Monday, March 30, 2020

பிறந்தநாள் வாழ்த்துகள்!




அன்பு மகன் செந்தில் குமாரின் இனிய பிறந்தநாள் இன்று. குழந்தைகள் எல்லாம் அக்கரையில் இருக்க, இக்கரையில் நாங்கள் நினைவுகளைச் சுமந்துகொண்டு இறையருளால் அனைத்து துன்பங்களும் தீர்ந்து அனைவரும் புத்துயிர் பெற்று இணைவோம் என்ற நம்பிக்கையுடன் அன்பு மகனை வாழ்த்துகிறோம். தங்களின் உளமார்ந்த வாழ்த்துகளும் அவர்களை நலமாக வாழவைக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துங்கள் நண்பர்களே!  நன்றி.






வெற்றிவாகை சூடிவா  மகனே!
நம்பிக்கையோடு எதிர்கொள் சவால்களை
உலகின்  உன்னதங்கள் யாவையும் அதனூடே
மறையாய் மகோன்னதமாய் மலர்ந்திருக்கும்
சாகசங்களை மகிழ்வாய் கொண்டாடிவிடு சகோதரத்துடன்
பம்பரமாகச் சுழன்று வென்றுவிடு நல்மனங்களை

புன்னகை சூடியே புவியை ஆளலாம் 
இன்னல் விலக்கலாம் இதமான சொல்லால்
வள்ளல் ஆகலாம் வளமான செய்கையால்
இதயம் மலரலாம் மதியூகச் சிந்தையால்

கள்ளம் இல்லா உள்ளத்தோடு வலம்வரும்
கருணை பொங்கும் இதயத்தோடு நலம்நாடும்
என்றும் மானம் பெரிதெனும் தவத்தோடும்
உண்மை நெறியோடு வாழும் உறுதியுடனும்

நேயமெனும் சுடரேற்றி தூய்மையெனும் சுவாசமுடன்
நட்பெனும் கவசமுடன் பாசமெனும் பரவசத்துடன்
நித்தமும் நினைவோடு கனவிலும் நித்தியனை
பணிந்தேற்றி கடந்திடு இன்றைய சோதனையை.

நன்றே செய்கினும் நமச்சிவாயனின் பதம்பற்றி
தீதே விளையாதெனும் நம்பிக்கை ஒளியுடன்
பாரே போற்றும் நற்காரியங்களை நாளும்
நயந்து சிரமேற்கொளும் பண்புடனே வாழ்க!

உனதன்பெனும் தீராக்கடனை சுமப்பவள் நானடா!
துன்பம் யாவும் கதிரோனைக்கண்ட பனிபோல் விலக
வளமும் நலமும் பெற்று வாழ்க வாழ்க
தரணி போற்றும் தமிழும் அமிழ்தும் போல 
மங்கலமாய் மனைவி மக்களுடன் மங்காப்
புகழுடன் மாமனிதமாய் வாழ்க நீ பல்லாண்டு!!


No comments:

Post a Comment