63 நாயன்மார்கள் வரலாறு – 5 விறல்மிண்டர் நாயனார்




விளங்குதிருச் செங்குன்றூர் வேளாண் டொன்மை
விறன்மிண்டர் திருவாரூர் மேவு நாளில்
வளங்குலவு தொண்டரடி வணங்கா தேகும்
வன்றொண்டன் புறகவனை வலியே வாண்ட
துளங்குசடை முடியோனும் புறகென் றன்பாற்
சொல்லுதலு மவர்தொண்டத் தொகைமுன் பாட
வுளங்குளிர வுளதென்றா ரதனா லண்ண
லுவகைதர வுயர்கணத்து ளோங்கி னாரே.
இளங்கோவடிகள், சேரமான் பெருமான், சேரன் செங்குட்டுவன் போன்ற பெரியோர்கள் அவதரித்த, இயற்கை எழில் கொஞ்சும், நீர் வளமும், நில வளமும், மலை வளமும் கொண்ட சிறப்பான சேரநாட்டில், செங்குன்றூர் எனும் அழகிய ஊரில் அவதரித்தவர் விறன்மிண்ட நாயனார் பெருமான். ஆகச்சிறந்த சிவபக்தரான இவர் அடியவர்பால் அளவற்ற அன்பு கொண்டு அவர்தம் நலம் காக்க எதையும் செய்பவராயினும், அனைத்து உலகப்பற்றுகளையும் துறந்து வாழ்பவர். அவர் திருச்செங்குன்றூரை விட்டு புறப்பட்டுத் தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் வழிபாடு செய்த வகையில் திருவாரூரைச் சென்று அடைகிறார். தியாகேசப் பெருமான் திருவடிகளைப் பற்றிக்கொண்டவர் அங்கேயே தங்கி பெருமானை வழிபடவும், அடியார்களுடன் கூடி சிவநெறி தழைக்கவும் திட்டமிட்டுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஒருநாள் கோவிலுக்கு முன்புறம் அமைந்திருந்த தேவாசிரிய மண்டபத்தில் கூடியிருந்த சிவனடியார்களை வணங்கி, அவர்களுடன் சிவநெறிகள் குறித்து அளவளாவிக் கொண்டிருக்கும் வேளையில், அங்கு சுந்தரமூர்த்தி நாயனார் தியாகராசப் பெருமானாரை வழிபடுவதற்காக மனம் முழுவதும் அவர் நினைவுடனேயே வந்தார். வந்தவர், தேவாசிரிய மண்டபத்தில் கூடியிருந்த சிவனடியார்களை தம் மனத்தினால் வழிபட்டுவிட்டு விரைந்துச் சென்றார். இதைக்கண்ட விறன்மிண்டர், சுந்தரமூர்த்தி நாயனார் சிவனடியார்களை வணங்காமல் நேராகச் சென்று சிவபெருமானை வணங்கச் செல்கிறாரே என்று கோபம் கொண்டவர், “அடியார்களை வணங்காமற் செல்கின்ற வன்றொண்டன் அவ்வடியார்களுக்குப் புறகு” என்றார். அதுமட்டுமின்றி அவருக்கு ஆரூர்ப்பெருமான் துணை என்றால் அவ்ஆரூர்ப் பெருமானையும் திருக்கூட்டத்திலிருந்து விலக்குவோம் என்கிறார்.
சுந்தரமூர்த்தி நாயனார், விறன்மிண்ட நாயனாரின் மன உறுதியைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்தவர், வேதங்கள் இறைவனைப் பற்றி விரித்துரைத்துக் காணாது, ஐயா என ஓலமிட்ட எம்பெருமான் அடியாருடன்தான் உள்ளேனென்று அறிவித்தவர், அவ்வடியார்கள் புகழ் கூறும் திருத்தொண்டத்தொகை எனும் திருப்பதிகத்தைப் பாடியருளினார். அதைக்கேட்ட விறன்மிண்ட நாயனார் அகமகிழ்ந்து, “இவ்வன்றொண்டருடைய மனம் அடியாரிடத்திலே பதிந்திருக்கின்றது” என்று அருளிச் செய்தார்.
பந்நெடுநாட்கள் ஆரூரிலேயே தங்கியிருந்து திருத்தொண்டு செய்து கொண்டிருந்த விறன்மிண்ட நாயனார் சிவனருளால் ஓர்நாள் சிவலோகம் செல்லும் பேறு பெற்றார். இறைவனடி சேர்ந்தவர், சிவலோகத்தில் சிவபூதத் தலைவராகவும் விளங்கினார்.
விறன்மிண்ட நாயனார் புராணம் உரைக்கும் கருத்து
சிவபெருமானுடைய திருவடிகளையே பற்றி நின்று, மற்றொரு பற்றேதுமின்றி, அடியவர்பால் அளவற்ற பற்றுடையவராக, அவர்பொருட்டு எதையும் செய்யும் துணிவுடையவராக இருக்கிறார்.
என்பதனாலும்,
என்றும் சேக்கிழார் பெருமான் உணர்த்துகின்றார்.
சிவனடியாரிடத்துப் பக்தி இல்லாதவர் சிவனிடத்தும் பத்தி இல்லாதவரே என்று, “ஈசனுக்கன் பில்லாரடியவர்க்கன்பில்லார்” என்னும் சிவஞான சித்தியாரின் அருளுரையால் உணரலாம்.
எனும் திருவாசகமும் நமக்கு தெற்றென விளக்குவதை உணரலாம்.
திருத்தொண்டத் தொகையை சுந்தரமூர்த்தி நாயனார் பாடக் காரணமாக இருந்தவர் விறன்மிண்ட நாயனார். சிவனடியார்களிடம் மாறாத பக்தி கொண்ட இவரைச் சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் “விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க்கு அடியேன்” என்று குறிப்பிடுகிறார்.
சுந்தரமூர்த்தி நாயனார், விறன்மிண்ட நாயனார் அடியார்களிடத்துக் கொண்டுள்ள பக்தியின் சிறப்பை எண்ணிப் பெருமையுற்று, தியாகராசப் பெருமானை வணங்கி, அடியவர்களுக்கு அடியவனாகும் நிலையைத் தனக்கு அருள வேண்டும், என்று மனமுருகி பிரார்த்தனை செய்கிறார். “தில்லைவாழ் அந்தணர்தம் அடியாருக்கும் அடியேன்” என, தியாகேசரே திருத்தொண்டத் தொகைக்கு அடியெடுத்துக் கொடுக்கிறார். சுந்தரமூர்த்தி நாயனார் அதனையே முதலடியாகக் கொண்டு திருத்தொண்டர் தொகையைப் பாடியருளினார்.
விறன்மிண்ட நாயனார் சிவாலயங்கள் பலவற்றிற்குச் சென்று சிவனைத் தொழுவதும், சிவத்தொண்டுகள் செய்வதையுமே தன் வாழ்வின் பெரும் பேறாகக் கருதினார்.
“நல்லாரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ அகமும் பொருளும்
இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவாகச்சி யேகம்பனே”.
எனும் பட்டிணத்தடிகளின் பாடலாலும் இதன் பெருமையை அறியலாம்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment