ஞானசம்பந்தப்பெருமானும், அப்பர் பெருமானும் ஏழாம் நூற்றாண்டின் இடையில் சமக்காலத்தில் வாழ்ந்த திருத்தொண்டர்கள். இவர்கள் இறை வழிபாட்டிற்காக திருவீழிமிழலையில் தங்கியிருந்த காலத்தில் அந்த நாட்டில், மழையின்மைக் காரணமாக பெரும் பஞ்சம் ஏற்பட்டு, உயிர்கள் அனைத்தும் பசியால் வாடி வருந்தியிருந்தன. அடியார்களும் துயர்மிக உற்ற நிலையில் ஆண்டவனிடம் முறையிட்டு வேண்டினர். இதனையறிந்த திருஞானசம்பந்தப்பிள்ளையார், `கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ?’ என்று மனம் நொந்தவாறே, இறைவனை நினைந்துறுகியவாறே உறங்கச் செல்கிறார். எம்பெருமானார் பிள்ளையின் துயர் பொறுக்கவில்லை போலும்! அவர்தம் கனவில் தோன்றி, மக்கள், மாக்கள் துயர் தீர்க்கும்பொருட்டு ஆலயத்தில் உள்ள கிழக்கு, மேற்கு பலிபீடங்களில் இருவருக்கும் பொற்காசுகள் அளித்துள்ளதாகக் கூறுகிறார். விழித்தெழுந்த ஞானசம்பந்தப்பெருமான், அப்பரடிகளையும் உடன் அழைத்துக்கொண்டு ஆண்டவன் அருளியவாறு பலிபீடம் நோக்கிச்செல்கிறார். கிழக்கு பலிபீடத்தில் சம்பந்தப்பெருமானும், மேற்குப் பலிபீடத்தில் அப்பர் பெருமானும் காசு பெற்று உயிரினங்களின் துயர் துடைக்க மேவுகிறார்கள். அவரவர் திருமடங்களுக்குச் சென்று அடியவர்களுக்கும் அமுதளிக்க விரைகின்றனர். இங்குதான் வினை விடுபடுகிறது. அப்பர் பெருமானின் திருமடத்தில் விரைவாகவும், சம்பந்தப்பெருமானின் திருமடத்தில் காலம் தாழ்ந்தும் திருவமுது அளிக்கப்படுகிறது. இதையறிந்த சம்பந்தப்பிள்ளையார் அதற்குரிய பொறுப்பாளர்களை அழைத்து காரணம் வினவுகிறார். அவர்களும், சம்பந்தப்பெருமானின் பொற்காசுகள் மாற்று குறைந்ததாக இருந்ததால் அதனை மாற்றி பொருட்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுவதே காரணம் என்று கூறுகிறார். ஓய்வின்றி உழவாரப்பணி செய்து நொந்து போயிருக்கும் அப்பர் பெருமானாருக்கு மேலும் துன்பம் நேரக்கூடாது என்றுதானோ நல்ல காசுகளை அளித்துள்ளார் எம்பெருமானார் என்று உணர்ந்த சம்பந்தப்பிள்ளையார் மறுநாள் ஆலயம் சென்று `வாசிதீரவே காசு நல்குவீர்` என்ற கீழ்கண்ட திருப்பதிகம் பாடி இறைவனை மனம் குளிரச்செய்து தாமும் நற்காசினைப்பெற்று அடியார்களுக்கு விரைவில் தக்க சமயத்தில் உணவளித்து மகிழ்வித்து தாமும் மனமகிழ்ந்தார். இறையருளால் சில நாட்களிலேயே மழைவளம் பெற்று நாடும் செழித்து, பஞ்சமும் நீங்கி, மக்களும் நலமாக வாழ்ந்தனர்.
No comments:
Post a Comment