Sunday, April 10, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் - பகுதி - 4


தோள் கொடுக்கும் தோழமை பல நேரங்களில், மலை போன்ற துன்பங்களைக்கூட, கண்ணிமைக்கும் நேரத்தில் பனி போல உருகி ஓடச் செய்துவிடும்.
கணக்குப் பார்த்து வரும் காதலைப் போல, சூழல் பார்த்து வரும் நட்பும் இருக்கத்தான் செய்கிறது. நட்பில் பல வகை. தனக்கு மட்டுமே ஏவல் புரியும் சேவகனாக, தன் பெருமையைப் பறை சாற்றும் மத்தளமாகவும் இருந்தால்தான் அந்த நட்பு நிலைக்க முடியும் என்ற அவல நிலையுடைய நட்பும் இருக்கத்தான் செய்கிறது. நல்ல நட்பு என்பது, சிலருக்கு வெகு யதார்த்தமாக இளமைக் காலம் தொட்டே, தானாகவே சுகமான சுமையாக அமைந்துவிடும். ஆனால், பெரும்பான்மையோருக்கு, பல முறை சூடு பட்டும், வாழ்நாளில் பெரும் பகுதி தேடலிலேயே கரைந்து போய் விடுவதும் உண்டு. ஒருவர் வாழ்க்கையில், நல்ல பெற்றோர், நல்ல வாழ்க்கைத் துணை, நல்ல மக்கட்பேறு அமைவது எத்துனை அவசியமோ, அதைவிட ஒரு படி மேலாக, அமைதியான வாழ்க்கைக்கு நல்ல ஆத்மார்த்தமான நட்பும் அவசியமாகிறது. எந்த விதமான துயரங்களையும் கடக்கச் செய்யும் அசுர பலம் வாய்ந்தது நல்ல நட்பு.
அந்த வகையில் மாறன் பாக்கியசாலி என்றே சொல்ல வேண்டும். பள்ளி இறுதியாண்டில் முதன் முதலில் ரம்யாவைச் சந்தித்தான். தந்தையின் அலுவல் மாற்றத்தின் காரணமாக வட நாட்டிலிருந்து சென்னை வந்து சேர்ந்தவள். அதுவும் பள்ளி இறுதி ஆண்டு ஆனபடியால், டென்சனான ஒரு சூழலில் இவர்களின் முதல் சந்திப்பு…
பள்ளி இறுதி ஆண்டு, பிராஜெக்ட் வேலைகள் எல்லோரும் முடிக்கப் போகும் தருணத்தில், அப்போதுதான் புதிதாக வந்து சேர்ந்திருந்த ரம்யா, கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல தவித்துக்கொண்டிருந்த நேரம். ஆசிரியரும் மற்ற மாணவர்களின் உதவியைப் பெற்று பணியை முடிக்கச் சொன்னாலும், ரம்யாவின் நுனி நாக்கு ஆங்கிலமும், ஆளை அடித்து வீழ்த்தும் அழகும் அவளிடம் நெருங்கிப் பழக, மற்ற மாணவர்களுக்கு சங்கோஜத்தை ஏற்படுத்தியது. ஆனால் இதே காரணம் மாறனுக்கு அவள் மீது பற்றும் ஒரு பாசமும் ஏற்படுத்தியது.
ஒரு நல்ல நட்பூவாக மலர்ந்தது, அவர்கள் சிநேகம். அதற்குப் பிறகு போட்டி நல்ல முறையில் இருந்தபடியால் இருவரும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, கல்லூரியும் மற்றும் பாடப் பிரிவும் இருவரும் ஒன்று போல் தேர்ந்தெடுத்துச் சேர்ந்த போது மீண்டும் போட்டி தொடர்ந்தது.
ரம்யாவின் சுறுசுறுப்பும் எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் அவளைப் படிப்பில் முதன்மை நிலையில் வைத்திருந்தது. மாறனும் அவளுக்குச் சளைத்தவன் இல்லை. இருவரும் இளங்கலை பொறியியல் படித்து முடித்து கேம்பஸ் நேர்முகத் தேர்வில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்தபடியால், இருவரும் ஒரு பிரபலமான கம்பெனியில் பணியில் அமர்ந்ததும், எல்லாம் விளையாட்டுத்தனமாக நடந்து முடிந்துவிட்டது.
இன்று இருவரும் ஒரே பிராஜெக்டில் பணி புரிந்தாலும், ரம்யாவிற்கு நல்ல தங்கும் இல்லம் ஏற்பாடு பண்ணிக் கொடுப்பதில் ஆரம்பித்து, ஒரு நல்ல பாதுகாவலனாக இந்த நட்பு மணம் வீசிக் கொண்டிருப்பது மற்ற நண்பர்களும் ஆச்சரியப்படும் ஒரு விசயமாகும்.
இரவு வெகு நேரம் தூங்காமலே ஏதேதோ, நினைவுகளின் அழுத்தம் கண்களில் குடிகொள்ள, காலை அசந்து உறங்கிவிட்டிருந்தான் மாறன்.
நல்ல ஆழ்ந்த உறக்கம், தொலைபேசி மணி ஒலித்தது வெகு தூரத்தில் கேட்டது.
“ஹலோ, மாறன்…. என்னப்பா இன்னும் துயிலெழவேயில்லையா…மணி என்னன்னு பார்த்தாயா?”
கண்ணைக் கசக்கிக்கொண்டு மணியைப் பார்த்தவன், அடடா, “ஒன்பது மணியா ஆகிவிட்டது” என்று பரக்கப் பரக்க எழுந்து காலைக் கடன்களை முடித்து அலுவலகத்திற்குத் தயாரானான்.
வாகனம் நிறுத்துமிடத்தில் வண்டி, அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்றுகொண்டிருந்தது. இரவு ஒரே நேர்க்கோட்டில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வண்ணமயமான வண்டிகள் இடையில் அங்கங்கே உறுவி எடுக்கப்பட்டிருந்தன. முழுவதுமாக வெண்பனி சூழ்ந்த ஒரு பனிக் குன்றாகக் காட்சியளித்தது… வழக்கமாகக் காலையில் சீக்கிரமாகவே அலுவலகம் கிளம்புபவனுக்கு.இந்தக் காட்சி சற்றே அரிதானது…….
சில்லென்ற குளிர்க் காற்று பலமாக வீச, தரையில் படிந்திருந்த வெண்பனியின் சறுக்கலில் மாட்டி விடாத வண்ணம், சர்வ எச்சரிக்கையுடன், அடி மேல் அடி வைத்து…. காலையில் இந்த அவசரத்தில், வெண்பனிக் குன்றாகச் சூழ்ந்திருந்த பனிக்கட்டிகளை விலக்குவது மிகச் சலிப்பான காரியமாக இருந்தது….. வேறு வழியில்லை என யோசித்துக்கொண்டே மளமளவெனக் காரியத்தை முடித்து வண்டியைக் கிளப்ப, பத்து நிமிடம்……..
காரிலேறி வழக்கம் போல ஒரு கையில் பிரெட்டையும் மறு கையில் ஸ்டியரிங்கையும் பிடித்துக்கொண்டு, காலை உணவை ஆரஞ்சு பழச் சாறுடன் முடித்துக்கொண்டான். ரம்யாவிற்கு போன் செய்து, தான் வழியில் இருப்பதைக் கூறலாம் என்று டயல் செய்தால், அவள் பிசியாக இருப்பது தெரிந்தது.
அலுவலகத்தில் நுழையும் போது, சற்று, மற்ற விசயங்களின் பாதிப்பு குறைந்தது போல ஒரு உணர்வு இருக்கத்தான் செய்தது.
“ஹாய், என்னப்பா…… இவ்வளவு லேட். எப்பவும் பங்க்சுவலா இருப்பாயே….” என்றவள், அப்போது தான் அவன் கண்களை நேராகப் பார்த்தவள், ஒரு குழப்பத்துடன் உற்று நோக்கினாள்.
அவன் பார்வை சற்றே தாழவும், ஏதோ உணர்ந்து கொண்டவளாக,
“என்னப்பா….. என்னாச்சு. அப்பா ஏதும் பேசினாரா? ஏன் அவந்திகாவைச் சந்திக்கச் சென்றாய் என்று கோபித்துக் கொண்டாரா…?” என்றாள்.
ஏனோ ரம்யா இவ்வாறு கேட்டவுடன், அவனையறியாமல், கண்கள் கலங்கி உள்ளம் பொங்க ஆரம்பித்தது. தான் இருக்கும் சூழலின் நிலை உணர்ந்தவனாகத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள பெரிதும் முயன்றான். இதை உணர்ந்த ரம்யா,
“சரி வா மாறன், கேண்டீன் வரை சென்று வரலாம். இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை” என்றாள். அவனுக்கும், தன் மனத்தில் உள்ளதைக் கொட்டினால் தான் அமைதி பெற முடியும் என்ற நிலை.
“சரி இப்ப சொல்லு, என்ன நடந்தது?” என்றாள் கேண்டீனில் ஒரு சேண்ட்விச் வாங்கி கையில் வைத்துக்கொண்டு.
எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது என்று எதுவுமே புரியாமல், ஒரு வினாடி தவித்தவன், நிதானமாகப் பேச ஆரம்பித்தான். பணி நேரமாக இருப்பதால் சுருக்கமாக, வேகமாகச் சொல்ல வேண்டுமே என்றும் நினைத்துக்கொண்டான்……..
“என்ன சொல்வது ரம்யா, ஆரம்பத்திலிருந்து நான் விரும்பிய அனைத்தும், தடையில்லாமல் கிடைத்து வந்த எனக்கு, வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் சோதனை வந்துவிட்டதே” என்றான் கண்கள் கலங்க.
அவன் முகத்தில் இருந்த வேதனையையும் கலங்கிய அந்தக் கண்களையும் காணச் சகியாதவளாக,
“ஹேய், என்னப்பா….இது? நீ இவ்வளவு மனம் நொந்து நான் பார்த்ததில்லையே. என்ன ஆச்சு, சொல்லு. எதுவானாலும் சரி பண்ணிடலாம். பதற்றம் இல்லாமல் அமைதியாக இரு மாறன். எந்தப் பிரச்சினையயும் நிதானமாகக் கையாண்டால், சரியான தீர்வு உண்டுன்னு நீயே அடிக்கடி சொல்லுவியே… இப்ப என்ன ஆச்சு மாறன், உனக்கு…?”
“இல்ல ரம்யா. இந்த விஷயத்தில் என்னால் அப்படி இருக்க முடியலை. என்னமோ தெரியல, அப்பா அவ்வளவு ஈசியா சொன்ன அந்த விசயம் என் மனத்தை இவ்வளவு பாதிக்கும்னு நானே நினைக்கல…..”
“அப்படி என்னதான் சொன்னாருன்னு சொல்லேன்..”
“திருமணப் பெண் போட்டோ மாறிப் போச்சுப்பா……. அப்படீன்னு சர்வ சாதாரணமாச் சொல்றார், ரம்யா…… அவந்திகா என் மனத்தில் சிம்மாசனமிட்டிருப்பதையும், அவள் கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஆக்கிரமித்துக்கொண்டு வருவதையும் அவரிடம் நான் எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது?”
“என்னப்பா…இது. ஏன் உங்கப்பா இப்படி இருக்கார்… இவ்ளோ ஈசியா போட்டோ மாறிப் போச்சுன்னு சொல்லியிருக்கார். நீ என்ன சொன்னே அவர்கிட்டே……?”
“என்ன சொல்றது ரம்யா…. எப்படி சொல்றது?”
“அட போப்பா… சொல்ல வேண்டிய நேரத்தில சொல்லாம இருக்கறது பெரிய தப்பாப் போயிடும். உனக்கு சிரமம்னா சொல்லு, அப்பாகிட்ட நான் பேசறேன்”
“இல்ல ரம்யா. அவந்திகாவோட ஜாதகம் எனக்குப் பொருத்தம் இல்லையாம். அதை அவர்கள் வீட்டில் திருப்பிக் கொடுத்துவிட்டாராம். அன்று ஏதோ அவசரத்தில் அவந்திகாவோட போட்டோவும் பயோடேட்டாவும் தவறி அனுப்பிட்டராம்.”
“சரி அதனால் என்ன? இப்ப திரும்பப் போய், உனக்கு அந்தப் பெண்ணை ரொம்பப் பிடித்த விசயம் பற்றிக் கூறி, மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டியது தானே”
“இல்லை ரம்யா, இப்ப பார்த்திருக்கிறது, என் ஒன்று விட்ட அத்தைப் பெண்ணை. அவர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். இந்த நேரத்தில் நான் எப்படி அவந்திகா பற்றிச் சொல்வது..?”
“ஓ, மணியாகிவிட்டது. சீட்டிற்குப் போகலாம் வா மாறன். மதியம் இது பற்றி பேசலாம். நீ ஒன்றும் கவலைப்படாதே. அவந்திகா உனக்குத்தான். இல்லாவிட்டால் அவள் ஏன் உன் கண்ணில் பட வேண்டும். இவ்வளவு நெருங்கி வர வேண்டும்?”
ரம்யாவின் வார்த்தைகள் சற்றே தெம்பளிக்கவும், உற்சாகத்தை வரவழைத்துக்கொண்ட மாறன், இருக்கைக்குச் செல்லத் தயாரானான், அப்பா அங்கே பெண் பார்க்கும் படலத்திற்கு ஏற்பாடு செய்துகொண்டிருப்பது தெரியாமலே…….
(தொடரும்………

2 comments:

  1. முந்தைய பகுதிகளையும் படித்து விட்டு வருகிறேன்.. கணக்குப் பார்த்து வரும் காதல் புதுமையாக இருக்கிறது.

    ReplyDelete
  2. நன்றி திரு அப்பாதுரை.

    //கணக்குப் பார்த்து வரும் காதல் புதுமையாக இருக்கிறது.//....ம்ம் சரிதான்......

    அடுத்த பகுதிகளில் வரும் ரம்யாவின் கதையைப் படித்துவிட்டு சொல்லுங்கள் நான் சொன்னது சரியா என்று!

    ReplyDelete