட்டாயத் திரியும் இலட்சியவாதிகளை(?)
பக்குவமாய்ச் சாடும் கவி, இலட்சியம்.
மேடை மின்னலில்
சொகுசு விளைச்சல்
ஆனால்
பாதங்களுக்கடியில்
பத்திரமாக

அந்தியின் புனைவு அருஞ்சுவை!
இரவும்
பகலும்
முத்த ஒப்பந்தம்
முன்மொழியும் நேரம்.

’வாய்ச்சொல்லில் வீரரடி’ என்று சொன்ன மகாகவியை முன் மொழியும், புரட்சி.
நிலங்களில்லை
நிஜமாகவும் இல்லை
வாய்களில் மட்டும்.

மாதப்பசு
மடிசுரக்கும் நாளுக்காய்
கறவைக்காரனாய்
வேடம்.
பணி - நடுத்தர வர்க்க வாழ்வியல் வசந்தம்

மாதையும், மதுவையும் புதிய கோணத்தில் புனைவு - அதிசய மது!

பாரதி,பாரதிதாசன், பட்டுக்கோட்டை, கவியரசு கண்ணதாசன், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், கானக்குயில் பி.சுசீலா, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஆகிய நல் முத்துக்களனைத்தையும் சுவையாக வர்ணித்த கவிஞர், இறுதியாக தாய்த்திருநாட்டையும், வறுமைக் கோடுகளின் வரைபடத்தொகுப்பே இந்தியா என்ற நிதர்சனத்தின் அவலத்தையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார்.

சிறப்பங்காடியை, சிரிப்பழகிக்கு உவமையாக்கியது இனிமை.

வழமையாக கவிஞர்களின் பார்வைக்குத் தப்பாத பொய் முகம் - இக்கவிஞரின் பார்வையிலும்!

ஆழ்மனக்கடலின்
அறிவிப்புப் பலகை
ஒருபோதும் சரியாய்
அறிவிப்பதில்லை
முகமே முகமூடிதான்
முகமூடி தேவையில்லை.

அழகிய கட்டிடங்களைத் தன்னகத்தேக் கொண்ட, வண்ணமிகு வடிவழகையுடைய சிங்கப்பூர் துறைமுகமும் இவர் பார்வைக்குத் தப்பாமல் திருத்தலமாகியுள்ளது!

மூழ்கி எடுத்த முத்தல்ல
இயல்பாய் விட்ட
மூச்சின் எச்சம் - என்ற கவிஞரின் வாக்கே எளிமையான இத்தொகுப்பின் விளக்கமாய் அமைந்துள்ளது. கையடக்கமான வடிவமும், கவின்மிகு வர்ணமும், நயமான காகிதமும், வாசிக்கும் ஆவலைக் கூட்டுகிறது.

ஆசிரியர் - பிச்சினிக்காடு இளங்கோ
நூலின் பெயர் - அரிநெல்
பக்கங்கள் - 96
விலை - ரூ 80
சிங்கையில் - S$ 10

நன்றி : திண்ணை வெளியீடு.