Friday, May 30, 2025

காகத்தின் நுண்ணறிவு!

 






காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் காலையில் காக்கை, குருவிகளுக்கும் அணிலுக்கும் உணவளிப்பது வழக்கம். காகங்கள் மிக புத்திக் கூர்மையுள்ள பறவைகள் என்று படித்திருந்தாலும் அதை இன்று நேரில் அறியும் வாய்ப்பு அமைந்தது. தமது இரையை, உணவைப் பெறுவதற்காகக் கருவிகளைப் பயன்படுத்தும் திறன் வாய்ந்தவை. நம் வாழ்வோடும் பண்பாட்டோடும் பின்னிப்பிணைந்த ஒரு பறவையினம் இது. இன்று காலை இட்லிதான் வைத்தேன். அதுவும் நேற்று இரவு உணவு விடுதியில் வாங்கி வந்த இட்லி என்பதால் காலையில் அது சற்று கெட்டிப்பட்டுவிட்டது. சிறிய துண்டுகளாக கிள்ளிப்போட்டுதான் வைத்தேன். ஆனாலும் வெகு நேரம் தலையை ஆட்டி ஆட்டி பார்த்துக்கொண்டே இருந்ததே தவிர ஒரு துண்டுகூட எடுக்கவில்லை. என்ன நினைத்ததோ, சற்று நேரத்தில் ஒரு இட்லித் துண்டை எடுத்து அதை அருகில் இருக்கும் தண்ணீரில் போட்டது. ஒரு நொடியில் மீண்டும் அதை எடுத்து உண்டது. இப்படியே இரண்டு மூன்று முறை செய்துவிட்டு ஒரு துண்டு இட்லியை அதேபோல் தண்ணீரில் நனைத்து எடுத்துக்கொண்டு பறந்துவிட்டது. குட்டிக்கு எடுத்துச் சென்று ஊட்டும் போல. உண்மையில் எனக்கு அப்படியொரு ஆச்சரியமாக இருந்தது. காக்கைதானே என்று சாதாரணமாக நினைத்துவிட முடியாது, மனிதர்களைவிட புத்திசாலியாக இருக்கிறேன் என்று உணத்ர்த்திவிட்டுச் சென்றுவிட்டது. இன்று முழுவதும் காக்கை பற்றிய நினைவே சுற்றி சுற்றிச் வருகிறது.
நம் வீட்டு வாசலில் காகம் கரைந்தால் விருந்தினர்கள் வருவார்கள் என்பது நமது நம்பிக்கை.
பழங்காலத்தில் கடற்பயணம் மேற்கொள்பவர்கள் காக்கைகளை கூண்டில் அடைத்து உடன் எடுத்துச் செல்வர். கரைக்குச் செல்லும் வழி அறியாத நேரத்தில் அந்தக் காகத்தை எடுத்து பறக்க விடுவார்கள். அந்தக் காகம் செல்லும் திசையைப் பின்பற்றிச் சென்று கரையை அடைந்துவிடுவார்களாம். அப்போது அந்தக் காகம் கரைந்து கொண்டே கரையையும் அடையும். கரையோரத்தில் வாழும் மக்கள் வழிமாறிய கப்பலில் பயணிகள் பசியுடன் வருவார்கள் என்பதறிந்து அவர்களுக்கு விருந்து சமைத்து வைத்துக்கொண்டு உபசரிக்கக் காத்திருப்பார்களாம்.... அதனாலேயே இன்றும் காகம் கரைந்தால் உறவினர் வருவார்கள் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. உலகின் பழமையான நாகரிகங்களின் ஒன்றான மெசப்பத்தோமியா நாகரிகத்தின் நாணயங்களிலும், ஓவியங்களிலும் ஒரு மாலுமி காக்கையை பறக்கவிடுவது போன்று பொறிக்கப்பட்டுள்ளதும் இதன் பழமைக்கு ஆதாரமாக உள்ளது. ஆகா எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்!
" விருந்து வரக் கரைந்த காக்கை" எனும் குறுந்தொகைப் பாடல் மூலம் இதை அறியலாம். சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களில் ஒருவரான காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் என்பவர் காகத்தைப் பற்றிப் பாடியே இப்பெயரைப் பெற்றுள்ளார். அவர்தான் காக்கைக் கரைந்தால் விருந்தாளி வருவர் என்ற பொருளில் ஓர் அகப்பாடல் புனைந்துள்ளார். முல்லைத் திணைக்குரிய பாடலிது. தோழி கூறுவதாக அமைந்துள்ள அப்பாடல் ..
திண்டேர் நள்ளி கானத்து அண்டர்
பல்லா பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிதென் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே (குறுந். 210)
ஐங்குறுநூற்றிலும் காக்கை குறித்த நம்பிக்கை கொண்ட இன்னொரு பாடல் வந்துள்ளது.
மறுவில் தூவிச் சிறு கருங் காக்கை
அன்புடை மரபினின் கிளையோ டாரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெஞ்சின விறல்வேற் காளை யோடு
அஞ்சில் ஓதியை வரக்கரைந் தீமே
(ஐங். 391)
காகம் கரைதலைக் கண்ட தலைவி அதனை விரட்டித் துரத்துகிறாள். ஏனென்றால் காகம் கரைதல் தன் தலைவனுடைய வருகைக்கு நன்னிமித்தம் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அந்நேரத்தில் ஊடலில் இருப்பவள் போலும் அவள் அதை நம்பவில்லை. கோபமாக காகத்தைத் துரத்திக் கொண்டே இருக்கையில் தலைவனைக் காணாது வருத்தத்தில் இருந்த தனது மெலிந்த கைகளிலிருந்த வளையல்கள் பாதி கழன்று தரையில் விழுந்தன. ஆனால் உண்மையில் திடீரென்று தன் தலைவன் வருவதைக் கண்ணுற்ற அந்தத் தலைவியின் உடலும் கைகளும் மகிழ்ச்சியில் பருத்துவிடுகின்றன. அதன் விளைவாக அவள் கையிலிருந்த மீதி பாதி வளையல்கள் உடைந்து சிதறிவிட்டனவாம். முதலில் காகம் தனக்குப் பொய்யான நம்பிக்கையூட்டுகிறதே என்ற கோபத்தில் தலைவி காகத்தை விரட்டுகிறாள்.
இப்படி தலைவனைப் பிரிந்த தலைவியின் உடல் மெலிவதும் அதனால் கைவளைகள் நெகிழ்ந்து மண்ணில் விழுவதும் அகப்பாடல்களில் அடிக்கடி காணமுடிகிறது. மெலிந்தபோது கழன்று விழும் வளையல்கள் தலைவனைக் கண்டவுடனே கைகள் பருத்ததால் வெடித்துச் சிதறின என்பதும் செறிந்தன என்று சொல்வதும் மிகைபடக் கூறல் என்றாலும் இலக்கியச் சுவைக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாக அல்லவா இருக்கிறது!
அன்றாடம் காகங்களை அழைத்து உணவிட்டு, பின் உணவருந்தும் பழக்கம் நம்மூரில் பலருக்கும் உண்டு. புனைவுகளிலும் இலக்கியங்களிலும் அண்டங்காக்கை பற்றிய பல குறிப்புகள் உள்ளன. இதன் கருப்பு நிறம், பற்கள், கரகரவெனும் குரல், உணவுப்பழக்கம் ஆகியவற்றின் காரணமாக, காகம் தொன்மங்கள், புனைவுகளின் படைப்பாளர்களால் தீய சக்தியின் குறியீடாகக் கருதப்பட்டு வருகின்றது. அண்டங்காக்கை துர்மரணத்திற்கும், இறப்புக்கும் இடையே ஒரு இடைத்தரகராக இருந்தது என்று பிரெஞ்சு மனிதவியல் அறிஞர் கிளாட் லெவி-ஸ்ட்ராஸ் ஒரு கட்டமைப்புவாதக் கோட்பாட்டை முன்வைத்தார். காகம் இறந்தவர்களுடனும் இழந்த ஆத்மாக்களுடனும் தொடர்புடையது என்று சுவீடன் நாட்டுப்புறத்திலும்,
நம்பப்படுகின்றது. இந்து மதத்தில் காக்கைகள் உருவில் மூதாதையர்கள் அமாவாசை, திதி சமயங்களில் அவர்களுக்காகப் படைக்கும் உணவு அல்லது தின்பண்டங்களை எடுக்க வருகின்றன என்ற நம்பிக்கை இன்றளவிலும் நடைமுறையில் உள்ளது. தென் கொரிய நாட்டிலும் மூதாதையர்களுக்குப் படையல் இட்டு நீர் விளவி வழிபாடு செய்யும் வழமை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
· மிகுந்த சக்தி வாய்ந்த இந்துத் தெய்வம் சனி பகவானின் வாகனம் காகம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. மகாவித்தைகள் என்ற பத்து தாந்தரீகக் கடவுள்களின் குழுவில் ஒன்றான தூமாவதி, இந்துத் தாய் தெய்வத்தின் அச்சமூட்டும் அம்சத்தைப் பிரதிபலிக்கின்றது. அவலட்சணமான விதவையாகச் சித்தரிக்கப்படும் இத்தெய்வம் பொதுவாகக் கல்லறைகள் நிறைந்த, பிணங்களைத் தகனம் செய்யும் பூமியில் காகத்தின்மீது சவாரி செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது.

காகத்தின் நுண்ணறிவு!

  காக்கை நாம் அன்றாடம் பார்க்கிற பறவை. ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது நாம் இயல்பாகப் பயன்படுத்தும் பழமொழி. நாங்கள் அன்றாடம் கா...