Monday, April 4, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் - பகுதி - 3

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!

மாறனுக்கு போனை எடுக்கும் போதே ஏதோ பதட்டமாகத்தான் இருந்தது. அவள் நல்ல பதிலாகச் சொல்ல வேண்டுமே கடவுளே என்று உள்ளூர வேண்டிக் கொண்டேதான் போனை ஆன் செய்தான்.

ஹலோ, நீங்கள் சற்று முன் பேசியவர்.......

’ஹலோ, யெஸ், நான் மாறன், ஃபிரம் சென்னை’,

’ஓகே, ஓகே, சாரிங்க....அப்பா இந்த பிரபோசல் சரியா வரலே என்று சொன்னார்கள். ஏதோ ஜாதகத்தில் பிரச்சனை , பொருத்தம் சரியாக இல்லை என்றார்கள். மன்னிக்கவும்’ என்றாள்.

‘ ஹலோ, இல்லைங்க, என் அப்பா அப்படி ஒன்றும் சொல்லவில்லையே. ஜாதகமும் சரியாக இருக்கிறது, சொந்தமும் வருகிறது, என்றுதானே சொன்னார்கள்’, என்றான் அவசரமாக, எங்கே அவள் அழைப்பைத் துண்டித்து விடுவாளோ என்ற பயத்தில்.......’

’ம்ம் ..இல்லை அப்படி இருந்தால் , அப்பா சொல்லியிருப்பாரே.....சாரி’, என்று தயக்கமாகச் சொல்லிக் கொண்டே துண்டித்து விட்டாள் இணைப்பை.

மாறனுக்கு இது சற்றும் எதிர்பாராத திருப்பம்.அவனால் நம்பவே முடியவில்லை. தவறு எங்கு நடந்திருக்கும் என்று கூட யூகிக்கும் மனநிலை இல்லை அவனுக்கு. எதற்கும் அப்பாவிற்கு போன் செய்யலாம் என்று முயற்சி செய்தான். அவர்களுக்கு எந்த நேரமாக இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணமே தோன்றியது.

“ தற்போது நீங்கள் டயல் செய்யும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் ”, என்று அப்பாவின் செல்பெசி மேலும் குழப்பத்தையே எற்படுத்தியது

.சே....ரொம்பவுந்தான் அவசரப்பட்டுவிட்டோமோ. இவ்வளவு தூரம் வந்தது வீணாகிவிட்டதோ என்று மனம் தவிக்க ஆரம்பித்தது.இடையில் என்ன நடந்திருக்கும் என்றே தெரியவில்லையே. அப்பா சொன்ன பிறகுதானே தாம் மேற்கொண்டு ஒரு ஆர்வக் கோளாரில் கிளம்பி இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது. இப்படி நடுத் தெருவில் நின்று புலம்பும் படி ஆகிவிட்டதே. ஆனாலும் இன்னும் அவந்திகாவை வேற்று மனுஷியாக எண்ணி ஒதுங்க முடியவில்லையே! மன மேடையில் சிம்மாசனம் போட்டல்லவா ஏறி அமர்ந்து கொண்டிருக்கிறாள்.

சாலையின் இரு மருங்கிலும் அழகான பைன் மரங்களின் அணிவகுப்பு. பசுமையான அந்தமரங்களைப் பார்க்கும் போது லேசாக ஒரு நம்பிக்கை ஒளியும் வீசத் தொடங்கியது. ஆம் இது ஏதோ,தற்காலிகத் தவறாகத்தான் இருக்கும். விரைவில் மாறும், என்ற நம்பிக்கையும் துளிர்விட, அப்போது தான், தான் ரெஸ்ட் ஏரியாவில் நின்று கொண்டிருப்பது நினைவிற்கு வர, கழிவறைக்குச் சென்று முகம் கழுவி, புத்துணர்ச்சியுடன், அங்கிருந்த ஒரு பெரிய பெட்டிக் கடையில் சென்று, கொரிப்பதற்கு, சிப்ஸிம் கோக்கும் வாங்கிக் கொண்டு தன்னுடைய உல்லாச உந்தை நோக்கி வந்தான்.

மனம் சற்று தெளிவானதால் அவந்திகாவிற்கு திரும்பவும் பேசிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது.அவள் ஏதாவது முகத்தில் அறைந்தாற்போல பேசிவிட்டால் என்ன செய்வது என்ற தயக்கம் ஒரு புறம் இருந்தாலும், வேறு வழியில்லாமற் போனது அவனுக்கு.

‘ஹலோ, யெஸ்....’

‘ஹலோ, நாந்தாங்க சேம் மாறன் ஃபிரம் சென்னை’

‘ம்ம்..சொல்லுங்கள். என்ன விசயம்,’ என்றாள், பேச்சை அதிகம் வளர்க்க விரும்பாதவளாக.

‘ இல்லை, நான் இப்போது நியூ ஜெர்சியிலிருந்து, உங்களைப் பார்க்க வேண்டுமென்றே, இவ்வளவு தொலைவு வந்திருக்கிறேன். நம் பிரபோசல் நல்லபடியாக சென்று கொண்டிருப்பதாக என் அப்பா சொன்னதால் தான் நான் கிளம்பி வந்துவிட்டேன். உங்க அப்பா, ஏதோ அவசரத்தில் சரியாகப் பார்க்காமல் சொல்லியிருக்கலாமே’ என்றான் பெருந் தயக்கத்தோடு.

‘ அப்படியெல்லாம் இல்லை. அப்பா ரிலாக்ஸாக நாளிதழ் படித்துக் கொண்டிருந்த வேளையில் தான் நான் பேசினேன். அதனால் தவறு நேர வாய்ப்பில்லை.உங்கள் பக்கம் ஏதோ தவறு நடந்திருக்கலாமே.....’ என்றாள்

ஏனோ அவனுக்கு இந்த பதிலில் உடன்பாடு இல்லை. இதே போக்கில் இந்த நல்ல காரியம் குறித்து, பேசுவதில் தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், வேறு வழியிலலாத நிலையில்,

‘ இல்லைங்க. ஏதோ சிறு தவறு நடந்திருக்கலாம். என் அப்பா இப்போது குல தெய்வம் கோவில் தரிசனத்திற்காக எங்கள் கிராமத்திற்குச் சென்றுள்ளார்கள். அதனால் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள டவர் கிடைக்கவில்லை. இன்னும் சற்று நேரம் பொறுத்து முயற்சி செய்தால் கட்டாயம் அப்பா தெளிவு படுத்துவார்....’ என்றான் அவள் பதிலை எதிர் பார்த்தபடி.

சற்று தயக்கத்தின் பின் அவள்,’ ம்ம்....அவ்வாறு இருக்க வாய்ப்பு இருக்காது என்றே எனக்குத் தோன்றுகிறது. அப்படி இருந்தாலும் அதை பெரியவர்கள் பேச வேண்டியது தான் முறை.அதனால் இதைப் பற்றி மேற்கொண்டு பேச ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை’ என்று இழுத்தாள்.

‘ இல்லைங்க. ஒரு நிமிடம், இணைப்பைத் துண்டித்து விடாதீர்கள். இது ஏதோ சிறு தவறாகத்தான் எனக்குப் படுகிறது. நான் இப்போது தங்கள் வீட்டின் அருகில்தான், ஒரு ரெஸ்ட் ஏரியாவில் நின்றிருக்கிறேன். தங்களுக்கு ஆட்சேபம் இல்லையென்றால், கிளம்பி இங்கே வந்தால் நாம் நேரில் பேசலாமே.......... அதற்குள் என் அப்பாவிற்கு தொடர்பு கிடைத்தால் அனைத்தும் தெளிவாகி விடும் அல்லவா. அதனால்...’ என்று தயங்கினான்.

அவளும், ‘ இல்லைங்க, அதெல்லாம் சரி வராது. எனக்கு இப்போது நேரம் இல்லை. என்னால் அங்கெல்லாம் வர முடியாது. முன்பே திட்டமிட்ட வேறு சில பணிகள் இருக்கிறது. மன்னித்து விடுங்கள்’ என்றாள் நாசூக்காக.....

‘இல்லை, ஒரு இருபது நிமிட டிரைவ்தான் உங்களுக்கு.அதனால் நீங்கள் நேரில் வந்தால்......’

அவன் பேச்சை மேலும் வளர்க்க விரும்பாதவளாக, ‘சாரிங்க, அதெல்லாம் சரி வராது. எனக்கு வேறு முக்கியமான வேலை இருக்கிறது, மன்னியுங்கள், பை....’ என்று சொல்லி தொடர்பை துண்டித்து விட்டாள்.

என்ன இது கொஞ்சம் கூட நாகரீகமே தெரியாதவளாக இருக்கிறாளே... நான் இத்தனை முறை எடுத்துச் சொல்லியும் புரிந்து கொள்ளவில்லையே இந்த பெண். ஒரு வேளை திமிர் பிடித்தவளாக இருப்பாளோ. ..

எது எப்படியோ இதற்கு மேல் அவளிடம் பேசுவதில்அர்த்தமில்லை என்றேத் தோன்றியது. சரி திரும்ப ஊருக்காவது கிளம்பலாம் என்று நினைத்து காரில் ஏறப்போனவனை, ‘ஹலோ...மாறன்’ என்ற குரல் நிறுத்தியது.

‘ ஹலோ, மாறன், எப்படி இருக்கிறாய்...... நீ எப்படிப்பா இங்கே....’ என்றான் .நண்பன் தினேஷ்.

‘ அட நான் கேட்க வேண்டிய கேள்வியை நீ கேட்கிறாய்.நீ எப்போது இங்கு வந்தாய். பெங்களூரில் தானே இருந்தாய்’ என்றான் யோசனையாக.

‘ ஆமாப்பா, இப்பத்தான் இங்கு வந்து 1 மாதம் ஆகிறது. உன்னை இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி. நானே உன்னை தொடர்பு கொள்ள நினைத்திருந்தேன். சரி செட்டில் ஆகிவிட்டு தொடர்பு கொள்ளலாம் என்றிருந்தேன். இன்னும் மாற்றி மாற்றி எதோ ஒரு வேலை இருந்து கொண்டே இருக்கிறது. இப்போது கூட ஒரு நண்பரை பார்த்து விட்டுத்தான் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன்’ என்றான்.

’ ஓ அப்படியா, மனைவியும் கூட்டி வந்துவிட்டாயா...’ என்றான்.

திருமணம் சமீபத்தில்தான் ஆகியிருந்தது தினேஷிற்கு.

‘ ஆம். இருவரும்தான் வந்திருக்கிறோம். வாப்பா வீட்டிற்குச் செல்லலாம், இங்கிருந்து ஒரு 10, 15 நிமிட டிரைவ்தான்’ என்றான்

சற்றே தயங்கியவன், தினேஷ் திரும்பவும் கட்டாயப்படுத்தவும், சரி அவன் வீட்டில் சென்று கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொண்டு போகலாமா என்று யோசித்தான்....

ராமச்சந்திரன் வீட்டிற்கு வந்து சேர்ந்தவுடனும் கோவிலில் ஐயர் கூறிய விசயம் மனதிற்குள் எதோ குழப்பத்தை எற்படுத்திக் கொண்டே இருந்தது. என்ன இப்படி ஆகிவிட்டதே......

‘ என்னண்ணா. ஒரே யோசனையாக இருக்கேள். இன்னும் கோவிலில் ஐயர் சொன்னதைப் பற்றியே யோசிச்சிண்டிருக்கேளா.. விடுங்கோன்னா,எல்லாம் அந்த அம்பாள் பார்த்துப்போ. தேவையில்லாமல் மனசை குழப்பிக்காதீங்கோ....எல்லாம் நல்லபடியா நடக்கும்’ என்றாள்.

அவள் தைரியமாக பேசியது மனதிற்கு ஆறுதலாக இருந்தாலும், ராமச்சந்திரனுக்கு, ஒரு உறுத்தல் இருக்கத்தான் செய்தது. தன் மகனின் ஜாதகத்தில் இருக்கும் சில தோசங்கள் கூட இதுபோன்ற தடைகளை ஏற்படுத்தக் கூடும் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்ததால் குழப்பம் மேலும் அதிகமானது.

சரி, எப்படியோ அந்த அம்பாள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு இருக்க வேண்டியதுதான்.

மாறன் போட்டோ பார்த்திருப்பானோ என்னவோ. நமக்கு போன் செய்திருந்தாலும் லைன் கிடைத்திருக்காது. அவனுக்கு போன் செய்து பார்க்க வேண்டும் என்று எண்ணியவர், உடல் அசதி காரணமாக , சற்றே ஓய்வெடுத்து விட்டு பிறகு மகனிடம் பேசலாம் என்று எண்ணியவர் பயணக் களைப்பு காரணமாக கண்ணயர்ந்து விட்டார்...காலையில் பேசிக் கொள்ளலாம் என்ற முடிவுடன்.

காலையில் மகனுடன் பேச வேண்டுமென்ற ஆவலில் வெகு சீக்கிரமே எழுந்துவிட்ட ராமச்சந்திரன் ம்கனுக்குப் போன் செய்யலாம் என்று தொலைபேசியின் அருகே செல்வதற்குள், மணி தானே ஒலிக்க ஆரம்பித்தது......

‘ஹலோ,’

‘ஹலோ, அப்பா, எப்படி இருக்கீங்க. கோவிலுக்குச் சென்று விட்டீர்களா. நான் உங்களுக்கு முயற்சி பண்ணிக் கொண்டே இருந்தேன்.’

‘சொல்லுப்பா, எப்படி இருக்கிறாய். உன்னிடம் முன்னாடியே சொல்ல மறந்துவிட்டேன். இரவு வந்து பேசலாம் என்றிருந்தான். அசதியில் தூங்கிவிட்டேன்’ என்றார்.

‘ பரவாயில்லைப்பா...... சரி இருக்கட்டும். நானே உனக்குப் போன் செய்ய வேண்டுமென்றுதான் இப்போது எழுந்து வந்தேன்... பெண்ணின் போட்டோ பார்த்தாயா, உனக்குப் பிடித்ததா. நீ சின்ன வயசில் பார்த்திருப்பாய் அவளை. உனக்கு அத்தை முறைதான் ஆகிறது அவள் அம்மா.உனக்குப் பிடித்த மாதிரியே அழகா பாடுவா பெண்...’ என்றார் அப்பா.

எங்கோ இடிக்கிறதே. அப்பா சொல்வதைப்பார்த்தால்,
‘ அப்பா, பெண் என்ன செய்கிறாள் என்று சொன்னீர்கள், ‘ என்று தயங்கியவாறே கேட்டான்.

‘ அதுவா, அவள் ஸ்டேட் பாங்க்கில், வேளச்சேரி பிராஞ்சில் இப்போது இருக்கிறாள்’ என்றார்.

என்னது சென்னை வேளச்சேரி பிராஞ்சிலா......பேங்கிலா.........அவனுக்கு தலையே சுற்றுவது போலிருந்தது.....

தொடரும்.

3 comments:

  1. நல்லா போகுதுங்க... தொடருங்க.

    ReplyDelete
  2. போட்டோ மாறிடுச்சோ ??

    ReplyDelete