Thursday, November 10, 2016

சுட்டும் விழிச்சுடர்! - கொடிது .. கொடிது...

பவள சங்கரி


நேற்று காலை செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருக்கும்போது பக்கத்தில் ஏதோ படபடவென மெல்லிய சிறகசைக்கும் ஓசை கேட்டது. சற்றே திரும்பிப்பார்த்தபோது, அழகிய அந்த அடர்நீல வண்ண பட்டாம்பூச்சி என்னருகில் சன்னல் விளிம்பில் தம் சிறகை மெல்ல ஆட்டியபடி அழகு காட்டிக்கொண்டிருந்தது. புதிய 2000 உரூபாய் நோட்டின் சுவையான செய்தியைக்கூடத் தொடரத் தோன்றாமல் அதன் அழகிலேயே இலயித்திருந்த அந்த சுகமான தருணத்தில்தான் திடீரென ஒரு இராட்சசன் பல்லி உருவத்தில் வந்து கப்பென அதன் மென்சிறகைக் கவ்வியே விட்டது. என்ன செய்வது என்று அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அது அந்த சிற்றுயிரை மேலும் தன் வயமாக்கிக்கொள்ள யத்தனித்தது. சட்டென்று சுயநினைவு வந்தவளாக அந்த இராட்சசனை விரட்டிவிட்டாலும் அடுத்த சில மணித்துளிகள் அது துடிதுடித்ததைக் காணச்சகிக்கவில்லை. எப்படியும் பிழைத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில், செய்வதேதும் அறியாமலே உயிர் நீர் ஊற்றுவதாக எண்ணிக்கொண்டு என் விருப்ப தெய்வங்கள் அத்தனையையும் வேண்டிக்கொண்டு துளித்துளியாக நீர் தெளித்தும் பார்த்தும் ஒன்றும் பலனில்லை. இன்னும் மறக்க முடியாமல் மனபாரம் ஏற்படுத்தும் காட்சியது.. மனிதர்களின் வாழ்க்கைகூட இப்படித்தானே. எந்த நேரத்தில் வாழ்க்கை எப்படி மாறும் என்று தெரியாமலேதானே நம் விருப்பம்போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..