Tuesday, July 27, 2010

அடடா.........டென்சன் பார்ட்டியா.........நீங்க?

அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பும் நேரம். இரண்டு சக்கர வாகனம் பழுது காரணமாக புறப்பட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் அந்த நேரத்தில், மன உளைச்சல் அதிகமாகி, வண்டியை காலால் உதைத்தால், கால் தான் வலிக்குமே தவிர வண்டி நகராது.அதை உணர்ந்து,அடுத்து என்ன செய்ய வேண்டும், ஆட்டோ பிடித்து போகலாமா அல்லது நண்பரிடம் உதவி கேட்கலாமா,என்பதைத்தானே யோசிக்க வேண்டும்.

மன அழுத்தம் ஏற்படுத்தக் கூடிய பதற்றமான மனோநிலை, சக்கரை வியாதி, அல்சர், இரத்தக் கொதிப்பு போன்ற பல வியாதிகளை முன் மொழியும் என்பதும் அனைவரும் அறிந்ததே.


வாழ்க்கைச் சூழலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், அதன் காரணமான மோதல்கள், மற்றும் சவால்களை எதிர் கொள்ள வேண்டிய தருணங்கள், இவை அனைத்தும் மன அழுத்தத்தை தவிர்கக முடியாததாக்கிவிடுகிறது. மன அழுத்தத்தை தவிர்க்க இயலாவிட்டாலும், இதன் பின் விளைவுகளையாவது நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியும். இதற்கான யதார்த்தமான, நிரூபிக்கப்பட்ட சில வழிமுறைகள் பற்றிக் காண்போம்.

முதன் முதலில் சரியான, நெறிமுறைப் படுத்தப்பட்ட வாழ்க்கை முறை, பெரும்பாலும் மன அழுத்தத்தைக் குறைக்க வல்லது என்பது வல்லுனர்களின் ஒருமித்த கருத்தாகும்.

இதனை திட்டமிடுவதற்காக நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய நேரமே, இதற்கான மூலதனம் ஆகும். அதாவது அந்த வாரத்திற்குரிய வேலைகளை முதலில் திட்டமிடல் வேண்டும்.

வேலைக்குச் செல்லும் பெண்களாக இருந்தால் அந்த வாரம் முழுவதும், என்ன சமைக்கப் போகிறோம் என்பது வரை அனைத்து விபரங்களையும் முன் கூட்டியே முடிவு செய்து வைத்துக் கொள்ளலாம்.

வியாபாரம் செய்பவர்களாக இருந்தாலும் அந்த வாரத்திற்குரிய முக்கியமான அலுவல்கள், வங்கிக் கணக்கு வழக்குகள், வசூலுக்குச் செல்ல வேண்டிய நாட்கள் இப்படி அனைத்தையும் முடிந்த வரை வாரக் கடைசி நாளே, தீர்மானித்து, நாட்குறிப் பேட்டில் குறித்து வைத்து விட வேண்டும்.எல்லா வேலைகளையும் தானே பார்த்துக் கொள்ளும் பேர்வழி என்று, நேரம் போதாமல் மன அழுத்தத்தை ராக்கெட் வேகத்தில் எகிற விடாமல், குடும்பத்தில் உள்ளவர்களிடமோ, தமக்குக் கீழ் பணிபுரிபவர்களிடமோ பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.

உணவின் மூலமாக ஆறுதல் பெற முடியும்.!
பெரும்பாலானவர்களுக்கு, மிகவும் மன உளைச்சலான நேரங்களில் ஏதாவது உணவு உட்கொண்டால், அது ஆறுதல் அளிப்பதாக இருக்கும். இதற்கான முதல் இடம் அரிசி உணவிற்குத்தான். மாவுப் பொருட்கள், மூளையில் சுரக்கின்ற செரோடினின் என்கிற இரசாயனப் பொருள் அளவை அதிகப்படுத்தி, முழு உடலுக்கும் ஒரு அமைதியைக் கொடுக்க வல்லதாம். இதன் காரணமாக மன அழுத்தத்தினால் வரக்கூடிய, கோபம், எரிச்சல் மற்றும் மனதை ஒருநிலைப் படுத்த முடியாத தன்மை போன்றவைகள் மட்டுப்படுத்தப் படுகிறது. இந்த மாவுப் பொருட்களின் சக்தி 2 முதல் 3 மணி நேரம் வரைதான் இருப்பதால் கலோரியின் அளவைக் கவனத்தில் கொண்டு அந்த உணவை 5 அல்லது 6 முறையிலான குட்டி உணவாகப் பிரித்து உண்ணலாம்.

சூழ்நிலைகளால் ஏற்படுத்தக் கூடிய மன அழுத்தத்தை சற்று நிதானமாகக் கையாண்டால், எளிதாக சமாளிக்க முடியும். எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும், சறிது சிந்தித்து , அந்த குறிப்பிட்ட விசயத்தை விட்டு சற்றே வெளியே வந்து, அடுத்தவர் நிலையிலிருந்து, யோசித்தாலே போதும்.அந்தச் சூழல் மிக எளிதாகிவிடும். பிறகு தாமே தீர்வையும் கண்டு விட முடியும்.

நடைப் பயிற்சி, மன அழுத்தத்தைக் குறைக்கும் மாயச் சக்தியாகும்.அன்றாடம் குறைந்தது, முப்பது நிமிடங்களாவது, நடக்கும் வழக்கத்தைக் கொள்ளவேண்டும். இது மன அமைதியுடன் உடல் ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கும்.

தினந்தோறும் முடிந்தவரை, ஒரு அரை மணி நேரமாவது, தான் மிகவும் விரும்பும் ஏதாவது ஒரு பொழுது போக்கில் ஈடுபடுவது நன்மை பயக்கும். முக்கியமாக குடும்ப விழாக்கள், நண்பர்கள் வீட்டு விழாக்கள் என்று இப்படி ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் அதை நழுவ விடக்கூடாது.

தவிர்க்க முடியாத நெருக்கடியான சூழ்நிலையில் மன இறுக்கத்தை தளர்த்துவதற்கு மிக எளிமையான ஒரு சிறியப் பயிற்சியை பற்றி பார்ப்போம். இதற்கு, "வயிற்று சுவாசம் " என்று பெயர். இந்த மூச்சுப் பயிற்சியினால் நுரையீரல் முழுவதும் நிறைந்து மூளைக்கு அத்தியாவசியமான ஆக்சிஜனை துரிதப் படுத்துகிறது.

ஆழ்ந்த, நிதானமான மூச்சை மூக்கின் வழியாக எடுத்து, அது அடி வயிறு வரை செல்வதை உணர வேண்டும். இப்பொழுது நீண்ட, மெதுவான மூச்சை வெளிவிட வேண்டும். வயிறு அப்படியே உள்ளே போய் சம நிலையில் இருப்பதை கவனிக்க வேண்டும். உள்ளே இருக்கும் மூச்சு கண்டிப்பாக அமைதியையும், நிம்மதியையும் அளிக்க வல்லதாக கற்பனை செய்ய வேண்டும். அதே போல் மூச்சு வெளியே விடும் போது அதனுடன் சேர்ந்து மன அழுத்தமும் போய் விடுவதாக நினைக்க வேண்டும். இது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு சிறந்த பயிற்சியாகும்.

எந்த காரியமாக இருந்தாலும் அதன் எளிதான பக்கத்தை மட்டும் பார்க்க பழகிக் கொள்ள வேண்டும்.

சந்திரன், ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார். அறுவை சிகிச்சை அரங்கிற்கு உள்ளே செல்லும் நேரம், அவருடைய மகனும், மனைவியும் கலங்கி, செய்வதறியாது நிற்க, உடனே, அவர்களுடைய குடும்ப நண்பர், வடிவேலு பாணியில்," ஃபீலிங்ஸ்ஸ்......... சரி சரி ஓவரா ஃபீல் பண்ணாதீங்க, இன்னும் 2 மணி நேரத்திலே வெளியே வந்துடுவாப்ல. அப்பறம் சண்டையை வைச்சுக்கலாம்", என்று சொல்லவும் எல்லோரும் கொல்லென்று சிரித்து விட்டனர், சந்திரன் உட்பட. இலேசான மனதுடன் சென்று நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து திரும்பியும் விட்டார், சந்திரன். "வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்", என்பார்கள்.நல்ல மனமார்ந்த சிரிப்பு, சதை இறுக்கத்தை தளர்த்தி, இரத்தக் கொதிப்பை மட்டுப்படுத்தி மன அழுத்தம் சம்பந்தப்பட்ட ஹார்மோன்களைக் குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கிறது.

மன அழுத்தமான நேரத்தில் காபி, கோகோ குளிர் பானங்கள் போன்றவைகள் நல்லதல்ல.

தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டிய நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு சிறு ஓய்வாவது எடுக்க வேண்டும்.

தினந்தோறும் காலை வேளையில் அமைதியாக தியானம், பிரார்த்தனை, இவைகளை செய்வது நாள் முழுவதும், அதிகமான மன அழுத்தம் ஏற்படுத்தும் நார் அட்ரினலின் மற்றும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்களைக் கட்டுப் படுத்தி, அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்கிறதாம்.

இறுதியாக ஒன்றை நாம் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது, நம்முடைய உள்மன அமைதி என்பது நம்மிடம் மட்டுமேதான் உள்ளது. எந்த மருத்துவரும், எந்த மருந்தும் இதற்கு துணை புரியாது. அதை உணர்ந்து நாமே நம்மை அமைதியாக்கிக் கொள்ள வேண்டும்!!
,

4 comments:

  1. இதெல்லாம் செய்ய நேரமிருந்தாத்தான் டென்ஷனில்லையே. நல்ல பகிர்வுங்க. நன்றி

    ReplyDelete
  2. இன்றிய சூழலில் மிக அவசியமான பதிவு.....

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நன்றி திரு வானம்பாடி அவர்களே

    ReplyDelete
  4. நன்றி ஆரூர், உன்னுடைய ஊக்குவிப்பிற்கு!!!!!

    ReplyDelete