Thursday, May 12, 2022

திருமண பரிசுப் பெட்டகம்





 

சங்க இலக்கியப் பாடலில் வாழ்வியல்

 

பரிசுப் பெட்டகம்

 

மையக்கருத்தாகக்கொண்ட பாடல் :

குறுந்தொகை 28 - தலைவி தோழியிடம் சொன்னது

முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்
அலமரல் அசை வளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.

ஔவையார் 

சுரும்பாற்குழலி – குயிலினியன் ஆகியோருக்கு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற தை மாதம் பௌர்ணமி தினத்தில் பரிசம் போட உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

“குழலி .. அடியே குழலி ... சுரும்பாற்குழலியே, என்னடி பகற்கனவா? எத்தனை முறை கூப்பிட்டாலும் காதில் விழவில்லையோ..”

“ஓ .. நீயா புள்ள. என்ன வேணும் உனக்கு இப்ப..”

“ஏய் என்னடி இது, இந்த மதிவதனி இங்குட்டு வந்து அரை மணி ஆச்சு.. காட்டு கத்தலா கத்திக்கிட்டு இருக்கேன். எந்த உலகத்துல இருக்குறவளாம்?”

“இங்கனத்தானே இருக்கேன். கண்ணு தெரியலையாக்கும்”.

“ம்க்கூம் .. தெரிஞ்சிட்டாலும்.. அது சரி என்ன ஆச்சு உன் மாமன் பரிசம் போட தயாராயிட்டானா .. தகவல் வந்துச்சா?”

“இல்லடி.. அதுதான் ஒரே வெசனமாவே இருக்குடி.. போன் போட்டாலும் கிடைக்கல .. தொடர்பு எல்லைக்கு வெளிய இருக்காறாமாம்”

“என்னடி சொல்ற. பௌர்ணமிக்கு இன்னும் 3 நாட்கள்தானே இருக்குது. இன்னும் ஊர் திரும்பாம அப்படி எங்க போயிருப்பாரு. ஒன்னுமே விளங்கலையே”  

“எத்தனைப் பெரிய போராட்டத்திற்கு அப்பறம் இந்த கல்யாணம் நடக்கப்போகுதுன்னு முழுசா சந்தோசப்படக்கூட முடியலையே. ஊரே கொஞ்சமும் கவலைப்படாம ஆனந்தமா தூங்கிக்கிட்டிருக்கு. நான்தான் தூக்கமில்லாம அலைமோதிக்கிட்டு கிடக்கேன். சுவத்துல போய் முட்டிக்கலாம்னு இருக்கு. எங்க போயி தேடுறது இந்த மனுசன. அப்பா கோவத்துல கத்துறாரு. சொந்த பந்தமில்லாத அனாதப் பயல கட்டிக்குவேன்னு அடம் பிடிச்சு சம்மதிக்க வச்சீல்ல. இப்ப அழுது புலம்பி என்ன ஆவப்போவுதுன்னு கோபத்துல துடிக்கிறாருடி. குயிலன் வந்து சேரலைன்னா அதே மூகூர்த்தத்தில மணமேடையில உட்கார வைக்க அந்த பெங்களூருக்கார பயல தயார் பண்ணிக்கிட்டிருக்காரு. குயிலன் கட்டாயம் வரமாட்டான்னு தானே முடிவு செஞ்சுகிட்டு வெளிநாட்டுல இருக்குற அவனை புறப்பட்டு வரவும் சொல்லிட்டாரு. என்ன செய்யிறதுன்னே புரியலைடி”.


“அப்பா வேற என்ன செய்ய முடியும் சொல்லு. உன் வாழ்க்கை நல்லபடியா அமைய வேணும்னு அவரைத் தவிர வேறு யார்தான் அக்கறை காட்ட முடியும். அமைதியா இரு. எல்லாம் நல்லபடியா முடியும்”

இந்த நேரம் பார்த்துதானா இப்படி ஆகனும். இயற்கையே சதி செய்வது போல இப்படி ஒரு கொள்ளை நோய் உலகையே பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. எந்த தொழில்நுட்பமும், நவீன மருத்துவமும் பலனில்லையே. பலரும் பல விதமான பாதிப்புகளுக்கு ஆளாகி ஊரே அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருக்க சுரும்பாற்குழலியின் திருமணம் பற்றி கவலைப்படுபவர் யார்? என்னமோ பெயரில் ஏதோ வைரசு உலகம் முழுவதும் தொற்றாய் பரவி கொத்துக்கொத்தாக உயிர்பலி வாங்கி வருவதால், பொழுதுபோக்கு, வணிக வளாகங்கள், டாசுமாக்கு கடைகள், திருவிழாக்கள் என பொது மக்கள் கூடும் இடங்களுக்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளதும், இந்த வைரசை தமிழில் குடுமிநுண்மி அல்லது தீநுண்மி எப்படி அழைக்கலாம் என்று தமிழறிஞர்களின் விவாதம் ஒருபுறம் என்று அவரவர்களுக்குத் தகுந்த பிரச்சனை இருக்க, சுரும்பாற்குழலி மட்டும் குயிலினியனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லையே, ஒரு வேளை இந்த கொடும் தொற்றின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கலாமோ என்ற மனக்குழப்பத்தில் சோறு தண்ணீரில்லாமல் துவண்டு கிடந்தாள்.

“குழலி, என்ன புள்ள இப்படி கிடக்குற.  2 நாளா ஒன்னுமே சாப்பிடலயாமே. ஏன் இப்படி அடம் புடிக்கிற, உன் மாமன் சீக்கிரம் வந்துடுவான், ஒழுங்கா சாப்பிடு, அப்பறம் கல்யாண சமயத்துல முகமெல்லாம் பொலிவில்லாம போயிடும் பாத்துக்க ...”

“அட போடி. பரிசப்பணமும், சீர்வரிசைப் பொருட்களும் சிறப்பா எடுத்துக்கிட்டு வாறேன் பாருன்னு சொல்லிட்டுப் போன மாமனக் காணோமே, என்ன ஆச்சோ, ஏது ஆச்சோன்னு நானே வயித்துல புளியைக் கரைக்க காத்துக்கிடக்கறேன். நீ என்னடான்னா சோறு திங்கச் சொல்லறியாக்கும் ..”

“இல்லடி குழலி அவருக்கு ஒன்னும் இருக்காது. சீக்கிரமே வந்துடுவாரு பாரு”

“என் குயிலன் வராம இனி பச்சத் தண்ணி கூட குடிக்க மாட்டேன். இன்னும் நாளைக்கு ஒருநாள் தான இருக்கு. அவருக்கு எது நடந்தாலும் அது எனக்கும் நடக்கட்டும். என் சாமி என்ன முடிவு செய்தாலும் எனக்கு சம்மதந்தான்..”

பயித்தியமாட்டம் பேசாத புள்ள. எல்லோருக்கும் நல்லதை மட்டும் நினைக்கிற உன் மாமனுக்கு அப்படி கொள்ளை நோயெல்லாம் வரும்னா நம்பறே நீ?”

எவ்வளவோ சமாதானம் செய்தும் குழலி எதற்கும் செவி சாய்ப்பதாக இல்லை. இனி அந்த ஆண்டவனாப் பார்த்து ஏதாவது வழி காட்டினால்தான் உண்டு என்று அனைவரும் அமைதி காக்க வேண்டியாகிவிட்டது.

குயிலினியன், இந்த உலகில் யாருக்குமே கிடைக்காத, அன்பு, அறிவு, அழகு என அனைத்திலும் ஈடு இணையில்லாத தேவதைக்கு இதுவரை யாரும் கொடுக்காத பரிசாகக் கொடுத்து அசத்த வேண்டும் என்று பெரும் முயற்சி எடுத்துக்கொண்டான். பரிசப் பணமும் கணிசமான அளவிற்கு வைத்திருந்தாலும் ஊரே மெச்சும் அளவிற்கு பரிசும் கொடுக்க வேண்டும், என்ன கொடுக்கலாம் என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தான். இவ்வளவு பெரிய நகரத்தில் அப்படியேதும் அதிசயப் பொருள் கிடைக்காமலா போகும் என்று சர்வ சாதாரணமாக நினைத்துக் கொண்டுவிட்டான் போலும். கடந்த ஒரு வாரமாக இதற்காக அலைந்து திரிந்து சலித்துப் போனதுதான் கண்ட பலன். இன்னும் 3 நாட்கள் இருக்கும் நிலையில் இனிமேலும் அப்படியேதும் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையும் இழந்துவிட்டான். ஏதாவது ஒன்றை வாங்கிக்கொண்டு கிளம்பலாம் என்ற மனநிலையும் வரவில்லையே, என்னதான் செய்வது என்று தெரியாத குழப்பத்தில் கடற்கரைக்குச் சென்று சற்று காலாற நடந்துவிட்டு வந்தால் தேவலாம் போல இருந்தது. எப்படியிருந்தாலும் அடுத்த நாள் எதையாவது வாங்கிக்கொண்டு ஊருக்குக் கிளம்பவேண்டியதுதான் என்றும் ஒரு புறம் அறிவூட்டியது மூளை. எப்போதுமே மூளை சொல்வதை மனது கேட்காமல் அடம் பிடிப்பதுதான் விதியின் போக்கை நிர்ணயித்துவிடுகிறது. காலமும் சூழலும் பெரும்பாலும் இதற்கு துணை போய்விடுகிறது.

பீச்சில் கூட்டமே இல்லை. இது போன்று காண்பது மிக அரிது. அரசு எச்சரிக்கையின் பேரில் கூட்டம் கூடும் இடங்களுக்குத் தேவையில்லாமல் செல்ல வேண்டாம், குறிப்பாக குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று ஒலிபெருக்கி சற்று முன்னர்கூட ஒலித்துக் கொண்டிருந்தது. மக்களுக்கு உயிர் பயத்தை நன்றாகவே காட்டிவிட்டது இந்த தொற்று நோய். ஒரு காலத்தில் காலரா நோய் இப்படி கொத்து கொத்தாக மக்களைக் கொன்று சென்றதை அவன் தாத்தா கதை கதையாகச் சொன்னது நினைவிற்கு வந்தது. உலகமயமாக்கல் என்ற நவீன சிந்தைகளால் வணிகமும், பொருளாதாரமும் மட்டுமா உயர்ந்தது. பின் இணைப்பாக இது போன்று கொள்ளை நோய்களும், கலாச்சார சீர்கேடுகளும் சேர்ந்துதானே அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதெல்லாம் எங்கு போய் முடியப்போகிறதோ?

சிந்தனை தொலை தூரத்திற்கு சிறகு விரிக்க, கால்கள் தானாக நடந்து நடந்து கடலுக்கு அருகில் தண்ணீருக்குள் நடந்து கொண்டிருப்பதுகூட தெரியாமல் போய்க்கொண்டிருந்தான். திடீரென்று வந்த பேரலை ஒன்று அவனைச் சுழட்டி இழுத்துச் சென்றது. என்ன நடந்தது என்று உணரும் முன்பே யாரோ கையைப் பிடித்து இழுத்துப்போட்டது போல இருந்தது. கண் விழித்துப் பார்த்தபோது முன்னால் ஒரு பெரியவர், வெண்பட்டு நீண்ட தாடியும் பார்க்கவே கண்கள் கூசும் பளபளவென்ற தேகமும் வாய் நிறைய சிரிப்பும் அதுவரை கண்டிராத ஒரு உருவம்! இடையில் உடை இருந்ததா என்றுகூட தெரியவில்லை.

அவன் இருந்த இடம் இயற்கையின் அருட்கொடையான ஒரு தெற்றிக்காடு என்பது புரிந்தது. பூமியின் நிலப்பரப்பில் எப்பொழுதும் நிலத்தடி நீரைத் தேக்கி வைத்திருக்கும் காடுகள்தான் தெற்றிக்காடுகள் என்று படித்த நினைவு இருந்தாலும் இதுவரை கனவிலும் கண்டிராத இடம் இது. பொதுவாக அதிக அளவில் வெப்பம் இருந்தாலும், அதிக அளவில் காற்று அடித்தாலும் கிணறு, ஏரி, குளம், குட்டைகளில் நீர் குறைந்துவிடும். ஆனால் இந்தத் தெற்றிக்காடுகள் இருக்கும் பகுதிகளில் நீர் நிலத்தடியிலும் இறங்காமல், வெப்பம் மற்றும் காற்றாலும் உறிஞ்சப்படாமல் இருக்கும் அதிசய பூமி.  தான் எப்படி இங்கு வந்தோம், இது எந்த மாநிலத்தில் உள்ள இடம், மனித நடமாட்டமும் இல்லை என்று ஆச்சரியத்தின் உச்சத்தில் இருந்தாலும் தன்னையறியாமல் ஏதோவொரு இனம் புரியாத ஆனந்தம் குடிகொண்டிருப்பதை உணர்ந்தான். 1000 அயிரைப்பேரடி (கிலோமீட்டர்) கடந்து வந்திருப்போமா? தன்னை அழைத்து வந்த அந்தப் பெரியவரை சுற்றும் முற்றும் தேடினான். எங்கும் காணவில்லை. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல உணர்ந்தான். சில நிமிடங்கள்தான்...

மீண்டும் அந்த பிரகாசமான முகம் கண்முன்னால் கருணையின் வடிவாய், கனிவான புன்னகையுடன்..  கண்ணைத்தவிர வேறு எந்த புலனும் வேலை செய்யவில்லையோ? அசைவற்ற பாறைபோல் நிற்கிறேனோ? சித்தரோ, புத்தரோ, போதிதர்மரோ யாரோ தெரியவில்லை. இந்த தெற்றிக்காட்டில் என்ன செய்கிறார் தன்னந்தனியாக? ஒரு பெட்டியை ஏந்திக்கொண்டு வருகிறார். மரகத இலிங்கத்திருமேனி போலக் காட்சியளித்த நினைவு .. 

அவ்வளவுதான் மீண்டும் கடலில் தூக்கிப்போட்ட உணர்வு ..

சுள்ளென்று சூரியன் முகத்தில் அடித்த உணர்வில் அசைய முற்பட்டான்.. “எங்கு இருக்கிறேன்.. கடல் அலைகள் மேலே மோதி மோதி விழிக்கச் செய்திருக்கும் போல.. மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்துவிட்டேனோ”.

சட்டென்று மரகத இலிங்கத் திருமேனி நினைவிற்கு வந்து, சுற்றும் முற்றும் தேட ஆரம்பித்தான். கடற்கரையில் ஒரு ஈ, காகம் கூட இல்லை. வெகு அருகில் அதே பெட்டி, மேலே சம்மணமிட்டு உட்கார்ந்திருப்பது அதே மகான்!

“போ ..போ. ஊசலாடும் உயிர்களைக் காப்பாற்று. இதில் இருக்கிறது பார் மந்திர மூலிகைக்கட்டு! ஓடு .. ஓடு விதியிருப்பவன் பிழைப்பான் உன்னால்” என்று அசரீரியாக ஒலித்தவர்,

அவ்வளவுதான்.. திரும்பிப் பார்க்காமல் மீண்டும் கடலுக்குள் இறங்கிவிட்டார். அடுத்த நொடி, குழலியின் நினைவு வந்து தேதியும், மணியும் பார்த்தால், பரிசம் போடும் நேரத்திற்கு இன்னும் சொற்ப மணித்துளிகளே இருந்தன. ஒரு வாடகை மகிழுந்தைப் பிடித்தான். பரபரப்பாக அனைத்தும் நடந்தன. வண்டியில் ஏறி அமர்ந்து, பொக்கிசப்பெட்டியை அணைத்தவாறு அசதியில் கண்ணயர்ந்தவன், ஓட்டுநர் குறிப்பிட்ட இடம் வந்துவிட்டதை எழுப்பி தெரிவிக்க மெல்ல இறங்கியவனுக்கு ஆச்சரியம். அதே பரபரப்பு அங்கும்!

சுரும்பாற்குழலி அலங்காரம் செய்யமாட்டேன் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தாள். மாப்பிள்ளை என்று வேற்று நாட்டிலிருந்து வந்திருந்த ஒருவன் தன்னுடனேயே சீதனமாக தொற்றையும் தூக்கி வந்தவன் சில மணி நேரங்களில் ஊர் முழுவதும் பரப்பி விட்டிருந்தான். பரிசம் போட வந்தவன் பரிசாகக் கொண்டுவந்தது தொற்றுக் கிருமிகளை என்று மருத்துவர் கண்டுபிடிப்பதற்குள் அந்த சிறிய ஊரே மொத்தமாகப் பாதிக்கப்பட்டுவிட்டன.

குயிலினியன் சட்டென்று நினைவிற்கு வந்தவனாக பெட்டகத்தைத் திறந்து அந்த மந்திர மூலிகையை வெளியே எடுத்த நொடியில் அதன் நறுமணத்தின் நெடி நொடியில் ஊர் முழுவதும் பரவி, மயங்கியவர்களை விழித்தெழச் செய்தது! நம்ப முடியாமல் பார்த்தவர்களுக்கும், பகுத்தறிவு பேசுபவர்களுக்கும் தன்னிடம் சொல்வதற்கு பதில் ஏதுமில்லை என்று அவனுக்குத் தெரியும்! இந்த உலகையே பேரழிவிலிருந்து காக்கப்போகும் வேர்கள் நிரம்பிய அட்சயப் பாத்திரம் அது என்பது அறியாமலா போகும்?

பரிசம் போட இதைவிட வேறு என்ன பரிசு வேண்டும் என்று குயிலினியனை ஊரே மண்டியிட்டு வணங்கி வாழ்த்தி மணமேடைக்கு அழைத்து வந்ததை கண்கள் கலங்கி மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள் சுரும்பார்குழலி!

முற்றும்

 


No comments:

Post a Comment