Tuesday, November 19, 2019

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.



செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் நினைவு நாள் இன்று.



விடுதலைப் போராட்டவீரர் உயர்திரு எஸ்.பி. வெங்கடாசலம் தமது சுயசரிதையில் ..... (”இப்படிக்கு நான்” என்ற தலைப்பில் என் எழுத்து வடிவில் )

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் வெள்ளைக்காரனுக்குப் போட்டியாக ‘இந்தியன் ஸ்ட்ரீம் நேவிகேஷன் கம்பெனி (Indian Stream Navigation Company) என்று ஒரு கப்பல் கம்பெனியை ஆரம்பித்த நேரத்திலேயே, எனது பாட்டனார் திரு. சீரங்க முதலியார், 1000 ரூபாய் கொடுத்து, கப்பல் கம்பெனியின் பங்குதாரராகத் தன்னை இணைத்துக்கொண்டார். அந்தக் கப்பல்
கம்பெனி தூத்துக்குடிக்கும், இலங்கைக்குமான சுதேசிக் கப்பலை இயக்கி, வெள்ளைக்காரக் கப்பல் கம்பெனியை முடமாக்கியது. இந்த நிலையில் வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பாரதியார் போன்றவர்கள் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சாரத்தை மிகத் தீவிரமாக நடத்தி வந்தார்கள். அவர்களின் வந்தே மாதரம் என்னும் கோஷம் பட்டி தொட்டியெல்லாம் எதிரொலிக்கச் செய்தது. இதனால் ஆத்திரமடைந்த மாவட்டக் கலெக்டர் ஆஷ்துரை ராஜதுவேஷ வழக்கில் கைது செய்து இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்புக்கூற காரணமாக இருந்தார். ஒரு மனிதனுக்கு ஒரு ஆயுள்தான். ஆனால் வெள்ளை ஆட்சி இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது விசித்திரமானது. இவர்கள் சிறையில் இருக்கும்போது
இந்திய நீராவிக் கப்பல் கம்பெனியின் பங்குதாரர்களை மிரட்டி பங்குகளுக்கு அதிக பணம் தருவதாகக் கூறியும், மிரட்டியும் பெரும்பான்மையான பங்குகளை வாங்கிய பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி வ.உ.சி. தொடங்கிய சுதேசியக் கப்பல் கம்பெனியை மூடிவிட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் சீரங்க முதலியாரின் பங்குகளையும் அதிக விலைக்குக்கேட்டு, பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி முகவர்கள் விலை பேசினர். ஆனால் அவர் அந்த பங்குகள்
தேசபக்தியின் அடையாளச் சின்னங்கள் என்று கூறி விற்க மறுத்துவிட்டார். அந்தப் பங்குகள் நீண்டகாலம் மீனாட்சிசுந்தரம் அவர்கள் வசம் இருந்தது. . இந்த தேசபக்தி என் தந்தைக்கும், சித்தப்பாவிற்கும், என் அண்ணனுக்கும் உண்டு. அது எனக்கும் தொடர ஆரம்பித்தது. மீனாட்சி சுந்தரம் முதலியார் அவர்கள், பெரியாரோடு தொடர்பு ஏற்படுத்தி, பி.ஏ. பட்டப்படிப்பு முடித்தவுடன் காங்கிரசில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.